நாடும் மாடும் ஒன்று – அலகாபாத் ‘நீதி’மன்றம்
இந்திய நீதிமன்றங்கள் மிகவும் வினோதமானவை மட்டுமல்ல அபாயகரமானவையும் கூட. தங்கள் மேசையின் மீது எந்த வழக்கு வந்திருக்கிறது என்றெல்லாம் பார்க்காது ஆளும் வர்க்கக் கருத்தை எப்போதும் பேசும்.
மயில் பிரம்மச்சாரி என்று கூறிய நீதிபதியின் வார்த்தைகள் அறிவற்றவையாகத் தோன்றலாம். அதிலிருந்து என்ன கூற வருகிறார் என்பதே அதில் உள்ள அபாயகரமான விவகாரம். வழக்கிற்கும், நீதிபதியின் வாய்வழி கருத்துக்களுக்கும் தொடர்பே இல்லாததுபோல தோன்றலாம். தொடர்பை மிகவும் நைச்சியமாக பின்னுவதில் நீதிபதிகள் கெட்டிக்காரர்கள்.
பல வழக்குகளிலும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்த – மறுக்கும் நீதித்துறையானது, இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவின், அடிப்படை உரிமைகளின் எல்லை மாடுகளுக்கும் பொருந்தும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
படிக்க :
கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
ஸ்டான் சாமி பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு உறிஞ்சு குழலுக்காக எத்தனைமுறை  நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது? கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்றதில், நீதித்துறைக்கு எவ்விதப்பங்கும் இல்லையா?
பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கருப்புச்சட்டமான ஊ.பா-வின் கீழ் அறிவுத்துறையின பலர் கைது செய்யப்பட்டிருப்பதை இதுவரை நியாயப்படுத்தியே இருக்கின்றன நீதிமன்றங்கள்.
தப்லீக் ஜமாத் பற்றி யூடியூப் சேனல்கள் மற்றும் சில செய்தி ஊடகங்கள் தவறான செய்தியை அளித்ததாக சொல்லும் நீதிபதிகள், அப்படி ஒரு செய்தியை முசுலீம் மக்கள் மீது பரப்பி வன்முறையை உருவாக்கிய பாஜக அரசைப்பற்றி எதுவும் பேசுவதில்லை.
மாடு வெட்டும் குற்றத்தை செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஒருவர், தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதி சேகர் குமார் யாதவ் என்பவர் “மாட்டினை தேசிய விலங்காக அறிவிக்க பாராளுமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் எல்லையானது மாடுகளையும் உள்ளடக்கியது. மாடுகளைக் காப்பாற்றுவது மதம் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல; மாடுகள் இந்தியாவின் கலாச்சாரமாகும். இந்திய கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது  ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறியிருக்கிறார். மேலும் “மாடுகளை வழிபடும் நாடே செழிப்படையும்” என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பசு குண்டர்களால் கொல்லப்பட்ட அக்லக்
“இந்தியாவில் பல்வேறு சமூகங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்காக, இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவே சிந்திக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை முன்னேற்ற ஒரு அடி முன்னோக்கிச் செல்லும்போது சிலர் இந்தியாவின் மீது நம்பிக்கையின்றி செயல்படுகின்றனர். அதுவே இந்தியாவின் பலவீனமாகும்.” என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் குரலை அப்படியே பேசியிருக்கிறார் ‘நீதிபதி’
மேலும், “மனுதாரருக்கு பிணை அளித்தால் அவர் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் குற்றமான மாடு வெட்டுவதை தொடர்வார். ஏற்கெனவே மாடு வெட்டும் குற்றத்தை தொடர்ந்து செய்து சமூக நல்லிணக்கத்தை கெடுத்தார்.” என்றும் கூறி பிணை மறுத்திருக்கிறார்.
கூடுதலாக, “அரசால் நடத்தப்படும் கோ சாலைகள் பராமரிப்பின்றி உள்ளன. மக்களோ மாடுகளை பராமரிக்கும் கடமையை மேற்கொள்ளவில்லை” என்று மக்களை கண்டித்த நீதிபதி, இறுதியாக மாட்டுக்கறி உண்போருக்கு மட்டும் அடிப்படை உரிமைகள் இருப்பதாக அர்த்தமல்ல; மாடுகளை வழிபடுவோருக்கும், மாடுகளை வளர்ப்போருக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன. அரசமைப்பின் பிரிவு மூன்றின் படி, அடிப்படை உரிமைகளின் எல்லையானது மாடுகளையும் உள்ளடக்கியது” என்று அந்த நீதிபதி கூறுகிறார்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரப் பிரதேசத்தில் மாடுகளை வெட்டுவதற்கு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டம், மாடு வெட்டும் குற்றத்தை செய்தால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் வகை அமைந்திருந்தது.
“குற்றம் சாட்டப்பட்டவரின் வசம் உள்ள இறைச்சியானது சோதிக்கப்படாமலேயே மாட்டு இறைச்சி என்று கூற முடியும். மிகவும் தவறாக பயன்படுத்தப்படும் தன்மை இச்சட்டத்தில் உள்ளது” என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் ஏற்கெனவே கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் காட்டிலும் மிகவும் கடுமையான அடக்குமுறையான உத்தரவை பிறப்பித்து இருக்கிறார் இந்த நீதிபதி. இனி இந்த உத்தரவுகள் பின்பற்றப்படலாம்.
படிக்க :
பசுவைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் : ராஷ்டிரிய காமதேனு ஆயோக் !
கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !
‘நாடும் மாடும் ஒன்று’ என்பதை நீதிபதி தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார். தேச விரோதம் என்று பலரும் கேள்விக்கிடமின்றி சிறைப்படுத்தப்படும் இச்சூழலில் தான் நீதிமன்றத்தின் இந்த கருத்தையும் காண வேண்டி உள்ளது.
2014-ம் ஆண்டுக்குப் பின்னர் பசுப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு தலித்துகள் மற்றும் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் படுகொலைகள் காரணமாக பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றனர். நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, கும்பல் படுகொலைகளின் – காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை, நியாயப்படுத்துவதாகவே உள்ளது.
தேசத்தின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக சாட்சிகள் இல்லையெனினும் அப்சல்குருவை தூக்கிலிட்ட நீதிமன்றங்களுக்கு, ‘நாடும் மாடும் ஒன்று’ என்றாகிவிட்ட பின்னர் தூக்கிலிடும் வேலைகள் அதிகமிருக்கும்.

மருது
செய்தி ஆதாரம் : The wire