படம் : ஓவியர் முகிலன்
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. சூரத் குண்டுவெடிப்பு வழக்கு : நிரபராதிகளின் கொலைக்களமாக குஜராத்
2. தலையங்கம் : குடந்தை வழக்கில் அநீதித் தீர்ப்பு : மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி!
3. மெட்ரிக் கொலைக்கூடங்கள்
தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழில், மணற்கொள்ளை கிரானைட் கொள்ளையைப் போன்றதொரு கிரிமினல் தொழில். இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இத்தொழிலின் அங்க லட்சணங்கள்.
4. மீத்தேன் எடுப்புத் திட்டத்தைத் தடுப்போம் ! காவிரி டெல்டாவைப் பாதுகாப்போம் !!
5. பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை “பி.பி.பி” திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி
6. பட்ஜெட் பற்றாக்குறை : கஞ்சிக்கில்லாத மக்கள் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானியம்
மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகைகளும் ஏறத்தாழ சமமானவை.
7. மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி : இந்திய விவசாயத்தைத் தூக்கிலேற்றுகிறார் மோடி!
இருபதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான கள ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்டு மேலும் 15 உணவுப் பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.
8. சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!
இந்து மதவெறி பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலம் முறியடித்துவிட முடியாது என்பதை மோடி அரசின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.
9. சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…
10. பாலஸ்தீனம் – உக்ரைன் : மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !
மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரசியாவைப் பொறுப்பாக்கித் தண்டிக்கத் துடிக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், காசா மீது இசுரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பக்கதுணையாக நிற்கின்றன.
11. ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3
அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசார நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்
12. நரேந்திர மோடி அரசு : சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!
13. தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் : பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது !
14. பட்ஜெட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் !
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.
புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு
புதுச்சேரியில் நடப்பது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சி ரவுடிகளின் கையில்தான் இருக்கிறது. ரவுடிகளின் முக்கியமானதொரு தொழில் லேபர் கான்டிராக்ட். எந்த வித உரிமைகளும் இல்லாமல் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்படும் கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. 8 ரவுடிகளும் சில தொழிலாளர்களும் மருத்துவமனையில். தொழிலாளர்கள் மட்டும் 20 பேர் சிறையில்.
நடந்த நிகழ்வுகளை கீழே விவரிக்கிறோம். மானேசரில் தொடங்கி புதுச்சேரி வரையில் தொழிலாளி வர்க்கத்தின் மீது இழைக்கப்படும் அநீதி ஒன்றுதான். அதற்கு விடையும் ஒன்றுதான் என்பதை இந்த அறிக்கையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியுமெனக் கருதுகிறோம்.
000
புதுச்சேரி மாநிலம், திருபுவனை தொழிற்பேட்டையில் 150 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 முதல் 30 பேர் மட்டும்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். பல நிறுவனங்களில் நூற்றுக்கணக்கிலும் சில நிறுவனங்களில் ஆயிரக்கணக்கிலும் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, வேர்பூல் – Whirlpool குளிர்சாதன பெட்டிக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் மதர் பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் 22 பேர் தான் நிரந்தரத் தொழிலாளர்கள், இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள். இருவருக்கும் செய்கின்ற வேலையில் வேறுபாடு இல்லை என்றாலும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் கூடக் கிடையாது.
ரயில்களுக்கான பிரேக் தயாரிக்கும் ரானே பிரேக் நிறுவனத்தில் வெறும் 64 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடினால் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து ஆலையை இயக்கி, போராடும் தொழிலாளியை மிரட்டுவது நிர்வாகங்களின் வாடிக்கை.
தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டுவது, காண்டிராக்ட் தொழிலாளிகள், நிரந்தர தொழிலாளிகளிடையே ஒற்றுமையைக் கட்டுவது, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பது – ஆகியவற்றுக்காக புதுச்சேரியில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது
சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையைத் தடை செய்ய வேண்டும் என பு.ஜ.தொ.மு சார்பாக திருபுவனை தொழிற்பேட்டையில் துவங்கி புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலைகளின் சுற்று வட்டாரத்திலும் பு.ஜ.தொ.மு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. சுவரொட்டிகளை கண்டவுடனேயே ஆத்திரம் கொண்ட லேபர் காண்டிராக்டர்களான சுதாகர், பூபாலன் மதர் பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பு.ஜ.தொ.மு கிளைச் செயலாளரான தோழர் பிரபுவை கொலை செய்யப்போவதாக மிரட்டியிருக்கின்றனர். திருபுவனை காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்தார் பிரபு. புகாரை வாங்கிக்கொண்ட ஆய்வாளர் அதற்கான CSR-ஐ (ரசீதை) கொடுக்காமல், மாலை ஸ்டேசனுக்கு வருமாறு கூறியிருக்கிறார்.
மாலையில் போலீசு நிலையத்துக்கு பிரபு சென்றபோது இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அங்கே குவிந்திருந்தனர். தகவல் அறிந்து, இருபதுக்கும் மேற்பட்ட தோழர்களும் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
புதுச்சேரியில் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் அதிகாரத்தை கூட போலீசார் தங்களிடம் வைத்துக்கொள்ளவில்லை. ஸ்டேசனை மட்டும் லீசுக்கு விட்டிருப்பதால், “நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒப்பந்ததாரர்களில் ஒருவன் “ஏன் நண்பா நமக்குள்ள பிரச்சினை, இது எங்களோட பொழப்பு, தொழிலாளிகளை நிரந்தரப்படுத்தனும்கிற கோரிக்கைகளை எல்லாம் வைக்காதீங்க, நம்ம எல்லோரும் உள்ளூர் ஆளுங்களா இருக்கோம், எதுக்கு பிரச்சினை பேசாம கேச வாபஸ் வாங்கிக்கங்க” என்று நயமாக மிரட்டினான்.
தனது புகாரில் நிர்வாகத்தின் தூண்டுதலால் தான் சுதாகரும், பூபாலனும் தன்னை தாக்க வந்தனர் என்று தோழர் பிரபு கூறியிருந்தார். ஆனால் போலீசாரோ நிர்வாகத் தரப்பை விசாரிக்க கூட இல்லை. அதே நேரம் “ஆலையின் HR அதிகாரியை தோழர்கள் தாக்க முயற்சித்தனர்” என்றொரு பொய் புகார் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. எந்த தோழர் மீது நிர்வாகம் பொய்ப்புகார் கொடுத்ததோ, அவர் குறிப்பிட்ட அந்த நாளில் ஆலையிலேயே இல்லை. தொழிலாளர் உதவி ஆணையரை சந்திக்கச் சென்றுள்ளார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தனர்.
வேலழகன் என்ற லாபர் காண்டிராக்டர் “நீங்க போஸ்டர் போட்டது தப்பு, பேசாம கேசை வாபஸ் வாங்கிக்கங்க” என்றான். அவனோடு வந்திருந்த இருபது பேரில் ஆறு ஏழு பேர் நல்ல போதையில் சலம்பிக் கொண்டே இருந்தனர்.
“எதுக்கு மாப்ள இவனுங்கட்டல்லாம் கத்தினிருக்கே? போட்டுத்தள்ளிட்டு போறத வுட்டுட்டு…” என்று ரவுடிகள் ஸ்டேஷனிலேயே உதார் விட, அதையும் போலீசார் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
போதையில் இருந்த ரவுடிகளின் அலப்பறை மிகவும் அதிகரிக்கவே “ஏம்பா எதுனாலும் சமாதானமா பேசுங்க, இல்லைன்னா நான் FIR போட்றுவேன்” என்று கூறி ஸ்டேசனில் ஒழுங்கை நிலைநாட்டினார் ஆய்வாளர்.
உடனே வேலழகன் யாருக்கோ போனைப் போட்டு “மாப்ள இவனுங்க என்னா பேசுனாலும் கலைய மாட்றானுங்கடா, நம்மாளுங்களுக்கு போதை இறங்கிடுச்சுன்னா கெளம்பிறுவானுங்க போல இருக்குதுடா, இன்னா பன்றது” என்றான். சற்று நேரத்தில் தொழிலாளிகள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அங்கே திரண்டு விட்டனர். ரவுடிகள் இடத்தை காலி செய்யத்தொடங்கினர்.
துணை ஆய்வாளர் “இது தொழிலாளர் பிரச்சினையாக இருக்கிறது எனவே இதற்கு தனியாக FIR போட முடியாது” என்றார். “என்னங்க ஒரு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விட்டிருக்காங்க இதுக்கு லேபர் ஆபீசுக்கு போகச்சொல்றீங்களா? கம்பெனிக்குள்ள கொலை நடந்தாலும் இப்படிதான் பேசுவீங்களா” என்று கேள்வி எழுப்பினர். எது நடந்தாலும் FIR போடுவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார் துணை ஆய்வாளர்.
இச்சம்பவத்துக்குப் பத்து நாட்கள் கழிந்த பின்னர், திருவெண்டார் அருகே உள்ள சன் பார்மா என்கிற நிறுவனத்தில் சிஐடியு CITU தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. அப்போது கொடியேற்றும் நேரம் பார்த்து வந்த இருபது பேர் கொண்ட கும்பல் தொழிற்சங்க நிர்வாகிகளை தாக்கிவிட்டு “நாங்க இருக்கிற தொழிற்பேட்டையில் எவனும் சங்கம் வைக்கக்கூடாது” என்று மிரட்டியது. சிஐடியு-வினர் போலீசில் புகார் கொடுத்தனர். எதுவும் நடக்கவில்லை. 2009-ல் ரானே பிரேக் நிறுவனத்தில் தொழிலாளர்கள் சங்கம் துவங்கிய போதும் இதே போல தான் ரவுடிகள் அடித்து உடைத்தனர். பிறகு தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்தனர்.
இந்தப் பின்புலத்தில்தான் திருபுவனை தொழிற்பேட்டையில் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து, பு.ஜ.தொ.மு சார்பாக 5.8.2014 அன்று திருபுவனையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடங்களிலும் ரவுடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அனுபவத்தை கூறி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கடைசி வரையில் பேசாமல் இருந்துவிட்டு, போராட்ட நாளான 5-ம் தேதி மாலை 3 மணிக்கு துணை ஆய்வாளர் தோழர்களை அழைத்து “ உங்களுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி, பேரணிக்கு இல்லை” என்றார். அதை எழுத்துபூர்வமாகத் தருமாறு கேட்டதற்கு தர மறுத்தார். “எனக்கு பல பேர் போன் பண்ணி,அனுமதி கொடுத்தால் பிரச்சினை பண்ணுவோம்”னு சொல்றானுங்க, என்றார். “சொன்னா அப்படி சொல்றவனத் தூக்கி உள்ளே வெச்சுட்டு, பேரணிக்கு பாதுகாப்பு கொடுக்கிறதுதான் சார் உங்க கடமை” ன்னு தோழர்கள் வாதாடியபின், “சரி பேரணி நடத்திக்குங்க, பாதுகாப்பு தர்றோம், ஆனா எழுதித் தர முடியாது, பாதுகாப்பு தருகிறோம்” என்றார்.
பேரணி போகும் பாதையில் தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. பேரணிக்கு சென்ற சில தொழிலாளர்கள் ஸ்டேஷனை கடந்து சென்ற போது அங்கே இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கின்றனர்.
பேரணி தொடங்கும் தருவாயில் அந்த 20 பேரும் திபுதிபுவென்று இரு சக்கர வாகனங்களில் புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து இறங்கினர். பேரணியில் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழுமியிருந்தனர். பாதுகாப்பு தருகிறேன் என்று சொன்ன போலீசார் யாரையும் காணோம். இத்தனைக்கும் 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன்.
முதலில் வந்த பூபாலன் என்ற காண்டிராக்டர் “ஏய் கெளம்பி எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு ஓடுங்க” என்றான். ராஜா என்பவன் “ஏய் இவனுங்ககிட்டா இன்னாடா பேச்சு” ன்னு கத்திக்கொண்டே அருகில் இருந்த ஓட்டலிலிருந்து தடி கட்டையை எடுத்து தோழர்களின் செங்கொடியை ஓங்கி ஒரு அடி அடித்தான். கொடியை பிடித்துக் கொண்டிருந்த தோழர் நிலைகுலைய, கம்பி சாய்ந்து ஒரு பெண் தோழரின் தலையில் விழுந்து காயம் பட்டது.
உடனே பு.ஜ.தொ.மு துணைத்தலைவர் எழில் வேகமாக முன்னே வர, அவர் தலையில் ஓங்கி அடிப்பதற்கு ராஜா உருட்டுக்கட்டையை தலைக்கு மேலே தூக்கினான். ஆனால் அடி இடுப்பில் விழுந்து எலும்பு முறிந்தது. தோழர் எழில் மீது அடி விழுந்தவுடனே, நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ரவுடிகள் மீது பாய்ந்தனர். விளைவு, எழிலைத் தாக்கிய ராஜா அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தான். பெட்ரோல் குண்டுகள், இரும்பு கம்பிகளோடு வந்திருந்த ரவுடிகள், தொழிலாளர்களின் போர்க்குணத்தை கண்டு பீதியடைந்து ஆயுதங்கள் அனைத்தையும் போட்டுவிட்டு தெறித்து ஓடினர்.
பேரணி கிளம்பியது. பேரணி 100 மீட்டர் முன்னே செல்வதற்குள் இன்ஸ்பெக்டரும், எஸ்.பியும் பேரணிக்குள் வந்தனர். முகப்பு கொடியை பிடித்துக் கொண்டிருந்த தோழரை போலீஸ் வண்டிக்குள் ஏற்ற முயன்றனர். ஏன் என்று பிற தோழர்கள் கேட்டதும், “ஒருத்தனை அடிச்சே கொன்னுருக்கீங்க” என்று சொல்லிக்கொண்டே இன்னும் இரண்டு தோழர்களையும் பிடித்து இழுத்தனர். “மூணு பேரெல்லாம் வர முடியாது, பேரணியில் 350 பேர் இருக்கோம், அத்தனை பேரும் வர்றோம்” என்று தொழிலாளர்கள் ஸ்டேஷனை நோக்கி நடந்தனர்.
காவல் நிலையம் வந்தவுடன், “அஞ்சு பேர் மேல கேஸ் போடப்போறோம் மத்தவங்க எல்லாம் கிளம்பி வீட்டுக்கு போங்க” என்றனர். யாரும் போக மாட்டோம் என்று தொழிலாளர்கள் மறுத்தனர். மற்றொரு புறம் பயந்து ஓடிய ரவுடிகள் ஊருக்குள் சென்று, “நம்ம சாதிக்காரனுங்களை அடிச்சிட்டானுங்க, நம்ம ஊர்காரன்களை வெளியூர்காரனுங்க அடிச்சிட்டானுங்க” என்று ஊர் மக்களை திரட்ட முயற்சி செய்தனர். ஆனால் மக்கள் யாரும் அவர்களோடு வரவில்லை என்றதும் இருபது குடும்பத்திலிருந்தும் 5,6 பேர் என்று ஒரு 70 பேரை திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியில் நிற்கின்ற தோழர்களை தாக்க வந்தனர்.
ஸ்டேஷனுக்கு வெளியில் தான் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் நின்று கொண்டிருந்தனர். வந்த ரவுடிகள் போலீசு இருக்கும் தைரியத்தில், தோழர்களை தாக்க முனைந்தனர். தொழிலாளர்கள் உடனே திருப்பித் தாக்குவதற்கு திரளவே, ரவுடிகளை காம்பவுண்டை விட்டு வெளியேற்றியது போலீசு.
வெளியே சென்ற கும்பல், பேரணிக்கு வந்திருந்த இரு தொழிலாளர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது. (அருள் என்கிற தொழிலாளி Lottee நிறுவனத்தில் பணிபுரிகிறார். புண்ணியமணி Swastik என்கிற நிறுவனத்தில் பணிபுரிகிறார்)
இப்படி கோழைத்தனமாக தாக்கிவிட்டு, கும்பலாக சாலையில் அமர்ந்து கொண்டு புஜ.தொ.மு வினரை ரிமாண்டு செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். சரி செய்கிறோம் என்று போலீஸ் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, சாலயோரம் நடப்பட்டிருந்த CITU கொடிக்கம்பத்தை உடைத்து கொடியை நடுரோட்டில் போட்டு கொளுத்தினர்.
இதைப் பார்த்த மார்க்சிஸ்டு கட்சியினர், ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்து சாலை மறியல் செய்தனர். “தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது, முதலில் அடிச்சது இவனுங்க தான். அதை தடுக்கிறதுக்கு தான் பு.ஜ.தொ.மு காரங்க திருப்பி அடிச்சாங்க, ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும்” என்று மக்கள் முழக்கமிடவே, “அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் நீங்க கலைந்து போங்க” என்று போலீசு சமாதானம் செய்தது.
மக்கள் போராட்டத்தால் பின் வாங்கிய ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. ஆனால் செல்லும் வழியில் திருபுவனை பு.ஜ.தொ.மு கிளை துணைத்தலைவர் மோகன்ராஜ் வீட்டையும் பு.ஜ.தொ.மு கிளை அலுவலகத்தையும் அடித்து நொறுக்கியதுடன், ஊருக்குள் யாரும் கடையை திறந்து வைத்திருக்கக்கூடாது என்று மூட வைத்துள்ளனர். பேரணிக்கு வந்த தோழர்களின் இரு சக்கர வாகனங்களையும் ஒரு வண்டி விடாமல் அடித்து நொறுக்கியுள்ளனர். சாலையில் சிவப்பு சட்டை அணிந்து சென்ற மக்கள் பலரைத் தாக்கி, அவர்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். நிலைமை கைமீறிப்போகவேதான் வேறு வழியே இல்லாமல் போலீசு அந்த கும்பலைக் கலைக்க தடியடி நடத்தியது.
பேரணி தொடங்கிய இடத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் தொழிலாளர்கள் கூறியிருக்கின்றனர். போலீசோ, அவற்றில் 6 வண்டிகளை தூக்கி வந்து, பு.ஜ.தொ.மு வினர் அந்த வண்டிகளில் வந்து இறங்கி ரவுடிகளைத் தாக்கியதாக வழக்கை சோடித்திருக்கின்றனர். ரவுடிகள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளையும் பு.ஜ.தொ.முவினரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறி பொய்வழக்கு போட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் தோழர் எழில் தாக்கப்பட்டது பற்றியும், தோழர் மோகன்ராஜின் வீடு தாக்கப்பட்டதும், அவருடைய துணைவியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றுக்காக கொடுக்கப்பட்ட புகார்களை வாங்க போலீசு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
மறுநாள் காலை வந்த பத்திரிகை செய்திதான் மிகவும் கேவலமானது. ரவுடிகள் மீது போலீசு நடத்திய தடியடியை பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி என்று செய்தி வெளியிட்டது தினமலர்.
தினத்தந்தி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளும் போலீசு செய்தியை தான் வெளியிட்டன. தினகரன் மட்டும் என்ன நடந்தது என்பதை ஓரளவுக்கு எழுதியிருந்தது.
காலை 6 மணிக்கு 20 பேர் மட்டும் லாஸ்பேட்டையில் உள்ள மாஜிஸ்டிரேட் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை புகைப்படமெடுத்த ஒரு தோழரின் கைபேசியைப் பறித்துக்கொண்டு அவரையும் வண்டியிலேற்றியது போலீசு. உடனிருந்த வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே தோழரை விடுவித்து விட்டு, கைபேசியை மட்டும் பறித்துக் கொண்டது.
“நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, அவர்கள் தான் எங்களை தாக்கினர். நாங்களே தான் காவல் நிலையத்திற்கு வந்தோம்” என்று என்ன நடந்தது என்பதை தோழர்கள் விளக்கியும் நீதிபதி கேட்க தயாராக இல்லை. தோழர்கள் மீது 307, 323, 324, 147, 190, 198 (திட்டமிட்ட கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ள 36 தோழர்களை ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். சார் நிலை ஆட்சியர் மாலை நான்கு மணிக்கு வந்தார். “தமிழ்நாடு முகவரி உள்ளவர்கள் அனைவரும் பாண்டு பத்திரம் கொடுக்க வேண்டும். பாண்டிச்சேரி முகவரியில் உள்ளவர்கள் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்” என்றார். “107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் போடப்பட்டிருக்கும் வழக்குகள் நிபந்தனை பிணையின் கீழ் வரக்கூடியவை அல்ல” என்று வழக்குரைஞர்கள் கூறியதற்கு “புதுச்சேரியில் இப்படித்தான் செய்வோம்” என்றார் சார் ஆட்சியர்.
உண்மைதான். புதுச்சேரியில் முதலாளிகள், காண்டிராக்டர்கள், ரவுடிகளின் கூட்டணிதான் ஆட்சி நடத்துகிறது.
புதுச்சேரி தொழில்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் இத்தகைய ரவுடிகளே அனைத்து மட்டத்திலும் கோலேச்சுகின்றனர். அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் இத்தகைய ரவுடிகளே தளபதிகளாக வலம் வருகின்றனர். வசூலிலும் கூட்டுக் கொள்ளையிலும் பங்கு பிரித்துக் கொள்கின்றனர். இவர்களை எதிர்த்து வீழ்த்தாமல் அங்கே எந்தவிதமான அரசியல் – சமூக நடவடிக்கைகளும் சாத்தியமில்லை.
ஒப்பந்ததாரர் என்ற பெயரில் உலவும் இந்த ரவுடிகளுக்கெதிராக புதுச்சேரி முழுவதும் பொதுமக்களிடையே வெறுப்பு நிலவுகிறது. ஒப்பந்ததார ரவுடிகளின் இந்த தாக்குதலை கண்டித்து CPM, CPI (ML) விடுதலை, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கண்டன அறிக்கை விடுத்துள்ளன. யாரும், தங்கள் மீது கை வைக்க முடியாது என்று தினவெடுத்து திரிந்து கொண்டிருந்த இந்தக் கும்பலுக்கு முதல் முறையாக தொழிலாளி வர்க்கம் பாடம் கற்பித்திருக்கிறது.
முதலாளிகளின் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் பொறுக்கி கும்பல்கள், தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஒரு போதும் அனுமதிக்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்திருக்கிறது. தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான பாதை எளிதானதாக இருக்காது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும். தனது வலிமை என்ன என்பதையும் தொழிலாளிவர்க்கம் எதிரிகளுக்கு உணர்த்தும்.
– வினவு செய்தியாளர்
(தகவல் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி)
தொடர்புடைய பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…
“சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தியையே முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றொரு அரசாணையை முதலில் வெளியிட்டு ஆழம் பார்த்தது மோடி அரசு. பரவலாக எதிர்ப்பு வரவே, “அந்த ஆணை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும்” என்று சமாளித்தது. பிறகு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பயிற்சிக்கு செல்லாத ஊழியர்களுக்கு அலுவலக ரீதியில் மெமோ கொடுக்கப்படுவதாக செய்தி வெளியானது. இப்போது நாடெங்கும் மைய அரசின் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி.) ஆகஸ்டு 7 முதல் 13 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி, சி.பி.எஸ்.சி. இயக்குனர் வழியாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பச்சைப் பொய்களாலும், பார்ப்பனப் புரட்டுகளாலும் நிரம்பியிருக்கும் அந்தச் சுற்றறிக்கை, சமஸ்கிருதத்தை எல்லா (உலக) மொழிகளுக்கும் தாய் என்று குறிப்பிடுவதுடன், அது இந்தியப் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த மொழி என்றும், இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையான அறிவுச்செல்வங்கள் சமஸ்கிருதத்தில்தான் இருப்பதாகவும் கூறுகிறது. இந்தியப் பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கு மட்டுமின்றி, எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துடன் உள்ள உறவு குறித்து பிரபலப்படுத்த வேண்டுமென்றுமென்றும் இச்சுற்றறிக்கை கோருகிறது.
சமஸ்கிருத மொழியை அன்றாட வாழ்வுடன் இணைப்பது எப்படி என்பது குறித்து மாணவர்கள் சமஸ்கிருத பண்டிதர்களுடன் கலந்துபேச வேண்டுமென்றும், சமஸ்கிருத சொற்களை கற்றுக் கொள்ளும் விதமான கணினி விளையாட்டுகளை உருவாக்குவது, சமஸ்கிருத மொழித் திரைப்படங்களான ஆதி சங்கரர், பகவத் கீதை போன்றவற்றைத் திரையிடுதல் போன்ற வழிமுறைகளில் இது கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது மோடி அரசு.
சுற்றறிக்கையில் காணப்படும் விவரங்களிலிருந்தே, மொழியின் பெயரால் பார்ப்பன இந்து மதத்தைத் திணிக்கும் மோடி அரசின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். சமஸ்கிருதம் இந்தியப் பண்பாட்டுடன் பிணைந்த மொழி என்று இவ்வறிக்கை கூறும்போது, அது பார்ப்பன இந்துப் பண்பாட்டை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது. ஏனென்றால் சமண, பவுத்த மதங்கள் உள்ளிட்ட பிற மதங்களின் இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் இல்லை. மேலும் ஆதி சங்கரர் படத்தைத் திரையிடுதல், சுலோகப்போட்டி போன்றவை அப்பட்டமான பார்ப்பனியத் திணிப்பு நடவடிக்கைகள். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்குமான “உறவு” குறித்து மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என்று கூறுவதன் வாயிலாக, “சமஸ்கிருதம்தான் தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் தாய்” என்று பார்ப்பனப் புரட்டை நிலைநாட்டவே மோடி அரசு முயற்சிக்கிறது.
ஆனால், சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் ஆட்சிமொழியாகவோ, மக்களின் வழக்கு மொழியாகவோ இருந்ததில்லை. கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதமறுப்பு மதங்களான பவுத்த, சமண மத இலக்கியங்கள் பாலி மொழியில்தான் இயற்றப்பட்டன என்பதுடன் அசோகனின் கல்வெட்டுகளும் பாலி மொழியில்தான் செதுக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் என்பது தமிழைப் போல ஒரு மூல மொழியல்ல. அது பல அந்நிய நாட்டு மொழிகளைக் கொண்ட கதம்ப மொழியாகும். கிரேக்க, ஜெர்மானிய, கோதிக் மொழிகளும் சமஸ்கிருதமும் ஒன்றுபோல ஒலிப்பதை பல ஆய்வாளர்கள் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர்.
சமஸ்கிருதம் ஒரு தொன்மையான மொழி என்பதில் நமக்கு மறுப்பேதும் இல்லை. வேத, சாத்திர, புராண, இதிகாசங்கள் மட்டுமல்ல, பல்வேறு வேதமறுப்பு, இறைமறுப்பு தத்துவங்கள், அறிவியல், இலக்கிய நூல்களும் அம்மொழியில் உள்ளன. அவற்றையெல்லாம் பயின்றதன் பயனாகத்தான் பார்ப்பன இந்துமதக் கொடுங்கோன்மைகளை அம்பேத்கர் வெளிக்கொணர முடிந்தது. “இந்திய தத்துவ மரபு என்பது பார்ப்பன ஆன்மீக மரபு அல்ல, நமது தத்துவ மரபில் பெரும்பான்மையானவை வேத மறுப்பு, இறைமறுப்புத் தத்துவங்களே” என்று தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற ஆய்வாளர்களால் நிலைநாட்ட முடிந்தது. டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்று ஆய்வாளர்களால், புராண மவுடீகங்களிலிருந்து வரலாற்றை விடுவிக்க முடிந்தது. பார்ப்பன மரபுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட எண்ணற்ற சமஸ்கிருத நூல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையையும் வெளிக்கொணர முடிந்தது.

