யோத்தியில் சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தமானது என்கிற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “மகிழ்ச்சியில்லை.. ஆனால் பதவி விலகிவிட்டோம்” என்பதே அவர்களுடைய முதன்மையான கருத்தாக உள்ளது. நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் தங்களை வீழ்த்திவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள்.

“உச்சநீதிமன்றம் என்பது உச்சநீதிமன்றமே. அது தகுதியின் அடிப்படையில் மட்டுமே விசயங்களைப் பார்க்கும் என எதிர்ப்பார்த்தோம்” என்கிறார் மும்பையில் உள்ள மர்காசுல் மாரிஃப் கல்வி மற்றும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மவுலானா பர்ஹானூதின் காஷ்மி. மதரசாவில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பு தொழிற்நுட்பத்தைக் கற்றுத்தருகிறது இந்த மையம்.

“முழுமையாக இந்தத் தீர்ப்பை படித்துவிட்டேன். நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களுடைய முடிவு இருக்கிறது என்பது தெரிகிறது” என்கிற மவுலான, நீதிமன்றம் முசுலீம் தரப்பு அந்த நிலத்துக்கு சம உரிமையுள்ளது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என கூறியதையும் நிர்மோகி அகோராவின் வழக்கையும் ஸ்ரீ ராம் பிறந்த இடம் என்ற சட்டக் கோரலையும் நிராகரித்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இப்படிப்பட்ட சூழலில், ராம் லல்லாவை அங்கீகரித்து கோயில் கட்ட அனுமதி வழங்குகிறது நீதிமன்றம். இது நீதி அல்ல. இது ஒருவகையான நாட்டாமைத்தனம். பெரும்பான்மையினரின் உணர்வுகளை அங்கீகரிப்பதன் மூலம் சூழ்நிலையை குளிர்விக்கும் முயற்சி. உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பது உண்மைதான். அதை அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு எளிய இந்திய குடிமகனாகவும் முசுலீம் அறிஞராகவும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை” என்கிறார் மவுலானா.

“எங்கள் உரிமைகோரல்களை மெய்பிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருந்தன, அவை இந்து தரப்பிடம் இல்லை. ஆனாலும், எங்களுடைய கோரல் நிராகரிக்கப்பட்டது. அப்படியெனில் எதிர்காலத்தில், ஆவணங்களின் மதிப்பு என்னவாக இருக்கும்?” எனக் கேட்கிறார் தர் அல் காஸா என்ற அமைப்பின் உறுப்பினரான மவுலானா சோயேப் கோடி. நிலம் தொடர்பான வழக்கில் ஆவணங்கள்தான் முக்கியமான ஆதாரங்கள் எனவும் அவர் கேட்கிறார்.

அயோத்தி வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

இதுகுறித்து பேசும் அனைத்திந்திய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் மவுலானா சயது அதிர் அலி, “கடவுள் அருளால், இந்தியாவின் எந்த இடத்திலும் மசூதி கட்டிக்கொள்ள எங்களால் முடியும். எங்களுக்கு பாபர் மசூதி இருந்த இடம் முக்கியமானது. ஷரியத்தில், மசூதி என்பது எப்போதும் மசூதிதான். அது ஒரு கட்டிடம் அல்ல, அது நிற்கும் இடம் முக்கியமானது. ஏனெனில், மற்ற கட்டிடங்களைப் போல, நினைத்த இடத்தில் மசூதியைக் கட்டிவிட முடியாது. அதற்கென விதிமுறைகள் உள்ளன. ஒருமுறை அங்கே மசூதி கட்டிவிட்டால், அது காலம் கடந்தும் நிற்கிறது. எங்களுக்கும்கூட அதைத் தரும் உரிமை இல்லை”. என்கிறார் அவர்.

பாபர் மசூதி இருந்த அந்தக் குறிப்பிட்ட நிலத்துக்கு அடியில் கோயில் இல்லை என தெளிவாக உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என சுட்டிக்காட்டுகிற மவுலானா சயது, ஆனபோதும் கோயில் கட்ட அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்.

