Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 642

மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

0

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 4 : மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

றிவை உருவாக்குதல், பயன்படுத்துதல், பரப்புதல் ஆகியவற்றின் மூலமாகத்தான் மொழி வளரும், புத்தறிவை இப்படித்தான் வளர்க்க முடியும். ஆனால் இதற்கான வேலைகளில் ஈடுபடுபவர்கள் பாமர மக்களாக இல்லை. துளிர், விஞ்ஞானிகள் சிறகு போன்ற சிறு பத்திரிகைகள் ஓரளவு முயன்றாலும் அது இன்னமும் பாமர மக்களை சென்றடையவில்லை. இதனை தனியாக யாரும் செய்ய முடியாது. அரசுதான் முன்நின்று செய்ய வேண்டும்.

பாடத்திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒரு உறுப்பினர். மக்களிடம் போனோம். மாணவர்களும் முன்வந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மாணவியர்வந்த மாணவர்களில் ஒருவன், “ஐயா எங்களுக்கு பாவுக்கு ஒன்றென செய்யுள் பகுதிகள் வைத்தால் போதாதா, சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி என வகைவகையாக வைக்க வேண்டுமா” என்று கேட்டான். அதற்கு, “நமது நாடு பல மத நம்பிக்கை கொண்டவர்களை உடையது, அதனால் வகைக்கொன்றாக வைத்திருக்கிறோம்” என்றார் ஆசிரியர். “அப்படியானால் நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லித் தரப் போகிறீர்களா? மதம் சொல்லித் தரப் போகிறீர்களா?” எனக் கேட்டான் அம்மாணவன்.

ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி “இதெல்லாம் வேண்டாம், தற்கால தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்’’ என்றாள்.

அதைக் கேட்ட தமிழாசிரியரும், புகழ்பெற்ற பெரிய பள்ளியின் தலைமையாசிரியருமான ஒருவர் “ஏம்மா அப்படியானால் உனக்கு தமிழ் பண்பாடு தெரிய வேண்டாமா’’ என்று அக்கறையோடு கேட்டார்.

உடனே தமிழ் புத்தகத்தை எடுத்த அப்பெண் நளவெண்பா பகுதியை எடுத்து வாசித்தாள். அதில் நளன் தமயந்தியை நள்ளிரவில் விட்டு விட்டு போனான் என்ற படலம் வருகிறது. “ஐயா, கல்யாணம் பண்ணிக்கோ. நள்ளிரவில் பொண்டாட்டியை தனியாக தவிக்க விட்டுவிட்டுப் போ என்பதுதான் தமிழ்ப் பண்பாடா’’ என்று கேட்டாள். உடனே அந்த ஆசிரியர் அதனை கேட்டு வாங்கி பார்த்துவிட்டு, பாடநூல் நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த படலத்தை எடுத்து விட்டு வேறு படலத்தை அடுத்த ஆண்டு போடச் சொன்னார்.

பள்ளிக்கூடம் யாருக்கானது? பெற்றோர்களுக்கானதா? அரசுக்கானாதா? இல்லை, மாணவர்களுக்கானது. அங்கு அந்த மாணவர்களுக்கு முடிவெடுக்க ஏதாவது இடமிருக்கிறதா? குழந்தைகளால் அவர்களது தேவையை வெளிப்படுத்த இங்கே இடமேயில்லை. பெங்குவின் வெளியிட்ட ஆசிரியர்களுக்கான கடிதங்கள் அப்படி பதின்ம வயது மாணவர்கள் எழுதியவைதான். கற்றல், வகுப்பறை, பாடத்திட்டம் ஆகியன பற்றி நிறைய அவர்களது எண்ணங்களை பதிவுசெய்துள்ளது அப்புத்தகம். அப்படி நமது மாணவர்களை நாம் சிந்திக்க வைத்துள்ளோமா?

ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்?

“ஏனப்பா விதியை மீறி விட்டாய்?” என்று கேட்டேன்.

“யார் போட்ட விதி?” என்று கேட்ட அம்மாணவன் ஒரு மார்க்சிஸ்டு.

ஒரு விநாடி எனக்கு கோபம் வந்தாலும், ஒரு முப்பதாண்டு அனுபவம் உள்ள என்னிடம் ஒரு பொடிப்பயல் இப்படி கேட்கலாமா? என்ற கேள்வி எழுந்தாலும், அவன் கேட்பது நியாயம்தானே என்பதை என்னளவில் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் விதியை நாங்கள் போடவில்லை, நாங்களே பள்ளி கல்வித்துறை சொன்ன விதிமுறைகளைத்தானே பள்ளியில் வைத்துள்ளோம்.

ஆகவே அவனையே “விதிமுறைகளை நீயே வகுக்கிறாயா” என்று கேட்டேன்.

“சரி” என்றான்.

“அப்படியானால் நீ மட்டும் வகுப்பது சரியாக இருக்காது. வகுப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் தினசரி மாலை ஒரு மணி நேரம் கூடி விவாதித்து விதிகளை வகுத்து தாருங்கள்” கூறினேன். அதற்காக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பற்றிய புத்தகங்கள், குறிப்புகளை எல்லாம் அவனுக்கு தேடி எடுத்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு அவர்கள் வகுத்து தந்த விதிமுறையின் தலைப்பே ஒழுங்கு விதிகள் என்பதற்கு பதிலாக எனது வாழ்க்கை நெறிகள் என்று மாற்றியிருந்தார்கள்.

“நான் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி எனக்கும், எனது பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க முற்படுவேன்” என்று துவங்குகிறது அந்தப் பட்டியல். முதல் விதி “தினமும் நீ பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வராதே” என்பது நம்முடையது. அவர்கள் வகுத்த விதியில் “நான் தினமும் வகுப்புக்கு முன்னரே படித்து தயாரித்து விட்டு ஆயத்தமுடன் சரியான நேரத்துக்கு வருவேன்” என்று இருந்தது.

மாணவர்கள்இது தவிர நாம் சொல்லாத விதியாக, “ஆசிரியர் நடத்தும் பாடத்தை உன்னிப்பாக கவனித்து, அதில் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் எழுந்து நின்று கேட்டு நிவர்த்தி செய்து புரிந்து கொள்வேன்” என்றும் சொல்லி இருந்தார்கள்.

அவன் போட்ட 17-வது விதி என்னை மிகவும் கவர்ந்தது. அவன் பள்ளிக்கு வெளியிலும் விதியை வகுத்திருந்தான். “பேருந்தில் பெண்களோ, நோயுற்றவர்களோ, குழந்தைகளோ, முதியவர்களோ வந்தால் நான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவர்களுக்கு இடமளிப்பேன்” என்று சொல்லியிருந்தார்கள்.

20 விதிகள் வரை போட்டார்கள்.

“இதனை நான் சொல்ல மாட்டேன். தினமும் இதனை நாளொன்றுக்கு ஒரு விதியாக இரண்டாயிரம் மாணவர்களிடமும் விளக்கி அனைவரிடமும் ஒப்புதல் பெறுங்கள்” என்று சொன்னேன். அப்படித்தான் அவர்கள் செய்தார்கள்.

அதே போல, “விதியை நடைமுறைப்படுத்துவதையும் நான் கண்காணிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டேன். “நீ போட்ட விதியை நீதான் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு நீதான் பொறுப்பு” என்றேன்.

சிறப்பாகவே இப்படி எங்களது பள்ளிக்கு விதிமுறைகள் மாணவர்களால் வகுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. கோவையில் உள்ள சர்வஜன உயர்நிலைப்பள்ளியில் இது நடைபெற்றது. நடந்து முப்பது ஆண்டுகளாவது இருக்கும். ஆனால் அந்த நடைமுறை இப்போது மாறிவிட்டது. இலக்கிய மன்ற கூட்டம் முறையாக அப்போது மாதந்தோறும் நடைபெற்றது.

சமூக அறிவியல் பாடத்தில் நடப்பு செய்திகள் என்ற பகுதியை எடுத்து விட்டார்கள். ஏன் தெரியுமா? பக்தவத்சலம் ஆட்சியில் அரசியலை ஆசிரியர்கள் பேசுகிறார்கள் என்று காரணம் காட்டி இதனை எடுத்து விட்டார்கள். நானே பெருந்துறையில் ஆசிரியராக இருக்கையில் மாணவர்கள் பார்த்து விடக் கூடாது என்பதற்காக பெரியார் கூட்டத்திற்கு உருமால் கட்டிக்கொண்டு போய் பார்ப்பேன். மாணவர்கள் பெருமளவு வருவார்கள். வகுப்பறையில் இல்லாவிட்டாலும் வெளியில் மாணவர்கள் அரசியலை தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். ஒருவேளை அதற்கு நீங்கள் தடைபோட்டாலும் தனிப்பட்ட ஒருவர் சிந்திப்பதற்கு நீங்கள் தடை போட முடியாதுதானே.

அதுபோலவே மாணவர்களையும், ஆசிரியர்களையும் என்னை மதிப்பீடு செய்யச் சொல்லி கோருவேன். என்னைப் பற்றிய மாணவரது அபிப்ராயம் தெரியும் பட்சத்தில் என்னைப் பற்றி அவனுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். அல்லது தவறு என்பக்கம் இருக்கையில் திருத்திக் கொள்வேன். இதனை வெளிப்படுத்த விடாமல் தடுப்பதால் தான் மாணவர்கள் கழிப்பறைகளில் ஆசிரியர்களைப் பற்றி எழுத துவங்குகிறார்கள். அதனை முகத்துக்கு நேரே சொல்ல ஏன் வாய்ப்பளிக்க கூடாது?

ஆனால் இதனை பிற ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்களை மதிப்பீடு செய்ய அனுமதித்தால் பிறகு எங்களைப் பற்றியும் மதிப்பீடு செய்ய கேட்பார்களே” என்று பயந்தார்கள். மாணவன் ஆசிரியரை பற்றி ஒரு அபிப்ராயத்துக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பதால் தான் பொது இடத்தில் எழுதுகிறான். நாம் கருத்து சுதந்திரம் என்பதை ஊடகம் என்பதை தாண்டி இதற்கும் விரிவுபடுத்தி பார்க்க வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்

இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

10
ஏழை பணக்காரன் 3

ஏழை பணக்காரன் 3.டி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையினர் ஒரு வீட்டை வாங்கி அதற்கு தவணை கட்டுவதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். வீட்டு லோனை நினைத்து, மேலாளர் மனம் கோணாமல் ராப்பகலாக உழைத்து கொட்டுகிறார்கள். எப்படியாவது, கடனை கட்டி, வீடு சொந்தமாக்கி, ஓரளவு பணத்தை சேமித்து விட்டு ஓய்வு பெற முடியுமா என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

கடந்த ஜூலை 31-ம் தேதி இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிபுலாலின் கதையே வேறு. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவருக்கு சொந்தமாக 700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவற்றை மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரே பையில் எல்லா முட்டைகளையும் போட வேண்டாம் என்று அடுத்து ஜெர்மனியின் பெர்லினிலும், ஃபிராங்க்ஃபர்ட்டிலும் வீடுகளை வாங்கியிருக்கிறது சிபுலாலின் சொத்துக்களை நிர்வகிக்கும் குடும்ப அலுவலகம்.

சிபுலால்
சிபுலால்: சியாட்டில், பிராங்க்பர்ட், பெர்லின்..அடுத்து எங்க வாங்கலாம், அண்டார்டிகாவிலா?

அது என்ன குடும்ப அலுவலகம் என்று கேட்கிறீர்களா? கடன் தவணை கட்டி, வரிச் சலுகை பெற இன்சூரன்ஸ் பாலிசி போட்டு, சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து, வருடக் கடைசியில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு கணக்காளரை அணுகுவதுதான்  மாதச் சம்பளம் வாங்குவோரின் நடைமுறை.

ஆனால் ஒருவருக்கே பல நூறு வீடுகள், சில நூறு கோடிகள் சொத்திருந்தால் அவற்றை நிர்வாகம் செய்வது உடமையாளரால் மட்டும் சாத்தியமில்லை. சிபுலால் போன்ற பெரும் பணக்கார குடும்பங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து, முதலீடுகளை நிர்வாகம் செய்ய இருக்கும் தனிச்சிறப்பான நிறுவனங்களைத்தான் குடும்ப அலுவலகம் என்கிறார்கள். இந்தியாவில் சிபுலால் குடும்பத்தினரைப் போன்று 40-50 பணக்காரர்கள் குடும்ப அலுவலங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவை கையாளும் மொத்த சொத்து மதிப்பு ரூ 1 லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடுகிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.

சிபுலால் குடும்ப அலுவலக நிறுவனத்தின் நிர்வாகியாக பெங்களூரு ஐ.ஐ.எம்மிலும் பிட்ஸ் பிலானியிலும் படித்த செந்தில் குமார் பணிபுரிகிறார். குடும்ப நிர்வாகம் என்பதால் காமோ சோமோ வென்று நிர்வாகம் பார்க்கும் வேலை இல்லை இது. அதனால்தான் உயர்தர மேலாண்மை அறிவுப் புலிகள் இங்கே தேவைப்படுகின்றன.

ஏழை பணக்காரன்“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுதான் உடனடி வருமானம் தருவதோடு, எதிர்காலத்தில் முதலீட்டின் மதிப்பை பெருக்குவதற்கும் உத்தரவாதமானது” என்கிறார் செந்தில் குமார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தையே தலைமை வகித்து நடத்திய சிபுலால் கூட, ‘நாலு வீட்டை வாங்கிப் போட்டால் பணத்துக்கு உத்தரவாதம்’ என்ற முறையில்தான் தனது பணத்தை முதலீடு செய்திருக்கிறார். என்ன, சில லட்சம் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கம் உள்ளூரில் வீடு வாங்கினால் பல கோடி குவித்திருக்கும் இவர் சியாட்டில், பெர்லின் என்று சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறையில் தனது பணத்தை இறக்கியிருக்கிறார். இன்றைய சந்தை மதிப்பில் இவருக்கு சொந்தமான வீடுகளின் மொத்த மதிப்பு $10 கோடி (ரூ 600 கோடி)-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

சிபுலால் அளித்த பேட்டி ஒன்றில், அவருக்கு சொந்தமான 700 வீடுகள் பற்றி கேட்டதற்கு, “என்னுடைய பணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதியான அடித்தளத்தோடு, போதுமான லாபம் வருவதை உறுதிப்படுத்துகின்றனர். அந்த வகையில், ரியல் எஸ்டேட் முதலீடு ஒரு முக்கியமான வகை என்று சொன்னார்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.

சுருதி சிபுலால்
சுருதி சிபுலால்: அப்பா ஐ.டி துறை தொழிலதிபர், மகள் சுற்றுலாத் தொழில் தொழிலதிபர்…

மற்றபடி தனது சொத்தை தொழிற்துறையிலோ, இல்லை தனது துறையிலோ முதலீடாக்கி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமே என்று முதலாளித்துவ கனவின் ஆரம்பத்தில் இருக்கும் கோயிந்துகள் நினைக்கலாம். முதலாளித்துவமே வேலை வாய்ப்பு கொடுப்பதில் இல்லை, வேலை செய்வோரின் உழைப்பைச் சுரண்டுவதில்தான் இருக்கிறது என்பதால் சிபுலால் ‘சாமர்த்திய’மாகத்தான் சொத்து பெருக்குகிறார்.

இந்திய அரசிடம் வரிச் சலுகை பெற்று, மாநில அரசுகளிடம் மலிவு விலையில் நிலம் பெற்று, படித்த இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு வேலை செய்ய வைத்து குவித்த பணத்தை சிபுலால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துகிறார். ஐ.டி துறை ஊழியர்களோ இந்த சூதாட்டத்தில் தம்மையும் சேர்த்து விளையாடுவது தெரியாமல் வாழ்க்கையால் விரட்டப்படுகிறார்கள். இணையத்தில் கே.ஆர்.அதியமான் முதல் பிரதமர் அலுவலகத்தில் மோடி வரை செய்யும் வளர்ச்சி குறித்த பஜனையின் ஒரு முகம் இது.

சிபுலால் 1981-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 7 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர். அவர், அவரது மனைவி குமாரி, மகள் சுருதி, மகன் சிரேயஸ் ஆகியோர் அடங்கிய குடும்பத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2.2% பங்குகள் சொந்தமாக உள்ளன. இன்ஃபோசிஸ்சின் மொத்த சந்தை மதிப்பு $3000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம்) என்பதை வைத்துப் பார்க்கும் போது சிபுலால் குடும்பத்துக்கு சொந்தமான அதன் 2.2% பங்குகளின் மதிப்பு ரூ 3,900 கோடி.

ஏழை பணக்காரன் 2கொலம்பியா பிசினஸ் கல்லூரியில் மேலாண்மை பட்டம் படித்து மெரில் லிஞ்சில் வேலை அனுபவம் உடைய சிபுலாலின் மகள் சுருதி இந்தியாவில் ரியல் எஸ்ட்டேட் முதலீடுகள் மூலம் பணத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவின் யூபி சிட்டியில் கேப்பர்பெரி, ஃபாவா உணவகங்கள் உள்ளிட்டு பல மேட்டுக்குடி உணவகங்களை நடத்தி வருகிறார். மாதச் கடைசியில் கையேந்தி பவன்களை நம்பி வாழும் நடுத்தர வர்க்க ஐ.டி ஊழியர்களின் கனவுகளை முதலீடாக்கி சுருதி, சுருதி சுத்தமாக ரோட்டரி கிளப் கனவான்களுக்கான உணவகத்தை இலாபகரமாக நடத்தி வருகிறார்.

தமாரா கூர்க் என்ற 170 ஏக்கர் காபி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் விரிந்திருக்கும் ஆடம்பர தங்குமிடம் அவரது செல்ல திட்டம். தமாரா நிறுவனம் திருவனந்தபுரத்தில் தமாரா 100 அறைகளைக் கொண்ட விடுதியை கட்டி வருகிறது. கொடைக்கானலில் ஆடம்பர சுற்றுலா தங்குமிடம் உருவாக்கும் திட்டம் ஒன்று ஒப்புதல்களுக்கு காத்திருக்கிறது. இவையெல்லாம் மேட்டுக்குடி சீமான் – சீமாட்டிகளை வசதியுடன் தாலாட்டி வாழவைக்கும் புண்ணிய தலங்கள். எனவே தட்சணையும் அதிகம்.

தாமரா, கூர்க் இல்லம்
கர்நாடகா கூர்க் பகுதியில் மேட்டுக்குடி கனவான்களுக்காக சுருதி சிபுலால் கட்டியிருக்கும் கானக மாளிகை!

இத்தகைய பெரும் அளவிலான முதலீடுகளுக்கு ஒரு அடிக்குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக இரண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறது சிபுலால் குடும்பம். சிபுலாலின் அப்பா, அம்மா பெயரிலான சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை, 2004-ம் பதிவு செய்யப்பட்ட அத்வைத் அறக்கட்டளை மூலம் வசதி குறைந்த ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கும் மேல் படிப்புக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது சிபுலால் குடும்பம். இந்த பிச்சை உதவிக்கும், அந்த பெருந்தொழிலுக்கும் உள்ள முதலீடு மலைக்கும் மடுவுக்குமானது என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. இருப்பினும் மடுவின் ஒளியில் மலைகள் மறைந்து கொள்கின்றன.

தனிநபரிடம் குவியும் இத்தகைய செல்வம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகையாகவோ, சிபுலாலின் 700 அபார்ட்மென்டுகளாகவோ, ஆடம்பர சொகுசு கார்களாகவோ உருவம் எடுப்பதோடு, அவர்களது செல்வத்துக்கு அடிப்படையான உழைப்பை வழங்கும் கோடிக்கணக்கான மக்கள் மீதான சுரண்டலை அவை மேலும் மேலும் அதிகப்படுத்தவே செய்கின்றன. 21-ம் நூற்றாண்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது இத்தகைய திமிங்கலங்களை மட்டும்தான் உருவாக்குகின்றன.

ஆனால் இந்த திமங்கலைத்தான் “உழைத்து முன்னேறிய உத்தமர்கள்” என்று ஊடகங்கள் வாழ்த்து மழை பொழிகின்றன.

–    அப்துல்  

மேலும் படிக்க:

மீத்தேனை விரட்ட காவிரியே நீயும் போர்புரி !

5

எழுந்தாய்! வாழி காவிரி!

பொங்கி வரும் காவிரியே – கொஞ்சம்
தங்கிச் செல்லாயோ!
கடைமடை இலை நரம்பு வரை
வந்து நில்லாயோ!

கிருஷ்ணராஜ சாகர்
பொங்கி வரும் காவிரியே – கொஞ்சம் தங்கிச் செல்லாயோ! கடைமடை இலை நரம்பு வரை வந்து நில்லாயோ!

தும்பி முகம் கழுவி
நாளாச்சு – எங்கள்
தூளி துணி அலசி
நாளாச்சு!

வெம்பி அழும்
எம் குழந்தை வேண்டுவது
தாய்ப்பால் மட்டுமல்ல,
தாயே, உன் தண்ணீர் பெருக்கின்
உலகூட்டும் ஓசையும்தான்.

மேட்டூர் மேலெழும்ப
காட்டூர் தென்னை மார் சுரக்கும்,
கல்லணை கண் திறக்க
உள் அணைகள் உயிர் சிலிர்க்கும்.

ஈரக்காற்று
சேதி சொல்ல
வரப்புதடு சிலுசிலுக்கும்.
நெடுநாள் காய்ந்த
வயலின் வெடிப்பும்
கெடுநாள் வெடித்த
உழவனின் நாவும்
ஈரம் பார்க்கும்
நேரம்… தவிக்கும்!

ஒகேனக்கல்
இலை, தழைகள் மனங்குளிர மட்டுமா? இதயம் குளிரவும் இலக்கியம் வரை பாய்ந்த காவிரியே…

இலை, தழைகள்
மனங்குளிர மட்டுமா?
இதயம் குளிரவும்
இலக்கியம் வரை பாய்ந்த காவிரியே…

பட்டினப் பாலையில்
பலவகை மிளிர்ந்தாய்

சிலப்பதிகாரத்தில்
சீர் தமிழ் ஒளிர்ந்தாய்!

மணிமேகலையிலும்
மதகு நுழைந்தாய்

கம்பனின் கவிதைச்
சந்தத்தில் கலந்தாய்!

ஆழ்வார் பாசுரம் குழைய
நீதான் ஈரம் காத்தாய்
அடியார் புராணங்களுக்கும்
நீதான் அள்ளிக் கொடுத்தாய்
தஞ்சை தண்டச் சோறுகளை
எங்கள் பெரியார் வாயால்
நீதான் பிரித்து மேய்ந்தாய்!

ஒகேனக்கல் காவிரி
இன்று போல் என்றும் நீ ஓடினால் அல்லவோ – எங்கள் எலும்பும் தோலும் உணர்ச்சிகள் பழகும்!

எதையோ தேடித் தேடி
ஓடி, ஓடி
கம்யூனிஸ்டுகளின் முகம் பார்த்து
கடைசியாய் அகம் நிறைந்து
காவிரியே!
லட்சிய நடை பயின்றாய்!

ஒரு நாள் அல்ல
பல நாள்
விவசாயி அழுத கண்ணீர்
துள்ளி வரும் காவிரியே
உன் துணையால் மட்டுமே விலகும்!
இன்று போல் என்றும்
நீ ஓடினால் அல்லவோ – எங்கள்
எலும்பும் தோலும்
உணர்ச்சிகள் பழகும்!

காவிரியே நீ நிறைந்தால்
எங்கள் கலயங்கள் நிறையும்.
காவிரியே நீ நடந்தால் – எங்கள்
கால்நடைகள் நடக்கும்!

காவிரியே நீ விரிந்தால்
பூச்சிகள் இறகு விரியும்!

காவிரிக் கண்ணே! உன் மென்மை
கரைப் பூக்களின் இதழ்களில் தெரியும்.

தழுவிடும் காவிரித் தாயே – எங்கள்
தலைமுறை உதிரம் கலந்தாயே!
ஓராயிரம் உயிர்களும் நீயே – எங்கள்
உணர்வுப் பெருக்கும் நீயே!

மேட்டூர் அணைக்கு அருகில்
சிறை உடைத்து வந்தாய் காவிரித் தாயே – பார்! எம் மண்ணைச் சிறைபிடிக்க மறுகாலனி மீத்தேன் வாயே.

சிறை உடைத்து வந்தாய்
காவிரித் தாயே – பார்!
எம் மண்ணைச் சிறைபிடிக்க
மறுகாலனி மீத்தேன் வாயே.
உயிர் தழைக்க
ஓடி வந்தாய் நீயே! – தலைமுறை
உயிரெடுக்க மீத்தேன் வாயே!

புதைந்து கிடக்கும்
படிம எரிபொருள் எடுத்து – மக்கள்
பகை முதலாளி லாபம் பார்க்க
நனைந்து கிடக்கும் மண்ணின்
குடலை அறுக்க
துணிந்துவிட்டது அரசு.

துள்ளிவரும் காவிரித்தாயே!
துணைபோகும்
துரோகிகள் முகத்தில் உரசு!

விளைந்து கொடுத்த
காவிரிப் படுகைமேல்
வெட்டு விழுந்தால்,
வெளியேறப் போவது
மீத்தேன் அல்ல – எங்கள்
விவசாயி வர்க்கத்தின் நெருப்பு!

உழவு நடந்தால்
ஊரே வாழும் – மீத்தேன்
இழவு நடந்தால்
ஊரே சுடுகாடாகும்!

திருச்சி
நன்னீர் கெட்டு தண்ணீர் உப்பாகும். பென்சீன், டொலுயீன் கலந்து இனி… புற்றுநோயே முப்போகம்!

நன்னீர் கெட்டு
தண்ணீர் உப்பாகும்.
பென்சீன், டொலுயீன் கலந்து
இனி… புற்றுநோயே முப்போகம்!

ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு
நாட்டை ஆளும்
வேஸ்ட்டர்ன் இந்தியன்களை விரட்டாவிடில்
நாம்
மண்ணின் மைந்தன் என்பதே தப்பாகும்!

நன்றி மறக்கமாட்டோம் காவிரி,
எங்கள் கரைகளில்
நம்பிக்கையோடு பூ விரி!

சூரியன் முதுகு தேய்க்க
எருமை ஊறிய குளங்கள்,

மணிக்கழுத்தை திருப்பி
மைனாக்கள் தெளிநீர் குடித்த
வரப்போடைகள்,

தூக்கு வாளி பழஞ்சோறுண்டு
வாய்க்காலில் கழுவ
நீராகாரம் அருந்த
நீண்டு வரும்
பொடிமீன் வரிசைகள்.

நாற்றாங்காலொடு
மல்லுக்கட்டும் காற்றுக்கு
வெள்ளைக் கொடி காட்டும்
செங்கால் நாரைகள்.

நாற்று நடவு
ஈ, எறும்பு, செடி, கொடி எல்லா உயிர்க்கும் ஈந்தாய் காவிரி, தன்மானம்!

பூச்சிகளின் துள்ளொலிக்கு
தலையசைக்கும் புது நாத்து
பச்சை மணம் கமழ
பயணக் களைப்பை
புத்துணர்ச்சியாக்கும் வயக்காத்து!

ஈ, எறும்பு, செடி, கொடி
எல்லா உயிர்க்கும்
ஈந்தாய் காவிரி, தன்மானம்!
ஊர் அழிய உள் நுழையும்
மீத்தேன் திட்டத்தை ஒழித்துகட்டி
உயிர்களனைத்தும் காப்போம்! உன் மானம்!

பலநூறு ஆண்டுகள்
உயிரினம் பழகி ஓடி – காவிரி
வண்டல் சேர்த்த வளத்தை
ஒரு பன்னாட்டுக் கம்பெனி லாபத்தில்
புதைப்பதுதான் வளர்ச்சித் திட்டமா?
பல்லாயிரம் உயிர்க்கு சோறு போடும்
சுற்றுச்சூழலை அழித்துவிட்டு
சில பணக்கார நாய்களுக்கு
எச்சிலை நம் நிலமா?

பூத்தேன் பொழிந்த
காவிரி மண்ணில்
மீத்தேன் தீயின் வெப்பம்.
தடுத்தேன், தகர்த்தேன் என
ஊர் திரளாவிடில் – தலைமுறைக்கே
தரிசாகிவிடும் கர்ப்பம்!

வயல் வெளி
பல்சக்கரத்தால் பன்னாட்டுக் கம்பெனி – உன் புல்முகம் சிதைத்தால் பொறுத்திடுவோமா? அவனை புதைத்த இடத்தில்
புல்லாய் எழுப்புவோம் உன்னையே!

எங்கிருந்தோ வரும்
கம்பெனி கொள்ளைக்காக
விவசாயம் அழித்து – நாம்
சொந்த நாட்டு அகதிகளாகும் துயரம்,
காவிரித் தண்ணீர் குடித்தவனென்றால்
கார்ப்பரேட் நரியை விரட்டியடிக்க
காவிரியோடு நம் கைகளும் உயரும்!

ஒரு சில முதலாளி சம்பாதிக்க
உதிரம்கலந்த காவிரி மண்முகம்
உப்புநீர் பூப்பதோ?
கழிவுநீரில் காவிரிமுகம் கருக்கினால்
அவன் கதை முடிக்காமல்
கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதோ!

நாணல் பூக்கள் முகம் நனைக்கும்
நதியே உன் தீரத்தில்
மீத்தேன் குழாய்கள் இறங்குமோ?
எதிரியின் நாடி நரம்புகள் அறுக்காமல்
எங்கள் உதிரம் என்ன உறங்குமோ!

நெல், கரும்பு, வாழை
வெற்றிலை, உளுந்து, பயிறு
ஓங்கிய தென்னை, பனை – எமை
தாங்கிய தமிழென
அனைத்தும் ஈன்ற காவிரி அன்னையே,
பல்சக்கரத்தால்
பன்னாட்டுக் கம்பெனி – உன்
புல்முகம் சிதைத்தால்
பொறுத்திடுவோமா?
அவனை புதைத்த இடத்தில்
புல்லாய் எழுப்புவோம் உன்னையே!

குடகு தாவி பாறை வீழ்ந்து
பால்போல் நுரைத்து,
பல்சுவை பயின்று பயின்று,
தெள்ளிய அறிவுபோல்
திகழ்ந்து விரிந்து
மாநிலம் சிறக்கும் மகளே காவிரி!
அடகு போகும் தேசம் காக்க
ஆர்த்தெழும் அரசியல் முழக்கொலி
நீயும் ஆதரி!

எங்கள் அடிவயிறு இறங்கும்
மீத்தேன் ஆழ்துளை கிணறுகள்
பாழ்படும் பயிர்நிலங்கள்!
விடமாட்டோம் என
மீத்தேன் களையை விரட்டியடிக்கும்
மக்களோடு
காவிரியே நீயும் போர்புரி!

அழிவுத்திட்டம் அமலானால்
கழிவாய்ப் போகும் காவிரி வாய்க்கால்.
எங்கள் குளங்களின் வாயில்
மீத்தேன் நஞ்சா?
எங்கள் குயில்களின் குரலில்
ஆசிட் வீச்சா?

பன்னூறு ஆண்டுகள்
பாசனம் செய்த பயிர்நிலமெல்லாம்
பன்னாட்டு கம்பெனி பூசனம் புடிக்க
இதுதான் வளர்ச்சியின் பேச்சா?

பொன்னி நதியே பொங்கிடுவாய்!
போராட்ட நதியால்
காவிரிப்படுகை எங்கும்
கலந்திடுவாய்!

– துரை.சண்முகம்

மோடி சுல்தானை அமெரிக்க பாதுஷா விரும்புவது ஏன்?

2

லகின் ஒற்றைத் துருவ அமெரிக்க வல்லரசு, நாளைய ‘வல்லரசு’ கனவில் மிதக்கும் மோடியின் இந்திய அரசை துரத்தி துரத்தி தனது காதல் வலையை வீசிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்ற பிறகான கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.

ஒபாமா, மோடி
கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.

அதுவும் ஜூலை 31 முதலான 8 நாட்களில் பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவு என ஒபாமாவின் மூன்று மூத்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு அணி வகுத்து வந்திருக்கின்றனர். இவர்களில் கடைசியாக வந்தவர் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தலைமையிலான அதிகாரிகள் குழு என்பது தற்செயலானது இல்லை.

ஹேகலுக்கு முன்பு ஜூலை 31 முதல் மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கரும் பெருவாரியான அதிகாரிகள் பட்டாளத்துடன் டெல்லி வந்திருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கும் இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை மேலும் முடுக்கி விடுவது, சுங்க நடைமுறைகளை தளர்த்துவதற்கான உலக வர்த்தகக் கழகத்தின் சமீபத்திய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க வேண்டியதன் அவசியம் பற்றி பேசி விட்டு போனார்கள்.

மோடி பிரதமராவது உறுதியானதும், மோடிக்கு விசா மறுத்து எரிச்சலூட்டிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை உடனடியாக மூட்டை கட்டி அனுப்பினார்கள். 10 ஆண்டுகளாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருந்த மோடி இந்திய பிரதமர் ஆனதும், அதிபர் ஒபாமா அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

மோடி அரசு பதவி ஏற்ற 10 நாட்களுக்குள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இந்தியா வந்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அவரது தஜ்கிஸ்தான், சீனா பயணங்களுக்கு மத்தியில், வரலாறு காணாத வகையில் இந்துத்துவ பிரதமராக பதவியேற்றிருந்த மோடியின் புத்தம் புதிய அரசை எடை போட்டு பார்க்க டெல்லிக்கும் ஒரு நடை வந்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் தொரைசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்திச் சென்றார்.

Rajnath_Singh_US_Deputy_Secy_State_William_Burns
சுதேசி ராஜ்நாத்சிங் விதேசி வில்லியம் பர்ன்சுடன்

அமெரிக்க வெளியுறவுத் துறையில் நிஷா பிஸ்வாலுக்கு மூத்தவரான துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் ஜூலை 2-வது வாரம் டெல்லிக்கு நேரில் வந்தார். மோடியை செப்டம்பர் மாதம் அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமாவின் அழைப்பை தனிப்பட்ட முறையில் கையளித்தார். இதன் மூலம் ஜூலை இறுதியில் வரவிருந்த ஜான் கெர்ரியின் ராணுவ நட்புறவு பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் ஏற்படுத்தினார். பெரும் விலைக்கு விற்கப்படும் தனது ராணுவ நட்புறவை இந்தியா மீது மேலும் சுமத்துவதற்காக அமெரிக்காவின் இந்திய படையெடுப்பு தொடர்ந்தது.

ஜூலை மாத இறுதியில் இந்தியா வந்து சேர்ந்த ஜான் கெர்ரி, பென்னி பிரிட்ஸ்கர் குழுவினர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து அமெரிக்க – இந்திய பாதுகாப்பு நட்புறவு உரையாடல் கூட்டத்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், “இந்தியர்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று சுஸ்மா சுவராஜ் கூறியதாக தலைப்புச் செய்திகள் வெளியாகின. அதைக் கூட பெருந்தன்மையாக சகித்துக் கொண்டு அனுமதித்தது அமெரிக்கத் தரப்பு. பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இந்த காமெடி செய்திகள்தானா பிரச்சனை?

ஜான் கெர்ரி நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியுடனும் பிரிட்ஸ்கர் வர்த்தத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்தித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது குறித்து விளக்கினார் கெர்ரி. இறுதியாக பிரதமர் மோடியை சந்தித்தார். தன்னை சந்திக்க மோடி கடைசி நேரத்தில்தான் ஒத்துக் கொண்டது கெர்ரியை வருத்தமடைய செய்தது என்று பெரியண்ணனையே நம்ம அண்ணன் காக்க வைத்து விட்டார் என்று பூரித்தன இந்திய ஊடகங்கள்.

ஜான் கெர்ரி
ஜான் கெர்ரி – பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது காமெடி செய்திகள்தானா பிரச்சனை?

