Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 645

இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !

2

சுமார் 80 லட்சம் மக்களைக் கொண்ட இசுரேல் ஆக்கிரமித்திருக்கும்  காசா முனையில் வாழும் 18 லட்சம் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. மூன்று வார தாக்குதல்களில் 1300-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்திருக்கிறது.

பள்ளி வகுப்பறை
அபு ஹூசைன் ஐ.நா பள்ளியில் உடல் உறுப்புகளை பொறுக்கும் பாலஸ்தீனர் (படம் : நன்றி theguardian.com)

காசா முனையில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்ற இசுரேலின் எச்சரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியுள்ள அகதிகள் முகாம்களுக்கு பல பாலஸ்தீன குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. கடந்த மூன்று வாரங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இவ்வாறு சொந்த ஊரிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே ஏதுமற்ற அவர்களது போர்க்கால வாழ்க்கையை இந்த இடப்பெயர்வு இன்னும் மோசமாக தாக்கியிருக்கிறது.

காசாவில் உள்ள ஜபாலியா பெண்கள் தொடக்கப் பள்ளிக் கட்டிடத்தில் சுமார் 3,300 பேர் தங்கியிருக்கின்றனர். அந்தப் பள்ளியின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வகுப்பறை எண் 1-ல் பெண்கள், குழந்தைகள் அடங்கிய சுமார் 40 பேர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதிகாலை பிரார்த்தனை அழைப்புக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வகுப்பறையின் சுவற்றை பிளந்து கொண்டு ஒரு பீரங்கி குண்டு பாய்ந்திருக்கிறது. உள்ளே தூங்கிக்  கொண்டிருந்தவர்கள் மீது குண்டு சிதறல்கள் மழையாய் சிதற, அவர்களது ரத்தம் சுவர்களையும், தரையையும் நனைத்தது.

சில  நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு குண்டு அந்த இரண்டு மாடி பள்ளிக் கட்டிடத்தின் கூரையை துளைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் 15 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்தப் பள்ளியில் பொதுமக்களை தங்க வைத்து பராமரிக்கும் பொறுப்பில் இருந்த ஐநா அதிகாரி கலீல் அல் ஹலாபி, தாக்குதல் நடந்த வகுப்பறையை பார்த்த பிறகு “எனது உடல் நடுங்குகிறது. ரத்தச் சிதறலை பார்ப்பதும், குழந்தைகளின் கதறலை கேட்பதும் சகிக்க முடியாததாக இருக்கிறது” என்கிறார்.

வகுப்பறையின் இடிபாடுகளின் மத்தியில் அங்கு புகலிடம் தேடிய மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையின் எச்சமாக ஒரு பந்து, ஒரு வாளி, சில போர்வைகள், உணவு டப்பாக்கள், செருப்புகள் சிதறிக் கிடந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன், “இந்தத் தாக்குதல் கண்டனத்துக்குரியது, நியாயப்படுத்த முடியாது” என்று கூறி, இதற்கு, பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தப் பள்ளி குறித்தும், அங்கு வசிக்கும் அகதிகள் பற்றியும் விபரங்களை இசுரேலுக்கு தொடர்ந்து அளித்து வந்ததாக ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர். எனில் இசுரேலுக்கு கொல்லும் இடங்களை காட்டிக் கொடுத்ததா என்று ஐ.நா பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த கொலைக்கு பொறுப்புடன் பதில் சொல்வது என்பது இசுரேல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்டது. இதுவும் ஐநாவுக்கு தெரியாத ஒன்றல்ல.

வகுப்பறையின் இடிபாடுகள்
தாக்கப்பட்ட வகுப்பறையின் இடிபாடுகளுக்கு மத்தியில் (படம் : நன்றி theguardian.com)

‘இசுரேல் தன்னை காத்துக் கொள்ள காசாவை தாக்குகிறது, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு, ஆயுதங்களை சேமித்து வைக்க காசா முனையில் வீடுகளுக்கு அடியில் சுரங்கங்கள் தோண்டி வைத்திருக்கிறது, பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இசுரேலை தாக்குகிறது.’ என்று ரூபர்ட் முர்டோச்சின் ஃபாக்ஸ் நியூஸ் (நம்ம ஊர் ஸ்டார் விஜய் டிவியின் தாத்தா) போன்ற அமெரிக்க ஆளும் வர்க்க ஊடகங்கள் வெறி கொண்ட முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் இந்துத்துவ கும்பல் இணையத்தில் இத்தகைய பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

2007-ம் ஆண்டு காசா மக்கள் தேர்தலில் ஹமாஸ் அமைப்பை தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தது முதல் இசுரேல் காசாவை பொருளாதார ரீதியாக தண்டித்து வருகிறது. அம்மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும், வணிக சாத்தியங்களையும் முழுவதுமாக ஒழித்துக் கட்டி விட்டு, எகிப்துடன் சேர்ந்து காசாவிற்குள் செல்லும் உணவைக் கூட இத்தனை மக்களுக்கு இத்தனை கலோரி போதும் என்று எண்ணி அனுப்புகிறது.

இந்த மூன்று வார தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் (கொல்லப்பட்ட 1,300 பாலஸ்தீனர்களில் 80% பேர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள்) கொல்லப்பட்டுள்ளனர். மாறாக, அமெரிக்காவும், இந்துத்துவ கூட்டமும் பயங்கரமாக சித்தரிக்கும் ஹமாசின் பதிலடி தாக்குதல்களில் இசுரேல் பொதுமக்கள் 3 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். (இசுரேல் பாலஸ்தீனத்தை தாக்கிய உயிரிழப்பில் 0.3%) தாக்குதல் நடத்தும் இசுரேல் ஆக்கிரமிப்புப் படையினர் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் எனும் அமைப்பு மதவாத அமைப்புத்தான் என்றாலும் இசுரேலே தாக்கி சீர்குலைக்கும் அளவு அவர்களுக்கு பலமேதுமில்லை.

இசுரேலின் நோக்கமே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எந்த குரலும் இனி வரக்கூடாது என்ற கொலைவெறிதான். இல்லை ஹமாஸ் பயங்கரவாதி அமைப்புதான் என்று மல்லுக்கட்டி வாதாடும் கனவான்கள் இசுரேல் போன்று ஹமாசும் 1,300 இசுரேலியர்களை கொலை செய்ய குண்டோ, ஆயுதங்களோ வாங்கி கொடுத்து, கொலை செய்த பிறகு நிரூபிக்க வேண்டும். இதன்றி சும்மா பயங்கரவாதம், பயங்கரவாதம் என்று கூக்குரலிடுவது இசுரேலின் பயங்கரவாதத்தை மறைக்கும் பயங்கரவாதமாகும்.

இசுரேல் படைப்பிரிவு
ஜூலை 28 அன்று காசாவின் மீது தாக்குதல் நடத்தும் இசுரேலி படைப் பிரிவு (படம் : நன்றி rt.com)

சென்ற வாரம் பெயிட் ஹானூன் பகுதியில் இருக்கும் ஒரு ஐநா பாதுகாப்பு பகுதியில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இசுரேல் அறிவித்த 4 மணி நேர போர் நிறுத்தத்தின் போது, தாக்குதல் நடக்காது என்ற நம்பிக்கையில் பொருட்கள் வாங்க கடைகளுக்கு விரைந்த மக்கள் குவிந்திருந்த ஷூஜையா நகர் சந்தையை தாக்கி ஒரு பத்திரிகையாளர் உட்பட 17 பேரை கொன்று 200 பேரை காயப்படுத்தின இசுரேலிய பாதுகாப்பு படைகள்.

அதிகரித்து வரும் இசுரேலின் மூர்க்கமான தாக்குதல் பற்றியும், இசுரேலுக்கு தத்தமது அரசுகள் அளிக்கும் ஆதரவையும் குறித்த மக்களின் கோபத்தை திசை திருப்ப அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாட்டு அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் குழந்தைகளும் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவதை கண்டிக்கின்றனர். அதே நேரம் இரு தரப்பும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிப்படுபவர்களையும் ஒரே தட்டில் வைப்பதோடு, காசாவை ஆக்கிரமிக்கவும், தாக்கவும் இசுரேலுக்கு இருக்கும் உரிமையையும் அங்கீகரிக்கின்றனர்.

ஐநா பாதுகாப்பு சபை, இசுரேல், ஹமாஸ் இருதரப்பும், “ஈத் காலகட்டத்திலும் அதற்கு அப்பாலும் மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறது.

லண்டன் ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பி, “இந்த வன்முறை வட்டம் தாங்க முடியாத துன்பங்களை விளைவித்திருக்கிறது” என்று கூறி “காசாவிலிருந்து வரும் படங்களை பார்க்கும் போது மனம் உடைந்து போகிறது. நாம் கடவுளை நோக்கி கதற வேண்டும். சொர்க்கத்தின் கதவுகளை உடைத்து, அமைதி, நீதி, பாதுகாப்பு இவற்றுக்காக பிரார்த்திக்க வேண்டும். இசுரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு விலை கொடுக்க வேண்டிய, திறந்த மனதுடனான அமைதி தேடல் மட்டும்தான் இன்னும் மோசமான வன்முறையிலிருந்து அப்பாவி மக்களையும் அவர்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்” என்று கடவுள், சொர்க்கம் என்ற மத மோசடிகளோடு, ஆக்கிரமிப்பு குற்றவாளி இசுரேலின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தாக்கப்பட்ட பள்ளி
ஜபாலியா அகதிகள் முகாமில் இசுரேல் படைகளால் தாக்கப்பட்ட ஐ.நா பள்ளியின் வாசலில் கொல்லப்பட்ட கழுதைகளை பார்க்கும் சிறுவன். (படம் : நன்றி theguardian.com)

“ஐக்கிய நாடுகள் அகதிகள் நிவாரண முகாம் மீது குண்டு வீசி தாக்கப்பட்டதை அமெரிக்கா கண்டிக்கிறது. அது குழந்தைகள் உட்பட அப்பாவி பாலஸ்தீனர்களையும், ஐ.நா மனிதாபிமான ஊழியர்களையும் கொன்றிருப்பதாக தகவல் வந்துள்ளன” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக்குழுவின் பத்திரிகை தொடர்பாளர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

‘ஹமாஸ் பள்ளிக் கட்டிடத்தின் அருகாமையில் இருந்து இசுரேலிய படைகளை தாக்கியதால், தாக்குதல் வந்த திசையை நோக்கி இசுரேல் படைகள் சுட்டதால் இது நடந்தது’ என்று இந்த தாக்குதலை நடத்தியது தனது படைகள்தான் என்று இசுரேலே ஏற்றுக் கொண்டாலும் இசுரேலை கண்டிக்க அமெரிக்கா முன்வரவில்லை.

