சேலம் மாவட்டம் என்றதும் நமக்கு இரு விசயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற அடைமொழியுடன் புகைப்படக்காரர் சகிதமாக வலம் வரும் ரோகிணி. இரண்டு எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டம். தற்போது மூன்றாவதாக ஒரு செய்தி சேர்ந்திருக்கிறது.

அது தலித் சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக “மீ டூ” இயக்கம் அதிகம் பேசப்படும் காலத்தில் அதே பாலியல் வன்முறையால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட முறையில் கொல்லப்பட்டிருக்கிறார் அந்த 13 வயதுச் சிறுமி.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிவேல். மனைவி சின்னப்பொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள். கடைசி மகளான ராஜலட்சுமி அருகாமை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி – கொலைகாரன் தினேஷ்குமார்.

சாமிவேல் வீட்டிற்கு அருகே மனைவி சாரதாவுடன் குடியிருக்கிறார் தினேஷ் குமார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வீட்டுக்கு ராஜலட்சுமி அவ்வப்போது தண்ணீர் பிடிக்க செல்வார். கடந்த சில நாட்களாக அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார் தினேஷ் குமார். ஆயுத பூஜை அன்று வீட்டில் தனியாக இருந்த தினேஷ் குமார் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் மேற்கண்டவாறு நடந்திருக்கிறார். இவற்றை பொதுவாக வெளியே சொல்லக் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்படும் சமூகத்தில், சொன்னால் தொலைச்சிருவேன் என்று மிரட்டப்படும் நிலையில் அச்சிறுமி இதை தனக்குள்ளேயே வைத்து குமுறியிருக்கிறார்.

வெளியே சொல்லாமல் அழுது அரற்றிய சிறுமி இறுதியில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவும் இதை அப்பாவிடம் தெரிவிப்போம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து தாய் அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தனது மகளிடம் இத்தகைய பிரச்சினைகளை  வெளியே தெரியாமல் எப்படி சரி செய்வது என்பது ஏதோ விழிப்புணர்வு பற்றிய பிரச்சினை அல்ல. வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அது.

தனது குற்றம் வெளியே தெரிய வந்த தினேஷ் குமார் ஆத்திரம் தலைக்கேறி சிறுமி தலையை துண்டாக்கி படுகொலை செய்திருக்கிறார். இப்படுகொலை தொடர்பாக நேரில் சென்ற எவிடன்ஸ் கதிரின் பதிவில் அந்த கொடூரமான தருணங்கள் இரத்த வாடையுடன் இருக்கிறது, படியுங்கள்.

“வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறார் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தவன் மறுபடியும் ஓங்கி அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தோட்ட வீட்டிற்கு செல்கிறான். அங்கிருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும் தம்பி சசிக்குமாரும் இவளது தலையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? ரோட்டில் வீச வேண்டியதுதானே என்று கூற ஆத்தூர் – தளவாய்பட்டி சாலையில் அந்த தலையை வீசிவிட்டு தினேஷ்குமாரும் சாரதாவும் சசிக்குமாரும் ஒரு வாகனத்தில் ஏறி காவல்நிலையம் செல்கின்றனர்.

கடந்த 22.10.2018 அன்று இரவு 7.30 மணிக்கு வீசப்பட்ட தலித் சிறுமி ராஜலெட்சுமியின் துண்டிக்கப்பட்ட தலை 2 மணிநேரம் கிடக்க ஒட்டுமொத்த தலித் மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணிக்கு அங்கு வந்த போலீசார் தலையையும் வெற்று உடலையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

ராஜலட்சுமியின் பெற்றோர்கள் சின்னபொண்ணு – சாமிவேல்.

என் மகள் ராஜலெட்சுமியின் தலையில்லாத முண்ட உடல் துடித்தது சார்… என் நெஞ்சுலயும் மடியிலயும் ஆசையா வளர்ந்த என் மகள கொன்னுட்டான் சார் அந்த படுபாவி என்று சின்னப்பொண்ணு என் கைகளைப் பிடித்து கதறியபோது ஒடிந்த கந்தலான அந்த தாயாரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வற்றிய குளத்தில் உள்ள இறுதி தண்ணியும் கசிவது போல அந்த தாயாரின் கண்களிலும் வெயில் படர்ந்த கண்ணீரை பார்க்க முடிந்தது.”

படிக்க:
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !
ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

போலீசில் சரணடைவதற்காக செல்லும் போது வந்து இன்னும் இரண்டு பேரை வெட்டுவேன் என்று தினேஷ்குமார் மிரட்டியாவாறே சென்றிருக்கிறார். தற்போது அவரது மனைவி தனது  கணவனுக்கு மனச்சிதைவு நோய் உள்ளது, முனி பிடித்து விட்டது என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். சாதிவெறியும், பாலியல் வெறியும் பிடித்திருக்கிற சமூகத்திற்கு முனி பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன?