மேலும், உலக வர்த்தகக் கழகத்தின் புதிய ஒப்பந்தமான, சுங்க விதிகளை தளர்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று மறுத்து, இந்திய மக்களின் நலன்களை பாதுகாப்பது தன்னைப் போன்ற உறுதியான தலைவரால்தான் முடியுமென மோடி நிரூபித்ததாக அவரது அடிப்பொடிகள் போற்றி மகிழ்ந்தனர்.

‘காசா முதல் உக்ரைன் வரை, சீனா முதல் ஆஸ்திரேலியா வரை அமெரிக்க அரசுக்கு உலகை பரிபாலிக்கும் ஆயிரம் பொறுப்புகள் இருக்கும் போது அமெரிக்கா இப்படி முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவை பாராட்ட வைத்த உறுதியான தலைவர் மோடி. இந்தியா உறுதியாக இருந்தால்தான் உலகம் நம்மை மதிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது’வென மோடி பக்தர்கள் உள்ளம் பூரித்து போகின்றனர். ஆனால், போதுமான தேவைகள் இல்லாமல் அமெரிக்க அங்கிளின் தொப்பி ஒரு பக்கமாக சரிவதில்லை.

அமெரிக்க நிறுவனங்கள் மலிவு விலையில் உற்பத்தித் தளம் அமைத்துக் கொள்ளவும், மூலதனமிட்டு லாபம், வட்டி, உரிமத் தொகை என்று அள்ளிச் செல்லவும் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் காரணங்களோடு, 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளிலேயே அதிக அளவு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்பதுதான் அமெரிக்க காதல் சீராட்டலின் அடிப்படை.

குடியரசு தின பேரணி
டெல்லியில் பேரணியில் விடப்படும் ஆயுதங்கள்

ஒவ்வொரு ஆண்டும் உலகின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 10% இந்தியாவுக்கு வந்து சேருகிறது. இவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதன் மூலம் இந்தியா ராணுவ வல்லரசாகப் போகிறது என்று இந்துத்துவவாதிகள் கதை கட்டலாம். ஆனால், இந்தியாவின் ஆயுத ஒப்பந்தங்கள் இடைத்தரகர்கள் பல நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கும், ஆயுத விற்பனை செய்யும் நாடுகளின் விருப்பத்திற்கும் ஏற்றபடிதான் போடப்படுகின்றன. அப்படி வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்ற நாட்டை சார்ந்தே இந்திய ஆளும் வர்க்கங்கள் இருக்க வேண்டியிருக்கிறது. அடுக்கி வைத்து ஆளும் வர்க்கங்கள் அழகு பார்க்கவும், டெல்லியில் பேரணி நடத்தவும் மட்டுமே இந்த ஆயுதங்கள் பயன்படும். இது இன்னொரு கோணத்திலும் உண்மையாக உள்ளது.

“இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே விற்கிறது, முன்பு ரசியாவிடம் வாங்கியது போல தாக்குதல் ஆயுதங்களை விற்பதில்லை” என்கிறார் பாதுகாப்புத் துறை வல்லுனர் பிரம்மா செல்லானி. “மேலும், இந்தியாவுடன் 2009 முதல் பாதுகாப்பு நட்புறவு உரையாடல் நடத்தி வரும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் 2004 முதல் பாதுகாப்பு உடன்பாடும், 2006 முதல் ராணுவ நட்புறவு உரையாடலும் நடத்தி வருகிறது. சீனாவுடன் 1997 முதல் ஆக்கபூர்வமான நட்புறவு உரையாடலை பராமரித்து வருகிறது”. இப்படி அனைத்து தரப்புகளுக்கும் ஆயுதம் விற்பதுதான் அமெரிக்க ராணுவ தந்திரம்.

ரசியாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் திரும்பியது அமெரிக்க ஆயுதத் துறைக்கு புதிய போனஸ் ஆக இருந்தது. 1970-களில் எகிப்திய அரசு, ரசிய வாடிக்கையாளராக இருந்ததை மாற்றி அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்ததற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது இது என்கிறார் பிரம்மா செல்லானி. எகிப்து அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கு கூட அமெரிக்க அரசு தானே நிதி உதவி அளிக்க வேண்டியிருந்தது. ஆனால், ‘உப்பு போட்டு தின்னும்’ இந்திய ஆளும் வர்க்கமோ, இந்திய மக்களின் பணத்தை ரொக்கமாகவே கொடுத்து அமெரிக்க ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன. எனவே, இந்தியாவுக்கு விற்பது அமெரிக்காவுக்கு வணிக ரீதியில் மேலும் விருப்பமானதாக இருக்கிறது.

கலாம், புஷ், மன்மோகன்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுத விற்பனையாளர்களில் ரசியாவையும் இசுரேலையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுத விற்பனையாளர்களில் ரசியாவையும் இசுரேலையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது. அணுஉலைகளை விற்பது குறிப்பிடத்தக்க அளவு நடக்கவிட்டாலும் 2005-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பான வாக்குறுதியாக சேர்க்கப்பட்டிருந்த ஆயுத விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

10 ஆண்டுகளுக்கு $10 கோடியாக (ரூ 6,00 கோடி) இருந்த அமெரிக்காவின் ஆயுத விற்பனை இப்போது பல நூறு கோடி டாலர்கள் மதிப்பை தாண்டியிருக்கிறது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் இந்திய – அமெரிக்க உறவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக சித்தரிக்கப்பட்ட தேவயானி கோப்ரகடே விவகாரம் சூடுபறந்து கொண்டிருந்த போது, அமெரிக்க அரசை எதிர்த்து இந்திய ‘தேசமே’ வீரச்சவடால்கள் அடித்துக் கொண்டிருந்த போது மன்மோகன் அரசு $101 கோடி (சுமார் ரூ 6,000 கோடி) சி-130ஜே ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தத்தை ஒபாமா அரசுக்கு பரிசாக வழங்கியது. முன்னதாக, செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமாவை சந்தித்த போது கொண்டு போன பரிசுப் பொருட்களில் $500 கோடி (சுமார் ரூ 30,000 கோடி) மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கும் ஒப்பந்தமும் இருந்தது.

சென்ற ஆண்டு  இந்திய அரசின் இணைய பாதுகாப்புத் துறை அமெரிக்காவிலிருந்து $190 கோடி மதிப்பிலான தளவாடங்களை இறக்குமதி செய்து அமெரிக்க ஆயுதங்களை வாங்கிய மிகப்பெரிய வெளிநாட்டு வாடிக்கையாளர் என்ற பெருமையை சாதித்திருந்தது.

சக் ஹேகல்
“இந்தியா அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதில் சட்ட, நிர்வாக நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது”

தேவயானி விவகாரம், மோடியின் உரசப்பட்ட தன்மானம், மன்மோகன் போன்று ஒரு தொலைபேசி அழைப்பில் அமெரிக்க தேவைகளை சாதிக்க முடியாத மோடியின் இந்துத்துவ உறுதி, மன்மோகன் அரசை விட பல மடங்கு மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை வாரி வழங்கத் தயாராக இருக்கும் மோடி பாணி ‘வளர்ச்சி’ இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும் அமெரிக்க அரசு தனது கவரும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இருதரப்பு உறவுகளில் இருந்த இத்தகைய முணுமுணுப்புகளை வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரிகள வந்து சீர் செய்த பிறகு, வந்து இறங்கியது பீரங்கி வண்டி. மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல், “இந்தியா அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதில் சட்ட, நிர்வாக நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் கூறுவதை வரை காத்திருக்காமல், பாதுகாப்புத் துறையில் 49% வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மோடி அமைச்சரவை ஏற்கனவே எடுத்திருந்தது. “அந்த முடிவு இந்திய – அமெரிக்க ராணுவ உறவு முழு பரிமாணத்தை எட்ட உதவும்” என்று சக் ஹேகல் மோடி அரசின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.

ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும் நெருக்கடியான சூழலில் இந்தியாவில் இருந்த சக் ஹேகல், நடுவில் அமெரிக்க உயர் மட்ட குழு கூட்டத்தில் தொலை தொடர்பு மூலம் கலந்து கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு இந்தியப் பயணம் அமெரிக்க ஆயுதத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இவ்வளவு சிரமத்துக்கிடையே இந்தியா வந்திருந்த அவர், “இந்திய அமெரிக்கக் கூட்டுறவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், தொட்டறியத்தக்க பலன்களை தருவதாகவும், குறிப்பிடத்தக்க சாதனைகளை நோக்கியும் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதாவது, இந்தியா அப்பச்சே மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்களுக்கு $140 கோடி (சுமார் ரூ 8,400 கோடி) வருமானத்தை ஈட்டித் தரும் தொட்டறியத்தக்க பலனாக இருக்கும்.

குறிப்பான பலனளிக்க காத்திருக்கும் இன்னொரு சாதனை அடுத்த தலைமுறை ஜாவ்லின் பீரங்கி வண்டி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வாங்கும் ஒப்பந்தங்களை மோடி அரசு நிறைவேற்றி கொடுப்பது. அது குறித்தும் சக் ஹேகல் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, தெற்காசியாவில் இந்தியாவை அமெரிக்க அடியாளாக உறுதி செய்து விட்டு, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு நட்புறவு உரையாடல் நடத்த போயிருக்கிறார் சக் ஹேகல்.

மோடி தர்பார்
மோடி சுல்தானின் தர்பாரில் அமெரிக்க பாதுஷாவின் பிரதிநிதிகள்

மேலும் மேலும் தாகத்துடன் புதுப் புது ஆயுதச் சந்தைகளை தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்திய ஆளும் அதிகார தரகர்கள் தலையில் மேலும் மேலும் அதிக விலையிலான பளபளப்பான ஆயுதங்களை திணித்து இந்திய மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் செல்ல ஆர்வமாக உள்ளது. இதை சாதிப்பதற்கு மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவுடன் அதிக எண்ணிக்கையிலான கூட்டு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நடத்துகிறது. அதன் மூலம் அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு சாதகமான அரசியல் மற்றும் தொழில்நுட்ப சூழலை உருவாக்கித் தருகிறது.

இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் பெருமளவுக்கு போட்டியில்லாமல் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் மூலம் முடிக்கப்படுகின்றன என்கிறார் செல்லானி. 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டி விற்பனை முறையில் அழைக்கப்பட்ட போது அமெரிக்க நிறுவனங்கள் ஒன்று கூட தகுதி பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அவர். இதிலிருந்தே அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அரசை எவ்வளவு மொட்டை அடிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களின் மதிப்பு, அமெரிக்கா இசுரேலைத் தவிர்த்த எந்த ஒரு நாட்டுக்கும் வழங்கும் மானிய உதவியை விட அதிகமானதாகும். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மானியமாக ஆயுதங்களை தருகிறது. அதன் மூலம் இந்தியாவை கூடுதல் ஆயுதங்களை வாங்கத் தூண்டுவதோடு, பாகிஸ்தான் போன்ற சர்வ மானிய ஆயுத வழங்கல்களுக்கான செலவுகளையும் இந்தியா போன்ற போலி வல்லரசு கனவு நாடுகளிடம் வசூலித்துக் கொள்கிறது.

இந்திய ஆளும் வர்க்கங்களோ தேச வேறி, போர் வெறி என்று சவடால் அடித்து மக்கள் பணத்தை ஆயுத பேரங்களில் அள்ளி விடுகின்றனர்.

இந்தியாவில் கூட்டு உற்பத்தி சாலைகளை அமைப்பதன் மூலம் ஆயுத உற்பத்தியில் தற்சார்பை எட்டுவோம் என்று மோடி சவடால் அடிக்கிறார். ஆனால், கொடுப்பவன் மனம் வைத்தால்தானே எடுப்பவன் பெற்றுக் கொள்ள முடியும். அமெரிக்காவோ, ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை போன்ற சாதாரண ரகங்களுக்கான கூட்டு உற்பத்தியை காரட்டாக தொங்க விட்டு, இன்னும் பெரிய தொகையிலான ஆயுத தளவாடங்களை  இந்தியாவின் தலையில் கட்ட திட்டம் தீட்டி வருகிறது.

அடுத்த மாதம் மோடி அமெரிக்கா போகும் போது, இந்திய நலன்களை அமெரிக்காவிடம் மேலும் விற்பதற்கான உச்சகட்ட உடன்பாடுகளுக்கான தயாரிப்புகள் அமெரிக்க அதிகாரிகளால் கடந்த சில வாரங்களில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன

தேசம் விலை போய்க் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

– பண்பரசு

மேலும் படிக்க

நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !

0

ன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஃபேஸ்புக் இன்னபிற சமூக வலைத்தளங்கள் கருத்து சுதந்திரத்தை அளிக்கும் நவீன சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சுதந்திரத்தின் உண்மை நிலை என்ன?

பேஸ்புக் சோதனை
பார்க்கும் நபரின் நிலைத்தகவல்களை (status) கண்காணித்து அவை அவர் பெற்ற நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா என சோதிக்கப்பட்டிருக்கின்றன

முகநூல் தனது பயனர்களின் நிலைத்தகவல்களை கொண்டு அவர்களுடைய மன உணர்வுகளை தூண்டும் திறன் குறித்த ஆய்வை நடத்தியுள்ளது சமீபத்தில் வெளியானது. ஆங்கில ஊடகங்களில் பரவலான விமரிசனத்திற்கு உள்ளான இந்த ஆய்வு, கருத்து சுதந்திரம் குறித்த நமது கேள்விக்கு விடையளிக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பயனர்கள் தங்களது முகப்பக்கத்தில் பெறும் செய்தி ஓடைகளை (newsfeeds) மாற்றியமைத்து ஒருவர் தொடர்ச்சியாக நேர்மறை அல்லது எதிர்மறை கருத்துக்களை மட்டும் காணுமாறு செய்திருக்கிறது முகநூல் நிறுவனம்.

இதைத் தொடர்ந்து அச்செய்தி ஓடைகளை பார்க்கும் நபரின் நிலைத்தகவல்களை (status) கண்காணித்து அவை அவர் பெற்ற நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா என சோதிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட இச்சோதனையில் சுமார் 7 இலட்சம் பயனர்களின் நிலைத்தகவல்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கான அவர்களது எதிர்வினையும், பேஸ்புக்கில் நடத்தையும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் ஆங்காங்கே இச்சோதனைக்கு எதிர்ப்பு கிளம்பிய போது, தனது சோதனை குறித்த தகவல், சரியான முறையில் பயனர்களுக்கு தெரிவிக்காததற்காக வருத்தம் தெரிவித்துள்ள ஃபேஸ்புக், தனது பயனர்களை சோதனயில் ஈடுபடுத்தியதற்காக மன்னிப்பு எதையும் கோரவில்லை.

சென்ற ஜூன் மாதம் இச்சோதனை குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக் பயனர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு பத்திரிக்கைகளும் மனித உரிமை அமைப்புகளும் முகநூல் நிர்வாகத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ட்விட்டர் தளத்திலும் கூட ஃபேஸ்புக்கிற்கு எதிர்ப்பை பதிவு செய்து அதை புறக்கணிக்குமாறும் நிலைத்தகவல்கள் பகிரப்பட்டன. இங்கிலாந்தின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பும்,  அமெரிக்காவின் FTC-யும் இப்பிரச்சனை தொடர்பாக பேஸ்புக்கிடம் விளக்கம் கோரியுள்ளன.

பேஸ்புக் சோதனை
நமது நாட்டில் பேஸ்புக் தங்களை சோதனை எலிகளாக்கியதற்கும், நிலைத்தகவலை கண்காணித்ததற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

ஆனால் நமது நாட்டில் பேஸ்புக் தங்களை சோதனை எலிகளாக்கியதற்கும், நிலைத்தகவலை கண்காணித்ததற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. சொல்லப் போனால் இக்காலத்தில்தான் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடிமைத்தனத்தில் ஊறிய இந்திய மனங்களுக்கு ஃபேஸ்புக்கின் இந்த கண்காணிப்பு முறை பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தாமலும் இருந்திருக்கலாம்.

ஏற்கனவே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியான போதும் அப்போதைய மன்மோகன் அரசும் கள்ள மவுனம் சாதித்தது நினைவிருக்கலாம். மன்மோகனை செயலற்ற பிரதமர் என்று விமர்சித்து, தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று அறைகூவிய மோடியின் அரசும், பாஜகவை ஒட்டுக் கேட்க வேண்டுமென கூறிய அமெரிக்காவின் ஆவணங்கள் வெளியானதற்கு முணுமுணுப்பை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை.

மேலும் தேர்தல் காலத்தில் மோடி கோஷ்டியின் கார்ப்பரேட் விளம்பரப் படையெடுப்புக்கு பேஸ்புக் பெரிதும் பயன்பட்டது. பதிலாக பேஸ்புக்கிற்கு பாஜகவின் கார்ப்பரேட் நன்கொடைகள் பயன்பட்டது. அதை ஒட்டி மோடி அதிகம் தேடப்படும் தலைவர் என ஃபேஸ்புக் அதிகாரிகள் சொல்லியதும் நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் பார்த்தால் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் சோதனைக்கு எதிர்ப்பு இல்லை என்பதன் காரணம் புரியும்.

முன்னர் கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது பயனர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்புடன் பகிர்ந்து கொள்வது குறித்து செய்தி வெளியான போதும் அந்நிறுவனங்களின் பயனர்களிடம் சிறு சலசலப்பு கூட எழவில்லை என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தனது பயனர்களின் நிலைத்தகவல்களை கண்காணிப்பதையும், உளவு நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதையும் சுட்டிக் காட்டும் போது, “ஆம் கண்காணித்தால் என்ன, நான் தவறு செய்யவில்லையே” – என சிலர் வாதிட்டார்கள். நாம் தவறு செய்வதை கண்காணிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்தது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. சொல்லப் போனால் இந்துத்துவம் உருவாக்கியிருக்கும் முசுலீம் எதிர்ப்பு சிந்தனையின் நீட்சியாக, தீவிரவாதிகளை கண்காணிக்க இத்தகைய தியாகம் அவசியம் என்றே இவர்கள் நியாயப்படுத்தினார்கள்.