மாறாக, காசா முனை மீது தாக்குதல் நடத்தும் இசுரேலுக்கு கூடுதல் ஆயுதங்கள் கொடுக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை காசா மீது தாக்குதல் நடத்த இசுரேலுக்குத் தேவையான புதிய ஆயுதங்களை வழங்கப் போகிறது. இவற்றில் 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள், 40 மிமீ எறிகுண்டுகள் அடங்கும். இவை இசுரேலில் அமெரிக்கா பராமரித்து வரும் $1 பில்லியன் (ரூ 6,000 கோடி) மதிப்பிலான ஆயுதக் கிடங்கிலிருந்து வழங்கப்படும். இனி இசுரேலின் கொலை விகிதம் அதிகரிக்கும். இதை ரசித்துக் கொண்டே நம்மூர் அம்பிகள் ஹமாசின் பயங்கரவாதத்தை கண்டித்து பிரச்சாரமும் செய்வர்.

இதே அமெரிக்கா தன்னால் வளர்த்து விடப்பட்ட இராக் சர்வாதிகாரி சதாம் உசைன் அண்டைநாடான குவைத்தை ஆக்கிரமித்த போது, மேற்கத்திய நாடுகளின் கூட்டணி அமைத்து, தனது முப்படைகளையும் குவித்து போர் தொடுத்தது. அமெரிக்காவின் படையெடுப்புகளும், அறிக்கை கண்டனங்களும், ஆயுத உதவிகளும், அது சொல்லிக் கொள்ளும், ‘ஜனநாயகம்’, ‘மனிதாபிமானம்’, ‘மனித உரிமைகள்’ போன்ற காரணங்களுக்காக செய்யப்படுபவை அல்ல; அதன் ஏகாதிபத்திய பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள ‘நடுநிலை’ மற்றும் ‘இடதுசாரி’ ஊடகங்களும், அறிஞர்களும் இந்த தாக்குதலின் விளைவாக கொல்லப்படும் குழந்தைகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கண்ணீர் வடிக்கின்றனர். நெஞ்சை உருக்கும் அழிவுகளையும், கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களையும் காட்டி சோககீதம் இசைக்கின்றனர். உலகெங்கும் மக்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றனர்.

அப்பாவி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதையே தனது வளர்ச்சிக்கான உத்தியாக கொண்டிருக்கும் மோடியின் அரசு கூட இருதரப்பும் வன்முறையை கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. இசுரேலையும், நாஜி ஹிட்லரையும் அவர்களது உறுதியான தேசியவாதத்துக்காக விதந்தோதும் பார்ப்பனிய இந்துமதவெறி சித்தாந்தவாதிகள் கூட துன்புறும் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்து பதிவு செய்யலாம்.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக ஏகாதிபத்தியங்களின் ஆதரவோடு இசுரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் இராணுவ ஆக்கிரமிப்பு போர்களையும், பாலஸ்தீன  பகுதிகளில் திட்டமிட்டு அமல்படுத்தி வரும் சட்ட விரோத யூத குடியேற்றங்கள் பற்றியும், யாசர் அராஃபத்தின் பாலஸ்தீன விடுதலை அமைப்பு போன்ற மதசார்பற்ற அமைப்புகளை சீர்குலைத்து பணியவைத்து வீழ்த்தி விடுவதோடு, ஹமாஸ் போன்ற மதவாத அமைப்புகளை திட்டமிட்டு வளர்த்து விடுவதையும் இவர்கள்  மறந்தும் குறிப்பிடுவதில்லை. அமெரிக்கா இசுரேலுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகளையோ அம்பலப்படுத்தி கண்டிப்பதில்லை. மாறாக, ஹமாஸ் எப்படி கொடூரமாக காசா மக்களை சுரண்டுகிறது என்று இசுரேலின் பிரச்சார வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

இப்போதைய மோடி அரசும், இதற்கு முந்தைய காங்கிரசு அரசுகளும் இசுரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது, இசுரேலுடன் பொருளாதார தொடர்புகளை வளர்த்துக் கொள்வது என்று மாறாமல் அதே உறவை தொடர்கின்றனர். அதற்கு முன்பு பெயரளவுக்காவது இசுரேல் ஆக்கிரமிப்பைக் கண்டித்த டிராமா கூட இப்போது இல்லை.

இந்நிலையில் இசுரேலின் பயங்கரவாதம், அதற்கு ஆதரவான அமெரிக்க ஏகாதிபத்தியம், இசுரேலை கோட்பாட்டளவில் ஆதரிக்கும் இந்துத்துவ அமைப்புகளை அம்பலப்படுத்தி கோவை மக்கள்  கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இன்று மாலை 5 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

*பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து’’!

கண்டன ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களே!

  • அமெரிக்க அடியாள் யூதவெறி இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்!
  • இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
  • இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!

ம.க.இ.க – பு.ஜ.தொ.மு

நாள் : 31-07-2014 மாலை 5 மணி
இடம் : செஞ்சிலுவை சங்கம் முன்பு , கோவை.

தலைமை
தோழர்.மணிவண்ணன்
மாவட்ட செயலாளர், ம.க.இ.க

கண்டன உரை:
தோழர்.விளவை இராமசாமி
மாவட்ட செயலாளர் பு.ஜ.தொ.மு

நன்றி உரை:
தோழர்.இராஜன்
மாவட்ட தலைவர் பு.ஜ.தொ.மு

palastine-notice

மேலும் படிக்க

கும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை !

7

ல்வி தனியார்மயத்தின் கொடூர படுகொலைகளில் ஒன்றான கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தஞ்சை முதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 94 குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை விடுதலை செய்து 10 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 51 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளித் தாளாளர் சரஸ்வதி, தலைமையாசிரியை, சத்துணவு அமைப்பாளர்கள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு 5 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பள்ளிக்கு சான்றிதழ் வழங்கிய பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை, அபராதம் வழங்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்
தமது குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாத பெற்றோர், சிறார்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர். (படம் : நன்றி தி இந்து)

3 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 94 குழந்தைகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் 17-18 வயது ஆகியிருக்கும். வாழ வேண்டிய தமது குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாத பெற்றோர், சிறார்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர். படுகாயமடைந்த 18 குழந்தைகள் இப்போதும் உயிர் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது 17 வயதாகும் ராகுல் தீக்காயங்களால் சிதைக்கப்பட்ட கைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். “அப்ப நான், இங்கிலீஷ் மீடியத்துல 3-வது படிச்சிக்கிட்டிருந்தேன். ஷூ, சாக்ஸ், டை எல்லாத்தையும் கழட்டிட்டு மேல கூட்டிப் போய் ஒக்கார வச்சிட்டு, கிரில் கதவப் பூட்டிட்டு டீச்சருங்க எல்லாம் கோயிலுக்குப் போயிட்டாங்க” என்கிறான். “நடந்த கொடுமைக்குக் காரணமா இருந்தவங்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்கணும், இது மாதிரி வேற யாருக்கும் இனிமே நடக்கக் கூடாது” என்கிறான்.

“நான் எங்கயுமே வெளியே போக முடியாது. இந்தப் புள்ளக்கி என்ன ஆச்சி? கை ஏன் இப்படி இருக்குன்னு கேக்குறாங்க” என்று சொல்லும் அப்போது 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கௌசல்யா, “நான் நெறயப் படிக்கணும்னு ஆசப்படுறேன். ஆனா, எங்க அப்பா கூலி வேலதான் பாக்குறாங்க. அதனால, அரசாங்கம்தான் என்னப் படிக்க வெக்கணும்” என்று கேட்கிறாள். குழந்தைகளை படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் கை கழுவ வேண்டும் என்பதுதான் நாட்டின் மிகச்சிறந்த ‘அறிஞர்’களின், நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை என்பது அவள் உலகில் இன்னும் தெரியாத ஒன்று.

“அத மறக்க நெனச்சாலும் முடியல. சின்னதா ஃபயர் சர்வீஸ் சத்தம் கேட்டாக் கூட ஸ்கூலோட ஞாபகம்தான் வருது” என்று சொல்லும் பா.விஜய், “கேஸ் நடந்தப்ப கும்பகோணத்துல அப்படி ஒரு ஸ்கூலே இல்ல. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படி கேப்பாங்களா? எங்கள பேசவே விடல. இதுல பாதிக்கப்பட்ட 18 பேரு உயிரோடதான் இருக்கோம்” என்று வேதனையோடு கூறுகிறான்.

கும்பகோணம் பள்ளி
நடுத்தர வர்க்கத்தினரோ முறையான கட்டிடம், பாதுகாப்பான ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பிய கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை குற்றவாளியாக்குகின்றனர்.

விபத்து குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த சம்பத் கமிஷன் நடந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று முடிவு செய்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ‘இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம், காயம் அடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 50,000, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீட்டு வசதி பட்டா’ என்று ஏற்கனவே வழங்கி விட்டதாக தனது கருணையை முடித்துக் கொண்டது.

சரியான இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் 2010-ல் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுகுழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் விசாரணை குழு அமைக்காமல் மோசடி செய்து வந்தது தமிழக அரசு. அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ அரசு. அதன் மீதான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கே பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “ஓலைக் கொட்டகையில் பள்ளி செயல்பட்டதால்தான் கும்ப கோணம் பள்ளித் தீ விபத்து ஏற்பட்டது என்று வழக்கை மாற்றிவிட்டனர்.” என்று குற்றம் சாட்டுகிறார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் காளியப்பன், “இன்று வரை ஏராளமான பள்ளிக் குழந்தைகள் விதிமீறல், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக அன்றாடம் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை” என்று கூறுகிறார். பத்மா சேஷாத்ரி மாணவர் ரஞ்சன், சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சுருதி, கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் ராம்குமார், நாமக்கல் தனியார் பள்ளியில் அருண்குமார், திருவொற்றியூர் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி மாணவி வைஷ்ணவி என்று கல்வி தனியார் மயம் அடுத்தடுத்து இளம் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

சீயோன் பள்ளி சுருதிபள்ளிக் கல்வியில் லாபவேட்டையை ஊக்குவிக்கும் தனியார் மயத்தை புகுத்தி, அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கும் கொள்கை முடிவெடுத்து, சாதாரண ஏழை மக்களைக் கூட தனியார் கல்வி வியாபாரிகளின் லாப வேட்டை தோற்றுவிக்கும் பேரழிவை நோக்கித் தள்ளிய மத்திய, மாநில அரசுகளை ஊடகங்களோ இல்லை கட்சிகளோ அவ்வளவு ஏன் மக்களால் கருத்தளவில் கூட குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை. சொல்லப் போனால் கல்வியில் தனியார்மயமே சரி, சாத்தியமென்பதை ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் உறுதிபட நிலைநாட்டியிருக்கின்றன.