உண்மையில் சமஸ்கிருதம் என்ற மொழியின் அழிவுக்கு வழிகோலியவர்கள் இன்று சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லும் மோடியின் மூதாதையர்கள்தான். ஆம், இது அவர்கள் தம் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம். எந்த ஒரு மொழியும் மக்களுடைய நாவிலும் காதிலும்தான் வாழ முடியும், வளர முடியும். ஆரியம் போல “உலக வழக்கொழிந்து சிதையா சீரிளமைத் திறத்தை” தமிழ் பெற்றிருப்பதற்கு காரணம், அன்று முதல் இன்றுவரை அது மக்கள் மொழியாக இருப்பதுதான்.
ஆனால் பார்ப்பனியமோ, நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு கல்வியையும், வழிபாட்டு உரிமையையும் மறுத்தது. சமஸ்கிருதம் என்ற மொழியைத் தனது ஆதிக்கத்துக்கான ரகசிய ஆயுதமாக மாற்றிக்கொண்டு, அதற்கு தேவபாஷை என்றும் பெயரிட்டுக் கொண்டது. சமஸ்கிருத மந்திரங்களின் ஒலி பார்ப்பனர்களின் வாய் வழியாக வெளியில் வரும்போதுதான் கோயிலில் இருக்கும் கற்சிலை தெய்வீக சக்தியைப் பெறுகிறது; அந்த சக்தி தமிழ் உள்ளிட்ட வேறெந்த மொழிக்கோ, வேறு சாதியினருக்கோ கிடையாது என்று விதி செய்தது. இந்த ஆகம விதியைக் காட்டித்தான் பார்ப்பனரல்லாத அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் கோயில்களில் மேற்படி மந்திரங்களை அன்றாடம் ஒப்புவிக்கும் பார்ப்பன அர்ச்சகர்கள் யாருக்கும் அவற்றின் பொருள் தெரியாது. தன் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கே பொருள் தெரியாதவர்களாக அர்ச்சகர்கள் இருக்க, இந்த மொழியை மக்களுக்கு கற்றுக் கொடுத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைக்கப்போகிறதாம் மோடி அரசு.
சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டுமென்ற இந்த பார்ப்பன வேட்கை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தலையெடுத்து விட்டது. கல்லூரிப் பாடத்திட்டத்தில் மொழிக்கல்வியாக கற்றுத்தரப்பட வேண்டியது சமஸ்கிருதமா அல்லது அவரவர் தாய்மொழியா என்ற விவாதம் வந்தபோது, வைஸ்ராய் கர்சன் அதன் மீது கருத்து கூறுமாறு சென்னைப் பல்கலைக் கழகத்தைப் பணித்திருக்கிறார். அன்று பரிதிமாற்கலைஞரும், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஆசிரியர்களைத் தனித்தனியே சந்தித்து, தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி ஏற்கச் செய்திருக்கின்றனர். பின்னர் தாய்மொழிக் கல்வியே பாடமாக்கப்படவேண்டுமென்று அரசு முடிவெடுத்திருக்கிறது. மேற்கூறிய வரலாற்று விவரங்களை “செம்மொழி” உள்ளும் புறமும் என்ற தனது நூலில் விளக்கியிருக்கிறார் மணவை முஸ்தபா. தமிழைத் தம் உயிர் மூச்சாகக் கருதியவர்களான பரிதிமாற்கலைஞரும் பூரணலிங்கம் பிள்ளையும், பார்ப்பன வெறியர்களைப் போல அதனை மற்ற மொழியினர் மீது ஏவி விடவில்லை. தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக்கவேண்டும் என்று கருதவில்லை. மாறாக, ஜனநாயக உணர்வுடன் பல் தேசிய இனங்களின் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்தியிருக்கின்றனர்.
இன்று வைகோ, ராமதாசு முதலானோர் மிகவும் எச்சரிக்கையாக, “சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனிச்சலுகை வழங்கக்கூடாது; அவரவர் தாய்மொழியை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். மோடி அரசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலின் நோக்கம் பற்றிப் பேச மறுக்கின்றனர்.
இன்று மோடி அரசு கொண்டுவரும் சமஸ்கிருத திணிப்பு என்பது இந்து-இந்தி-இந்தியா என்ற இந்து ராஷ்டிர அரசியலின் திணிப்பு. தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு. அயோத்தி, பொது சிவில் சட்டம், இந்தித் திணிப்பு, பாடத்திட்டங்களில் இந்துத்துவம் ஆகியவற்றின் வரிசையிலான இன்னொரு தாக்குதல். சமஸ்கிருதமயமாக்கத்தை எதிர்த்து நின்ற தமிழ் மரபு, இந்தத் தாக்குதலை எதிர்ப்பதில் முன் நிற்கவேண்டும்.
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
_____________________________
நூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை
இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் கவிதையும் காசுமீரிலிருந்து வெளிவந்த கன்வேயர் எனும் ஆங்கில மாத இதழில் இடம் பெற்றவை. மனித உரிமைச் செயற்பாட்டளரான கவுதம் நவலாகாவின் கட்டுரைகள், உஸ்மா பலாக்கின் அனுபவக் கட்டுரை, மார்க் அதோனிஸின் கவிதை அடங்கிய இத்தொகுப்பை வெண்மணி அரிநரன் தமிழாக்கம் செய்திருக்கிறார். இச்சிறுநூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்களை பேசுவதற்கு இந்திய அரசுக்கு தகுதி இல்லை என்பதை காஷ்மீர் பிரச்சினை விளக்குகிறது. இதையே ஒருமுறை ராஜபக்சேவும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஈழப் பிரச்சினையை மட்டும் உணர்ச்சி பூர்வமாக ஆதரிக்கும் தமிழின ஆர்வலர்களிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை. அதனால்தான் காசி ஆனந்தன் போன்ற ஈழத்து ‘கவிராயர்கள்’ காஷ்மீர் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துகிறார்கள்.
ஈழ விடுதலை, காஷ்மீர் விடுதலை உள்ளிட்ட தேசிய இனப் போராட்டங்களை ஆதரிப்பதோ இல்லை அடக்குவதோ, ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க நலன்களோடு தொடர்புடையவை. இதன்றி அவை பேசும் மனித உரிமை வெறும் நாடகமே. இந்தியா போன்ற அவற்றின் பிராந்திய துணை வல்லரசு நாடுகளும் தத்தமது தரகு முதலாளிகளின் நலனைக் கொண்டே தேசிய இனப் போராட்டங்களை நசுக்குகின்றன. இலங்கை சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்வதும் இப்படித்தான்.
“போரில் மக்கள் மட்டுமல்ல, உண்மைகளும் கூடத்தான் பலியிடப்படுகின்றன” என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார் கவுதம் நவலாகா. காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவலாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு? சாக்கடை, குடிநீர் பிரச்சினைகளுக்காக மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதை, விடுதலை போராட்ட உணர்விற்கு எதிராக பார்ப்பது அபத்தம். ஆறாவது ஊதிய ஆணையத்தின் படி ஊதிய உயர்வு வேண்டும் என்று ஆசிரியர்கள் போராடினால் கூட அங்கே 144 தடை உத்திரவு அமல்படுத்தப்படுகிறது. பொருளாதார போராட்டமானாலும் கூட அங்கே உரிமை கிடையாது.
அமர்நாத் பயணத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, காஷ்மீர் அரசு கூட விழுந்து விழுந்து எல்லா வசதிகளையும், பாதுகாப்புகளையும் செய்கின்றது. இந்துமதவெறி அமைப்புகள் வருடாவருடம் இந்த யாத்திரையை வைத்து செய்யும் கூச்சல்கள், அத்துமீறல்கள் அனைத்தும் சகித்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் காசுமீரில் 70,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், பத்தாயிரக் கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டதும், 10,000-த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதற்கும் பொறுப்பேற்க யார் இருக்கிறார்கள்? இதை எழுப்பி மக்கள் போராடினால் அதை ஒடுக்க இந்திய இராணுவம் ஓடி வருகிறது.