கொலை நடந்து இரண்டு மணிநேரம் கழித்துச் சென்ற போலீசு, தற்போது பாலியல் வன்முறை நடந்ததாக தெரியவில்லை, கொலை மட்டும்தான் விசாரித்து வருகிறோம் என்கிறது. ஃபோக்சோ சட்டத்தினை தவிர்த்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு. சரி, இந்த சம்பவத்தில் பாலியல் வன்முறை இல்லை, இருக்கிறது என்று ஏன் முதலிலேயே தீர்ப்பு அளிக்க வேண்டும். விசாரித்த பிறகு தெரிவிப்போம் என்று கூட ஏன் சொல்லவில்லை? வன்கொடுமைப் பிரிவின் படியே பார்த்தாலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி நேரடியா ஆய்விற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

ஆய்விற்கு வந்திருக்க வேண்டிய ஆட்சியர் ரோகிணி என்ன செய்கிறார்?

தினமலர் நாளிதழில், அக்டோபர் 31, 2018 தேதி அன்று (அதாவது ராஜலட்சுமி கொல்லப்பட்ட 22.10.2018 நாளுக்குப் பிறகு ஒரு வாரம்) “தார்மீக கோபமும் பெரிய அளவில் சாதிக்க உதவும்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இத்தகைய உபதேச முத்துக்களுக்காகவே தினமலரில் “சொல்கிறார்கள்” என்று ஒரு பத்தி வைத்திருக்கிறார்கள். அதில் ரோகிணி போல பல மேன்மக்கள் நமக்கு கருத்துரைப்பார்கள். உரைத்துவிட்டுப் போகட்டும்.

அதில் தார்மீகம் கோபம் என்று இருப்பதால் ஒரு வேளை தலித் சிறுமியைப் பற்றித்தான் ஏதும் எழுதியிருப்பாரோ என்று பார்த்தால், இல்லை, இல்லவே இல்லை.

அதில் அவரது மராட்டிய மாநிலத்தில் ரோகிணியின் தந்தை மிளகாய் விவசாயத்தை விட்டுவிட்டு திராட்சை வியாபாரியாக மாறிய வெற்றிக் கதையை விளக்கியிருக்கிறார். தனது கிராமத்து விவசாயிகள் சிரமப்படுவதைப் பார்த்து இதை யார் தீர்ப்பார்கள் என்று ரோகிணி கேட்க, அப்பாவோ கலெக்டர்தான் என்றாராம். பிறகு என்ன, மனதில் விழுந்த விதையால் ரோகிணி இன்று கலெக்டர்.

படிக்க:
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

ஒரு முறை ரோகிணியின் தந்தை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்று அதிகாரியைப் பார்க்கப் போனாராம். அதிகாரியோ, திராட்சை சாகுபடி தொடர்பான முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன், மிளகாய் விவசாயிக்கு என்ன அவசரம், காத்திருங்கள் என்றாராம்.

இதனால் மிளகாய் என்றால் இளக்காரமா, திராட்சை என்றால் உசத்தியா என்று அப்பா பெருங்கோபம் அடைந்தாராம். எனவே அவர் மாவட்ட அதிகாரியிடம் சென்று சண்டை போட்டதாக எதிர்பார்க்க வேண்டாம். என்ன இருந்தாலும் திராட்சைதான் ஒயினுக்கு மூலம், மிளகாய் என்றுமே சைடு டிஷ் அல்லவா!

சரி நாமும் இனி மிளகாயை தலைமுழுகிவிட்டு, திராட்சைக்கு குடி பெயர்வோம் என திராட்சை விவசாயி ஆகி விட்டாராம். ஆரம்பத்தில் கிராமத்து மக்கள் இதை ஏதோ லூசு மாதிரி செய்கிறார் என ஒதுக்கினார்களாம். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அவர் திராட்சை சாகுபடியாளராக உயர்ந்து சாதித்தாராம்.

இந்தக் கதையின் நீதியாக “மனிதர்களுக்கு, தார்மீக கோபம் மிகவும் அவசியம். அந்தக் கோபம், நேர்மறையான திசையில் செலுத்தப்பட்டால், நம்மால், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்!” என்கிறார் ரோகிணி.

முதலில் இந்தக் கதையில் இருப்பது தார்மீகக் கோபம் இல்லை. அடிமைத்தனம். என் மிளகாயை இழிவுபடுத்தினாயே என்று காரமான கோபத்திற்கு பதில், ரம்மியமான திராட்சைக்கு மாறுவோம் என்ற ஒரு பணக்கார விவசாயியின் அடிமைத்தனம். கிராமத்து மிளகாய் விவசாயிகளை திரட்டிக் கொண்டு நீதி கேட்காமால், திராட்சைக்காக அரசு ஓடி வருகிறது என்று மாறிக் கொள்வோம் என்பதெல்லாம் கோபமா?

அதனால்தான் ரோகிணி மேடம் சாமர்த்தியமாக தார்மீகக் கோபம், நேர்மறையான விளைவு என்று பாசிட்டிவ் எனர்ஜி பேசுகிறார். அதே மராட்டியத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியல்தான் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதெல்லாம் நெகட்டிவ் எனர்ஜி போலும்.