குறுகலான ஒரு கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 700 மாணவ–மாணவிகள் படித்து வந்தது, அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது இவற்றை சுட்டிக் காட்டும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரோ முறையான கட்டிடம், பாதுகாப்பான ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பிய கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை குற்றவாளியாக்குகின்றனர். தமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த வசதிகள் எல்லாம் இருப்பதாக சமாதானப்பட்டுக் கொள்கின்றனர்.

இவ்வாறாக, இந்த தீவிபத்துக்கு காரணமாக இருந்த முதன்மை குற்றவாளிகளை சம்பவத்துக்கு முன்னரே சமூகத்தின் கூட்டு மனசாட்சி விடுவித்து விட்ட பிறகு அடுத்தடுத்த நிலையில் இருந்த குற்றவாளிகள் மீது சட்டம் தனது கடமையைச் செய்ய ஆரம்பித்தது.

மாநில தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிச்சாமி போன்ற உயர் அதிகாரிகள் முதல், கல்வித் துறையின் கீழ்நிலை ஊழியர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள், சத்துணவு பொறுப்பாளர், சமையல்காரர் என்று 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பெற்றோர்
நீதிக்கு காத்திருக்கும் பெற்றோர் (படம் : நன்றி தி இந்து)

கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 501 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ஆம் தேதி மாற்றப்பட்டது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு, பதவி அந்தஸ்து, பண பலம், இவற்றின் மூலம் அவர்கள் அமர்த்த முடிகிற வழக்கறிஞர்கள் இந்த அடிப்படையில் இந்திய நீதித்துறையின் நீதி என்ற விசித்திரமான ஜந்து வாலை ஆட்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் மாநில தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிச்சாமி ஆகிய மூவரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் தமிழக அரசின் பரிந்துரைப்படி அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விபத்து என்று வந்த பிறகு அரசின் உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டிய தேவை அரசுக்கு இருப்பதால்தான் இது நடந்ததே அன்றி அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல.

இதை அரசின் எல்லாத் துறைகளிலும் பார்க்கலாம். லாக்கப் கொலைக்காக உயர் போலிசு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் கீழ் நிலை போலிசுக்காரர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது போன்று, அல்லது ஏதாவது பெரும் ஊழல் வழக்கோ இல்லை வேறு பிரச்சினைகளிலோ மாட்டிக் கொண்டால் அதிகார வர்க்கத்தின் ஒரு நபரை மட்டும் பலிகடாவாக கொடுத்து மற்றவர் தப்பிவிடுவார்கள். இதுதான் அரசின் தாரக மந்திரம். அது கும்பகோணம் தீ விபத்து வழக்கிலும் ஒளிவு மறைவின்றி நடந்திருக்கிறது. தொடக்கப்பள்ளி கல்வி அதிகாரிகளின் வேலைகளை பார்த்து ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகள் இங்கே வேண்டுமென்றே தப்பவைக்கப்பட்டிருக்கின்றனர். கீழ் நிலையில் வாங்கப்படும் லஞ்சம் மேல் நிலை வரைக்கும் பங்கு வைக்கப்படும் சமத்துவம் இங்கு இல்லை.

நினைவகம்
குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக் கழித்த, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து நீதிமன்ற படியேறும் தமிழக அரசு அவர்களது நினைவாக கும்பகோணத்தில் ஒரு நினைவகத்தை கட்டியிருக்கிறது.

கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிறகுதான் உச்சநீதிமன்றம் “என்னது இன்னும் வழக்கு முடியவில்லையா?” என்று ஏதோ அதிர்ச்சியடைந்தது போல கேட்டது. என்ன இருந்தாலும், நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை பெயரளவுக்காவது தக்க வைக்க வேண்டுமல்லவா? இந்த வழக்கை வேகமாக நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 2012 செப்டம்பர் 12 அன்று தஞ்சாவூர் முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

“முதலில் இந்த வழக்கில் 3 பேரை விடுவித்தனர். இன்று 11 பேரை விடுவித்துள்ளனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிகளை விடுவிப்பதை காட்டிலும் மொத்தமாக அனைவரையும் விடுவித்து விடுங்கள். குழந்தைகளை இழந்த நாங்கள் இவர்களுக்கு பதிலாக சிறை தண்டனையையும் சேர்த்து அனுபவித்துக் கொள்கிறோம்” என அழுகின்றனர் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்.

குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக் கழித்த, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து நீதிமன்ற படியேறும் தமிழக அரசு அவர்களது நினைவாக கும்பகோணத்தில் ஒரு நினைவகத்தை கட்டியிருக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகள் அந்த நினைவகத்தில் புகைப்படங்களாகவும், ராகுல், கௌசல்யா, விஜய் உள்ளிட்ட 18 குழந்தைகள் தமது வாழ்க்கை போராட்டத்தினூடாகவும் தனியார் லாபவேட்டையின் ரத்தவெறியை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் மூலம் கல்வி தனியார்மயத்தில் இருக்கிறது. இந்த அநீதியை முறியடிக்கும் வரை கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இப்போது நீதி வழங்கியதாக யாரும் கருதிக் கொண்டால் அதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் படிக்க

மோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்!

45

பாஜக கருத்து கந்தசாமி – காயத்ரிக்களுக்கு சில டிப்சுகள் !

தந்திடிவி விவாதம்லகின் மிகமோசமான வேலைகள் பட்டியலில் அரசருக்கு வைத்தியம் பார்ப்பதும் அடக்கம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை அரண்மனை வைத்தியர்கள் அரசருக்கு வந்த வியாதியை அவர் மலத்தை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பார்களாம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு வேலையை செய்யும்படி ஆலோசனை சொன்னார் தோழர் ஒருவர். அதாவது தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் பாஜக ஆட்களின் உரை”வீச்சத்தை” பார்த்து அதைப்பற்றி பதிவெழுத வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை.

அப்படி தொடர்ந்து பார்க்கையில்தான் காவி கட்சிக்காரர்கள் அனுபவிக்கும் கஷ்டம் தெரிந்தது. சிறுவனாக இருந்தபோது படித்த சிறுவர்மலர் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. திரேதாயுகத்தில் ஊர்மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள். கலியுகம் பிறந்த உடனே அவர்கள் எல்லோரும் சுயநலக்காரர்களாகவும் கபடதாரிகளாகவும் மாறுவார்கள். கதையின் முடிவில் ”கலியுகத்தில் மனிதன் எப்படி மாறுகிறான், பார்த்தீர்களா குழந்தைகளே” எனும் அறிவுரையும் இருந்தது. கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைக்கு பாஜககாரர்கள் வந்து அறுபது நாளாகிறது.

ஜசோதாபென் மணாளன் ஆட்சிக்கு வரும் முன்னால் இவர்கள் பேச்சில் இருந்த ‘வீரம்’ என்ன! ஏழை மக்கள் மீதான ‘அக்கறை’ என்ன!! ஆனால் புதிய ஆட்சி வந்த பத்து நாளுக்குள் அவை பழங்கதையாகிவிட்டன. முன்பெல்லாம் தந்தி டிவி விவாதங்களில் தொகுப்பாளர் உட்பட பாஜகவுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள். ஆனால் தமிழக அரசியல் அநாதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த பாஜக இன்று விவாதங்களில் அநாதையாக நிற்கிறது. ‘மோடி சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்தான்’ என தேர்தலுக்கு முன்னால் சான்றிதழ் கொடுத்த கும்பலில் ஒருவர்கூட இன்று விவாதத்துக்கு வரும் நிலையில் இல்லை.

இதுகாறும் வாயை வைத்தே வண்டியை ஓட்டிய வைகோவும் தமிழருவியும் பாஜகவை தங்கள் நாவன்மையால் தாங்குவார்கள் என நடுநிலைவாதிகளே எதிர்பார்த்திருந்தார்கள். மோடி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் வைகோவின் ஈழ பிசினசை இருந்த இடம் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இனி அவர் பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது. ஆகவே அவரது நேரடியான ஆதரவுக்குரல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அமையாத சம்மந்தங்களை அமைத்துவைக்கும் தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் நிலை இன்னும் கேவலம். என்னோடு தேர்தலில் மோதத்தயாரா என விஜயகாந்துக்கு சவால்விட்டு யார் குடிகாரன் என தமிழக மக்கள் குழம்பும் நிலைக்கு இறங்கிவிட்டார் மணியன். இனி அவரை விவாதத்துக்கு இறக்கினால் பாஜக நிலை இன்னும் நாறிவிடும்.

செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் எனும் அபார நம்பிக்கையை கொண்டிருக்கும் தமிழனிடம் மோடிக்காக கேன்வாஸ் செய்ய பத்ரி போன்ற முதலாளிகளும், வெங்கடேசன் போன்ற ஆடிட்டர்களும், பானு கோம்ஸ் போன்ற சமூக ஆர்வலர்களும் (எந்த சமூகத்துக்குன்னு கேக்கப்படாது) களமிறக்கப்பட்டார்கள். இப்போதோ, ‘அவன்தான் ஏட்டையா தாலிகட்டின ஒரிஜினல் புருஷன்’ என பாஜக ஆட்களை கைகாட்டிவிட்டு இந்த அறிவுஜீவிகள் ஒதுங்கிவிட்டார்கள். அமித்ஷாவை கட்சித் தலைவராக்கியதால் தான் ஏமாற்றமடைந்து விட்டதாக ஸ்டேட்டஸ் போட்டு உடைந்து போன நடுநிலை பெஞ்சில் சீட் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டார் பத்ரி.

தற்சமயத்துக்கு பாஜக, டிவி விவாதங்களின்போது ஒரு தனிமரமாய் நிற்கிறது. தேர்தலில் சரித்திரம் காணாத அளவுக்கு தோல்வியடைந்த சிபிஎம்காரர்கள் எல்லா விவாதங்களிலும் அடக்கமாட்டாட்டாத சிரிப்போடு அமர்ந்திருக்கிறார்கள். நாட்டையே விற்குமளவுக்கு பெரும்பான்மை பெற்ற பாஜகவினரோ பிரபல சீட்டிங் சாம்பியன் குரங்கு குப்பன் போல உர்ரென்று இருக்கிறார்கள். தோற்றவர்கள் கூடி ஜெயித்தவனை கலாய்க்கும் கொடுமை கலிகாலத்தில் மட்டும்தானே நடக்கும்? இந்த யுகத்தில் கலவரம் செய்வதைவிட விவாதம் செய்வது கடினமாக இருக்கும் என புருஷஸுக்தம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கே அன்னிய நாட்டின் பார்ட்னர்ஷிப்பைத் தேடும் பாஜகவை விவாதங்களில் தனித்துவிடுவது மகாபாபம். உட்காரும் இடத்தில் கட்டி வந்தவனைப் போன்ற அவர்களது உடல்மொழி பார்க்க சகிக்கவில்லை.  ஆகவே விவாதங்களை எப்படி எதிர்கொள்வது என நம்மாலான ஆலோசனை அவர்களுக்கு சொல்வதுதான் நியாயம்…!!!