கூடவே காசுமீர் போராளிகளால் கொல்லப்பட்ட சில காசுமீர் பண்டிதர்கள் குறித்த செய்திகள் பேசப்படுவது போல இவர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் அதே போராளிகளால் கொல்லப்படும் முசுலீம்களை பற்றி யாரும் பேசுவதில்லை. காசுமீர் விடுதலை இயக்கங்களின் இந்த தவறுகளை மக்கள் முடிந்த அளவு கண்டிக்கிறார்கள். ஆனால் பல கொலைகள் இந்திய அரசின் சதிகள் என்று தெரியவந்த பிறகு இந்த கண்டிப்பு நிதானமாக வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போராளிகளின் ஆயுதப் போராட்டங்களை விட, மக்கள் திரளாக பங்கேற்கும் அரசியல் போராட்டங்களே அதிகம் நடக்கின்றன. அல்லது மக்களின் அரசியல் போராட்ட வீச்சு காரணமாக போராளிக் குழுக்களின் தவறுகள் கணிசமாக குறைந்திருக்கின்றன.
கல்லெறிவதற்கு வெள்ளிக்கிழமை தோறும் ரூ 400 வழங்கப்படுகிறது என்று இந்திய அரசு அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் அவதூறு செய்கின்றனர். எல்லா நாட்களும் கற்கள் வீசப்படுவதால் நாளொன்றுக்கு ரூ 57-தான் கூலியாக வருகிறது. இந்த கல்லெறியில் பிடிபட்டால் சிறை, சித்திரவதை, ஆயுள் முழுவதும் போலிஸ் கண்காணிப்பில் அடிமையாக வாழ்வது, சமயத்தில் உயிரிழப்பது கிடைக்கலாம். 57 ரூபாய்க்காக தமது உயிரை யாரேனும் இப்படி இழக்க சம்மதிப்பார்களா என்று கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?
காஷ்மீரில் இராணுவ வீரர்கள், போராளிகள், பாக்கில் உள்ள காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்கள் என அரசு மற்றும் புகழ்பெற்ற ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள், புள்ளிவிவரங்களை வைத்தே இந்தியாவின் அவதூறுகளை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். காஷ்மீர் போராட்டத்தை பொதுவாக ஆதரிப்போரும், பொதுவாக தேசபக்தி காய்ச்சலுடன் எதிர்ப்போரும் இந்த கட்டுரையின் வாதங்களையும் தரவுகளையும் அறிந்து கொள்வது அவசியம்.

“நெஞ்சை அழுத்தும் நினைவுகள்” எனும் தலைப்பில் இரண்டாவது கட்டுரையை உஸ்மா பலாக் எனும் காஷ்மீரின் மைந்தர் தனது குழந்தைப் பருவத்திலிருந்து தற்காலம் வரையிலான நிகழ்வுகளை உணர்ச்சியாகவும், நேர்மையான கேள்விகளாகவும் எழுதியிருக்கிறார். போராட்டக் காட்சிகளை பார்த்து வளர்ந்த அவருக்கு “ஹம கியா சாஹ்தே? ஆசாதி!” – நாங்கள் என்ன கேட்டோம்? விடுதலைதானே? எனும் முழக்கம் மறக்க முடியாத ஒன்று. அம்மாவிடம் “நமக்கு ஆசாதி எப்போது கிடைக்கும்” என்று கேட்டதை மறக்க முடியாது என்று நினைவுகூர்கிறார்.
“காசுமீரின் முழுமையான சித்திரம் என்பது அழகான தால் ஏரியையும், முகலாயத் தோட்டங்களையும் மட்டும் கொண்டதல்ல; அது உலகிலேயே மிகுதியான படைவீரர்கள் குவிக்கப்பட்ட மண்டலம்”, என்கிறார் உஸ்மா பலாக். அதன் பாதிப்புகள் ஏதோ சுட்டுக் கொல்லப்படுவது மட்டுமல்ல, ஒரு பள்ளிச்சிறுவனின் உணவுப் பாத்திரம் சோதனையிடப்படுவதில் தொடங்கி கல்வி, வரலாறு, பொருளாதாரம் அனைத்திலும் நிலவுகிறது.
அவரது அண்டை வீட்டில், ஐந்தாவது படிக்கும் சிறுவன் கல்லெறிவதற்காக அம்மாவிற்கு தெரியாமல் வருகிறான், அவனுக்கு நிதி அளிப்பது ஐஎஸ்ஐயா என்று கேட்கும் அவர் நீதி வழங்கும் பொறுப்பை நம்மிடமே விட்டு விடுகிறார்.
அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். படிப்பதோடு கட்டுரையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்புணர்வையும் கோரும் நூல்!
நூல்: காஷ்மீர் – அமையின் வன்முறை
ஆசிரியர்: கவுதம் நவ்லாகா
தமிழாக்கம்: வெண்மணி அரிநரன்
பக்கம்: 40, விலை: ரூ.25
முதல்பதிப்பு – டிசம்பர், 2013
வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,
தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367
ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்
- ஓ.என்.ஜி.சி யின் எண்ணெய் எரிவாயு துரப்பண பணிகள் மக்கள் எதிர்ப்பையும் மீறி விரிவாக்கம்!
- அரசின் மனிதகுல விரோத நடவடிக்கை!
- தலைமுறைகளைக் காக்க தடியெடுப்போம்!
கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி- யின் ( கெயில் ) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துரப்பண பணிகளின் போது ஏற்பட்ட பெரும் விபத்தினை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஓ.என்.ஜி.சி க்கு எதிரான பொதுக்கருத்து வலுவடைந்து வருகிறது. ஓ.என்.ஜி.சி யின் துரப்பண பணிகளால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்து பசுமை விகடனில் கு. ராமகிருஷ்ணன் என்பவர் பல்வேறு ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகளாக எழுதிவருகிறார்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் தீபாம்பாள்புரம், நெய்குன்னம் ஆகிய பகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் அடியக்காமங்களம், கோவில்களப்பால் உள்ளிட்ட பகுதிகள், மன்னார்குடி வட்டத்தில் கூத்தாநல்லூர் ஆகியவற்றில் ஓ.என்.ஜி.சி யின் துரப்பண பணிகள் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இது குறித்து மக்களுக்கே தெரியாமல் கண்துடைப்பு நாடகத்திற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட வாரியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டன. எமது அமைப்புகள் உள்ளிட்டு பல்வேறு விவசாய சங்கங்கள் அனைத்தும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. இனி களத்தில் இறங்கி மக்களைத் திரட்டி தடுத்தாக வேண்டிய நிலையே உள்ளது.
கருத்து கேட்புக் கூட்டங்களில் ஆவேசமாக பேசிய போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் உட்பட பலரும் கூட்டத்திற்கு பிறகு மவுனம் சாதிக்கின்றன. பாதிக்கப்பட உள்ள கிராம மக்களைதிரட்டி எதிர்ப்பு போராட்டங்களை ஒருமுகப்படுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவினருடன் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினரும் களத்தில் இறங்கி செயல்பட துவங்கினோம்.
இதன் முதல் கட்டமாக தஞ்கை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் தீபாம்பாள்புரம், நெய்க்குன்னம், மலையபுரம், எக்கல், பள்ளியூர், களஞ்சேரி, விண்ணப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சார செய்து போராட்டக் கமிட்டிகள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலான கிராம மக்கள் ஆரம்பத்தில் இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து ஏதும் அறியாமல் இருந்தனர். ஓ.என்.ஜி.சி சார்பாக தையல்மிசின் வழங்குவதாக கூறி ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த காகிதங்களில் கையெழுத்தை ஏமாற்றி பெற்று சென்றதை விளக்கினர் அப்பகுதியில் உள்ள பெண்கள். நமது பிரச்சாரத்திற்கு பிறகு, விரிசல் விட்டு ஆங்காங்கே பிளந்து நிற்கும் தனது வீட்டையும், கரி கலந்து மாசுபட்ட நீரையும் குடித்து தான் வாழ்வதாகவும், எனது வீடு மட்டுமல்ல இந்த கிராமம் முழுவதுமே இதே நிலைதான் என்று தோழர்களை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று காட்டினார் விவசாயி கணேசன். “ நீங்க வந்து சொன்னதுக்கு அப்புறம் தான் இதற்கான காரணமே புரியுது. எங்க புள்ளைங்களையாவது காவந்து பண்ணுங்க” என்று கையறு நிலையில் கலங்கி நின்ற அவரை தேற்றி போராட்டமே தீர்வு என்பதை உணர்த்தினோம்.
இப்படி திண்ணைப் பிரச்சாரம், இரவு நேரக் கிராம கூட்டங்கள், புரட்சிகர பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டன.
மையக் கலைக்குழுவினரின் பாடலான “தண்ணீ வந்தது தஞ்சாவூரு” என்ற பாடல் அங்குள்ள கிராமத்து சிறுவர்களின் சொந்த பாடலாகவே மாறிவிட்டது.
வரப்புகளில் நின்று கொண்டும், கரையில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் கூலி விவசாயிகள் மற்றும் பெண்களிடம் “சாமக்கோழி கூவும் நேரத்தில் நாங்கள் சம்பா அறுவடை செய்ய போனோம், விளக்கு வைக்கிற நேரத்திலும் நெற்றி வேர்வையும் காயாம பாடுபட்டோம்” என்று கம்பீரமான குரலில் தோழர்கள் பாடிய போது தம் வாழ்நிலையோடு அதை ஒப்பிட்டு பார்த்து எம்மை நோக்கி ஆர்வமாக திரண்டனர்.
கூலி விவசாயிகள் முதற்கொண்டு குத்தகை விவசாயிகள், பெரு விவசாயிகள் வரை “என்னதான் இருந்தாலும் ஓ.என்.ஜி.சி வந்த பிறகுதானே ரோடு போட்டான், லைட்டு போட்டான். பேக்டரி வந்தா தானே வளர்ச்சி வரும்” என்ற புரிதலில் இருந்தே நம்மிடம் கேள்விகள் கேட்டனர். இத்தனை ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது மட்டும் ரோடு போடுவது உங்களுக்க வீசப்படும் தூண்டில் புழு என்பதை தாண்டி அவனுடைய லாரிகளும், கண்டெய்னர்களும் தங்கு தடையின்றி வந்து செல்வதற்காகவே போடப்பட்டிருக்கின்றன என்பதை புரிய வைத்தோம்.
“அப்போ பெட்ரோலுக்கு நாம என்ன செய்றது” என்ற போது ஏற்கனவே எடுத்த பெட்ரோலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும், உள்நாட்டு தேவை அதிகரிப்பிற்கும் கூட அரசு போக்குவரத்து கழகத்தின் காலை உடைத்து நொண்டியாக்கி தனியார் வாகன விற்பனையை அதிகரிக்க செய்த அதிகார வர்க்கத்தின் சதி வேலையையும் விளக்கி பேசிய போது அதிகாரிகளை அவர்கள் ஏசிய விதம் தட்டச்சு செய்ய முடியாதவை.
ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனம் என்ற நிலையில் இருந்து மாறி பிரிட்டிஷ் பெட்ரோலியம் உட்பட பல்வேறு தனியார் முதலாளிகள் அதன் பங்குகளை கைப்பற்றி வருகின்றனர். இனி எப்படி அரசு நிறுவனமாக நீடிக்க முடியும் என்று விளக்கியும், யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் உருவாக்கிய பேரழிவோடு ஒப்பிட்டு ஆளும் வர்க்கங்கள் பரப்பிவரும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வல்லரசு என்ற மாயையை தோலுரித்து காட்டினோம். நமது பேச்சின் வர்க்க அரசியலால் ஈர்க்கப்பட்ட மக்கள் தம் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை அப்பகுதியில் நடத்த திட்டமிட்டோம்.
இதனையொட்டி துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் என பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்படி 4.8.2014 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சை அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர். மாரிமுத்து தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமாக விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர் திரு. சின்னதுரை, தீபாம்பாள்புரத்தை சேர்ந்த திரு. டி.எஸ். சேவியர், முன்னாள் வி.ஏ.ஓ. திரு. தாம்தாஸ் மற்றும் மலையபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இறுதியாக உரையாற்றிய ம.க.இ.க மாநில இணைப் பொதுச்செயலர் தோழர். காளியப்பன், அதிகார வர்க்க முதலாளிகளான ஓ.என்.ஜி.சி அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எப்படி விவசாயிகள், மக்கள் விரோத தன்மையில் ஊறிப்போயுள்ளன என்பதை நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட மிகப்பெரிய அரசு எந்திரத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளை அவர்கள் எவ்வளவு துட்சமாக கருதுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தினார். உண்ணாவிரதம் உள்ளிட்ட வடிவங்கள் காலாவதியாகிப் போன ஒன்று, நன்கு உண்டு நம் தலைமுறைகளை காக்க தடியெடுத்து இந்த அரசை விரட்டியடித்தால் ஒழிய விடிவில்லை என்பதை விளக்கி பேசியது விவசாயிகளுக்கு புது நம்பிக்கை அளித்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் அடுத்து ஓ.என்.ஜி.சி துரப்பண பணிகளை நேரடியாக தடுத்து நிறுத்தும் வீரியமிக்க போராட்டங்களுக்கு விவசாயிகளை திரட்டும் பணிகளை நோக்கி விரைந்து செயல்பட்டு வருகிறது நமது விவசாயிகள் விடுதலை முன்னணி.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்
பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அர்ச்சகர் பள்ளி மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
பதிவு எண் : 189/09
50, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை
வா. அரங்கநாதன்
மாநில தலைவர்
பத்திரிகை செய்தி
கோரிக்கைகள்
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி பெற்று 8 ஆண்டுகள் ஓடிவிட்டதால் வயது முதிர்ந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 ஊதியமாக வழங்க வேண்டியும் தமிழக அரசை வேண்டுகிறோம்.

எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம், ‘ஆகமவிதிப்படி பார்ப்பன சிவாச்சாரியார்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சகராகி, கருவறையில் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார்’ எனக் கூறி மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தடை பெற்றுவிட்டனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கியதுடன், உச்ச நீதிமன்றத்தில் தங்களையும் வழக்கில் முக்கிய தரப்பினராக சேர்க்க வேண்டும் என போராடி வெற்றி பெற்றது, வழக்கை மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.
தமிழக அரசு 1971-ம் வருடம் வாரிசுரிமைப்பபடி அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இச்சட்டத் திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிரானது என மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச்சேர்ந்த பார்ப்பனர்களும், 2 மடாதிபதிகளும் நேராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ராஜகோபாலாச்சாரியார், சங்கராச்சாரியார், ஜீயர் ஆகியோர் இவர்களுக்கு ஆணை வழங்கியதுடன், பிரபல வழக்குரைஞர் நானி பல்கிவாலாவை வாதாட ஏற்பாடும் செய்து கொடுத்தனர். வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து 14-03-1972 அன்று தீர்ப்பளித்தது. “அர்ச்சகர் என்பவரும் கோயில் ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து தமிழக அரசு இயற்றிய சட்ட திருத்தம் செல்லும். அரசை பொறுத்தவரை, அர்ச்சகர் நியமனம் மதசார்பற்றது, மத நடவடிக்கையாக கருத முடியாது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“அதே சமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும், ஆகமங்கள்படி குறித்த வகையைச் (Denomination) சேர்ந்தவராகத்தான் இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர், சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும்” என்பதை அரசு கருத்தில் கொண்டு, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதை அன்றே தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார். இன்றுவரை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் இருப்பதற்கு காரணமே, மேற்படி அறிவார்ந்த நீதிபதிகள் வழங்கிய இத்தீர்ப்புதான். அரசியலமைப்புச் சட்டத்தில் பார்ப்பனர்களின் மத உரிமைகளுக்கு பாதுகாப்பாக உள்ள சரத்து 25, 26-ஐ ஒழிக்க வேண்டும் என்று பெரியார் பேசினார், இறுதி மூச்சுவரை கருவறை தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக தி.மு.க அரசாங்கமும் அதன்பிறகு அ.தி.மு.க அரசாங்கமும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிட்ட சரத்துக்களை திருத்தியமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதின.

