ந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழலில் நாட்டு மக்கள் பதைபதைப்புடன் இருந்த சமயத்தில், பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?  புல்வாமா தாக்குதல் நடந்த பின், சில மணிநேரங்கள் வரை படப்பிடிப்பில் இருந்தார்.  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தியா உளவுத்துறை பலவீனத்தின் காரணமாக, 40 சி.பி.ஆர்.எஃப் வீரர்களை பலிகொண்டது.  அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் நடத்தப்பட்ட பாலகோட் பகுதி மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதாகக் கூறிக்கொண்டது. பின்னால், அதுவும் பொய்யென நிரூபணமானது. ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தானிடையே போர் மூளும் சூழல் உருவானது, அரசு அத்தகைய சூழலை உருவாக்கியது.

பாஜகவின் ஊதுகுழல் ஊடகங்கள் நடக்காதவற்றை ஊதிப் பெரிதாக்கி, போரை விரும்பாத மக்களை போருக்கு தயார்படுத்தின. இந்தியா கூறிக்கொண்டவற்றை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், பிரதமரோ அல்லது தொடர்புடைய அமைச்சர்களோ எதுவும் பேசவில்லை.

இந்த இரண்டு வாரங்களிலும் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்….

பிப்ரவரி 14:

தேசிய பாதுக்காப்பு சூழல்: புல்வாமா மாவட்டம் லெத்போரா அருகே மாலை 3.15 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில்  மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் ஆவணப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தார் மோடி.  உள்ளூர் பத்திரிகைகளின்படி அவர் தேசிய பூங்காவில் 6.40 மணி வரை, அதாவது புல்வாமா தாக்குதல் நடந்து 3 மணி நேரத்துக்குப் பிறகும் அங்கேயே இருந்திருக்கிறார்.

பிப்ரவர் 15:

தேசிய பாதுகாப்பு சூழல்: தாக்குதலுக்கு அடுத்த நாள், வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய புலனாய்வு முகமையுடன் புல்வாமா சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கும் ஜெய்ஸ் இ முகமது அமைப்புக்கும் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

மிகவும் ஆதரவான நாடுகள் என்ற பட்டியலிலிருந்தும் பாகிஸ்தானை நீக்கியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  ‘சி.பி.ஆர்.எஃப். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது’ என உத்தரபிரதேசத்தின் ஜான்சியிலிருந்து இந்தத் தாக்குதல் குறித்து மோடி முதல் கருத்தை உதிர்த்தார்.

மேலும், ஜான்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசினார்.

வந்தே பாரத் என்ற ரயிலை கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். அன்றைய நாள் மாலையில் பிரதமர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். புது டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றார் மோடி.

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

பிப்ரவரி 16:

தேசிய பாதுகாப்பு சூழல்: டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாதுகாப்புப் படைகளுடன் உறுதுணையாக நிற்பது என அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இந்திய விமானப்படை தலைவர், இந்தியா தேவையான பதிலடிக்கு தயாராகிவருவதாக சொன்னார்.

உலகத்தினரின் ஆதரவை இந்தியா பெறத் துவங்கியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்குள்ள தற்காப்பு உரிமையை ஆதரித்தார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரி மாணவர்களை குறிவைத்து இந்துத்துவ காவிகள் வன்முறையை கட்டவிழ்த்தனர். ஜம்முவில் நடந்த கலவரம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரியை உயர்த்தியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  படையினருக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்தார் பிரதமர்.

துலே என்ற இடத்தில் நீர்ப்பாசன திட்டம் ஒன்றை தொடங்கி வைத்ததோடு, ஜல்கான் உதானா ரயில் திட்டத்தையும், ஒரு ரயிலையும் தொடங்கிவைத்தார் மோடி. இரண்டு ரயில் பாதைகளுக்கான அடிக்கல் நட்டு விட்டு, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

 

பிப்ரவரி 17:

தேசிய பாதுகாப்பு சூழல்:  ஞாயிற்றுக்கிழமை ஐந்து பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நான்கு மாணவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து,  காஷ்மீரி மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருந்தது.