வழக்கமாக பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புக்கள் மூன்று வழிகளில் விவாதத்தை சந்திக்கின்றன.

  1. சலவை நிலையங்களில் உள்பாவாடை காணாமல்போன பிரச்சனை என்றாலும் அதனை இந்திய கலாச்சாரம் பாரம்பர்யத்துடன் இணைத்து பேசுவது. (இந்தியாவில் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு அப்போதே இருந்தது, அதற்கான ஆதாரம்தான் காமசூத்ரா நூல்- பாலியல் கல்வி குறித்த விவாதம் ஒன்றில் எஸ்.ஆர்.சேகர்)
  2. பாஜகவை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை என பதிலளிப்பது.
  3. கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது. (சாதிக்கொடுமை பற்றி கேள்வி கேட்டால் தங்க நாற்கார சாலையை கொண்டுவந்த்து வாஜ்பாய் என்று பதிலளிப்பது)

இவையல்லாமல் வேறு சில துணை தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்தவன் பேச்சு கேட்காத அளவுக்கு லபலபவென கத்துவது, நிறுத்தாமல் பேசுவது, தொகுப்பாளரை மிரட்டுவது, எல்லா விவாதத்திலும் சிறுபான்மையினரை வம்புக்கு இழுப்பது என்பன அவற்றுள் சில.

இவையெல்லாம் எதிர்கட்சியாக இருந்தவரை போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சியானால் இன்னும் கொஞ்சம் திறமையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பாஜகவினர் விவாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்.

கேனத்தனம் நம் பிறப்புரிமை: எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேனத்தனமாக பேசுங்கள். அதனால் உடன் பேசுபவர்கள் இது என்ன விவாதம் என குழம்ப வேண்டும். ஆனால் அந்த கேனத்தனம் தொகுப்பாளரை கடுப்பாக்கிவிடக்கூடாது. (25 ஜூலை தந்தி டிவி விவாதத்தில் பேசிய பாஜக நாராயணன் இயல்பான கேனத்தனத்தோடும், கேனத்தனமான இயல்போடும் சிறப்பாகப் பேசினார். ரங்கராஜ் பாண்டேவே நிலைகுலைந்து போய் இது போங்காட்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்)

விதிமுறைக்குட்பட்டு திமிராக பேசுங்கள்: பட்ஜெட் விவாதம் ஒன்றில், ”பாஜக தேர்தல் அறிக்கை வருமானவரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என சொல்கிறது. ஆனால் நீங்கள் இரண்டரை லட்சம் வரை மட்டுமே விலக்களித்திருக்கின்றீர்கள்” என கேட்கிறார் தொகுப்பாளர். அதற்கு ராகவன், “ஐந்து லட்சமா உயர்த்துவோம்னுதான் சொன்னோம், என்னைக்குன்னு சொன்னோமா” என பதில் சொன்னார். அடுத்த நாலரை வருசங்களுக்கு எந்தப் பக்கிகளின் தயவும் தேவையில்லை என்பது நிஜம் என்றாலும் இந்த யுக்தியை எல்லா பிரிவு ஆட்களும் பயன்படுத்தக்கூடாது. திமிராக பேசுவதற்கான இரண்டாயிரம் வருட அனுபவப்பாத்தியம் கொண்ட ராகவன் போன்றோர் மட்டும்தான் இதனை செய்ய வேண்டும்.

கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பியுங்கள்: கேள்விகள் என்றாலே பாஜகவுக்கு சிக்கல்தான். ஆகவே கேள்வி ஆரம்பிக்கும்போதே பதிலை சொல்ல ஆரம்பித்தால் தாராளமாக விவாதத்தில் பாதி நேரத்தை காலி செய்துவிடலாம். ஆனால் கேள்வி மோடிக்கு சாதகமாக இருக்கிறதா என கவனமாக பாருங்கள். ஏனென்றால் எல்லா ஊடக முதலாளிகளும் போதிய அளவு கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே சாதகமான கேள்விகள் வர வாய்ப்புக்கள் பலமாக உள்ளது.

தவறிக்கூட புள்ளிவிவரத்தோடு பேசாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரசைவிட பெரிய எதிரி புள்ளிவிவரம்தான். அறிவும் நாணயமும் இல்லாதவன்தான் ஒரு வலதுசாரியாக இருக்க முடியும். ஆகவே புள்ளிவிவரத்தோடு பேசுவது பாஜகவின் தகுதிக்கு மீறிய செயல் மட்டுமல்ல. கொள்கை விரோதமும்கூட. தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.

நிதானமாக ஒருபோதும் விவாதிக்காதீர்கள்: மயிருக்கு வாசம் உண்டா எனும் மொக்கை கேள்விக்கே மயிர் பிளக்கும் வாதங்களை வைத்த மரபு நம் மரபு. நீங்கள் சீரியசாக விவாதிக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் காமெடியாக முடிகின்றன. ஆகவே வாய்ப்பு கிடைக்கையில் உணர்ச்சிவயப்பட்டு பேசி ஆட்டையை கலைத்துவிடுங்கள். தொகுப்பாளர்கள் நியாயமாக நடந்து கொள்வார்களோ என அஞ்ச வேண்டாம். சாய்நாத், ராஜ்தீப் என நாடறிந்த தலைகளையே ராஜினாமா செய்ய வைக்கும் ஆற்றல் பாஜகவுக்கும் அதன் ஸ்பான்சர்களுக்கும் இருக்கிறது.

மேற்சொன்ன ஆலோசனைகளை எளிதாக புரிந்துகொள்ள சாம்பிள் விவாதம் ஒன்றை பார்ப்போம்.

தொகுப்பாளர் : தேர்தலுக்கு முன்னால் தினத்துக்கு மூன்றுமணி நேரமேனும் மோடி பேசிக்கொண்டிருந்தார்.. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மன்மோகன் சிங்கைப்போல மௌனமாகவே இருக்கிறாரே?

பாஜக : கடந்த பத்தாண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வைத்திருக்கிறது. ஆகவே…

தொகு : நான் மோடியின் மௌனம் பற்றி…

பாஜ : அதத்தாங்க நானும் சொல்றேன். அப்போது சூப்பர் பிரதமாரா சோனியா இருந்தார். இப்போது சுயமாக முடிவெடுக்கும் பிரதமர் வந்திருக்கிறார்.

தொகு : நான் சொல்ல வந்தது என்னன்னா…

பாஜ : வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் தங்க நாற்கார சாலைகள் போடப்பட்டது. அதன் காரணமாகவே…

தொகு :அய்யய்யோ போதுங்க, கொள்கை முடிவுகளில் மன்மோகனுக்கும் மோடிக்கும் ஒரு வேறுபாடும் இருப்பதில்லையே??

பாஜ : என்ன செஞ்சாங்கன்னு பார்க்காதீங்க.. யார் செய்யிறான்னு பாருங்க.  பஞ்சபாண்டவர்கள் பொண்டாட்டியை அடமானம் வைத்தார்கள். கௌரவர்கள் அடமானம் வாங்கினார்கள். மனைவியை அடமானம் வைத்ததனால் பாண்டவர்கள் வில்லன்களாகி விடுவார்களா? அப்படியெல்லாம் நம் பாரத தேசத்தின் பாரம்பர்யத்தின் கௌரவத்தை குறைக்கும்படி பேசாதீர்கள். ஹீரோக்கள் தவறு செய்வார்கள் என எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். ஹீரோ செய்வதெல்லாம் சரிதான் என பாசிடிவாக அணுகுங்கள்.

தொகு : அவரு வந்தா வளரும்னு சொன்னீங்க. வந்து அறுபது நாளாகியும் நாடு வளந்த மாதிரி தெரியலையே?

பாஜ : ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் எதையும் மாற்றிவிட முடியாது.

தொகு : ஆனால் ஆம் ஆத்மியின் டெல்லி ஆட்சியை நீங்கள் நாற்பது நாளுக்குள்ளேயே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே?

பாஜ : எல்லா விஷயத்திலும் அகம் புறம் என இரண்டு உண்டு. இலக்கியத்தின் அகநானூறு, புறநானூறு இருக்கிறது. மூலத்தில் உள்மூலம் வெளிமூலம் இருக்கிறது. அதுபோல நாட்டின் வளர்ச்சியும் இப்போது உள் வளர்ச்சியாக இருக்கிறது. அது வெளியே தெரிய சில காலமாகும்.

தொகு : பள்ளிகளில் பாலியல் கல்வி சொல்லித் தருவதற்கு உங்கள் சுகாதார அமைச்சரே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பாஜ : தவறு, ஆபாசமான பாலியல் கல்வியைத்தான் அவர் எதிர்த்திருக்கிறார்.

தொகு : ஆபாசமான பாலியல் கல்வி என்றால் என்ன? அப்படியான கல்வி முறை எங்கேயும் இருப்பதாக தெரியவில்லையே.?

பாஜ : தவறான தகவலை மக்களுக்கு தருகிறீர்கள். ஷகீலா போன்ற நடிகைகளது படங்கள் எல்லாமே பாலியல் விழிப்புணர்வு படங்கள்தானே!! அவற்றைப் பார்த்து பலரும் கெட்டுப்போகிறார்கள். அப்படி யாரும் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதாலேயே அவர் அப்படிச் சொன்னார். சென்ற ஆண்டு இந்த உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டசபையில் ஈடுபட்டபோதுதான் பத்திரிக்கைகளின் அவதூறுக்கு ஆளானார்கள். ஆகவே இவ்விசயத்தில் பாஜக பெரிய தியாகங்களை செய்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தொகு : வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, சமஸ்கிருதத்தை திணிப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன்?

பாஜ : அதனை சமஸ்கிருத திணிப்பு என ஏன் கருதுகிறீர்கள்? இப்போது பெரிய நகரங்களிலும் ஏன் கிராமங்களிலும் கூட திவசம் கொடுக்க அய்யர் கிடைப்பதில்லை. இப்படியே போனால் கருமாதி திவசம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை வந்துவிடும். லட்சக்கணக்கான வருட பாரம்பர்யம் உள்ள இந்து பண்பாடு அழிந்துவிடும். சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் அதில் ஆர்வம் கொள்ளும் பிராமண மாணவர்கள் வேதம் படிப்பார்கள், பிறகு சிறப்பாக கருமாதி, திவசங்கள் நடக்கும். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகும் சூழ்நிலை வந்த பிறகு இந்த செயலின் நியாயம் உங்களுக்கு புரியும். பத்தாண்டு காலம் காத்திருந்தீர்கள் இன்னும் அறுபது மாதங்கள் மட்டும் காத்திருங்கள், அதற்கு பிறகு யாரெல்லாம் மிச்சமிருக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் வளர்ச்சியை அனுபவிப்பார்கள்.