1972-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களையும் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த இக்குழு, 1982-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதில் “பூசையின்போது பிராமண அர்ச்சகர்கள் மந்திரத்தை தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடுடைய ஸ்மார்த்த பிராமணர்கள் நடராசருக்கு பூசை செய்யும் மோசடிகள், முறையாக பயிற்சியின்றி பணியில் இருக்கும் அர்ச்சகர்கள்” என ஆகமத்திற்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. மேற்கண்ட ஆய்விலிருந்து, “தமிழகம் முழுவதும் முறையாக பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளை நிறுவ வேண்டும், இந்து சமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும்” என அக்குழு பரிந்துரை செய்தது.
கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டதை எதிர்த்து ஆதித்தியன் என்பவர் தொடுத்த வழக்கில், “பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள பழக்கவழக்கம், மரபுகள் செல்லத் தக்கதல்ல. அதோடு சரத்து 17-ன் படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம், மனித உரிமைகளுக்கு எதிரானது” என முற்போக்காக தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழக அரசு, இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டு, முதலில் அரசாணையையும், பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசரச் சட்டத்தையும் (Ordiance) இயற்றியது. உடனடியாக மதுரையைச் சார்ந்த பார்ப்பன ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம், 1972 உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசரச் சட்டத்திற்கு தடையாணை பெற்றது. இதனால் திமுக அரசாங்கம் சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்தபோது சட்டத்திருத்தத்தில் உள்ள முக்கியப் பகுதியை விட்டு விட்டு சட்டம் இயற்றியது.
“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என 2006-ல் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பூசை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளை செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய கோயில்களில் வைணவ பயிற்சி பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய பள்ளிகளில் சைவ பயிற்சி பள்ளிகளும் அமைக்கப் பட்டது. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், தமிழக அரசோ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை.
ஆலயத் தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான எமது போராட்டச் சூழலில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உச்ச நீதிமன்ற தடையாணையைக் காரணம் காட்டி, தமிழக அரசு கைவிட்ட நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்குரைஞர்களின் உதவியால் ( தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மாணவர்களை சந்தித்தனர். “கருவறைச் தீண்டாமையை ஒழிப்பது என்பது அரசால் மட்டுமே முடியும் காரியம் அல்ல. பணி நியமன பிரச்சனையுமல்ல, இது கருவறைத்தீண்டாமைக்கெதிரான, வரலாற்றுப் போராட்டம்” என்பதை விளக்கிப் பேசினோம். நாம் சங்கமாக ஒன்றுதிரண்டு, “தகுதியுடைய நாங்கள் கடவுள் சிலையை தொட்டால் எப்படி தீட்டாகும்? என மக்கள் கேள்வி எழுப்பும் போதுதான் தீர்வு கிடைக்கும்” என விளக்கினோம்.)
10-10-2009 அன்று திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுக்கு எதிராக மாணவர்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வழக்காடியதன் பயனாக 8-03-2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவையும் பெற்றோம். வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், தீண்டாமையை மத உரிமையாக நிலைநிறுத்த முயலும் பார்ப்பனர்களைக் கண்டித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்து வருகிறோம்.
இதைத் தொடர்ந்து, அர்ச்சகர் மாணவர் சங்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, மதுரை – திருவண்ணாமலையில் உண்ணாநிலைப் போராட்டங்கள், மீனாட்சி அம்மன் கோயிலை முற்றுகையிட்டுக் கைது, பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தல், அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவராகிய நான் இந்து முன்னணி ரவுடிகளால் தாக்கப்பட்டது என தொடர் போராட்டத்தின் மூலமும், தொலைக்காட்சி பேட்டிகள், நாளிதழ், வார-மாத இதழ்களில் கருவறைத் தீண்டாமை குறித்து தொடர்ச்சியாக செய்திகளாக்கி மக்கள் ஆதரவை பெற தொடர்ந்து போராடி வருகிறோம்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். இதையடுத்து, சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டத்தை நடத்தி, “கருவறை தீண்டாமைக் குற்றமா? இல்லையா? இதில் சமரசம் எப்படி காண முடியும்” என கேள்வி எழுப்பி மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். இதனை கருவறைத்தீண்டாமைக்கெதிரான சமூக நீதி போராட்டத்தின் பகுதியாக பார்க்க வேண்டுமென்று போராடி வருகின்றோம்.
கடந்த 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கிவிட்டார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குறைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார். இன்று வரை தமிழக அரசு இவ்வழக்கில் வாய்தா வாங்கிக்கொண்டு வருகின்றது. .
மதுரையில் மொத்தம் உள்ள 116 பார்ப்பன அர்ச்சகர்களில் 28 பேரும், மயிலை கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேரும்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மற்ற பார்ப்பன அர்ச்சர்கள் முறைப்படி ஆகமம் பயிலாதவர்கள். ஆனால் எங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் முறைப்படி ஆகமம் பயின்றிருந்த போதிலும் பிறப்பின் காரணமாக பாகுபடுத்தப்பட்டு வருகிறோம்.
1972 சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களில் உள்ள 1144 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் பார்ப்பனர்களின் பரிந்துரையின்பேரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். இது கருவறைத் தீண்டாமையாகும். அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண உதவியாக தலா ஒருவருக்கு ரூ 5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்
நாள் : 04.08.2014
இடம் : சென்னை.
அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட அர்ச்சக மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் ரூ.5000 ஊதியம் வழங்க வேண்டியும் கோரிக்கை மனு.
விடுநர்:
வா.அரங்கநாதன், மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
நெ.128, அரசமரத் தெரு, திருவண்ணாமலை.
பெறுநர்:
1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.
2. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.
3. உயர்திரு.இந்து சமய அறநிலையத்துறைச் செயலர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.
பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
பொருள்:
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 நிவாரண ஊதியமாக வழங்க வேண்டி
எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் ஆக தடை பெற்றுவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கினார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால் வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ்வருவருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்
நாள் : 04.08.2014
இடம் : சென்னை.
தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!
தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!

ஆதிமொழி தாய்த்தமிழை
அரசுப்பள்ளிவிட்டே அகற்றிவிட்டு
பேதிமொழி சமஸ்கிருதத்திற்கு
கொண்டாட்ட வாரமா?
இந்த, அசிங்கத்தை அனுசரிக்க
தமிழ் நிலம் என்ன சோரமா?
உழைப்பவர் உயிர்த்தசையில்
மெய்சிலிர்க்கும் தமிழ் மணத்தை
தடுத்துவிட்டு,
செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு
எத்தனை சென்ட் அடித்தாலும்
பார்ப்பன நாற்றம்தான் மாறுமா?
மொழிதானே என மொழிய விட்டும்
ஆரியப் பெருக்கை வழியவிட்டும்
வந்தது கேடு,
உழைப்பவர் நானிலம் உறிஞ்சிட்ட பார்ப்பனியம்
திமிரில் சொல்லுது “இது இந்து நாடு!”

கருவில் காத்து வளர்ந்து
கண் மலர்ந்து, மண் அளந்து
எம் மழலை இதழ் ஊறும்
மரபின் உயிர் சுரக்கும்
தமிழ் இங்கே
கோயில் கருவறைக்குள் நுழையவொண்ணா
‘நீச பாஷை!’
தெருவில் பிச்சைக்கு வந்து
தெண்டச் சோறில் சதை வளர்த்து
சுரண்டும் வர்க்கத்திற்கு சொறிந்துவிட
உன் சமஸ்கிருதம் தேவ பாஷையா?
கிரந்த லிபியாய் கிறுக்கிப் பார்த்து
மணிப்பிரவாளமாய் கலந்துபார்த்து
கடைசியில்
தரணி மொழிக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம்தான்
எனப் பார்ப்பனியம்
தண்டத்தை தூக்கியபோது,
அவ்வாறாயின் தந்தை தமிழென்று
வள்ளலார்
மண்டையில் போட்டது மறந்தா போயிற்று?

தமிழைப் பார்த்து
சமஸ்கிருதம் அடித்த காப்பி
பசுவுக்கே
பசும்பால் கா(ப்)பி!
பார்ப்பன மொழித் திரிபை
பரிதிமாற்கலைஞர்
போட்டுடைத்தார் காரித்துப்பி!
ஆரிய சுட்டுச் சொற்கள்
தமிழிலிருந்து ‘சுட்டவை’ என
சமஸ்கிருத பாடையை சகித்துக்கொண்டு
பிரித்துக்காட்டினார் கால்டுவெல்!
“ஆரியம் போல் வழக்கொழிந்து சிதையாமல்
சீரிளமைத் திறம் வியந்து”… தமிழே!
எனப் பூரித்து,
வடமொழி சவத்தை
வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார்
மனோன்மணியம் சுந்தரனார்!

“தெற்கோதும் தேவாரத் தேனிருக்க
செக்காடும் இரைச்சலென வடமொழியா?” என,
பார்ப்பனத் திமிருக்கு
பதிலடி தந்தார் பாரதிதாசன்!
வழக்காடு மன்றத்தில்
தமிழ் இல்லை…
வழிபாட்டுக் கூடத்தில்
தமிழ் இல்லை…
வளரும் தலைமுறைக்கு
தமிழ் இல்லை…
தமிழே இல்லாத நாடு
தமிழ் நாடா?
எங்கும் தமிழ் வேண்டும்
எதிலும் தமிழ் வேண்டும் என
பொங்க வேண்டிய தருணத்தில்,
கிடப்பது கிடக்கட்டும்
இத்துப்போன சமஸ்கிருத எலும்புக் கூட்டை
இழுத்து வைத்து முத்தம் கொடு என்கிறது பார்ப்பனத் திமிர்!
பார்ப்பன சரடை முறுக்க
இளிச்சவாயன் வாயில் சமஸ்கிருதம் திணிக்க
ஆர்.எஸ்.எஸ். கும்பல்
தேடுது ஆளை!
இது மொழிப்பிரச்சனை அல்ல
பார்ப்பன நரிப் பிரச்சனை,
ஒட்ட நறுக்கிடு வாலை!
– துரை.சண்முகம்.
சிண்டிகேட் வங்கி ஜெயின் கைது – அரசு வங்கி சேவை யாருக்கு?
ரூ 50 லட்சம் லஞ்சம் தொடர்பாக மணிப்பால் நகரத்தை மையமாக கொண்டு செயல்படும் பொதுத் துறை சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2, 2014) மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய புலனாய்வுத் துறை பெங்களூரு, போபால், மும்பை, டெல்லி உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தி லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்ட ரூ 50 லட்சத்தை கைப்பற்றியது. மேலும், பல நிதி ஆவணங்களையும், ரூ 21 லட்சம் ரொக்கம், ரூ 1.68 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ 63 லட்சத்துக்கான வைப்புத் தொகை ரசீதுகளையும் கைப்பற்றியிருக்கிறது.
எஸ்.கே.ஜெயினுடன் பூஷன் ஸ்டீல் நிறுவன துணைத் தலைவர் நீரஜ் சிங்கால், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வேத பிரகாஷ் அகர்வால், ஆடிட்டர் பவன் பன்சால், ஜெயினின் உறவினர்கள் வினீத் கோதா, மற்றும் புனீத் கோதா, விஜய் பஹூஜா, புருஷோத்தம் தோட்லானி, மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கான கடன் உச்சவரம்பை சட்டவிரோதமாக உயர்த்தவும், திருப்பிச் செலுத்தத் தவறிய கடன் தொடர்பாக போலி கணக்கு காட்டவும் லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், பூஷன் ஸ்டீல்சும் ஏற்கெனவே தலா ரூ 100 கோடி, ரூ 120 கோடி அளவில் சிண்டிகேட் வங்கியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். தமது தொழிலை விரிவுபடுத்துவதற்கு கூடுதல் கடன் பெறுவதற்கு எஸ்.கே.ஜெயினுக்கு லஞ்சம் கொடுத்திருக்கின்றனர்.
மத்திய புலனாய்வுத் துறை இவரது தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக கண்காணித்து வந்தது. பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன் உச்ச வரம்பை உயர்த்த அந்நிறுவன உயரதிகாரிகளுடன் அவர் பேரம் பேசியதும், ஹவாலா முறையில் பணத்தை மும்பையில் உள்ள பவன் பன்சால் என்ற இடைத்தரகர் மூலம் தனது மைத்துனரும், மற்றொரு உறவினருமான வினீத் மற்றும் புனீத் கோதாவிடம் ஒப்படைக்கும்படி பேசியதும் தெரிய வந்தது. அவ்வாறு பணம் கைமாறும் நேரத்தில் சிபிஐ இவர்களை பொறி வைத்து பிடித்தது.
பவன் பன்சால் நீரா ராடியாவைப் போன்ற ஒரு கார்ப்பரேட் தரகர். பெரிய முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகளின் மூலமாக கடன் ஏற்பாடு செய்து தருவது இவரது நிறுவனத்தின் வேலை. இதற்காக பன்சாலின் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவர் பங்கஜ் பன்சால், முகேஷ் ஜிண்டால் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வங்கி விதிகளின்படி ‘தகுதி’ இல்லாத நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்வார்கள்.
இந்தத் தகுதி என்பது டாடா,அம்பானி போன்ற பெரிய தரகு முதலாளிகளின் நலனுக்கேற்றபடி உருவாக்கப்பட்டவை. அகர்வால் போன்ற சின்ன முதலாளிகள் அந்த விதிகளின்படி கடன் வாங்க முடியா விட்டால் பன்சால் போன்ற இடைத்தரகர்கள் மூலம் வங்கி விதிகளை வளைத்து கடன் பெறுகின்றனர். இதற்கான கமிசனை இடைத்தரகர்கள் வங்கி அதிகாரிகளுடன் பங்கு போட்டுக் கொள்வார்கள். சிண்டிகேட் வங்கியில் மட்டுமின்றி பல அரசு மற்றும் தனியார், பன்னாட்டு வங்கிகளிலும் முதலாளிகளின் சூதாட்டத்திற்காக பன்சால் நிறுவனம் இந்த திருகுதாள வேலையை செய்திருக்கிறது.
பன்சாலின் ஆல்டியஸ் ஃபைன்செர்வ் பி லிட் நிறுவனம் மும்பை நாரிமன் பாயிண்டில் நவீன அலுவலகத்துடன், முறையாக பதிவு செய்து கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பன்சாலின் இடைத்தரகு நிறுவனத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளதும் மத்திய அரசின் நிதித்துறைதான்.
முதலாளிகள்தான் நாட்டை முன்னேற்றுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்துக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால், முதலாளிகள் தொழில் செய்வதே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் சேமிப்புகளை வங்கிக் கடன் (அல்லது வேறு நிதிக் கருவிகள் மூலம்) கைப்பற்றிய நிதியின் மூலமாகத்தான்.
டாடா, அம்பானி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன், தோல்வியடைந்த திட்டங்களுக்கு கடன் தள்ளுபடி என்று வங்கிகள் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர்.
தங்களை விட ‘தகுதி’ குறைவான அகர்வால், சிங்கால் போன்று நடுத்தர அளவு முதலாளிகள் வங்கிப் பணத்தைக் கைப்பற்ற லஞ்சம் மூலம் முயற்சிப்பதை பெரிய முதலாளிகள் சகித்துக் கொள்வதில்லை. அந்த அடிப்படையில் சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் உத்தரவுப்படி கடந்த ஆறு மாத காலமாக மத்திய புலனாய்வுத் துறை சிண்டிகேட் வங்கியின் ஜெயினின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக கண்காணித்து வந்ததில் சிக்கியிருக்கிறார். நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களில் சிக்கிய ரத்தன் டாடா, அவற்றின் மீதான விசாரணைகளை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி தடுத்து நிறுத்தியதும் நினைவிருக்கலாம்.
இவ்வாறு பொதுத்துறை வங்கிகளின் பணத்தை ‘விதிமுறைகளுக்கு புறம்பாக’ முதலாளிகள் கையாட முயற்சிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக பல அதிகாரிகள் சிக்கியுள்ளனர். 2010-ம் ஆண்டு வெளியான கார்ப்பரேட் கடன் ஊழல் விவகாரத்தில் பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் 8 பேரும், எல்.ஐ.சி நிதி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் கைது செய்யப்பட்டனர். அதில் மணி மேட்டர்ஸ் இந்தியா என்ற இடைத்தரகு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவும் கைது செய்யப்பட்டார்.
1990-களின் தொடக்கத்தில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் போதுமான பிணை இல்லாமல் கடன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அருள் பில்டர்சுக்கு ரூ 64 லட்சம், இன்காம் பில்டர்சுக்கு ரூ 50 லட்சம் கடன் தள்ளுபடி செய்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றங்களுக்காக சுமார் 25 ஆண்டு வழக்கு நடந்த பிறகு அவர் சென்ற ஆண்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் 1 ஆண்டு மட்டும் தண்டனை பெற்றார்.
1991-ம் ஆண்டு யூகோ வங்கியின் சேர்மன் கே எம் மார்க்கபந்து ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை வங்கியின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
இது தவிர பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் ஷ்யாமல் ஆச்சார்யா மீது ரூ 100 கோடிக்கு அதிக மதிப்பிலான வங்கிக் கடன்கள் வழங்குவதில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. 2010-ம் ஆண்டு கடன் வழங்குவதில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர் ஆர் ஆர் நாயர் குற்றம் சாட்டப்பட்டார். 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார்ப்பரேஷன் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ராம்நாத் பிரதீப் மீது இதே மாதிரியான குற்றங்கள் சுமத்தப்பட்டன.
இந்தியாவில் வங்கித் துறையின் பெரும்பகுதி பொதுத்துறையின் கைவசம் இருப்பதாலும், தனியார் துறையில் வட்டி வீதம், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாலும், முதலாளிகள் சாதாரண மக்களின் பணத்தை பொதுத்துறை வங்கிகள் மூலமாகத்தான் கைப்பற்ற முடிகிறது.
2012-ம் ஆண்டு மார்ச் மாத புள்ளிவிபரங்களின் படி இந்திய வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி குழுமம் ரூ 10.21 லட்சம் கோடி, பிற பொதுத்துறை வங்கிகள் 23.72 லட்சம் கோடி, பழைய தனியார் வங்கிகள் – 2.2 லட்சம் கோடி, புதிய தனியார் வங்கிகள் – ரூ 6.5 லட்சம் கோடி, அன்னிய வங்கிகள் – 2.32 லட்சம் கோடி, ஊரக வங்கிகள் – 1.11 லட்சம் கோடி, மாநில கூட்டுறவு வங்கிகள் – 69,000 கோடி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் – 72,000 கோடி கடன் வழங்கியிருக்கின்றன. அதாவது மொத்த வங்கிக் கடனில் 70% (ரூ 33.9 லட்சம் கோடி) பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகின்றன.
தனியார் வங்கிகளின் இயக்குனர்களாக தமது பிரதிநிதிகளை நியமிப்பது மூலம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் அவற்றை கட்டுப்படுத்துகின்றனர். உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குனர்களை எடுத்துக் கொள்வோம்.
ஏப்ரல் 2009-ல் இவ்வங்கியின் நிர்வாக இயக்குனராக ஓய்வு பெற்ற கே வி காமத் சேர்மனாக பொறுப்பேற்றார். அதே ஆண்டு மே மாதம் இன்ஃபோசிஸ் இயக்குனராக பதவியேற்றார். 2011-ல் இன்ஃபோசிஸ் சேர்மனான அவர் 2 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். 2013-ல் அந்த பதவியிலிருந்து விலகி ஐ.சி.ஐ.சி.ஐ சேர்மனாகவும், இன்ஃபோசிஸ் மூத்த இயக்குனராகவும் தொடர்கிறார்.
இன்னொரு இயக்குனர் திலீப் சொக்ஸி என்பவர் டிலோய்ட் இந்தியா என்ற நிதி நிறுவனத்தின் கூட்டு நிர்வாக பங்காளியாக இருந்தவர். மற்றொரு இயக்குனர் ஹோமி ஆர் குஸ்ரோ கான் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 2008-ல் ஓய்வு பெற்றவர். முன்னதாக டாடா டீ, கிளாக்சோ இந்தியா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.
இவ்வாறு முதலாளிகள் நேரடியாகவோ, லஞ்சம் மூலமாகவோ தமக்குத் தேவையான வங்கிக் கடனை பெற்றுக் கொள்ள சாதாரண மக்களுக்கோ ஒரு சிறிய கடனுதவி வாங்கக் கூட நடையாய் நடக்க வைக்கின்றன வங்கிகள். வேலை கிடைக்காத காரணத்தால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன. தனியார் வங்கிகள் தரும் கடனை தாமதமாக கொடுத்தால் அடியாள் படையே வைத்து வீடு புகுந்து அசிங்கப்படுத்துகிறது. அதனால் மானமுள்ள மக்கள் பல இடங்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
பயிர்க் கடனை வாங்க அலைந்து திரிந்து, கடைசியில் விவசாயமும் அரசின் கொள்கையால் பொய்த்துப் போய் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளிடமும் பாரபட்சமில்லாமல் கறாராக கடனை வசூலிக்க முயல்கின்றன வங்கிகள். ஆனால் ஊரான் வீட்டு நெய்யே என்ற கதையாக மக்கள் பணத்தை வரைமுறையில்லாமல் முதலாளிகளுக்கு மறுபுறம் தூக்கிக் கொடுக்கவும் செய்கின்றன.
மத்திய நிதித்துறை செயலாளர் சிண்டிகேட் வங்கி தலைவர் ஜெயினை இடைநீக்கம் செய்துவிட்டு, தற்காலிகமாக இரண்டு இயக்குநர்களை வங்கிக்கு நியமித்திருக்கிறார்.
“இதனால் அரசு வங்கிகளின் நம்பகத்தன்மை குறைந்து விடவில்லை” என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன். “இதன் மூலம் வங்கித் துறையில் களையெடுக்க வேண்டிய சக்திகளை நம்மால் இனம் கண்டுகொள்ள முடிந்துள்ளது” என்கிறார் அவர். அரசு வங்கிகளின் நம்பகத்தன்மையை முற்றிலும் அழித்து விட்டால், வங்கித் துறையை தனியாரிடம் விட்டு விடலாம். ஆனால், தனியார் வங்கிகளின் நடைமுறைகள் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை அளித்து பணத்தை திரட்ட உதவுவதில்லை. எனவே, மக்கள் இன்னும் பொதுத்துறை வங்கிகள் மீது நம்பிக்கை இழக்காமல் முதலாளிகள் சுரண்டியது போக எஞ்சியதாக தரும் ஊதியத்தில், சேமிக்கும் பணத்தை அவற்றில் போட வேண்டும்; அதன் மூலம் முதலாளிகளின் ‘தொழில் முனைவு’க்கு உதவ வேண்டும் என்பதுதான் ரகுராம் ராஜனின் செய்தி.
“இடைத்தரகர் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும்” என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால், இவர்கள் அனைவருக்குமே பன்சாலைப் போன்ற ஆடிட்டர்கள் இருப்பது தெரியாத ஒன்றல்ல. பன்சால் போன்ற ஆடிட்டர்கள், தாம் வேலை பார்த்த சிட்டி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவற்றில் இருந்து விலகி சொந்த நிறுவனம் தொடங்குகிறார்கள். இப்போது எசகுபிசகாக மாட்டிய உடன் கூட்டத்தோடு கூட்டமா ஓடுறான் பிடி ஓடுறான் பிடி என்று அருண் ஜேட்லி போன்ற வழக்கறிஞர்கள் கத்துகிறார்கள்.
பன்சாலின் லேப் டாப், இரண்டு செல் பேசிகளை நோண்டினால் இன்னும் முப்பது நிறுவனங்களாவது இப்போதைக்கு மாட்டும் என்கிறார்கள். இவர்ளகோடு, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வங்கிக் கடனை பெறும் முதலாளிகளும் கடந்த பத்தாண்டுகளில் மொட்டையடித்த வங்கிகளின் கணக்கை யாரிடம் போய் கேட்பது?
மேலும் படிக்க
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடன் நேர்முகம் – 2 : மாணவர்களின் மீது கல்வி என்ற ‘சுமை’
ஐஐடி வரை மாணவர்கள் வகுப்பறையின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயது, திறமை, விருப்பம் ஆகிய மூன்றின் அடிப்படையில் தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதிக பாடத்திட்டத்தை வைத்திருப்பதால் ஒரு அமெரிக்க குழந்தையை விட இந்திய குழந்தை படிக்க கஷ்டப்படுகிறது. ஆசிரியரால் கற்பிக்க இயலாத காரணத்தால் மனப்பாடக் கல்வி முறை இங்கே வளர்கிறது. ஆக்சிஜன் என்ற சொல்லை மட்டும்தான் கற்கிறதே தவிர அதைப் பற்றி வேறு எதுவும் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற குறைபாடுகளைப் பற்றி யஷ்பால் குழு நிறையவே சொல்லியுள்ளது.

