இந்துத்துவ காவிகளின் முதல் பலி என வரலாற்றில் பதிந்த காந்தியின் படுகொலையை அழிப்பதில் காவிகள் பலவகையிலும் முயன்று வருகிறார்கள். குஜராத் பள்ளி ஒன்று வரலாற்றையே முற்றிலும் மாற்றி எழுதியிருக்கிறது.
பள்ளிகளுக்கிடையேயான போட்டி ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.. “காந்திஜி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?”. சுஃபலாம் ஷாலா விகாஸ் சன்குல் என்ற அமைப்பு தனியார் பள்ளிகளில் நடத்திய போட்டியில் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளது.
இந்தக் கேள்வி குறித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி கண்டனத்துக்கு உள்ளான நிலையில், குஜராத் மாநில கல்வித் துறை அதிகாரிகள், ”இந்தக் கேள்வி ஆட்சேபணைக்குரியது. இதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறோம். விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்” என்றவர், “இது தனியார் பள்ளிகளில், தனியார் அமைப்பால் நடத்தப்பட்ட போட்டி இதற்கும் மாநில கல்வித் துறைக்கும் தொடர்பில்லை” என தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களில் விசாரணை அறிக்கை எப்படிப்பட்டதென்று நாடறியும். நிச்சயம் எந்தவித நடவடிக்கையும் இருக்காது என உறுதியாக நம்பலாம்.
படிக்க:
♦ டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !
♦ சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்
காவிகள், தாங்கள் தொடர்புடைய அமைப்புகள் மூலம், ஆதாரமான உண்மையை குழப்பும் விதமாக எதையாவது செய்து வரலாற்றை பொய்களால் நிரப்பும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். இவர்கள் வரலாற்றை அழிக்கும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த தலைமுறையினர் காந்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்றே படிப்பார்கள்.
அனிதா
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா