ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு : மோடி எடப்பாடி அரசுகளின் நாடகம் | காணொளி

செட்டப் கடிதங்கள் - மேட்டுக்குடி காஸ்டியூம் என ஆய்வுக்குழு விசாரணையே மோடி - எடப்பாடி அரசுகளின் நாடகம்தான் என்பதை தங்களது அனுபவத்திலிருந்து கூறுகின்றனர் பண்டாரம்பட்டி மக்கள் - காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்திருந்த தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக் குழுவினர், 23-09-2018 அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தினர்.

இக்கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு சுற்றுவட்டாரத்தை கிராம மக்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். ஆலையை மூட வேண்டுமென்ற கோரிக்கைகளோடு வந்திருந்த மக்கள் திரளில் வயதான மூதாட்டிகளையும் குழந்தைகளையும் கணிசமாக காணமுடிந்தது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் முழக்கத் தட்டிகளைப் பிடித்திருந்த அவர்கள் தொண்டை வற்றும் வரையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கமிட்டபடியே இருந்தனர்.

அப்போது, சினிமா சூட்டிங்கிற்கு வந்து செல்வதைப் போல, மேட்டுக்குடி ’காஸ்டியூமில்’ ’இங்கிலீஷ்’ மட்டுமே பேசத் தெரிந்த கும்பலொன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூடவே, அப்பாவி கிராம மக்கள் சிலரையும் கூட்டி வந்திருந்தது. கூடியிருந்த மக்களிடம் ”ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடினால், போலீசின் கண்காணிப்பிற்கு உள்ளாவீர்கள்” என்று நக்கலாகவும் திமிர்த்தனமாகவும் போதித்தது. அவர்களை மடக்கிப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர், அங்கு திரண்டிருந்த மக்கள். போலீசு அவர்களை பாதுகாப்பாக மீட்டுச் சென்றது. 

ஸ்டெர்லைட் ஆலையால் காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட அக்கூட்டத்தினரிடம் இருந்தது, அனைத்தும் செட்டப் செய்யப்பட்ட கடிதங்கள். தூத்துக்குடி நகரின் பல்வேறு சிறு கம்பெனிகள் லெட்டர்பேடு நிறுவனங்கள் அனைத்தும், இக்கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக டி.வேல்சங்கர் என்பவரை நியமித்திருப்பதாக அறிவிக்கின்றன இக்கடிதங்கள். அக்கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களின் நகல்கள்தான் இவை.

பாஜக-விற்கு பதினைந்து கோடி ரூபாயை அதிகாரப்பூர்வ நன்கொடையாக கொடுத்திருக்கும் வேதாந்தா முதலாளிக்கு இதெல்லாம் கைவந்த கலை!