தனது தந்தையின் காரியவாதத்தை தினமலரில் எழுதும் நேரம் கொண்ட ரோகிணி அவர்கள் ஒரு தலித் சிறுமியின் படுகொலைக்கு நேரில் போகாமல் இருந்தது ஏன்? எட்டு வழிச் சாலைப் போராட்டத்தை ஒடுக்கும் முகமாக அனைத்தும் அள்ளி வழங்கியிருக்கிறோம் என்று புள்ளிவிவரங்களால் அடுக்கிய இந்த மாவட்ட ஆட்சியர், இன்று ராஜலட்சுமி கொலை குறித்து என்ன விவரங்களை கையில் வைத்திருக்கிறார்?

கேமராவே வெட்கப்படும் அளவிற்கு போஸ் மேல் போஸ் கொடுத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த அம்மையார், ஒரு தாயின் கண் முன்னாலேயே ஒரு மகள் தலை வெட்டி துடிக்கும் காட்சியை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

ராஜலட்சுமியை இழந்து துடிக்கும் அந்தப் பெற்றோர் இனி தமது தார்மீகக் கோபத்தை  நேர்மறையில் செலுத்தி வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று மேடம் ரோகிணியை விளக்கச் சொன்னால் கண்டிப்பாக விளக்குவார்.

மக்களுக்கு தார்மீக கோபம் வராத வரைக்கும் ராஜலட்சுமி கொலைக்கும் நீதி இல்லை! ரோகிணிக்களின் ‘தார்மீக’ கோபங்களும் நிற்கப் போவதில்லை!

14 மறுமொழிகள்

  1. பாசிச பயங்கரவாத மோடிக்கு ஏத்த ஜாடிதான் இந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில்தான் இந்த பெண் ஆட்சியரின் லட்சணம் சந்தி சிரிக்கும் கதையானது.
    புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ரோகிணியா மோடியா என்று போட்டி வைத்தால் விடைகாண்பது கஷ்டம்.
    மோடி ரோகிணி ஒற்றுமை புகைப்பட போஸ் மட்டுமா? மக்களை கிள்ளுக்கீரையாக நடத்துவதிலும் இருவருக்கும் மகா ஒற்றுமை!

  2. //எவிடன்ஸ் கதிரின் பதிவில் அந்த கொடூரமான தருணங்கள் இரத்த வாடையுடன் இருக்கிறது, படியுங்கள்…..//

    இது தேவை இல்லாத ஒன்று , இதனை நீக்கவும் . எவனோ ஒருவன் ஆணாதிக்க திமிரில் செய்த கொலைக்கு சாதிய சாயம் பூசுவது சரியல்ல. எவிடென்ஸ் கதிர் போன்ற ஆட்கள் இது போன்ற பிரச்னையை வைத்து சமூகத்தை இரண்டாக்கி அதில் ஆதாயமும் தேடும் அற்ப நபர்கள். ஆகவே ஆதிக்க சாதி மக்களை விரோதிகளாக சித்தரிக்கும் இந்த நபரின் மேற்படி விஷம தனமான அறிக்கையை முழுமையாக மட்டுறுத்த வேண்டும் என வினவிடம் கேட்டுக் கொள்கிறேன்

    • rebecca mary ஆதிக்க சாதி ஆண்களை நியப்படுத்துவதாக உள்ளது.உங்களது தரம் தாழ்ந்த கருத்துக்களை பரிசிலனை செய்யுங்கள்.
      இந்திய மத்திய அரசின் குற்றப்புள்ளி விவர பதிவேடு நிறுவன அறிக்கைகளை படித்துப்பாருங்கள்.தலித்துப்பெண்கள் என்பதால் நொடிக்கு நொடி ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்கொடுமைக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகின்றனர் என்ற உண்மையை உணரமுடியும் (சமூகம் பற்றிய மானவுணர்வு இருந்தால்)

    • ஆணாதிக்க திமிர் மட்டுமா இருக்கிறது? ஆதிக்கசாதித் திமிரும் சேர்ந்துதான் இருக்கிறது… மீ-டூவில் புகார் கொடுத்த பெண்கள் யாரும் ஏழைகள் அல்ல. அவர்களை யாரும் கழுத்தை அறுத்து கொலை செய்யவில்லை. காரணம் அவர்களிடம் ஓரளவுக்கேனும் பணம்- பின்புலம் இருக்கிறது….அதனால் வெளியில் வந்து தைரியமாக புகாரளிக்கவும் முடிகிறது….. ராஜலட்சுமிக்கு பணமும் இல்லை, சாதி பின்புலமும் இல்லை…… அதனால் கேள்விக்கிடமற்ற முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனம்.

  3. இந்த கொடுமைக்கு காரணம் அந்த சிறுமி தலித் என்பதால் அல்ல , வறுமை தான் முக்கிய காரணம். மேலும், ஏழை என்கிற இளகாரமும் ஆணாதிக்கமும் தான் காரணம். இதுவே ஒருவேளை இந்த பெண் தலித்தாகவே இருந்தாலும் வசதியான பின் புலத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் இந்த கொலைகாரன் இவ்வாறு செய்ய முடிந்திருக்குமா?

