றிவியலுடன் இந்துத்துவ கும்பலுக்கு இருக்கும் வாய்க்கால் வரப்புச் சண்டைகள் அனைவரும் அறிந்தது தான். இன்றைக்கு அவர்களின் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது, பணம் இருக்கிறது, பெரும் எண்ணிக்கையில் மூளை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட தொண்டர்கள் படையும் கூட இருக்கிறது. இவையனைத்தையும் கொண்டு வரலாற்றையும் கூட ’மாற்றி’ எழுதுகின்றனர். ஆனால் அறிவியல்? அது இந்துத்துவத்தோடு முரண்பட்டு நிற்கிறது. வரலாற்றைப் போல் அறிவியலை ’மாற்றி’ எழுத முடியாது என்பதால் அறிவியலுக்கு இந்துத்துவ பாணியில் விளக்கம் அளிக்கும் கோமாளித்தனமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்துத்துவ கும்பலின் இந்த முயற்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் எள்ளி நகையாடப்பட்டுள்ளது. எனினும், தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியனைப் போல ஓட்டை வாளியில் தண்ணீர் ஏந்துவதை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர். நரேந்திர மோடியின் புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி பிள்ளையாரில் இருந்து சாக்கடை வாயு ஸ்டவ் வரையிலான நீண்ட பட்டியலின் சமீபத்திய வரவாக மும்பையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

”விழித்தெழும் பாரதம்” (Bharatham Awakening) என்கிற இந்துத்துவ அமைப்பு ”பண்டைய இந்தியாவில் விமான சாஸ்திரம்” எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழும் விளம்பரங்களும் வாட்சப்பில் சுற்றியுள்ளது. நிகழ்ச்சியில் உரையாற்றுவோர் என சில விஞ்ஞானிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது. ”விமானப் பொறியியல் குறித்து ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தது” குறித்தும், “விமானப் போக்குவரத்தில் நாம் முன்னோடிகளாக” இருந்தது குறித்தும் அறிந்து கொள்ள வருமாறு மேற்படி அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூகவலைத்தளங்களின் மூலம் பரவிய அழைப்பிதழைப் பார்த்த அங்கித் சூலே, ரோகினி டாங்கே மற்றும் சதாக்‌ஷி கோயல் ஆகிய மூவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன் கேள்வி பதில் நேரத்தில் ‘வேதகால விமானம்’ குறித்து விஞ்ஞான ரீதியில் கேள்வி எழுப்புவது எனத் தீர்மானித்துள்ளனர். இவர்களில் அங்கித் ஒரு விஞ்ஞானி; ரோகினி உயிரி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சதாக்‌ஷியும் முனைவர் பட்டம் பெற்றவர் – இம்மூவரும் ஹோமி பாபா அறிவியல் மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள். நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களில் பிரஹலாத் ராமாராவ் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் (DRDO) உயர் பதவி வகித்தவர். மற்றொரு பேச்சாளரான காவ்யா வட்டாடி விமானப் பொறியியல் படித்தவர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரஹலாத்,வேதகாலத்திய விமானங்கள் பாதரசத்தால் இயக்கப்பட்டன என்று பேசியுள்ளார். விமானப் ‘பொறியாளரான’ காவியாவோ இன்னும் ஒரு படி மேலே போய் கழுதை மூத்திரத்தைக் கொண்டும் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அங்கித், ரோகினி மற்றும் சதாக்‌ஷி ஆகியோர் எழுந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

பண்டைய இந்தியாவில் பாதரசத்தால் விமானங்கள் இயக்கப்பட்டன என்றால், அன்றைக்கு பாதரசத்தை உற்பத்தி செய்யும் வழிமுறை குறித்தோ அது தோண்டப்பட்ட சுரங்கங்கள் எங்கே உள்ளன என வேதங்களில் குறிப்புகள் உள்ளதா எனக் கேட்டுள்ளனர். மேலும், பண்டைய பாதரச சுரங்கங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளனவா எனவும் கேட்டுள்ளனர். அடுத்து, கழுதையின் மூத்திரத்தைக் கொண்டு  விமானத்தையே இயக்க முடியும் என்றால், அதை நிரூபிக்கும் வகையில் கழுதை மூத்திரத்தால் ஒரு காரை இயக்கிக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ’இந்துத்துவ அறிவியல்’ ஜோதியில் ஐக்கியமாகும் லட்சிய வெறியோடு கூடியிருந்த பிற பார்வையாளர்கள் இம்மூன்று விஞ்ஞானிகளையும் தாக்க முற்பட்டுள்ளனர். பின்னர் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நிகழ்ச்சியின் பேச்சாளர்கள் கழுதை மூத்திரத்தால் விமானம் ஓடியது குறித்து வேதங்களில் குறிப்புகள் இருப்பதாகவும், இன்னபிற மூலிகைகளால் வைதீக விமானங்கள் இயக்கப்பட்டதற்கும் ‘ஆதாரம்’ இருப்பதாகவும் குறிப்பிட்டதோடு, கேள்வி எழுப்பிய விஞ்ஞானிகள் ‘முட்டாள்தனமான’ கேள்விகளைக் கேட்டு பார்வையாளர்களுக்கு ஆத்திரமூட்டியதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஷிவ்கர் டால்படே என்பவர் ரைட் சகோதரர்களுக்கு முன்பே வேதக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாக கட்டி முடித்தார் என்றும், ’துரதிர்ஷ்டவசமாக’ அதற்கு எந்த ஆதாரமோ, வரைபடங்கள் உள்ளிட்ட சாட்சியமோ, புகைப்படங்களோ, கட்டப்பட்ட விமானத்தின் பாகங்களோ இல்லாமல் போய் விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்த விஞ்ஞானி ரோகினி, ”ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் வாதங்கள்தான் அர்த்தப்பூர்வமானதாக இருக்கும். எனினும் நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியையும் பார்வையாளார்கள் இடையூறாகவே பார்த்தார்கள்” என்கிறார். மற்றொரு விஞ்ஞானியான அங்கித் சூலே,  “இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களும் இளைஞர்களும் வருகிறார்கள். அவர்கள் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற விசங்களைக் கேட்பதும் நம்புவதும் ஆபத்து என்பதை உணர்ந்தோம். எனவேதான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்வியெழுப்புவது எனத் தீர்மானித்தோம்” என்று குறிப்பிடுகிறார்.

கேள்விகள்தான் இந்துத்துவ கும்பலை அச்சுறுத்தும் ’பேரழிவை உண்டாக்கும் ஆயுதம்’. ஆர்.எஸ்.எஸ் கும்பல் அளிக்கும் பயிற்சியே மூளைகளை கழட்டி விட்டு ‘சிந்திப்பது’ எப்படி என்பது குறித்துதான். எனவே இது போன்ற கோமாளித்தனங்களை சிரித்துக் கடந்து செல்வதை விட கலந்து கொண்டு கேள்விக்குட்படுத்திக் கலகம் செய்வதே இந்துத்துவத்தை முறியடிக்கும் மருந்து. அதைச் செய்து காட்டியிருக்கும் மூன்று விஞ்ஞானிகளைப் பாராட்டுவதோடு அவர்களின் கலகத்தை பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகவும் கொள்வோம்.

செய்தி  ஆதாரம்: Mumbai: Scientists call bluff at Vedic plane theory talk

– வினவு செய்திப் பிரிவு