வகுப்பறை நடைமுறையில் உள்ள ஆண்டான் அடிமை கட்டுப்பாடு முறைகள் குழந்தையின் இயல்பான விளையாடும் பண்பை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வைத்து, அது சுதந்திரமாக பேசுவதை தடுக்கின்றன.
சுமை அதிகமான கல்வி தருவதுதான் நல்ல தரமான கல்வி என தனியார் பள்ளிகள் சொல்லி வருகின்றன. ஐந்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு செய்தித்தாள்களை படிக்க தெரிவது, கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலை போடத் தெரிவது, நாணய மதிப்புகளை அறிந்திருத்தல் என்பது மட்டுமே போதுமானது. ஆனால் இப்போது அதிகமான கணக்குகளை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதால் கற்பது என்பதே கடினமான ஒரு விசயமாக குழந்தைகளுக்கு மாறி விடுகிறது. முதலில் பாடச்சுமையை குறைக்க வேண்டும்.
பங்கேற்பு கல்வி இருக்க வேண்டும். போட்டி முறைக் கல்வியால், தான் மட்டும் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் முதல் ரேங்க் வாங்க கூடாது என்று சிந்திக்க தொடங்குகிறார்கள். அதாவது தான் வெற்றி பெற மற்றவர்கள் தோற்க வேண்டும் என்ற விஷம் அவர்களிடையே விதைக்கப்படுகிறது. இது அரசு வேலைக்கு செல்லுகையில் தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக பிறர் மீது மொட்டைக் கடிதம் போட வைக்கிறது. போட்டிக் கல்விக்கு பதிலாக தான் கற்றவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாக கல்வி முறை மாற வேண்டும். குழுவழி கற்றல், விவாத முறையில் கற்றல் போன்றவை இதற்கு அவசியம்.

ஒருமுறை நான் பிரிட்டன் சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு பள்ளியில் வரலாற்று பாடம் நடத்தப்பட்டது. வாட்டர்லூ யுத்தம் நேற்று நடைபெற்றது என்றால் இன்றைய செய்தித்தாள்கள் எப்படி எப்படியெல்லாம் செய்தி வெளியிடும் என்பதை குழந்தைகள் சொந்தமாக கற்பனை செய்தி அவற்றை எழுதி சுவரில் ஒட்டியிருந்தார்கள். ஆசிரியர் இதனை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அவற்றை மாணவர்களுடன் விவாதிக்கிறார். இதில் எதனை ஏற்கலாம், ஏற்க முடியாது என்பதை விவாதித்து விட்டு கடைசியில் எது சரியானது என முடிவெடுக்கும் உரிமையை மாணவர்கள் கையில் கொடுத்து விடுகிறார்.
1948-ல் சமூக அறிவியல் பாடத்தை நம் நாட்டில் முன்வைக்கையில் வரலாறு, நிலவியலுடன் குடிமையியலும் இணைத்துதான் கற்பிக்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். இங்கே மண் வாசனை சார்ந்து வரலாறு எழுதப்பட வேண்டும். மேட்டுப்பாளையம் துவங்கி ராஜபாளையம் வரை உள்ள கரிசல் காடுகளில் தெலுங்கு பேசும் ஆந்திர மக்கள் பெருமளவு பரவி இருக்கின்றனர். இசுலாமிய படையெடுப்பின் போது தமிழகம் வந்த அவர்கள் தாங்கள் ஏற்கெனவே குடியிருந்த கரிசல் பூமியைத்தான் இங்கும் வசிக்க தெரிவு செய்தார்கள் என்பதை எந்த புத்தகம் நமக்கு வரலாறாக சொல்லித் தருகிறது. பார்ப்பனர்கள் தங்களது அர்த்தமற்ற சடங்குகளுக்காக நதித்தீரங்களை நாடினர். ஆக மக்களின் இடப்பெயர்வில் கூட வம்சாவழியும் சமூகம் சார்ந்த விசயங்களும் உள்ளன. கன்னடம் பேசுபவர்கள் தொண்டாமுத்தூர் துவங்கி கம்பம் வரை உள்ள பள்ளத்தாக்குகளில் தான் குடிபெயர்ந்தார்கள். இதைப் பற்றி சொல்லித் தருவதுதான் சமூக அறிவியல். இதனை தடுத்தவர்கள் சென்னையை சேர்ந்த ஆசிரியர்கள். பிரிட்டிஷார் காலத்தில் படித்த இவர்கள் இப்படி சிந்திக்க விரும்பவில்லை. அதற்கு தகுந்த திறமையும், அறிவும் அவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

விவாதித்தல் மூலமாக கற்பதும் கற்றுக்கொள்வதில் முக்கியமான முறை. ஆந்திராவில் குறைந்தபட்சம் ஒரு குழந்தை ஒரு பாட வேளையின் போது ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டும் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை தனது குறிப்பேட்டில் ஆசிரியர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதனை கண்காணிக்கும் குழுவில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன்.
“உயிருள்ளவை நகரும்” என்று சொன்னார் ஆசிரியர். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு ஒரு மாணவன் கேட்டான். “ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு உயிர் இருக்கிறதா” என்று. யோசித்த ஆசிரியர், “அதனை உயிருள்ள ஒருவன் ஓட்ட வேண்டியதாயிருக்கிறது” என்று விளக்கினார். “போன வாரம் மரத்திற்கு உயிர் இருப்பதாக சொன்னீர்களே, அது நகரவில்லையே” என்று கேட்டான் இன்னொருவன். அதற்கு அந்த ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. பாவம் அவர் அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருந்தார். பிறகு நாங்கள் குறுக்கிட்டு, “மேல் நோக்கிய வளர்ச்சி கூட நகர்வதைப் போலத்தான்” என்று விளக்கினோம்.
அடுத்து நான்காம் வகுப்பிற்கு சென்றோம். அங்கு ஒரு குழந்தை இப்படிக் கேட்டது. “போன வாரம் எச்சில் ஜீரணத்தை அதிகரிப்பதாக சொன்னீர்கள், இந்த வாரம் எச்சில் நோயை பரப்பும், அதை வெளியே துப்பாதீர்கள் என்கிறீர்கள். நான் எச்சிலை விழுங்கினால் எனக்கு நோய் வருமா வராதா” என்று கேட்டது அந்த குழந்தை. நானும் உயிரியல் மாணவன் இல்லை என்பதால் எனக்கும் சரியான விடை தெரிந்திருக்கவில்லை. உடனே நான் இப்படி சொன்னேன். “நாய் தன்னுடைய உடம்பில் ஏற்படும் காயத்தை தனது எச்சிலை கொண்டு நக்குவதில்லையா, அந்த நாயின் எச்சில் அதற்கு ஏற்படும் காயத்திற்கான எதிர்-உயிரியாக, எதிர்ப்பு சக்தியாக, மருந்தாக பயன்படுகிறது, அது போலத்தான் இதுவும்” என்றேன். “இரண்டாவது எல்லா எச்சிலிலும் நோய்கிருமிகள் இருக்காது, எந்த எச்சிலில் நோய்க்கிருமிகள் இருக்கிறது என்று நமக்கு சரியாக தெரியாது” என்பதால் ஆசிரியர் அப்படி பொதுவாக சொல்லியிருக்கிறார் என்றும் விளக்கினேன்.

ஒரு எட்டாம் வகுப்பு மாணவி, மதம் பற்றிய ஒரு பாடத்தின்போது “இசுலாமியர் குரானை வைத்துள்ளனர், கிறிஸ்தவர்கள் பைபிளை வைத்துள்ளனர், நாம் எதை வைத்துள்ளோம் சார்” என்று கேட்டாள். “பகவத் கீதை” என்று சொன்னோம். “ஆனால் அவர்கள் எல்லாம் தொழுகைக்கு போகும்போதும், சர்ச்சுக்கு போகும்போதும், வீட்டிலும் இவற்றை வைத்துள்ளனரே” என்றும், “எங்கள் வீட்டில் பகவத் கீதை இல்லையே, அதை எப்படி நமது மத நூல் என்று சொல்கிறீர்கள்” என்றும் கேட்கிறாள். வினா எழுப்ப அனுமதி தந்தால் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள் வரும் என்பதை தவிர்க்கவே நாம் அதனை அனுமதிப்பதில்லை.
இப்போது மாணவர்கள் பிறரை மரியாதையாக விளிப்பதில்லை என்று பல இடங்களிலும் பார்க்கிறோம். பாடத்திட்டங்களிலும், வினாத் தாளிலும் மாணவர்களை மரியாதையாக விளிக்க வேண்டும் என்பதை நான் அதற்கான குழுக்களில் இருந்த போது பலமுறை வலியுறுத்தினேன். எழுது என்பதற்கு பதில் எழுதுக என்று மறைமுகமாவது மாணவனுக்கு மரியாதை தரும் விதத்தில் கேள்வித் தாள்களில் மாற்ற சொன்னேன். அதனை ஆசிரியர்கள் “சின்னப் பையனுக்கு எதற்கு சார் மரியாதை” என்று கூறி தட்டிக் கழித்தனர்.
மனிதர்களுக்கு மரியாதை தருவது நமது சமூகத்தில் எங்குமே இல்லை. உயர் அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை உட்கார வைத்து பேசுவதில்லை. இந்த நிலைமை தான் கல்வித் துறையிலும் இருக்கிறது. சில பள்ளிகளில் ஆசிரியர்களது பாதங்களில் மலர்களை மாணவர்கள் தூவுகின்ற சடங்குகளை எல்லாம் நடத்துகின்றனர். சமூகத்தின் பல இடங்களில் இத்தகைய சமூக பிறழ்வுகள் இருப்பதால் அது கல்வித்துறையிலும் எதிரொலிக்கிறது. அதனை எதிர்த்து கேள்வி கேட்க உத்வேகம் கொடுப்பதுதான் உண்மையான கல்வி.

பாடநூல் இல்லாமல்தான் நானெல்லாம் வகுப்பு எடுப்பேன். ஆனால் இப்போது எந்த ஆசிரியரும் அப்படி பாடம் எடுப்பதில்லை. பாடநூலும் கற்பதற்கு ஒரு தடைதான். அதே போல தேர்வும் ஒரு தடை. தேர்வுக்காக படிப்பதை மாற்றி அறிவுக்காகத்தான் படிக்க வேண்டும் என நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.
தொடக்கப் பள்ளி ஒன்றுக்கு போயிருந்தேன். அங்கு தலைமையாசிரியரே சந்தோஷமாக பாடம் எடுக்க முன்வந்தார். அவர் எம்.ஏ.பி.டி படித்தவர். பாடம் எடுத்த பிறகு எளிமையாக சில கேள்விகளைத்தான் மாணவர்களிடம் கேட்டார். ஆனால் குழந்தைகள் அனைவரும் மவுனமாக இருந்தனர். சில நொடிகளில் நிலைமையை யூகித்து அவரிடம், “தெலுங்கு உங்களுக்கு தெரியுமல்லவா, தெலுங்கிலேயே கேள்வி கேளுங்கள்” என்று சொன்னேன். தெலுங்கில் அவர் பேசியவுடன் மாணவர்கள் உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தனர். காரணம் அது தோட்ட வேலை செய்யும் சக்கிலிய சாதியின குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சிறப்பு பள்ளி. அவர்களது பெற்றோர்களாவது வேலைகளுக்காக தமிழில் சமூகத்தில் பிறருடன் கலந்துரையாடுவார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் சேரியை விட்டு வெளியே வராதவர்கள். எனவே அவர்கள் தமது தாய்மொழியான தெலுங்கை மட்டும்தான் தெரிந்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கும் பிறருக்கும் ஒரே மாதிரியாக தமிழ்வழியில்தான் பாடத்திட்டம் என்பது எப்படி பொருந்தும். நான் “இப்படி ஒரு பிரச்சினையில் எனக்கு உதவ முடியுமா” என்று மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகளுக்கான நிறுவனத்திற்கு கேட்டு எழுதினேன். யாருமே இதுவரை அப்படி கேட்டிருக்க மாட்டார்களோ என்னவோ உடனடியாக எனக்கு ஆறு பேரை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இயக்குநர் பட்நாயக், இணை இயக்குநர் அண்ணாமலை ஆகியோர் அப்போது அங்கிருந்தனர். அண்ணாமலை, திருமலை மற்றும் இப்போது புதுச்சேரியில் அறிவியல் பேரவை தலைவராக உள்ள புருஷோத்தமன் என ஆறு பேரை அனுப்பினர். அவர்கள் தாய்மொழி தெலுங்காக இருப்பவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் முறையை சொல்லித் தர முயன்றார்கள்.