    டில்லியில் கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ன தலித் பெண்ணா? எவ்வளவோ இரவு பணிக்கு சென்று வரும் பெண்கள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் அதெல்லாம் என்ன சாதியினாலா? இங்கு ஏழைகளுக்கு அநீதி நடக்கின்றது அவ்வளவே. துரதிர்ஷ்டவசமாக தலித் மக்கள் அதிக ஏழைகளாக இருக்கிறார்கள் இதுவே முக்கிய காரணம்? அந்த சிறுமி ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் தினேஷ் குமார் இதனை தான் செய்து இருப்பான். மற்றபடி சாதிக்கு இதில் எந்த பங்கும் கிடையாது.. சாதி ஒழிப்பு பேசுவதற்கு இது மேடையல்ல…

    • From Rebecca Mary’s writing that I assume that she never experienced this kind of abuse from the upper caste. And also I assume that she is not from a lower caste.

      Then Rebecca Mary……. You will never ever understand abuse based on caste.

      To understand this kind of abuse you must have some kind of common-sense, ……at least.
      That’s all you need for understanding this kind of abuse.

  4. சங்கி ரெபெக்கா தன் வேலையை நுணுக்கமாக செய்கிறார். அந்த சிறுமி தலித் என்பதால்தான் அந்த மிருகத்திற்கு கோபம் தலைக்கு ஏறியிருக்கிறது. எளிமையாக சிந்திக்கும் எவருக்கும் இது விளங்கும். நமக்கு கோட்டா முறையில் பதில் சொல்லும் சங்கி ரெபெக்காவிற்கு இது விளங்காதது நியாயம்தானே . . !

  5. வழக்கம் போல் வினவு மொட்டைத்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போடுகிறது. ஒரு சைக்கோ செய்த கொடூர கொலையை கண்டபடி முடிச்சி போட்டு அதை கலெக்டர் ரோகிணியை திட்ட பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    சைக்கோ கொலைகாரனுக்கும் வினவுவின் சைக்கோ கட்டுரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  6. இதென்ன வேடிக்கையாக இருக்கின்றது, கொலை செய்ய நினைப்பவன் வெறியோடு தான் செய்வான், பின்ன மகிழ்ச்சியாக வெட்கபட்டு கொண்டா செய்வான். தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது என்கிற அசிங்கத்தில் அந்த அப்பாவி சிறுமியை படுகொலை செய்திருக்கிறான். வீட்டில் புகுந்து திருடுபவன் கூட, தன்னை எதிர்ப்போரை வெறியோடு தான் தீர்த்துகட்டுவான், இதற்கும் சாதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த கொடுமைக்கு வெறித்தனத்திற்க்கெல்லாம் காரணம் அந்த பெண் ஏழை என்கிற ஒரு காரணத்தினால் மட்டும் தான். மேலும் தினேஷ் குமார் ஒரு பயங்கர குடிகாரன் என்கிற செய்தியும் வருகிறது, ஆகவே மதுவெறியும் இதற்க்கு காரணமே தவிர சாதி வெறி மட்டுமல்ல.

    எத்தனையோ ஆதிக்க சாதியை சார்ந்த ஏழை பெண்களும் இது போன்ற துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள். எவ்வளவோ மேலை நாடுகளிலும் இது போன்ற பெண்களுக்கு அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வுகளும் கொடூர கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, அங்கெல்லாம் என்ன சாதியா காரணம்??? இது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள்… உண்மையில் ஆதிக்க சாதியாக அவன் தன்னை உணர்ந்திருந்தால், அணைத்து பெண்களையும் அதிலும் குறிப்பாக தலித் பெண்களை அவன்(தினேஷ்குமார்) தன்னுடைய சொந்த சகோதரிகளாக நினைத்து கடந்து போய் இருப்பான்… ஆகவே நடந்த கொலைக்கும் சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.. இது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் தான். கடுமையாக ஃபோக்சோ சட்டத்தின் மூலம் இதனை தடுக்க வேண்டும்.

