புத்தகத் திருவிழாவில் கூட்டமில்லை. அப்பளம்தான் அதிகம் விற்பனையாகிறது. இப்படி எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். “ஆமான்டா அப்பளம்தான்டா அதிகமா விக்கும். ஏன்னா அந்த அப்பளத்தைவிட….” என்று வாசகர்கள் திருப்பி திட்டுவதில்லை. அவர்கள் அத்தனை சாதுவானவர்கள். எழுத்தாளன் மீதிருக்கிற கோபத்தில் அம்பிகையே அபிராமியே என அப்பளத்தை வாங்கி கோபமாக இரண்டு கடிகடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வாயில்லா வாசகர்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம். என்றைக்கு தமிழ்வாசகன் அவன் காசு கொடுத்து வாங்கிய நூலை படித்து கடுப்பாகும்போது எழுத்தாளனை திரும்பத் தாக்கத்தொடங்குகிறானோ அன்றைக்குதான் தமிழ் எழுத்துலகம் வாழும். அதெல்லாம் நடக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை… ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.

முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.

அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பதிப்பகமே ரமேஷ் பப்ளிஷர் என நான்குகடை, சுரேஷ் பப்ளிஷர் என ஐந்து கடை, ராமேசுரேஷ் டிஸ்ட்ரிபூட்டர்ஸ் என பத்து கடை என கண்டமேனிக்கி ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். எங்கு சுற்றினாலும் ஒரே மாதிரியான நூல்களையே திரும்ப திரும்ப பார்க்கும் போது வாசகனுக்கு எவ்வளவு அலுப்பும் எரிச்சலும் வரும்… இப்படிப்பட்ட ப்ராக்ஸி கடைகளிலேயே போய்விட்டது 30 % !

அடுத்து ஒரே மாதிரியான புத்தகங்கள் விற்கிற ஜிகே கடைகள். இங்கெல்லாம் பொன்னியின் செல்வன், சத்திய சோதனை, தெனாலி ராமன் கதைகள், பீர்பால், சாண்டில்யன்… இப்படிப்பட்ட நூல்களை மட்டுமே விற்பார்கள். இங்கெல்லாம் ஆண்டுதோறும் ஒரு புதிய நூலைக்கூட போடமாட்டார்கள். வருடாவருடம் அதே செட்டு… அதே நூல்கள். ஒரு புதுமையும் இருக்காது. எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்கிற பிரச்னைகள் இல்லாமல் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து விற்கிற குரூப்கள் இவர்கள். இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு 15% தேறும்.

அடுத்து ஆங்கில நூல்கள் விற்பவர்கள். பென்குயின் தவிர பெரிய ஆங்கில பதிப்பகங்கள் சென்னை புத்தகத்திருவிழாவில் ஏனோ கால்வைப்பதில்லை. பெரும்பாலும் டூபாக்கூர் புக்ஸ் கம்பெனிகள்தான் களம்காண்கின்றன. எங்காவது பழைய கண்டெயினரில் பழைய நூலகத்தில் கழித்துக்கட்டின நூல்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்து எது எடுத்தாலும் 100 வகையில் விற்பார்கள். அதில் பத்து சதவீதம் கூட தேறுகிற நூல்களே இருக்காது. எல்லாமே 10 ரூபாய் கூட மதிப்பில்லாத நூல்களாக இருக்கும். இவ்வகை கடைகள் 5%

அடுத்து ப்ரமோஷன் கடைகள். தங்களுடைய பொருள்களை விற்பதற்காக, அல்லது பிரபலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற கடைகள். இங்கெல்லாம் நமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. புத்தகத்திருவிழாவுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் பத்து கடைகளை மொத்தமாக போட்டு… உள்ளே பத்து பேர் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நம்மை உள்ளே அழைத்து பலூனை கொடுத்து மண்டையை கழுவி எதாவது எஜூகேஷனல் சாப்ட்வேரை தலையில் கட்டுவார்கள். இதுமாதிரி கடைகள் ஒரு 5%