தொகு : தேர்தலுக்கு முன்னால் உங்களை பெரிதும் ஆதரித்தது மிடில் கிளாஸ் மக்கள்தான். ஆனால் ஆட்சியமைத்த பிறகு பெட்ரோல் விலையேற்றம், மானியவிலை சிலிண்டர் குறைப்பதற்கான முயற்சி, இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளை ஒழிப்பது என மிடில்கிளாசை பாதிக்கும் செய்திகள்தானே வருகின்றன.

பாஜ : பாருங்க, ஆண்டவன் நம்புனவங்களைத்தான் சோதிப்பான். இந்திரன், கௌதமன் சம்சாரத்தைத்தானே கையைபிடிச்சு இழுத்தான். சிவபெருமான் ஆல்பர்ட்டுகிட்டயும் அப்துல்லாகிட்டயுமா பிள்ளைக்கறி கேட்டான்? இவ்வளவு ஏன் ஸ்ரீகிருஷ்ணன் ஈவ்டீசிங் பண்ணினது இந்துப் பொண்ணுங்களைத்தானே? ஆகவே பக்தனை சோதிப்பதும் போட்டுத்தள்ளுவதும் பாரத பண்பாட்டிலேயே இருக்கிறது. இது இந்து ஞானமரபின் தொடர்ச்சி, ஆரிய சாம்ராஜ்யத்தின் எழுச்சி.

thanthi-tv-2தொகு : தமிழகத்திற்கு மிகக்குறைவான அளவுக்கே ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அறுநூறு கோடி திட்டமதிப்பு கொண்ட வேலைக்கு ஒருகோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் கி.பி 2614-ல்தான் பணிகள் முடியுமா?

பாஜ : மக்கள் நாங்கள் நினைப்பதை செயல்படுத்தத்தான் தனி மெஜாரிட்டி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே திட்டத்தை எப்போது முடிப்பது என்பதை நாங்கள் முடிவெடுத்துக் கொள்வோம். அதை கிபி 2600-ல் முடிப்பதா அல்லது நாப்பி 2614 -ல் முடிப்பதா என்பதை கட்சி தீர்மானிக்கும் (கி.பி – கிருஸ்துவுக்குப் பின் ந.பி = நமோவுக்கு பின்). (குறிப்பு : இது ராகவன் வகையறாக்களுக்கு மட்டும்).

தொகு : எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் கொடுக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு கிராமத்துக்கு எட்டாயிரம் ரூபாய் வருகிறது. இதில் எப்படி தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியும்?

பாஜ : கர்நாடகாவில் சென்ற ஆண்டு மழையில்லாதபோது பாஜக அரசு எல்லா ஊரிலும் மழை வேண்டி யாகங்கள் செய்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு மேட்டூர் அணை நிரம்புகிறது. ஆகவே தடையற்ற மின்சாரம் வேண்டி கிராமங்கள்தோறும் யாகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் தாராளமாக போதும்.

தொகு : ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் இன்னும் 5 ஆண்டுகளில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என செய்திகள் வருகின்றன. இது மக்களை பாதிக்கும் முடிவில்லையா?

பாஜ : ஏன் ஏழைகள் ஏசி ரயிலில் போகக்கூடாதா? சாதாரண மக்களும் ஏசி கோச்சில் பயணிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தொகு : ஈழத்தமிழர் பிரச்சனையில் உங்கள் அரசும் கங்கிரஸ் நிலைப்பாட்டைத்தானே தொடருகிறது, ஐநா விசாரணையை எதிர்ப்பதாக அரசு தெளிவாக அறிவித்திருக்கிறதே?

பாஜ : இவ்வளவு பேசும் நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்??

தொகு : இது என்ன கேள்வி சார்? ஒரு தொகுப்பாளர் என்ன செய்துவிட முடியும்? செய்யும் காரியங்களை விமர்சனம்தானே செய்ய முடியும்?

பாஜ :  எதையும் செய்ய முடியாத உங்களுக்கு பாஜகவைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. ஈழத்தமிழருக்காக தன் வாழ்வையே அர்பணித்த நெடுமாறனே எங்களை விமர்சனம் செய்யவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்து பேசுங்கள். குறைந்தபட்சம் சன் டிவி வீரபாண்டியனுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்தாவது பேசுங்கள்.

தொகு : உரமானியம் குறைக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் இந்த பட்ஜெட்டில் வந்திருக்கிறதே?

பாஜ : பூச்சி மருந்து விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. உரம் விவசாயிகளுக்கு மட்டும் பயனளிப்பது. ஆனால் பூச்சி மருந்து குடித்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக பயனளிக்கும். மேலும் உரவிலை உயர்ந்தால்தான் விவசாயிகள் நம் பாரம்பர்ய இயற்கை விவசாயத்துக்கு திரும்புவார்கள்.

தொகு : மரபணு மாற்ற பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..

பாஜ : பழைய முறையில் விவசாயம் செய்தால் நாடு என்றைக்கு வல்லரசாவது?? அதனால் நவீன முறை விவசாயத்தை வளர்க்கும் பொருட்டு இம்முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.

தொகு : இப்போதுதான் நீங்கள் பாரம்பர்ய முறை விவசாயத்தை வளர்க்க உரமானியத்தை வெட்டப்படப்போவதாக சொன்னீர்கள். அடுத்த நிமிடமே நவீன விவசாயத்தை ஊக்குவிப்போம் என்கிறீர்கள், எதுதான் உங்கள் நிலைப்பாடு?

பாஜ : ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய மக்களையே கொலை செய்கிறார்கள். அதனை இங்குள்ள முஸ்லீம்கள் கண்டிப்பதில்லை. மேலும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கார சாலைகளால்தான்..

தொகு : அய்யய்யோ.. சார் நிகழ்சியை முடிச்சுக்கலாம். உங்க இறுதி கருத்தை சொல்லுங்கள்.

பாஜ : இறுதி கருத்தை பிரபல சமஸ்கிருத கவிஞர் நபும்சகன்  கவிதையோடு முடிக்கிறேன்.

“ மோடியின் கால்கள்
பின்னால் உதைத்துவிட்டதே
என வருந்தாதே.
விழுந்த உன்னை
தொட்டுத்தூக்க
மோடியின் கைகள்
நிச்சயம் வரும்.
நம்பு, நம்பிக்கைதான் வாழ்க்கை”

–    வில்லவன்

ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?

2

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் ஒரு ஞாயிறு மதியம் சென்றோம். நுழைந்த உடனேயே வரிசையாக ஈய்ச்சர் மினி லாரிகள் வரிசையாக நிற்பதை பார்க்க முடிந்தது. ஓட்டுநர்கள் பலரும் ஒன்றாக மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஈய்ச்சர் மினி லாரி
ஈய்ச்சர் மினி லாரி

அவர்களில் முதலில் எதிர்ப்பட்டவரை சந்தித்தோம். அவருக்கு சொந்த ஊர் திருத்தணி அருகில். வயது 47 என்று அவர் சொன்னாலும் 60 வயது ஆனவர் போன்ற முதுமை அவரிடம் தென்பட்டது. ”தினசரி பதிவா வேல பாக்குறேன் சார். 600 ரூபா சம்பளம், 12 மணி நேரம் வேல.. இப்போ வாரத்துல மூணு நாள்தான் வேல வருது. வேல இல்லாத அன்னிக்கு 200 ரூபா சம்பளம் கிடைக்கும் சார்” என்றார். அவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சொந்த ஊரில் தறி போட்டுக் கொடுத்திருக்கிறார். ”நீங்க ஏன் அந்த வேலைய பாக்காம லாரி ஓட்ட வந்தீங்க” எனக் கேட்டதற்கு, ”அப்போல்லாம் பவர் லூம் வரல சார். இருந்திருந்தா இங்க வந்திருக்க மாட்டேன். அப்போலாம் கையால செய்யணும் சார். அது நமக்கு வரல” என்றார். ஈய்ச்சர் வண்டியிலேயே இரவு நேரங்களில் தங்கிவிடும் இவர் குளிக்க, காலைக்கடன் முடிக்க லோடு ஏற்றப் போகும் கம்பெனிகளின் கழிப்பறைகளையே பயன்படுத்திக் கொள்கிறாராம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவாராம்.

அவரிடமிருந்து விடைபெற்று ஈய்ச்சர் லாரி உரிமையாளர்களை சந்திக்கலாம் என அவர்களது ஸ்டாண்டிற்கு சென்றோம். எல்லோருமே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். மதுரையை சேர்ந்த முருகன் (வயது 42), முன்னர் 12 லாரிகள் வைத்திருந்த இவர் தற்போது மூன்று லாரிக்குதான் சொந்தக்காரர். பி.ஏ பட்டதாரியான அவர் 1987-ல் தனியார் நிறுவன வேலையை விட லாரி சொந்தமாக வைத்து ஓட்டினால் லாபம் அதிகம் எனக் கருதி ரூ.30 ஆயிரம் முதலீட்டில் பழைய ராணுவ லாரி ஒன்றை வாங்கி ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். அதில் சம்பாதித்து பல பழைய லாரிகளை வாங்கி, அதற்கு சில ஓட்டுநர்களை அமர்த்தி வேலை கொடுத்திருக்கிறார். அதற்கு ஒரு ஆபீசையும் வாடகைக்கும் அமர்த்தியிருந்திருக்கிறார்.

