“சோம்நாத் கோவிலை 17 முறை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக பழி வாங்கும் உணர்ச்சி மக்களுக்கு இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா கோவிலை தங்கத்தால் வேய்ந்து அதன் பழம்பெருமையையும் புகழையும் முழுமையாக மீட்க முடியும் என்று கடந்த டிசம்பர் 6, 2018 அன்று கூறியிருக்கிறார்.

“இப்போது ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி மக்கள் சோம்நாத் கோவிலுக்கு வருகிறார்கள். சிறப்பான வசதிகள் பல இங்கே இருக்கின்றன. ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை சுற்றுலா வசதிகளை செய்து தர எல்லா முயற்சிகளையும் செய்கிறது. ஆனால் என்னைப் போன்ற சிறு வயதிலிருந்து இந்த கோயில் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு தங்கத்தால் இந்த கோவிலை வேயாத வரை இது முழுமையடையாது.

சோமநாதர் ஆலயத்தின் உள்ளே தங்கம் பதிக்கப்பட்ட பிரகாரம்

எண்ணிலடங்கா மக்களின் உறுதிப்பாடும் இதுதான்.. இந்த இடத்தின் பெருமையையும் புகழையும் அழிக்க முயற்சித்தவர்களை பழிவாங்க முடியாது. அதே போல பழிவாங்கும் உணர்ச்சியையும் நாம் கொண்டிருக்க முடியாது. இதன் பெருமையையும் புகழையும் மீட்கும் ஒரு உறுதியான தீர்மானம் மட்டுமே இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும்” என்று கோவில் நடைபாதைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

கஜினி முகமது இப்போதில்லை என்றாலும் முசுலீம்கள் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக நினைவுபடுத்தி மிரட்டுகிறார் அமித்ஷா. அடுத்த வரியிலேயே தங்கக் கூரை வேய அறைகூவல்! முன்னது மறைமுகமா நடக்கும், பின்னது வெளிப்படையாக நடக்கும்.

சோம்நாத் கோவிலில் தொடங்கி கபிலா, சரஸ்வதி மற்றும் ஹிரன் ஆகிய ஆறுகள் சந்திக்கும் முக்கூடல் (Triveni Sangam) வரை 1.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட நடைபாதை முடிகிறது. இந்நடைப்பாதையானது சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் வேலைப்பாடுமிக்க இருக்கை அமர்வு வசதியுடன் அமைக்கப்படுகிறது. அங்கு உட்கார்ந்து கடலைக் காண்பதுடன் பல்வேறு கோவில்களையும் மக்கள் தரிசிக்கலாம். சமய சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆன்மிக பயண புத்துணர்ச்சியாக்கம் மற்றும் ஆன்மிக ஊக்குவிப்பு இயக்கம் (PRASAD) என்ற திட்டத்தின் பெயரில் சுற்றுலாத்துறை அமைச்சகம் இதற்கு நிதி வழங்கி வருகிறது.

இந்த கோவில் 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை எப்படி முஸ்லிம் அந்நியர்களால் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை பற்றிக் கூறிய அமித்ஷா அப்படி தாக்கப்பட்ட போதிலும் அதை மீண்டும் மீண்டும் மக்கள் கட்டியமைத்ததாக கூறினார். “ஆனால் ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல கோவில் எழுந்தது. இன்று பெருமைமிக்க இந்த கோவில், உலகம் பார்க்க நிற்பதை நாம் காண முடியும்” என்றும் கூறினார்.

படிக்க:
கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !
சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி

ஆனால் இதே காலக்கட்டத்தில் இந்து மன்னர்களும் பல்வேறு இந்து கோயில்களையும், சமண பவுத்த விகாரங்களையும் அடித்து நொறுக்கி கொள்ளையடித்ததை இங்கே ஒப்பு நோக்கி அன்று நிலவிய காலக்கட்டத்தை புரிந்து கொள்வது அவசியமானது. அக்காலத்தில் மன்னர்களின் பொக்கிஷக் கருவறையாக கோவில்கள் இருந்தன. படையெடுத்து வரும் மன்னர்கள் கோவில்களை கொள்ளையடித்தால்தான் பொக்கிஷங்களை கைப்பற்ற முடியும். இதில் இந்து, முஸ்லீம் மன்னர்களிடத்தில் மத பேதம் இல்லை.

“மக்களின் பெருமைக்குரிய சின்னமாக இந்த கோயில் இருந்ததால் விடுதலைக்கு பின்னர் தலைவர்கள் அதை புதுப்பிக்கும் வேலையை எடுத்தனர். 1947 விடுதலைக்கு பிறகு தொலைநோக்கு பார்வை கொண்ட ஜாம்சாஹிப் (நவாநகரை ஆட்சி செய்தவர்), சர்தார் வல்லபாய் படேல், கே.எம் முன்ஷி ஆகிய தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் வெறுமனே விடுதலை அடைவதின் போதாமையை அறிந்திருந்தனர். மக்கள் தங்களது சொந்த பெருமையை மீட்டெடுப்பதுவும் இன்றியமையாதது என சிந்தித்தனர்” என்று அவர் கூறினார்.

ஆனால் ஷா கூறும் இந்த தலைவர்களின் யோக்கியதை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சான்றாக, நேரு அமைச்சரவையில் உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்த முன்ஷி, குஜராத்தின் பெருமை (Gujarati Asmita) குறித்த கட்டுக்கதைகளை எழுதி குஜராத் மக்கள் மனதில் முஸ்லீம் மக்களை பற்றிய விரோத போக்கை வளர்த்தவர்களில் முதன்மையானவர். “ஆயிரம் ஆண்டுகளாக முகமதியர்கள் அழித்த சோம்நாத் கோயிலின் நினைவுகள் மறக்க முடியா ஒரு பேரிடராக இந்து இனத்தின் கூட்டு மனசாட்சிக்குள் எரிந்து புதைந்துள்ளது” என்று சோம்நாத் கோவில் பற்றி முன்ஷி கூறியது இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

வழிபாட்டு இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும், அவற்றை எளிதில் அணுகவும் மற்றும் அவற்றின் மத இன்றியமையாமையை மீட்டெடுக்கவும், சமய சுற்றுலாவை ஊக்குவிக்கவும் பிரசாத் (PRASAD) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடங்கியிருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா தனது தங்கத்திட்டத்தை நியாயப்படுத்துகிறார்.

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் குழு உறுப்பினராக அமித்ஷா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூத்த பா.ஜ.க தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். பா.ஜ.க தலைவரது கருத்து இராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பாக வெளிவந்தது.

கோவிலுக்கு நன்கொடை நிறைய வருவதாகவும் அதைக்கொண்டு கருவறை மற்றும் சில தூண்கள் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது என்றும் முன்னாள் குஜராத் தலைமை செயலாளரும் கோவில் செயலாளருமான பிரவின் லஹரி கூறினார்.

பட்டேல் சிலைக்கு 3000 கோடி ரூபாயில் சிலை, அயோத்தியில் ராமர் சிலைக்கு எத்தனையோ ஆயிரம் கோடியில் சிலை என்ற வரிசையில் சோமநாத் கோவிலின் தங்கக் கூரை சேர்கிறது. கஜா புயலுக்கு இதுவரை நிவாரணம் தராமல் நீதிமன்றத்தில் தெனாவெட்டாக பதிலளிக்கும் மத்திய அரசு குஜராத் சோமநாத் கோவிலுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்க நினைக்கிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன?

தமிழாக்கம்: சுகுமார்

நன்றி:
இந்தியன் எக்ஸ்பிரஸ், தி வயர்