1814-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிருஸ்தவ சமயப்பரப்பிற்காக தமிழகத்திற்கு வந்தவர். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மொழி முதலானவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார்.
அவரின் நோக்கம் சமயப்பரப்புரையாக இருந்தபோதும் தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. இவர் 18 மொழிகளைக் கற்றவர். அவர் கற்றறிந்த பிறமொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வு நூலாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக 1856-ல் வெளியிட்டார்.
அதுவரை இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும் அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்றும் உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேலாண்மையை அது உடைத்து நொறுக்கியது.
பார்ப்பன பாசிசம் ஆட்சியை பிடித்திருக்கும் இந்த சூழலில் தமிழ் மொழியின் இருப்பை காலி செய்திடும் அதிகாரத்திமிர் எல்லாத்தளங்களிலும் கோலோச்சுகின்றது. மோடியின் பட்ஜெட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைக்கேற்ற திட்டங்கள் நிறைந்து இருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சி, தீர்த்த யாத்திரை ஊக்குவிப்புக்கான தேசிய முயற்சி, பாரம்பரிய நகரங்கள் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், கங்கைக்கு நமஸ்காரம், விவேகானந்தர் பிரச்சார இரயில், காஷ்மீர் பார்ப்பனர்கள் மறுவாழ்வு திட்டம் என்று நீள்கிறது சனாதனத் திமிர். இந்திய வரலாற்றை திருத்திப் புரட்டுகிறது மோடி அரசு. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட நிர்ப்பந்திக்கப்படுகிறது.
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது நல்லதுதானே என்று சிலமேதாவிகள் நினைக்கின்றனர். ஆனால், அரசின் அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளியில் சமஸ்கிருதம் கற்று, பூநூல் அணிந்து குடுமியை வளர்த்து அச்சு அசலாக பார்ப்பனர் போலவே மாறிய பின்னும் அம்மாணவர்களை அர்ச்சகர் வேலைக்கு கோயிலுக்குள் விடமறுக்கின்றனர். அர்ச்சகராக முடியாமல், கோயிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கெதிராக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் பார்ப்பன அர்ச்சகர்கள், சு.சாமி, ஜெ மாமி, உச்சிக்குடுமி மன்ற கூட்டணியால் முடக்கப்பட்டுள்ளது.
பூணூலை மறைத்து பயந்த காலம் போய் இன்றைக்கு தைரியமாக இராக்கி கட்டுவது, சாகா பயிற்சி கொடுப்பது, பஜனை நடத்துவது, முசுலீம் கிருஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று பாடல்கள் மூலமாக சிறுவர்களிடம் நஞ்சை விதைப்பது என ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வெறியுடன் களமிறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.
பார்ப்பன, பார்சி, பனியா மற்றும் பன்னாட்டு முதலாளிகளை ஆண்டைகளாக ஏற்கும்படி தொழிலாளர்களும் சிறுபான்மை மக்களும் தலித்துகளும் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். கங்காணி பதவிக்காக ஏ.சி.சண்முகம், கொங்கு ஈஸ்வரன், பாரிவேந்தர், விஜயகாந்த், வை.கோ, ராமதாசு போன்றோர் அலைகின்றனர். ஆர்.எஸ்.எஸ்-ன் அல்லக்கைகளாகிவிட்ட இந்த எட்டப்பர்களை இனம் காண்பதும் வளர்ச்சி, வல்லரசு என்ற வேடத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள பார்ப்பன-பாசிச கும்பலை வீழ்த்துவதும் உடனடி கடமைகளாக நம்முன் நிற்கின்றன.
மறுகாலனியாதிக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. மோடியின் பாசிச ஆட்சியில் செத்துப்போன சமஸ்கிருத மொழியின் மேலாதிக்கமும் சனாதனப் பண்பாடும் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர் விளங்கா பண்டிகைகளைக் கொண்டாடுவது வரை இந்துத்துவ -சனாதன மீட்சி நடந்து வருகிறது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என இருந்த நமது பார்ப்பன எதிர்ப்பு மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொரு புறம் தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கிறது. தாய்மொழி வழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியைக் கொண்டு வந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது.
இவற்றுக்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த “உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி” என்பதும் “பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கையில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவு கூர்வதாகும்.
ராபர்ட் கால்டு வெல்லை நினைவு கூர்வோம்!
சமஸ்கிருத எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!!
அனைவரும் வருக!
மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு!
தமிழின் தனித் தன்மையை நிலைநாட்டிய அறிஞர் கால்டுவெல் 200-வது பிறந்தநாள்
கருத்தரங்கம்
நாள் : ஆகஸ்ட் 22 வெள்ளி
நேரம் : மாலை 6 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டம், உறையூர், திருச்சி
தலைமை : தோழர். காளியப்பன், மாநில இணைச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
கருத்துரை :
காலனியம் : திராவிட இனம் : கார்டுவெல்
பேராசிரியர். முனைவர். வி.அரசு,
முன்னாள் தமிழ்துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்.
தமிழ் மறு உயிர்ப்பில் கார்டுவெல் பங்கு
புலவர். பொ.வேலுச்சாமி
[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
தோழமையுடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி. மாவட்டம் தொடர்புக்கு :9095604008
மூடி, ஃபிட்ச், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் உள்ளிட்ட ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மோடி அரசின் முதல் பட்ஜெட்டைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, அதில் ஒரேயொரு குறை இருப்பதாக மூக்கைச் சிந்துகின்றன. “இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி மோடி அரசால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீத அளவிற்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்பொழுது) குறைத்துவிட முடியுமா?” என்பதுதான் அவர்களுக்குள்ள பெருத்த சந்தேகம். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் ஒரு பட்ஜெட்டின் தன்மையை, அதில் அறிவிக்கப்படும் திட்டங்கள், கொள்கைகள் அடிப்படையில் மதிப்பிடுவது கிடையாது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு பட்ஜெட்டில் அளிக்கப்படும் உறுதிமொழியை வைத்துதான் அளவிடுகிறார்கள். பற்றாக்குறையைக் குறைப்பதுதான் சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளமெனக் கூறும் இவர்கள், பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகமாகக் காட்டப்பட்டால், அத்தகைய பட்ஜெட்டை கவர்ச்சி பட்ஜெட், வாக்குச்சீட்டு பட்ஜெட் என நையாண்டி செய்யத் தயங்குவதில்லை.
சமையல் எரிவாயுக்கு மானிய வெட்டு
“வரி மற்றும் பிற வகையான வருவாய்களின் மூலம் அரசுக்கு வருமானமாக 15.7 இலட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் அதேசமயம், அரசின் செலவுகள் 18 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும்” என இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. வரவைவிட அதிகமான இச்செலவுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் யூரியா, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள மானியமும் பழைய மாதிரியே தொடர்வதுதான் காரணமென்று குமுறுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். இந்தக்குமுறலுக்கு ஆறுதல் சொல்வதுபோல, “60 ஆண்டு கால மானிய பாரம்பரியத்தை நான்கே மாதங்களில் ஒழித்துக்கட்டி விட முடியாது” என விளக்கமளித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதனை உண்மையாகக் காட்டும் கோயபல்சு பாணியில், பட்ஜெட் பற்றாக்குறைக்கு மானியங்கள்தான் காரணமென தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் நிறுவிவிட முயலுகிறார்கள். இதுவொரு வடிகட்டிய பொய் என்பதை நிரூபிப்பதற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம். ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வருமான வரிச் சலுகை மற்றும் சுங்க, உற்பத்தி தீர்வை விலக்குகளால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு எவ்வளவு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வருமான இழப்பையும் பற்றாக்குறையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மானியத்தால் பற்றாக்குறை ஏற்படுவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு (2013-14) பட்ஜெட்டில் பல்வேறு மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.45 இலட்சம் கோடி ரூபாய்; கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்ட வருமான, சுங்க மற்றும் உற்பத்தித் தீர்வை வரிச்சலுகைகள் 5.72 இலட்சம் கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 5.24 இலட்சம் கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டில் (2012-13) மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.47 இலட்சம் கோடி ரூபாய்; முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த வரிச்சலுகைகள் 5.66 இலட்சம் கோடி ரூபாய்; அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை 4.50 இலட்சம் கோடி ரூபாய்.
“பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 5.50 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கார்ப்பரேட் வருமான வரிச் சலுகைகளை மட்டும் திரும்பப் பெற வேண்டும்” என 2013-14-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை குறிப்பிடுகிறது.
எனினும், மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட 5.50 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கார்ப்பரேட் வருமான வரி விலக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்பதோடு, மேலும் 22,000 கோடி ரூபாய் பெறுமான வருமான, சுங்க மற்றும் உற்பத்தி தீர்வை வரி விலக்குகள் இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளன.
நவீன மின்னணு பொருட்களுக்கு வரிவிலக்கு
கடந்த 2005-06-ம் ஆண்டு தொடங்கி 2013-14ஆம் ஆண்டு முடிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச் சலுகைகள் 36 இலட்சம் கோடி ரூபாயாகும் எனக் குறிப்பிடுகிறார் பத்திரிகையாளர் பி.சாய்நாத். இந்தத் தொகை மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் வாங்கியிருக்கும் கடனுக்குச் சமமானது.
இந்தப் புள்ளிவிவரங்கள் கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவைகளை அரைகுறையாக ஈடுசெய்யும் விதத்தில் வழங்கப்படும் மானியங்களைவிட, கையளவேயான கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் புதுப் பணக்கார கும்பலின் நலனை முன்னிறுத்தி அறிவிக்கப்படும் வரிச்சலுகைகளால்தான் பற்றாக்குறை ஏற்படுவதை நிறுவுகின்றன.
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியம் அளிக்கப்படும்பொழுது, பற்றாக்குறை குறைவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது. எனில், “ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்” எனத் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் கூப்பாடு போட்டு வருவதன் உண்மையான நோக்கமென்ன? அது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் படிப்படியாக வெட்டுவதுதான். தமது இந்த தீயநோக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ளவே, மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நாட்டின் வில்லனாகவும், தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளாகவும் காட்டுகிறார்கள், தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.
முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் அளித்தால், அவர்கள் பொருட்களை விலை மலிவாகத் தயாரித்து சந்தையில் விற்க முன்வருவார்கள். இதனால் நுகர்வு அதிகரிக்கும். அதனால் உற்பத்தி பெருகும். அதன் விளைவாக வேலை வாய்ப்புகள் கூடும் என்றொரு பயாஸ்கோப்பு படத்தைச் சித்தரித்து வருகிறார்கள் இவர்கள்.
பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் அவர்களின் எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏறத்தாழ 30 இலட்சம் கோடி ரூபாய் பல்வேறு இனங்களில் வரிச் சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் விலைவாசி குறைந்துவிட்டதா? வேலைவாய்ப்பு பெருகிவிட்டதா? தமிழகத்திற்கு வந்த நோக்கியாவிற்கு அளிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் அக்கம்பெனி தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதமளித்ததா? இந்தச் சலுகைகளால் அம்பானியும் அதானியும் உலகக் கோடீசுவரர்களானதைத் தாண்டி மக்களுக்கு என்ன பலன் கிடைத்துவிட்டது?
முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, செல்வங்களை விநியோகிப்பதில் உள்ளார்ந்த முறையிலேயே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றன. இந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்து சமத்துவமான விநியோக முறைக்காக உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகத்தான் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், சேவைகளையும் மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் உரிமை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்தப்பட்டது. எனவே, மானியம் என்பது உழைக்கும் மக்களின் அரசியல் பொருளாதார உரிமையேயன்றி, அம்மா உணவகம் போல ஆளுங்கும்பல் கருணை உள்ளத்தோடு போடும் பிச்சையல்ல. மேலும், முதலாளித்துவ ஆளுங்கும்பலுக்குத் தம்மை சேமநல அரசாகக் காட்டிக் கொள்வதற்கும் மானியங்கள் அளிப்பது தவிர்க்கமுடியாத தேவையாகியது.
ஆனால், தனியார்மயம்-தாராளமயத்தின் விளைவாகக் கல்வி, மருத்துவம் தொடங்கி குடிதண்ணீர் வரை அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்த பின், அச்சேவைகளை அரசு மானிய விலையில் அளிப்பதைத் தமது இலாபத்திற்கு குறுக்கே நிற்கும் இடையூறாகத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. வெளிச் சந்தையில் ஓரளவு தரமான அரிசிகூட கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும்பொழுது, ரேசன் கடையில் இலவசமாகவோ, குறைந்த விலையிலோ அரிசி விநியோகிக்கப்படுவதை முதலாளித்துவக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் மானியங்களை வெட்ட வேண்டும் என்பதை நிபந்தனையாகவே விதிக்கின்றன உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள்.
சுதந்திரமும் இறையாண்மையும் கொண்டதாகக் கூறப்படும் இந்திய அரசு ஏகாதிபத்திய நிறுவனங்களின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருப்பதோடு, அதனை பட்ஜெட் தயாரிப்புக்கான வழிகாட்டும் சட்டமாகவும் இயற்றி வைத்திருக்கிறது. வாஜ்பாயி தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் உலக வங்கியின் நிபந்தனை, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டமாக உருமாற்றம் பெற்றது. அதற்கடுத்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தனது வருடாந்திர வரவு-செலவு அறிக்கைகள் அனைத்தையும் இந்தச் சட்டத்திற்கு ஏற்பவே தயாரித்தது.
பற்றாக்குறை பட்ஜெட் போடுவது சீர்கெட்ட நிதி நிர்வாகத்தைக் குறிக்கிறது என்றால், உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் இந்த சீர்கெட்ட நிர்வாகத்திற்கு எடுப்பான உதாரணமாகும். ஆனால், உலக வங்கியோ, ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனங்களோ பற்றாக்குறையைக் குறைக்கும்படி அமெரிக்காவை ஒருக்காலும் நிர்பந்திப்பது கிடையாது. மாறாக, தனியார்மயம்-தாராளமயத்தை ஏற்றுக் கொண்ட ஏழை நாடுகள் மீதுதான் இந்த நிர்பந்தம் திணிக்கப்படுகிறது. எனவே, பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதை நாட்டு நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. உணவுப் பொருள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விற்பனைச் சரக்காக மாற்றி, அவற்றின் உற்பத்தியை, விநியோகத்தை, விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் மறுகாலனியாதிக்க நடவடிக்கையாகும்.
புதிதாகப் பதவியேற்ற மோடி அரசு, இம்மறுகாலனிய தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முகமாக இந்த நிதியாண்டில் பற்றாக்குறையை 4.1 சதவீதமாகவும்; அடுத்த (2015-16) ஆண்டில் பற்றாக்குறையை 3.6 சதவீதமாகவும், அதற்கடுத்த ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைத்துவிடுவோம் எனத் தனது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு உறுதியளித்திருக்கிறது. ரயில் கட்டணங்களும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதையும், நெல்லுக்கும் கோதுமைக்கும் மாநில அரசுகள் ஊக்கத் தொகை கொடுக்கக்கூடாதென மைய அரசு கட்டளையிட்டிருப்பதையும், மானியங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செலவு மேலாண்மை கமிட்டியை அமைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், தேநீர் விற்று பிழைப்பு நடத்திய சாதாரண குடும்பத்தில் பிறந்த எளிய மனிதனாகத் தன்னைக் காட்டி வந்தார் நரேந்திர மோடி. ஆனால், அவர் மன்மோகன் சிங்கையே விஞ்சக்கூடிய உலக வங்கியின் கைக்கூலி என்பதை இக்கட்டணக் கொள்ளை நடவடிக்கைகளும் பட்ஜெட்டும் எடுத்துக் காட்டிவிட்டன.
“ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்” இது 25.08.2014 தேதியிட்ட குங்குமம் இதழின் அட்டைப்படக் கட்டுரை தலைப்பு.
ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்
இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் இரண்டு படங்கள் வருவதால், வழக்கம் போல படங்களுக்கான விளம்பரங்கள், செய்திகளாக, அட்டை கட்டுரைகளாக மாறும் மரபுப்படி வந்திருக்கிறது இந்த நேர்காணல். ஆனால் முதல் முறையாக, ஒரு நடிகர் என்ன பேசுவார் எனும் மரபை ஒடித்து கலகம் செய்திருக்கிறார் சிம்பு.
இந்த நேர்காணல் கருத்துக்களை பார்க்கும் போது இனி அவருக்கு ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் முதல் பின் நவீனத்துவ பேராசிரியர்கள் வரை புதிய ரசிகர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. எனினும் கருத்துக்களில் எது இந்து ஆன்மிகம், எது பிரெஞ்சு பின் நவீனத்துவம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. அதுவா இதுவா என்றால் இரண்டும்தான். இல்லைதான்.
தனது காதலிகளோடு சேர்ந்திருக்கும் படங்களையோ, ஊடலின் போது மிரட்டிய பேச்சுக்களையோ இணையத்தில் சந்தைப்படுத்தி விளம்பர ஆதாயத்தையும் வக்கிரத்தையும் ஒருங்கே கண்டதாக அறியப்பட்ட சிம்புவை பொதுவில் பணக்கொழுப்பெடுத்த ஒரு மேட்டுக்குடி பொறுக்கி என்றே பலரும் அறிந்திருப்பர்.
சினிமா உலகில் இருப்போருக்கு, அவர் நினைத்தால் படப்பிடிப்பிற்கு வருவதும், சமயத்தில் ஒரு ஷாட் முடித்து விட்டு “பை” சொல்வதும், தயாரிப்பாளரிடம் ஏகப்பட்ட வசதிகள் கேட்டு அலப்பறைகள் செய்வதும் என ஒரு வாரிசு குடும்பத்தின் அட்டகாசம் என்றே தெரியும்.
இதெல்லாம் இல்லாமல் சிம்பு எப்படியென நாம் நினைக்கிறோம். அப்படியில்லை இனி புதிய சிம்புவைப் பார்ப்பீர்கள் என்கிறார் பேட்டி கொடுக்கும் சிம்பு. இதனால் இறந்தகால இழிவுகளை மறக்கவோ இல்லை தூற்றுவதையோ அவர் செய்யவில்லை. அதெல்லாம் ஒழுக்கத்தின் பெயரில் கட்டுப்பெட்டித்தனத்தை வைத்திருக்கும் பெரியவர்களின் அணுகுமுறை. பழைய ஜாலி இருந்தாலும் புதிய நிதானமும் வந்திருக்கிறது என்கிறார் சிம்பு.
பாண்டிராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் “நானும் நயன்தாராவும் நடிக்கப் போறோம்னு சொன்னதுமே திரி கிள்ளிப் போட்ட மாதிரி ஆகிருச்சு. லைட் மேனே வந்தா நகராம பார்க்கிறார். ஆடியன்ஸும் நல்லாப் பாப்பாங்க” என்கிறார் இந்த மைனர் மகாத்மா. அதைத்தான் யூடியூப்பில் பார்த்து விட்டோமே என்பதாலேயே லைட்மேனோ இல்லை ரசிகர்களோ இந்தப் படத்தில் (எதிர்) பார்ப்பார்கள் என்று வெளிப்படையாக தனது அறியப்பட்ட பொறுக்கித்தனத்தையே ஒத்துக் கொள்ளும் திறந்த மனது யாருக்கு வரும்?
அதே போல “வாலு” எனும் படத்தை பேசும் போது, “ ‘அந்த’ சமயத்தில் எடுத்த படமா…..நானும், ஹன்சிகாவும் செம கெமிஸ்ட்ரியில் இருக்கோம்” என்று இன்னும் திறந்து பேசுகிறார். இதிலிருந்து பெறும் நீதி என்னவென்றால் படத்தில் மட்டுமல்ல வாழ்விலும் அதே நாயகிகளை காதலிப்பதால்தான் அவருக்கு நடிப்பு இயல்பாக வருகிறது. படமும் எதிர்பார்ப்புடன் நன்றாக ஓடுகிறது. இதனால் திரையுலகில் உள்ள நாயகிகள் அனைவரும் தங்களை சிம்பு இழிவுபடுத்திவிட்டதாக பொங்கி எழுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த செய்திகள் விளம்பர புரமோஷனாக பயன்படுத்தலாம் என்பதால் அனுமதிக்கிறார்கள். ஆனல் சிம்பு மட்டும் உண்மையை பேசுகிறார்.
அவர் ஏன் இப்படி பொறுக்கியாக இருந்தார்? (இருக்கிறார்?).
அவர் ஏன் இப்படி பொறுக்கியாக இருந்தார்? (இருக்கிறார்?). மற்ற நடிகர்கள் 24 வயதில் நடிக்க வரும் போது இவர் மட்டும் 9 மாதக் குழந்தையிலிருந்தே நடிக்க வந்து விட்டார். கைக்குழந்தைக்கெல்லாம் நடித்த நினைவுகள் எப்படி இருக்கும் என்று திருஞான சம்பந்தரை போற்றும் மண்ணிலிருந்து கொண்டு கேட்காதீர்கள். ஒரு பக்கம் பள்ளி பரீட்சை, மறுபக்கம் சினிமா டயலாக் என்று டைட்டாக வேலை பார்த்த அந்த் சிறுவனுக்கு என்ன நிம்மதி ஏற்பட்டிருக்க முடியும்?
இடையில் தாடிக்கார டாடிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று எதுகை மோகனையில் எஃபெக்டுடன் எட்டு நாள் பேசினால் அந்த பிஞ்சு மனது எப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கும்?
புதுப் பணக்காரர்களுக்குத்தான் ஆடம்பரமும், கேளிக்கைகளும் பிரச்சினைகளை கொண்டு வரும். இவருக்கு எல்லாமும் பிறக்கும் போதே இருந்ததால் பிரச்சினைகள் வேறு விதத்தில் வந்தன. அதுதான் தனிமை. பிறகு இரண்டு வருட இடைவெளி. இதில்தான் நீங்கள் புதிய சிம்புவை பார்க்கிறீர்கள்.
