ன்னும் எட்டு ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முந்தி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்கிற ‘சாதனை’யை எட்ட இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2050-ம் ஆண்டுக்குள் இன்னும் 273 மில்லியன் மக்கள் தொகை அதிகமாகி, இந்த நூற்றாண்டு முடியும்வரை அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறது.

2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான மக்கள் தொகைப் பிரிவு வெளியிட்டுள்ள ‘உலக மக்கள் தொகை வாய்ப்புகள் 2019’ அறிக்கையில், உலக மக்கள் தொகை 2050-ம் ஆண்டு மேலும் 2 பில்லியன் அதிகரிக்கும் என்றும் 2019-ம் ஆண்டு 7.7 பில்லியனாக உள்ள மக்கள் தொகை முப்பது ஆண்டுகளில் 9.7 பில்லியனாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இப்போதிலிருந்து 2050-க்குள் 55 நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத மக்கள் தொகை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் 27 நாடுகளில் ஒரு சதவீத மக்கள் தொகை குறைவு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதற்கு குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதும் சில நாடுகளில் அதிக அளவில் மக்கள் புலம் பெயர்வதும் காரணங்களாக உள்ளன.

இந்த 55 நாடுகளில் சீனாவில் மட்டும் 2.2 சதவீதம் மக்கள் தொகை 2050-க்குள் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா 273 மில்லியன் மக்கள் தொகையை கூடுதலாக அதிகரித்திருக்கும். 2050-க்குள் உலக மக்கள் தொகையை அதிகரிக்க உள்ள ஒன்பது நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் எனவும் ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

2027-ம் ஆண்டில் சீனாவின் இடத்தை இந்தியா 1.5 பில்லியன் மக்கள் தொகையுடன் பிடிக்க உள்ள நிலையில், இரண்டாம் இடத்தில் சீனா 1.1 பில்லியன் மக்கள் தொகையுடனும் நைஜீரியா 733 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாம் இடத்திலும் ஐக்கிய அமெரிக்கா 434 மில்லியன் மக்கள் தொகையுடன் நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் 403 மில்லியன் மக்கள் தொகையுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கும் எனவும் ஐ.நா. அறிக்கை அனுமானிக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் உலக மக்கள் வேகமாக மூப்படைந்து வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2019-ல் 11 பேரில் ஒருவர் மூப்படைந்தவராக உள்ள நிலையில் 2050-ம் ஆண்டில் ஆறில் ஒருவர் 65 வயதைத் தொட்டவராக இருப்பார் என்கிறது மேற்கண்ட அறிக்கை. இந்த நூற்றாண்டின் முடிவில் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உச்சத்தை அடையும் என்கிறது ஐ.நா.

படிக்க:
ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

இந்து ராஷ்டிர கனவில் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கும் இந்தியாவை ஆளும் இந்துத்துவ அரசு, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படையான பிரச்சினைகளுக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறது? கல்வியை தனியார்மயமாக்கி காசு உள்ளவர்கள் மட்டுமே படிக்கட்டும் மற்றவர்கள் குலத்தொழில் செய்யட்டும் என்பார்கள்; ஊருக்கு ஊர் பசு குண்டர் படையை உருவாக்கி, வேலைவாய்ப்பு தருவார்கள்; சமூக பாதுகாப்புக்கு மனுஸ்மிருதியை அமலாக்குவோம், இந்துக்கள் ஆறு குழந்தைகளாவது கட்டாயம் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார்கள்!


கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்