பேஸ்புக் சோதனை
தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

ஆனால் இங்கே ஃபேஸ்புக் ஆய்வு செய்தது தனது விளம்பர வருமானத்தை அதிகரித்துக் கொள்ள, பயனர்களின் மனோபாவம் எப்படி இருக்கும் என்று தூண்டில் புழு போட்டு ஆசை காட்டி மோசம் செய்ததற்கு நிகரானது. இப்படி தனது பயனர்களை சோதனையில் ஈடுபடுத்துவது பேஸ்புக்கிற்கு முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அந்நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானிகள், பயனர்களின் மன உணர்வுகளை செயற்கையாக பலமுறை தூண்டியுள்ளனர். இதை ஃபேஸ்புக்கின் முன்னாள் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிய ஆன்ட்ரூ லாட்வினா தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைக்கு எதிரான எதிர்ப்புகள் அனைத்திலும் முகநூல் தனது பயனர்கள் அறியாமல் அவர்களை உளவியல் சோதனைக்கு உட்படுத்தியதும், அவர்களது நிலைத்தகவல்களை கண்காணித்ததும், செய்தி ஓடைகளை மாற்றியமைத்ததும் மட்டுமே தார்மீகப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பிரச்சனையின் அபாயகரமான மறுபக்கம் இச்சோதனை முடிவுகளில் உள்ளது.

உணர்ச்சிமிகு பகிர்தல்களின் மூலம் அவ்வுணர்ச்சி நிலைகளை பயனர்களின் பகுத்தறிவுக்கு தெரியாமலேயே கடத்த முடியும் என முகநூலின் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது முகநூல் நிலைத்தகவல்கள் ஒருவரின் உணர்ச்சிகளின் மீது, மனநிலையின் (mood) மீது வினையாற்றுகின்றன என்பதோடு ஒருவர் காணுறும் செய்தி ஓடைகளை (newsfeeds) மாற்றியமைப்பதன் மூலம் அவருடைய உணர்ச்சிகளையும் மாற்றியமைக்க முடியும் என்கிறன அம்முடிவுகள். நாளடைவில் அவர் என்ன அரசியல் பார்வையினை கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கூட இதன் மூலம் செய்ய முடியும். தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் அத்தகையவை.

எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

மகிழ்ச்சி, துன்பம் இன்ன பிற மனித மன உணர்வுகளை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதாக நீங்கள் பயன்படுத்தும் வசதி, உங்கள் மன உணர்வுகளை செயற்கையாக தூண்ட முடிவதையும், உங்கள் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல மெய்நிகர் உலகின் மாய உணர்ச்சிகள் உங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை ஃபேஸ்புக்கின் சோதனை நிருபித்திருக்கிறது. இனி நீங்கள் அழுவதும் , சிரிப்பதும் உங்கள் கையில் இல்லை. அவர்கள் அழச்சொன்னால் அழ வேண்டும், சிரிக்கச் சொன்னால் சிரிக்க வேண்டும்.

அப்போது அழுவதற்கும், சிரிப்பதற்கும் உரிய கருப்பொருளும், நிகழ்வுகளும் தலைகீழாக கூட மாறியிருக்கலாம். ஆக ஃபேஸ்புக் மூலம் நீங்கள் உங்கள் உலகை கட்டியமைக்க முடியாது. ஃபேஸ்புக்தான் உங்களது அறிவு, அரசியல் பார்வையினை கட்டியமைக்கும்.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

அம்மா போலீஸ் – கேலிச்சித்திரம்

0

amma-police-cartoon

படம் : ஓவியர் முகிலன்

அடிக்கட்டுமான ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கா, முதலாளி கொழுக்கவா ?

0

னியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பிறகு வருடாந்திர பட்ஜெட் தயாரிப்பு என்பது இலைமறை காயாகக்கூட இல்லாமல், மிகவும் அம்மணமாகவே உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் தெரிவிக்கும் திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றித் தரும் அறிக்கையாகவே மாறிவிட்டது. இப்படிபட்ட விசுவாசத்தைக் காட்டுவதில் நரேந்திர மோடி அரசின் பட்ஜெட் கொஞ்சங்கூட கூச்சநாச்சம் பார்க்கவில்லை என்பதே உண்மை.

2014 பட்ஜெட்ஆனால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திற்காகவே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பது போலவும் அதற்காகவே இந்த பட்ஜெட்டில் புதிய நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றுக்கு 2.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி வருகிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.குருமூர்த்தி.

பட்ஜெட் பற்றி குருமூர்த்தியும் ஊடகங்களும் உருவாக்கும் சித்தரிப்பு ஒரு மோசடி என்பதைப் புரிந்துகொள்ள “நாணயம் விகடன்” இதழ் (20.07.2014) வெளியிட்டுள்ள பட்டியலொன்றைக் கீழே தந்திருக்கிறோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அடிக்கட்டுமானத் திட்டங்களின் மூலம் கொழுத்த இலாபத்தை அறுவடை செய்யப் போகும் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ள அவ்விதழ், அந்நிறுவனங்களில் உடனடியாக முதலீடு செய்து இலாபம் பார்க்குமாறு நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.

  • துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை மேம்பாடு திட்டங்கள்: எல் அண்ட் டி., எஸ்ஸார் போர்ட்ஸ் மற்றும் ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா.
  • மின்சாரம், கச்சா எண்ணெ, இயற்கை எரிவாயு திட்டங்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், ஜெய்பிரகாஷ் பவர், கே.இ.சி.இண்டர்நேஷனல்.
  • ரியல் எஸ்டேட், ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தித் துறை: சோபா டெவலப்பர்ஸ், டாடா ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல், ஜே.கே. லட்சுமி சிமெண்ட்.
  • இந்த அடிக்கட்டுமானத் துறைகளுக்கு அப்பால், வங்கிகள் அடிக்கட்டுமானத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய நீண்ட கால இன்ஃப்ரா பண்டுகளைத் திரட்ட அனுமதிக்கப்பட்டிருப்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவையும்;
  • * வீட்டுக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால், ஹெச்.டி. எஃப்.சி.வங்கி, கிருக் ஃபைனான்ஸ் நிறுவனங்களும்;
  • விவசாயத் துறையில் புதிய யூரியா கொள்கை அமலுக்கு வர உள்ளதால் தீபெக் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனமும், சூரிய சக்தி மற்றும் உணவுப் பதப்படுத்தலுக்கு பட்ஜெட்டில் தரப்பட்டுள்ள முக்கியத்துவத்தால் ஜெயின் இர்ரிகேஷன், கோஹினூர் ஃபுட்ஸ் நிறுவனங்களும்;
  • நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகையால் ஏற்படும் பணப் புழக்கத்தால் ஹெச்.யு.எல்., ஐ.டி.சி., கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நுகர்பொருள் நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருக்கிறது நாணயம் விகடன்”.

தேச வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயர்களில் கொண்டுவரப்படும் எந்தத் திட்டத்தை அறுத்துப் பார்த்தாலும் கிடைக்கக்கூடிய சித்திரம் இதுதான்.
_______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
_______________________________

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

2

“நாங்கள் பிஷ்னோய்கள். நாங்கள் நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்வோம். தீமை செய்தவர்களை மறக்க மாட்டோம்.  எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம் மட்டும் தான். நாங்கள் ஏன் அமைச்சரைப் பார்த்து அஞ்ச வேண்டும்? அவர் தான் எங்களைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். ஒருவேளை சட்டம் அவரை தண்டிக்கவில்லை என்றாலும், நாங்கள் அவரை மன்னிக்கப் போவதில்லை”

நிகால் சந்த்ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ்லால் பிஷ்னோய் 86 வயதான ஒரு ஏழை விவசாயி. அரசியலில் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் பாலியல் வெறி பிடித்த மிருகம் ஒன்று தனது பேத்தியை கிழித்து சீரழித்துப் போட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரது அரற்றல்களில் ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்குகிறது.

பிரிஜ்லால் பிஷ்னோயின் பேத்தி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 20.12. 2010 அன்று ஓம் பிரகாஷ் என்பவனோடு திருமணம் முடிகிறது. ஓம் பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவன், பாரதிய ஜனதா கட்சியின் கீழ்மட்ட பொறுப்பு ஏதோவொன்றில் இருக்கிறான் என்பவை தவிர்த்து பிஷ்னோய் குடும்பத்தாருக்கு அவனைப் பற்றி மேல் விவரங்கள் தெரியாது.

”நாங்கள் கிராமத்தின் வெளியே விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தானிக்களில் (வயலின் நடுவே மரச்சட்டங்களால் தளம் உயர்த்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய மரக் குடிசை போன்ற அமைப்பு) வாழ்கிறவர்கள். கிராமத்தோடு எங்களுக்கு அவ்வளவாக தொடர்புகள் கிடையாது” என்கிறாள் பிரிஜ்லாலின் பேத்தி.

வெளியுலகம் தெரியாத அப்பாவி ஏழைகள் என்பதோடு, பிரிஜ்லாலின் பேத்திக்கு அடுத்ததாகப் பிறந்த இரண்டு தங்கைகளும் இருந்தனர். படித்து வழக்குரைஞராக வேண்டும் என்கிற தனது கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு கல்யாணத்திற்கு தயாரானாள் அந்தப் பெண்.

”நாங்கள் அவனுக்கு வரதட்சணையாக எங்கள் சக்திக்குட்பட்டு எவ்வளவோ கொடுத்திருந்தோம். என்றாலும், கல்யாணம் முடிந்த உடனேயே அவனது நடவடிக்கைகள் முற்றாக மாறின. மேலும் வரதட்சணை வாங்கி வர துன்புறுத்திக் கொண்டே இருந்தான்”

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஹரியானாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளான் ஓம்பிரகாஷ். தனது இளம் மனைவியை எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்தோடே கண்காணிப்பில் வைத்திருந்த ஓம்பிரகாஷ், வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் பூட்டிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளான்.

ஜெய்ப்பூரில் அவன் அடிக்கடி தனது வீட்டை மாற்றி வந்திருக்கிறான். மனைவிக்கு அவன் வாங்கிக் கொடுத்த உணவுப் பதார்த்தங்களில் ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறான்.

“நான் எப்போதும் ஒரு விதமான மயக்க நிலையிலும் ஆழ்ந்த தூக்கத்திலும் தான் இருந்தேன். விழிப்பான சொற்ப நேரங்களில் கூட அரைத் தூக்கத்திலேயே இருந்தேன். நான் மயக்கத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஏதோவொன்று நடந்துள்ளதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கிராமத்தைச் சேர்ந்தவள். நகரம் மிக அந்நியமாக இருந்தது. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. யாரோடு பேசுவதென்றும் தெரியாது. அங்கே ஒரு சிறைக் கைதி போல் வைக்கப்பட்டிருந்தேன்” என்கிறாள் அந்த இளம்பெண்.

தின்பண்டங்களில் ஏதோ கலந்திருப்பதை உணர்ந்து ஒரு கட்டத்தில் ஓம்பிரகாஷ் கொடுத்த பதார்த்தங்கள் எதையும் சாப்பிட மறுக்கிறாள். கொஞ்சம் சுயநினைவோடு இருந்த சந்தர்பம் ஒன்றின் போது ஓம்பிரகாஷின் சகோதரன் தன்னோடு உறவு கொள்ளும் நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். அந்த அயோக்கியத்தனத்திற்க்கு உடன்பட மறுத்துப் போராடியிருக்கிறாள்.

இது ஒன்றும் புதிது கிடையாது, பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சமாச்சாரம் தான், அவளைத் தனது மனைவியாகவே கருதவில்லையென்றும், தனது அரசியல் வளர்ச்சிக்காக அவளைப் பயன்படுத்திக் கொள்வதே தனது நோக்கம் என்றும் எகத்தாளமாக சொல்லியிருக்கிறான் ஓம்பிரகாஷ். மேலும், அவளை மயக்க நிலையில் இருக்கும் இதே போல் பலரோடும் அனுப்பி வீடியோக்களாக எடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான். அந்த வீடியோக்களில் சிலவற்றை அவளுக்கே காண்பித்து மிரட்டியும் இருக்கிறான்.

பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தங்காமல் தொடர்ந்து இடங்களை மாற்றி வந்த ஓம்பிரகாஷ், விலை உயர்ந்த செல்போன்களையும் வாகனங்களையும் பயன்படுத்தியிருக்கிறான்.

நிகால் சந்த் மேக்வால்
நிகால் சந்த் மேக்வால்

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் சுமார் ஒன்பது மாதங்களாக இந்த சித்திரவதைகளை அந்தப் பெண் அனுபவித்து வந்திருக்கிறாள். ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். கிரிமினல் எம்..பிக்களை சகித்துக் கொள்ளவே மாட்டேன் என்று போர் குரல் எழுப்பியிருக்கும் உத்தமர் மோடியின் தற்போதைய அரசாங்கத்தில் உரத்துறை அமைச்சராக இருக்கும் அந்தப் பாலியல் குற்றவாளியின் பெயர் நிகால் சந்த் மேக்வால்.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் கீழ் மட்ட பொறுப்பில் இருந்த ஓம் பிரகாஷ், பில்பங்கா ஜில்லா பரிஷத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக அரசியலில் ”வளர்கிறான்”. பிரிஜ்லால் பிஷ்னோயின் உறவினர் ஒருவரை ஜெய்ப்பூருக்கு வரவழைக்கும் ஓம் பிரகாஷ், பிஷ்னோய் குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தங்கள் பெண்ணை ஓம் பிரகாஷுக்கு எட்டு லட்சம் ரூபாய்களுக்கு விற்று விட்டதாக எழுதித் தரக் கேட்டு மிரட்டியுள்ளான்.

மிரட்டப்பட்ட உறவினரின் மூலம் அந்தப் பெண்ணின் பரிதாப நிலை பிஷ்னோய் சமூக மக்களின் கவனத்திற்குச் செல்கிறது. அவர்கள் கொந்தளித்துப் போகிறார்கள். என்றாலும் ஏழைகளான அவர்களால் பாரதிய ஜனதாவின் மேல் மட்டம் வரை நெருங்கிய தொடர்பு கொண்ட ஓம்பிரகாஷை எதிர்க்க முடியவில்லை. அவன் மேல் வரதட்சணை வழக்கு பதிய முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கூட பதிவாகாத படிக்கு தனது போலீசு செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து விடுகிறான் ஓம்பிரகாஷ்.

உள்ளூர் அளவிலான பிரச்சினையாக முற்றி, இறுதியில் சிர்ஸாவில் சாதி பஞ்சாயத்து ஒன்றின் முன் விசாரணைக்கு வருகிறது இந்த விவகாரம். அங்கே தனது உறவினர்களின் உதவியோடு தப்பிச் செல்லும் பிரிஜ்லாலின் பேத்தி தனது குடும்பத்தோடு சேர்கிறாள்.

“அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். என்னால் அவர்கள் அனைவரையும் அடையாளம் காட்ட முடியும். அமைச்சர் எங்கள் கிராமத்தவர்கள் மேல் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். ஆனாலும் நான், எனது வாக்குமூலத்தை மாற்றப் போவதில்லை. எனக்கு நடந்ததென்னவோ நடந்து விட்டது, ஆனால் இதே கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடந்து விடக் கூடாது” என்கிறாள் அந்தப் பெண்.

விஷயத்தைக் கேள்விப் பட்ட சிர்ஸா மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஹெத்ராம் பெனிவ்வால் உடனடியாக அதில் தலையிட்டுள்ளார். போலீசில் புகார் கொடுக்க முற்பட்ட போது, சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளதால் தம்மால் அதில் தலையிட முடியாது என்று சிர்ஸா மாவட்ட போலீசார் கைகழுவியுள்ளனர். அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

மோடி அரசு
அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

சிர்ஸா மாவட்ட போலீசு கைவிட்டபின் அந்தப் பெண் ஜெய்பூர் மாவட்ட போலீசாரை நாடியிருக்கிறாள். அவர்களோ நாள் முழுவதும் அந்தப் பெண்ணை காவல் நிலையத்தில் அமரச் செய்து விட்டு வழக்குப் பதிந்தால் உனக்குத் தான் அவமானம் என்று எச்சரித்துள்ளனர். பார்ப்பன ஆணாதிக்க கொடுங்கோன்மை என்பது இந்துமதவெறி பாரதிய ஜனதா கும்பலுக்கு மட்டுமா, ஒட்டுமொத்த போலீசு-அதிகார அடுக்குமே அதில் தான் ஊறித் திளைத்துக் கிடக்கின்றன.

அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் அலைந்து திரிந்த ஹெத்ராம் பெனிவால் இறுதியில் தனது வழக்குரைஞர் நண்பர்களான இந்தர்ஜித் பிஷ்னோய் மற்றும் நவ்ரங் சௌத்ரி ஆகியோரின் உதவியோடு வழக்கு பதிந்துள்ளார்.

நிகால் சந்த் மேக்வால் மத்திய அமைச்சராகும் வரை இந்த விவகாரம் குறித்து நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்த காங்கிரசு இத்தனை காலம் கழித்து இப்போது கோதாவில் குதித்து பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பாரீர் என்று போலியாக கூவுகிறது. காங்கிரசு கடைபிடித்து வந்த கள்ள மௌனத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாதிக்கப் பட்ட அந்தப் பெண் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் நிகால் சந்த் மேக்வால் உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் தலைவர்களோடு சில உள்ளூர் காங்கிரசு பெருச்சாளிகளின் பெயர்களும் அடக்கம். குறிப்பாக, ராஜஸ்தானின் முன்னாள் இளைஞர் காங்கிரசு தலைவர் புஷ்பேந்திர பரத்வாஜின் பெயரையும் அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கிறாள்.

மார்க்சிஸ்டு கட்சியின் ஹெத்ராம் பெனிவால் இந்தக் கொடுமையான சம்பவத்தை அதிகார அடுக்கின் பல மட்டங்களுக்கும் சுமந்து திரிந்துள்ளார். எங்காவது நியாயம் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருக்கிரார். தேசிய மகளிர் ஆணையமும், ராஜஸ்தான் மகளிர் ஆணையமும் விசயத்தைக் கேட்டு விட்டு சம்பிரதாயமான பேச்சுடன் அடங்கி விட்டதாக ஹெத்ராம் குறிப்பிடுகிறார். அரசு மற்றும் அதிகார வர்க்கம் குறித்த மார்க்சிஸ்டு கட்சியின் புனித மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்பட்டிருக்கும் அவர் மேல் பரிதாபமே மேலிடுகிறது. மக்களைத் திரட்டி போராட வேண்டிய இடத்தில் மயிலே மயிலே இறகு போடு என்று அதிகார வர்க்கத்திடம் இறைஞ்சுவதால் என்ன பயன்?