பாலிவுட்டின் சினிமா தொழிலாளர் அமைப்பு, பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்திய படங்களில் பணிபுரிய தடை விதிப்பதாக அறிவித்தது.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: பிரதமர் ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்றார். ராஞ்சியில் அயூஷ்மான பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட பயனாளிகளுடன் உரையாடினார்.

ஹசாரிபாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த அவர், பரவுனியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிப்ரவரி 18:

தேசிய பாதுகாப்பு சூழல்:  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்ததாக சொல்லப்பட்ட அப்துல் ரசீது காசி உள்ளிட்ட ஐவர் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது ராணுவ மேஜர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் மவுரிசியோ மார்சியுடன் அன்றைய பொழுதை கழித்தார் மோடி. இவர்கள் இருவரும் பல்வேறு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.

கலாச்சார இணக்கத்துக்கான தாகூர் விருதை அளித்தார் பிரதமர் மோடி.

அதோடு, சிவ சேனா – பாஜக கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டதை குதூகலத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் மோடி.

 

பிப்ரவரி 19:

தேசிய பாதுகாப்பு சூழல்: ‘100 மணி நேரத்துக்குள்’ ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைமையை காஷ்மீரில் அழித்ததாக இந்திய ராணுவம் சொன்னது.

இந்தியா இராணுவ தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இருமுறை சிந்திக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது முதல் கருத்தை சொன்னார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  வாரணாசியில் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கி வைத்தார்.

புது டெல்லிக்கு திரும்பிய அவர், பாதுகாப்பு முறைகளையும் மீறி சவுதி பட்டத்து இளவரசரை வரவேற்க நேரில் சென்றார்.  இருமுறை கட்டித்தழுவி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.

பிப்ரவரி 20:

தேசிய பாதுகாப்பு சூழல்: புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐநாவின் மனித உரிமைகளுக்கான தலைவர்  உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டனர்.

ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தானியர் ஒருவர் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடக்கவில்லை என அதிகாரிகள் சொன்னபோதும், தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சவுதியின் பட்டத்து இளவரசருடன் அந்த நாளைக் கழித்தார் பிரதமர். இருவரும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

பின்னர், மோடி தென் கொரியாவுக்கு பயணமானார்.

பிப்ரவரி 21-22:

தேசிய பாதுகாப்பு சூழல்: நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசு பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். தற்போதைய முடிவு மட்டுமல்லாது, முந்தைய முடிவுகளை மறுபரிசீலனை செய்வது என பாஜக தலைவரின் கூற்று தெளிவாக்கியது.

ஏதேனும் ஆக்கிரமிப்பு அல்லது மீறல் முயற்சிகள் நடந்தால் தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இராணுவத்துக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பதாக இம்ரான் கான் வெளிப்படையாக தெரிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சியோல் சென்ற மோடி இந்திய சமூகத்தினரிடையே பேசினார். யோன்சேய் பல்கலைக்கழகத்தில் காந்தியின் உருவச் சிலையை தொடங்கி வைத்தார். இந்திய-தென்கொரிய வர்த்தக அமைப்பினரிடையே உரையாற்றினார்.

 

பிப்ரவரி 23:

தேசிய பாதுகாப்பு சூழல்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பிரிவினைவாத தலைவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பரவின.

இந்தியா பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் எழுதியது.

’இந்திய-பாகிஸ்தான் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய உலக வர்த்தகர்கள் மாநாட்டில் மோடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பேசினார். இங்கே, இறுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட காஷ்மீரி மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தனது கள்ள மவுனத்தை உடைத்தார். நாம் காஷ்மீருக்காக போராட வேண்டுமே தவிர, காஷ்மீரையோ காஷ்மீரிகளையோ எதிர்த்து அல்ல என்றார் மோடி.

பிப்ரவரி 24:

தேசிய பாதுகாப்பு சூழல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘அமைதிக்கான வாய்ப்பைக் கொடுங்கள்’ என மோடியிடம் கேட்கிறார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமரின் கிஷான் திட்டத்தை தொடங்கிவைத்தார். பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் நீராடி, சுவச் கும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அதோடு, மிகப் பெரும் அளவிலான டிஜிட்டல் அளவளாவலுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்த மோடி, தேர்தல் பரப்புரை வாசகம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.

