மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர்.

மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.

அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.

வெளியூருக்குச் சென்றிருந்த சாந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட சாந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.

1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது.

சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.

நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது’ போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சாந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.

சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servants of the Goddess: The Priests of a South Indian Temple புத்தகத்தில் சாந்து பட்டரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது புகைப்படம் இல்லை.

அவரது சந்ததிகளைத் தேடிப்பிடித்து, சாந்து பட்டர் என்ற சாமிநாதபட்டரின் புகைப்படத்தைக் கண்டெடுத்தேன். அவரது புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறையென நினைக்கிறேன்.

இது தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டிருக்கும் கட்டுரையை
வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும்

தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு

(கட்டுரையில் இருந்து..
“கோவில் நுழைவுக்குப் பிறகு எங்கள் சமூகத்திடமிருந்தே பல கொடுமைகளை அனுபவித்தோம். என் அப்பா கோவிலிலிருந்து வீடு திரும்பும்போது அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள். திடீரென ஆட்கள் அடிப்பார்கள். சுந்தரமும் (தற்போது மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர்) ஆறுமுகமும் (அன்சாரி வாசக சாலையை நடத்தியவர்) அப்போது என் தந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்….

ஆலயப் பிரவேசம் நடந்ததற்கு அடுத்த நாள், ஜூலை 9ஆம் தேதியன்று முத்து சுப்பர் பட்டர் என்ற பூசகர், காலை வழிபாட்டை முடித்துவிட்டு, கோவிலின் கதவுகளை மூடிவிட்டு மாலையில் திறக்க மறுத்துவிட்டார். கோவிலைச் சுத்தப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகே கோவிலைத் திறக்க முடியும் என்று சொல்லிவிட்டார். நிர்வாக அதிகாரியால் அவரிடமிருந்து சாவிகளைக் கைப்பற்ற முடியவில்லை. அதே நாளில் கோவிலின் சாவியை வைத்திருந்த மற்றொரு பட்டரான சாமிநாதபட்டர் வெளியூருக்குச் சென்றிருந்தார்.)

நன்றி: Muralidharan Kasi Viswanathan