பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!

பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை சூழ்ந்து கொண்டது அடாவடிதனத்தில் ஈடுபட்டது.

மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க கும்பல் அடாவடித்தனம்!
தோழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த ஜனநாயக சக்திகள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இன்று (25-12-2022) மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற துண்டறிக்கையை கொடுத்து தோழர்கள் ராஜன், குமார் பிரச்சாரம் செய்தனர். அப்போது அருகில் இருந்த பா.ஜ.க-வை சேர்ந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் பேருந்து நிலையத்தில் தோழர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

அப்போது, “என்ன வேணாலும் பண்ணிட்டு போ! மோடியை பற்றி மட்டும் பேசக் கூடாது! இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா? பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் போய் பேசு. இங்கே வந்து பேசக் கூடாது” என அடாவடித்தனமாக வாக்குவாதம் செய்தது அக்கும்பல். மேலும், “மார்க்ஸ், லெனின் பற்றி ஆப்கானிஸ்தானில் போய் பேச முடியுமா? இப்படி நீ எல்லாம் இங்க வந்து பேசுவது மோடி கொடுத்த ‘ஜனநாயகம்’ தான்” என்று பேசும்போதே போன் செய்து பலரை வரவழைத்தது அக்கும்பல். அதனை தொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை சூழ்ந்துகொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபட்டது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

அப்போது தோழர்கள் கையில் இருந்த சில துண்டறிக்கைகளையும், புதிய ஜனநாயக இதழையும் பறித்துக் கொண்ட அக்கும்பல் தோழர்களை தாக்கும் நோக்கில் வாக்குவாதம் செய்தது. அப்போது அங்கிருந்த போலீஸ் தோழர்கள் இருவரையும் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.

“கோவையில் அமைப்புக்கு எங்கு அலுவலகம் உள்ளது. நோட்டீசை வைத்து இதுவரை எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தீர்கள்? எவ்வளவு தொகை பெற்றீர்கள்?” என தோழர்களை கேட்கிறது போலீசுத்துறை. இதே கேள்விகள் இந்துத்துவா நிகழ்ச்சிகளை நடத்தும் நபர்கள் மீது எழுப்புமா?

பொள்ளாச்சியில் இருந்த வி.சி.க, த.பெ.தி.க, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஜனநாயக சக்திகள் பலர் போலீசு நிலையத்திற்கு வந்து கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவுசெய்யக் கூடாது, சி.எஸ்.ஆர் பதிவுசெய்யக் கூடாது என பேசினார்கள்.

பா.ஜ.க-க்காரர்கள், தோழர்கள் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய கூறியுள்ளனர். மேலும் சி.எஸ்.ஆர்.ஐ போடுங்கள் என கூறியுள்ளனர். அப்போது, அங்கிருந்த தோழர்கள் நாங்களும் நான்கு பேர் மீது வழக்கு போட சொன்னால் அவர்கள் மீதும் போலீசார் எஃப்.ஐ.ஆர் போடத் தயாரா? என விவாதித்தனர்.

போலீஸ் செய்ய வேண்டிய கண்காணிப்பு வேலைகளை பா.ஜ.க.காரர்கள் செய்யலாமா? தோழர்களிடம் துண்டறிக்கையை பறிக்க என்ன உரிமை உள்ளது? அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று விவாதித்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போலீசு நிலையத்தில் இருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பிரசுரம் கொடுப்பதை தடுக்கவும், கேள்வி கேட்கவும், பொது வெளியில் அதிகாரத்தை கையிலெடுக்கிறது பா.ஜ.க. அந்த அதிகாரத்தை கையிலெடுக்க பா.ஜ.க.விற்கு அனுமதி கொடுத்தது யார்? நாங்கள் எதிர் கருத்தை கொண்டவர்களை பற்றி தகவல் சொல்லி தானே நடவடிக்கை எடுக்க சொல்கிறோம். வன்முறையில் இறங்குவதில்லையே. ஆனால் பா.ஜ.க நேரடியாக வன்முறையை கையாண்டு வருகிறது.

வி.சி.க, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், த.பெ.தி.க பகுதி தோழர்கள் போலீசு நிலையத்தின் வெளியே இருப்பதை பார்த்தவுடன் பா.ஜ.க நபர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

படிக்க : கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !

மேலும் தோழர்கள் கூறுகையில் நீங்கள் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக இப்பகுதியில் செய்யுங்கள், நீங்கள் பிரச்சாரம் செய்ய நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறோம். எப்பொழுது வந்தாலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறினார்கள்.

மோடியை விமர்சிக்கக் கூடாது என்ற அதிகார திமிருடன் அடக்குமுறை செய்து வருகிறது பாசிச பா.ஜ.க கும்பல். பெயரளவிலான கருத்து உரிமையைக் கூட இருக்கக் கூடாது என்கிறது இப்பாசிச கும்பல்.

கோவையில் தொடர்ந்து ஜனநாயக சக்திகளை ஒடுக்குதல் மற்றும் அவர்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே, பாசிச கும்பலின் வளர்ச்சி மையமாக பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகள் மாற்றப்பட்டு வருகிறது என்பது நிதர்சனம். இந்த அபாயத்தை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளை களத்தில் நின்று முறியடிக்க ஒன்றிணைவோம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
9488902202