அதே நேரம் இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய முயற்சிகளே கூட அபூர்வம் என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். ஆனால் இந்த முயற்சிகள் இந்துமதவெறியர்களை தொந்தரவு செய்யாத அளவோடு நின்றுவிடுவதுதான் பிரச்சினை.

இதற்கிடையே மொத்தமாக மலத்தில் முங்கியெழுந்து விட்டு பன்னீராக மணக்கிறதே என்கிறது பாரதிய ஜனதா கட்சி. மொத்தமும் மோடியின் பெயரைக் கெடுக்க நடக்கும் அரசியல் சதி என்கிறார் அக்கட்சியின் ராஜ்நாத் சிங். மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பாக 2011-ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே பின்னாட்களில் மோடி பிரதமர் ஆகப் போகிறார் என்பதை எப்படி பிஷ்னோய் குடும்பத்தினர் அறிந்திருக்க முடியும் என்பது பற்றிய விஞ்ஞான விளக்கங்களை அவர் சொல்லவில்லை. ஒருவேளை அக்கட்சிக்கு இணையத்தில் சொம்படித்துக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் சொல்லக் கூடும்.

இப்போது மட்டும் என்ன நடக்கும்? அந்தப் பெண் நடத்தை கெட்டவள், காசுக்கு விலை போய்விட்டாள், காங்கிரசு ஏற்பாடு செய்த நாடகம் என்றெல்லாம் ஆதாரங்களை உற்பத்தி செய்து உலவவிடுவார்கள்.

தங்களது சொந்த வர்க்க அபிலாஷைகளுக்காக மோடியின் ஆசை வார்த்தைகளில் மயங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அயோக்கியத்தனத்திற்கு என்ன சொல்வார்கள்? இது தான் பாரதிய ஜனதா கட்சியின் தராதரம் என்பதைப் புரிந்து கொள்வார்களா?

இந்தி பேசும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் செல்வாக்கோடு இருப்பதும், அந்த செல்வாக்கில் இத்தகைய ஆணாதிக்க பொறுக்கித்தனங்களை உள்ளிட்டு பல்வேறு கொடுங்கொன்மை செயல்கள் நடப்பதும் வேறு வேறு அல்ல. இந்தி இருக்கும் மாநிலங்களில் உள்ள இந்த பாரதப் பண்பாட்டைத்தான் முழு இந்தியாவிற்கும் பரப்ப துடிக்கிறது பார்ப்பனிய பாஜக கும்பல்.

மேலிருந்து கீழ் வரை ஒட்டு மொத்தமாக கிரிமினல்களையும் காமாந்தகார மிருகங்களையும் உள்ளடக்கிய குற்றக் கும்பல் தான் இந்துத்துவ கும்பல். இதை சட்டப்படியோ, நீதிமன்றத்தாலோ தண்டிக்க முடியாது. உழைக்கும் மக்கள் எடுக்கும் நேரடி நடவடிக்கையின் மூலமே இந்த நாட்டில் பார்ப்பனிய இந்துமதவெறி பாடைக்கு அனுப்ப முடியும். அது வரை பிரிஜ்லாலின் பேத்திகளுக்கு பாதுகாப்பு இல்லை.

–    தமிழரசன்.

தகவல் – Frontline பத்திரிகையில் வெளியான கட்டுரை

மேலும் படிக்க

தொலைந்த நிலம்

0

முகம் கொள்ளாத பூரிப்போடும், ஏங்கிக் கிடைத்த சந்தோசத்தோடும், வீட்டம்மா காது கேக்காது என்பதை மறந்தும் தனத்திடம் பேசினார் முருகைய்யன்.

“மாச கடைசியில ஆத்துல தண்ணி தொறந்து விட்றதா பேப்பர்ல போட்ருக்காம்புள்ள. போன வருசம் போல இந்த வருசமும் வானத்த பாத்துட்டு ஒக்காந்து இருக்கனுமேன்னு நெனச்சேன். ஏதோ ஆண்டவன் கண்ண தொறந்துட்டான். எங்கனையோ கடன ஒடன வாங்கி நட்டு வச்சா கஞ்சிதண்ணிக்காவது வரும். என்னால ஆட்டோவுல (குட்டியானை) ஏறி எறங்க முடியாது. ஒம்பொறந்தவங்கிட்ட சொல்லி, கெடக்குற எருவ கொஞ்சம் அள்ளி வயல்ல போட சொல்லு”.

nel“என்னத்த அதிசயமா பேப்பர்ல போட்ருக்கானுவொ, வாய ஒரு பக்கம் கோனிகிட்டு, வெத்தல பாக்க கொதப்பிகிட்டு எச்சித்தெரிக்க பேசற நீ.” என்று காதுல விழாத எரிச்சலில் திட்டியது அந்தம்மா. அந்த அம்மாவுக்கு புரியும்படி சாடையுடன் விளக்கினார் பெரியவர்.

“ஆமா! போன வருசம் நடவு செலவுக்கு காதுல கழுத்துல கெடக்குறெதல்லாம் வாங்கி அடகு வச்ச. இன்னும் திருப்பி தரல. ஒரு புடி கருதறுக்க முடியாம கருகிப் போச்சு. இந்த வருசம் எதெல்லாம் அடகு கடைக்கி எடுத்துட்டு போப்போறியோ”.

“இந்த வருசம் மேட்டூரணையில தண்ணி வரத்து நல்லா இருக்காம்புள்ள! கவலப்படாத, அறுப்பறுத்து வளைஞ்சு போன ஒம்முதுகு நிமிர்றா மாறி  ஒட்டியாணம் பண்ணி போட்றேன்.” சந்தோசத்துல மனைவியை வம்புக்கிழுத்தார், பெரியவர்.

அவர்களின் ஊடலை ரசித்த அதே வேளையில் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கை ரசிக்கத் தக்கதாக இல்லை. அவரிடமே கேட்டுப் பார்ப்போமென பேச்சு கொடுத்தேன்.

“எனக்கு 80 வயசாகுது. நான் எளவட்டமா இருக்கையில இந்த ஓல வீட்டையும் பதினஞ்சு மா (5 ஏக்கர்) நெலத்தையும் விட்டுட்டு போனாரு எங்கப்பா. அவரு குடுத்த நெலத்துல இன்னைக்கி ஒரு குழி நெலம்மில்ல. எல்லாம் வித்துட்டேன். எங்கப்பனாவது இத வச்சுட்டு போனான். நம்ம பிள்ளைகளுக்கு என்னத்த வச்சுட்டு போறோம்னு நெனச்சு நம்ம காலத்துக்குல்ல இந்த வீட்ட இடிச்சுட்டு ஒரு ஓட்டு வீடு கட்டிடுவோன்னு பாக்குறேன் முடியல. இதுதான் வெவசாயம் என்ன முன்னேத்துன கதை.”

“அந்த காலத்துல பாகவதர் கிருதாவும், வெள்ள வேட்டியும் கட்டின ஒரு சோக்காளி மைனரு நானு. பணக்காரன் பண்ற பகட்ட பாடுபட்டு கஞ்சி குடிக்கிற நாம பண்ணுனா, நெலைக்காதுங்கிறது புத்திக்கி எட்டாம போச்சு. மாடா உழைக்க வேண்டிய வயசுல ஊதாரியா சுத்திட்டு எல்லாத்தையும் எழந்துட்டேன்.”

“வருசம் பூறா ஒழைக்கிறவனே தசுகூலி (வெள்ளாமை செலவு) செலவுக்கு கடன ஒடன வாங்கி செலவு செஞ்சுட்டு அறுப்பறுத்ததும் கடனடைப்பான். முதுகு வளையாத எனக்கு எவனாவது கடங்கொடுப்பானா? 100 குழிய அடகு வச்சு நடவு தசுகூலிக்கு செலவு செய்வேன். பாதி நெலத்த எழந்த பிறகு என்ன செய்றதுன்னு தெரியாம டவுனுல இருக்குற நம்ம சேந்த சாதிக்காரன்னுங்க, பழக்கமானவங்க கிட்ட இத்தன ரூவா பணத்துக்கு இத்தன மூட்ட நெல்லு தர்ரேன்னு வட்டிக்கி வாங்குவேன்.”

“நம்ம கெட்ட நேரம், காலத்துல மழையும் பேயாது, தொண்ட கருதா இருக்குற நேரத்த பாத்து ஆத்துல தண்ணியும் வராது. ஒன்னு வெள்ளாம சரியில்லாம போயிரும், ஆண்டவன் புண்ணியத்துல தப்பிதவறி வெளஞ்சாலும் சொந்தக்காரப் பய கல்யாணம், காதுகுத்து, கருமாதின்னு மொய் செஞ்சு செஞ்சே, போட்ட மொதலு மண்ணோட போயிரும். மறுவருச நடவு செலவுக்கு நெலத்த அடகு வாங்குனவங்கிட்டையே மேக்கொண்டு பணம் வாங்குவேன். காலப்போக்குல நெலத்த மூக்க (மீட்க) முடியாம கெரயத்துக்கே (விற்பனை) எழுதி குடுத்துருவேன். இப்புடியாவே எல்லாம் போச்சு. அதெல்லாம் நெனச்சுப் படுத்தா தூக்கமே வராது.”

“ஒன்னப்போல என்னப்போல உள்ளவனா வாங்குனா? ஊருக்குள்ளேயே பெரும் பணக்கார பஞ்சாயத்துக் கார குடும்பம். அரசாங்க உத்தியாகம் வேற உண்டு. வாங்குன சம்ளம்மெல்லாம் ஊருக்குள்ள 5 வட்டி 10 வட்டிக்கி குடுத்து ஊரையே வளச்சுப் போட்டானுவ. அவ்வளவு ஏன்? அவைங்க சொந்தக்கரானுவ நிலத்தையே கடன கொடுத்து வளைச்சு புட்டானுவ. இப்ப அந்த குடும்பங்க ஒன்னுமில்லாம நொடிச்சு போச்சு. கூட பொறந்தவங்ளையே விட்டு வைக்காதப்ப, ஊதாரியான என்ன விட்டு வைப்பாய்ங்களா?” என்னையும் சேத்து சோலிய முடிச்சுப்புட்டானுவொ.”

“அது போக, எங்க குடும்பம் போல ஒன்னுமில்லாமா போயி கண்டிக்கி பொழைக்க போன எங்கூருக்காரரு, கையில கொஞ்சம் காசோட திரும்பி வந்தப்போ, என் நெலமைய புரிஞ்சுகிட்டு நேரடியா கேக்க முடியாம ‘கையில கொஞ்சம் காசு இருக்கப்பு. யாரும் நெலம் எதுவும் விக்கிறதா காதுல விழுந்தா சொல்லு’ன்னு சொன்னாரு. அவருகிட்ட கொஞ்சத்த கொடுத்தேன்.”

“ஒருத்தனுக்கு கோயில்ல பூசாரி வேல. கூடுதலா பில்லி, சூனியம், சோழி போட்டு பாக்குறது, வெத்தல மை மாயம், மந்தரம்னு கொடிகட்டி பறந்தான். சுத்துப்பட்டு ஊருல உள்ள எல்லா சனமும் பணத்த கொண்டாந்து கொட்டுச்சு. என்னப்போல உள்ளவங்க நெலத்த எல்லாம் அந்த பூசாரி வாங்குனான். எனக்கு என்ன மை வேல பன்னாணோ மிச்சம் மீதி இருந்தத இவங்கிட்ட கொடுத்துட்டேன். முடிஞ்சது சோலி.”

“எல்லாம் எழந்த பின்னே என்ன செய்றதுன்னு தெரியல. டவுனுக்கு போயி பழ யாவரம் பண்ண ஆரம்பிச்சா எங்கூட்டுக்காரி. நானு மாட்டு சந்தைக்கி போயி தரகனா மாடு வாங்கி குடுக்க ஆரம்பிச்சேன. வெக்கத்த விட்டு சொல்லனுன்னா கொஞ்ச நாளு எந்தம்பி சாராயம் காச்ச போனான். பொறவு டீக்கட வச்சான், கூடவே இட்லி வட போட்டான். அப்பறந்தான் கொஞ்சம் தப்பி பொழச்சு வந்தோம். எங்காத்தா செஞ்ச புண்ணியத்துல கிளாரு (சுண்ணாம்பு) மண்ணுல குந்தி போயி கருகுன பயிராட்டம் இருந்த எங்க வாழ்க்க கொஞ்சம் துளுரு விட ஆரம்பிச்சது.”

“என் சித்தப்பா ஒருத்தரு, நெலத்த அடகு வச்சுட்டு சிங்கப்பூருக்கு பொழைக்க போன எடத்துலயே செட்டிலாயிட்டாரு. அந்த நெலத்த மூட்டு வாய்தா வரி கட்டி எங்களுக்கு சொந்தமாக்கிகிட்டோம். அப்புறம் அவன இவன புடிச்சு கோயில் நெலத்த கொஞ்சம் குத்தகைக்கி நட ஆரம்பிச்சேன். ஏதோ வயித்துக்கும் வாயிக்கும் பெரிய பஞ்சம் வந்துராம பொழப்பு ஓடுனிச்சு.”

“பசங்க தலப்பட்டு இப்பதான் கொஞ்சம் பரவாயில்ல, வீட்டுக்கு கரண்டு இழுத்தோம், ஒரு சட்னி அரைக்கிற மிசினு வாங்குனோம், காலம் போன கடைசியில அவ கழுத்துக்கு ஒரு செயினு வாங்கி போட்ருக்கானுவொ பசங்க. இதெல்லாம் வெவசாயம் பாத்து இல்ல. பசங்க வெளியதெருவ (வெளியூர்) போயி சம்பாரிச்சதால. ஒரு பய பூச்சிமருந்து கடைக்கி வேலைக்கி போறான். இன்னோருத்தன் மெட்ராஸுல வேலப் பாக்குறான். பாப்போம் இனிமேலாவது விடிவு காலம் வருமான்னு.”

“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா? எதுத்த வீட்டுல ஆறு பசங்க பிள்ளைகள படிக்க வக்கெறெதுக்காகவே பொன்னா வெளையிர பூமி ரெண்டு வேலி (ஒரு வேலி – 7 ஏக்கர்) நெலத்த வித்தாங்க. படிச்சுட்டா வேல கெடச்சுரும்,  இதவிட அதிகமா நெலபலம் வாங்கி சௌகரியமா இருப்பாங்கன்னு ஆசப்பட்டாங்க. ஆறு பேருல ஒருத்தனுக்கு மட்டும் போட்டி தேர்வு எழுதி கெவுருமெண்டு உத்தியோவம் கெடச்சுது. மத்த பய எல்லாரும் ஏதோ ஒரு வேலைய பாத்து பொழப்பு நடத்துறானுவொ. நெலம் போனதுதான் மிச்சம். பட்டதாரியானாலும் கஷ்டம் தீரல”.

“எம்பங்களாளி பய ஒருத்தன் மூணு பொண்ண கட்டிக்கொடுக்க மூணு ஏக்கர் நெலத்த வித்தான், என்ன செய்ய. முன்னெல்லாம் நாலு மூட்ட, அஞ்சு மூட்ட நெல்லு குடுத்து நிக்கிற மாட்டுல ஒன்ன ஓட்டி கொடுத்து பொழச்சுக்கங்கன்னு பொண்ண கொடுப்போம். இப்ப நெலம அப்படியா இருக்கு? இன்ன வண்டிதான் வேணும், தேக்கு கட்டுலுதான் வேணுன்னு லிஸ்ட் போட்றானுவொ. வெவசாயம் பண்ற நம்மால இதெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாதும்மா. ரெண்டும் கெட்டான நம்மள மாறி நடுவுல இருக்குற விவசாயிகிட்ட நெலமெல்லாம் கைல நிக்காதாத்தா. நாங்களே டவுனுக்கு பொழக்க போற வயசுப்பசங்கள வெச்சுத்தான் வெவசாயின்னு காலத்த ஓட்டுறோம்.”

பெரியவருகிட்ட பேசி முடிஞ்சதும் யோசிச்சு பாத்தேன்.

முன்னெல்லாம் கிராமத்துக்கு போகும் போது திரும்பி பார்க்குற இடமெல்லாம் பசுமை மாறாம கண்ணுக்குள்ளேயே நிக்குமுனு பாரதிராஜா படத்த பாத்த ஜனங்க நினைப்பாங்க. அந்த பச்சையும் பசுமையும் சிறு, நடுத்தர விவசாயிங்களுக்கு சொந்தமில்லைங்கிறது யாருக்கும் தெரியாது. ஒன்னு அந்த நிலம் மிராசுதார்களுக்கோ இல்லையினா குத்தகைக்கு எடுத்த கணக்குலதான் வரும். இப்ப அந்த இரவல் பசுமைக்கும் சோதனை. விவசாயி கஷ்டத்த புரிஞ்ச அரசோ இல்லை உதவியோ, தீர்வுகளோ எந்த எழவும் எப்பவும் கிராமங்கள அண்டுனதில்ல.

போதாக்குறைக்கு ரியல் எஸ்டேட்டுக்காரனுவ கையளவு இடத்த கூட விடாம தட்டிப்பறிக்கிறானுவ. பஸ் வசதியே இல்லாத கிராமத்துல கூட யாருன்னே தெரியாத வெளியூர் காரங்க நெலம் வாங்கி பண்ணை வீடு உருவாக்கி சொகுசா தங்க வந்து போறாங்க. கொஞ்ச கொஞ்சமா நெலத்த வளச்சு முள்வேலி போட்டு என்னென்னமோ பயிருங்கள போட்டு விவசாயம் நடத்துராங்க. வரப்பு விவசாயம் ஊர ஒண்ணா வைச்சதுன்னா, வேலி விவசாயம் எல்லாத்தையும் பிரிச்சு போடுது.