தற்செயலாக அப்போது கல்வியமைச்சராக இருந்த அரங்கநாயகம் அங்கு வந்தார். “இதனை மலையாளம், கன்னடம் போன்றவற்றை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு நீட்டிக்க திட்டம் வகுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இதில் மராட்டியம், சௌராஷ்டிரா, துளு என ஏழு மொழிகளில் பாட நூல்களை தயாரித்து அரசிடம் கொடுத்தோம். ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை. பாட நூல் தயாரிப்பின்போது தமிழாசிரியர்களை அழைத்து வந்து நேரில் பதினைந்து நாள் பயிற்சி வேறு அளித்தோம்.இந்தக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைப் போலவே தமிழும் அந்நிய மொழிதான்.
இப்போது ஆங்கிலத்தை கூட ஒன்றாம் வகுப்பிலேயே சொல்லித் தர ஆரம்பித்து விட்டார்கள். இதுவும் கூட எம்.ஜி.ஆர் துவங்கி வைத்தது தான். தனியார் ஆங்கில பள்ளிகளை அனுமதித்த காலத்தில் நம்மவர்கள் கேட்டதற்கிணங்க ஒன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலம் பாடமாக வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு முதல் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை. ஆனால் இப்படி முதலாம் வகுப்பிலேயே இரு மொழிகளை அறிமுகப்படுத்தியதால் தமிழும் சரியாக கற்க முடியவில்லை, ஆங்கிலத்தையும் சரிவர கற்க முடியவில்லை என்பதுதான் நடந்தது. சில குழந்தைகளுக்கு ஆங்கிலம் இங்கு மூன்றாவது மொழியாகவும் இருக்கிறது. பல இடங்களில் தேவையான அளவுக்கு ஆசிரியர்களையே போடாமல் வேறு இருக்கிறார்கள்.
குழந்தைகளால் நான்கைந்து மொழிகளை கற்றுக்கொள்ள முடியும் என்ற வாதம் தவறானது. அதில் நடப்பது மொழியை அறிதல் மட்டும்தான். ஆனால் இப்படி மொழியை அறிவது என்பது புறச்சூழலின் தேவைக்காக மட்டுமே நடப்பது. அவர்களுக்கு இலக்கணப்படி எல்லாம் பேசவோ எழுதவோ முடியாது. ஒரு அடுக்கக குடியிருப்பில் பல்வேறு மொழி பேசும் மக்கள் குடியிருந்தால் அங்கு இப்படி குழந்தைகள் மொழியை அறிவது நடக்கும். அதுவே மொழியை கற்றுக்கொள்வது என ஆகாது.
செயல்முறை கற்றல் என்பது புதிய திட்டம் எல்லாம் இல்லை. பங்கேற்பு கல்வி என்பது நான் பி.டி படித்த அறுபதாண்டுகளுக்கு முன்னரே இருந்த ஒன்றுதான். இதற்கு வட்டாரம் சார்ந்து, தொழில் சார்ந்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். மீனவர்கள் நிறைந்த பகுதியில் ஒன்றாகவும், நெசவாளர்கள் நிறைந்த பகுதியில் ஒன்றாகவும், விவசாயம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகவும் தான் பாடத்திட்டங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே பொதுவான ஒரு பாடத்திட்டம் வகுத்து அதில் செய்முறை கற்றலை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. செய்முறை கற்றல் என்பதே குழந்தைகளையும் பங்கேற்க வைக்கும் ஒன்றுதான். இப்போது இதற்கு நிறைய செலவு செய்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.
குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்வதன் மூலம் சமத்துவம் வருவதாக சொன்னார்கள். சமத்துவத்தை இதயத்தில் தர மறுத்து விட்டு ஒன்றாக உட்கார வைப்பதால் வந்து விடுமா? இப்படி உட்காருவது கட்டாயம் என்று சொன்ன போது கர்ப்பிணி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துச் செல்லவே, ஆசிரியர் இல்லாத பள்ளியாக அது மாறியதுதான் கடைசியில் நடைபெற்றது.
(தொடரும்…)
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடன் நேர்முகம் – 1 குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?
சென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு
கோவை
“மோடி அரசின் சமஸ்கிருத வாரம், இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்”
எனும் முழக்கத்துடன் மத்திய அரசின் சமஸ்கிருத வார கொண்டாட்ட அறிவிப்புக்கு எதிராக கோவையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து செஞ்சிலுவை சங்கம் முன்பு 06-08-2014 அன்று மாலை ஐந்தரை மணிக்கு துவங்கி ஏழு மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி தோழர் உமா தலைமையில் ஆர்ப்பாட்டம் முழக்கங்களுடன் துவங்கியது.
தோழர் உமா தனது தலைமையுரையில் சமஸ்கிருத வார கொண்டாட்ட அறிவிப்பு பற்றியும் அந்த அறிவிப்பு எவ்விதத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தின் அடையாளம் எனவும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர் கோவன் அவர்கள் கண்டன உரையாற்றினார். தோழர் கோவன் சமஸ்கிருதத்தின் உள்ளடக்கத்தையும் பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தையும் தம்மை எதிர்த்து கேள்வி கேட்டால், பார்ப்பனியத்துக்கு எதிராக குரல் கொடுத்தால், கொலையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதையும் சாருவாகன் கதை மூலம் விளக்கினார். மேலும், தோழர்.கோவன் வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை சொல்லி அவற்றின் பார்ப்பன மேலாதிக்க உள்ளடக்கத்தை தமிழில் மொழிபெயர்த்து பேசியவற்றை அருகிலுள்ள கோர்ட் வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்களும் சுற்றி நின்ற காவல் துறையினரும் கூட வியந்து கேட்டனர்.
அடுத்ததாக, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் பேசுகையில் ஜெயலலிதா அரசு எப்படி மோடி அரசுக்கு பார்ப்பன விசுவாசத்துடன் இருக்கிறது என்பதனையும் இந்த இரு அரசுகளுமே எப்படி பார்ப்பன அடிவருடி அரசுகள் எனவும் எடுத்தியம்பினார்.
இறுதியாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் திலீபனின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை
திருச்சி
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளில் இருந்து பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பன கும்பலின் கொள்கையான இந்துத்துவாவை திணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாகத்தான் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் (CBSE) சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் லதா அவர்களின் தலைமையில் மோடி அரசின் சமஸ்கிருத வாரம் கொண்டாடும் உத்தரவு நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது.
- “10 கோடி தமிழர்கள் பேசக்கூடிய தமிழ் மொழியை வேசி மொழி என்று பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் செத்த மொழியான சமஸ்கிருதத்தை சிங்காரிப்பது, தமிழ் மொழியை அழிக்கும் நடவடிக்கை. எனவே, இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும்,
- “பெரியார் பிறந்த இம்மண்ணில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத மீட்பு, வரலாற்று திரிப்பு போன்ற மோடி அரசின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மோடியின் சமஸ்கிருத வாரத்தை, சமஸ்கிருத எதிர்ப்பு வாரமாக கடைபிடிப்போம்” எனவும்,
- “பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்” எனவும்
முழக்கமிடப்பட்டது. மேலும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை கல்வி நிலையங்களில் இருந்து ஒழித்துக்கட்ட கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர போராட வேண்டும் என அம்பலப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. செஞ்சிவப்பு சீருடையுடனும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களான பெரியார் அம்பேத்கார் ஆகியோரின் படங்களுடனும், முழக்கப் பதாகைகளுடனும், செங்கொடி ஏந்தியும் விண்ணதிரும் பறை முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதியில் இந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ம.க.இ.க மற்றும பு.மா.இ.மு தோழர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
முழக்கம்
மக்கள் கலை இலக்கிய கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!
மத்திய அரசு அலுவல்களில்
கட்டாயமாக இந்தித் திணிப்பு!
நோன்பிருந்த முஸ்லீம் வாயில்
கட்டாயமாக சப்பாத்தி திணிப்பு!
ஆட்சிக்கு வந்து அறுபது நாளில்
ஆர்.எஸ்.எஸ் சின் ஆட்டம் பாரு!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
சமஸ்கிருத வாரம் என்ற
மோடி அரசின் மொழித்திணிப்பை
பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
யாரும் பேசாத சமஸ்கிருதம்!
யாரும் எழுதாத சமஸ்கிருதம்!
யாரும் பாடாத சமஸ்கிருதம்!
யாருக்கும் புரியாத சமஸ்கிருதம்!
செத்த மொழிக்கு கொண்டாட்டம்!
செத்த பிணத்துக்கு அலங்காரம்!
கொண்டாட வேண்டுமா சமஸ்கிருத வாரம்!
கூட்டித் தள்ளுவோம் குப்பை ஓரம்!
சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
வேசிமக்கள் தமிழர் என்றும்
இழிவு படுத்திய மனு தர்மத்தை
எழுதிய மொழிதான் சமஸ்கிருதம்!
மானமுள்ள தமிழ் மக்களே!
கூடிப் புதைப்போம் சமஸ்கிருதத்தை
வே…தத்தை காதில் கேட்டால்
ஈயத்தைக் காய்ச்சி ஊத்து என்று
சூத்…திரனை தண்டித்த மொழிதான்
பார்ப்பானின் சமஸ்கிருதம்!
இழிவு படுத்தும் மொழியை எதிர்ப்போம்!
தாய் மொழியை உயர்த்திப் பிடிப்போம்!
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்போம்!
இந்தித் திணிப்புக்கு எதிராக
சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்
கடைபிடிப்போம்! கடைபிடிப்போம்!
பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை
மீட்டெடுப்போம்! மீட்டெடுப்போம்!
சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில்
சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை
தடுத்து நிறுத்துவோம்! தடுத்து நிறுத்துவோம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம் – 7373217822;
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 9943176246
திருச்சி.
சென்னை
சமஸ்கிருத வாரத்தை அனுமதியோம் ! பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்!
– புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
“மோடி அரசின் சமஸ்கிருத வாரம் ! இந்துத்துவா திணிப்பே அதன் சாரம் !
செத்த மொழியான சமஸ் கிருதத்தை சிங்காரிக்காதே! தேசிய இனங்களின் மொழிகளை அழிக்காதே !”
என்ற முழக்கங்களுடன் காலை 11 மணிக்கு வள்ளுவர் கோட்டம் சிக்னலில் இருந்து மாணவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்று அப்பள்ளி சாலையை அடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநிலப்பொருளாளர் தோழர். வெங்கடேசன் 1500க்கும் குறைவான மக்கள் கூட பேசாத செத்துப் போன மொழிக்கு மத்திய அரசு விழா எடுப்பதற்கான நோக்கம் என்பது இந்தி – இந்தி – இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ் –ன் கருத்தியலை இந்தியா முழுக்கக் கொண்டு வந்து இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களையும் அழிக்கும் சதிதான், இந்த மோடி அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயா ஆதரவளித்து சமஸ்கிருத ஓலைச்சுவடிகளை இணையத்தில் தரவேற்றம் செய்வதை சுட்டிக்காட்டி தமிழையும் மற்ற மொழிகளையும் அழிக்க நடந்து வரும் சதிக்கு எதிராக பெரியாரின் வாரிசுகளாக போராட வேண்டும்” என்று பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை
ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 3
இந்து ஆன்மீக கண்காட்சி என்றால் ஆன்மீகம்தானே முக்கியமான விற்பனை சரக்கு? ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழக மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி ஜெயேந்திரன். ஆன்மீகம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் என்றால் அதில் இன்டர்நேஷனல் கட்டப்பஞ்சாயத்து தாதா ஜெயேந்திரன்தான்.

விரிக்கப்பட்டிருந்த ஆன்மீக கடைகளிலேயே ஈஷா யோகா கடை தான் பெரிய கடை. மொத்தம் 11 அரங்குகள். ஆனால் ஆடித் தள்ளுபடி கிடையாது, “பிக்ஸ்ட் ப்ரைஸ்” தான். தொண்டர்கள் என்கிற பெயரில் இளவயது முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பலவகையான ஆடுகள் ஜக்கியிடம் சிக்கியிருந்தன. இதுவரை பிடிபடாவிட்டாலும் ஜக்கியும் ஒரு நித்தி தான், எனவே இந்த பிடிபடாத நித்தியிடம் நமக்கென்ன வேலை என்று அடுத்த ஸ்டாலை நோக்கி நகர்ந்தோம், ஆனால் வேலியில் போன ஓணானை எடுத்து விட்டுக்கொண்ட கதையாக, நம்மை போகவிடாமல் தடுத்து இழுத்தனர் ஜக்கியின் ஆடுகள்.
“”நீங்க inner engineering course படிக்கலாமே” என்றார் அந்த பெண்.
உண்மையான எஞ்சினியரிங் படித்தவனுக்கே வேலை இல்லாத போது இது என்னடா இன்னர் என்சினியரிங்” என்று அதைப் பற்றி விசாரித்தோம்.
“யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை தான் இன்னர் என்சினியரிங் கோர்ஸ் சார், இதை படித்தால் பட்டம் கிடைக்கும்” என்றார்.
“சரி இதற்கு ஏன் எஞ்சினியரிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கேட்டால், நமது உடலே ஒரு பொறியியல் அமைவாக இருப்பதால் அந்த பெயரை வைத்துவிட்டார்களாம்.
பக்கத்து ஸ்டாலில் கிளிப்பச்சை நிறத்தில் பழைய ஜெட்லி பட யூனிபார்மை அணிந்து கொண்டு நின்ற ஞானோதயம் யோகா குழுவினர், “அந்த யோகா வேற, எங்க யோகா வேற” என்று 4000 ரூபாய் மதிப்புள்ள தமது யோகா பாக்கேஜ்களை வெறும் 3,999 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். தனது பொருள் மற்றதிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பதில் ஈஷாவினர் ஸ்டீவ் ஜாப்ஸ் ரகம் போலும்.
“எஞ்சினியரிங் கோர்ஸ் எல்லாம் இருக்கட்டும் ஜக்கி வாசுதேவைப் பற்றி உங்களிடம் சில கேள்விகளை மட்டும் கேட்க வேண்டுமே” என்றோம்.
“கேளுங்கள்” என்றார் அந்த பெண்.
“அரசுக்கு சொந்தமான வெள்ளியங்கிரி மலையை சட்டத்திற்கு புறம்பாக ஜக்கி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே..” என்று கேள்வியை துவங்குவதற்குள்ளாகவே “இந்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது, நீங்க மேடத்தை பாருங்க” என்று வேறு ஒரு பெண்ணை கை காட்டியதுடன் அவரே அந்த மேடத்திடம் அழைத்துச் சென்றார். அந்த மேடம் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்பார் போலிருக்கிறது. கொலையே செய்தாலும் சிரித்தவாறு இருக்கும் ஜெசூட் பாதிரிகள் கூட இந்த விசயத்தில் ஜக்கி கோஷ்டியினரிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
அருகில் சென்றதும் “யெஸ் சார்” என்றார் அதே புன்னகையுடன்.
“சில கேள்விகள் கேட்க வேண்டும்” .
“கேளுங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
“ஜக்கி வாசுதேவ் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறதே அதற்கெல்லாம் என்ன பதில்” .
“என்ன.. தெளிவா சொல்லுங்க” சற்று தடுமாறினார்.
“நித்தியானந்தாவை போலவே ஜக்கி மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறதே, ஆசிரமத்தில் சில கொலைகள் கூட நடந்திருப்பதாக கூறுகிறார்களே” என்றதும் முகத்தில் வழிந்து கொண்டிருந்த புன்னகை சடாரென்று மறைந்து பேயறைந்தது போலானார்.
“எந்த அடிப்படையில் அப்படி சொல்றீங்க” .
“பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்களே அதை வைத்து தான்” .
“பத்திரிகைகள் பலவும் எழுதும் அண்ணா, அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியுமா” .
“சரி அதை விடுங்க சட்டத்திற்கு புறம்பாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே அதற்கு என்ன பதில் சொல்றீங்க?”
“அண்ணா இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” .
“ஜக்கியை பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னா எதுக்கு அவரோட இவ்வளவு பெரிய படத்தை இங்கே மாட்டி வசிருக்கீங்க, அவர் சொல்றதை எல்லாம் எதுக்கு எங்களை கேட்கச் சொல்றீங்க” .
“அவர் சொல்றதை எல்லாம் நீங்க கேட்கணும்னு நாங்க சொல்வில்லை. யோகாவுக்கு மட்டும் தான் வரச்சொல்கிறோம்” என்றார்.
“அப்படின்னா எதுக்கு ஜக்கியோட படத்தை மாட்டியிருக்கீங்க?”
“அண்ணா தயவு செஞ்சி நீங்க போங்கண்ணா ப்ளீஸ், நீங்க யோகாவுக்கும் கூட வர வேண்டாம்” .
“வாங்க வாங்கன்னு நோட்டீஸ் அடிச்சி கூப்பிடுறீங்க வந்து ஒரு கேள்வியை கேட்டதுமே போங்க போங்கன்னு விரட்டுறீங்களே எப்படி மேடம்” என்றதும் அவர் அடுத்த வாடிக்கையாளரிடம் யோகவை விற்க போய்விட்டார்.
வெள்ளயங்கிரி வனப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டிவீழ்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜக்கி இன்னொரு புறம் தன்னை பெரிய இயற்கை பற்றாளர் போல காட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளை விற்பதற்கும் ஒரு ஸ்டாலை போட்டிருக்கிறார். நடிகன்டா!
அடுத்த கடை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடையது. அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு ஈராக் மதத்தலைவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் ரவிசங்கர் கடையில் அறிவுரை பெற உள்ளூரில் ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஆனால் பானரில் மட்டும் hands up பொசிசனில் சிரித்து கொண்டிருந்தார். ஈயே இல்லாத கடையில் நமக்கு மட்டும் என்ன வேலை என்று அங்கிருந்து கிளம்பினோம்.
ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி, யோகா, மருத்துவம், என்று சகல சரக்குகளையும் கலந்துகட்டி தள்ளிக்கொண்டிருந்த ஜக்கி, இஸ்கான், வேதாத்ரி, அமிர்தானந்த மயி போன்ற ஆன்மீக கம்பெனிகளிடையே கடுமையான நான்குமுனை போட்டி நிலவிக்கொண்டிருந்ததை கண்கூடாக காண முடிந்தது. நாம் கேள்வியேபட்டிராத மடங்களின் பெயர்களில் எல்லாம் காவி உடை கசங்காத ‘ஆன்மீகவாதிகள்’ அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர்.
ஒரு அரங்கில், கும்பமேளாவிற்கு வரும் அகோரிகளின் படங்களை மாட்டி ஒரு பெண் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார், “இவங்களை பத்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்ல எல்லாம் தப்புத் தப்பா சொல்றாங்க. சரியான விஷயங்களை தெரிஞ்சிக்கிறது முக்கியம். இவங்க நம்ம போல சாதாரணமானவங்க கிடையாது. சின்ன வயலிருந்தே இறைவனோட ஐக்கியப்பட்டு இருப்பவங்க. அவங்க உடலை ஒரு பொருட்டா மதிக்கறதில்லை அதனால, உடல்மீது துணி இருப்பதோ இல்லாததோ உணர்வதில்லை. அவங்க போதை மருந்து அடிக்கிறாங்கன்னு அவதூறு சொல்றாங்க. அந்த மருந்தை நாம அடிச்சா அது போதை தரலாம். ஆனா, ஆண்டவனோட இணைந்திருக்கிற அவங்களை ஒண்ணும் செய்யாது.
அவங்க செத்த பொணத்தை சாப்பிடறாங்கன்னா அதுக்கும் காரணம் இருக்கு. அவங்க எல்லா பொணத்தையும் சாப்பிடறது இல்ல. சில பேரு செத்த பிறகு அவங்களுக்கு முக்தி கிடைக்கணும்னு இறைவன் கட்டளைப்படி அந்த பொணத்தை மட்டும் தேடி சாப்பிடுவாங்க.