நான் யார், இந்த உலகிற்கு ஏன் வந்தேன், எதற்கு வாழ்கிறேன் போன்ற தேடல் கேள்விகள் ஜெயமோகனுக்குத்தான் சொந்தமென்று நினைக்க கூடாது. இதே வார்த்தைகளில் சிம்புவும் தனக்குள்ளே கேள்விகள் எழுந்துக்கிட்டே இருக்கு என்கிறார். கவனியுங்கள், அவர் எழுந்தது என்று முடித்து விடாமல் எழுந்துகிட்டே இருக்கு என்கிறார் அல்லவா, இதுதான் ஒரிஜினல் தேடல் என்பதற்கு அத்தாட்சி.
அதனால்தான், “தான் சிம்புதானா”ண்ணு அவருக்கு தோன்றுகிறதாம். சிறிய வயதில் நடிப்பு, புகழ், பணம், வசதிகள், காதலி எல்லாம் இருந்தாலும் தனிமையிலேயே அவதிப்பட்டிருந்தார் அல்லவா, அதுதான் இந்த தேடலில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இப்படித்தான் ஆன்மீகம் அறிமுகமாகிறது. “பைபிள், குர்ஆன், கீதை, மெட்டா பிசிக்ஸ், டி.என்.ஏன்னு கலந்து கட்டி” படிக்க ஆரம்பித்திருக்கிறார். இங்கேதான் அவர் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் வகை பாரம்பரிய இந்துத்துவாவில் இருந்து பின் நவீனத்துவ இந்துவாக மாறுபடுகிறார்.
அதே நேரம் அவரது தேடலில் குர் ஆனும், பைபிளும் இருப்பதால் மார்க்க சகோதரர்களும், பெந்தகோஸ்தே பெரியவர்களும் கூட முயற்சித்தால் யுவன் சங்கர் ராஜா, நடிகை தீபா போன்று பம்பர் பரிசுகள் கிடைக்கலாம். பிறகு ஃபேஸ்புக்கிலும் கொண்டாடலாம். என்ன, இசுலாம் ஒரே நாளில் கொஞ்சம் அல்ட்ரா மாடர்னாக மாறிவிடும், பரவாயில்லையா?
இதன் தொடர்ச்சியாக தியானமெல்லாம் இருந்திருக்கிறார். ஒரு முறை 8 மணி நேரம் தியானத்தில் இருந்த போது அவரது அம்மா பயந்திருக்கிறார். என்ன பயந்தார், பையன் ஏதும் வஸ்துக்களை உண்டு போதை மயக்கத்தில் சிக்கிவிட்டானா என்றா என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. இந்த போதி மர மாற்றத்திற்கு பிறகே அவர், தனது கடவுளுக்கு முகம் கிடையாது என்பதை கண்டுபிடித்திருக்கிறார். கூடவே நண்பனது தோளில் கை போட்டு என்ன மச்சி என்று பேசுவது போல கடவுளிடம் உரையாடுகிறார். கடவுளை டா போட்டு பேசும் நமது மரபில் இது வாழையடி வாழையாக தொடர்வது குறித்து இந்து ஞான மரபு ஆராய்ச்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.
ஆரம்பத்தில் ரஜினி போல சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற கனவுள்ளவர் இந்த “என்ன மச்சி, லார்டு” ஆன்மீக மாற்றத்திற்கு பிறகு சினிமா இரண்டாம் பட்சம்தான் என்று மாற்றியிருக்கிறார். ஒருவேளை ரஜினியே இப்படி ஆன்மீகம் என்று மாறிய பிறகே சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்றும் இதை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஏனெனில், இதைக் கேட்ட உடன் அப்பாவி குங்குமம் நிருபர் நா.கதிர்வேலன், டென்சனாகி தமிழகம் ஏதோ சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனை இழந்து விடுமோ என்றஞ்சி, “சினிமாவை விட்டு போய்விடுவீர்களா” என்று பதைபதைப்புடன் கேட்கிறார்.
இங்குதான் ஆன்மீகத்தை பற்றிய நித்தியானந்தா விளக்கத்தை ஜெயேந்திரானந்தா ஸ்டைலில், சாயிபாபானந்தா மொழியில், பாருநிவேதிதா களிப்பில், சுயமோகன் வார்த்தைகளில் நடிகர் சிம்பானாந்தா உபதேசிக்கிறார். “ஆன்மிகத்தில் வந்துட்டா கல்யாணம், தாம்பத்யம், தண்ணியடிக்கிறது, அசைவம் கூடாது என்பதல்ல. 24 மணிநேரமும் காவி உடையில் இருக்கிறதும் அவசியமல்ல. கடவுளை நோக்கிச் செல்ல அநேக வழிகள். அதனால் சினிமாவை விட மாட்டேன், என்னை நம்பின ரசிகர்களுக்கு என்னால ஏமாற்றம் தர முடியாது” என்று பட்டையைக் கிளப்புகிறார் சி ஆனந்தா.
முற்றும் துறக்கும் ஆன்மீகத்தையே அவஸ்தை போல கேட்டு பழகியிருக்கும் செவிகளுக்கு இந்த மறைபொருளின் உள்ளொளி மனப்பெருங்கடல் சுனாமி அலைகள் கேட்காது. எல்லாவற்றையும் வைத்துக் கொண்டே ஆன்மிகத்தை பின்பற்றுவது எவ்வளவு பெரிய சிரமம் என்பது லவுகீக வாசிகள் அறியாத ஒன்று. இதனால் அது சிரமம் என்று சொல்வது கூட பிழை. சோமபான, சுரா பானஆன்மிகத்தையே மாபெரும் கொண்டாட்டமாக மாற்றியிருக்கும் பாரிஸ் தேசத்து ஒயின் பின்நவீனத்துவமிது.
யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?
சிம்புவை கேலி செய்வதாக நினைக்கும் அற்பப் பதர்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறோம். ஒருக்கால் சினிமா மைனர்தனத்தை வைத்துக் கொண்டு சிம்பானந்தா ஆன்மிகம் பேசுவதை கேலி செய்தால் நீங்கள் ரோல்ஸ்ராய்சில் முக்தி பரவசமடைந்த ஓஷோவை, கேபிள் டீவி பார்த்து அத்வைதத்தை ஆராய்ந்த பால பெரியவாள், மாமிகளை வைத்து யோகநிலை கண்ட நடு பெரியவாள், சன் செய்தி பார்த்துக் கொண்டே இருட்டை ஆராய்ந்த நித்தி, ஆண் நண்பர்களுக்கான விடுதலையை பாலியல் லேகியத்தில் கலந்து கொடுத்த சாயிபாபா அனைவரையும் கேலி செய்ய வேண்டும். அவ்வளவு ஏன் ஜெயமோகனது குரு நித்ய சைதன்ய யதியையும் கூட கேலி செய்ய வேண்டும்.
அந்த யதி கூட கேரளாவிலிருந்து துறவறம் பூண்டு ஊர் ஊராக அலைந்த போது கூட பின்னொரு நாளில் தனது கல்லூரி சான்றிதழ்கள் தேவைப்படலாம் என்று பத்திரமாக பூட்டி வைத்தே சென்றிருக்கிறார். துறவறம் என்றதும் அவசரப்பட்டு எரித்துவிடவில்லை. பிறகு சென்னை வந்து ஆங்கில அறிவைக் காண்பித்து, ஊரிலிருந்து சான்றிதழ்களை வரவழைத்து பேராசிரியர் ஆகி, அமெரிக்கா வரை வகுப்பு எடுக்க சென்றிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆகவே யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?
தனது குழந்தை குட்டிகளோடு ஒரு தனித்தீவில் வாழும் அளவுக்கு காசு இருந்தும், ரீல் லைஃபில் மக்களை எப்படி சந்தோஷப்படுத்துகிறாரோ, அதை ரியல் லைஃபில் செய்வதுதான் அடுத்த 30 வருட கனவு என்கிறார் சிம்பு. இந்த பெரிய மனது எத்தனை பேருக்கு வரும்? இதனால் அரசியலுக்கு அவர் அடி போடுகிறாரோ என்ற கேள்விக்கு தனக்கு அரசியல் பற்றி தெரியாது, புரியாது என்று சுயமோகன் போல பணிவுடன் கூறுகிறார்.
சினிமாவை மீறி மக்களுக்கு என்ன பண்ணலாம் என்று அவர் யோசிப்பதை கொச்சைப்படுத்த கூடாது என்பது சிம்பானந்தாவின் வேண்டுகோள். அதனால்தான் “உங்க எல்லோருக்குள்ளும் ஒரு லீடர், குரு இருக்கார். அவர் சொல்றதைக் கேளு! உனக்கெதுக்கு சிம்பு? ரசிகர்கள் என்னை பின்பற்ற வேண்டாம், சொல்லிட்டேன்” என்கிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை நினைவுபடுத்தும் இந்த மேதமைத்தனம் இத்தனை சிறிய வயதிலா என்று (ஆச்சரிய)படுத்துகிறார்.
சிம்புவின் படங்களை பார்த்து ரசிகர்கள் ஜன்ம விமோச்சனம் அடைந்தாலும், அவரென்னவோ சிவாஜி படத்தில் ரஜினி ஒரு ரூபாய் காசோடு டீக்கடையில் இருப்பாரே அப்படியொரு மனநிலையில்தான் இருக்கிறாராம். அதனால்தான் சமூக பிரச்சினைகளை பற்றி அற ஆவேசத்துடன் கேட்கிறார்.
மதம், நாடு, இனம் புரிந்தவர்கள் மனிதனை புரியாமல் போனதேன்? ஒரே நாடுன்னாலும் தண்ணி கொடுக்காமல் போவது ஏன்? நடு ரோட்டில் குழந்தைகளை வெட்டி, பாம் போடுகிறான், மனிதர் மீதான அன்பு எங்கே போனது? என்று அந்த கேள்விகள் குங்குமம் இதழில் ஹன்சிகாவின் குறுஞ்சிரிப்பு படத்திற்கு கீழே அணுகுண்டாய் வெடிக்க காத்திருக்கின்றன.
பிறப்பும் இறப்பும் கடந்த முக்கால பாபா சாமியாரை பார்த்து வியந்ததும் பிறகு அதையே பாபா படமாக்கி – அது நட்டமானாலும் – சிறப்பு செய்தது ஊரறிந்த கதை.
வாழ்வில் கிடைத்தது திகட்டினால்தான் இப்படி ஊருக்கு உபதேசம் செய்வார்கள் என்று பொதுப்புத்தியில் இருந்து நா.கதிர்வேலன் கேட்கும் போது அதிரடியாக பதில் வருகிறது: “நான் பழைய சிம்பு இல்ல. சினிமாவில் நடிச்சாலும் ரேசில் இல்லை. ஏன்னா……நான் ஆன்மிகத்தில்இருக்கேன்”. போட்டி மனப்பான்மையை துறக்காமலேயே இந்த சிந்தனையை எதிர்பார்த்து, அது வந்தால்தான் முதலாளித்துவம் சுபிட்சமாகும் என்று கே.ஆர்.அதியமான் கரடியாக கத்துகிறாரே அவர் முதலில் சிம்பானந்தாவிடம் சீடனாக சேர்ந்து இந்த சூட்சுமத்தை கற்க வேண்டும்.
இப்படி ஓவராக ஆன்மிகம் பேசும் சிம்பானந்தாவை திருத்த வேண்டும் என்ற கொலைவெறியோடு அடுத்த கேள்வி “திருமணம் செய்தால் சரியாகி விடுமா” என்று வருகிறது. கடவுள் இப்படி ஆன்மிக ஞானத்தை கொடுத்த பிறகே வந்த துணையையும் வேண்டாமென்று சொன்னதாக புன்னகைக்கிறார் சிம்பானந்தா.
மகாபலிபுரம் பங்களா காக்டெயில் பார்ட்டிகளுக்கு புதுப்புது ஜோடிகளோடு சென்று வந்த சிம்பு திடீரென்று இமயமலை போனது ஏன்?
அந்த பயணம்தான் அவரை சிம்பானந்தாவாக மாற்றியிருக்கிறது. தான் யார் என்ற தேடல், எல்லாமும் இருந்து எதுவுமில்லாததான தனிமை, மத அறிவு அனைத்தும் இமயம் அருளிய ஞானம். இமய மலையெங்கும் துளி அடையாளம் கூட இல்லாமல் திரிந்தவர்தான், பிறகு வெறும் சிம்புவில் ஆனந்தம் இல்லை என்று தெளிந்திருக்கிறார்.
தமிழகத்தில் இருந்து இமயம் சென்றவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஒருவர் ரஜினி, இரண்டாமவர் ஜெயமோகன் எனப்படும் சுயமோகன், மூன்றாமவர் சிம்பு எனப்படும் சிம்பானந்தா.
புகழின் உச்சியில் இருக்கும் போது சிம்புவுக்கு நேர்ந்த அலுப்பு ஏற்பட்டு ரஜினி இமயம் சென்று ரிஸ்க் எடுத்து பயணம் செய்த கதைகளும், காட்சிகளும் ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முக்கியமாக அவர் பிறப்பும் இறப்பும் கடந்த முக்கால பாபா சாமியாரை பார்த்து வியந்ததும் பிறகு அதையே பாபா படமாக்கி – அது நட்டமானாலும் – சிறப்பு செய்ததும் ஊரறிந்த கதை.
சுயமோகனைப் பொறுத்த வரை பத்து வருடம் மகாபாரதம் எழுதுவதாக அறிவித்த போது ஆதரித்த மொக்கைகள் பிறகு அவரை கேட்பாரின்றி கைவிட்டு விட்டன. ஊடகங்களில் மகாபாரதத்தை தினமும் 50,000 பேர் படிப்பதாக பிரச்சாரம் செய்தும் ஃபேஸ்புக்கில் ஐந்து பேர் கூட பகிரும் நிலை இல்லை. இந்நிலையில்தான் அவர் ரிஸ்க்கெடுத்து ஜம்முவுக்கு புல்வெளி பயணம் போனார், சமீபத்தில்.
இந்தியாவிலேயே இப்படி புல்வெளிப் பயணம் எனும் மாபெரும் ரிஸ்க் எடுத்து ஜம்முவிற்கு சென்ற முதல் எழுத்தாளர் சுயமோகன்தான்
காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காணாமற் போயும், இலட்சக்கணக்கான மக்கள் அடக்குமுறையில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அது விதிக்கப்பட்டது. அதை ஒரு புல்வெளிப் பயணத்தோடு சென்று கண்டறிவது மிகப்பெரும் சவால். ஜம்முவில் ஒப்பீட்டளவில் பிரச்சினைகள் இல்லை என்றாலும் ஜம்முவின் எல்லையில் இருக்கும் காஷ்மீரப் பகுதிக்குள் வேலை நிறுத்தம் நடந்த நாளில் எந்த காயமோ, குண்டுவெடிப்போ இல்லாமல் சென்று மீண்ட சுயமோகனுக்காக இங்கே அவரது அடிப்பொடி அன்பர்கள் மாவிளக்கு யாகமெல்லாம் நடத்தியிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே இப்படி புல்வெளிப் பயணம் எனும் மாபெரும் ரிஸ்க் எடுத்து ஜம்முவிற்கு சென்ற முதல் எழுத்தாளர் சுயமோகன்தான் என்று விஷ்ணுபுரம் வரலாற்று நிறுவனம் இணையத்தில் பதிவு செய்திருக்கிறது. அவர் மீண்டு வந்தது காஷ்மீர் மக்களின் கருணையா இல்லை மாவிளக்கின் பவரா என்று விவாதிக்காமல் இந்த வீரத்தை போற்றும் அதே நேரத்தில்…………………………..?
ரஜினியின் இமயப் பயணத்தை வணிக ஊடகங்கள் பதிவு செய்தன. சுயமோகனது பயணத்தை ஜெயமோகன்.இன் தளமும், விஷ்ணுபுரம் வட்டமும் பதிவு செய்திருக்கின்றன.
ஆனால் நடிகர் சிம்பு, ஞானி சிம்பானந்தாவாக மீண்ட அந்த இமயப்பயணத்தை மட்டும் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இங்கேதான் சிம்பானந்தா ஜம்மென்று நிற்கிறார். அவருக்கு நிகர் எவருமில்லை.
பாலஸ்தீனம் – உக்ரைன்: மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!
பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசு அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்து நடந்துவரும் இப்போரில் இதுவரை ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசா பிராந்தியத்தின் தெருக்கள் எங்கும் ரத்த ஆறு ஓடுகிறது. ஆயிரத்துக்கும் மேலான தடவைகளில் டன் கணக்கில் பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளைக் கொண்டு வான் தாக்குதலை நடத்தி மசூதிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் அனைத்தின் மீதும் பயங்கரவாதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. இடிபாடுகளின் நடுவே வெள்ளைக் கொடி ஏந்தி நின்ற ஒரு பாலஸ்தீன குடும்பத்தினர் மீதும், ஐ.நா. மன்றம் ஏற்படுத்தியுள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீதும், தொடக்கப்பள்ளியில் தஞ்சமடைந்த மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மீதும் காட்டுமிராண்டித்தனமாக வான் தாக்குதலையும் பீரங்கித் தாக்குதலையும் நடத்தி மனித உணர்வற்ற மிகக் கொடிய காட்டுமிராண்டிகள் தாங்கள்தான் என்பதை இஸ்ரேலிய இனவெறி பாசிச பயங்கரவாதிகள் உலகுக்கு அறிவித்து வருகின்றனர்.
இஸ்ரேலிய பயங்கரவாதம் : காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்ட பச்சசிளம் பாலஸ்தீனக் குழந்தைகள்
பாலஸ்தீனத்தின் மேலைக்கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஜூன் மாதத்தில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதற்குப் பதிலடிதான் இத்தாக்குதல் என்று இஸ்ரேல் நியாயவாதம் பேசுகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்போ இதர பாலஸ்தீன அமைப்புகளோ தாங்கள் இக்கொடுஞ்செயலில் ஈடுபடவில்லை என்றே மறுத்து வருகின்றனர். இருப்பினும், மூன்று இஸ்ரேலியர்களைக் கொன்றுவிட்டார்கள் என்ற நொண்டிச்சாக்கை வைத்து ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடன் இப்போரை நடத்தி வருகிறது, இஸ்ரேல்.
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரும் மேற்குக் கரை பகுதியில் ஃபதா அமைப்பினரும் பிரிந்து பாலஸ்தீன சுயாட்சி நிர்வாகத்தை நடத்திவந்த நிலையில், ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களுக்கும் ஐக்கியப்பட்ட சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்குவதெனத் தீர்மானித்து, கடந்த ஏழாண்டுகளாகப் பிளவுபட்டிருந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரும், ஃபதா அமைப்பும் ஒன்றிணைவது என்று கடந்த 2014 ஏப்ரலில் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்னும் ஆறு மாதங்களில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதிகளில் புதிய தேர்தல் நடத்தவும் இவ்விரு அமைப்புகளும் தீர்மானித்தன. ஆனால், பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியில் பாலஸ்தீன அமைப்புகளிடையே ஒற்றுமை நிலவக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமாக உள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியுடன், பெயரளவிலான இந்த சுயாட்சி உரிமையைக் கூட செயல்படுத்தவிடாமல் இதுவரை அவை தடுத்துவந்தன. இதனாலேயே தற்காலிகமாக ஒரு ஒற்றுமைக்கு வந்து ஹமாஸ் அமைப்பும் ஃபதா அமைப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே (ஏப்ரல் 24) காசா பிராந்தியத்தில் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் எச்சரித்தது. அதன் தொடர்ச்சியாகவே கடந்த ஜூலை 8-ஆம் தேதியிலிருந்து மிகக் கொடியஇ னப்படுகொலைப் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் இந்த போர்த்தாக்குதலுக்கு ஆதரவாகவே நிற்கின்றன.
இஸ்ரேலிய போர்த் தாக்குதலில் நொறுங்கிப் போனவை பாலஸ்தீனர்களின் கட்டிடங்கள் மட்டுமா?
குடிநீர், மருத்துவம், மின்சாரம், எரிவாயு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் முதலான அனைத்துக்கும் முற்றாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் காசா பிராந்தியம் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கே மத்தியதரைக்கடலும், இதர அனைத்து திசைகளிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளும், தெற்கே இஸ்ரேலுக்கு அனுசரணையாக உள்ள எகிப்து நாடும் – என எந்த வழியிலும் ஆதரவற்ற சூழலில்தான் பாலஸ்தீனர்கள் உள்ளனர். காசா பிராந்தியத்துக்குள்ளேயேதான் பாலஸ்தீனர்கள் தமது பிழைப்பையும் இதர அத்தியாவசியத் தேவைகளையும் தேடிக் கொள்ள வேண்டும் எனுமளவுக்கு, திறந்தவெளி சிறைச்சாலையாகவே இப்பகுதி உள்ளது. போதாக்குறைக்கு காசா பிராந்தியத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவரையும் இஸ்ரேலிய இனவெறி அரசு அரசு எழுப்பியுள்ளதால், பாலஸ்தீனர்கள் பிழைப்புக்காகக் கூட அச்சுவரைத் தாண்டி அனுமதியின்றிச் செல்ல முடியாது. இதனால் பாலஸ்தீனர்கள் சுரங்கங்களை அமைத்து இஸ்ரேலியப் பகுதிகளுக்குச் சென்று பிழைப்பைத் தேடுவதும், அதேபோல எகிப்து நாட்டுக்கு சுரங்க வழியாகச் சென்று கூலிக்கு உழைத்து அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்து வருவதும் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இதைத்தான் பாலஸ்தீனர்கள் வீடுகளுக்குள்ளேயே சுரங்கம் அமைத்து வெடிகுண்டுத் தாக்குதல் தொடுப்பதாகவும் அவற்றைத் தகர்ப்பதற்காக வீடுகள் மீது தாக்குதலை நடத்த வேண்டியிருப்பதாகவும் நியாயப்படுத்துகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் இயக்கத்தினர் தற்போது நடத்திய தற்காப்புத் தாக்குதலில் இதுவரை 4 இஸ்ரேலிய சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர். இதை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தும் பயங்கரவாதப் போர் என்று இஸ்ரேலும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் சித்தரிப்பதை யாராவது நம்ப முடியுமா?
இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வாய்திறக்காத அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், கடந்த ஜூலை 17-ஆம் தேதியன்று உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு அதில் பயணித்த 283 பயணிகள் கொல்லப்பட்டதும் ஆவேசத்துடன் அக்கொடுஞ்செயலுக்கு எதிராகக் கண்டனத்தைத் தெரிவித்தன. விமானம் விழுந்து நொறுங்கிய இடமான டொனெட்ஸ் பிராந்தியத்தில் ரஷ்யர்களே அதிகமாக இருப்பதாலும், இவர்கள் உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணையும் நோக்கத்துடன் போராடி வருவதாலும், இவர்களுக்கு ரஷ்ய அரசு ஆதரவளிப்பதாலும் இந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள்தான் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள் என்று அமெரிக்கா உடனடியாகக் குற்றம் சாட்டியது.
அமெரிக்கா சொன்னால் அதற்கு அப்பீல் ஏது? அதைத் தொடர்ந்து ரஷ்ய வல்லரசானது மனிதகுலத்துக்கு எதிரான கொடிய குற்றங்களில் ஈடுபடுவதாக அமெரிக்க விசுவாச மேலை ஏகாதிபத்தியங்களும் குற்றம் சாட்டின. “இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஆயுதங்களை கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யாதான் வழங்கியுள்ளது” என்று சாடினார், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி. “தண்டனை ஏதுமின்றி குற்றங்களில் ஈடுபடும் ரஷ்யா” என்று தலைப்பிட்டு, அமெரிக்காவின் பிரபல வார ஏடான ‘டைம்’ பரபரப்பாகக் குற்றம் சாட்டியது. ரஷ்யா இதனை மறுத்து, முழுமையான விசாரணைக்கு முன்வந்த போதிலும், ஆதாரமின்றிக் குற்றம் சாட்டுவதை சீனா கண்டித்த போதிலும் கோயபல்சு பாணியில் ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து ரஷ்யா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விமானத்தை கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டுவீழ்த்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. குற்றம் சாட்டப்படும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் விழுந்து நொறுங்கிக் கிடந்த விமானத்திலிருந்து கருப்புப் பெட்டியை (விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமிடையிலான தகவல்களைப் பதிவு செய்யும் கருவியை) மீட்டெடுத்து விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். தாங்கள் விரும்புகிற திசையில் இந்த விசாரணை அமைய வேண்டுமென்பதற்காகவே விபத்து நடந்த உக்ரைனில் அல்லாமல் பிரிட்டனுக்கு இந்தக் கருப்புப் பெட்டி அனுப்பப்பட்டது. உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஐ.நா.வில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவக் கருவிகள் மற்றும் உயர்தொழில்நுட்பச் சாதனங்கள் ஏற்றுமதி செய்வதற்கும், ஐரோப்பிய நிதிச் சந்தைகளை ரஷ்ய வங்கிகள் தொடர்பு கொள்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு (ஜி-7) எச்சரிக்கிறது.
பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்படுவதென்பது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே அமெரிக்கா இத்தகைய கொடுஞ்செயலைச் செய்திருக்கிறது. இஸ்ரேலும் செய்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படிக் குற்றம் சாட்டி உடனடியாக தடைகள் விதிப்பதும் அந்நாட்டைத் தனிமைப்படுத்துவதும் நடக்கவில்லையே, அது ஏன்? இப்படியொரு பொதுக்கருத்து திட்டமிட்டே உருவாக்கப்படவில்லையே அது ஏன்? எவ்வாறு பேரழிவுக்கான ஆயுதங்களை சதாம் உசைன் வைத்திருந்தார் என்று பொய்க்குற்றம் சாட்டி ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டதோ, அதேபோல இப்போது ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்தி அதைக் காட்டுமிராண்டி அரசாகச் சித்தரிக்கிறது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். பாலஸ்தீனப் படுகொலைகளை மறைக்க இப்படியொரு சதி அரங்கேற்றப்பட்டு ரஷ்யா நோக்கி உலகின் பார்வை திரும்புவதற்காகவே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் இப்படியொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஆதாரங்களற்ற ஊகமாகத் தோன்றினாலும், நடந்தேறும் நிகழ்வுகள் இந்தத் திசையில்தான் செல்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டு 283 பயணிகளைப் பலிகொண்ட மலேசிய விமானம் உக்ரைனில் விழிந்து கிடக்கும் கோரம்
ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவளத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தவும், அதன் எரிவாயு விநியோகத்தையும் அதன் வழியிலான ரஷ்யாவின் பிராந்திய செல்வாக்கையும் தடுத்து முடக்கும் நோக்கத்துடனும் கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றின. அப்பட்டமான முதலாளித்துவப் பாசிச குற்றக் கும்பலின் ஆட்சியை நிறுவி ரஷ்ய செல்வாக்கிலிருந்து உக்ரைனைப் பிரித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்தன.
“ரஷ்ய அதிபர் புடினது விமானத்திலுள்ள மூவண்ண டிசைனும் மலேசிய விமானத்திலுள்ள மூவண்ண டிசைனும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருக்கின்றன. மலேசிய விமானம் புறப்படும் சமயத்தில்தான் புடினும் தனது விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவரது விமானத்தைத் தாக்கும் நோக்கில் உக்ரைனிலுள்ள அமெரிக்கக் கூலிப்படைகள் அதே போன்ற தோற்றத்திலுள்ள மலேசிய விமானத்தைத் தாக்கியிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. ஏனெனில், உக்ரைனில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து அப்போதிருந்தே சி.ஐ.ஏ. உளவாளிகளும் “பிளாக்வாட்டர்” எனப்படும் தனியார் நிறுவனத்தின் கூலிப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டு ரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரேனிய நகரங்களைத் தாக்கி வந்துள்ளன. இந்நிலையில், இந்த விமானத்தை இந்தக் கூலிப்படைகள் தாக்கியிருப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. இருப்பினும், “ஐயோ, பயங்கரவாதம்” என்று ஒப்பாரி வைத்து ரஷ்யா மீது வீண்பழி சுமத்தி, தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த இன்னுமொரு வாய்ப்பாக இவ்விமானத் தாக்குதலை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதே உண்மை.
உக்ரைனில் விமானம் விழுந்து நொறுங்கி அதில் பயணித்த அனைவரும் மாண்டுபோனதும் கண்ணீர் வடிக்கும் ஏகாதிபத்திய உலகம், காசா பிராந்தியத்தில் கொத்துக்கொத்தாக பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உக்ரைன் விமானத்தில் பயணம் செய்தவர்களைப் பற்றிய விவரங்களையும் அவர்களது வாழ்க்கைக் கதைகளையும் படங்களுடன் வெளியிட்டு உலக மக்களின் கோபத்தை ரஷ்யாவுக்கு எதிராகத் திருப்பும் ஏகாதிபத்திய ஊடகங்கள், காசா பிராந்தியத்தில் விளையாட்டுப் பொம்மையுடன் இறந்து கிடக்கும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளைக் கூட வெளியிட முன்வரவில்லை. உக்ரைன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய விவரமாவது இருக்கிறது. ஆனால் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை உலகுக்கு முழுமையாகத் தெரியவில்லை.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் வான்வழிப் போர் தாக்குதலைக் குன்றுப் பகுதியில் சோபாக்களில் அமர்ந்து கொண்டு ரசிக்கும் யூத இனவெறியர்களின் வக்கிரம்.
உக்ரைனில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி கூட இல்லை. “போர்த் தாக்குதலால் வெளியேவர முடியாத நிலையில், கொல்லப்பட்டோரின் பிணங்கள் அழுகத் தொடங்கின; ஒரு சிலர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்து சவ அடக்கத்தைச் செய்துவிட்டு ஓடினோம்” என்று விம்முகிறார் ஒரு பாலஸ்தீனர்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதரவின் காரணமாக, இதுவரை உலக அரங்கில் தனிப்பட்டிருந்த யூத இனவெறியர்கள், இப்போது பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொலைவெறியாட்டத்தை ஆதரித்து பாரீசு நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமளவுக்குத் துணிந்துள்ளனர். போர்த் தாக்குதல் நடக்கும் காசா பிராந்தியத்தை ஒட்டிய குன்றுப் பகுதிகளில் சொபாக்களில் அமர்ந்து கொண்டு நொறுக்குத் தீனி தின்று கொண்டு யூத இனவெறியர்கள் இப்போர்த்தாக்குதலை வாண வேடிக்கை போல வக்கிரமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இது ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்தான் என்று குற்றம் சாட்டும் ஏகாதிபத்தியவாதிகள், அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போர்த் தாக்குதலை ஒரு மாத காலமாக இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாதிகள் நடத்திக் கொண்டிருந்த போதிலும் அந்நாட்டின் மீது கண்டனம் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. உலகெங்கும் இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெருகத் தொடங்கி உலகின் பொதுக் கருத்து வலுப்பெறத் தொடங்கிய பிறகே ஐ.நா. மன்றம் சடங்குத்தனமாக ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதுவும் கூட இஸ்ரேலைப் போர்க்குற்றவாளியாகச் சித்தரிக்காமல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருதரப்பினரும் போர்த்தாக்குதலைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறுதான் கோரியது.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி செய்து ஆதரித்துவருவதாகக் குற்றம் சாட்டி ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், இஸ்ரேல் மீது இப்படியொரு பொருளாதாரத் தடை விதிக்க முன்வரவில்லை. அரபு நாடுகள் இஸ்ரேலின் பயங்கரவாதப் போரைக் கண்டும் காணாமல் இருந்த போதிலும், எல்சால்வடார், பிரேசில் சிலி, ஈக்வடார், பெரு முதலான 5 தென்னமெரிக்க நாடுகள் இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நாட்டின் இஸ்ரேலியத் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டு எதிர்ப்பைக் காட்டியுள்ளன. ஆனால், மோடி அரசு இன்னமும் இஸ்ரேலை தனது நட்பு நாடாகக் கொண்டாடுகிறது. இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டுமென்று ஆக்கிரமிப்பாளனையும் ஆக்கிரமிப்பை எதிர்த்து தற்காத்துக் கொள்பவனையும் வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் இந்துத்துவ மோடி அரசு, தான் யார் பக்கம் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.
இந்நிலையில், 1967 நவம்பரில் போடப்பட்ட ஐ.நா. தீர்மானத்தின்படி, பாலஸ்தீன தாயகத்தின் முழுஉரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை முற்றாக வெளியேறக் கோரியும்,பாலஸ்தீன மக்கள் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திவரும் இஸ்ரேலிய இனவெறி அரசையும், அதற்குத் துணை நிற்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களையும் அவற்றின் கைக்கூலி மோடி அரசையும் எதிர்த்துப் போராடுவதும், குறிப்பாக, உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவின் கோயபல்சு பாணி பொய்களையும் சதிகளையும் கொலைகளையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும்தான் இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.
மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத் பேசியதை “ஏன் இந்துக்களாக இருக்க முடியாது?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்.
அதில் “இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும் போது, இந்தியாவில் வசிப்போர் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இந்த நாட்டில் இந்துக்களிடையே சமத்துவத்தை உருவாக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும். அனைத்து இந்துக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் நடந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொன் விழாவில் மோகன் பாகவத் பேசிய”தாக பூரிக்கிறது தினமலர். தாமரை நாடாண்டால் காவி வெறியர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்.
இது ஒன்றும் புதிதல்ல. சாவர்கர், ஹெட்கேவார், கோல்வால்கர் முதல் இராம கோபாலன், அசோக் சிங்கால் வரை ஆயிரக்கணக்கான இந்துமதவெறியர்கள் அனைத்து மொழிகளிலும் இந்த மிரட்டலை பேசாத நாளில்லை. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆளும் காலத்தில் சட்டபூர்வ இந்துராஷ்டிர அமலாக்கம் நடந்து வரும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பது வெறும் கருத்தல்ல. அமலுக்கு வரும் ஒரு துவக்கம்.
ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? என்பது கேள்வியல்ல, ஏற்றுக் கொள்ளாவிட்டால் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தினை அறிவிக்கும் மிரட்டல். இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசும் போது இந்தியாவில் சமஸ்கிருதமோ இல்லை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியோதான் பேச வேண்டும் என்பதும், அதற்கான துறை சார் உத்திரவுகளை பாஜக அரசு பிறப்பித்திருப்பதும் வேறு வேறு அல்ல. மற்ற இந்திய மொழிகள் அவாளின் புனித மொழிக்கு கட்டுப்பட்டே காலந்தள்ள வேண்டும் அல்லது ஒழிந்து போக வேண்டும்.
அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படுவது ஒரு இடம் சார்ந்த நாட்டின் குறியீடே அன்றி பண்பாடு, மொழி, சமூகவியல், மதம் சார்ந்த ஆதிக்கத்தின்பாற்பட்டதல்ல. இத்தனைக்கும் அங்கே கிறித்தவமே அதிகாரப்பூர்வமற்ற அரச மதமாகவம், வெள்ளை நிறவெறியே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செய்யும் நிலைமை இருந்தாலும் சட்டபூர்வமாகவும், பொதுப்புத்தியின் கருத்தளவிலும் அங்கே பெரும்பான்மையினரின் மதம் சார்ந்த பண்பாடு “அமெரிக்கனிசமாக” முன்னிறுத்தப்படுவதில்லை.
இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பேசும் இந்து வெறியைப் போன்றே ஆரிய இனவெறியை உயர்த்திய ஹிட்லரும் பேசினான். ஆனால் அதை ஜெர்மனிய மக்கள் இன்று வரையும் ஒரு குற்றவியல் கொடூரமாகவே கருதுகிறார்கள். அதனால்தான் புதிய நாசிசக் கட்சிகள் கூப்பாடு போடும் போதெல்லாம் பெரும்பான்மையான ஜெர்மனிய மக்களும் அவர்களை எதிர்த்து போராடுகிறார்கள். இந்தியாவிலோ அந்த நாசிசம் ஆண்டு கொண்டிருக்கிறது. இதன்படி ஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிட்டால் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. சரியாகச் சொன்னால் இந்துமதவெறியர்களின் பாசிசத்தை கண்டு உலக நாடுகள் காறித் துப்பலாம். இந்த கேவலத்தின் விளைவால்தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்துமதத்தின் எந்த அம்சங்களையும் அறியாமல், ஏற்காமல் வாழும் பழங்குடி மக்களும், வருண அமைப்பின் வெளியே தூக்கி எறியப்பட்ட பஞ்சம மக்களும், சாதிக்குள்ளே அடிமைகளாக இழிவு படுத்தப்படும் சூத்திர மக்களும் வாழும் இந்தியாவில் யார் இந்து? அவாள்களும், ஷத்திரிய, வைசிய, பனியா சாதிகளை தவிர்த்துப் பார்த்தால் இந்தியாவில் இந்துக்கள் அல்லாதோர்தான் பெரும்பான்மையினர்.
‘சூத்திர’ பத்திரிகையான தினத்தந்தி, மோகன் பகவத்தின் பேச்சை சர்ச்சை என்று தலைப்பில் போட்டிருந்தாலும் உள்ளே அவர் பேசியதை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறது.
“இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா (இந்து மதம்) அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய மதம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்”.
இந்த சமத்துவத்தை ஏற்காதோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் குடும்ப இயக்கங்களில் இருக்க முடியாது என்று ஏன் அமல்படுத்தவில்லை? தீண்டாமையை ஏற்காதவன் மட்டுமே காங்கிரசில் இருக்க முடியும் என்று அறிவிக்க முடியுமா என்று காந்திக்கு சவால் விடுத்தார் அம்பேத்கர். அந்த சவாலை காந்தி முதல் சங்க பரிவாரங்கள் வரை இப்படித்தான் கள்ளத்தனமாக எதிர் கொள்கிறார்கள்.
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்? ஒரு வேளை கிராமங்களில் அப்படி இல்லை என்றால் அந்த இல்லாமைக்கு என்ன காரணம்?
நிலவுடைமையிலும், பொருளாதாரத்திலும் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் தலித் மக்களை விடுவிக்காமல் இந்த சமத்துவம் சாத்தியமில்லை. இது இந்து மதவெறியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆனால் விரும்பாத ஒன்று. காரணம் சங்க வானரங்கள் அனைத்தும் கொள்கையில் மட்டுமல்ல, கட்டமைப்பிலும் ஆதிக்க சாதிகளை சார்ந்தே உயிர் பிழைத்து வருகின்றன. தேவைப்படும் போது சிறுபான்மை மற்றும் சூத்திர-தலித் மக்களின் உயிரை எடுத்தும் வருகின்றன.
சென்னையில் இவர்கள் நடத்திய ஆன்மீக கண்காட்சியில் தலித் மக்களை ஒடுக்கும் எல்லா சாதிவெறியர்களுக்கும் இடம் கொடுத்துவிட்டு, உத்திர பிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை முசுலீம்களுக்கு எதிராக திருப்பி இந்துவெறியாக மாற்றி தேர்தலில் வெற்றி பெற்று இரத்தம் சுவைத்த ஓநாய்கள் இப்படி வெட்கமில்லாமல் சைவப்புலிகளாக நாடகமிடுகின்றன.
மகாராஷ்டிரத்திலும், ஹரியானாவிலும் வர இருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் தலித்களின் வாக்குகளை அள்ளுவதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வாய் தனக்கு எதிரான சமத்துவத்தை வேண்டா வெறுப்பாக கதைக்கிறது. மராட்டியத்தில் இந்துமதவெறியர்களோடு தலித் கட்சிகளை கூட்டணியில் இணைப்பதோடு (இது ஏற்கனவே நடக்கும் ஒன்றுதான்) மக்களின் வாக்குகளை கவருவதற்கும் இந்த நாடகம் தேவைப்படுகிறது.
அரியானா எனும் இந்தி பேசும் மாநிலத்தில் தலித்துக்களுக்கு எந்த இடமும் அரசியலில் இல்லை என்றாலும் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருக்கும் அவர்களை, கொத்தாக கைப்பற்றுவதற்கும் இந்த நாடகம் அரங்கேறுகிறது.
முசுலீம்களை எதிர்ப்பதும், ஆதிக்க சாதிவெறியை ஆதரிப்பதும் இந்தியாவெங்கும் இருந்தாலும் இப்படி தலித் மக்களை அரவணைப்பது போல நடிப்பது ஆர்.எஸ்.எஸ்-க்கு தேவைப்படுகிறது. ஆனால் அது நாடகமென்பதை தினமலரின் தலைப்பு சொல்லும் போது அரவிந்தன் நீலகண்டன் போன்று இதயத்தில் ஆதிக்க சாதிவெறியான இந்துத்துவத்தை மறைத்து விட்டு தலித் வேடமிடும் கபடதாரிகள் புரட்சி என்று வரவேற்பார்கள்.
போர்த்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போர்த்தினாலும் இந்து மதவெறியர்களின் ஆன்மா சாதிவெறி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை. தேவையெல்லாம் அதை முறியடிப்பதே!
உயர் ரக உணவு விடுதிக்கு குடும்பத்துடன் சென்று வயிறுமுட்டத் தின்றுவிட்டு, கல்லாவுக்கு வந்து “கையில் காசில்லை” என்று சொன்னால் என்ன நடக்கும்? அங்கேயே தரும அடி கிடைக்கும். அப்புறம் போலீசிடம். பிறகு கம்பியும் எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவு ஏன், காசோலை கொடுத்து வங்கியில் பணமில்லை என்று திரும்பி வந்தால்கூட, சிறைத்தண்டனை உண்டு.
கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள் அறந்தாங்கி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஆனால், விவசாயிகளிடம் கரும்பை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு, “காசில்லை” என்று கையை விரிக்கிறார்கள் சர்க்கரை ஆலை முதலாளிகள். பணம் கிடைக்காத விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள்; முதலாளிகளிடமிருந்து பைசா கூட பெயரவில்லை. அரசாங்கம் விவசாயிக்குப் பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். அல்லது ஆலையை ஏலம் விட்டு, கடனை அடைக்கச் சொல்ல வேண்டும். வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன் போன்ற கடன்களை வாங்கும் சாதாரண மக்களுக்கு நடப்பது இதுதான். ஆனால் சர்க்கரை ஆலை முதலாளிகள் விசயத்தில் நடப்பது என்ன?
சென்ற ஆண்டில் முதலாளிகள் இந்திய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை அடைப்பதற்காக, முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு 7200 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் கொடுத்தது. அதை வைத்தும் விவசாயிகளின் கடனை முதலாளிகள் அடைக்கவில்லை. இந்த ஆண்டு கடன் பாக்கி ரூ 11,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது மீண்டும் மோடி அரசு முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்கிறது. ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ 4200 மானியமும் கொடுத்திருக்கிறது.
“இது போதாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் விலை குறைவாக இருப்பதால் எங்களுக்கு நட்டமேற்படுகிறது” என்று புகார் செய்தார்கள் முதலாளிகள். உடனே, இறக்குமதி சர்க்கரைக்கு 40% வரி விதித்து, உள்நாட்டில் சர்க்கரை விலையை உயர்த்தி முதலாளிகள் இலாபம் பார்க்க வழி செய்து கொடுத்தது மோடி அரசு. வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோலில் 5%-க்கு பதிலாக 10% எத்தனால் கலக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சர்க்கரை முதலாளிகள் உற்பத்தி செய்த எத்தனாலை வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு டன் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, மின்சாரம், எரிசாராயம், மொலாசஸ், எத்தனால், கரும்புச்சக்கை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டி.என்.பிரகாஷ். முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது வடிகட்டிய பொய்.
“தமிழத்தில் 2012-13-ல் பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இலாபத்தில் இயங்கியிருக்கின்றன. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மாநில அரசு அறிவித்த தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு பைசா பாக்கியின்றி பட்டுவாடா செய்துவிட்டு, 214 கோடி ரூபாய் லாபமும் காட்டியிருக்கிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ரவீந்திரன் (பசுமை விகடன்,10.8.2014) ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா?