தண்ணி எடுத்து விக்கிற கம்பனிங்க வந்தாச்சு. இவ்வளவு ஏன்! பக்கத்தூருல ஏதோ ஒரு வெளி நாட்டுக்காரன் வளச்சு வாங்கி நீச்சல் குளத்தோட பங்களா அமைச்சு வெளிய தெரியாமெ வேல நடத்துறாரு. இன்னும் சென்னை பெரும்புள்ளிங்களெல்லாம் கிராமம் கிராமா வாங்கி போடுறாங்க. விவசாயத்துல நொடிச்சுப் போயி நிமிர முடியாம இருக்குறவங்க கிட்ட என்னைக்கும் நிலம் தங்காது.

வயல்கள்ல வேலை இருக்கும் போது பார்த்துட்டு, வேல இல்லாத நேரம் கேரளா, திருப்பூருன்னு வேறு வருமானமும் பாக்க போராங்க. பெரியவரு முருகைய்யனோட தம்பியும் அப்படி போனவருதான்.

வெவசாயம் செய்ய முடியாம பயந்துகிட்டு ஊரு ஊரா போற ஜனம் என்னைக்கு இவங்கள எதித்து நிக்க முடிவு செய்யுதோ அன்னைக்குத்தான் கிராமங்களுக்கும் நம்ம நாட்டுக்கும் விமோசனம். அப்படி ஒரு விடுதலை வந்த பிறகு வர கிராமங்கள் எப்படி இருக்கும்? நிச்சயமா தமிழ் சினிமா கிராமங்கள் மாறி இருக்காதுன்னு தோணுது!

– சரசம்மா

இதுதாண்டா அமெரிக்கா – கேலிச்சித்திரங்கள்

9
அமெரிக்க கொடி


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இதுதாண்டா அமெரிக்கா  (9)

இதுதாண்டா அமெரிக்கா  (8)

இதுதாண்டா அமெரிக்கா  (4)

இதுதாண்டா அமெரிக்கா  (7)

இதுதாண்டா அமெரிக்கா  (3)

இதுதாண்டா அமெரிக்கா  (6)

இதுதாண்டா அமெரிக்கா  (1)

இதுதாண்டா அமெரிக்கா  (2)

இதுதாண்டா அமெரிக்கா  (5)

நன்றி: Political Humor

தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

52

தேவையான பொழுது வேலைக்கு வைத்துக் கொண்டு, தேவையில்லையென்றால் தூக்கியெறிகின்ற அமர்த்து – துரத்து (Hire & Fire) என்கிற கொள்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. எனினும், தற்போது இருக்கிற சட்டங்கள், தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற உரிமைகளின் காரணமாக, முதலாளிகள் தொழிலே நடத்த முடியாத வண்ணம் விழிபிதுங்கித் தவிப்பது போலவும், இச்சட்டங்களையெல்லாம் ஒழித்தால்தான் உள்நாட்டு முதலாளிகளும் அந்நிய முதலீட்டாளர்களும் நமது நாட்டில் தொழில் தொடங்குவார்களென்றும், வேலைவாய்ப்பு பெருகுமென்றும், தொழிலாளர்களின் ஊதிய விகிதங்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்தியப் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி போட முடிவதில்லை என்றும் பல பொய்களை முதலாளி வர்க்கமும், அவர்கள் கையில் இருக்கும் ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டம்உண்மை நிலைமை என்ன? அவுட்சோர்சிங் என்ற பெயரில், ஒரு ஆலையில் வேலை செய்யும் ஆகப்பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கும் அந்த ஆலை நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என்று ஆக்கி, அவர்களை தனித்தனி காண்டிராக்டர்களின் கீழ் வேலை செய்யும் கூலிகளாக்குவதை 2001-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்திருக்கிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை ஆட்சேபிக்கும் உரிமை அங்கு பணியாற்றும் தொழிலாளிகளுக்கு இல்லை என்று வேறொரு தீர்ப்பு கூறியிருக்கிறது. உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூறமுடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அது மட்டுமல்ல, நாடு முழுதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் எதிலும் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடி ஆகாதென்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறையோ முதலாளிகள் நலத்துறையாகத்தான் எல்லா இடங்களிலும் செயல்படுகிறது. இதுதான் நிலைமை.

அசோசெம் என்கின்ற இந்திய முதலாளிகள் சங்கம், இந்திய தொழில்துறை முழுவதும் நடத்திய தனது ஆய்வின் முடிவுகளை பிப் 5, 2014-ல் வெளியிட்டுள்ளது. 2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் கூறும் அவ்வறிக்கை, துறை வாரியாக ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. தொலைதொடர்புத் துறையில் 60%, ஆட்டோமொபைல் துறையில் 56%, கல்வித்துறையில் 54%, உற்பத்தித் துறையில் 52%, நுகர்பொருள் விற்பனைத் துறையில் 51%, ஐ.டி துறையில் 42%, ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் 35%, மருத்துவத்துறையில் 32% – என ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலாபகரமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்களிலேயே ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றும், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் அதேவேலையை மிகக்குறைவான ஊதியத்துக்கு இவர்கள் செய்கிறார்கள் என்றும் கூறுகிறது அவ்வறிக்கை. மேலும் தொழிலாளர் என்ற வரையறைக்குள் அடங்காத மருத்துவர், பொறியாளர், அறிவியல் ஆய்வாளர்கள், ஆடிட்டர்கள், வணிக மேலாளர்கள் போன்றோரும் கூட ஒப்பந்தக்காரர்களின் சம்பளப்பட்டியலில் கூலிகளாக வேலை செய்கிறார்கள் என்றும் இவ்வறிக்கையை வெளியிட்ட அசோசெம்மின் பொதுச்செயலர் டி.எஸ். ராவத் கூறியிருக்கிறார்.

“இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றன. நிரந்தர ஊழியர் செய்கின்ற அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு, மூன்றில் ஒரு பங்கு ஊதியமே தரப்படுகிறது. மேலும், கிராசுவிட்டி, பி.எஃப், மருத்துவ – கல்விச் சலுகைகள் போன்றவை மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமை தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தொழில்துறை வளர்ச்சிக்கே மிகவும் தீங்கானது” என்றும் கூறியிருக்கிறார் ராவத். முதலாளிகள் சங்கத்தின் ஆய்வு கூறும் புள்ளிவிவரங்களே இப்படி இருக்கும்போது, உண்மை நிலை எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

நோக்கியா போராட்டம்
விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிரந்தரத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த நோக்கியாவின் சதியைக் கண்டித்து, அவ்வாலைத் தொழிலாளர்கள் சென்னை – சேப்பாக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இருப்பினும், தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் தந்திரமாக இறங்கியிருக்கிறது மோடி அரசு. தொழில்தகராறு சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்பயிற்சி சட்டம் ஆகிய மத்திய சட்டங்களைத் திருத்தவிருப்பதாக ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. “300 தொழிலாளர்கள் வரை ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி தேவையில்லை; தொழிலாளர்களில் 30% பேர் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் ஒரு தொழிற்சங்கம் பிரதிநிதித்துவம் பெறும்” – என்பன போன்ற திருத்தங்கள் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

அரசமைப்புச் சட்டத்தின்படி தொழிலாளர் நலம் என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், இச்சட்டத்திற்கு மோடி அரசு ‘குடியரசு’ தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்துவிடும். முதலீட்டாளர்களைக் கவர வேண்டுமென்றால், மற்ற மாநிலங்களும் ராஜஸ்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு இத்தகைய சட்டத்திருத்தங்களை செய்யும். இதன் போக்கிலேயே தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துவிடலாம் என்பது மோடி அரசின் திட்டமெனத் தெரிகிறது. ஆயத்த ஆடை முதலான துறைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்களை வேலை வாங்குவதை அனுமதிப்பது, தொழிலாளர்களை ஓவர்டைம் செய்யச் சொல்வதற்கு இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்துவது, தொழிலாளர் துறை அதிகாரிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற சட்டத்திருத்தங்களை மத்திய அரசு செய்யவிருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் தொழிலாளர் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோசாய். தொழில் முனைவோரின் கால்களில் பூட்டப்பட்டிருக்கும் காலாவதியாகிப் போன காலனிய கால தொழிலாளர் சட்டங்கள் என்ற தளையை மோடி அகற்றப் போகிறார் என்றும், இதன் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகள் பெருகப் போகின்றன என்றும் அளந்து விடுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.

நோக்கியா சென்னையில் வழங்கிய வேலைவாய்ப்பின் யோக்கியதை நம் கண்முன்னே தெரிகிறது. 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டு, அதைப்போல பத்து மடங்கு சலுகைகளைப் பெற்று, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து, கொள்ளை லாபமீட்டிய நோக்கியா, 23,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது. வரியைக் கட்டு என்றவுடன் 8000 பேர் வேலை செய்த இடத்தில் இப்போது வெறும் 850 பேர்தான் வேலை செய்கிறார்கள்.

காங்கிரசு அரசு வரி கேட்காமலிருந்தால் நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி. முதலாளியிடம் சம்பளம் கேட்காமல் இருந்தால் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படாது என்று அடுத்தபடியாக ஒரு மத்திய அமைச்சர் பேசக்கூடும்.

– அன்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

1

“பெருகிவரும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் நுகர்வு வெறியே!” என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி சென்னை பல்லாவரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று (09/08/2014) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது!

கடந்த ஒரு மாத காலமாக, பேருந்துகளில், ரயிலில், குடியிருப்பு பகுதிகளில் என மக்கள் மத்தியில் 6000 துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் தொடர் பிரச்சாரம் செய்தார்கள். பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. இளைஞர்கள் மத்தியில் நுகர்வு வெறிக்கு எதிராக ஒரு கருத்து மாற்றத்தை உருவாக்க முடிந்தது!

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய, பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராஜி “நாள்தோறும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் சமூகத்தில் பெருகிவருகிறது. இதற்கான சமூக தீர்வை முன்வைத்து பெண்களை திரட்டி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

கலைஞர் தொலைக்காட்சியில் குத்தாட்ட நிகழ்ச்சியாக ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டியும், குரோம்பேட்டை மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மார்க் கடையை திறக்கவிடாமல், பகுதி மக்களை அணிதிரட்டி, விடாப்பிடியாக போராடியதையும் சுட்டிக்காட்டி, மக்களைத் திரட்டி போடும் பொழுது தான் பாலியல் வன்முறை பிரச்சனையை கூட தீர்க்கமுடியும்” என பேசினார்.

கண்டன உரை நிகழ்த்திய பெண்கள் விடுதலை முன்னணியில் சென்னை கிளை செயலாளரான தோழர் உஷா “தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக்கு இதே இடத்தில் அந்த சமயத்தில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்பொழுது பிரச்சாரம் செய்த பொழுது சிலர் ‘ஏன் இங்கு போராடுகிறீர்கள்?” என கேள்விக்கேட்டனர். அதற்கு பிறகு தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகள் நடந்திருக்கிறது. ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா சட்டபேரவையில் பேசிய பொழுது, கருணாநிதி ஆட்சியை விட தன் ஆட்சிக்காலத்தில் பெண்கள் மீதான வன்முறை 50 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது கடைந்தெடுத்த பொய். புகார் கொடுக்க சென்ற பெண்களை காவல்துறை எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதும், புகார் பதிவு செய்ய மறுப்பதும் அவ்வப்பொழுது செய்திகளில் வந்துகொண்டு தான் இருக்கின்றன. முதல்வரின் பேச்சைக் கேட்டு, அதிமுககாரர்கள் எல்லோரும் பெஞ்சை தட்டுகிறார்கள். மற்ற ஓட்டுக்கட்சிகள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். பெண்கள் பிரச்சனை உட்பட எந்த சமூக பிரச்சனை குறித்தும், உருப்படியான விவாதம் சட்டமன்றத்தில் எதுவும் நடப்பதில்லை.

விளம்பரங்களில் பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார்கள். ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூட பெண்களை ஆபாசமாக காட்டுவது தொடர்ந்து நடந்துவருகிறது!

இந்தியாவில் காட் ஒப்பந்தத்திற்கு பிறகு தாரளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகள் அமுலானதிலிருந்து சமூகத்தில் நுகர்வு வெறி என்பது பல்கி பெருகியுள்ளது. பல நுகர்வு பொருட்களையும் வாங்கி குவிப்பது என்பதும், புதிது புதிதாக வாங்கி அனுபவிப்பது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஷம் போல பரவியுள்ளது. இதில் பெண்ணையும் பொருளாக பார்க்ககூடிய கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது.

பெருகிவரும் பாலியல் வன்முறையை தீர்க்க, துவக்கமாக சமூகத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் பொழுது அல்லது பார்க்கிற பொழுது, செருப்பால் அடியுங்கள். இப்படி பெண்கள் சகித்துக்கொண்டு செல்வதால் தான் மேலும் மேலும் தைரியம் பெற்று பாலியல் தொந்தரவுகளை செய்கிறார்கள். எனவே, ஏதேனும் பிரச்சனையென்றால், பெண்கள் விடுதலை முன்னணியை தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்!” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டம் நடந்தது பல்லாவரத்தின் மார்க்கெட் பகுதி என்பதால், நூற்றுக்கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர். “செல்போனில் ஆபாச படங்கள் இளைஞர்களை சீரழிக்கிறது. நீங்கள் பேசியது சரி” என்றார் ஒரு பெண்.  “இந்த மாதிரி குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் மன்னித்து விடுவதால் தான் குற்றம் பெருகிறது” என ஒரு பெண் ஆவேசமாக தன் கருத்தை சொன்னார். அலுவலத்திலிருந்து வேலையை விட்டுச் சென்ற பெண் “நாங்க மனசுல நினைக்கிறதை, நீங்கள் நடைமுறையில் சரியாக செய்கிறீர்கள்” என சொன்னார்.

பெண்கள் மீது திணிக்கப்படும்
பாலியல் வன்முறை வெறியாட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

பெண்ணைப் போக பொருளாக
ஆணுக்கும் பெண் அடிமையாக
நடத்துகின்ற நிலவுடைமை பண்பாட்டை
அறுத்து எறிவோம்! அறுத்து எறிவோம்!

தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது
பாலியல் வன்கொடுமை நடத்துவதை
நியாயப்படுத்தி பேசுகின்ற
ஆதிக்க சாதி பண்பாட்டை
வேரறுப்போம்! வேரறுப்போம்!

சாத்திரம் என்றும்
சடங்குகள் என்றும்
மடமைக்குள்ளே பெண்களை தள்ளும்
பார்ப்பனிய சாதி பண்பாட்டை
ஒழித்துக்கட்ட உறுதி ஏற்போம்!

மறுகாலனியாதிக்க கொள்கைகளை
எதிர்ப்பின்றி நடத்துவதற்கு
அரசே திட்டமிட்டு பரப்புகின்ற
நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க
அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

துண்டறிக்கை

  • சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையைச் சாதிப்போம்!

பெருகிவரும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் நுகர்வுவெறியே!

ன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

“வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை – கொள்ளையடித்த பணத்தில் அடுக்குமாடி வீடு, ஆடம்பரத் திருமணம், சொகுசான வாழ்க்கை”, 

“சப் – இன்ஸ்பெக்டர் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலி கைது”,

“எனக்கு கிடைக்காத நித்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது – கொலை செய்த காதலன் வாக்குமூலம்”,

“பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொடூரமாக கொலை”

என்ற செய்திகளை படிக்கும் போதே அருவருப்பாக இருக்கிறதா?

ஏன் இந்த வக்கிரம்?

“ஏற்கனவே இதெல்லாம் நடப்பதுதானே. இதில் புதிதாக என்ன இருக்கிறது” என்று கேட்கிறீர்களா? முன்பு நடந்தது வேறு. இப்பொழுது நடப்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. முன்பெல்லாம் பசி வறுமையின் காரணமாக திருடினான். நகரமாக இருந்தால் அண்டாவும் குண்டாவும் திருடினான். ஆனால் இன்று அப்படியா? இல்லை. உல்லாசமாக இருப்பதற்காக அல்லவா திருடுகிறான்.

ஆடம்பரமாக, உல்லாசமாக வாழ பணம் தேவை. அதை உழைத்து சம்பாதிக்க முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படி என்றால் என்ன செய்வது? கொள்ளையடிப்பதை தவிர வேறு வழியில்லை. தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம். அதுவும் வக்கிரமான கொலை. கழுத்தை அறுத்துக் கொலை, பெற்றெடுத்த, பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயைக் கொல்வது, பாசமிகு தந்தையைக் கொல்வது, தன்னை நேசித்த காதலியை பாலியல் கொடுமை செய்து கொல்வது .

இப்பொழுது சொல்லுங்கள். பசிக்காக – வறுமைக்காகவா கொல்கிறார்கள்? இல்லை. ஆன்டிராய்ட் போன், விதவிதமான ஆடைகள், வகைவகையான உணவுகள், குடிக்க சாராயம், அனுபவிக்க பெண்கள் என விதவிதமாக ருசிக்கவே செய்கிறார்கள்.

அப்படி என்றால் இதற்கெல்லாம் யார் காரணம்?

வேறு யாருமில்லை. உழைப்பவனுக்கு அடிமாட்டு கூலியைக் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சுயநலத்தையே கொள்கையாகப் பரப்பும் கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும், தனியார் மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் கொண்டு வந்த நுகர்வுவெறிதான் காரணம். அதாவது மறுகாலனியாக்கக் கொள்கைதான் காரணம்.

படித்த படிப்புக்கு வேலை இல்லை, வேலைக்குக்கேற்ற கூலியில்லை. ஆனால், இவர்கள் பரப்பும் நுகர்வுவெறியானது, “எப்படியாவது இதையெல்லாம் அனுபவிச்சி தீர்த்திடனும்” என்ற பேராசையைத் தூண்டுகிறது. இதுவே, நுகர்வுவெறியில் மாணவர் – இளைஞர்களை தள்ளிவிடுகிறது. இந்த நுகர்வுவெறியை, இதை அடைவதற்கான வக்கிரப் புத்தியை நமது சிந்தனையில் திணிக்கும் வேலையை சினிமா – சீரியல் – விளம்பரங்களும், இவர்கள் நடத்தும் ஆபாசக் கூத்துக்களும் செவ்வனே செய்கின்றன.