கும்பமேளாவில கலந்து கிட்டு அவங்க குளித்த தண்ணீரில் குளிக்க நிறைய மக்கள் கூடுவாங்க. நாம எல்லாம் கங்கையில குளிச்சா நம்ம பாவங்கள் கரைஞ்சு கங்கை அழுக்காகிடும். அகோரிகள் குளிச்சாங்கன்னா, அந்த கங்கை சுத்தமாகிடும்” என்றார். இது தெரியாமத்தான் கங்கையை சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சரா போட்டு பல நூறு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறது மோடி அரசு. நூறு அகோரிங்கள பிடிச்சுப் போட்டு அன்றாடம் கங்கைக்குள்ள குதிக்க வெச்சா தானா சுத்தமாக போகுது.
“இன்னும் சில பேரு இவங்களால என்ன பலன்னு கேக்கிறாங்க. இவங்கதான் நம்ம நாட்டுக்கே பாதுகாப்பு. அன்னிய படையெடுப்பு வரும் போது இவங்க முன்னணியில் இருந்து சண்டை போடுவாங்க. அதைப் பார்த்து மக்களும் தைரியமா சண்டை போடுவாங்க” என்றார். இதன்படி இனி இராணுவத்தை கடாசிவிட்டு அகோரிங்கள மட்டும் அதிகம் உருவாக்கி பயற்சி கொடுத்தால் இந்தியா அமெரிக்காவிக்கே பெப்பே காட்டும் போல.
அடுத்தது, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (ISKON) குழு. இவர்களுடைய பக்தி நூல்களில் உள்ள படங்களை எல்லாம் குழந்தைகள் பார்த்தால் ஒருவேளை பயப்படக்கூடும். அவை கடவுள் படங்கள் என்று கூறப்பட்டாலும் வேற்றுகிரகவாசிகளை போலவே விகாரமாக இருக்கும். இதன் ஸ்தாபகர் பிரபுபாதா கூட அப்படி தான் இருப்பார். அவர் இப்போது உயிருடன் இல்லை.
நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான் என்று இந்த இந்து கம்பெனிகள் அனைத்தும் எவ்வளவு வெளிப்பூச்சு பூசிக்கொண்டாலும் அரங்கிற்குள் ஒரே அடிதடி ரகளை தான். “மற்ற ஆன்மிக சரக்குகள் எல்லாம் சரியானவை அல்ல, பிரபுபாதா தான் கடவுளை அடைவதற்கான சரியான வழியை காட்டியுள்ளார்” என்று கூறினார்கள். “மற்ற ஹிந்து அமைப்புகள் எல்லாம் ஹிந்து தர்மத்தை காக்கவில்லை, ஹிந்து மக்களை சரியாக வழி நடத்தவில்லை, பிரபுபாதா வெறும் நாற்பது ருபாயை வைத்துக்கொண்டு, நன்கொடையாக கிடைத்த ஒரு பயணச்சீட்டில் அமெரிக்காவிற்கு போய் சேர்ந்தார். குடியும் கூத்துமாய் சீரழிந்து கிடந்த அந்த ஹிப்பிகளை எல்லாம் சொற்பொழிவுகளின் மூலமும், பஜனையின் மூலமும் நல்லவர்களாக மாற்றியதோடு தனது சீடர்களாகவும் மாற்றினார்” என்றார் அங்கிருந்த தொண்டர். பிறகு “பார்ப்பனர்கள் எப்படி வேத காலத்திலிருந்து அறிவாளிகளாகவும், வேதங்கள் அறிந்தவர்களாகவும் இருந்தனர்” என்று பார்ப்பன அடிமைத்தனத்தை போற்றிப் புகழ்ந்தார். பார்ப்பன அடிமைப்புத்தி கீழிருந்து மேலே வரை வைரஸ் போல தாக்கியிருக்கிறதே என்கிற வேதனையோடு அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்து, அய்யாவழி ஸ்டால். அய்யா வைகுண்டர் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு அய்யா வழிபாடே முழுமையாக பார்ப்பனமயமாகியிருக்கிறது. “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து தானே இந்து மதத்திலிருந்து வெளியே வந்தார்” என்றோம் அந்த ஸ்டாலில் இருந்தவரிடம்
“அப்படியில்லை நீங்கள் தவறாக படித்திருக்கிறீர்கள். அவர் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டார்” என்று அதிர்ச்சி கொடுத்தார். மேலும் “பத்து அவதாரங்களும் அவர் தான், தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் அவர் ஏற்கனவே பாடல்களாக பாடியுள்ளார்” என்று கூறி சில பாடல்களையும் பாடினார். மட்டுமின்றி கொஞ்சம் கூட சிரிக்காமல் “இந்தியாவிற்கு விடுதலை வாங்கி கொடுத்ததும் அவர் தான்” என்றார். வள்ளலார் பற்றி பேசிய போது, “வள்ளலார் எல்லாம் உண்டு களித்து உறங்கிய ஒரு சாதாரண மனிதர்” என்றும், “எங்கள் அய்யா தான் கடவுளின் அவதாரம்” என்றும் கூறிக்கொண்டிருந்த போது “இன்னொரு அய்யாவழிக்காரர் வந்து இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசினால் இந்து தர்மத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று அவரை அமுக்கினார். பார்ப்பனியத்தை எதிர்த்து எழுந்த அய்யா வழிபாட்டையும் பார்ப்பனியம் செரித்து விழுங்கிவிட்டது.
“எட்டும் இரண்டும் பத்து” என்ற தலைப்பில் வள்ளலாரின் படம் போட்டு தனியாக ஒரு மடம் இருந்தது. “நீங்க தனியா யோகா எல்லாம் படிக்க வேண்டாம். வாழ்க்கையே ஒரு யோகமாக இருந்தா போதும். ஜோதி மார்க்கமா இறைவனை தரிசிக்கலாம்னு உலகத்துக்கு சொன்னவர் வள்ளலார். எல்லோரும் ஞானம் பெறலாம் என்பதுதான் இதற்கு பொருள். இந்த உண்மையை மத்தவங்க எல்லாம் வெளியே சொல்றது இல்லை. ரகசியமா வைச்சிக்கிறாங்க” என்றார்.
“அப்போ, அங்க ஈஷா யோகோ, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற கடைகளில் யோகா பேக்கேஜ் வாங்க சொல்றாங்களே” என்று கேட்டால்,
“அதெல்லாம் தேவையே இல்லை. அவங்க எல்லாம் வியாபாரத்துக்காக இப்படி செய்றாங்க.”
அப்போதுதான் அந்த கடையில் ஞானசற்குரு சிவ செல்வராஜ் என்பவரின் படம் மாட்டியிருப்பதைப் பார்த்தோம். அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை, “இவை போன்ற ஞான ரகசியங்களை மேலும் விரிவாக தெரிந்து கொள்ள படித்து அறிந்து கொள்ள, ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளிய ஞான நூற்கள்” என்று 25 தமிழ் நூல்கள், 3 ஆங்கில நூல்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போல பன்னாட்டு வலைப்பின்னல் அமைக்க முடியாத உள்ளூர் வியாபாரி இவர் என்று புரிந்து கொண்டு நகர்ந்தோம். யார் கண்டது, அடுத்த கண்காட்சியில் இவரும் கூட சர்வதேச பிரபலமாக ஆகியிருக்கலாம். மைனர் நித்தியெல்லாம் குருவாக உலாவரும் போது ஞானசற்குருவுக்கு என்ன குறைச்சல்?
அடுத்து அம்மா அமிர்தானந்தமாயியின் அரங்கிற்கு சென்றோம். அங்கிருந்தவர் ஆன்மீக சிரிப்புடன் வரவேற்றார். அம்மாவைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்த வாக்கியங்களை நம்மிடமும் கொட்டத் தயாரானார். அதற்குள் “எங்களுக்கு தெரியாத சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க சார்” என்றோம்.
“சொல்லுங்க சார் என்ன கேள்வி”.
“அம்மா அமிர்தானந்தமயி ஒரு சாமியார் தானே?”
“ஆமாம்.”
“வெறும் சாமியாரா அல்லது கடவுளின் உருவமா?”
“கடவுளின் அவதாரம் தான் அம்மா.”
“சரி அவர் தான் கடவுள் என்றால் கடவுளுக்கு எதற்கு எஞ்சினியரிங் காலேஜ், ஸ்கூல், கோடிக்கணக்கில் பணம் எல்லாம்” என்றதும் ஒரு கணம் திகைத்து நின்றார். பிறகு ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு “எல்லாம் மக்களுக்காக தான், மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தான் அம்மா எல்லாவற்றையும் செய்கிறார்” என்றார்.
“சரி மக்கள் படிப்பதற்கு என்றால் சும்மா படிக்க வைக்கிறாரா பீஸ் வாங்குகிறாரா?”
“பீஸ் தான்.”
“கடவுளுக்கு எதுக்கு பீஸ், ஃபிரீயா படிக்க வைக்கலாமே” என்றதும் கொஞ்சம் டென்ஷன் ஆனார்.
“சார் இங்கே ஆன்மீகத்தை பற்றி மட்டும் பேசுங்க, வேற விஷயங்களை பேசணும்னா எங்களோட சென்னை ஆபீஸ் விருகம்பாக்கத்தில் இருக்கு அங்கே போய் கேளுங்க” என்றார்.
“என்ன மேடம் ஒருத்தர் படத்தை காட்டி இவர் தான் கடவுள்னு சொல்றீங்க, நீங்க சொல்றதை கேட்கிற நாங்க சரி கடவுளுக்கு காசு எதுக்குங்கன்னு ஒரு கேள்வியை கேட்டா இங்கே பதில் சொல்ல முடியாது, எங்க ஆபீசுக்கு வந்து கேளுங்கிறீங்க, பதில் சொல்ல முடியலைன்னா எதுக்கு இப்படி மார்க்கெட்டிங் பன்றீங்க” என்றதும்.
“சார் உங்ககிட்ட எல்லாம் பேச முடியாது நீங்க எதுவானாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கங்க” என்றார். சரி எல்லா பிராடு கம்பெனியும் இப்படி தான் பேசும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு மேலே நடந்தோம்.
அடுத்து வந்தது வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை. “உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் சார்” என்றோம் ஸ்டாலில் நின்றிருந்தவரிடம்.
“நாங்க கொடுக்கிற பயிற்சி இப்போ அண்ணா யுனிவர்சிடில ஒரு பாடமாவே ஆகியிருக்கு, இதுக்கு பட்டம் இருக்குங்க. எங்களுடையதில் மூன்று பிரிவுகள் இருக்குங்க ஒன்னு தியானம், இரண்டு உடற்பயிற்சி, மூணு காயகல்பம்” என்று விரிவான விளக்கம் அளித்தார்.
“சரிங்க சார் இதனால என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் எப்படி தீரும்?”
“என்ன பிரச்சினைகள்னு சொல்லுங்க.”
“உதாரணத்திற்கு இப்போ மின்கட்டணம் உயர்ந்துகொண்டே போகுது, விலைவாசி அதிகரிக்கிறது. இதை எல்லாம் மூச்சு பயிற்சியின் மூலம் எப்படி சரி செய்ய முடியும்?”
மற்றவர்களை போல இவர் சளைக்கவில்லை, டென்ஷனும் ஆகவில்லை உடனடியாக பதிலளித்தார்.
“மின்கட்டணம் உயர்வதற்கு யார் காரணம், நீங்க தான் காரணம். எதுக்கு அளவுக்கு அதிகமா கரண்ட் யூஸ் பன்றீங்க, குறைவா பயன்படுத்துங்க. அல்லது அதுக்கு ஏத்தமாதிரி பொருளாதாரத்தை அதிகமா ஈட்டிக்கொள்ளுங்கள். அதிகமான நேரம் வேலை செய்ங்க, முடியலைன்னா அளவை குறைச்சிக்கங்க. எட்டு இட்லி சாப்பிடுறீங்கன்னு ரெண்டு இட்லியை குறைச்சிக்கிடுங்க. பிரச்சினை வெளியே இல்லை நம்மகிட்ட தான் இருக்கு, நாம தான் இப்படி எதையாவது அட்ஜெஸ்ட் செஞ்சிக்கனும்” என்றார். நாம் அவரிடம் தர்க்கம் எதுவும் செய்யாமல் ஒரு புதிய மாணவனை போல கேட்டுக்கொண்டிருந்தோம்.
பிறகு வேதாத்ரி மகரிஷியை பற்றி கூறினார். “அவர் 24 முறை அமெரிக்காவுக்கு போனார், ” என்று அதை 24 முறைக்கு மேலேயே சொல்லியிருப்பார்.
“சரிங்க ஏன் எல்லா சாமியார்களும் அமெரிக்காவுக்கே போறாங்க. இந்த நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்காங்க அவங்களுக்கு ஆன்மீகத்தை போதிக்கலாமே” என்றோம்.
“அமெரிக்காவிலிருக்கும் சீடர்கள் அழைக்கும் போது தட்ட முடியுமா அதற்காக தான் போனார். மற்றவர்கள் எல்லாம் எதற்கு போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
அமெரிக்காவிற்கும், பெருநகரங்களுக்கும் போகும் மகரிஷிக்கள் ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் வருவதே இல்லையே என்று கேட்டதும், அவங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எகத்தாளமாக கேட்டார். சரிதானே, ஆன்மீக பிசினெசில் ஏழைகளுக்கு இடமில்லையே!
கண்காட்சியில் ஆங்காங்கே சங்கராச்சாரியின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன, மேலும் அவர் தான் இந்த விழாவை துவக்கி வைத்துள்ளார். நாம் சில கடைக்காரர்களிடம் பேசினோம்.
“என்னங்க இதை இந்து ஆன்மீக கண்காட்சின்னு சொல்றீங்க ஆனா ஜெயேந்திரர் மாதிரி கிரிமினல் கேஸ்ல மாட்டினவரை எல்லாம் வச்சு விழாவை துவக்கியிருக்கீங்க, அதோட அவர் படத்தையும் அங்கங்கே தொங்க விட்ருக்கீங்களே” என்றதற்கு
“அவா தான் அதை பன்னான்னு இன்னும் ப்ரூப் ஆகலையே, இருந்தாலும் இப்படி செய்திருக்கப்பிடாது தான். எல்லாத்திலயும் ஃபிஃப்டி ஃபிஃப்டி தான் இருக்கா, பாதி பேர் ஆதரிக்கிறா, பாதி பேர் எதிர்க்கிறா. இதுல நாம என்ன செய்ய முடியும்” என்றார்.
மற்றொருவர் “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோட முடிவு குருமூர்த்தி இருப்பார்,அவராண்ட கேளுங்க” என்றார்.
“அப்படின்னா இதுல உங்களுக்கு பங்கில்லையா” என்றோம்.
“நான் எப்படி பொறுப்பாக முடியும்?”
“அவரை அழைத்தது தவறு என்பதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா?”
“அதை பத்தி இப்போ பேச முடியாது” என்று கிளம்பினார்.
அடுத்து சிருங்கேரி மடத்தில் உள்ளவரிடம் பேசினோம்.
“நீங்க சொல்றது சரி தான், ஆனா என்ன பண்றது யாரை அழைக்கலாம் கூடாதுன்னு தீர்மானிக்கிறவங்க பெரிய ஆட்களாக இருக்காங்க” என்றார்.
“அவரை அழைத்ததை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“உடன்பாடு இல்லை தான்.”
“அப்படின்னா நீங்க இதை எதிர்க்க வேண்டாமா?”
“நான் எப்படி சார் எதிர்க்கிறது” என்றவர், “இல்லை இன்னும் முடிவு தெரியாத பிரச்சினையை பற்றி நாம பேச முடியாது” என்று நழுவினார்.
இந்து ஆன்மீக சேவை வழங்கும் இத்தகைய ‘உத்தமர்’களைக் கொண்டு நடத்தப்படும் ஆன்மீக சேவைக் கண்காட்சி இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தோம்.
(தொடரும்)
– வினவு செய்தியாளர்கள்.
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2 வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014 அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
வெடிகுண்டுகளுக்கு மத்தியில் தேநீர்
ரச்சேலின் கடிதங்கள் -3 போராடும் உலகம் (இறுதிப் பகுதி)
அமெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)
அம்மா,
உன்னையும் என்னையும் போன்ற வசதியான நடுத்தர வர்க்கத்தினர், நமது வசதிகளை கட்டமைக்கும் அமைப்புகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை தகர்ப்பதற்கு நம்மைப் போல கொடுத்து வைக்காதவர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
பிப்ரவரி 15-ல் நடந்தது போல குடிமைச்சமூகம் பெருமளவில் விழித்தெழுந்து அதன் மனசாட்சி இருப்பதன் ஆதாரத்தை, ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் அதன் தன்மையை, பிறரின் துன்பங்கள் குறித்த அதன் கருணையை பெருமளவு காட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இசுரேல் தாக்குதலால் சிதைக்கப்படும் பாலஸ்தீனர்கள் வாழ்க்கை(நன்றி : RT.com)
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
மேட் கிரான்ட், பார்பரா வீவர், டேல் நுத் போன்று இன்னும் அதிகமான ஆசிரியர்கள் உருவாகி அமெரிக்க குழந்தைகள் மத்தியில் விமர்சன பார்வையை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இப்போது நடக்கும் சர்வதேச எதிர்ப்பு இயக்கம் அனைத்து வகையான பிரச்சனைகளையும் ஆய்வு செய்வதற்கு இட்டுச் சென்று பல்வேறு தரப்பிலான மக்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜனநாயக அமைப்பில் இயங்குவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு புதியவர்களான நாம் இனச்சார்பு, வர்க்கச்சார்பு, ஆணாதிக்கம், பாலியல் சார்பு, வயது சார்பு, திறமை சார்பு இவற்றை நீக்கிக் கொண்டு போராட்டங்களில் ஈடுபடும் திறனை வளர்த்துக் கொள்வோம் என்று எதிர்பார்க்கிறேன்.
இன்னொரு விஷயம், இது பொது எதிர்ப்பை பற்றியது. சில வாரங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஒரு பொது ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் போதோ அல்லது கலந்து கொள்ளும் போதோ, ‘அது உண்மையிலேயே தோல்வியடைந்து விடும், மிகச் சிலரே கலந்து கொள்வார்கள், அவமானப்படும்படியாகி விடும். ஊடகங்கள் நம்மை கிண்டல் செய்யும்’ என்று பயமாக இருக்கிறது.
உண்மையில் பல நேரம் அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மிகச் சிறிய அளவில் முடிந்து விடுகின்றன. ஊடகங்கள் நம்மை கிண்டல் செய்கின்றன. இந்த வார இறுதியில் நாங்கள் நடத்திய 150 பேர் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு 2,000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.
எங்கள் சிறிய ஆர்ப்பாடம் உலக அளவிலான செய்தியாக மாறவில்லை என்றாலும், அரபு ஊடகங்களுக்கு வெளியில் சில இடங்களில் ராஃபா என்ற சொல் ஒலித்தது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட தெருநாடக போராட்டம் (நன்றி : RT.com)
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
சியாட்டிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காலின் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும், “ராஃபா மீதான, இராக் மீதான போரை ஒலிம்பியா (நகரம்) எதிர்க்கிறது” என்ற பதாகையை கொண்டு சென்றிருக்கிறார். அவரது படங்கள் முகமது என்பவர் நடத்தும் “ராஃபா – இன்று” இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. இங்கும் பிற இடங்களிலும் உள்ள மக்கள் அந்த படங்களை பார்த்தார்கள்.
கிளென், 10 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இராக் மீதான பொருளாதாரத் தடையால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை காட்டும் பெயர்ப் பலகையுடன் தெருவோரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதை நினைத்துப் பார்க்கிறேன். சில சமயம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே அவரோடு சேர்ந்து கொள்வார்கள், பெரும்பாலும் எல்லோரும் அவர்களை பைத்தியம் என்று நினைத்தார்கள். அவர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள்.
இப்போது வெள்ளிக் கிழமை மாலைகளில் பலர் கலந்து கொள்கிறார்கள். 5-வது தெருவுக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் இடையேயான சந்திப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்புகிறது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல கை அசைத்தல்களும், கார் ஒலிப்பான்களும், விரல் உயர்த்தல்களும் கிடைக்கின்றன. மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவதற்கு ஏதாவது செய்வதற்கான கட்டமைப்பை அவர்கள் அங்கு உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் கிண்டல் செய்யப்படுவதை பார்க்கும் ஒருவர் பிரச்சனை குறித்து பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதையாவது செய்வோம் என்று முடிவெடுப்பதை அல்லது ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சிறிது நேரம் நின்று போகலாம் என்று நினைப்பதை, அல்லது சாலை ஓரத்தில் நின்று இராக் குழந்தைகள் கொல்லப்படுவதை எதிர்த்து பேசி கிண்டலுக்குள்ளாவதை விட குறைவாக நகைப்புக்குரியதாக தோன்றும் ஏதாவது செய்ய முடிவு செய்வதை எளிதாக்கினார்கள்
நீங்கள் செய்து கொண்டிருப்பது பற்றி தெரிந்து கொள்வது, நான் தனியாக செயல்படுகிறேன் என்ற உணர்வை குறைக்கிறது; நான் பலனற்ற வேலையை செய்கிறேன் என்ற எண்ணத்தை மட்டுப்படுத்துகிறது; யாரும் நாம் செய்வதை பார்க்கப் போவதில்லை என்ற விரக்தியை இல்லாமல் செய்கிறது. ஹாரன் அடிப்பவர்களும் கை அசைப்பவர்களும் உதவுகிறார்கள்; படங்கள் உதவுகின்றன; காலின் செய்வது உதவியாக இருக்கிறது.
சர்வதேச ஊடகங்களும் நமது அரசும் நாம் செய்வது மாற்றத்தை கொண்டு வரும், நாம் முக்கியமானவர்கள், நமது வேலை நியாயமானது, நாம் தைரியமானவர்கள், நாம் புத்திசாலிகள், நாம் மதிப்புக்குரியவர்கள் என்று நம்மிடம் சொல்லப் போவதில்லை. நாம்தான் ஒருவருக்கொருவர் அதை செய்து கொள்ள வேண்டும். அதை செய்வதற்கான ஒரு வழி நமது வேலையைப் பற்றி எல்லோருக்கும் அறியும்படி செய்வது.