மீதி இருக்கிற 25% கடைகளில் நல்ல நூல்கள் கிடைக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதில் முக்கால்வாசி கடைகளில் புக்பேருக்கென்றே அவசரஅவசரமாக சரியாக எடிட் செய்யப்படாமல், பிழைகள் பார்க்காமல், சரியான ஆய்வுகளோ உழைப்போ இல்லாமல் அவசரகதியில் எழுதப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். 200 ரூபாய் கொடுத்து ஒரு வாசகன் புத்தகம் வாங்குகிறான், அவனுடைய பணத்துக்கு மதிப்புக்கொடுத்து அவனை கொஞ்சமாவது மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்கள் இவைகளில் சொற்பமாகத்தான் தேரும். அது எது எனக் கண்டுபிடித்து சொல்லவும் நம்மிடம் ஆட்கள் இல்லை. ஃபேஸ்புக்கில் தேடினாலும் கிடைக்காது. முகநூல் ஹிட் என சில நூல்கள் உண்டு… அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மட்டையடி அடித்து நம் தலையில் கட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தில் இந்த 25% கடைகளில் எதையோ ஒன்றை எடுத்துவந்து பத்து பக்கம் படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவோம்.

இப்படி ஒட்டுமொத்த புத்தகத்திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்பது கடைசிவரை உள்ளே சென்று திரும்புகிற வாசகனுக்கு மர்மமாகவே இருந்துவிடுகிறது. ஆண்டுதோறும் இதே செட்அப்தான், ஒரு புதுமையோ மாற்றமோ இருக்காது. அதே லிச்சி ஜூஸ், அதே புதிய கவிஞர்கள் படை, அதே காலச்சுவடு கிளாஸிக்ஸ், அதே காமிக்ஸ் கடை, அதே மேடை, அதே சுகிசிவம், அதே மனிதர்கள்…

படிக்க:
மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !

உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ, அவன்மீது எந்த பச்சாதாபமும் இல்லாமல் மொக்கையான சரக்குகளையும் அதிக விலைக்கு தலையில் கட்டி, மோசமான சூழலில் குடிக்க விட்டிருக்கிறார்களோ அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.

உலகெங்கிலும் நடக்கிற புத்தகத்திருவிழாக்களின் வீடியோக்களை யூடியூபில் தேடிப்பாருங்கள்… எப்படியெல்லாம் புதுமைகள் பண்ணுகிறார்கள். ஆங்கில நூல்களை வாங்கிப்பாருங்கள், அட்டை தொடங்கி கன்டென்ட் வரை எத்தனை உழைப்பு. ஒரு ஒரு ரூபாய்க்கும் மதிப்பு மிக்க நூல்களை போடுகிறார்கள்.

நம் புத்தகத் திருவிழா கடைகளில் கிரியேட்டிவிட்டி என்பது துளிகூட இருக்காது. போகட்டும் வசதிகளாவது இருக்கிறதா? கடையில் இருப்பவர்களுக்கும் நூல்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே ஒரு நூலை எடுத்து விவரித்து பரிந்துரை செய்யவும் பக்காவான ஆளில்லை. நல்ல நூல்களும் இல்லை. புதிதாக வருகிற சில நூல்களும் வாசகன் மீதான அக்கறையோடு எழுதப்படுவதில்லை…

இதையெல்லாம் தாண்டியும் இத்தனை கூட்டங்கள் வருடந்தோறும் வருவதும் நூல்கள் வாங்குவதும் கூட அதிசயிக்கதக்க அதிசயம்தான்… பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அந்த பாவப்பட்டவர்களுக்கு ரத்தினக்கம்பளமல்லவா விரிக்க வேண்டும்… அவனை பார்க்கிங்கில் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… யாசகனைப்போல!

முகநூலில்:Athisha Vino(அதிஷா)