பிப்ரவரி 25:

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அன்றைய தினம் இருவேறு நிகழ்ச்சிகளில் மோடி உரையாற்றினார். ஒன்று ரைசிங் இந்தியா சம்மிட். மற்றொன்று தேசிய போர் நினைவேந்தல் நிகழ்ச்சி. இரண்டிலும் தொடர்பே இல்லாதவகையில் காங்கிரசை தாக்கி பேசியது சர்ச்சைகளை கிளப்பியது.

நியூஸ் 18 நடத்திய ரைசிங் இந்தியா சம்மிட்-ல் பேசிய மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

பிப்ரவரி 26:

தேசிய பாதுகாப்பு சூழல்:  எல்லையை மீறி நடத்தப்பட்ட பாலகோட் விமான தாக்குதல் இந்தியாவுக்குள்ளும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயும் பதட்டத்தை உண்டாக்கியது.  வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, இந்திய விமானப்படை தாக்குதலை உறுதி செய்தார். ‘ஜெய் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பெரிய அளவிலான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடுகள் போர்நிறுத்த மீறல்களும் நடக்கத் தொடங்கின.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் மோடி பேசினார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் முழக்கத்தைக் கொண்ட கவிதை ஒன்றை மேற்கோளிட்டு அவர் பேசினார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசை பல்வேறு முறை தாக்கிப் பேசினார்.

அன்றை தினம் டெல்லியில் இஸ்கான் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார்.  டெல்லி மெட்ரோவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

பிப்ரவரி 27:

தேசிய பாதுகாப்பு சூழல்: புதன்கிழமை பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்திய வான்வெளிக்குள் வந்து, திறந்தவெளியில் தாக்குதலை நடத்தியது. ஒரு வான்வழி சண்டையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் சிக்கினார்.

பிரதரின் நிகழ்ச்சி நிரல்:  தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் கலந்துகொண்டு மோடி பேசினார். பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துரையாடினார்.

பிப்ரவரி 28:

தேசிய பாதுகாப்பு சூழல்:  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானப் படை பைலர் அமைதி நடவடிக்கையாக விடுவிக்கப்படுவார் என அறிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: டெல்லியில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துக்கான சாந்தி ஸ்வரூப் பாத்நகர் விருதுகளை அளித்தார். அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான்கான அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானுடனான தற்போதுள்ள சூழல் குறித்தும் விங் கமாண்டர் குறித்தும் விநோதமான கருத்தை கூறினார்.

“நீங்கள் ஆய்வகங்களில் உங்களுடைய வாழ்க்கையை கழிக்கிறீர்கள். முதலில் பைலட் புராஜெட்டை உருவாக்குவது ஒரு சடங்கு. அதன் பிறகு நடைமுறைப்படுத்துதல் நடக்கும். இப்போதுதான் ஒரு பைலட் புராஜெக்ட் முடிந்திருக்கிறது. இனி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்பு அதுவொரு பயிற்சியாக மட்டுமே இருந்தது”  என்றார் மோடி.

மார்ச் 1:

தேசிய பாதுகாப்பு சூழல்: வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் பல மணி நேர தாமத்துக்குப் பின் அபிநத்தனை விடுவித்தது.  பாகிஸ்தான் இராணுவம் பிரச்சார நோக்கத்துக்காக அபிநந்தனை வைத்து வீடியோ ஒன்றை எடுத்ததுதான் தாமதத்துக்கு காரணம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  அதற்கு அடுத்த நாள்,  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தேர்தல் பேரணி கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனின் தைரியத்தில் அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வதாக மோடி பேசினார்.

அபிநந்தன் இந்தியா திரும்ப வாழ்த்தாத மோடி, அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து இப்படி ட்விட்டினார்..

“தாயகம் திரும்பியிருக்கும் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன்! இந்த தேசம் உங்கள் முன்மாதிரியான தைரியத்தை எண்ணி பெருமை கொள்கிறது. நம்முடைய ஆயுதமேந்திய படைகள் 130 கோடி இந்தியர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. ஜெய் ஹிந்த்!”


நன்றி : தி வயர்
கலைமதி