இந்த நுகர்வு கலாச்சாரம், உழைத்த பணத்தை வைத்துக் கொண்டு நேர்மையாக வாழ்பவர்களைப் பிழைக்கத் தெரியாத கோமாளிகள் என்று அவர்களின் உயர்ந்த ஒழுக்கத்தை இழிவுபடுத்துகின்றது. ஆனால், உழைக்காமல் அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி கொழுத்த, வரியை – வங்கிக் கடனை ஏப்பம் விட்ட, திருடிய அம்பானி – டாடா போன்ற கொள்ளையர்களைப் பாராட்டுகிறது.

எந்த சீரியலாவது ஒழுக்கமான குடும்பத்தைக் காட்டுகிறதா? எந்த விளம்பரமாவது நல்லதை சொல்கிறதா? எந்த வீடியோ கேமாவது பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறதா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

“பணம் இருந்தா ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா?”

“எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது”

என வசனம் பேசும் அஜீத்தும், வெட்டியாக பொழுதைப் போக்கி கெத்து காட்டுவது, திருடுவது, அடுத்தவனை ஏமாற்றுவது போன்றவைகளையே கதைகளாக்கி நடித்து வரும் கார்த்தி, விமல், சிவா, சிவகார்த்திகேயன் போன்ற கழிசடைகளும் நம் பிள்ளைகளைச் சீரழிக்கவில்லையா?

மலிவு விலை செல்போன்கள், மெமரி கார்டுகள், இன்டர்நெட்கள் வீடு தேடி வந்து நம் பிள்ளைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களைத் திணித்து சீரழிப்பது – படிப்பு சொல்லித்தர வேண்டிய அரசே குடிக்கச் சொல்லித் தந்து ஊற்றிக் கொடுப்பது என தூண்டப்படும் நுகர்வுவெறியால் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் பெருகிவருவதை சகித்துக் கொள்ள முடியுமா?

ஆனால், இதை சகஜமாக கருதும் அளவிற்கு நம்முடைய சிந்தனையை – உணர்வை மழுங்கடித்து சொரணையற்றவர்களாக மாற்றி வருகிறார்கள்.

யார் தெரியுமா?

சினிமா, சீரியல், விளம்பரங்களை நடத்தும் நிறுவனங்கள், அவைகளுக்கு பணத்தை வாரி இறைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள், இவைகளுக்கு அடியாள் வேலை செய்யும் அதிகாரிகளும், போலீசும், ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும்தான்.

இதற்கு விடிவே இல்லையா? ஏன் இல்லை?

“எரிகிறத பிடிங்கினா கொதிக்கறது அடங்கும்” என்று மக்கள் கூறுவதுபோல, பிரச்சினைக்கு ஆணிவேரான நுகர்வுவெறியைப் பரப்பும் கார்ப்பரேட் சீரழிவுக் கலாச்சாரத்தையும், அரசே சாராயம் விற்கும் அக்கிரமத்தையும் ஒழிக்க வேண்டும். இவற்றை தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் அதாவது மறுகாலனியாக்கக் கொள்கை மூலம் திணித்து, இதற்கு அடியாள் வேலை செய்யும் மக்கள் விரோத அரசை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும். இதற்கு மாற்றாக நாமும் ஒரு மாற்று அதிகாரத்திற்கான கமிட்டியைக் கட்ட வேண்டும்.

“இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆகிற விசயமாக சொல்லுங்கள்” என்று ஒதுங்கி நின்றால் எதுவும் நடக்கப் போவதில்லை. உங்கள் வீடு கொள்ளை போகலாம். ஏதோ ஒரு பொறுக்கியால் உங்கள் பிள்ளைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம். கொலை செய்யப்படலாம். இக்கொடுமைகளை விடவா, இதை மாற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது கடினம்?

நமது வாழ்க்கைக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்? உங்களோடு கைகோர்த்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வாருங்கள் போராடுவோம், சாதித்துக் காட்டுவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !

38

மிழக பொறியியில் கல்லூரிகளில், தலித் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (11.08.2014) ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்
அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் புள்ளிவிவரப்படி 2006-07-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மாணவிகள் 2,361 பேர் சேர்ந்தனர். 2013-14-ம் ஆண்டில் 10,505 மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். பொதுப்பிரிவு மாணவிகளின் நிலையோ இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை.

2006-07-ல் 4,498 ஆக இருந்த பொதுப்பிரிவு மாணவிகள், 2013-14-ல் 6,535-ஆக மட்டுமே அதிகரித்திருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் 2013-14-ம் ஆண்டில் பொதுப்பிரிவு பெண்கள் 184-ஆக இருக்க, தலித் மாணவிகள் 577 ஆக சேர்ந்திருக்கின்றனர்.

இந்த ஆண்டுகளில் பொதுவாக பொறியியல் மாணவர் சேர்க்கை 2.5 மடங்கு அதிகரித்திருக்கும் போது தலித் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 4.4 மடங்காக அதிகரித்திருக்கிறது. தலித் ஆண் மாணவர்கள் 2013-14-ம ஆண்டில் 18,988 பேர் சேர்ந்ததை ஒப்பிட்டு பார்த்தாலும் மாணவிகளின் விகித வளர்ச்சி மிக அதிகம்.

“அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக இந்த மாற்றத்தை பார்க்கலாம். அவர்களது சூழ்நிலையிலிருந்து வெளியே வரும் வழியாக, கல்வியை பார்க்கும் விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது” என்று லயோலா கல்லூரியின் உதவி பேராசிரியர் அம்ரிதா லெனின் கூறியிருக்கிறார்.

எனினும் இந்த புள்ளிவிவரங்கள் கூறும் தலித் மாணவிகளின் வளர்ச்சி உண்மையானதா?

2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 16.6% தலித் மக்கள் வாழ்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய தலித் மக்கள் தொகையில் 7.2%-த்தைக் கொண்டிருக்கும் தமிழகம், தலித் மக்கள் வாழும் நான்காவது பெரிய மாநிலமாகும். தமிழகத்தின் மக்கள் தொகை விகிதப்படி இங்கே 18% தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி தமிழகத்தில் 570 பொறியியில் கல்லூரிகள் உள்ளன. சில நிர்வாக பிரச்சினைகள், அரசின் மேலோட்டமான கண்காணிப்பு நாடகம், நடவடிக்கை காரணமாக இந்த எண்ணிக்கை சற்று குறையலாம். எனினும் மேற்கண்ட தலித் மாணவிகள் குறைவாக சேர்ந்தாக கூறப்படும் 2006-07-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 280-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இங்கே புதிதாக துவங்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2013-ம் ஆண்டில் இரண்டு மடங்கு கல்லூரிகள் அதிகரித்திருக்கின்றன.

ஆகவே தலித் மாணவிகளின் சேர்க்கை வளர்ச்சியில் இந்த கல்லூரி பெருக்கம் மறைந்திருக்கிறது. மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகள் உள்ள 2,36,417 இடங்களில் தலித் மக்களின் 18% சதவீத இருப்பின்படி 42,255 பேர் படிக்க வேண்டும். ஆனால் இரு பால் பிரிவு தலித் மாணவர்களை கூட்டினாலும் அது 30,000 மட்டுமே வருகிறது. இதில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டின் படி சுமார் 2,000 இடங்கள் வரலாம். இவற்றில் கட்டணம் குறைவு என்பதோடு, இங்கு படித்தால் ஒப்பீட்டளவில் மதிப்பும், வேலை வாய்ப்பும் சற்று அதிகம் என்பதால் தலித் மாணவர்களில் அதிக மதிப்பெண் வாங்கும் பிரிவினர் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள். மீதி இடங்கள் அதிக கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகள். இதில்தான் பிரச்சினையே.

சரி, எது எப்படியோ தலித் மக்களின் விகிதத்திற்கு நெருக்கமாக இந்த எண்ணிக்கை வருகிறதே என்று சிலர் எண்ணலாம். அப்படி வைத்துக் கொண்டாலும் தலித் மாணவர்கள் சேர்க்கை வளரும் விகிதத்தில் மற்ற பிரிவினர்களும் இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லை என்பதை இந்தக் கணம் வரை கிட்டத்தட்ட பாதி இடங்கள் அதாவது 1,00,000-த்திற்கும் மேற்பட்ட இடங்கள் யாரும் சேராமல் இருக்கும் யதார்த்தம் நிரூபிக்கின்றது. பல கல்லூரிகள் ஒரு மாணவரைக் கூட சேர்க்காமல் கடை விரித்திருக்கின்றன.

இந்த காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன. அதிலொரு முயற்சியாகத்தான் இந்த ஊடகச் செய்தியை பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா, சீனாவின் கூட்டுத் தொகையை விட அதிகமான பொறியியல் மாணவர்களை இந்தியா வருடந்தோறும் உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள். இவற்றில் ஐ.டி நிறுவனங்கள் சராசரியாக ஆண்டு தோறும் சுமார் 50,000 மாணவர்களை மட்டும் பணிக்கு அமர்த்துகின்றன. அதுவும் தற்போது குறைந்து வருவதோடு, சம்பள விகிதமும் சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கைக்கு நிகராகவோ இல்லை குறைவாகவோ உற்பத்தித் துறை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன. இந்த ஒரு லட்சத்தை கழித்து விட்டால் மீதியுள்ளோரில் கால்வாசிப் பேர் ஏதோ ஒரு வேலையை மிகக் குறைந்த சம்பளத்திற்காக ஏற்கின்றனர். முக்கால்வாசிப்பேர் வேலையற்று இருக்கின்றனர். இவர்களும் இறுதியில் வேறுவழியின்றி ஏதோ ஒரு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள்.

சாதி கௌரவம், சொத்துடைமை உள்ளவர்கள் மட்டும் திருமணத்திற்கு விலை பேசும் சரக்காக பொறியியல் படிப்பை பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையினர் படித்து நல்ல வேலை கிடைத்து அதிக சம்பளம் வாங்க முடியும் என அப்பாவித்தனமாக நம்பி ஏமாறுகிறார்கள்.

இது நடுத்தர வர்க்கத்திற்கு பட்டுத் தெரிந்த பிறகே பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகும் நிலைமை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமையில் தலித் மாணவிகள் அதிகம் சேர்கிறார்கள் என்பதை எப்படி பார்ப்பது?

தாழ்த்தப்ப்ட்ட மக்களில் நடுத்தர வர்க்கமாக, மாத சம்பளம் வாங்கும் பிரிவினரே இத்தகைய உயர்கல்விகளில் தமது பிள்ளைகளை சேர்க்கின்றனர். இதற்காக தமது சொத்துக்களையும், வாழ்நாள் வருமானத்தையும் அடகு வைத்து படிக்க வைக்கின்றனர். ஏழைகளில் இத்தகைய படிப்பிற்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிலும் லட்சத்திற்கு ஒரு மாணவருக்கு தினமணி போன்ற ஊடகங்களின் கௌரவ நன்கொடை மூலம் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆரம்பக் கல்வி, பள்ளிக் கல்வி படிப்பில் இடைநிறுத்தம் செய்து வெளியேறும் எண்ணிக்கையில் தலித் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் படிக்கும் இம்மக்களும், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதிலிருந்தும் இதை புரிந்து கொள்ள முடியும். எந்த வசதிகளுமற்று நடத்தப்படும் அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். எனினும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கணிசமாக படிக்கின்றனர். மேற்கண்ட பிரச்சினைகள் இவர்களுக்கும் பொருந்தும்.

பொறியியல் படிப்பின் விகிதத்திற்கு நிகராக நிலவுடைமையிலோ இல்லை மற்ற தொழில் சொத்துக்களிலோ தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. கிராமங்களிலிருந்து கூலி வேலைக்காக குடும்பம் குடும்பமாக வெளியேறும் பிரிவினரில் இவர்களே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றார்கள்.

இதன்படி பார்த்தால் சமூகத்தில் ஏற்படும் எத்தகைய விழிப்புணர்வும் இம்மக்களை கடைசியில்தான் எட்டும். அதனால்தான் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது நிச்சயமில்லை, படிப்பதற்கு அதிக பணம் புரட்ட வேண்டும் என்ற யதார்த்தத்தின் படி மற்ற பிரிவு மக்கள் அதை புறக்கணிக்கத் துவங்கும் பொழுது தலித் மக்கள் அதில் அதிகம் சேர்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை ஏமாற்றுதலா?

அவர்களது பொருளாதாரத்தை சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் கைப்பற்றும் சதியை வளர்ச்சி, சாதி அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது சரியா என்பதே நமது கேள்வி.

கிராம அளவில் நிலவுடைமை சமூக அமைப்பில் பொருளாதார ரீதியில் தலித் மக்களுக்கு விடுதலை கிடைக்காத வரை இத்தகைய சீர்திருத்த முயற்சிகள் அவர்களை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் மற்ற சாதி மக்களையும் திசை திருப்பும் ஒன்றாகும்.

குறைவு, கூடுதல் என்று எண்களை கொண்டு வளர்ச்சியை காட்டும் ஊடக அறிஞர்கள் சமூகத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி பார்க்க மறுப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைக்கும் முயற்சி பழைய பஞ்சாங்க முறையில் இல்லை என்றாலும் இன்ஜினியரிங் வடிவில் வருதால் அதை புதிய கம்ப்யூட்டர் பஞ்சாங்கம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

மேலும் படிக்க

பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை

6

“இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பட்ஜெட்” எனத் தனது முதல் பட்ஜெட்டை வருணித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அம்பானி, அதானி தொடங்கி ஒட்டுமொத்த இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமும் மோடி அரசின் முதல் பட்ஜெட்டை ஆரவாரமாக வரவேற்றிருப்பதால், இது அவர்களுக்கான பட்ஜெட்தான் என்பதை நம்மால் சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அருண் ஜெட்லி குறிப்பிடும் ஏழை யார் என்பதுதான் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விடயம். அதற்கும் பட்ஜெட்டிலேயே விடை இருக்கிறது.

பட்ஜெட்வெங்காயத்தின் விலை சாமானிய மக்கள் நெருங்க முடியாத அளவிற்கு ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த நரேந்திர மோடி அரசின் பட்ஜெட்டில் 19 இன்ஞ்சுக்குக் குறைவான எல்.சி.டி. மற்றும் கேதோடு கதிர் டி.வி.க்கள், மைக்ரோ அவன் அடுப்பு, தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள், குளிர்பதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு, அவை இனி விலை மலிவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், வீடு, கார் தொடங்கி ஐ பேட், ஐ ஃபோன் வரையிலான நவீனமான நுகர்பொருட்கள் அனைத்தையும் இ.எம்.ஐ. மூலமே வாங்கி அனுபவித்துவரும் நகர்ப்புறத்துப் புதிய நடுத்தர வர்க்கம்தான் மோடி அரசின் பார்வையில் ஏழைகள். அதற்குக் கீழே வாழும் பல்வேறு தட்டுக்களைச் சேர்ந்த சாமானிய மக்களனைவரும் இந்த அரசிற்குத் தேவையற்றவர்கள்.

இந்த பட்ஜெட் இந்தியத் தரகு முதலாளிகள்-பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்கள்-புதிய நடுத்தர வர்க்கத்திற்கானது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தன்னைப் பிரதமராக அமர வைத்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள நரேந்திர மோடி, அக்கடனுக்கான முதல் தவணையை பட்ஜெட்டாகச் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்தியாவின் இயற்கை வளங்கள், நிதி ஆதாரங்கள் அனைத்தையும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரேயொரு உத்தரவு மூலம் பட்டா போட்டுக் கொடுத்துவிடும் துணிவு கொண்ட பாசிஸ்டுதான் மோடி என்றபோதும், தேர்தல், நாடாளுமன்றம், நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் என்ற ஜனநாயக சல்லாத்துணியை இந்தியா போர்த்திக் கொண்டிருப்பது அவரின் விருப்பத்திற்குத் தடையாக இருக்கிறது. அதனால்தான் பி.பி.பி. (அரசு-தனியார் கூட்டு Public Private Partnership) என்ற ரூட்” வழியாக இந்திய நாட்டின் வளங்களைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார், அவர். இதுதான் (பி.பி.பி.) இந்த பட்ஜெட்டின் உயிர்நாடி.

ஆவடி மேற்கு காந்திநகர் தெரு
அடிக்கட்டுமான வளர்ச்சியில் இரு துருவங்கள் : சென்னை – ஆவடியிலுள்ள மேற்கு காந்திநகர் தெரு

ஏற்கெனவே உள்ள நகர்ப்புறங்களையொட்டி 100 புதிய நகரங்களை அமைப்பது, இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்களை அமைப்பது, 16 புதிய துறைமுகங்களை உருவாக்குவது, 11,635 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுபடுத்துவது, 5,000 கோடி ரூபாய் செலவில் நாடெங்கும் குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பது, 4,200 கோடி ரூபாய் செலவில் உ.பி.யின் அலகாபாத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள ஹால்தியா வரையில் கங்கை நதியில் 1,500 டன் எடை கொண்ட கப்பல் போக்குவரத்தை அமைப்பது எனத் தனியார் பங்கேற்புடன் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் திட்டங்கள் பட்ஜெட் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

மோடி எந்தளவிற்கு தனியார்மயத்தின் சேவகன் என்பதற்கு ரயில்வே பட்ஜெட் இன்னொரு சாட்சி. ரயில் நிலையங்களையும் முனையங்களையும் நவீனப்படுத்துவது, ரயில் நிலையங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பது என்பவை உள்ளிட்டு அத்துறையின் கேந்திரமான பணிகள் அனைத்தும் இனி பி.பி.பி.-இன் வழியாகத்தான் நிறைவேற்றப்படும் என அறிவித்து, ஒரே பட்ஜெட்டில் ரயில்வே துறையை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான களமாக மாற்றிவிட்டது, மோடியின் அரசு.