  7. //உண்மையில் ஆதிக்க சாதியாக அவன் தன்னை உணர்ந்திருந்தால், அணைத்து பெண்களையும் அதிலும் குறிப்பாக தலித் பெண்களை அவன்(தினேஷ்குமார்) தன்னுடைய சொந்த சகோதரிகளாக நினைத்து கடந்து போய் இருப்பான்… //
    சங்கி ரெபெக்கா வினவு வாசிப்பவர்களை லூசுகளாக நினைக்கிறார்.
    //இதுவே ஒருவேளை இந்த பெண் தலித்தாகவே இருந்தாலும் வசதியான பின் புலத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் இந்த கொலைகாரன் இவ்வாறு செய்ய முடிந்திருக்குமா?//
    அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகும் கதை. ஆனால் கிராமங்களில் மீசை முளைத்த அத்தைகள் கிடையாது என்பதுதான் நிதர்சனம்.
    //மேலும் தினேஷ் குமார் ஒரு பயங்கர குடிகாரன் என்கிற செய்தியும் வருகிறது, //
    குடிகாரன் என்றால் தன் தாயையோ அல்லது சகோதரரியையோ புணர்ந்துவிடுவானா ?
    இதே சிறுமி தலித் அல்லாமல் வேறு சாதியை சேர்ந்திருந்தால் நிச்சயம் இம்மாதிரி கொடூரம் நிகழ்ந்திருக்காது. பார்ப்பன இந்து மதத்தின் காலம்காலமாக ஊட்டப்பட்டுவரும் சாதிவெறிதான் இதற்கு காரணம். அவன் உபயோகப்படுத்திய “பறத் தேவிடியா” என்ற சொற்றொடரே சாட்சி.
    சங்கி ரெபெக்கா கூறுவதுபோல ஆணாதிக்கம், பெண்கள் மீதான வன்முறை, பொருளாதார பின்புலம் போன்ற பல காரணிகள் பொதுவில் இருந்தாலும் இந்த சம்பவத்தை நாம் தலித் வன்கொடுமையாக முதன்மை படுத்துவதுதான் மிகச் சரியான பார்வையாகும்.
    இந்தியாவில் பார்ப்பன இந்து மதத்தில் சாதிக் கொடுமைகளுக்கு இடமேயில்லை என்று நிறுவ முயற்சிக்கும் மாட்டுமூளை சங்கி ரெபெக்காவிற்கான பதில் இல்லை இது. இதைப் படிக்கும் வினவு வாசகர்கள் சங்கிகளின் பொய் புரட்டுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

  8. முகநூலில் வாசுகி பாஸ்கர் மற்றும் AB Rajasekaran

    “என் பெயர் சா.ராஜலட்சுமி”

    சேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும் போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில் தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி தான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி.

    தாளவாய்ப்பட்டியில் இருந்து சுமார் பத்து கிமீ பயணித்தால் ஒரு ஆறடி சாலையில் கிழக்கு பக்கம் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரைகள் போட்ட சிறு வீடுகளும் குடிசைகளும் சிதறிக் கிடக்கிறது. தாளவாய்ப்பட்டியின் பிரதான சாலை ஆரம்பிக்கும் போது வலது இடது பக்கம் தென்படும் செழிப்பான நிலங்கள், பாரம்பரியமான வீடுகள், பண்ணை நிலங்கள் எல்லாம் கிராமம் என்பதற்கான அழகியலோடு பயணமாகிறது. சாதியும் பொருளாதாரமும் இந்தியாவில் ஒரே இடத்தில் தான் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஈச்சம்பட்டியில் இருக்கும் அந்த தலித் குடியிருப்பை நெருங்கும் போது அத்தனை அழகியலும் குன்றிப்போய் வறண்ட குன்றுகளின் அடிவாரத்தில் தான் அந்த சிறுமி ஓடியாடி விளையாடி தன் கால் தடத்தை பதித்து, நினைவுகளை விட்டு விட்டுச் சென்ற பகுதி இருக்கிறது.

    ஈச்சம்பட்டியில் இருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவில் இருக்கும் இடைநிலைப் பள்ளியில் தான் ராஜலட்சுமி எட்டாவது படித்து இருக்கிறாள், பெற்றோர்களான சாமுவேல் சின்னப்பொண்ணு கூலித்தொழிலாளிகள். கூலிக்கு வெளியூர் சென்றால் ஏழு நாளுக்கு குறைவாக சாமுவேலால் வீடு திரும்ப முடியாது, ராஜலட்சிமியின் அம்மாவும் ஏரியில் வேலைக்கு போகும் கூலி. சொந்தம் பந்தமென சுற்றி ஒரு பத்து தலித் குடியிருப்புகள், அவர்களின் பகுதியையும் எதிரில் இருக்கும் வீடுகளையும் பிரிக்கும் ஒரு சாலை. சாலைக்கு அந்தப்பக்கம் சாதி ஹிந்துக்களின் குடியிருப்பு, முதலியார் கொட்டாய் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் இரண்டோ மூன்றோ இருக்கக்கூடிய சாதி ஹிந்து வீடுகள். ராஜலட்சிமியின் கழுத்தறுத்த தினேஷ்குமாரின் வீடு அந்த முதலியார் கொட்டாயின் முகப்பில் இருக்கிறது.