2005-ல் அவரது அண்ணன் மகளது திருமண செலவுக்காக முதல் லாரியை விற்கத் துவங்கியது முதல் அடுத்தடுத்த ஆண்டுகளில் லோடு முறையாக கம்பெனிகளில் இருந்து கிடைக்காமல் போகவே வரிசையாக ஒவ்வொன்றாக விற்கத் துவங்கினார். இப்போது அவரும் ஒரு லாரி ஓட்டுநர் தான், இன்னொரு ஓட்டுநர் அவரது தம்பி. பழைய லாரி ஆபீசை இரு ஆண்டுகளாக குளிர்பானக் கடையாக மாற்றி அதையும் அண்ணன் தம்பி இருவரும் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கின்றனர். கூடவே அவர்களது மனைவியரும் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்றாம்.”ஒருவேளை இந்தத் தொழிலில் இனி ஈடுபட்டால் வாழவே முடியாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, ”அதுக்குதான் கட வச்சிருக்கேன்..” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

ஈய்ச்சர் மினி லாரி
”வாரத்துல மூணு நாளு லோடு கெடைக்கும்.. ஒண்ணும் இல்லாம இருக்கதால தான் ஞாயிற்றுக்கெழம கூட ஏதாச்சும் லோடு கெடைக்காதான்னு பாத்துட்டு இருக்கோம்”

35 வயதாகும் அவரை 2003 முதல் 2008 வரை ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் அந்த நிறுவனம் தினசரி அவருக்கு 900 ரூபாய் வாடகை தந்திருக்கிறது. அம்பத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு தினசரி லோடு எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்த சரக்கை இறக்கி வைக்கும் வேலையிலும் இவர் ஈடுபட வேண்டும். இதில் தினசரி டீசலுக்கு மட்டும் அப்போது 400 முதல் 600 ரூபாய் வரை செலவாகுமாம். 12 மணி நேரம் என்ற நேர வரையறை எல்லாம் வேலையில் அவருக்கு கிடையாதாம். அந்த ஐந்தாண்டுகளில் அதிகமான வேலை நேரத்தால் சரியாக தூக்கம் இல்லாமல் போய் இப்போது அவருக்கு கிட்டப்பார்வை பிரச்சினை அவருக்கு வந்து விட்டது. இப்போதைய பொருளாதார நிலைமையால் கண்ணாடி கூட வாங்க இயலவில்லை. ஆனால் தான் வாங்கியிருப்பதாகவும், வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும் சொல்லிக் கொண்டார்.

”நான் சரியா படிக்கல.. அந்த மேனேஜரு பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கான்.. தெரிஞ்ச பையன்தான் சார். ஸ்டாண்டுல வண்டிய விட்டா தெனமும் வேல வருமான்னு தெரியாது.. அங்கேன்னா தெனமும் வேல.. அப்டியே நம்மள காண்டிராக்டா பெர்மனண்டா வச்சுக்குவாங்கனு பார்த்தேன். கடசில கழட்டி விட்டுட்டாங்க சார்..” என்றார். ”வாரத்துல மூணு நாளு லோடு கெடைக்கும்.. ஒண்ணும் இல்லாம இருக்கதால தான் ஞாயிற்றுக்கெழம கூட ஏதாச்சும் லோடு கெடைக்காதான்னு பாத்துட்டு இருக்கோம்” என்றவரிடம் இயலாமை துலக்கமாக கண்ணில் தெரிந்தது.

”நீங்க புது வண்டி வாங்குனீங்களா ?” என்று கேட்ட போது, ”என்னா சார் நீங்க ! புது வண்டி பதினோரு லட்சம் சார்.. கடசில சேட்டுட்ட வட்டியோட கட்டி முடிச்சா இருபது லட்சம் கட்டணும் சார்.. மாசா மாசம் 33 ஆயிரம் கட்டணும். தெனமும் நமக்கு டீசல் போக கையில நிக்கதே 800 ரூபாதான். அதுவும் இப்போ வாரத்துல வேல மூணு நாளுதான். மாசத்துக்கு பத்தாயிரம் கூட தேறாது.. நீங்க வேற” என்று வெறுப்பாக கூறிய அவர் பழைய வண்டியை சேட்டு மூலமாக வாங்கி இன்னும் வட்டி கட்டி வருகிறார். அநியாய வட்டிதான் பெரும்பாலும் இவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

மகேந்திரனின் நண்பர் ஒருவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். முப்பது வயது நிரம்பிய அவர் சில ஆண்டுகளுக்கு முன் வட்டிக்கடை சேட்டு மூலம் சில பத்தாயிரத்தில் ஒரு பழைய ஈய்ச்சர் வண்டி வாங்குகிறார். முறையாக வட்டிப் பணத்தை மாதம்தோறும் இவர் தந்துவிடுவதை பார்த்த சேட்டு இன்னும் பணம் தந்து வண்டிகளின் எண்ணிக்கையை பெருக்க சொல்லுகிறான். அவனுக்கும் அப்போதுதானே நல்ல வருமானம் கிடைக்கும். இவரும் அப்படியே செய்தார்.

ஈய்ச்சர் மினி லாரி
முறையாக வட்டிப் பணத்தை மாதம்தோறும் இவர் தந்துவிடுவதை பார்த்த சேட்டு இன்னும் பணம் தந்து வண்டிகளின் எண்ணிக்கையை பெருக்க சொல்லுகிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன் வந்த பொருளாதார மந்தம் அவரது தொழிலை இப்போது ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. அவரிடம் வேலை பார்த்த ஓட்டுநர்கள் பலர் வேறு வேலைகளுக்கும், ஊர்களுக்கும் சென்று விட்டனர். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த அளவு எடை கொண்ட பொருட்களை (சுமார் 8 முதல் 10 டன் வரை) வேறு மாநிலங்களுக்கு ஈய்ச்சர் வண்டி மூலமே எடுத்துச் செல்லும் தொழிலை செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். ஒருசில மாதங்களிலேயே அதற்கும் சாத்தியமில்லாத அளவுக்கு உற்பத்தித் துறை விழுந்து விட்டது. இப்போது சிஐடியு ஸ்டாண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். தொழில் நட்டமானதற்கு தனது தவறான, கூடா நட்புகள் தான் காரணம் என்று வருத்தப்பட்டார் அந்த இளைஞர். இப்போது எந்த கெட்ட பழக்கமும் தனக்கு இல்லை என நேர்மையாக அவரே முன்வந்து சொன்னார்.

”கம்ப்யூட்டர் கம்பெனியெல்லாம் வந்த உடன எங்கள மெயின் ரோட்ட விட்டு உள்ள தள்ளிட்டாங்க சார். மூவாயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்க கிழக்கு கடற்கரை சாலை வரைக்கும் போவோம் சார். வீடு காலி பண்ற பல பேருட்ட பேக்கேஜிங் கம்பெனி வச்சிருக்கிறவங்க ஏமாத்துறாங்க சார். படிச்சவங்க.. கம்ப்யூட்டர்ல தேடி போன் போட்டு புக் பண்ணிடுறாங்க. அங்கெல்லாம் பேரம் பேசாம பெரிய தொகைக்கு போயிடுறாங்க.. கேட்டா எங்க வண்டி சின்ன வண்டிங்குறாங்க..அடுக்குற மாதிரி அடுக்குனா அதே பொருள எங்க வண்டிலயும் கொண்டு போலாம் சார்” என்றார்கள். ”காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.” என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அவரைப் போலவே அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு குறைவான வாடகைக்கும் வண்டியை கிளப்ப அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் என தெளிவாக தெரிந்தது.

எல்லோருக்குமே சராசரி வயது நாற்பதை தாண்டிக் கொண்டிருந்தது. எளிய வாடகை வீடுகளில் குடியிருக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கித் தர முயற்சிக்கிறார்கள். மீதமானவற்றை மட்டும் தங்களுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். காலை நேரத்தை பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக ஒதுக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் பலரும் யாரிடமராவது கார் ஓட்டுநராக போக விரும்பவில்லை. ”எம் பொழப்பு என்னோட போகட்டும்னுதான் புள்ளய படிக்க வைக்கிறேன். ஸ்கூல்ல கொழந்தய விட்டுட்டு கார எடுக்க வீட்டுக்கு போனா ‘என்ன ஆபீசருக்கு இப்போதான் விடிஞ்சுதா’ன்னு மொதலாளிங்க நக்கலடிப்பாங்க சார்.. எரிச்சலா வரும்.. அதாங் கெடைச்ச வரைக்கும் இதே போதும்னு பாக்குறேன் சார்” என்றார் மகேந்திரன்.

eicher-1இங்கு இரண்டு சங்கங்கள் உள்ளன. ஒன்று ஓட்டுநர்கள் சங்கம், இன்னொன்று வேன் உரிமையாளர்கள் சங்கம். இரண்டு சங்கத்துக்கும் ஒரே ஸ்டாண்டுதான், சிஐடியு தான் இருவரையும் வழிநடத்துகிறது. பெரும்பான்மையானவர்கள் ஓட்டுநர் சங்கத்தில் தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருமே ஒரு வண்டியை மட்டுமே சொந்தமாக வைத்து ஓட்டுபவர்கள். அவரவர் கவுரவத்தை பொறுத்து வெவ்வேறு சங்கங்களில் இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறினர். வேன் உரிமையாளர் சங்கம் ஒன்றை இப்பகுதியில் சுயேட்சையாக நடத்தி வந்த ஒருவர் இப்போது அண்ணா தி.மு.க.-வில் ஐக்கியமாகிய பிறகு சங்க வேலைகள் எதுவும் நடப்பதில்லையாம்.

இடையில் இந்த ஸ்டாண்டிற்கு முன்னர் தொழிலாளிகளுக்கான ஒப்பந்ததாரராக இருந்த அண்ணா தி.மு.க வை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். இப்போது ஒப்பந்த தொழிலாளிகளை நிறுவனங்கள் எதுவும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை என்பதால் இவருக்கும் வருமானம் இல்லையாம். வேறு வழியே இல்லாததால் இப்போது குட்டி யானை வண்டி வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். ”வீட்டுல பத்து டிக்கெட்டுபா.. முன்னமே கம்பெனிலருந்து வாடகப் பணம் மாரி பத்தாயிரம் பத்தாயிரம்னு மாசத்துக்கு வந்துக்குனு இருந்துச்சு.. அந்த மெதப்புல மருமகங்கிட்ட குடும்ப செலவுக்கெல்லாம் காசு வாங்கக் கூடாதுன்னுட்டேன்.. இப்போ குடும்ப செலவு மட்டும் 12 ஆயிரமாவது கொறச்சலா ஆகுதுப்பா.. அதான் வீட்டம்மா நகய சேட்டாண்ட வச்சு குட்டி யான வாங்கிட்டேன்.” என்றார். ”வடக்கேருந்து 150 ரூபாக்கு ஆள இட்டாந்திருக்காங்க சார்.. நம்மாளுங்க இந்த ரேட்டுக்கு ஒத்துக்குவானா” என்று சலித்துக் கொண்டார்.