“கிராம பஞ்சாயத்துகளில்தான் நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்குவது நடக்கும்; நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அல்ல. எந்த சூழ்நிலையிலும், வஃக்புக்கு சொந்தமான நிலத்தை மாற்றிக்கொள்ள முடியாது; கொடுக்கவும் இயலாது. எங்களிடமிருந்து யாராவது அதை பிடிங்கிக் கொள்வது வேறு விசயம். அயோத்தியில் எங்கோ ஒரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தைப் பெற 68 ஆண்டுகளாக நாங்கள் போராடவில்லை. உச்சநீதிமன்றம் இந்த நில வழக்கை அறம், ஆதாரங்கள் மற்றும் அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்திருக்க வேண்டும்” என்கிற அவர்,

“ஒரு சொத்து தொடர்பான வழக்கில் ஒருவருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். மற்றவருக்கு எதிராக வரும். இயற்கையாக, யார் இழக்கிறார்களோ அவருக்கு வருத்தம் இருக்கும். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ‘இது யாருடைய வெற்றியும் அல்லது, யாருடைய தோல்வியும் அல்ல’ என கூறிக்கொள்வார்கள்.” என மோடி உள்பட பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை விமர்சித்தார் மவுலானா.

“ஆனால், நாங்கள் ஏற்கனவே தீர்ப்புக்கு முன்பே அறிவித்தபடி, அமைதியின் விருப்பத்தின்பேரில் இந்தத் தீர்ப்பை ஏற்கிறோம். மேலும், எங்குமே அசம்பாவிதங்கள் நடக்கவில்லை என்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது இந்த அமைதியைக் காப்பதில் அரசாங்கத்துக்கே பங்கிருக்கிறது” என்றார் அவர்.

அயோத்தி தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கையை தகர்த்திருப்பதை குறிப்பிடும் மவுலானா காசிம், “உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளும் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? 1949 மற்றும் 1992 நடந்த குற்றங்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் தண்டனை குறித்து பேசவில்லை. நாங்கள் முகத்தில் அறையப்போட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கிற நீங்கள், எங்களுடைய கோரலை கருத்தில் கொள்ளவில்லை. இதை நாங்கள் உச்சநீதிமன்றத்திடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை” என்கிறார்.

“2010-ஆம் ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பிரித்துக்கொள்ளலாம் என சொன்னபோதே, நீதிமன்றத்தின் மீதிருந்த எங்களுடைய நம்பிக்கை குலைந்துவிட்டது. இந்தத் தீர்ப்பு மூன்றில் ஒரு பங்கு நிலத்தைக்கூட எங்களுக்கு வழங்கவில்லை” என்கிறார் மவுலானா.

படிக்க:
சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !
♦ ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !

“ஏற்கனவே ஜனநாயகத்தின் தூண்கள், ஊடகமானாலும் சரி, நிர்வாகம் ஆனாலும் சரி அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளன. நீதிமன்றம் மட்டுமே விட்டுவைக்கப்பட்டிருந்தது. இப்போது முக்கிய தலைவர்கள் தீர்ப்புக்கு முன்பே கொண்டாட வேண்டாம் என்றும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதிலிருந்து இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது” என்கிற அவர்,

“சரிதான், நாங்கள் முன்பே சொன்னதுபோல எதிர்ப்பு இல்லாமல் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இந்த முழு உலகமும் முட்டாள்தனமானதா? சர்வதேச அளவில் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி என்ன?” எனக் கேட்கிறார்.

“பெரும்பான்மையினர் தீர்ப்பு குறித்து மகிழ்கிறார்கள். இன்றைக்கு நாட்டில் உள்ள மனநிலை அது. இதுதான் நாடு சென்றுகொண்டிருக்கும் திசையாகும். இனி, நீண்ட காலம் இந்தப் பாதையில்தான் செல்லும்” என்கிறார் மவுலானா.

இந்துத்துவ கும்பல் தங்களுடைய வன்முறை வெறியாட்டங்கள் மூலம் முசுலீம்களை தீர்ப்பை ஏற்கும்படி ‘தயார்’ செய்து வைத்திருக்கிறது. சட்டம் இனி ஒருபோதும் இந்துவுக்கும் முஸ்லீமுக்கும் சமமாக இருக்கப்போவதில்லை என முசுலீம்கள் உணர்ந்திருக்கிறார்கள். அயோத்தி தீர்ப்பு அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது.


கலைமதி
நன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்

1 மறுமொழி

  1. காஷ்மீரின் குரல் போன்றே இன்று சிறுபான்மையினரின் குரலும் நாம் காதுகளில் விழுந்து விடாமல் இருக்க முற்படுவது நாம் யார் என்ற கேள்விக்கு பதில்

Leave a Reply to Sindhu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க