    சம்பவம் நடந்த அன்று மாலை ராஜலக்ஷ்மி தன் அம்மாவிடம் “அம்மா, தினேஷ்குமார் அண்ணன் என் கிட்ட தப்பா பேசினாரு, எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லியிருக்கிறாள், அம்மாவும் “சரி, அப்பா வரட்டும்” என்று தேற்றியிருக்கிறார். அதே நாள் மாலை பேண்ட் ஷர்ட் எதுவில்லாமல் ஜட்டியோடு எதிரில் இருந்த தலித் குடியிருப்பில் இருந்த ராஜலக்ஷ்மியின் வீட்டிற்குள் அருவாளோடு புகுந்த தினேஷ்குமாரை பார்த்து பீதியடைந்த சின்னப்பொண்ணு “ஏன்பா இப்படி வர?” என்று தடுக்க முயல “நீ நகருடி பறத் தேவடியா” என்று அவரைப் பிடித்து தள்ளி ராஜலட்சுமியை வீழ்த்தி அரிவாளால் கழுத்தை அறுக்க ஆரம்பித்திருக்கிறான். ராஜலட்சுமி தாயார் சின்னப்பொண்ணு அலறி கத்த ஆரம்பிக்க ராஜலட்சுமியின் கழுத்து அறுக்கப்பட்ட ரத்தம் சுவரில் தெளித்துச் சிதற, கழுத்தை அறுக்க வீட்டிற்குள் இடைஞ்சலாக இருந்ததால் அந்த பிஞ்சு உடலை தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ஒண்ணும் பாதியுமாக வெட்டப்பட்ட தலையை முற்றிலுமாக அறுத்து உடலில் இருந்து துண்டித்து, தலையை தூக்கிக்கொண்டு தார் சாலையை நோக்கி ஓடியிருக்கிறான்.

    கழுத்தை அரிவாளால் வெட்ட ஆரம்பிக்கும் போது முதலும் கடைசியுமாக ராஜலக்ஷ்மி அந்த தொண்டையால் பேசியது “அண்ணே, நானென்ன தப்பு பண்ணேன்?” என்பது தான். அடுத்த நொடியே அந்த குரல் அறுத்தெறியப்பட்டது.

    தலையை தூக்கிக் கொண்டு ஓடிய தினேஷ்குமாரை பைக்கில் அழைத்துச்செல்ல அவனது தம்பியும் மனைவியும் எதிரிலிருந்த தார் சாலையில் தயாராக இருக்க, அவனது மனைவி அவனிடம் கேட்டது “இதை ஏன் இங்க தூக்கிட்டு வந்த?” ( அதாவது ராஜலக்ஷ்மியின் தலையை )

    ராஜலக்ஷ்மியின் தலையை அவன் வீட்டு வாசலை பார்த்தபடி இருக்கும் தார் சாலையில் வைத்து விட்டு தினேஷ்குமாரும், அவனது தம்பியும் மனைவியும் ராஜலக்ஷ்மியின் சொந்தபந்தங்கள் ஓடி வருவதற்குள் பைக்கில் பறந்து விட்டார்கள். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது, பின்பு தினேஷ் குமார் சரணடைந்ததாக செய்திகள் வெளியானது.

    போலீசில் சரணடைந்த பின் தினேஷ்குமார் தன்னையொரு மனநிலை பாதிக்கப்பட்டவனை போல காமித்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறான், அவனை இரவெல்லாம் கண்காணித்த போலீஸ் அவன் நடிக்கிறான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவனை போல நடித்தலும், சரணடைதலும் தனக்கான தண்டனையை குறைக்கும் என்பதற்கான யுக்தி.

    கோவத்தில் கொலை செய்வதையும், திட்டமிட்டு கொலை செய்வதையும் நம் அரசியலமைப்பு சட்டம் வெவ்வேறாக அணுகுகிறது. இதை சட்டத்தின் துணைகொண்டு சாத்தியப்படுத்துக்கொள்ள இந்த வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் வேலைகள் தாம் இவை. ஆனால் ராஜலட்சுமியை கொலை செய்ய Common intention இருந்திருக்கிறது, அது திட்டமிட்ட படுகொலை தான்.

    தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு வரும் கணவனை அழைத்துச்செல்ல எந்த மனைவியாவது வாகனத்தோடு தயாராய் இருப்பாளா? “இதை ஏன் எடுத்துட்டு வர்ற?” என்று அரிவாளால் அறுக்கப்பட்ட தலையை பார்த்து கேட்பாளா? ஆனால் இந்த தகவல்கள் எதுவும் போலீஸ் தரப்பில் இருந்து விசாரிக்கப்படவில்லை, வாய்மொழி சாட்சியமாக இந்த பகுதி மக்கள் முழுவதும் சொல்லும் இதை விசாரணைக்குட்படுத்தாமல் இருக்கிறது போலீஸ். “சரண்டர்” என்கிற ஒன்றே போதுமென்று அதிலிருந்து இந்த வழக்கை FIR செய்திருக்கிறார்கள்.

    அரசு தரப்பில் இருந்து தாசில்தார், SP உட்பட எந்த அதிகாரியும் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த கம்யூனிஸ்டுகளையும், விசிக வினரையும் தவிர அதிமுக / திமுக உட்பட எந்தக்கட்சியும் சம்பவம் நடந்து பத்து நாள் ஆகிய இன்றுவரை எட்டிப்பார்க்கவில்லை. இத்தனைக்கும் அது தனித்தொகுதி, தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கலெக்டர் ரோகிணியும் எட்டிப்பார்க்கவில்லை.

    இப்படி அதிகாரத்தின் எந்த அழுத்தத்திற்கும் உட்படாத, கவனத்தில் கொள்ளப்படாத ஒரு மிகக் குரூரமான கொலையை இந்த சமூக அமைப்பு இத்தனை சுலபமாய் கடக்கும் போது, இந்த சமூகம் குறித்த பெரும் அச்சவுணர்வும், அவநம்பக்கையையும் தவிர்க்க முடியவில்லை.