கிருஷ்ணகிரி - தோப்பூர் விரைவுச் சாலை
அடிக்கட்டுமான வளர்ச்சியில் இரு துருவங்கள் : கிருஷ்ணகிரி – தோப்பூர் விரைவுச் சாலை (கோப்புப் படம்)

ஈருடல் ஓருயிராக அடிக்கட்டுமானத் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் எந்தளவிற்கு வளர்கின்றனவோ அந்தளவிற்கு இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என்ற மோடியின் ஃபார்முலா, மன்மோகன் சிங் ஃபார்முலாவின் ஜெராக்ஸ் காப்பிதானே தவிர, இதில் புதுமையும் கிடையாது; சுயமான புத்திசாலித்தனமும் கிடையாது. அது மட்டுமல்ல, மோடியின் பட்ஜெட், ப.சி.யின் இடைக்கால பட்ஜெட்டின் நீட்சிதான் என்பதை மோடியின் ஆதரவாளர்களால்கூட மறுக்க முடியவில்லை. அதனால்தான், “காங்கிரசு இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனத் தேர்தலில் சவடால் அடித்த மோடியால் காங்கிரசு முத்திரை இல்லாத பட்ஜெட்டைக்கூடப் போட முடியவில்லை” எனக் கூறி, மோடியின் மூக்கை உடைத்திருக்கிறார் ப.சிதம்பரம்

மோடி அரசின் பட்ஜெட் அடிப்படையில் புதிய மொந்தை பழைய கள்ளுதான் என்றாலும், தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அவரது அரசு காட்டியிருக்கும் வேகம் மன்மோகன் சிங் கும்பலையே அசர வைத்துவிடும். அடிக்கட்டுமானத் திட்டங்களில் பி.பி.பி. முறையில் நுழையும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதற்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகள் தனிச் சிறப்பான முறையில் சந்தையிலிருந்து சேமிப்புகளைத் திரட்டிக் கொள்ளவும், அப்படி திரட்டப்படும் சேமிப்புகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வாராக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளைத் திவாலாக்கிவிடும் சூழ்நிலையில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அபாயகரமான அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிலுள்ள பொதுமக்களின் சேமிப்புகளை மனம்போன போக்கில் சூறையாடுவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள லைசென்சு தவிர வேறில்லை. மேலும், அரசு-தனியார் கூட்டுறவு திட்டங்களைத் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்காக “3பி” என்ற பெயரில் அரசு நிறுவனமொன்று உருவாக்கப்பட்டு, அதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆளுங்கும்பலின் செல்லப்பிள்ளையாகக் கவனிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறை சரிந்து கிடப்பதால், அதனைத் தூக்கி நிறுத்தும் நோக்கில் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கும் வரம்பு 1.5 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பொதுமக்களிடமிருந்து திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, அப்பங்குகளுக்கு கார்ப்பரேட் வரி விதிப்பிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய ஏகபோக நிறுவனங்கள் நுழைவதற்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் மூலதனமிட வேண்டும்; 50,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களில் மட்டுமே அந்நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படும் என்றிருந்த கட்டுப்பாடுகள் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு, 50 இலட்சம் அமெரிக்க டாலர்கள் எனத் தளர்த்தப்பட்டுள்ளன.

05-1-captionகார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பின் தேதியிட்டு வரி விதிக்கும்படியான பொது வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய காங்கிரசு கூட்டணி அரசு, இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் அச்சட்டத்திற்குத் தெரிவித்த எதிர்ப்புக்கு அணிபணிந்து, அதனை ஏப்.2015 வரை அமலுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. அரசனை விஞ்சிய விசுவாசியாக இச்சட்டத்தை ‘வரி தீவிரவாதம்’ எனத் தனது தேர்தல் அறிக்கையிலேயே குற்றஞ்சுமத்தியிருந்த பா.ஜ.க., இச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், அதுவரை இச்சட்டத்தின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளித்திருக்கிறது. தற்பொழுதுள்ள வணிக வரி விதிப்பு முறையைக் கைவிட்டு, அதனிடத்தில் நாடெங்கும் ஒரேமாதிரியான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவரவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மீது விதிக்கப்படும் டிவிடெண்ட் வரி, மாட் வரிகளைச் சீரமைக்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பத்தாண்டு கால வரி விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு அப்பால், காங்கிரசு கூட்டணி அரசால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் அளிக்கப்பட்டிருந்த ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமான வரிச் சலுகைகள் மீது மோடி அரசும் கைவைக்கவில்லை என்பதோடு, தனிநபர் வருமான வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றில் மேலும் 22,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்திற்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரி விலக்கு மற்றும் முதலீட்டுக்கான வரி விலக்குகளால் அவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 5,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை மிச்சமாகுமென்று கூறப்படுகிறது.

டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையம் – பி.பி.பி திட்டங்களில் நடக்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எடுப்பான உதாரணம்.

இந்த வரி விலக்குகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பை ஈடுகட்ட 7,525 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அன்றாடங் காய்ச்சிகளான சாமானிய மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இது. இதற்கு அப்பால் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. யூரியாவிற்கு வழங்கப்படும் மானிய முறையை மாற்றியமைப்பதன் மூலம் உர மானியத்தில் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டிவிடவும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு; பட்ஜெட்டில் மானிய வெட்டு, மறைமுக வரி உயர்வு – “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம்” எனச் சவடால் அடித்த உத்தமர்களின் யோக்கியதை இதுதான்.

இவை ஒருபுறமிருக்க, பற்றாக்குறையை ஈடுகட்ட 63,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை – கணிசமான இலாபத்தில் இயங்கும் செயில், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா ஆகியவற்றின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனியார்மய நடவடிக்கையோடு, காப்பீடு துறையிலும் இராணுவத் தளவாட உற்பத்தித் துறையிலும் 49 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, இணையதள வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி – என மோடியின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானதாகவும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் மற்றும் புதுப் பணக்கார கும்பலின் மனதைக் குளிர்விப்பதாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காக 2.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இதுதான் இந்த பட்ஜெட்டின் குறிப்பிடத்தக்க அம்சம்” என தினமணி நாளிதழின் நடுப்பக்க கட்டுரையொன்று சிலாகித்துப் பேசுகிறது. “இவ்வளவு கோடி ரூபாயைச் செலவழித்து உருவாக்கப்படும் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் யாருக்குப் பயன்படும்?” என்ற கேள்விதான் இந்த பட்ஜெட்டின் மக்கள் விரோதத் தன்மையை முழுமையாக வெளிப்படுத்தும்.

வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் கிராமப்புற ஏழைகள் தகரக் கொட்டகையிலும், நடைபாதையிலும், கட்டுமானங்கள் நடக்கும் பொட்டல் வெளியிலும் தங்க வேண்டிய அவலத்தில் இருத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது என்பதை மௌலிவாக்கம் சாவுகள் அம்பலப்படுத்தின. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 75,000 கோடி ரூபாய், நகர்ப்புற வளர்ச்சியின் வேராக இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு ஒரு குடிசையைக்கூட கட்டிக் கொடுக்கப் பயன்படப் போவதில்லை. ஏனென்றால், நகர்ப்புற சேரி ஒழிப்புத் திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பாக்கிவிட்டு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டது, மோடி அரசு.

100 புதிய நகர்ப்புறங்களை அமைக்க 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கும் மோடி அரசு, கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்ற சிறுதொழில் முனைவோரின் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 45 சதவீதத்தை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிறைவு செய்கின்றன; இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறது. 10.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடி ரூபாய் மூலதனத்தையும் பல இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை களையும் அளித்திருக்கும் மோடி அரசு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது, “இந்நிறுவனங்களுக்கு ஊக்க மூலதனம் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்படும்” என்ற வாக்குறுதி மட்டும்தான்.

ரயில்வே துறையில் தாழ்த்தப்பட்டோர் மலம் அள்ளிவரும் அவலத்தை ஒழித்து, ரயில் பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளாத ரயில்வே பட்ஜெட், பெருநகர ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் “வைஃபி” இணைப்புப் பொருத்தப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற சாமானிய மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போடுகிறது, ரயில்வே அமைச்சகம். இதற்காகத் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, நடுத்தர வர்க்கத்தையும் புலம்ப வைத்துவிட்டது. சென்னையிலிருந்து தென்தமிழகம் செல்லும் தடத்தை இரட்டைப் பாதையாக மாற்றக் கோரும் நீண்ட நாள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, 50,000 கோடி ரூபாய் செலவில் புல்லட் ரயில் விடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் நகர்ப்புறங்களில் கட்டப்பட்டிருக்கும் பாலங்களும், விரைவுச் சாலைகளும், மிக நவீனமான விமான நிலையங்களும் சாமானிய மக்களின், கிராமப்புற விவசாயிகளின் குடிசைகளை, வாழ்வாதாரங்களைப் பறித்திருக்கிறதேயொழிய, அவர்களது வாழ்க்கையிலிருந்து வறுமையை விரட்டியடித்து விடவில்லை. வாஜ்பாயி காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கரண சாலை கட்டணக் கொள்ளையை நிரந்தரமாக்கியதேயொழிய, வேலைவாய்ப்புகளை நிரந்தரமாக்கவில்லை. மன்மோகன் சிங் ஆட்சியில் கட்டப்பட்ட டெல்லி மற்றும் மும்பய் விமான நிலையங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கும், ஊழலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனில் 53 சதவீதம் கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏப்பம் விட்டதாகும். மோடி அரசின் அடிக்கட்டுமான மற்றும் பி.பி.பி. திட்டங்கள் இதிலிருந்து வேறுபட்டதாக இருந்துவிடப் போவதில்லை.

இந்த பட்ஜெட் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எட்டு சதவீத வளர்ச்சியைச் சாதிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருப்பதாக மோடியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 2008-க்கு முன்பு சாதிக்கப்பட்ட எட்டு சதவீத ‘வளர்ச்சி’ இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளைத் தற்கொலைக்கு தள்ளிவிட்டது. பல இலட்சக்கணக்கான விவசாயிகளை நடோடிகளாக நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடித்தது. உத்தரவாதமற்ற வேலையும், அற்பக்கூலியும், விலைவாசி உயர்வும் சாமானிய மக்கள் சந்திக்க வேண்டிய நிரந்தரப் பிரச்சினைகளாகின. இந்த நிலையில் மன்மோகன் சிங்கைவிடத் தீவிரமான தனியார்மய விசுவாசியான மோடி முன்னிறுத்தும் எட்டு சதவீத வளர்ச்சியைக் கற்பனை செய்து பார்ப்பதே மரண பயத்தை ஏற்படுத்துகிறது.

– செல்வம்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்

27

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 3 : பொதுப்பள்ளிகளும், தாய்மொழி வழிக் கல்வியும்

ரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் தான் நடக்கின்றன. ஒரு சாதாரண தீப்பெட்டி வாங்கினால் கூட அதில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். தீப்பெட்டி இல்லாத வீடு எதாவது இருக்கிறதா? நமது வரிப்பணத்தில் நடக்கும் பள்ளிகள் முறையாக நடக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதும் நமது கடமை தான். ஆசிரியர்களை போதுமான அளவு நியமிக்காவிடில் அதற்காக போராட வேண்டும். அப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நாம்தான் போராடி அதனை வேண்டும்.

பொதுப்பள்ளி
முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர்.

தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். அரசு பள்ளிகளில் நாற்பது சதவீத கல்வி போதனை நேரத்திற்குதான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை நாற்பதால் வகுத்து அந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் பிரச்சினை தீராது. அரசு இதனைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஐந்து வகுப்பு வரை இருந்தால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே ஒரு மாணவர் இருக்கும்பட்சத்தில் கூட அதற்கு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவருக்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயித்து விட்டால் எப்படியாவது முயன்று ஆசிரியர்கள் கற்பித்து விடுவார்கள். ஆனால் பாடத்திட்டத்தை இதுதான் என வரையறுத்து கொடுத்து விட்டு ஆசிரியர்களை முறையாக நியமிக்காவிடில் அரசு பள்ளிகள் என்றுமே முன்னேற முடியாது.

ஆசிரியர்கள் நடத்தும் குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறைகளை இப்போது பெரிதாக பேசுகிறோம். ஊடகங்களும் இவற்றை வெளியில் கொண்டு வந்துள்ளன. எங்கள் காலத்திலும் இப்படியான பாலியல் வன்முறை சம்பவங்களை நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. அப்போது ஆசிரியருக்கு எதிராக பேசினால் அடி கிடைக்கும் என்பதால் யாரும் இதனைப் பேசவில்லை.

முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர். அவர்களிடையேயான தோழமை உணர்வை பொதுப்பள்ளி முறை வளர்த்தது. ஆனால் இப்போது கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு பள்ளி, லட்சாதிபதி பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஒன்றுமில்லாதவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி என சமூகத்தில் இருக்கும் பிரிவுகளையே பள்ளித்துறையும் பின்பற்றுவதாக மாறி விட்டது.

தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் போது நான் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் போயிருந்தேன். அங்கே சாதிவாரியாக பள்ளிகள் பிரிந்து கிடக்கின்றன. பறையர் சாதியினை சேர்ந்தவர் தலைமையாசிரியராக இருக்கும் பள்ளியில் தேவர் சாதி மாணவர் சேர மாட்டார். தேவர் சாதி தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியில் பள்ளர் சாதியினை சேர்ந்த மாணவர் சேர மாட்டார். இருப்பது ஒரே பொதுப்பள்ளியாக, ஊருக்கு ஒரே பள்ளியாக இருக்கும்பட்சத்தில் இதெல்லாம் நடக்குமா? சாதியத்தை ஒழிப்பதற்கு பதிலாக தனியார் பள்ளிகள் இதனை வளர்க்கத்தான் உதவுகின்றன. தரமான கல்வி, மருத்துவத்தை அரசுதான் மக்களுக்கு தர வேண்டும்.

கல்வியை போலவே மருத்துவத்தையும் தனியாருக்கு திறந்து விட்டவர் எம்.ஜி.ஆர்.தான். அப்பல்லோவுக்கு அனுமதி கொடுத்தவர் அவர்தான். கூடவே அரசு மருத்துவமனை நன்றாக நடக்க விடாமலும் செய்தார். அரசு மருத்துவமனைகள் ஒழுங்காக நடந்தால் அப்பல்லோவுக்கு எப்படி ஆட்கள் வருவார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ 2 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளுக்கு 2000 தனியார் மருத்துவமனைகள் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு விலையில்லா மருத்துவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் எதிர்ப்பவன். இதனை அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சையாக தர வேண்டும் என்பவன். சொல்லப் போனால் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களே இந்த நமது அரசு மருத்துவமனையில் உள்ள பேராசிரியர்கள்தான், இவர்களை விடவும் மிகவும் அனுபவம் உடையவர்கள். முன்னர் கவர்னர் முதல் அமைச்சர் வரை எல்லோருமே அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார்கள். நானே அப்படி பல அமைச்சர்களை அரசு மருத்துவமனையில் சென்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் அப்பல்லோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் ஏன் ஓடுகிறார்கள்? இது தவறு. அரசின் கொள்கை இது. தனியார்மயம் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக நடக்கிறது. முன்னர் விசா மறுத்த அமெரிக்கா இப்போது ஏன் மோடிக்கு பின்னால் வருகிறது. அவனுக்கு வியாபாரம் நடக்க வேண்டும். அதனால் தான் இப்போது காலைப் பிடிக்கிறான்.

ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம் என்று சொல்கிறேன். உங்களுக்கு வேலை தரும் அமெரிக்காக்காரன் உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலம் தெரியும் என்று பார்த்து வேலை தருவதில்லை. உங்களுக்கு எவ்வளவு கணிதம், அறிவியல், பொறியியல் தெரியும் என்று பார்த்துதான் தருகிறான். ஒரு மொழியை ஓராண்டுக்குள் படித்து விட முடியும். இங்குள்ள துணைத்தூதரகங்களில் அதற்கான பயிற்சியும் தருகிறார்கள்.

அன்னிய மொழி கற்றல்
ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள்.

ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள். அதிலும் தினமும் கூட வகுப்பு கிடையாது. மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட படிப்பு எங்குமே கிடையாது. சிறிதும் பரிச்சயமில்லாத இம்மொழியை ஓராண்டுக்குள் கற்க முடியும்போது, ஏற்கெனவே ஓரளவு நமது சமூகத்தில் நடைமுறையில் உள்ள பரிச்சயமுள்ள ஆங்கிலத்தை டிகிரி வரை பதினைந்து ஆண்டுகள் ஏன் கற்க வேண்டும். இரண்டு கோடை விடுமுறைகளில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் முப்பது நாட்கள் என ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.

ஆங்கிலமே தெரியாத ஆசிரியரை வைத்துக்கொண்டு எப்படி ஆங்கிலம் கற்றுத்தர முடியும். ஆங்கிலத்தில் பேசவே முடியாத ஒரு ஆசிரியரால் எப்படி ஆங்கில வழியில் கற்றுத்தந்து விட முடியும். வெர்டிபிரேட் என்ற வார்த்தையை அவர் வெறும் மனப்பாட கல்வியாகத்தான் சொல்லித்தர முடியும். நம் ஊரில் ஏழு லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமல் இருப்பதால் அல்ல. பொறியியல் அறிவு இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

உயர்கல்வியினை தமிழ்வழியில் கொடுப்பதை கோரும் தீர்மானங்கள் முன்னர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் முதல் முதலாக வைக்கப்படும். இன்றைக்கு ஆரம்ப கல்வியே தாய்மொழியில் இல்லாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்விக்காக நான் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். ஏறக்குறைய 161 நாடுகளைப் பார்த்த வரையில் எங்குமே பயிற்றுமொழி வேற்றுமொழியாக ஒரு நாட்டில் கூட இல்லை. கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றியதாக சொல்லிக் கொள்ளும் நாம் தோன்றி 1300 ஆண்டுகள் மட்டுமேயான ஆங்கில மொழியில் தான் கற்கிறோம். சோவியத் யூனியனில் இருந்த துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் கூட நர்சரி பள்ளி துவங்கி ஆய்வுப்படிப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி கற்றல் நடைபெற்று வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மூன்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூட அவர்கள் தாய்மொழியில்தான் ஆய்வுப்படிப்பு வரை கல்வியை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் ஜப்பானில்தான் இப்போதும் உள்ளனர். ஒருவர் மட்டும்தான் அமெரிக்கா போயுள்ளார். ஜப்பானியர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான்.

(தொடரும்)

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.