தமிழக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கடன் பாக்கி 527 கோடி ரூபாய். இதனை 29-ம் தேதிக்குள் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார் அமைச்சர் தங்கமணி. ஆனால் அந்தக் காலக்கெடுவுக்குள் ஒரு பைசா கூட வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகளைப் பொருத்தவரை, ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய் கொடுத்தாலும், அதில் அவர்களுக்கு 15% தான் மிஞ்சும். ஆனால் டன்னுக்கு ரூ 2250-க்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லித்தான் சென்ற ஆண்டு சர்க்கரை ஆலை முதலாளிகள் கதவடைப்பு நடத்தி காங்கிரசு அரசிடமிருந்து ரூ 7200 கோடியைக் கறந்தனர். இதற்கு மேல் மாநில அரசுகள் பரிந்துரைத் தொகைகளை வழங்குகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு டன்னுக்கு 550 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பரிந்துரைத் தொகையை முதலாளிகள் தர மறுக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு 50% லாபம் கிடைப்பதை உத்திரவாதப் படுத்தவிருப்பதாக தேர்தல் வாக்குறுதியளித்தார் மோடி. அப்படியானால், கரும்புக்கான உள்ளீடு செலவைக் கணக்கிட்டு அதற்கு மேல் 50% வைத்து ஒரு டன் கரும்பின் விலை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக என்ன நடந்திருக்கிறது? முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி கொடுத்த மோடியின் உணவு அமைச்சர் பஸ்வான், “கரும்புக்கு மத்திய அரசு தீர்மானிக்கின்ற விலைக்கு மேல் (2250) மாநில அரசுகள் பரிந்துரை விலையைச் சேர்த்துக் கொடுக்கக் கூடாது” என்று தற்போது அறிவித்திருக்கிறார்.
சர்க்கரை ஆலை முதலாளிகளின் கூலிப்படைதான் இந்த அரசு என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?
அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது பிறந்த நாள் விழாக் கருத்தரங்கம் 16.08.2014 அன்று மாலை 6.00 மணிக்கு வேலூர் நகர அரங்கில் நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் அகிலன் கருத்தரங்கத்தை தலைமை ஏற்று நடத்தினார். “இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீதான தாக்குதலை மோடி அரசு தீவிரப்படுத்தியுள்ள இன்றைய சூழலில், தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய கால்டுவெல் அவர்களுக்கு இச்சமயத்தில் விழா எடுப்பது என்பது மோடி அரசின் தாக்குதலுக்கு எதிரானதொரு போராட்டத்திற்கு உரம் சேர்ப்பதாகும்” என தனது தலைமை உரையில் எடுத்துரைத்தார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் அகிலன் தலைமை உரை ஆற்றினார்.
“மொழி ஆளுமை-கால்டுவெல்லின் பங்கு” என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் தோழர் ஜோ.சம்பத்குமார் உரையாற்றினார்.
“இராபர்ட் கால்டுவெல்லைப் பற்றி இப்பொழுது பேசமாட்டார்கள். பிற்காலத்தில் இவர் அதிகம் பேசப்படுவார்” என வா.வே.சு அவர்கள் அன்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.
மெகன்சி, எல்லீசு போன்றோரின் தமிழ் மற்றும் திராவிடம் குறித்த ஆய்வுக் கருத்துக்கள் தமிழின் சிறப்புகளை நிலைநாட்ட அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கு பெரிதும் உதவின. சமஸ்கிருதமே பிற இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கல்கத்தாவிலிருந்து வில்லியம் ஜோன்ஸ் என்பவர் முன்வைத்த ஆய்வுக் கருத்துக்களை நிராகரித்து, சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதையும், தமிழ் தனித்தே இருந்ததோடு தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக இருந்தது தமிழே என்பதையும் அறிஞர் கால்டுவெல் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் நிறுவியதை தக்க ஆதாரங்களுடன் தனது உரையில் எடுத்துரைத்தார்.
”மொழி ஆளுமை-கால்டுவெல்லின் பங்கு“ என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் தோழர் ஜோ.சம்பத்குமார் உரை
“சமஸ்கிருதமும்-மொழித் தீண்டாமையும்” என்கிற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சா.குப்பன் அவர்கள் உரையாற்றினார்.
சிற்பி செய்த கற்சிலைக்கு மந்திரங்கள் ஓதி கருவறையில் அதாவது மூலஸ்தானத்தில் வைத்துவிட்டால் அது தெய்வத்தன்மையை அடைந்து விடுவதாகவும், அதன்பிறகு பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அக்கற்சிலையைத் தொட்டுவிட்டால் சாமி தீட்டாகிவிடுகிறது என்று கூறி சாமியில்கூட தீண்டாமையைத் தோற்றுவித்தார்கள்.
ஒரு முறை திருவையாறு தியாகய்யர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதற்காக மேடை தீட்டாகிவிட்டது எனக்கூறி மேடையைக் கழுவியதோடு மந்திரங்கள் ஓதி தீட்டுக் கழித்தார்கள். சமஸ்கிருதம் மற்றும் தெலுங்குக் கீா்த்தனைகளை மட்டுமே அங்கு பாடலாம். தமிழில் பாடுவதற்கு அங்கே அனுமதி கிடையாது. தமிழ் அங்கே தீண்டத்தகாத மொழி.
“சமஸ்கிருதமும்-மொழித் தீண்டாமையும்” என்கிற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சா.குப்பன்
ஒரு முறை இராமலிங்கனார் அன்றைய பெரியவாள் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழில் உரையாடிய போது, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்திலேயே பதிலளித்தாராம். சங்கராச்சாரியாருக்கு நன்றாகத் தமிழ் தெரிந்திருந்தும் உரையாடிய இடம் பூஜை அறை என்பதால் அங்கே தமிழில் பேசக்கூடாது என்பதால்தான் சமஸ்கிருதத்தில் பேசினாராம். பூஜை அறையிலும் தமிழ் தீண்டத்தகாத மொழி.
ஒரு திருமணத்தில், திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் வராததால் பார்ப்பனச் சிறுவன் ஒருவனை அனுப்பி வைத்தார்களாம். கருமாதியில் ஓதப்படும் மந்திரம் மட்டும்தான் அவனுக்குத் தெரியும் என்பதால் அந்த மந்திரங்களையே திருமணத்திலும் ஓதிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மறைமலை அடிகள், ஓதப்படுவது கருமாதி மந்திரம் என்பதை மக்களுக்குப் புரிய வைத்து திருமணத்தை நிறுத்தியதோடு பிறகு அவரே தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தாராம். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கருமாதி போன்ற நமது வீட்டு நிகழ்ச்சிகளிலும் தமிழுக்கு இடமில்லை.
வேண்டுதலுக்காக கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.
சமஸ்கிருதத்தை பிறர் மீது மேலும் திணிக்க எத்தணிக்கும் இத்தருணத்தில் அதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ் மொழியின் விடுதலையோடும் மக்களின் விடுதலையோடும் சேர்ந்த ஒன்றாகக் கருதி நமது போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.
“தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
“தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் உரை.
கால்டுவெல் அவர்களின் 200-வது நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழகத்தில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். கால்டுவெல் பற்றி கருணாநிதி அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதா கால்வெல் சிலைக்கு மாலை அணிவித்து முடித்துக் கொண்டார். திராவிட என்கிற பெயரைத் தாங்கியுள்ள கட்சிகள் அரசியல் பிழைப்புக்காக வயிறு வளர்க்கும் கட்சிகளாக சீரழிந்துவிட்டன. இந்தச் சூழலில் கால்டுவெல் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வதன் மூலம் மோடி அரசு தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளை முறியடிப்பதும், தமிழின் சிறப்பை வளர்த்தெடுப்பதும் நமது கடமை என்பதால் நாம் கால்டுவெல் அவர்களுக்கு தமிழகமெங்கும் விழா எடுக்கிறோம்.
14 ஆண்டுகால கடும் உழைப்பிற்குப் பிறகு “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை வெளியிட்டு, ‘எதிர்காலத்தில் இதனைவிட சிறந்த ஆய்வுகள் தமிழில் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என தனது விருப்பத்தையும் பதிவு செய்தார் கால்டுவெல். ஆனால் அவர் விரும்பியதைப் போன்றதொரு ஆய்வு இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.
செழுமையான, வளமையான மொழியைக் கொண்ட மக்கள் பொருளாதார – நாகரிக நிலையில் ஏன் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த போது கண்டறிந்து அதற்கான காரணங்களையும் ஆய்ந்தறிந்து நூல்களை இயற்றினார் கால்டுவெல்.
தென்னிந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதையும், அவற்றுக்கெல்லாம் தமிழே தாயாக இருப்பதையும், தென்னிந்திய மக்களிடையே உடல் அமைப்பிலும் ஒற்றுமை இருப்பதையும் கண்டறிந்து ”திராவிட இனம்” என்கிற கருத்தாக்கத்திற்கு கால்டுவெல் வந்தடைந்தார்.
பார்வையாளர்கள்
பிறப்பால் ஏற்றத் தாழ்வற்றவர்களாகவும், சாதி – தீண்டாமை பாராட்டாதவர்களாகவும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்தார்.
பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தால் உட்கிரகிக்கப்பட்ட நிலையில் தமிழ் மட்டும் தனித்து நின்று தனது தனித்தன்மைய நிலைநாட்டியதையும் கண்டறிந்தார். “தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அதற்கொரு குணமுண்டு!” என்கிற கருத்தாக்கத்துக்கு வித்திட்டது கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் என்றால் அது மிகையாகாது.
நடுவண் அரசு இந்தித் திணிப்புக்கு முற்பட்டபோதெல்லாம் தமிழகம் மட்டுமே அதற்கெதிரான போராட்டங்களை தீவிரமாக நடத்தியது. அதனால்தான் இன்றும்கூட வட இந்திய கட்சிகள், ஊடகங்கள் நம்மீது ஒருவித வெறுப்பைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத ஆர்.எஸ்.எஸ் காரர்களை இந்தியப் பாட நூல் நிறுவனத்தில் உறுப்பினர்களாக நியமித்திருப்பதும்,
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் நூல்களை குஜராத்தில் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பதும்,
சாதி அமைப்பு சரி எனப் பேசுவதும்,
சனாதன தர்மம் இருந்த போது மக்களிடையே மோதல்கள் இல்லை எனவும்
கிருஸ்தவ-இஸ்லாமியர்களின் வருகைக்குப் பிறகே மக்களிடையே மோதல்கள் உருவானதாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்வதும்,
தமிழன் – தெலுங்கன்-மலையாளி-வங்காளி என தனித்தனி தேசிய இனங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது; இந்தியாவில் இருப்பது இந்து என்கிற ஒரே இனம் மட்டும்தான் என பிற தேசிய இனங்களை மறுதலிப்பதும்,
விமானம் பற்றிய அறிவியல் இராமாயணத்தில் இருப்பதாகவும்,
காந்தாரியின் கருச்சிதைவு பிண்டங்களை பாட்டில்களில் போட்டு நூறு கௌரவர்களை உருவாக்கியது ஸ்டெம்செல் மருத்துவ அறிவியல் மகாபாரதத்திலேயே நிறுவப்பட்டது என கதை அளப்பதும்
வேறு வேறு அல்ல. இவை எல்லாம் வேத – புராண – இதிகாச புரட்டுகளுக்கு அறிவியல் சாயம் பூசி, வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சியே அன்றி வேறல்ல.
மார்க்ஸ் சுட்டிக் காட்டியதைப் போல அன்று கல்வியை மற்றவர்களுக்கு மறுத்ததன் மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பனர்கள் முயற்சித்தார்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் இந்தியாவை “மொழிகளின் தொட்டி” என்பார்கள். சமஸ்கிருதத்தை உலக மொழிகளின் தாய் என்கிறார்கள் பார்ப்பனர்கள். இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழித்தோங்கிய கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் 11-ம் நூற்றாண்டில் வரிவடிவம் பெற்ற சமஸ்கிருதம் எப்படி தாயாக இருந்திருக்க முடியும்?
தரவுகள் மூலம் உண்மையை நிறுவும் ஐரோப்பிய ஆய்வு முறை பார்ப்பனர்களுக்கு உகந்ததாக இல்லை என்பதாலும், ஆங்கிலேயர்களின் கல்வி முறை மனுதர்மக் கல்வி முறைக்கு எதிரானதாக இருப்பதாலும் இவைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள் பார்ப்பனர்கள்.
அதனால்தான் வேத-இதிகாசங்களில் உள்ள புரட்டுகளைப் பற்றி எழுதினால் அதற்குத் தடை விதிக்கிறார்கள். இன்று சமஸ்கிருதம் மந்திரங்களில் மட்டுமே ஓதப்படும் வெறும் ஓசை மொழியாக சுருங்கிப் போயுள்ளது. சனாதனக் கருத்துக்களை மக்களிடையே நிலைபெறச் செய்யவும் நடைமுறைக்குக் கொண்டு வரவும் அவர்கள் நம்மீது சமஸ்கிருதத்தை திணிக்க முற்படுகிறார்கள்.
நமக்கு இன்று தேவை மொழிப் பெருமிதம்; தாய்மொழிப் பெருமிதம்; தமிழ் மொழிப் பெருமிதம். தாய் மொழியே சுயமரியாதைக்கு அடிப்படை. தாய் மொழி அழிக்கப்பட்டால் சுயமரியாதையும் சேர்ந்தே அழியும். எனவே, தமிழ்ப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் ஒன்று படுவோம்! ஓரணியில் திரள்வோம்! ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம். அதற்காக கால்டுவெல் அவர்களின் 200 வது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் உறுதி ஏற்போம்!.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராஜன் நன்றி கூறினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராஜன் நன்றியுரை
கருத்தரங்கத்தையொட்டி பேருந்துகளிலும் நகரின் பல பகுதிகளிலும் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரியான தருணத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டதாக கருத்தரங்கில் பங்கேற்றோர் பாராட்டினர்.
சுவரொட்டிகள், முழக்கங்கள்
முழக்கம்
முழக்கம்
பதாகை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்
2. தஞ்சையில் ஆகஸ்ட் 3, 2014 ஞாயிற்றுக் கிழமை நடந்த கருத்தரங்கம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை
3. ஆகஸ்ட் 17, 2014 அன்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்
‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய் – அதுவே உயர்ந்த மொழி – தெய்வ மொழி’ என்று நிலை நாட்டப் பட்ட பார்ப்பனியக் கருத்தியலை தகர்த்து, தமிழே தென்னக மொழிகளின் தாய், அழகும் வளமும் நிறைந்து தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி தமிழ் என்பதைத் தக்க வரலாற்று சான்றுகளுடன் ஆணித்தரமாய் நிலை நாட்டிய அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கம் 17.08.2014 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு சூலூர் (கலங்கல் பாதை), அரிமா சங்கத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை : தோழர் சம்புகன், ம.க.இ.க
தலைமை தோழர் ந. மணிவண்ணன், செயலர், ம.க.இ.க
உரை : வேலாயுதம், சித்த மருத்துவ சங்கத் தலைவர், பொள்ளாச்சி
உரை : தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், ம.க.இ.க
சிறப்புரை : புலவர் ஆதி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
யாருக்கு-எதற்கு-ஏன் சுதந்திரம் என்பதறியாமல், 68-வது சுதந்திர தினத்தை அப்பாவித்தனமாக கொண்டாடும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் மோடி முதல் லேடி வரை ஊடகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை வலுக்கட்டாயமாக கொண்டாடச் சொன்ன இந்த சுதந்திரம் உண்மையில் எப்படி இருக்கிறது?
ஹுண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்துக் கொடுக்கும் ஜி.எஸ்.ஹெச் (GSH) என்கிற பன்னாட்டு நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகிறது. பிற பன்னாட்டு கம்பெனிகளைப் போலவே ஜி.எஸ்.ஹெச் -ம் தொழிலாளர் நல சட்டங்களை மயிரளவு கூட மதிப்பதில்லை. அதற்காகத்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஜி.எஸ்.ஹெச் ஒரு கொரிய நிறுவனம். இங்கே பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள். இந்த 300 நிரந்தரத் தொழிலாளிகள் செய்யும் வேலை ஒன்றென்றாலும் 100 பேரை தனியாகவும், 200 பேரை தனியாகவும் நிர்வாகம் பிரித்து வைத்திருக்கிறது. இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களில் 100 பேர் வெவ்வேறு நிறுவனங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகு இங்கே வேலைக்கு வந்தவர்கள், இயந்திரங்களை இயக்கும் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள். ஆனால் அவர்களை தொழிலாளர்களாக வரையறுக்காமல் தொழிலாளிகளுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது.
மற்றொரு பிரிவினரான 200 பேரை தொழிலாளர்கள் என்று கூறி அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்குகிறது. இந்த 200 பேரில் யாருக்கும் தொழில்நுட்ப அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது. ஆனால் இவர்கள் அவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறுகின்றனர், வேலை செய்கின்ற நேரமும் குறைவு. இந்த 200 பேரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் இவர்கள் தொழிலாளிகள் என்கிற பெயரில் நிர்வாகத்தின் அடியாட்களாக ஆலைக்குள் இருக்கின்றனர்.
இந்நிலையில் 100 பேராக உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் வர்க்க ஒற்றுமையுடன் 2013-ம் ஆண்டு மே மாதத்தில் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யில் தம்மை இணைத்துக் கொண்டு ஆலையில் சங்கத்தை துவங்கினர். சங்கம் துவங்கிய நாள் முதல் நிர்வாகம் பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தது. 2013 ஜூலையில் தொழிலாளர் உதவி ஆணையரிடம் நிர்வாகத்தின் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே 43 தொழிலாளிகளை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. தொழிலாளர்களை இவ்வாறு நீக்குவது சட்டவிரோதமானது. தொழிற்தகராறு சட்டம் 1947, பிரிவு 33-ன் படி ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட தொழிலாளிகள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, மாறாக அவர்களின் வேலைக்கு உத்திரவாதமளிக்க வேண்டும்.
ஆனால் ஜி.எஸ்.ஹெச் எந்த சட்டத்தையும் மதிக்காமல் தொழிலாளர்களை வீதியில் விட்டெறிந்தது. நீக்கப்பட்ட 43 தொழிலாளிகளும் 10 பேர், 12 பேர் என்று நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு படிப்படியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். முதல் பிரிவு தொழிலாளிகள் வெளியேற்றப்பட்டதும் பு.ஜ.தொ.மு சார்பாக தொழிலாளர் உதவி ஆணையரிடம் இது சட்டவிரோதம் என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான்கு முறையும் “அப்படியா சரி, ஒரு புகார் கொடுங்க” என்று புகாரை வாங்கி வைத்துக் கொண்ட தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீதமுள்ளவர்களை நீக்குவதற்குள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. “நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையிலிருக்கும் போதே நிர்வாகம் சட்டவிரோதமான முறையில் 43 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது, இது சட்டவிரோதமானது. இது தொடர்பாக தொழிலாளர் ஆணையத்திடம் பல முறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வழக்கு முடியும் வரை பிற தொழிலாளர்களை நிர்வாகம் வேலையிலிருந்து நீக்குவதோ வேறு எந்த நடவடிக்கையுமோ எடுக்கக்கூடாது” என்று நிர்வாகத்திற்கு எதிராக தடையாணை பெறப்பட்டது.
இதற்கிடையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர் விரோதப் போக்காகும் என்று திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்வாகத்தின் மீது குற்றவியல் சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கலாம். கடந்த 2013 ஜூலையில் போடப்பட்ட இவ்வழக்கு 2014 ஜூலையில் முடிந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த உத்தரவும் போடவில்லை. ஏன் என்று கேட்டபோது சில டெக்னிக்கல் வேலைகள் இருக்கின்றன அவை முடிந்ததும் ஆர்டர் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
ஒரு புறம் சட்டவிரோத வேலை நீக்கத்திற்கு எதிரான வழக்கு, மறுபுறம் உரிமைகளுக்கான வழக்கு, தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிரான வழக்கு என்று நிர்வாகத்தின் மீது மொத்தம் மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஒரு வழக்கில் கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மீண்டும் வேலை நீக்க நடவடிக்கையில் இறங்கியது. 43 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான தடையாணை அமுலில் இருக்கும் போதே 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பிற்கு நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுப்பட்டது. “இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19-ன் படி எங்களுக்கு சங்கம் அமைப்பதற்கு உரிமை இருக்கிறது, ஆனால் நிர்வாகம் அந்த அடிப்படை உரிமையை மறுத்து சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது. எனவே ஒரு குடிமகன் என்கிற வகையில் எங்களுடைய அடிப்படை உரிமைகளை மாவட்ட ஆட்சியராகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்” என்று மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மீண்டும் ஜூலையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது, அதற்கும் பதில் இல்லை.
தொழிலாளர் ஆணையர், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என அதிகார மற்றும் நீதித்துறை அனைத்தும் கொரிய முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து அரசு அதிகார அமைப்புகளும் ஜி.எஸ்.ஹெச் என்கிற பன்னாட்டு கம்பெனிக்கு விசுவாசமான நாய்களாக நடந்துகொண்டன. இறுதியில் 2014 ஜூலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியரை பார்த்து, “நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக குடும்பத்துடன் உண்ணவிரதம் இருப்போம்” என்று தொழிலாளர்கள் கூறினர். அவரோ, ”அது உங்க உரிமை, உங்க சுதந்திரம், நீங்க இருந்துக்கங்க” என்றார்.
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 அன்று காலை, மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும் நேரத்தில் “இந்திய குடிமகனின் உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்கிறது இதில் கொடியேற்றம் ஒரு கேடா” என்று போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்காக தொழிலாளர்கள் வெவ்வேறு வாகனங்களில் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஆனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்த 500 க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வந்து கொண்டிருந்த சிவப்பு சட்டை அணிந்திருந்த அனைவரையும் தடுத்து நிறுத்தி எங்க போற என்று விசாரித்து ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்களை மட்டும் கைது செய்தது.
