ந்தியப் பிரதமர் மோதிக்கு ஃபிலிப் கோட்லர் பிரெசிடென்சியல் விருது வழங்கப்பட்டது இவ்வளவு பெரிய சர்ச்சையை உருவாக்குமென யாரும் நினைத்திருப்பார்களா எனத் தெரியவில்லை. இது தொடர்பாக இந்தியா டுடேவும் தி வயர் இணைய இதழும் பல விரிவான கட்டுரைகளை வெளியிட்டுவிட்டன. அதில் பின்வரும் கட்டுரை பல அதிர்ச்சிகரமான தகவல்களை அளிக்கிறது.

ஃபிலிப் கோட்லர் விருது பெரும் மோடி

1. ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேர்ல்ட் மார்க்கெட்டிங் சம்மிட் (WMS) விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவை நடத்தியது, இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சுஸ்லென்ஸ் ரிசர்ச் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் (Suslence).

2. WMS, Suslence ஆகிய இரண்டுமே சவுதியைச் சேர்ந்த தவுசீஃப் ஜியா சித்திக்கி என்பவரின் முயற்சிகள்போலத் தெரிகிறது. சித்திக்கி, சவூதி அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான SABIC-ல் 2014 ஜனவரி முதல் பணியாற்றுவதாக அவரது லிங்க்ட் – இன் புரொபைல் கூறுகிறது. SABIC இந்திய பெட்ரோலியச் சந்தையில் தனது கரத்தை விரிவுபடுத்த நினைக்கும் நிறுவனம்.

தவுசீஃப் ஜியா சித்திக்கி லிங்க்ட் – இன் புரொபைல்

3. இது தொடர்பாக தி வயர் திங்கட்கிழமை ஒரு கட்டுரையை வெளியிட்டதும் WMS மற்றும் Suslence ஆகியவற்றின் இணையதளங்கள் மூடப்பட்டுவிட்டன.

4. மோதிக்கு விருது வழங்குவதாக பெருமையுடன் அறிவித்த WMS18-ன் ட்விட்டர் கணக்கும் அழிக்கப்பட்டுவிட்டது.

5. சித்திக்கி SABICல் “Sustainability Specialist”ஆக பணியாற்றுவதாகக் கூறுகிறார். சவூதியின் தம்மமில் வசிக்கிறார்.

6. 2017-ல் Suslence Research International Institute-ஐ சித்திக்கி நிறுவுகிறார். இதன் இணைய தளம், WMS 18 விழா நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக ஜூலையில்தான் துவங்கப்படுகிறது. அலிகாரில் சுஸ்லான்சின் தலைமையகம் இருப்பதாக கூறப்பட்டாலும் இதனைக் கண்டறியமுடியவில்லையென ஒரு தொலைக்காட்சி நிறுவனம் கண்டறிந்தது.

7. Suslence-ல் அவரது மனைவி அண்னா கான், ஃபைசல் ஜியாவுதீன் ஆகிய மேலும் இருவர் இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் மூன்றாவது இயக்குனரின் பெயர் ஜுபைர் அகமது கான்.

8. அன்னாகான் தம்மமில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். பிரதமருக்கு கோட்லர் விருதை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இவரும் காணப்படுகிறது.

படிக்க:
மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் !
♦ ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !

9. பிதமருக்கு அளித்த விருது தவிர கோட்லர் மார்க்கெட்டிங் எக்ஸலன்ஸ் பிரைஸ் என்ற விருதுகளையும் இந்த WMS அளித்திருக்கிறது. அதாவது இந்த விழாவுக்கு ஸ்பான்சர் செய்த கெய்ல், பாபா ராம்தேவின் பதஞ்சலி, பிசினஸ் வேர்ல்ட், விட்டிஃபீட் போன்ற நிறுவனங்களுக்கு அவை அளிக்கப்பட்டிருக்கின்றன.

10. தேர்வுக் குழுவில் இருந்ததாக இணைய தளம் குறிப்பிடும் வால்டர் வியெர்ராவை தி வயர் தொடர்புகொண்டு கேட்டபோது, யாரும் விருதுகளைத் தேர்வுசெய்ய அழைக்கவேயில்லை. அவர்களாகவே பார்த்துக்கொண்டார்கள் என்கிறார். சித்திக்கியை அவருக்கு இதற்கு முன்பாகத் தெரியாது.

11. சித்திக்கி தி வயரிடம் பேச மறுத்துவிட்டார். SABICஇடமும் இது குறித்து வயர் தொடர்புகொண்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற கெம் – 2018 கன்காட்சியில் SABIC நிறுவன தலைவருடன் நிதின்கட்கரி.

12. SABIC 1993-94 ல் இருந்து குஜராத்தில் தனது ஆலைகளை இயக்கிவருகிறது. இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்த இந்நிறுவனம் விரும்புகிறது.

13. இந்திய அரசு நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் கெய்ல் ஆகியவற்றுக்குச் சொந்தமான ONGC Petro Additions Limitedல் 50 சதவீத பங்குகளை, 4.3 பில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க விரும்புகிறது SABIC. கெய்ல் நிறுவனம்தான் WMS18-ன் ஸ்பான்ஸர்களில் ஒன்று.

அதாவது, தி வயர் இணைய தளத்தின் கட்டுரை சுட்டிக்காட்டுவதென்னவென்றால், இந்தியாவின் எரிசக்தித் துறையில் பெரும் முதலீட்டைச் செய்ய விரும்புகிறது SABIC. அதற்கான பரந்த முயற்சிகளில் இந்த விருதும் ஒன்றாக இருக்க முடியாதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

செய்தி ஆதாரம் :
♦ Exclusive: The Saudi Connection to Modi’s ‘First-Ever’ Kotler Presidential Prize

♦ Kotler Impact explains untraceable Suslence’s role after row erupts

1 மறுமொழி

  1. கார்ப்பரேட் தனது அடிமைகளுக்கு வழங்கும் விருதுதான் இந்த விருது, அந்த வகையில் “பாரதபிரதமர்” பாசிச பயங்கரவாத மோடிக்கு முதலில் வழங்கியதுதான் மிகவும் சிறப்பானது, சரியானதும்…

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க