அமெரிக்காவில் ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் மக்கள், வசதிகளற்ற மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள். நாம் அவர்களது போராட்டத்துடன் நம்மை இணைத்து கொள்வதன் மூலம் அவர்கள் பக்கம் நாம் நிற்பதை அவர்கள் தெரிந்து கொள்வர்கள். அல்லது போராட்டத்தை அவர்களே செய்யும்படி விட்டு விடலாம், அதன் மூலம் அவர்கள் கொல்லப்படுவதில், நாம் வகிக்கும் மறைமுக பாத்திரத்துக்காக அவர்கள் நம்மை சபிக்கும்படி விட்டு விடலாம். ஆனால், இங்குள்ள யாரும் நமக்கு சாபமிடுவதாக எனக்கு தோன்றியதில்லை.
இங்குள்ள மக்கள், அவர்களது சார்பாக நமது உயிரை பணயம் வைக்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, நமக்கு போதுமான வசதிகள் செய்து தருவதற்கும், உடல்நிலையைப் பற்றியும் அதிக கரிசனம் செலுத்துகிறார்கள். குறைந்தபட்சம் எனது அனுபவம் அதுதான். துப்பாக்கிச் சூட்டுக்கும், வெடிகுண்டு வெடிப்புகளுக்கும் மத்தியில் மக்கள் எனக்கு நிறைய தேநீரும் பிஸ்கட்டுகளும் தர முயற்சிக்கிறார்கள்.
நான் உன்னை நேசிக்கிறேன்.
ரச்சேல்.
_________________
(ரச்சேலின் தந்தை ரச்சேலுக்கு எழுதிய மின்னஞ்சல்)
மார்ச் 11, 2003
ரச்சேல்,
உனக்கு கடிதம் எழுதுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் உன்னைப் பற்றி நினைக்காமல் இருப்பது முடியாத விஷயமாக இருக்கிறது. எனவே, நான் கடிதம் எழுதாவிட்டாலும், நண்பர்களுடன் சாப்பிடும் போது உன்னைப் பற்றிய எனது பயங்களை சொல்லிச்சொல்லி அவர்களை சலிப்படைய வைக்கிறேன்.. உன்னை நினைத்து நான் பயப்படுகிறேன். அதற்கு காரணமும் இருப்பதாக கருதுகிறேன். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஆனால், டான் ரெம்ஃபர்ட் சொல்வது போல : நான் இன்னொருவரின் மகளை நினைத்து இவ்வாறு பெருமைப்படுவதைத்தான் விரும்புவேன். அப்பாக்கள் அப்படித்தான். நமது குழந்தைகள், அவர்களுக்கு எவ்வளவு வயதாகியிருந்தாலும், அவர்கள் எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு நல்லது செய்து கொண்டிருந்தாலும், இந்த அளவு அச்சுறுத்தலை எதிர் கொள்வதையும், அல்லது இந்த அளவு துயரங்களை பார்ப்பதையும் கூட விரும்பாதவர்களாகத்தான் அப்பாக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.
நான் இப்படி மணலில் தலையை புதைத்துக் கொள்வது தவறு என்று நீ சொல்லலாம் (சொல்லியிருக்கிறாய்), ஆனால், நான் உன் தலையை மணலில் புதைத்து விட முயற்சிக்கிறேன், அது வேறு விஷயம். மாற்ற முடியாமல் என்னில் புதைந்திருப்பது. இதைப் பொறுத்த வரை மாற்றிக் கொள்ள முடியாதது.
நான் உன்னை நேசிக்கிறேன், கவனமாக இரு கண்ணே.
அப்பா
(ரச்சேலின் கடைசி மின்னஞ்சல்)
அப்பா,
உனது மின்னஞ்சலுக்கு நன்றி. எனது கடிதங்கள் மூலம் அம்மாவிடம் பிரச்சாரம் செய்வதை எல்லாம் அவள் உன்னிடம் சொல்லி விடத்தான் செய்கிறாள் என்று நினைத்து உன்னை முற்றிலும் புறக்கணிக்கிறேனோ என்று சில சமயம் யோசித்திருக்கிறேன்.
என்னைப் பற்றி பெரிதாக கவலைப்படாதீர்கள். இப்போதைக்கு நாங்கள் சரியாக செயல்படுகிறோமா என்பதைப் பற்றித்தான் எனக்கு மிகப்பெரிய கவலை. எனக்கு குறிப்பான அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக நான் இன்னும் உணரவில்லை. இராணுவம் சுடுவதும், வீடுகளை இடிப்பதுமான ஊடுருவல்களை வடக்கில் நடத்துவதாலோ என்னவோ ராஃபா சமீபகாலமாக அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த வாரத்தில் எனக்குத் தெரிந்த வரை ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது, ஆனால் பெரிய அளவில் எந்த ஊடுருவலும் இதுவரை இல்லை. ஆனால், இராக்கில் போர் மூண்டால் நிலைமை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது.
உங்களது போர் எதிர்ப்பு பணிகளை அதிகப்படுத்துவதற்கு நன்றி. அதைச் செய்வது எளிதானதில்லை என்று எனக்கு புரிகிறது, குறிப்பாக காசாவில் நான் அதை செய்வதை செய்வதை விட அமெரிக்காவில் நீங்கள் அதை செய்வது இன்னும் பல மடங்கு சிரமம் என்று தெரிகிறது. சார்லட்டில் உள்ள பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு நான் மிக ஆர்வமாக இருக்கிறேன். அந்த நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
இங்கிருந்து போன பிறகு என்ன செய்யப் போகிறேன் என்றும் எப்போது இங்கிருந்து புறப்படுவது என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைய நிதி நிலவரப்படி ஜூன் வரை தங்கமுடியும் என்று நினைக்கிறேன்.
உண்மையிலேயே ஒலிம்பியாவுக்கு திரும்பிப்போக எனக்கு விருப்பமில்லை. ஒதுக்கி வைத்திருக்கும் என்னுடைய பொருட்களை எடுத்து சரிசெய்யவும், இங்கு எனது அனுபவங்களைப் பற்றி பேசவும் நான் அங்கு வர வேண்டியிருக்கிறது. ஆனால், அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி வந்து விட்ட பிறகு, இந்த கரையின் இந்த பக்கம் இன்னும் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்ற உறுதியாக விரும்புகிறேன். ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வேலை தேடலாம் என்று திட்டமிடுகிறேன். சீரியசாக அரபு மொழியை கற்றுக் கொள்வதில் இறங்க வேண்டும்.
திரும்பிப் போகும் வழியில் ஸ்வீடனுக்கு போவதற்கு ஒரு அழைப்பு கிடைத்திருக்கிறது. அதை குறைந்த செலவிலேயே செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ராஃபாவை விட்டு கிளம்பும் போது திரும்பி வருவதற்கான தெளிவான திட்டத்துடன் போக விரும்புகிறேன்.
எங்கள் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவர் நாளை புறப்படுகிறார். அவர் இங்கு இருக்கும் மக்களிடம் விடை பெறுவதை பார்க்கும் போது எனக்கு அது எவ்வளவு சிரமமாக இருக்கப் போகிறது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் மக்கள் எங்களைப் போல கிளம்பி போய் விட முடியாது. அது விடைபெறுதலை இன்னும் சிக்கலாக்குகிறது. நாங்கள் திரும்பி வரும் போது தாம் உயிரோடு இருப்போமா என்று கூட தெரியாத நிலை குறித்து அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.
இந்த இடத்துக்கு நினைத்த போது எளிதாக வந்து போக முடியக் கூடிய நான், ஆனால் திரும்பிப் போகாமல் இருக்கிறேன் என்ற குற்றவுணர்ச்சியுடன் நான் வாழ முடியாது. இடங்களுடன் நம்மை இணைத்துக் கொள்வது முக்கியமானது என்று கருதுகிறேன். எனவே, ஒரு ஆண்டுக்குள் திரும்பி வருவதற்கான திட்டம் போட்டுக் கொள்வேன்.
என்வசம் இருக்கும் சாத்தியங்களின்படி போகும் வழியில் ஒரு சிலவாரங்களுக்கு ஸ்வீடன் போய் வருவேன் என்று நினைக்கிறேன். என்னுடைய பாரிசிலிருந்து ஸ்வீடன் போய் வர சுமார் 150 டாலர்களில் பயணச்சீட்டுகளை மாற்றி ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.
பிரான்சில் உள்ள சொந்தக்காரர்களை போய் பார்க்க வேண்டும்தான், ஆனால் அதை நான் செய்யப் போவதில்லை. அப்படி போனால், அவர்களுடன் தங்கியிருக்கும் நாட்கள் முழுவதும் சிடுசிடுவென்றுதான் இருக்க முடியும். அவர்களுக்கு என்னால் எந்த உற்சாகமும் டைக்கப் போவதில்லை. மேலும் இன்றைய நிலையில் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்குள் குதிப்பது போன்றது அது. அப்படி போனால், பெருமளவு வர்க்க குற்றவுணர்வு என்னிடம் இருந்து கொண்டே இருக்கும்.
என் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
உங்களை மிக மிக நேசிக்கிறேன்.
நான் ஹவாயி என்ற பெரிய தீவுக்கு நெசவு கற்றுக்கொள்ள அல்லது ஏதோ விடுமுறை முகாமுக்கு போயிருப்பது போல நினைத்துக்கொண்டு எனக்கு நீங்கள் கடிதம் எழுத விரும்பினால் எழுதலாம். இங்கு வாழ்க்கையை சகித்துக் கொள்ள நான் செய்யும் ஒரு விஷயம், நான் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்திலோ அல்லது மிகேல் ஜே ஃபாக்ஸ் நடிக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியிலோ இருப்பதாக கற்பனை செய்து கொள்வதுதான்.
அதனால், ஏதாவது கற்பனை செய்து கொள்ள தயங்காதீர்கள், நானும் அதனோடு ஒத்து போக தயார்.
அன்புகள் அப்பா,
ரச்சேல்
_________________________
தமிழாக்கம்: செழியன்.
நன்றி : theguardian.com
“பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 31.07.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், இரயில் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
முந்தைய பகுதிகள்
ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி
ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !
ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்