கைது செய்ய காரணம் வேண்டும் அல்லவா? எனவே தமது வாகனங்களை தாமே அடித்து உடைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரனை விட்டு மற்றொரு போலீஸ்காரனை அடித்து காயமடைந்தது போல செட்டப் செய்துவிட்டு தொழிலாளர்கள் தான் தாக்கினர் என்று கூறி தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, கைது செய்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவே போலீசு ரவுடிகள் மிகப்பெரியதொரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சாலைகளில் தடுப்பரண்களை போட்டு தொழிலாளர்களை சுற்றி வளைத்து தாக்கி கை கால்களை உடைத்திருக்கின்றனர். கைது செய்தவர்களை வாகனத்தில் ஏற்றும் போது முழக்கமிட்ட பல தொழிலாளர்களை குத்தியதில் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. வண்டியில் ஏற்றிய பிறகு வயிற்றில் குத்தி கீழே தள்ளி பூட்ஸ் கால்களால் மிதித்திருக்கிறார்கள். உடம்பில் அடிபடாத இடம் எதுவும் இல்லை என்கிற அளவுக்கு தொழிலாளர்களை அடித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் ஆகஸ்ட் 15 அன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கூடி தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளை கேட்டதற்காக கிடைத்த சுதந்திர தின பரிசு. போலீசின் அனைத்து ரவுடித்தனங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொண்டு தான் நின்றிருக்கிறார்.
தற்போது 150 தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ஓய்வு பெற்ற ASP, DSP உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றிருக்கின்றனர். பதவியில் இருக்கின்ற போலீசாரே பொறாமைப்படும் அளவுக்கு இந்த கிழட்டு நரிகள் பன்னாட்டு கம்பெனியின் நலனுக்காக பேயாட்டம் போட்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியரின் முன் உரிமைக்காக போராடிய தொழிலாளிகளை ஒடுக்குவதே சட்டத்தின் ஆட்சி என்பதை நிரூபிக்கிறார்களாம். சுதந்திர தினத்தன்று தொழிலாளிகளின் போராட்டம் கருப்பு மையாக மாறிவிடக் கூடாது என அவர்களின் ரத்தத்தை சிந்த வைத்து சிவப்பாக்கி குதூகலித்திருக்கின்றனர்.
தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கிரிமினல்களை போல கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை. கடந்த வாரத்தில் இதே போல புதுச்சேரி மாநிலத்தில் போராடிய தொழிலாளார்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாருதி தொழிலாளர்களுக்கும் இது தான் நேர்ந்தது. இது தான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் போலியானது, பொய்யானது என்பதற்கு இவற்றை விட என்ன நிரூபணம் வேண்டும்?
இந்த சட்டங்களும், நீதிமன்றமும், சமூக அமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கு எதிரானவை என்பதற்கு இந்த போராட்டம் மட்டுமல்ல நாட்டில் நாள்தோறும் நடக்கும் பல்வேறு போராட்டங்களும் சான்றாக அமைகின்றன.
ஆகஸ்டு 15 சுதந்திரம் மக்களுக்கில்லை என்பதை சுதந்திர தினக் கொடியேற்றத்தின் போதே நிரூபித்திருக்கிறது இந்த அரச வன்முறை. இந்த தொழிலாளிகளுக்கு நேர்ந்ததுதான் தமக்கும் என்று உழைக்கும் மக்கள் உணரும் போது இந்த வன்முறை நேரெதிராக திரும்பும். உரிமைகளையும், உடமைகளையும் இழந்து வாழும் மக்களை எப்போதும் அடிமைகளாகவே நடத்தலாம் என்று ஆளும் வர்க்கம் நினைப்பது ஒரு போதும் தொடராது. சிந்திய ரத்தமும், சிறை வாசமும் அதே தொழிலாளிகளை இரும்பென உறுதிப்படுத்தும்.
அந்த உறுதி உழைக்கும் மக்களையும் பற்றும் போது ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவோ இல்லை ஆண்டவனோ கூட நினைத்தாலும் உடைக்க முடியாது. அடக்குமுறையை தொடர முடியாது.
பன்னாட்டு நிறுவனம் GSH ஏவி வருகின்ற உரிமை பறிப்பு அடக்கு முறைகளை முறியடிப்போம் !
(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்)
– வினவு செய்தியாளர்.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்.
“முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியும் என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. முஸ்லிம்கள் இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர்கள் இந்துக்களை எதிர்த்துக் கொண்டே எத்தனை நாள் வாழ்ந்து விட முடியும்?
இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பார்ப்பனக் கோமாளி சுதர்சன் ராவ்.
அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலும் மசூதியை அவர்கள் விட்டுக் கொடுத்துவிட வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தற்போது மத்தியில் நடந்திருப்பதைப் போல மாநிலம் தோறும் இந்துக்களின் ஒருங்கிணைவை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மோடி ஒரு முன்மாதிரியான ஆர்.எஸ்.எஸ். ஊழியர். முந்தைய (வாஜ்பாயி தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் போல அல்லாமல், இந்த முறை இந்துத்துவ திட்டங்களை மோடி நிறைவேற்றிக் காட்டுவார். எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதனைச் சட்டப்படியே செய்து முடிப்போம்”
“இந்துஸ்தான் டைம்ஸ்” நாளேட்டிற்கு (ஜூலை, 14) விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் அளித்திருக்கும் பேட்டியின் சுருக்கம் இது.
இந்த அப்பட்டமான மதவெறிப் பேச்சுக்காக சிங்கால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை. “சிங்காலின் இந்தப் பேச்சுக்கு எதிராக எந்தவித கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, கோபத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், ஒரு தேசம் என்ற முறையில் பெரும்பான்மை சமூகத்தின் மதவெறியை ஒப்புக் கொள்வதற்கு நாம் பழகிவிட்டோம்” என்று குமுறியிருக்கிறார் தீஸ்தா சேதல்வாத்.
முந்தைய வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் (1999-2004) இத்தகைய அறிக்கைகள் வெளிந்தால், உடனே “ஆர்.எஸ்.எஸ். -இன் இரகசியத் திட்டம் அம்பலம்” என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போடுவார்கள். உடனே வாஜ்பாயி அதனை மறுத்து, “நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தை மீற மாட்டோம்” என்று பெயருக்கு ஒரு வாக்குறுதி அளிப்பார். இன்று குறைந்த பட்ச திட்டமும் இல்லை, கூச்சலும் இல்லை.
இந்து ராஷ்டிரத்தைச் சட்டப்படியே நிறுவ முடியும் என்று கூறுகிறார் சிங்கால். இந்து பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலமே முறியடித்து விட முடியும் என்று நம்புகிறவர்களும், நம்பச் சொல்கிறவர்களும்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
***
வளர்ச்சி என்ற சொல் அயோத்தி என்று காதில் ஒலிப்பது போலவும், முன்னேற்றம் என்ற சொல் இந்து ராஷ்டிரம் என்று பொருள் தருவதைப் போலவும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்குள் இந்து மதவெறியை பொதித்து வைத்துத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய மோடி, முதல் நாடாளுமன்ற உரையிலேயே தனது முகமூடியை விலக்கிக் காட்டிவிட்டார். 200 ஆண்டு கால பிரிட்டிஷ் காலனியாதிக்க அடிமைத்தனம் என்று நினைவு கூர்கின்ற மரபை மாற்றி, 1200 ஆண்டு கால அடிமை மனோபாவம் என்று பேசினார். முகலாய ஆட்சிக் காலத்தையும் அந்நிய ஆதிக்கமாகச் சித்தரிக்கும் அந்த மதவெறிப் பேச்சை மறுத்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவில்லை.
பென்குயின் நிறுவனத்தால் அச்சிடப்பட்டு பின் அழிக்கப்பட்ட “இந்து மதம் – ஒரு மாறு வரலாறு” என்ற நூலின் முகப்பு அட்டை. (வலது) அந்நூலின் ஆசிரியர் வென்டி டோனிகர்.
மோடியின் பட்ஜெட்டிலோ, ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைக்கேற்ற திட்டங்கள் நிறைந்திருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சி மற்றும் தீர்த்த யாத்திரை ஊக்குவிப்புக்கான தேசிய முயற்சி, பாரம்பரிய நகரங்கள் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், கங்கைக்கு நமஸ்காரம், விவேகானந்தர் பிரச்சார ரயில், காஷ்மீர் பார்ப்பனர்கள் மறுவாழ்வுத் திட்டம் போன்ற நேரடியான பார்ப்பன இந்துமதவாத திட்டங்களை எதிர்க்கட்சிகள் சாடவில்லை.
இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக பார்ப்பன வெறி பிடித்த சுதர்சன் ராவ் என்ற கோமாளியை நியமித்திருக்கிறது மோடி அரசு. “சாதியமைப்பு என்பது நமது சிறந்த பாரம்பரியம், அந்தக் கலாச்சார பாரம்பரியத்தை மீட்கவேண்டும்”; “ராமாயணமும் மகாபாரதமும் புனைவுகள் அல்ல, வரலாற்று உண்மை”; “இரான், இராக், ஆப்கானிஸ்தான் தொடங்கி தென்கிழக்காசியா வரையில் அகண்ட பாரதம் பரவியிருந்த காரணத்தினால், அங்கெல்லாம் நமது தொல்லியல் ஆய்வை விரிவுபடுத்த வேண்டும்” – என்பனவெல்லாம் சுதர்சன் ராவ் தெரிவிக்கும் கருத்துகள்.
குஜராத் மாநில அரசு இந்துத்துவ அறிவுத்துறை அடியாட்படையின் தலைவரான தீனாநாத் பாத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் எழுதிய 9 நூல்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது. அகண்ட பாரதம், ஆன்மீக பாரதம், ஒளிமயமான பாரதம், விஞ்ஞான பாரதம் என்ற பெயர்களிலான அந்த நூல்களில் காணப்படும் “அரிய” கருத்துகள் கீழ் வருவன:
“இன்று ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் மகாபாரத காலத்திலேயே நமக்கு அது தெரியும். காந்தாரிக்கு கருச்சிதைவு ஏற்பட்டவுடன், வெளியேறிய சிதைந்த தசைப்பிண்டத்தை நூறு நெய்க்கிண்ணங்களில் போட்டு இரண்டாண்டுகள் பாதுகாத்த பின் அதிலிருந்து கவுரவர்கள் பிறந்தார்கள் என்று பாரதம் சொல்கிறது”;
“தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் என்கிறார்கள். மகாபாரத காலத்திலேயே யோக வலிமையால் திவ்ய திருஷ்டி மூலம் எங்கோ நடப்பதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் முனிவர்கள்”;
“அதேபோல, வேத காலத்திலேயே கார் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் ரிக் வேதத்தில் உள்ளது”; “நம்முடைய பாரதபூமியை இந்தியா என்ற சூத்திர (இழிந்த) பெயரால் அழைத்து நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளக் கூடாது”; “நமது மதத்துக்காக உயிர் கொடுப்பது கவுரவம்; அந்நிய மதங்கள்தான் துயரங்களின் தோற்றுவாய்.”
– இவையெல்லாம் மேற்படி நூல்களில் காணப்படும் கருத்துகள். இந்த நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்ததற்காக மோடி எழுதியுள்ள பாராட்டுக் கடிதமும் அந்த நூல்களிலேயே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
தீனாநாத் பத்ரா, வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர். பத்ரா போட்ட வழக்கைத் தொடர்ந்து பென்குயின் வெளியீட்டு நிறுவனம் வென்டி டோனிகர் எழுதிய “இந்துமதம் – ஒரு மாற்று வரலாறு” என்ற நூலின் அச்சிட்ட பிரதிகள் அனைத்தையும் சென்ற பிப்ரவரி மாதம் அழித்தது. அடுத்து பிளாக் ஸ்வான் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்ட “மதவெறியும் பாலியல் வன்முறையும், அகமதாபாத் கலவரங்கள் பற்றிய ஆய்வு-1969 முதல்” என்ற நூலும் “நவீன இந்தியாவின் வரலாறு, பிளாசி முதல் பிரிவினை வரை” என்ற நூலும் சென்ற ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு செல்லாமல் முடக்கப்பட்டன. இவையெல்லாம் அசோக் சிங்கால் சொல்வது போல அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே இந்துத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகள்.
***
சட்டிஸ்கர் மாநிலத்தில் மக்கட்தொகையில் 1 சதவீதம் கூட இல்லாத கிறித்தவர்கள் இந்து மதத்துக்குத் திரும்புமாறு மிரட்டப்படுகிறார்கள். இந்து கோயிலுக்கு நன்கொடை தர மறுத்ததற்காக கிறித்தவர்களுக்கு ரேசன் மறுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிப் புகார் செய்தவுடனே அம்மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லி மகாராட்டிரா பவனில் ரமலான் நோன்பிலிருந்த ஒரு இசுலாமிய ஊழியரின் வாயில் திமிர்த்தனமாக சப்பாத்தியைத் திணிக்கிறார் சிவசேனா எம்.பி. விச்சாரே. இந்த ரவுடித்தனம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட போதிலும் அந்த ஊழியர் புகார் கொடுக்கவில்லை. போலீசும் வழக்கு பதிவு செய்யவில்லை. முசாபர்நகர் கலவரத்தை அம்பலப்படுத்தும் “ஏக் தினோ முசாபர்நகர்” என்ற ஆவணப்படத்துக்குத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்திருக்கிறது. கல்கத்தாவில் திரையிடுவதற்குக்கூட மம்தா அரசு அனுமதி மறுக்கிறது.
எதுவும் இலைமறை காயாக இல்லை. ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே பாரதிய ஜனதாவை இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். -ன் சிந்தனைக் குழாமான விவேகானந்தா இன்டர்நேசனல் பவுண்டேசனில் நிரம்பியிருக்கும் ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தினர்தாம் இப்போது மோடி அரசின் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். முன்னாள் உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநரும் விவேகானந்தா பவுண்டேசனின் நிறுவன இயக்குநருமான அஜித் டோவல்தான் தற்போது மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். அவசரச் சட்டத்தின் மூலம் மோடியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் நிருபேந்திர மிஸ்ரா, பவுண்டேசனின் செயற்குழு உறுப்பினர். கேந்திரமான துறைகள் அனைத்திலும் நியமிக்கப்படவிருக்கும் இந்த சிந்தனைக் குழாமின் பட்டியலை தெகல்கா இதழ் வெளியிட்டிருக்கிறது. ராம் நாயக், கேசரி நாத் திரிபாதி போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் களே கவர்னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
உளவுத்துறை மூலம் ஊடகங்களில் கிசுகிசு செய்தி பரப்பப்பட்டு, வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியத்தின் நீதிபதி நியமனத்தை தடுக்கிறது மோடி அரசு. அதேநேரத்தில், குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் கொலைக் குற்றவாளிகளுக்கும் மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான முகுல் ரோதகி உள்ளிட்டோர் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
மோடிக்கு அடியாளாகவும் “மாமா”வாகவும் வேலை பார்த்ததற்காக அமித் ஷாவிற்குக் கிடைத்த சன்மானம் பா.ஜ.க.-வின் தேசியத் தலைவர் பதவி.
இஷ்ரத் ஜகான் கொலை வழக்கின் குற்றவாளியும், மோடிக்காக பெண்ணை வேவு பார்த்து, அது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிநாடாக்களை வெளியிட்டவருமான ஐ.பி.எஸ். அதிகாரி சிங்கால் குஜராத்தில் மீண்டும் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சோரபுதீன் ஷேக் கொலை வழக்கின் குற்றவாளியான தினேஷ் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை ராஜஸ்தான் அரசு மீண்டும் பணி நியமனம் செய்திருக்கிறது. முசாபர்பூர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சஞ்சீவ் பலியானும், ராஜஸ்தானில் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிகால் சந்தும் மத்திய அமைச்சர்களாக நீடிக்கிறார்கள். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு, மோடிக்காக போலி மோதல் கொலைகள் முதல் பெண்ணை வேவு பார்ப்பது வரையிலான எல்லா குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட அமித் ஷாவை பாரதிய ஜனதாவின் தலைவராக நியமித்திருக்கிறார் மோடி.
மோடி அரசின் எல்லாவிதமான பாசிச கிரிமினல் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்ப்பின்றியும் அரங்கேறுகின்றன. “எங்களை ஆர்.எஸ்.எஸ். எதற்காக இயக்கவேண்டும்? எங்கள் உடம்பில் ஓடுவதே ஆர்.எஸ்.எஸ். ரத்தம்தான்” என்று திமிராகப் பேட்டி கொடுக்கிறார் உமா பாரதி. அது வெறும் திமிர்ப்பேச்சல்ல. இந்தித் திணிப்பு முதல் சமஸ்கிருத வார வரையிலான அனைத்து இந்துத்துவ திட்டங்களும் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.
ஆட்சிக்கு வந்த கணத்திலிருந்தே ஒரு இனப்படுகொலையின் கோரத் தாண்டவத்துக்கு இணையான வேகத்துடனும் வெறியுடனும் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் தீவிரமாக முடுக்கி விடப்படுகின்றன. சம்பிரதாயக் கூச்சல்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளிடமிருந்து இவற்றுக்கு வேறெந்த எதிர்வினையும் இல்லை.
“மசூதிகளை ஒப்படைத்து விடுங்கள்” என்று முஸ்லிம் மக்களுக்கு சிங்கால் விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கைக்கும், “காடுகள், நிலங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று பழங்குடி மக்களுக்கு பிரகாஷ் ஜவடேகர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கைக்கும் பாரிய வேறுபாடு இல்லை. மோடி அரசு இந்து ராஷ்டிரத்தை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நிறுவ விரும்புவதைப் போலவே, மறுகாலனியாக்கத்தையும் சட்டபூர்வமாகவே நிறைவேற்ற விரும்புவதால், சுற்றுச் சூழல் சட்டம் முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் வரையிலான அனைத்தும் திருத்தப்படக் காத்திருக்கின்றன.
***
இவற்றையெல்லாம் முறியடிப்பது எப்படி? முறியடிக்கப் போகிறவர்கள் யார்? “ஐந்தாண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்” என்பதுதான் எல்லா ஓட்டுக்கட்சிகளிடமும் உள்ள தீர்வு. அது அவர்களுக்கான தீர்வு. மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தீர்வு அல்ல.
“மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் காங்கிரசின் கொள்கைகள்தான், குஜராத் மாடலே எங்களுடைய மாடல்தான்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ப.சிதம்பரம். உண்மைதான். நிதிஷ் குமாரில் தொடங்கி கருணாநிதி வரையில் எல்லோருடைய கொள்கையும் மன்மோகன் சிங்கின் கொள்கைதான். இதில் யாருக்கும் வேறுபாடு கிடையாது. திணிக்கும் வேகத்தில்தான் வேறுபாடு.
இந்து மதவெறி நடவடிக்கைகளைப் பொருத்தவரை, பாரதிய ஜனதாவின் எதிர்த்தரப்பாக காங்கிரசு தன்னைச் சித்தரித்துக் கொண்டாலும், அது ஒரு மிதவாத மதவாதக் கட்சி. இதுவரையிலான இந்து மதவெறிக் குற்றங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் தண்டிக்கப்படாமல் பாதுகாத்து வருவதும், பல குற்றங்களுக்கு உடந்தையாகவும் கள்ளக் கூட்டாளியாகவும் இருந்து வருவது காங்கிரசு கட்சிதான். மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகளோ பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள். எல்லா கட்சிகளின் தலைமைகளிலும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் ஆதாயமடைந்த புதிய தரகு முதலாளிகளும் பணக்காரர்களும்தான் நிறைந்திருக்கிறார்கள். இக்கட்சிகளைப் பொருத்தவரை, இந்துத்துவ எதிர்ப்பு என்பது ஓட் டுப் பொறுக்குவதற்கான வாய்ச்சவடால் என்ற அளவுக்கு மேல் பொருளற்றது.
அதேபோல, புதிய பொருளாதாரக் கொள்கையால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்க்கமோ, புது வகைப் பார்ப்பனர்களாக, சாதித் திமிர் கொண்ட வர்க்கமாக உலா வருகிறது. சாதித்திமிரும் இந்துத்துவத் திமிரும் வேறல்ல. பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, தாய்மொழிப்பற்று என்பனவெல்லாம் இந்த வர்க்கங்களுக்குத் தேவையற்றவையாகிவிட்டன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இம்மேட்டுக்குடி வர்க்கம் பார்ப்பன மேட்டுக்குடியுடன் சேர்ந்து வல்லரசுக் கனவு காண்கிறது. இந்த வல்லரசுக் கனவும் சுதர்சன ராவின் அகண்டபாரதக் கனவும் வேறல்ல. இவர்களெல்லாம் இத்தகைய கட்சிகளின் சமூக அடித்தளமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை ஊர் ஊராக மோடியை அறிமுகப்படுத்தி, பா.ஜ.க.வுக்கு தளம் அமைத்துக் கொடுத்த வைகோ, ராமதாசு, விஜயகாந்த், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் முதலானவர்கள், “மோடி அரசு இந்துத்துவத்தை அமல்படுத்தாது” என்றும், “நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் என்றும், ராஜபக்சேவை அடக்கி வைக்கும்” என்றும் சான்றிதழ் கொடுத்தார்கள். தமது பதவிக்காகவும், பிழைப்புவாத ஆதாயங்களுக்காகவும் தெரிந்தே புளுகிவிட்டு, இன்று ஈழப்பிரச்சினை முதல் சமஸ்கிருத திணிப்பு வரையிலான அனைத்துக்கும் மோசடித்தனமாக ஒரு எதிர்ப்பு அறிக்கை விடுகிறார்கள்.
இது நாற்காலிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து திராவிட இயக்க மரபையும், பெரியாரையும் அகற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ற்கு இவர்கள் காலாட்படைகள். சாதி உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம்தான், தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்புணர்வு முதல் தமிழுணர்வு வரையிலான அனைத்தையும் ஒழிப்பது சாத்தியம் என்று திட்டமிட்டுத்தான் பாரதிய ஜனதாக் கட்சி இவர்களைக் களத்தில் இறக்கியிருக்கிறது. இனி இந்த வீடணர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பா.ஜ.க. பரவும். இதுநாள் வரை தமிழகம் இந்து வெறியர்கள் காலூன்ற இடம் கொடுக்காமல் அவர்களுக்குச் சவாலாக இருந்து வந்தது. இன்று மதச்சார்பற்றவர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் சவாலாக மாறியிருக்கிறது.