அப்போது நான்கைந்து வட இந்திய இளைஞர்கள் ஒரு சிறு பையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு கம்பெனிகளைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்து சரவணன் என்ற 30 வயது இளைஞர் ”இவனுகளால தான் எங்க பொழப்பே போச்சு சார்” என்று விரக்தியுடன் சொன்னார். ”அவங்க ஊர்ல வேலை கிடைக்காமதான இங்கே வந்திருக்காங்க” எனச் சொன்னவுடன் ”ஒரு பிரியாணி பொட்டலத்த நாலு பேரு சாப்பிட்டா யாருக்குமே பசியடங்காதே சார்” என்று ஒப்பிட்டு சொன்னார் ஐம்பது வயதை தொட்டுக் கொண்டிருந்த செந்தில்குமார். சரவணன் முதலில் தானியங்கி லேத் பட்டறை வைத்துக் கொண்டு மூன்று, நான்கு பேருக்கு வேலை தந்து கொண்டிருந்தவர். மூன்று ஆண்டுகளாக ஆர்டர் கிடைக்காத காரணத்தால் ஈய்ச்சர் வண்டியை வாங்கி ஓட்ட ஆரம்பித்தார். தற்போது ஏழெட்டு மாதமாக அதிலும் சரியான வருமானம் இல்லை. எனவே அவருக்கு திருமணமும் தள்ளிப் போகிறது என வருத்தப்பட்டார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் ஒரு சாலை

செந்தில்குமாரோ பெரிய குடும்பஸ்தர். கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறார். மூத்த பெண் ஐடி துறையில் வேலைக்கு போய் விட்டார். அவளுக்கு திருமணம் முடிவதற்குள் அவளுக்காக வங்கியில் வாங்கிய கல்விக்கடனையும் அடைக்க வேண்டும், திருமணத்துக்கும் நகை வாங்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையும் வந்து லோடு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரண்டு குழந்தைகளது கல்வி, அன்றாட செலவு உள்ளிட்ட அனைத்தும் இவரது வருமானத்தை தான் சார்ந்திருக்கிறது. சரவணனோ அல்லது செந்தில்குமாரோ இந்தக் கவலைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாகத்தான் சொன்னார்கள்.

தெற்காசியாவில் சிறுதொழில் முனைவோருக்கான மிகப்பெரிய தொழிற்பேட்டை இது. 1965-ல் 1250 ஏக்கர் பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட போது நூறுக்கும் குறைவாகவே இருந்த சிறு தொழிற்சாலைகள் பின்னர் வளர்ந்து 1,700 தொழிலகங்கள் வரை பெருகியுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியும் இடமாக திகழ்ந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இப்போது பெரும்பாலான இடங்களில் பாழடைந்து கிடக்கிறது. மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் உதிரி பாகங்களையே பெரும்பாலும் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த அப்பகுதியில் இன்று கார்களுக்கு சர்வீஸ் செய்யும் நிறுவனங்கள் மட்டும் தான் ஒன்றிரண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ஆயத்த ஆடை நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்டர் கிடைக்காத காரணத்தால் மூடப்படவே அம்பத்தூரை நம்பி தையல் தொழிலுக்காக வந்து கொண்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தத்தம் கிராமங்களுக்கு திரும்பிப் போய் விட்டனர். அந்த நிறுவனங்கள் இருந்த இடங்களை தற்போது மென்பொருள் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு விட்டன.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கு உற்பத்தி பெருமளவு குறையத் துவங்கியது.

டிஐ சைக்கிள்ஸ், டிவிஎஸ், பிரிட்டானியா, டன்லப் போன்ற பெரிய நிறுவனங்கள் அம்பத்தூரில் இருந்தபோதும் பெரும்பான்மை தொழிலாளிகள் சிறு தொழிலகங்கள், சிஎன்சி மிசின், லேத் பட்டறைகளை நம்பிதான் தினசரி இங்கு வந்து கொண்டிருந்தனர். சிறிய லேத் பட்டறைகளை சொந்தமாக ஓரிரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்தவர்களும் அவர்களில் உண்டு. இவர்களையும், டைனி எனப்படும் சிறு தொழில் நிறுவனங்களையும் சேர்த்தால் 5,000 நிறுவனங்களாவது அம்பத்தூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இயங்கி வந்தன. 2008-ம் ஆண்டில் இங்கு வணிக வளாகங்களை நிறுவ முயற்சி நடைபெற்ற போதும், சிறு உற்பத்தியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் அதற்கு அனுமதி தரவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கு உற்பத்தி பெருமளவு குறையத் துவங்கியது. பல நிறுவனங்கள் இங்கு தொடர்ச்சியாக மூடப்பட்டன. மூடப்படாத நிறுவனங்களில் உற்பத்திக் குறைப்பும், ஆட்குறைப்பும் ஒருங்கே நிகழத் துவங்கின. 2011-ல் பொருளாதாரத்தில் ஒரு மீட்சி வருவது போல தெரிந்த போதும் 2012 இறுதியில் மீண்டும் இங்கு தொழிற்துறை உற்பத்தி சரியத் துவங்கியது. அச்சரிவு தொழிலாளிகளுக்கு மாத்திரம் பிரச்சினையாக இல்லை. இத்தொழில்களை சார்ந்து இயங்கிய பிற தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சாரார்தான் ஈய்ச்சர் வண்டி ஓட்டுநர்கள்.

ஆரம்பத்தில் சிறு முதலாளிகளை வளரவைப்பது என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் தமக்கு தேவையான வேலைகளை செய்து கொள்கின்றன. பிறகு தேவையில்லை என்று முடிவு செய்யும் போது அவர்கள் ஈவிரக்கமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். அப்படித்தான் ஈய்ச்சர் லாரி ஓட்டுநர்கள் வாழ்க்கை மாறிவிட்டது. முதலில் இவர்களை நிறைய லாரிகள் வாங்க வைத்து தொடர்ச்சியாக வேலை கொடுக்க வைத்து ஆசை காட்டி பிறகு அம்போ என விட்டுவிட்டு போய்விட்டனர். லாரிகளை வைத்தவர்கள் விற்றுவிட்டு தற்போது ஓரிரு லாரிகளை வைத்து மட்டும் பிழைப்பை ஓட்ட முயற்சிக்கின்றனர்.

ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக அமல்படுத்தப்படும் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் இப்படித்தான் மக்களை அலைக்கழிக்கிறது.

–    வினவு செய்தியாளர்

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

1

robertcaldwelldதமிழின் பெருமையை, தமிழிலக்கியங்களின் வளமையை தமிழனுக்கும், உலகுக்கும் உணர்த்திய

அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்

200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி
பெசன்ட் அரங்கம், தஞ்சை.

தலைமை

தோழர் காளியப்பன்
மாநில இணைப்பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துரை

காலனியம் : திராவிட இனம் : கால்டுவெல்

பேரா. முனைவர். வீ. அரசு
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்

தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல் பங்கு

புலவர் பொ. வேலுச்சாமி

அனைவரும் வருக!

caldwell--2-small

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

தொடர்புக்கு : 94431 88285, 94431 57641

திரைப்பட சண்டை இயக்குநர் நித்தியானந்தன் நேர்காணல்

1

சினிமா நேர்காணல் – 2

தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நடிகர் – நடிகைகளை அட்டைப்படங்களிலும், அனைத்து வகை செய்திகளிலும் திணித்து எழுதும் ஊடகங்கள் எவையும் இத்தகைய கலைஞர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாறி வரும் தமிழ் சினிமாவில் சண்டை நடிகர்களின் உலகம் எப்படி இருக்கும்? மாஸ்டர் என்று அழைக்கப்படும் சண்டை இயக்குநர்களில் ஒருவரான மாஸ்டர் நித்தியானந்தனை, சென்னை-வடபழனியில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் சந்தித்து பேசினோம். சினிமா ஓடுவதற்கு மட்டுமல்ல சினிமா உலகைப் புரிந்து கொள்ளவும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை உதவும். படியுங்கள்!
_______________

நித்தியானந்தன்
சண்டை இயக்குனர் நித்தியானந்தன்

வினவு: ஒரு திரைப்படத்தில் சண்டை நடிகர்கள் அவசியமா?

நித்தியானந்தன்: சார்லி சாப்ளின் போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரை எடுத்தாலும் ஆக்சன் கதாநாயகர்கள் தான் பிரபலம். புரூஸ் லீ, ஜெட்லீ, ஜாக்கி ஜான், சில்வர்ஸ்டன் ஸ்டோன், ஆர்னால்டு என எல்லோருமே இதற்காகத் தான் மதிக்கப்படுகிறார்கள்.

வினவு: ஆனால் மக்களைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறீர்கள், உங்களது வாழ்க்கை நிலைமை என்ன? பலருக்கும் தெரியாதே?

நித்தியானந்தன்: மற்றவர்களைப் போலத்தான் நாங்களும். என்ன கூடுதலாக கொஞ்சம் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு, கண்ணாடியை உடைக்க தைரியமா முன்னால் வந்து நிற்போம். வறுமை காரணமாக ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் என்பதற்காகத்தான் இந்த தொழிலுக்கு வருகிறோம். எங்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். ஆனால் இப்போதைய சண்டைக் காட்சிகளில் உயிரெல்லாம் போயிடாது. முன்னாடி போயிருக்கிறது. அப்போது உண்மையான கண்ணாடியை உடைக்க வேண்டியிருக்கும். இப்போது காயம் மட்டும் படும். எனக்கு கூட கை கால் எல்லாம் காயம் பட்டு இருக்கிறது. (கைகளில் காயம்பட்ட தழும்புகளைக் காண்பிக்கிறார்.)

வினவு: எத்தனை வயதில் இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? உங்களை எப்படி தெரிவு செய்தார்கள்? அப்போது இந்தத் துறை எப்படி இருந்தது?

நித்தியானந்தன்: நான் 23 வயதில் வந்தேன். இப்போது 54 வயதாகிறது. எங்க அப்பா சண்டை நடிகரா இருந்தார். வணங்காமுடி, தங்கமலை ரகசியம், புதிய பறவை போன்ற படங்களில் சிவாஜிக்கு டூப் போட்டிருக்கிறார். ராயபுரத்தில் தான் வசித்து வந்தார். நானும் அங்குதான் பிறந்து வளர்ந்தேன். எஸ்.எஸ்.எல்.சி படித்தும் வேலை கிடைக்கவில்லை. அதான் இங்கு வந்து விட்டேன். அப்பா வேலை பார்த்த மாஸ்டரிடமே என்னை சேர்த்து விட்டார்.

வினவு: உங்களை ஏன் அதற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை?

நித்தியானந்தன்: வருமானம் பத்தல சார். இந்திரா காந்தி ஆட்சியில சண்டைக் காட்சிகளில் ரத்தம் வருவது போல காட்சிகள் அமைக்க கூடாது என்று சட்டம் போட்டார்கள். அதை எதிர்த்து கடுமையான போராட்டம் எல்லாம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் வந்து தான் ரத்தம் இல்லாமல் சண்டை எல்லாம் வைத்து படம் எடுத்து, எங்களை வாழ வைத்தார்.

car-3வினவு: உங்களது அப்பா காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

நித்தியானந்தன்: ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.200 முதல் 300 வரை கிடைக்கும். முதலில் மாஸ்டராக தொழிலை ஆரம்பித்த அவர் பிறகு சண்டை போடுபவராக மாறி விட்டார்.