    SC / ST பிரிவின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் SP மற்றும் கலெக்ட்டர் கட்டாயமாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது SC / ST Act ன் சட்டமாகும், அதுவும் நடக்கவில்லை.

    சட்டத்தின் படி நடக்க வேண்டியதும், தார்மீகத்தின் படி நடக்க வேண்டிய எதுவும் ராஜலட்சிமியின் வழக்கில் சமூகநீதி மண் என்று பீற்றிக்கொள்ளும் இங்கே நடக்கவில்லை என்பது தான் நிர்வாணமான உண்மை. மாறாக, அதிகாரத்திற்கு அடிவருடி வசதிக்கும் அசதிக்கும் சமூகநீதி பேசுபவர்கள் “இதை எப்படி சாதியோடு தொடர்பு படுத்தமுடியுமென?” வழக்கம்போல கேள்வி வைக்கத் தவறவில்லை.

    அங்குள்ள தலித் பகுதியின் ஆடு, கோழிகள் சாதி ஹிந்துக்கள் பகுதிக்கு வந்தாலே சாதி ரீதியான வசவுகளுக்கு உள்ளாகும் நிலை உள்ள தமிழகத்தின் சராசரியான சாதி நிலப்பரப்பு தான் அதுவும், அங்கும் இந்த பிரச்சனைகள் நிலவி வருகிறது, ராஜலட்சிமியின் தாயாரையும் ராஜலட்சமியையும்”பறத்தேவடியா” என்று குறிப்பிட பட்டதும் முதற் கட்ட விசாரணையும் வெளி வந்திருக்கும் உண்மைகள்.

    இதையெல்லாம் தாண்டி நாம் வசதியாக மறக்கும் உண்மை என்னவென்றால், இந்தியாவில் ஒரு சட்டம் அதிகம் பயன்படுத்தப்படாமல், அல்லது எந்த மக்களுக்காக அந்த சட்டம் இயற்றப்பட்டதோ, அந்த மக்களுக்கே தெரியாத சட்டம் ஒன்று இருக்குமேயானால் அது SC ST Act வன்கொடுமை தடுப்புச்சட்டம் தான்.

    ராஜலட்சிமியின் குடும்பம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் அங்கு உண்டு, கொலைகாரனான முதலியார் சமூகத்தை சேர்ந்த தினேஷ் குமார் வீடு உட்பட அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால்,

    * பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் இருக்கும் ஒரு குடியிருப்பில் புகுந்து ஒருவன் தலையை வெட்டி வந்துவிட முடியும் என்கிற தைரியத்தை அவனுக்கு கொடுப்பது எது?

    * பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பம் இருக்கும் போது இரண்டே குடும்பமான சாதி ஹிந்துவின் குடியிருப்பில் இருப்பவர்கள் சாதி ரீதியான வசவுகளை தைரியமாக பிரோயோகிப்பதற்கு அவனுக்கு உருவாகும் தைரியத்தை கொடுப்பது எது?

    இவையெல்லாமே இந்த பொதுச்சமூகம் எனப்படும் பெரும்பான்மை சாதியச் சமூகம் கொடுக்கும் ஊக்கம் தான், கொலை நடந்து பத்து நாளுக்கும் மேல் தொகுதி MLA , ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டப்பிரிவுகளின் Protocol படி நடக்க வேண்டிய விசாரணை, என்று எதுவும் நடக்காமல் ஒரு அலட்சியப் போக்கு இருக்கிறதல்லவா? இது தான் சாதி ஹிந்துக்களின் பலம்.

    ஒரு பக்கம் சாதித் தலைவனின் குருபூஜைக்கு ஆண்ட / ஆளுகின்ற அரசியல்வாதிகள் கைகூப்பி குனிந்து கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டே, எல்லா மாவட்ட DSP களையும் சாதிக்கூட்டத்துக்கு காவல் காக்க அங்கே பணிக்கு அனுப்பி விட்டு, ராஜலட்சிமி கொலைக்கு மௌனம் காத்தும், பெயரளவில் வருத்தத்தை தெரிவிப்பதாலும் இங்கே நடக்கப் போகிற மாற்றம் ஏதுமில்லை.

    சுவாதியின் கொலைக்குப் பின்னர் சுவாதியின் வீட்டிற்கு சென்று பதறியடித்து இருப்பை பதிவு செய்ய முனையும் ஏற்பாடு, அதனினும் குரூரமாக கொலைசெய்யப்பட்ட ராஜலட்சிமிக்கு கிட்டாமல் போனது ராஜலட்சமி பிறந்த இடம் / குடும்பம் / சாதி என அனைத்துமே முடிவு செய்கிறது.