இன்று பார்ப்பன பாசிசம் அதிகாரத்துக்கு வந்திருக்கும் சூழல் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே புதிய தாராளவாதக் கொள்கைகள், மக்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட பல ஜனநாயக உரிமைகளைச் சட்டபூர்வமாகவே அரித்துத் தின்று விட்டன. அதனை நிறைவு செய்வதற்கு பார்ப்பன பாசிசம் வந்திருக்கிறது. இதனைத் தேர்தல் அரசியலுக்கு உட்பட்டு முறியடிக்க முயற்சிப்பது மட்டும்தான் நடக்கிற காரியம் என்றே பலரும் எண்ணுகிறார்கள்.
அது நடக்காத காரியம் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார் தீஸ்தா. கல்லிலே நார் உரிப்பது போல இந்த நீதிமன்றத்தின் வழியாகவே குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள் பலரைச் சிறைக்கு அனுப்பியிருக்கும் தீஸ்தா, “ஒரு தேசம் என்ற முறையில் இந்துமதவெறியை ஒப்புக்கொள்வதற்கு நாம் பழகிவிட்டோம்” என்று கூறியிருப்பது வெறும் குமுறல் மட்டுமல்ல. அது கசப்பானதொரு உண்மை.
உயிரின் ஆதாரமான தண்ணீரை, காசுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கடைச்சரக்கு என்று மக்களை ஒப்புக்கொள்ள வைப்பதில் தனியார் மயம் எங்ஙனம் வெற்றி கண்டு விட்டதோ, அதே போல, முன்னர் மதவெறியாக கருதி வெறுக்கப்பட்ட நடவடிக்கைகளை இயல்பாக எடுத்துக்கொள்ளுமாறு பெரும்பான்மை மக்களைப் பழக்குவதிலும் இந்து பாசிசம் வெற்றி கண்டிருக்கிறது. அதனால்தான் பாபர் மசூதியை இடித்த டிசம்பர் 6-ம் நாளன்று, குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமிராக உலா வர, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குற்றவாளிகளைப் போல அஞ்சி ஒடுங்கவேண்டியிருக்கிறது.
“யாருக்கான வளர்ச்சி, யார் இந்து?” என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குத் தீர்வு கூற முடிந்தவர்கள் மட்டும்தான் பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியும். இக்கேள்விகளை எழுப்பும் நேர்மையும் துணிவும் கொண்டவர்களும், அவற்றுக்கான விடை இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்ற உண்மையைக் கூறத் தயங்காதவர்களும் கம்யூனிச புரட்சியாளர்கள் மட்டுமே. வேறு யாரும் இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்க விழையும் ஜனநாயக சக்திகள் இந்த உண்மையை அங்கீகரிப்பதும் புரட்சிகர சக்திகளுடன் கைகோர்ப்பதும் அவசியம்.
போப் வருகையையொட்டி ஆர்.எஸ்.எஸ். கிளப்பிய கிறித்தவ எதிர்ப்பு வெறியை குறித்து சென்ற இதழில் எழுதினோம். ஆனால் இந்து மதவெறி பாசிஸ்டுகளால் எதிர்க்கப்படும் போப்புகளும் ஹிட்லரின் அபிமானிகளாகவே இருந்தனர் என்பதை அடுத்த இதழில் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தோம். இதோ… இட்லரின் போப்!
“போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன.”
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முதல் வரியே கீழ்க்கண்டவாறுதான் துவங்குகிறது:
“ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன”
மார்க்சும் எங்கெல்சும் அன்றைய போப் ஒன்பதாம் பயஸ் கடைப்பிடித்த வெறிகொண்ட சோசலிச எதிர்ப்பை அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த போப்பாண்டவர்கள் அனைவருமே தமது நடத்தையின் மூலம் அறிக்கையின் முதல் வாக்கியத்தை தீர்க்கதரிசனமிக்க பிரகடனமாக்கிவிட்டனர்.
சென்ற மாதம் இந்தியாவிற்கு வந்த தற்போதைய போப் இரண்டாவது ஜான் பால், மறைந்த போப் 12-வது பயஸ் என்பவருக்கு புனிதர் பட்டம் வழங்கத் திட்டமிட்டிருந்தார். அது போலவே தெரசாவுக்கும் புனிதர் பட்டம் வழங்க வாடிகன் திட்டமிட்டுள்ளதை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.
ஏசுவின் நேரடியான சீடர்கள் அனைவரும் புனிதர்களாகக் (Saints) கருதப்படுகின்றனர். புனிதர் என்று அழைக்கப்படுவோர் “இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள்” என்ற தகுதியை உடையவர்கள். எல்லா போப்பாண்டவர்களும் கூட புனிதர்களாக அறிவிக்கப்பட்டு விடுவதில்லை. ஒருவரைப் புனிதர் என அறிவிக்க அவரது “தியாகம், சேவை, துறவு மனப்பான்மை, அற்புதங்களை நிகழ்த்தியிருத்தல்” போன்ற பல “கடுமையான” அளவுகோல்களை வாடிகன் வைத்திருக்கிறது.
கத்தோலிக்கத் திருச்சபை வழங்கும் பட்டங்களிலேயே அதியுன்னதமான இந்தப் பட்டத்தை ‘போப் 12-வது பயஸ்’க்கு வழங்குவது என்று தற்போதைய போப் முடிவு செய்திருக்கும் நிலையில் ஐரோப்பாவில் வெளிவந்துள்ள ஒரு நூல் கத்தோலிக்கத் திருச்சபையின் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது.
ஜான் கார்ன்வெல் – நாத்திகரோ, கம்யூனிஸ்டோ அல்ல. விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்
“ஹிட்லரின் போப் – 12-வது பயஸின் அந்தரங்க வரலாறு” எனும் நூலை ஜான் கார்ன்வெல் என்பவர் எழுதியுள்ளார். இவர் நாத்திகரோ, கம்யூனிஸ்டோ அல்ல. விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்.
போப்பையோ, வாடிகனையோ அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இவருக்கு ஆரம்பத்தில் எள்ளளவும் இல்லை. போப் – 12-வது பயஸின் வாழ்க்கை வரலாறு எழுதுவதுதான் இவரது திட்டம். இதற்கான தரவுகளைத் திரட்டுவதற்காக வாடிகனின் ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட இவர் அனுமதிகோரிய போதும் வாடிகன் நிர்வாகம் தயக்கமின்றி இவருக்கு அனுமதி வழங்கியது. இவரது முந்தைய நூல்கள் எதுவும் திருச்சபைக்கு எதிரானதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.
ஹிட்லரின் இரத்தவெறி பிடித்த பாசிச ஆட்சிக்கும், அவன் நடத்திய யூதப் படுகொலைகளுக்கும் போப் 12-வது பயஸ் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்தார் என்பதுதான் இந்நூலாசிரியரின் குற்றச்சாட்டு.
“வாடிகன் ஆவணங்களப் படிக்கப் படிக்க நான் தார்மீக ரீதியாகவே நிலை குலைந்து போனேன். இவற்றையெல்லாம் வெளிக் கொண்டு வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் கார்ன்வெல்.
ஐரோப்பா முழுவதும் இலட்சக் கணக்கான யூத மக்கள் நாஜிகளால் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய போப்பாண்டவரான 12-வது பயஸ் வாய்திறந்து ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கான விடை இந்நூலில் தரப்படுகிறது.
“ஹிட்லரின் போப் – 12-வது பயஸின் அந்தரங்க வரலாறு”
12-வது பயஸ் போப் ஆவதற்கு முன்னால் 1930-களில் வாடிகன் அரசின் செயலராக இருந்தார். 1933-ல் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி ஜெர்மன் அதிபராவதற்கு இவர் இரகசியமாக உதவினார் என்பதே முதன்மையான குற்றச்சாட்டு.
ஜெர்மன் மக்களில் பெரும்பான்மையினர் புரோட்டஸ்டென்ட் கிறித்தவர்கள். மக்கள் தொகையின் 1/3 பங்கினரான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் “கத்தோலிக்க மையக் கட்சி” எனும் கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு கிறித்தவ மையக் கட்சி உதவியது. பிறகு ஹிட்லர் அதிபராவதற்கு ஏதுவாக கத்தோலிக்க மையக் கட்சி தன்னைத் தானே கலைத்துக் கொண்டதாகவும் அறிவித்தது. 1933-ல் ஹிட்லருடன் இதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக்கினார் பயஸ்.
நாஜிக் கட்சியின் கட்டுப்பாடும் உறுதியான கம்யூனிச எதிர்ப்பும் அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளது. “நாஜிகள் மதப்பற்றுள்ளவர்களல்ல, எனினும் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் நல்லவர்கள் தான். மேலும் ஹிட்லர் ஆட்சியுடன் உறவு வைத்துக் கொள்வதே ‘பாவம்’ என்று கருத முடியாது” என்று குறிப்பெழுதியிருக்கிறார் 12- வது பயஸ்.
இப்படியொரு நாஜி ஆதரவு நிலையை போப் எடுக்காமல் இருந்திருந்தால், மக்கள் தொகையின் 1/3 பங்குள்ள கத்தோலிக்கர்களை ஹிட்லருக்கு எதிராகத் திருப்பியிருக்க முடியும். பல இலட்சம் யூதர்கள் கொல்லப்படுவதையும் ஓரளவேனும் தடுத்திருக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.
மாறாக நடந்ததென்ன? 1939-இல் ஹிட்லரின் எஸ்.எஸ். என்ற கொலைப் படையில் 25 சதவீதம் பேர் கத்தோலிக்கர்களாக இருந்தனர். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட யூதக் கைதிகளை விஷவாயுக் கூடத்தில் அடைத்துக் கொல்வது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களை சித்திரவதை செய்து கொல்வது போன்றவற்றை இந்த கத்தோலிக்க நாஜிகள் கூசாமல் செய்தனர்.
சாமானிய கத்தோலிக்கர்களை விடுங்கள், ஐரோப்பா முழுவதும் யூதர்கள் படுகொலை செய்யயப்பட்டபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களும், பல அரசுகளும் போப் 12-வது பயஸிடம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதும் இந்தப் படுகொலைக்கெதிராக ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கண்டனம் தெரிவிக்கா விட்டாலும் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
ஹிட்லர் – போப் பயஸ் 12
இப்படியும் ஒரு மனிதன் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று நமக்கு வியப்பு ஏற்படலாம். ஆனால் நூலாசிரியர் அடுத்து விவரிக்கும் சம்பவம் நம் ரத்தத்தை உறையவும் வைக்கிறது – கொதிக்கவும் வைக்கிறது.
1943 அக்டோபரில் ரோம் நகரிலேயே யூதர்களைச் சுற்றி வளைக்கிறது நாஜிப் படை. அடிமாடுகளைக் கொண்டு செல்வதற்கான லாரியில் அவர்கள் ஏற்றப்பட்டு கொலைக் கூடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். லாரியின் உள்ளே காவலுக்கு நிற்கின்ற நாஜி இராணுவ அதிகாரிகள் அந்தப் புனித நகரத்தை வேடிக்கை பார்க்க வசதியாக, யூதக் கைதிகளின் கைகள் லாரிக்கு வெளியே தொங்க விடப்படுகின்றன. வெளியே தொங்குகின்ற பிஞ்சுக் குழந்தைகளின் கைகள் கடும் குளிரில் நடுங்குகின்றன.
‘செயின்ட் பீட்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் போப்பின் அரண்மனை வழியே செல்கிறது இந்த அடிமாட்டு லாரிகளின் ஊர்வலம். மாளிகையின் உள்ளே இருக்கிறார் போப். அப்பொழுதும் அவர் பேசவில்லை.
இந்தக் கிரிமினல் குற்றத்தினை நியாயப்படுத்த என்ன விளக்கம் தர முடியும்? எது சரி, எது தவறு என்று தீர்மானிப்பதற்கான அதிகாரத்தைத் தேவனிடமிருந்து பெறுகிறார்கள் போப்பாண்டவர்கள் என்று கூறப்படுகின்றது. எது கிறித்தவ நல்லொழுக்கம் என்பது போப்புக்குத் தெரியாது?
ஹிட்லரின் போருக்கும் படுகொலைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாத போப் 12-வது பயஸ்
தெரியாமலென்ன? ஹிட்லரின் போருக்கும் படுகொலைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாத போப் 12-வது பயஸ் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஹிட்லரை ரசியா தோற்கடித்த பின் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.
கம்யூனிசத்திற்குப் பெருகி வரும் ஆதரவைக் கண்டு பீதியுற்று, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களை படையாய்த் திரட்டினார். சோசலிச ரசியா ‘மனம் திரும்புவதற்காக’ உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
12-வது பயஸின் இந்த கொடூரமான மவுனத்திற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார் நூலாசிரியர். “முதலாவதாக ஹிட்லரைப் போன்றே பயஸும் ஒரு சர்வாதிகாரி, எனவே ஹிட்லரின் உணர்வுகளை அவர் மதித்தார்; ரசித்தார்.”
“இரண்டாவதாக ஹிட்லரைப் போன்றே பயஸும் யூத, அராபிய எதிர்ப்பு இனவெறி கொண்டவர். ரசியப் புரட்சியைத் தொடர்ந்து 1919-ல் ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற தொழிலாளர் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய மாக்ஸ் லெவியன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குடிகாரனைப் போலக் கண்கள், வெளிறிய முகம், விகாரமான தோற்றம் கொண்ட அழுக்கு மூட்டையான யூதன், ரசியன்” என்று எழுதுகிறார் 12-வது பயஸ். எனவே ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததைக் கூடப் போப் தனது அடிமனதில் ஆதரித்திருப்பார்.” – என்கிறார் நூலாசிரியர் கார்ன்வெல்.
தற்போது புனிதராக்கப்படுவதற்காக விண்ணுலகில் காத்திருக்கும் 12-வது பயஸ், மண்ணுலகில் துறவியாக வாழ்ந்திருந்த காலத்தில் விமானப் பயணம், அதிவேகக் கார்ப் பயணம் போன்றவற்றைப் பெரிதும் விரும்பியவராம், ஹாலிவுட் நடிகைகள் பற்றிய கிசுகிசுச் செய்திகளையும் ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொள்வாரம்.
போப் – 12-வது பயஸைத் தரிசித்து அவரது புறங்கையைப் பணிந்து முத்தமிட்டு அருளாசி பெற்ற ஒரு ஆங்கிலேயர், “போப்பின் கையில் அதிகாலைப் பனியின் தூய்மையான மணம் வீசியதாகவும், அது புனிதர்களின் உடலிலிருந்து மட்டுமே வீசக்கூடிய நறுமணமாக இருக்கக் கூடும்” என்றும் எழுதிவைத்துள்ளார்.
“யாரிடமிருந்து காசு வாங்குகிறோம் என்பது பற்றிக் கவலையில்லை இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” – போப் 2-வது ஜான் பால் புனிதர் ஆக்க முன் மொழிந்த தெரசா.
“கையை முத்தமிடும் பக்தர்களிடமிருந்து கிருமிகள் தொற்றிக் கொள்ளாமலிருப்பதற்காக, மணம் வீசும் கிருமி நாசினித் தைலத்தில் கையை முக்கி எடுத்துவிட்டுத் தான் பக்தர்களுக்கு அவர் தரிசனம் தந்திருக்கிறார்” என்று அந்த ரகசியத்தையும் போட்டு உடைக்கிறார் வாடிகன் ஆவணங்களைக் குடைந்த நூலாசிரியர்.
அன்பு, மனித நேயம் போன்ற கிருமிகள் தன்னைத் தொற்றிக் கொண்டால் விளையக் கூடிய அபாயத்தை போப் யோசித்திருப்பார் போலும்! 12-வது பயஸை புனிதராக அறிவிப்பதற்கான ‘புனித நறுமணம்’ என்ற கடைசி ஆதாரத்தையும் நாறடித்து விட்டார் கார்ன்வெல்.
***
தன்னைச் சுற்றிலும் கோடிக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் கல்லுளி மங்கனைப் போல மவுனம் சாதித்ததற்கான காரணத்தையும் 12-வது பயஸ் எழுதி வைத்துள்ளார். “ஒரு வேளை தான் ஹிட்லரை எதிர்த்துப் பேசியிருந்தால் கத்தோலிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்பதுதான் போப் கூறும் காரணம்.
இந்த விளக்கமே அநீதியானது என்பது ஒருபுறமிருக்க இது உண்மைக்கும் புறம்பானதாகும். ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரசியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களும்தான் அடக்கம்.
நாஜிகள் மீது நடத்தப்பட்ட நூரம்பர்க் விசாரணையில், அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் போப்பின் நடத்தை பரிசீலிக்கப்படவில்லை. ஏனென்றால் கம்யூனிசத்திற்கெதிராக அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் தொடர்ந்து நடத்திய யுத்தத்திற்கு வாடிகனின் ஆன்மீக அடியாள் படை அவர்களுக்குத் தேவைப்பட்டது. கம்யூனிச எதிர்ப்பு என்ற பொது நோக்கத்திற்காகப் போப்பின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது.
இரண்டாவது ஜான் பால் கூட ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலந்துக்காரர்தான். இருந்தாலும் தனது கம்யூனிச எதிர்ப்பு ‘லட்சியத்தை’ அவர் கைவிட்டு விடவில்லை.
தற்போதைய போப்பான இரண்டாவது ஜான் பால் கூட ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலந்துக்காரர்தான். இருந்தாலும் தனது கம்யூனிச எதிர்ப்பு ‘லட்சியத்தை’ அவர் கைவிட்டு விடவில்லை.
போலந்தின் லெக்வாலேசாவை ஆட்சியலமர்த்துவதற்கும், ரசியாவை உடைப்பதற்கும் அமெரிக்காவின் உளவுப் படையாகவே செயல்பட்டது வாடிகன். நிகராகுவாவில் அமெரிக்கக் கூலிப்படைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த சான்டினிஸ்டா இளைஞர்களுக்காக பிரார்த்தனை செய்யக்கூட மறுத்தவர்தான் இன்றைய போப். ஆழ்ந்த மதப்பற்றுள்ள தாய்மார்களும், இலட்சக் கணக்கான நிகராகுவா மக்களும் இந்தப் போப்பை விரட்டியடித்த காட்சியெல்லாம் வீடியோ படமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவிலும், ரசியாவிலும் போலி சோசலிசம் வீழ்ந்த பிறகு மேற்கத்திய ‘சுதந்திரச் சந்தை’ வேலையின்மையையும், பட்டினியையுமே அம்மக்களுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அமெரிக்காவின் மேலாதிக்கமே இப்போது பச்சையாக சந்தி சிரிக்கிறது.
நிலைமையைக் கணக்கில் கொண்ட போப் இரண்டாவது பால் “நான் கம்யூனிசத்தை எதிர்க்கிறேன் என்பதனால் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன் என்று பொருள் அல்ல; நான் கம்யூனிசத்தை எதிர்த்ததற்குக் காரணம்கூட அதன் பொருளாதாரக் குறைபாடுகளால் அல்ல; அது தனிமனித கவுரவத்தை குலைக்கிறது என்பதனால்தான்” என்று மெதுவாகத் தட்டைத் திருப்பிப் போடுகிறார். இது புதிய தந்திரம்.
***
“யாரிடமிருந்து காசு வாங்குகிறோம் என்பது பற்றிக் கவலையில்லை இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” என்று கூறி கொலைகார இராணுவ சர்வாதிகாரிகளிடம் நன்கொடை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அருளாசி வழங்கியதை நியாயப் படுத்தினார் தெரசா.
“நாஜிகளுடன் உறவு வைத்துக் கொள்வது ஒன்றும் பாவமல்ல” என்று தனது பாசிச ஆதரவை நியாயப்படுத்தினார் போப் – 12-வது பயஸ்.
இந்த இரண்டு பேரும்தான் ‘புனிதர்’ ஆக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் ‘இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஆத்மாக்கள்.’
கிறிஸ்துவுக்கும் கிறித்தவ திருச்சபைக்கும் உள்ள சிறிய வேறுபாட்டை ஒரே வரியில் விளக்கினார் கார்ல் மார்க்ஸ்:
“கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (கிறிஸ்து), மக்களின் ஆன்மாக்களுக்கு விமோசனம் கோரித் தமது உடம்பை தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ தமது சொந்த ஆன்மாவின் விமோசனத்திற்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்.”
குறிப்பு: போப்பை அம்பலப்படுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் குதூகலிக்கத் தேவையில்லை. அகில உலக ஹிட்லர் ரசிகர் மன்றத்தின் தலைவரே கோல்வால்கர்தான் என்பதை ‘ஞான கங்கையைப் படித்துத் தெரிந்து கொள்க.
வாட்டிகன் புகைமூட்டம் : கத்தோலிக்க குருமார்களின் பாலியல் வக்கிரங்கள் பற்றிய செய்திகள் உலகெங்குமிலிருந்து வெளியாகின்றன.
– சூரியன்
_______________________________ புதிய கலாச்சாரம், ஜனவரி 2000
_______________________________ (படங்கள் இணையத்திலிருந்து)
இந்திய விவசாயத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிடப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் மோடி அரசு, அதனை “புரோட்டீன் புரட்சி” என அழைக்கிறது. அதாவது, மரபு சார்ந்த இந்திய விவசாயத்தை உயிரி தொழில்நுட்ப அடிப்படையைக் கொண்டு மாற்றியமைப்பதுதான் இந்த புரோட்டீன் புரட்சியின் அடிப்படையாகும். விவசாயத் துறையில் நான்கு சதவீத வளர்ச்சியைச் சாதிப்பதற்கும்; அதிகரித்துக்கொண்டே செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இந்த மாற்றம் அவசியமென்று கூறி, மோடி அரசு இந்தப் புரட்சியை நியாயப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மரபு சார்ந்த விவசாயத்தை அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியமைக்கப் போவதைக் குறிக்கும் விதத்தில் “ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு” என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)
இதுவொருபுறமிருக்க, விவசாய விளைபொருள் சந்தை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதை ஒழித்து, சந்தையைத் தனியார் வசம் ஒப்புவிக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேசிய பொது சந்தை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள மோடி அரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. இந்தத் திருத்தங்கள் தனியார் சந்தை மற்றும் தனியார் விற்பனைக்கூடங்களை அமைப்பதை அனுமதிக்கும் நோக்கில் இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சிறு மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டும், மரபு சார்ந்தும், ஓரளவிற்கு சுயேச்சைத் தன்மையோடும் இயங்கி வரும் விவசாயத்தையும்; அத்தியாவசிய விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது மற்றும் அவற்றைக் கொள்முதல் செய்வதில் அரசுக்குள்ள பாத்திரத்தையும் ஒழித்துக் கட்டி, இந்திய விவசாயத்தைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளின் பகடைக்காயாக மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கமாகும்.