    நேற்று நானும் சில தோழர்களும் ராஜலட்சமியின் வீட்டிற்குப் போனோம், நெடு நேரம் பேசினோம், வெளியே வந்தோம், கொலைகாரனின் வீட்டு வாசலுக்கு வந்தோம், ராஜலட்சிமியின் தலையை கொலைகாரன் தினேஷ்குமார் வைத்து விட்டு போன தார் சாலையில் படிந்திருந்த ரத்தத்தை போலீஸ்காரர்கள் சுரண்டி எடுத்து சென்றிருக்கிறார்கள், பேய் வாழ்ந்த வீட்டைப் போல தினேஷ் குமாரின் வீட்டைப் பார்த்தேன், பத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மை தலித் குடும்பங்கள் அங்கே இருந்தும் அந்த ஒற்றை சாதி ஹிந்து வீட்டை அவர்கள் எதுவும் செய்திருக்கவில்லை, இதுவே சேரியில் இருக்கும் ஒருவன் தவறு செய்திருந்தாலும் அந்த சேரிக்கே அது எத்தனை பாதகமாய் முடிந்திருக்கும் என்பதை தமிழகச்சூழலில் சாதிவெறியின் உக்கிரத்தை அறிந்த யாருக்கும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கையாலாகாதவர்களை, செய்யத்தவறியவர்களை சுட்டிக்காட்டும் அதே வேளையில், இனி ராஜலட்சுமிகளுக்கு ஒன்றென்றால் இங்கே அவர்களுக்கென்று யாருமில்லை என்கிற போக்கை உடைத்தெறிய நாங்கள் போனோம், போவோம். இதற்கெல்லாம் முன் தோழர் எவிடன்ஸ் கதிர் ஆய்வு செய்திருக்கிறார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடன் இருக்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் போயிருக்கிறார்கள், இத்தோடு சேர்த்து கைகோர்க்க, அழுத்தம் கொடுக்க, கோரிக்கைகள் வைக்க நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வழக்கறிஞர் அணியோடு நாங்கள் போனோம், மீண்டும் சொல்கிறேன், இனி போவோம். தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கேட்பாரற்று நீர்த்துப்போகும் என்கிற கருத்துருவாக்கம் இந்த மண்ணில் இருந்து அழியும்வரை அடுத்தடுத்து இனி யாரவது முளைத்துக் கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.

    ராஜலட்சிமியின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தேன், ராஜலட்சிமியின் கழுத்தறுக்கப்பட்ட இடத்திலிருந்து பீச்சியடித்த ரத்தம் படிந்திருந்த சுவற்றுக்கு எதிரே ஒரு மேசை, அதில் ஒரு புத்தகம், ராஜலட்சிமியின் நோட்டுப் புத்தகம், அதை திருப்பிய போது தான் இந்த பக்கம் நிலைகொள்ளச்செய்தது.

    “என் பெயர் சா.ராஜலட்சுமி”

    என்னை மறக்காதீர்கள் என்றும் அவள் மீண்டும் மீண்டும் எழுதி வைத்து விட்டுப் போனதைப் போல இருந்தது.

  9. வினவு ….

    நான் சாதிக்கு ஆதரவாக பேசவில்லை, நான் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளுங்கள். இதனை ஆதிக்க காதி தாழ்த்தபட்ட சாதி என்கிற ரீதியில் அணுகினால் இறந்து போன அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்காது. இதனை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டுமானால் சாதி கடந்து இதனை பொது பிரச்சனையாக தான் நாம் அணுக வேண்டும். அதனால் தான் என் ஆரம்ப கம்மெண்ட்டிலேயே சாதி ஒழிப்பிற்கான தளம் இதுவல்ல என்று கூறினேன். வெறும் இதனை தலித் பெண்ணின் பிரச்சனையாக சுருக்க வேண்டாம். ஆனால், எவிட்னெஸ் போன்ற அற்ப நபர்கள் இதனை சாதிய வன்மம் கொண்ட பிரச்சனையாக மாற்ற பார்க்கிறார்கள். எவிடென்ஸ் போன்ற நபர்களால் தலித் மக்களுக்கு எந்த நிரந்தர தீர்வும் கிடைக்காது. குறைந்தபட்சம், ஆதிக்க சாதி மக்களின் மனசாட்சியை அசைத்து பார்க்கும் தகுதி கூட இந்த லெட்டர் பேட் இயக்கங்ககளை நடத்தும் நபர்களுக்கு கிடையாது. சொல்லவருவதை புரிந்துக் கொள்ளுங்கள். இதனை மக்களிடம் உணர்வு பூர்வமாக எடுத்து செல்ல வேண்டும். ஆனால் ஆதிக்கசாதி தலித் என்று போனால் இது மற்றுமொரு செல்லா காசாகிவிடும்.. அதனால் தான் தலித் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு இன்று வரை நியாயம் கிடைப்பதில்லை, யாரும் அவர்களுக்காக ஒன்று கூடுவதுமில்லை..புரிந்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறன்…

  10. வினவு . . .
    ஆடு நனையுதுன்னு ஓநாய் மாதிரி அழுவாங்க . . .
    மனச கல்லாக்கிக்கிட்டு தம் கட்டி அமைதியா இருந்துடுங்க . . .
    ஆடு பொழச்சிக்கும் . . .

Leave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க