தேசிய பொதுச் சந்தையை உருவாக்கும் முதல் அடியாக நெல்லுக்கும் கோதுமைக்கும் மைய அரசு அறிவிக்கும் ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் அல்லது ஊக்கத்தொகையை மாநில அரசுகள் அறிவிக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, மோடி அரசு. தமிழக அரசு சன்ன ரகத்திற்கு ரூ 70/-, சாதாரண ரகத்திற்கு ரூ 50/- என ஊக்கத் தொகை நிர்ணயித்திருக்கிறது. மோடி அரசு போட்டுள்ள உத்தரவை அமல்படுத்தினால் தமிழக விவசாயிகளிடமிருந்து சன்ன ரக நெல்லை ரூ 1,470/-க்குப் பதிலாக ரூ 1,400/-, சாதாரண ரக நெல்லை ரூ 1,410/-க்குப் பதிலாக ரூ 1,360/- என்ற விலையில் மட்டுமே கொள்முதல் செய்யமுடியும். நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ 2,500/- ஆக நிர்ணயிக்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் கோரி வரும் வேளையில், மோடி அரசோ கிடைப்பதையும் தட்டிப் பறிக்கும் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதையும் மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மைய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கரும்பு ஆலை முதலாளிகளின் சார்பாக பேசியிருப்பதையும் இதிலிருந்து தனித்துப் பார்க்க முடியாது.
தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி 100 கோடி ரூபாய்தான். இதனை வைத்துப் பார்க்கும்பொழுது மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதால் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை இந்த ஆண்டும் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயா அறிவித்திருந்தாலும்,ஜெயாவின் “மைண்ட் வாய்ஸில்” பேசிவரும் தினமணி, “இப்படிப்பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குவதால்தான் அரிசியின் விலை சந்தையில் கூடிக் கொண்டே போவதாக” எழுதி மானிய வெட்டை நியாயப்படுத்தியிருக்கிறது.
இந்த ஊக்கத்தொகை வெட்டைத் தொடர்ந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து விற்கும் உரிமத்தை மான்சாண்டோ, பாயர், பி.ஏ.எஸ்.எஃப். ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது மரபணு பொறியியல் ஒப்புதல் கமிட்டி.
முந்தைய காங்கிரசு அரசு கொண்டு வந்த உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கான அனுமதியை எதிர்த்து நாடெங்கும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்ததையடுத்து அம்முடிவை விலக்கிக் கொண்ட காங்கிரசு ஆட்சியாளர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்குப் புதிய அனுமதி எதுவும் தரப் போவதில்லை என்று வாய்வழி உத்தரவாதத்தையும் அளித்தனர். எனினும், தமது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க மன்மோகன் அரசு எடுத்த முடிவு, இந்த ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என நம்பியிருந்த விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகச் செயல் இது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்யும் அனுமதி வழங்குவதைத் தடைசெய்யும் வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் கள ஆய்வுகளுக்கு பத்தாண்டு காலம் தடை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்; இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவும் கள ஆய்வுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி இந்த அனுமதி அவசர அவசரமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
தனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் கள ஆய்வுகளுக்குத் தடை விதிப்போம் எனச் சவடால் அடித்த பா.ஜ.க., அதிகாரத்தில் உட்கார்ந்தவுடனேயே தட்டைத் திருப்பிப் போட்டு பன்னாட்டு விதை கம்பெனிகளுக்குச் சாதகமாகத் தட்டுகிறது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு எழத் தொடங்கியவுடன், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் குசும்புப் பேர்வழி போல, “இம்முடிவு அரசின் முடிவல்ல; தன்னதிகாரம் கொண்ட கமிட்டியின் முடிவு” எனக் கூறி, மோடி அரசைத் தப்ப வைக்க முயலுகிறார்.
அப்படியென்றால், இந்த நாட்டை ஆள்வது யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அல்லது நிபுணர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஏகாதிபத்திய அடிவருடிக் கும்பலா? கோடிக்கணக்கான விவசாயிகளின் உரிமையைவிட, மக்களுடன் எவ்விதத் தொடர்புமேயில்லாத நிபுணர் கமிட்டிகள், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு எடுக்கும் முடிவைத்தான் இந்த அரசு அமல்படுத்தும் என்றால், இது ஏகாதிபத்திய கைக்கூலி அரசு என்பதைத் தவிர வேறென்ன?
இந்த அனுமதியை ஆதரிக்கும் கைக்கூலி வல்லுநர்கள் அனைவரும், “இந்தியாவில் ஏழைகளின் பட்டினியைப் போக்குவதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்க வேண்டும்; இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் எதிரானது” எனச் சாமியாடுகிறார்கள். ஏழைகளின் பட்டினிக்கு காரணம் தானிய உற்பத்தி போதிய அளவு இல்லை என்பது அல்ல.
இந்திய விவசாயிகள், தாம் கடன்பட்டாவது ஒவ்வொரு ஆண்டிலும் 100 கோடி டன் அரிசியை, 95 கோடி டன் கோதுமையை, 170 கோடி டன் காய்கறிகளை, 40 கோடி டன் சிறு தானியங்களை, 18 கோடி டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்கிறார்கள். இவற்றைச் சமச்சீரான முறையில் விநியோகிக்கும் கொள்கையை வகுத்துச் செயல்படுத்த அரசு மறுப்பதுதான் இந்தியாவில் இன்னமும் பட்டினி நிலவுவதற்கான அடிப்படையாகும். 66 கோடி டன் உணவு தானியங்களைத் தனது கையிருப்பில் வைத்திருக்கும் அரசு, அதனை மானிய விலையில் மக்களுக்கு வழங்க மறுப்பதுதான் ஏழைகளின் பட்டினிக்கு காரணம்.
படம் : ஓவியர் முகிலன்
பருத்தி சாகுபடியில் மரபான விதைகளிடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைப் புகுத்திய பிறகு உற்பத்தியும் பெருகவில்லை; பருத்தி விவசாயிகளின் ஏழ்மையும் ஒழியவில்லை. மாறாக, மரபு சார்ந்த பருத்தி விதைகள்தான் ஒழிக்கப்பட்டன; மான்சாண்டோ கம்பெனியின் விதைகளின் விலைகள்தான் உயர்ந்துகொண்டே போனதே தவிர, விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. அம்மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவின் விதர்பாவிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்தன. இவைதான் கைமேல் கண்ட பலன்.
அறிவு நாணயத்தோடு சிந்திக்கக்கூடிய பல அறிவியலாளர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிரான கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, இந்தக் கள ஆய்வுகளை விதை கம்பெனிகளும் அவர்களது கைக்கூலிகளாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும்தான் நடத்துகிறார்கள். எனவே, இந்த ஆய்வுகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; மேலும், இவ்வாய்வுகள் வெளிப்படைத்தன்மையோடும் நடத்தப்படுவதில்லை. இவ்விதைகளை ஆதரிக்கும் அரசுகள், அதிகார வர்க்க கமிட்டிகள், அறிவியலாளர்கள் அனைவரும் மான்சாண்டோ போன்ற விதை கம்பெனிகளின் ஆய்வறிக்கைகளைத்தான் கிளிப் பிள்ளை போலச் சொல்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால், அவ்வுணவுகளை உண்பதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற தாவரங்களும் தீராத கேடுகள் உண்டாகும் என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிரேசிலில் பி.டி.சோயாவைப் பயன்படுத்தியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, தலைவலி உள்ளிட்ட ஒவ்வாமை நோகள் ஏற்பட்டு, அதனால் பி.டி.சோயா திரும்பப் பெறப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் சிக்கில் செல் அனீமியா என்ற நோ ஏற்படும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் மாற்றம் அடைந்து ரத்தக் குழாக்குள் நுழையமுடியாத நிலை ஏற்படும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.
இப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அனுமதி சிறுகச்சிறுக இந்திய விவசாயத்தில் நிலவிவரும் சுயேச்சைத்தன்மையை ஒழிப்பதோடு, நமது சுயசார்பான உணவு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றும்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் அவுரிச் செடியைப் பயிரிடக் கோரி இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியதை எதிர்த்து விவசாயிகளின் கலகம் வெடித்ததைப் போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கும், அதனைத் திணிக்க முயலும் ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கும் எதிராக விவசாயிகளின் கலகம் வெடிக்க வேண்டும். இக்கலகம் அன்றி, வேறு வழிகளில் இந்திய விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நியாயம் கிடைத்துவிடாது.
சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கும் மோடி அரசின் சுற்றறிக்கை நகலை எரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் – சாலை மறியல்!
பார்ப்பனிய மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தனது இந்தி – இந்து – இந்தியா என்ற அகண்ட பாரத கனவை நிறைவேற்றும் விதமாக பார்ப்பனிய கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே ‘சமூக வலைத் தளங்களில் இந்தியில் தான் மத்திய அரசு அலுவலர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும்’ எனவும், ‘மத்திய அரசு சுற்றறிக்கைகளை இந்தியில் தான் அனுப்ப வேண்டும்’ எனவும் உத்தரவிட்டது. தமிழகத்தை சேர்ந்த 11 அதிகாரிகளுக்கு ‘இந்தி ஏன் தெரியவில்லை’ என்று நோட்டிஸ் அனுப்பியது. இப்படி தனது இந்துத்துவா கருத்துக்களை சட்டபூர்வமாகவே செயல்படுத்தத் துவங்கியுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக செத்த மொழியான சமஸ்கிருதத்தை மீண்டும் சிங்காரித்து அரியணை ஏற்றி தனது இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், மத்திய அரசுப் பள்ளிகளில் (CBSE) ஆகஸ்ட் 7 முதல் 13 வரை சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது. ‘இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழி சமஸ்கிருதம்’ என்ற வாசகத்துடன் தொடங்கும் படியான அந்த சுற்றறிக்கை நஞ்சை தூவியது.
இதன் அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், பார்ப்பனியத்திற்கு என்றுமே தலைவணங்காத தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடித்து இதனை எதிர்க்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் 6-ல் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பெரியார் சிலை முன்பு சமஸ்கிருத வாரம் தொடர்பாக மோடி அரசு அனுப்பிய சுற்றறிக்கை நகலை எரித்து கைதாகினர்.
அதன் பிறகு இதனை கண்டித்து திருச்சி முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறுதியாக, ஆகஸ்ட் 13 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சட்டக்கல்லூரி கிளை சார்பாக மோடி அரசின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் ஆகஸ்ட் 13 மாலை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்கள் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் சென்று “சமஸ்கிருத வாரத்தை ஏன் எதிர்க்க வேண்டும்” என்று விளக்கி பேசி மாணவர்களைப் போராட்டத்திற்கு அழைத்தனர். சமஸ்கிருத வார எதிர்ப்பின் அவசியத்தை உணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயாரானார்கள். போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலாளர் சேக் தலைமை தாங்கினார்.
போராட்டம் நடக்கும் போது “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற தந்தை பெரியாரின் படம் போடப்பட்ட பிரசுரத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு மாணவர்கள் விநியோகித்து போராட்டத்தின் நோக்கத்தை விளக்கினர். பொது மக்களும் உடனிருந்து ஆதரவு தெரிவித்தனர். அரை மணி நேரம் முழக்கமிட்ட பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் மோடி அரசின் சுற்றறிக்கை நகல் எரிக்கப்பட்டது.
மீண்டும் முழக்கம் போட்டுக் கொண்டே மாணவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தி மீண்டும் நகலை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சுமார் 45 நிமிடம் அளவில் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதன் இறுதியில், போராட்டத்திற்கு வந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து சட்டக்கல்லூரி கிளை பு.மா.இ.மு தோழர்கள் உரையாற்றினர்.
இந்தப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபினை விசிறியெழச் செய்வதாக அமைந்தது. தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளிலும், சன் டிவி உள்ளிட்ட சில உள்ளுர் தொலைக்காட்சிகளிலும் இப்போராட்டம் குறித்த செய்தி வெளியானது.
முழக்கம்
சுற்றறிக்கை நகல் எரிப்பு
நோட்டிஸ்
தினகரன் செய்தி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி திருச்சி 99431 76246
1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள்.
20 ஆண்டுகளுக்கு பின் 78 வயதில் நிரபராதி என்று விடுதலை – முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி.
இதேபோல, 2002 அக்சர்தாம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்று நிரபராதிகள் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தீர்ப்பு மோடியின் வெற்றிக் கொண்டாட்டக் கூச்சலில் அமிழ்ந்து போனது.
தற்போது சூரத் வழக்கில் 11 பேரை விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உள்ளிட்டு குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், தடா சட்டத்தின் கீழ் (சித்திரவதை செய்து) பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர வேறு சாட்சியங்கள் எதுவுமே இல்லை என்றும் கூறியிருக்கிறது. மேலும் தடா சட்டத்தின் கீழ் தண்டித்தக்க ஒரு குற்றத்தை பதிவு செய்வதற்கு முன், அதற்கு மாவட்ட கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை மீறி, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலரிடம் ஒப்புதல் பெற்றிருப்பது முறைகேடானது என்றும் கூறி அனைவரையும் விடுவித்திருக்கிறது. இது வெறும் முறைகேடல்ல; இந்தப் பொய்வழக்கு மாநில அரசுத் தலைமையால் திட்டமிட்டு போடப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணம்.
சூரத் பொய்வழக்கு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. 1990-களின் துவக்கம் முதல் இன்றுவரை இந்தியா முழுவதும் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர். அவர்களில் சிலர்தான் இத்தகைய தீர்ப்புகளில் விடுவிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெற்றி பெறுவதற்குள் அவர்கள் வாழ்க்கை அழிந்து விடுகிறது. வழக்காட முடியாத ஏழை முஸ்லிம்ளின் வாழ்க்கை சிறையிலேயே கழிகிறது. அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன.
அதே நேரத்தில் இத்தகைய அநீதிகளை இழைத்த கிரிமினல் கட்சி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது. 2002 படுகொலையின் நாயகனை முதல்வராகவும், பிரதமராகவும் ஆக்குமளவுக்கு பெரும்பான்மை சமூகத்தின் “ஞாபகமறதி” முற்றியிருக்கிறது. எனவே, இந்த வழக்கின் பின்புலத்தை விளக்குவது அவசியமாகிறது.
1992, டிசம்பர் 6-ம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடனேயே, நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பாரதிய ஜனதா திட்டமிட்டிருந்தது. மறுநாள், டிசம்பர் 7-ம் தேதியன்று, மசூதி இடிப்பைக் கண்டித்து சூரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு கல்வீச்சு மற்றும் தீவைப்பில் ஈடுபட்டது. அடுத்த கணமே 2000-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இந்து மதவெறிக் குண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினர். முஸ்லிம் மக்கள் தப்பியோட முடியாவண்ணம் தெருக்களில் தடையரண்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் இந்துக்களும் கொல்லப்படுவார்கள் என்று கோயில் ஒலிபெருக்கிகளிலிருந்து அர்ச்சகர்கள் அறிவித்தனர். அடுத்த 6 நாட்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சில இந்துக்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். சொத்துகள் கொள்ளையிடப்பட்டன. சுமார் 20,000 பேர் உள்ளூரிலேய அகதிகளாகி முகாம்களில் சரணடைந்தனர். கலவரத்துக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் எடுப்பது போல முஸ்லிம் வீடுகளை இந்து வெறியர்கள் அடையாளம் கண்டு வைத்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. (மனுஷி, ஜன-ஏப், 1993)
1990-94 காலகட்டத்தில் சிமன்பாய் படேல் தலைமையிலான ஜனதா தளம்(குஜராத்), ஜனதா தளம், காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. சூரத் குண்டுவெடிப்பு என்பது 1993 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன. இவற்றில் ஒரு பள்ளிச் சிறுமி கொல்லப்பட்டாள். 30 பேர் காயமடைந்தனர். ஜனவரியில் நடந்த குண்டுவெடிப்புக்காக 22 முஸ்லிம்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் அனைவரையும் நிரபராதிகள் என்று விடுவித்தது நீதிமன்றம். 1995-இல் பா.ஜ.க. ஆட்சி வந்தது. ஏப்ரலில் நடந்த குண்டுவெடிப்புக்காக காங்கிரசு அமைச்சர் சுர்தி உள்ளிட்ட 11 பேரை கைது செய்த போலீசு, ஜனவரி குண்டுவெடிப்புக்கும் சேர்த்து இவர்கள் மீது வழக்கு போட்டது. 2008-ல்தான் தடா நீதிமன்றம் இதனை விசாரித்து தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
பாபர் மசூதி இடிப்பு : சூரத் உள்ளிட்டு நாடெங்கும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்டிய அத்வானிக்கு மோடி அன்று அல்லக்கை.
குஜராத்தில் பாரதிய ஜனதா மட்டுமின்றி, காங்கிரசு, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அனைத்துமே இந்துவெறிக் கட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன. சூரத் குண்டுவெடிப்பில் ஒரு உயிர் போனதற்காக 11 நிரபராதிகள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் 1992-ல் 200 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய கலவரத்துக்காக எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. (மறந்துவிட்ட கலவரங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ், 17.12.2009)
கலவரத்தை விசாரிப்பதற்காக டிசம்பர் 1993-ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சவுகான் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. ஜூன் 1996 வரை அந்தக் கமிசனுக்கு ஊழியர்களே நியமிக்கப்படவில்லை. இந்த நிலையிலும் 30.6.1997-க்குள் 1300 சாட்சிகளை விசாரித்து பதிவு செய்துவிட்ட சவுகான், தனது அறிக்கையை வெளியிட மாநில அரசிடம் மேலும் 4 மாத காலம் அவகாசம் கேட்டார். கால நீட்டிப்பு தரமுடியாதென்று மறுத்து கமிசனைக் கலைத்துவிட்டது வகேலா தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா அரசு.
இம்முடிவை எதிர்த்து மறைந்த வழக்குரைஞர் முகுல் சின்கா குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். எதிர் வழக்காடிய வகேலா அரசு, “1992 கலவரத்துக்குப் பின்னர் தற்போது மாநிலத்தில் மத நல்லிணக்கமும் அமைதியும் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலவரம் நடைபெற்ற சூழல் குறித்த விசாரணையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. அத்தகைய விசாரணை மீண்டும் இரு பிரிவினருக்கிடையே துவேசத்தை தூண்டிவிடும்” என்று கூறி கமிசனைக் கலைத்ததை நியாயப்படுத்தியது.
இந்த வக்கிரமான வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “காலம் ஓடி விட்டது. மக்கள் அந்த கருப்பு நாட்களை மறந்து விட்டார்கள். அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அரசு கூறுவது சரிதான்” என்று சொல்லி முகுல் சின்காவின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது குஜராத் உயர் நீதிமன்றம். (9.3.98)
இப்படித்தான், 2002 குஜராத் படுகொலையையும் மறந்து விடச் சொல்கிறார்கள். அரங்கேற்றப்படும் குண்டு வெடிப்பு நாடகங்கள், போலி மோதல் கொலைகள் – ஒவ்வொன்றிலும் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிரபராதிகளின் வாழ்க்கையை அழித்த இந்து மதவெறியர்களும், பொய் வழக்கு போட்ட போலீசு அதிகாரிகளும், பொய் சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களைத் தண்டித்த நீதிபதிகளும் கூண்டிலேற்றப்படுவதில்லை. மறந்து விடச் சொல்கிறார்கள். எத்தனை அநீதிகளைத்தான் மறக்க முடியும்?
“தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982”…..
மூச்சை இழுத்துப் பிடித்து ஒரே மூச்சில் படித்து விடுங்கள். இதுதான் குண்டர் சட்டம் அல்லது குண்டாஸ் என்று அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர்.
1982-ல் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் கடந்த 32 ஆண்டுகளில் திருட்டு வீடியோ, நில அபகரிப்பு, மணல் கொள்ளை என ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு ஊதிப் பெருத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதனால் இந்த சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் தமிழ்நாடு சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திருத்தங்களின்படி முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இந்த சட்டம் பிரயோகிக்கப்படலாம். இரண்டாவதாக, இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
சமீப கால திட்டங்கள் அம்மா உணவகம், அம்மா நீர், அம்மா மருந்தகம், அம்மா பெட்டகம் என அழைக்கப்படுவ்வது போல இந்த சட்டத்தின் பெயர் “குண்டாஸ் சட்டம்” என்பதிலிருந்து “அம்மா சட்டம்” என்று மாற்றப்படுமா என்பது குறித்து அமைச்சர் எதுவும் சொல்லவில்லை.
குண்டர்கள் சட்டம் தடுப்புக் காவல் சட்டம் என்ற வகையில் வருகிறது. ஒருவர் குற்றம் செய்வதற்கு முன்பே, அவர் குற்றம் செய்வதை தடுக்கும் விதமாக அவரை சிறையில் அடைத்து வைப்பதுதான் இந்த குண்டர் சட்டத்தின் நோக்கம். இதுவரை இச்சட்டம் அடிக்கடி குற்றம் செய்பவர்களை தடுப்புக் காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது. அடிக்கடி குற்றம் செய்பவர்கள் என்ற வரையறைக்குள் வருவதற்கு ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. காவல் நிலையத்தில் அவர் மீது 2-3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் போதும். தடையை மீறி நோட்டிஸ் கொடுத்தார், இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியிருந்தால் கூட, அந்நபர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட தகுதி உடையவர் ஆகி விடுவார்.
இதன்படி சமூக வாழ்வில் உள்ள அனைத்து செயல்களையும் முதல் முறை குற்றம் செய்வோர் என்று காட்ட முடியும். சான்றாக நிர்வாகத்தை எதிர்த்து போராடும் தொழிலாளிகளைக் கூட வன்முறையாளர்கள் என்று முதல் முறை கைது செய்தாலே அடுத்த முறை குண்டர்கள் சட்டத்தின் படி உள்ளே தள்ள முடியும். முதல் முறையாக போராட்டத்தில் கைது செய்யப்படும் மாணவர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அனைவரையும் கூட இதில் கொண்டு வரும் சாத்தியம் இருக்கிறது. இதை விட என்ன அபாயம் இருக்கிறது?
இன்றைய சட்ட நடைமுறையின் படி, ஒரு காவலர் தெருவோரம் நிற்கிற ஒருவரை அழைத்துச் சென்று ஏதாவது வழக்கு பதிவு செய்து, அமர்வு நீதிபதி முன்பு நிறுத்தினால் அவர் கண்ணை மூடிக் கொண்டு 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டு விடுவார். அதன்பிறகு வக்கீல், முறையீடு, பிணைக்கு மனு செய்வது என்று சட்ட நடவடிக்கைகள் தொடரலாம். ஆனால், அப்படிப்பட்ட எந்த வசதியையும் பெற முடியாதவர்கள் 15 நாட்கள் வரை விசாரணை இல்லாமல் காவலில் வைக்கப்படலாம் என்பது நடைமுறை. எந்த ஒரு குடிமகனையும் 1 ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்கலாம் என்று காவல்துறையின் அதிகாரத்தை விரிவாக்குவதுதான் குண்டர் சட்டத்தின் நடைமுறை செயல்பாடாக உள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. கீழ் மட்ட காவல் நிலையங்களில் தயாரித்து அனுப்பப்படும் உத்தரவுக்கு அவர்கள் ஒப்புதல் வழங்குவது நடைமுறையாக உள்ளது. அல்லது மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுக்கேற்ப தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கிறார்கள். இந்த ஆணையின் படி சம்பந்தப்பட்ட நபர் 1 ஆண்டு வரை சிறையில் அடைக்கப்படுவார். 1 ஆண்டு வரை அவர் மீது எந்த விதமான நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டியதில்லை.
கைது செய்யப்பட்டவர், தான் நிரபராதி அல்லது இந்த சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்று முறையீடு செய்ய ஒரு மேல் முறையீட்டு குழு உள்ளது. அதில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி பங்கேற்பார்கள். அந்தக் குழுவின் முன்பு கைது செய்யப்பட்டவர் நேரில் முறையிடலாம். ஆனால், அவர் சார்பாக குழுவின் முன்பு எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக முடியாது. வழக்கறிஞர் அல்லாத நண்பர்கள் அல்லது உறவினர்கள் அவர் சார்பில் பேசலாம். இந்த நடைமுறையில் 100-க்கு 99 வழக்குகளில் பாதிக்கப்படவரின் முறையீடு நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்தக் குழு ஒரு நிர்வாக விசாரணைக் குழு என்பதால் வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, எந்த நீதிமன்ற தலையீடும் இல்லாமல் ஒரு தனிநபரை 1 ஆண்டு வரை அடைத்து வைக்கும் உரிமையை நிர்வாகத்துக்கு வழங்குகிறது இந்தச் சட்டம். சொல்லிக் கொள்ளப்படும் தனிநபர் சுதந்திரம் என்பதை அப்பட்டமாக பறிக்கும் நடவடிக்கையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
என்னை எதிர்த்து எழுதுனா தொலைச்சுருவேன்!
முறையீட்டுக் குழுவில் நிராகரிக்கப்பட்ட பிறகு, கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு போடலாம். கீழமை நீதிமன்றங்களை அணுக முடியாது. உயர்நீதிமன்றம் இந்த கைது உத்தரவை ரத்து செய்தால் அவர் வெளியில் வந்து விடலாம். அரசுத் தரப்பு, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்குள் பல மாதங்கள் வரை நீட்டித்து விடுகிறது. காவல்துறை முறையாக கவனிக்கப்பட்டால், அரசு வழக்கறிஞர் எதிர்ப்பை வலுவாக முன் வைக்காமல் விரைவில் வெளியில் வர முடியும். காவல் துறையை கவனிக்கும் வசதி உடையவர்களுக்கு இந்த வசதி இருக்கிறது. மற்றவர்கள் நடைமுறையில் 6 மாதம் முதல் 8 மாதங்களுக்குப் பிறகே இந்த வகையில் விடுவிக்கப்படுவது நடக்கிறது.
இது வரையிலான நடைமுறையில் 5% தடுப்புக் காவல் உத்தரவுகள்தான் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், எஞ்சிய 95% வழக்குகளில் தடுப்புக்காவல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதற்கு முன் கைது செய்யப்பட்ட நபர் 6 முதல் 8 மாதங்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு விடுகிறார்.
இவ்வாறாக, இந்த சட்டம் காவல்துறை மிரட்டி பணம் பறிப்பதற்கான ஒரு ஊழல் சட்டமாகவும், ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் தமக்கு எதிரான கருத்துக்களை அடக்குவதற்கான அடக்குமுறை சட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது.
இந்த சட்டம் 1980-களில் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மாநிலங்களால் இயற்றப்பட்டது. இது போன்ற கடுமையான சட்டங்கள் மகாராஷ்டிரா அமைப்பாக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டம், சத்தீஸ்கர் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்கள் தனிநபர் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியல் சட்டத்துக்கு முரணானவை அல்ல என்று நீதிமன்றங்கள் உட்பட இந்திய ஆளும் வர்க்க அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதை இன்னும் சர்வாதிகார விதிகளுடன் சேர்த்து கொண்டு வரப்பட்டவையே தடா, பொடா சட்டங்கள். ரத்து செய்யப்பட்ட அந்த சட்டங்களை இன்னும் கடுமையாக மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பது பாஜகவின் திட்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை குண்டர்கள் சட்டம் பொதுவில் ரவுடிகளை கைது செய்து முடக்கத்தானே பயன்படுகிறது என்று சிலர் கேட்கலாம். அதிலும் ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருக்கின்றது. அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதை வைத்து ஜெயா அரசை கண்டிக்கும் தைரியம் இந்த ஊடக சூரப்புலிகளுக்கு இல்லை என்றாலும் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் மாதிரி ஒரு கருத்து வெளியிட்டாலே போதும். அதிகார வர்க்கம், போலீசு, உளவுத்துறை, கிச்சன் கேபினட் மூலம் ஆட்சி செய்யும் ஜெயாவிற்கு நல்ல செய்திகள் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வருகிறது.
உடனே காவல் துறை ஆணையர்கள் உள்ளூர் அளவில் இலக்கு கொடுப்பார்கள். அது இறுதியில் ஒரு காவல் நிலையம் ஒரு மாதத்திற்குள் ஐந்து பேரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து ‘ரிசல்ட்’ காட்ட வேண்டும் என்று அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக இதே காவல் நிலையங்கள் மாதத்திற்கு இத்தனை வழக்குகள் போட வேண்டும் என்று அமல்படுத்தி வருகிறார்கள். அதனால் சிறு குற்றங்கள் செய்வோரும், அப்படி செய்து பின்னர் திருந்தி வாழ்பவர்களும், குற்றமேதும் செய்யாத பாதையோர, சிறு வணிகர்கள், தள்ளு வண்டிகாரர்களை சந்தேக கேஸ் என்று காவல்துறை கைது செய்து சிறையலடைப்பது வழக்கம். இதுவேதான் குண்டர்கள் சட்டத்திலும் சற்று மேம்பட்ட அளவில் செயல்படுகிறது.
அதாவது கீழ்மட்ட போலிசிலிருந்து, ஆணையர், அமைச்சர், ஆளும் கட்சி வரை முரண்படும் நபர்களை கைது செய்வார்கள். அது இல்லாத போது சிறு அளவு குற்றவாளிகளை உள்ளே தள்ளுவார்கள். அத்தகைய ‘புகழ்’ வாய்ந்த சட்டத்தில்தான் தற்போது இரண்டு திருத்தங்களை சேர்த்திருக்கிறார்கள்.
பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக ஜெயா அரசு கூறுகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கும் போது, இதற்கு என்ன அவசியம்? குற்றம் நடக்கும் முன்னே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பழையை நடத்தையை வைத்து கைது செய்யும் நடைமுறை இங்கே எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? அப்படிப் பார்த்தால் பெண்களை ஆபாசமாக சித்தரித்து, பாலியல் உணர்வை வெறியாக கட்டியமைக்கும் ஊடகங்கள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், சினிமாத் துறை நபர்களை கைது செய்வார்களா? மாட்டார்கள். தமிழகத்தில் அதிகம் பாலியல் வன்முறை நடக்கும் இடங்கள் என்ற முறையில் கண்காணிக்கப்பட வேண்டிய காவல் நிலையங்களில் உள்ள குற்றவாளி போலீசுக்காரர்களையும் இந்த சட்டப்படி கைது செய்வார்களா? மாட்டார்கள்.
மேலும் அமுலில் உள்ள குண்டர் சட்டப்படியே கூட மணற்கொள்ளையர்கள், கிரானைட் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என எவரும் கைது செய்யப்பட்டதில்லை. வைகுண்டராஜன் போன்றோர் எந்த தடையுமின்றி தொழிலை தொடர்வதே இதற்கு சாட்சி.
இணைய குற்றங்களையும் குண்டர்கள் சட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தனக்கு எதிரான கருத்துக்களை முடக்குவதற்கான தயாரிப்புகளை ஜெயா அரசு செய்து முடித்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66A பிரிவு பேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டவர்கள், கேலிச்சித்திரத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள் என்று ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை ஒடுக்குவதற்கு பல முறை தவறாக பயன்படுத்தப்பட்ட இழிபுகழ் கொண்டது. ஜெயா அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திருத்தமும் பொதுவான பொருளில் இருந்தாலும் அதில் இணையம் தொடர்பான எதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இணையத்தில் நடக்கும் பொருளாதாரக் குற்றங்கள், ஏமாற்று மோசடிகள், பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்கனவே போலீசு துறை அதிகம் விசாரித்துத்தான் வருகிறது. சைபர் கிரைமின் முக்கியமான வேலையாகவே இக்குற்றங்கள் இருக்கின்றன. ஆனால் கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம். இதில் எல்லாரையும் தனிநபர்களாக கைது செய்வது முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம்.
அது ஒரு பிரச்சினையே இல்லை. ஜெயாவை கண்டித்து ஒருவர் கார்ட்டூன் போட்டதை, மம்தா பானர்ஜி போல கைது செய்து உள்ளே தள்ளினால் பிறகு யார் கார்ட்டூன் போடுவார்கள்? தற்போதே தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் எதிர்த்து ஜெயா அவதூறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார். அப்படி தொடர்வதற்கு முன்னாடியே இதே ஊடகங்கள் தமிழக அரசு குறித்து மிகுந்த எச்சரிக்கையாவே எழுதிவருகின்றன. அது மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு தொடங்கி புரசைவாக்கம் குமுதம் வரை முதுகெலும்பு இல்லாத ஊடக அறமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தில் காத்திரமாக எழுதும் தனிநபர்களையோ இல்லை தளங்களையோ இப்படி ஒரிருவரை ‘கவனித்தாலே’ போதுமானது. மற்றவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள். அப்படி நடக்காது எனுமளவுக்கு தமிழகத்தின் அரசியல் சூழல் ஆரோக்கியமாக இல்லை.
இறுதியில் புரட்சிகர, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை முடக்குவதற்கே இத்திருத்தம் பயன்படும். இன்றைக்கு உடனே இத்திருத்தம் பயன்படாமல் போனாலும் என்றைக்கும் நம் கழுத்தின் மீது தொங்கும் கத்தியாகவே இருக்கும். தேவைப்படும்போது கத்தி கீழே இறங்கி கருத்து சுதந்திரத்தை அறுத்து விடும்.
இனிமேல், இந்த சட்டம் முறையாக “தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், இணையக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982” என்று அழைக்கப்பட வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் அடைப்பதுதான் ஜெயா அரசு முன் வைக்கும் வழிமுறை. அதே நேரம் இந்தியாவிலேயே அரசியல் போராட்டம் அதிகம் நடக்கும் மாநிலமான தமிழகம் பாசிச ஜெயா அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடும். போராட வேண்டும்.
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 4 : மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்
அறிவை உருவாக்குதல், பயன்படுத்துதல், பரப்புதல் ஆகியவற்றின் மூலமாகத்தான் மொழி வளரும், புத்தறிவை இப்படித்தான் வளர்க்க முடியும். ஆனால் இதற்கான வேலைகளில் ஈடுபடுபவர்கள் பாமர மக்களாக இல்லை. துளிர், விஞ்ஞானிகள் சிறகு போன்ற சிறு பத்திரிகைகள் ஓரளவு முயன்றாலும் அது இன்னமும் பாமர மக்களை சென்றடையவில்லை. இதனை தனியாக யாரும் செய்ய முடியாது. அரசுதான் முன்நின்று செய்ய வேண்டும்.
பாடத்திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒரு உறுப்பினர். மக்களிடம் போனோம். மாணவர்களும் முன்வந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
வந்த மாணவர்களில் ஒருவன், “ஐயா எங்களுக்கு பாவுக்கு ஒன்றென செய்யுள் பகுதிகள் வைத்தால் போதாதா, சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி என வகைவகையாக வைக்க வேண்டுமா” என்று கேட்டான். அதற்கு, “நமது நாடு பல மத நம்பிக்கை கொண்டவர்களை உடையது, அதனால் வகைக்கொன்றாக வைத்திருக்கிறோம்” என்றார் ஆசிரியர். “அப்படியானால் நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லித் தரப் போகிறீர்களா? மதம் சொல்லித் தரப் போகிறீர்களா?” எனக் கேட்டான் அம்மாணவன்.
ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி “இதெல்லாம் வேண்டாம், தற்கால தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்’’ என்றாள்.
அதைக் கேட்ட தமிழாசிரியரும், புகழ்பெற்ற பெரிய பள்ளியின் தலைமையாசிரியருமான ஒருவர் “ஏம்மா அப்படியானால் உனக்கு தமிழ் பண்பாடு தெரிய வேண்டாமா’’ என்று அக்கறையோடு கேட்டார்.
உடனே தமிழ் புத்தகத்தை எடுத்த அப்பெண் நளவெண்பா பகுதியை எடுத்து வாசித்தாள். அதில் நளன் தமயந்தியை நள்ளிரவில் விட்டு விட்டு போனான் என்ற படலம் வருகிறது. “ஐயா, கல்யாணம் பண்ணிக்கோ. நள்ளிரவில் பொண்டாட்டியை தனியாக தவிக்க விட்டுவிட்டுப் போ என்பதுதான் தமிழ்ப் பண்பாடா’’ என்று கேட்டாள். உடனே அந்த ஆசிரியர் அதனை கேட்டு வாங்கி பார்த்துவிட்டு, பாடநூல் நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த படலத்தை எடுத்து விட்டு வேறு படலத்தை அடுத்த ஆண்டு போடச் சொன்னார்.
பள்ளிக்கூடம் யாருக்கானது? பெற்றோர்களுக்கானதா? அரசுக்கானாதா? இல்லை, மாணவர்களுக்கானது. அங்கு அந்த மாணவர்களுக்கு முடிவெடுக்க ஏதாவது இடமிருக்கிறதா? குழந்தைகளால் அவர்களது தேவையை வெளிப்படுத்த இங்கே இடமேயில்லை. பெங்குவின் வெளியிட்ட ஆசிரியர்களுக்கான கடிதங்கள் அப்படி பதின்ம வயது மாணவர்கள் எழுதியவைதான். கற்றல், வகுப்பறை, பாடத்திட்டம் ஆகியன பற்றி நிறைய அவர்களது எண்ணங்களை பதிவுசெய்துள்ளது அப்புத்தகம். அப்படி நமது மாணவர்களை நாம் சிந்திக்க வைத்துள்ளோமா?
ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்?
“ஏனப்பா விதியை மீறி விட்டாய்?” என்று கேட்டேன்.
“யார் போட்ட விதி?” என்று கேட்ட அம்மாணவன் ஒரு மார்க்சிஸ்டு.
ஒரு விநாடி எனக்கு கோபம் வந்தாலும், ஒரு முப்பதாண்டு அனுபவம் உள்ள என்னிடம் ஒரு பொடிப்பயல் இப்படி கேட்கலாமா? என்ற கேள்வி எழுந்தாலும், அவன் கேட்பது நியாயம்தானே என்பதை என்னளவில் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் விதியை நாங்கள் போடவில்லை, நாங்களே பள்ளி கல்வித்துறை சொன்ன விதிமுறைகளைத்தானே பள்ளியில் வைத்துள்ளோம்.
ஆகவே அவனையே “விதிமுறைகளை நீயே வகுக்கிறாயா” என்று கேட்டேன்.
“சரி” என்றான்.
“அப்படியானால் நீ மட்டும் வகுப்பது சரியாக இருக்காது. வகுப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் தினசரி மாலை ஒரு மணி நேரம் கூடி விவாதித்து விதிகளை வகுத்து தாருங்கள்” கூறினேன். அதற்காக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பற்றிய புத்தகங்கள், குறிப்புகளை எல்லாம் அவனுக்கு தேடி எடுத்துக் கொடுத்தேன்.
அதன்பிறகு அவர்கள் வகுத்து தந்த விதிமுறையின் தலைப்பே ஒழுங்கு விதிகள் என்பதற்கு பதிலாக எனது வாழ்க்கை நெறிகள் என்று மாற்றியிருந்தார்கள்.
“நான் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி எனக்கும், எனது பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க முற்படுவேன்” என்று துவங்குகிறது அந்தப் பட்டியல். முதல் விதி “தினமும் நீ பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வராதே” என்பது நம்முடையது. அவர்கள் வகுத்த விதியில் “நான் தினமும் வகுப்புக்கு முன்னரே படித்து தயாரித்து விட்டு ஆயத்தமுடன் சரியான நேரத்துக்கு வருவேன்” என்று இருந்தது.
இது தவிர நாம் சொல்லாத விதியாக, “ஆசிரியர் நடத்தும் பாடத்தை உன்னிப்பாக கவனித்து, அதில் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் எழுந்து நின்று கேட்டு நிவர்த்தி செய்து புரிந்து கொள்வேன்” என்றும் சொல்லி இருந்தார்கள்.
அவன் போட்ட 17-வது விதி என்னை மிகவும் கவர்ந்தது. அவன் பள்ளிக்கு வெளியிலும் விதியை வகுத்திருந்தான். “பேருந்தில் பெண்களோ, நோயுற்றவர்களோ, குழந்தைகளோ, முதியவர்களோ வந்தால் நான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவர்களுக்கு இடமளிப்பேன்” என்று சொல்லியிருந்தார்கள்.
20 விதிகள் வரை போட்டார்கள்.
“இதனை நான் சொல்ல மாட்டேன். தினமும் இதனை நாளொன்றுக்கு ஒரு விதியாக இரண்டாயிரம் மாணவர்களிடமும் விளக்கி அனைவரிடமும் ஒப்புதல் பெறுங்கள்” என்று சொன்னேன். அப்படித்தான் அவர்கள் செய்தார்கள்.
அதே போல, “விதியை நடைமுறைப்படுத்துவதையும் நான் கண்காணிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டேன். “நீ போட்ட விதியை நீதான் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு நீதான் பொறுப்பு” என்றேன்.
சிறப்பாகவே இப்படி எங்களது பள்ளிக்கு விதிமுறைகள் மாணவர்களால் வகுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. கோவையில் உள்ள சர்வஜன உயர்நிலைப்பள்ளியில் இது நடைபெற்றது. நடந்து முப்பது ஆண்டுகளாவது இருக்கும். ஆனால் அந்த நடைமுறை இப்போது மாறிவிட்டது. இலக்கிய மன்ற கூட்டம் முறையாக அப்போது மாதந்தோறும் நடைபெற்றது.
சமூக அறிவியல் பாடத்தில் நடப்பு செய்திகள் என்ற பகுதியை எடுத்து விட்டார்கள். ஏன் தெரியுமா? பக்தவத்சலம் ஆட்சியில் அரசியலை ஆசிரியர்கள் பேசுகிறார்கள் என்று காரணம் காட்டி இதனை எடுத்து விட்டார்கள். நானே பெருந்துறையில் ஆசிரியராக இருக்கையில் மாணவர்கள் பார்த்து விடக் கூடாது என்பதற்காக பெரியார் கூட்டத்திற்கு உருமால் கட்டிக்கொண்டு போய் பார்ப்பேன். மாணவர்கள் பெருமளவு வருவார்கள். வகுப்பறையில் இல்லாவிட்டாலும் வெளியில் மாணவர்கள் அரசியலை தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். ஒருவேளை அதற்கு நீங்கள் தடைபோட்டாலும் தனிப்பட்ட ஒருவர் சிந்திப்பதற்கு நீங்கள் தடை போட முடியாதுதானே.
அதுபோலவே மாணவர்களையும், ஆசிரியர்களையும் என்னை மதிப்பீடு செய்யச் சொல்லி கோருவேன். என்னைப் பற்றிய மாணவரது அபிப்ராயம் தெரியும் பட்சத்தில் என்னைப் பற்றி அவனுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். அல்லது தவறு என்பக்கம் இருக்கையில் திருத்திக் கொள்வேன். இதனை வெளிப்படுத்த விடாமல் தடுப்பதால் தான் மாணவர்கள் கழிப்பறைகளில் ஆசிரியர்களைப் பற்றி எழுத துவங்குகிறார்கள். அதனை முகத்துக்கு நேரே சொல்ல ஏன் வாய்ப்பளிக்க கூடாது?
ஆனால் இதனை பிற ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்களை மதிப்பீடு செய்ய அனுமதித்தால் பிறகு எங்களைப் பற்றியும் மதிப்பீடு செய்ய கேட்பார்களே” என்று பயந்தார்கள். மாணவன் ஆசிரியரை பற்றி ஒரு அபிப்ராயத்துக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பதால் தான் பொது இடத்தில் எழுதுகிறான். நாம் கருத்து சுதந்திரம் என்பதை ஊடகம் என்பதை தாண்டி இதற்கும் விரிவுபடுத்தி பார்க்க வேண்டும்.