வினவு: வேறு வேலைக்கு போக முடியாத காரணத்தால் தான் இதற்கு வந்து விட்டீர்களா?

நித்தியானந்தன்: வேலை வாய்ப்பு இல்லை. அடுத்து நான் பார்க்க கொஞ்சம் கலராக (மாநிறம்) கொஞ்சம் உயரமா இருந்ததால கதாநாயகர்களுக்கு டூப் போட முடியும்னு சொன்னாங்க. அதுனால எங்கப்பா என்னய சூப்பர் சுப்பயராயன் மாஸ்டர்ட்ட எடுத்துண்டு போயி விட்டாரு. பீச்ல தினமும் காலைல ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்போம். அப்புறம் வாரிசு சண்டை நடிகர்களுக்கெல்லாம் யூனியன்ல ஒரு செலக்சன் வைப்பாங்க. அதுல நான் செலக்ட் ஆகிட்டேன்.

வினவு: அந்த செலக்சன்ல என்னென்ன தேர்வுகள் இருக்கும்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்ல சிங்கிள், டபுள், தொடர்ச்சியா விதவிதமா பல்டி அடித்து காட்டணும். இதுபோக உங்களுக்கு வேறு என்னென்ன தெரியுமோ அதை எல்லாம் செய்து காண்பிக்கணும். கத்தி, வாள், ஸ்கிப்பிங், அப்புறம் கராத்தே இந்த நான்கிலும் தேர்வுகள் நடைபெறும். ரொம்ப இல்லேன்னாலும் ஓரளவு திறமை காட்டினால் தேர்வு செய்து விடுவார்கள். இல்லையின்னா ‘இன்னும் கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிட்டு வாப்பா’ எனச் சொல்லி கொஞ்சம் டைம் கொடுப்பாங்க. பிறகு தேர்வு வைத்து அவனையும் உள்ளே எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் வாரிசுக்கு கட்டாயம் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பது யூனியன் விதி. இங்கிருக்கும் பலருமே வாரிசுகள் தான்.

வெளியே இருந்து எடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகுதான் எடுப்பார்கள். உடற்தகுதியுடன், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வழக்கு இல்லேன்னு சான்றிதழ் தரணும். கிரிமினல் பின்னணி இருந்தால் சேர்க்க மாட்டாங்க. முன்னாடி சிவக்குமார் சார் மாதிரி உயரம் குறைவான கதாநாயகர்களும் இருந்த காரணத்தால் உயரம் குறைவாக இருந்தாலும் எடுத்தாங்க. இப்போது அது சாத்தியமில்லை.

வினவு: அப்போது யூனியனில் சேர்வதற்கு எவ்வளவு கட்டணம்?

fire-2நித்தியானந்தன்: நான் அப்போது வாரிசாக சேர்ந்ததால் கட்டணம் ரூ.500. மற்றவர்களுக்கு ரூ.5000. இது நடந்தது 1982-ல்.

வினவு: நீங்கள் சேர்ந்த பிறகு நடித்த முதல் படம் எது?

நித்தியானந்தன்: தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான ராம் லஷ்மண்தான் முதல் படம். தமிழில் கமல், தெலுங்கில் கிருஷ்ணமராஜ், இந்தியில் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் கதாநாயகர்கள். நான் கிருஷ்ணமராஜுக்கு டூப் போட்டேன். இரண்டு காட்சிகளில் வந்தேன். தாவிக் குதிப்பது, டைவ் அடிப்பது போன்றவற்றை செய்தேன்.

வினவு: அதற்கு உங்களுக்கு என்ன சம்பளம் தரப்பட்டது?

நித்தியானந்தன்: மூன்று நாளைக்கு ஆயிரம் ரூபாய் தந்தார்கள். தாஸ் சார் தான் எனக்கு மாஸ்டர். அப்புறம் நிறைய மொழிகளில் நிறைய பேருக்கு டூப் போட்டிருக்கிறேன். என்.டி.ஆர், கிருஷ்ணா, பிரேம் நசீர், ஷோபன் பாபு, ராஜ்குமாருன்னு பலருக்கு டூப் போட்டுள்ளேன். இந்தியில் தர்மேந்திரா, மிதுன் சக்ரவர்த்திக்கும் டூப்பா நடிச்சேன்.

ரஜினிக்கு தங்க மகன், நான் மகான் அல்ல, பிலாப்டா படங்களிலும், கமலஹாசனுக்கு கைதியின் டைரி, சட்டம் படங்களிலும் டூப் போட்டேன். அப்போது நான் உயரமாகவும், ஒல்லியாகவும் இருந்தேன்.

வினவு: நீங்கள் இதுவரை எத்தனை படம் நடித்திருப்பீர்கள்?

நித்தியானந்தன்: சரியாத் தெரியலை.

வினவு: ஒரு ஆயிரம் இருக்குமா?

நித்தியானந்தன்: அதுக்கும் கூட இருக்கும் சார். ஏன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு எல்லா மொழியிலயும் பண்ணியிருக்கிறேன். கன்னடத்தில் அம்ரீஷ், பிரபாகரன், விஷ்ணுவர்தன், டாக்டர் ராஜ்குமார் என எல்லோருக்கும் டூப் போட்டிருக்கிறேன்.

வினவு: நீங்கள் எந்த சண்டையில் சிறப்பான முறையில் பெயர் பெற்றவர்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக். அப்புறம் ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பது. உதாரணமாக உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்றவற்றில்.

jump-4வினவு: அதிகபட்சம் எவ்வளவு உயரத்தில் இருந்து குதிப்பீர்கள்?

நித்தியானந்தன்: சீக்ஸ் பீட்சுன்னு ஒரு திரைப்படம் அதில் தண்ணீருக்கு மேலே இருந்து 80, 100 அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறேன். அது துறைமுகத்தில கப்பலுக்கும் மேலே இருக்குற டவர்ல இருந்து குதிச்ச சீன்.

வினவு: இதெற்கெல்லாம் பயிற்சி, ஒத்திகை எடுப்பீர்களா?

நித்தியானந்தன்: அதெல்லாம் கிடையாது சார். ஏற்கெனவே குதித்திருக்கிறோம் என்ற தைரியம்தான். தொழில்னு வந்த பிறகு அதெல்லாம் பார்க்க கூடாது. நானே இன்னொரு மாஸ்டருக்கு (ஆம்பூர் பாபு) பதிலாகத்தான் அப்படி குதிச்சேன்.

வினவு: தண்ணீர் ஆழம் குறைவான இடங்களில் குதிப்பதுண்டா? ஒகேனக்கால் போன்ற அருவிகளின் மேலே இருந்து குதித்திருக்கிறீர்களா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் குதிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு கணக்கில் கொண்டுதான் செய்வோம். அருவிக்கு மேலே குதித்ததில்லை. ஆனா ஒகேனக்கலில் மோகன்லாலுக்கு பதிலாக வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல டூப்பா நடித்திருக்கிறேன்.

வினவு: ஜிம்னாஸ்டிக், ஆபத்தான சண்டை காட்சியில் பெயர்பெற்றுள்ள நீங்கள் இதில் எத்தனை முறை காயமடைந்துள்ளீர்கள். அதில் குறிப்பிடும்படியான சம்பவம் எதாவது இருக்கிறதா?

நித்தியானந்தன்: நிறைய வாட்டி அடிபட்டிருக்கிறேன். சில முறை உயிர் போகும் நிலைக்கு சென்று திரும்பியிருக்கிறேன். ஒரு மலையாள படத்துக்கு டூப் போட்டிருந்தேன். இப்போ சீப்ராஸ் பில்டிங்னு இருக்கே அது ஒரு காலத்துல சாரதா ஸ்டுடியோஸ்னு இருந்தது. அங்க இரண்டு மாடி உயரத்தில் இருந்து எதிரே இன்னொரு கட்டிடத்திற்கு செல்ல சாரத்தை போல ஒரு கயிறைப் பிடித்துக் கொண்டு வழுக்கிக் கொண்டு கீழிறங்க வேண்டும். வேற பாதுகாப்பு வசதியெல்லாம் இல்லை. பாதி வழியில் கயிறு அறுந்து, தரையில் விழுந்து விட்டேன். நினைவு தப்பி வாயில் ரத்தம் வர ஆரம்பித்து விட்டது. விஜயா மருத்துவமனையில் சேர்த்து இப்போது மியாட் மருத்துவமனையில் இருக்கும் மோகன்தாஸ் டாக்டர்தான் எனக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றினார்.

நயகரா
நயகரா அருவிக்கு குறுக்கே நடக்கும் சாகச வீரர்

வினவு: இதெற்கெல்லாம் முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்த மாட்டார்களா?

நித்தியானந்தன்: அதெல்லாம் செஞ்சாலும் அதையும் மீறி நமக்கு அடிபட்டு விட்டது. கீழே பெட் எல்லாம் போட்டிருந்தார்கள் (ஒரு அடி உயரத்தில் கோணிப்பையில் வைக்கோல் உள்ளே வைத்து சுற்றப்பட்டிருப்பதைத்தான் அவர் பெட் என்கிறார்).

வினவு: எவ்வளவு காலம் அதன்பிறகு ஓய்வெடுத்தீர்கள்? அந்தக் காலங்களில் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர் எதாவது உதவி செய்தாரா?

நித்தியானந்தன்: அதெல்லாம் பண்ண மாட்டார்கள். மருத்துவ முதல் உதவி செய்வார்கள். மருத்துவ செலவை கொஞ்சம் ஏற்றுக் கொள்வார்கள். அதன் பிறகெல்லாம் ஒன்றும் கிடைக்காது.

வினவு: சண்டை நடிகர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமெல்லாம் கிடையாதா?

நித்தியானந்தன்: முன்னாடி இருந்தது. இப்ப கிடையாது. சொந்த பொறுப்பில் தான் அவங்கவங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வினவு: கோடிக்கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கும் தயாரிப்பாளருக்கு உங்களது ரிஸ்க் சண்டை மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் உதவாமல் போகிறார்கள், ஏன்?

நித்தியானந்தன்: இந்த தொழில் ரிஸ்க்குனு தெரிந்துதானே வருகிறோம். அதனால் உதவிய எதிர்பார்க்க முடியாது. கண்ணாடியை உடைப்பது போன்ற ஆபத்துகளுக்கு தக்க ஊதியத்தை தந்து விடுகிறார்கள். வாழ்நாள் முழுதும் உதவி பண்ண முடியாது இல்லையா. ஒரு விபத்து நடக்கிறது, அதில் சில சமயம் உயிர் பிழைத்திருப்போம், சில சமயம் ரொம்ப பிரச்சனையாகும். அது போலத்தான் இதுவும்.

motor-bike-jumpவினவு: ஆனால் உங்களது ரிஸ்க்குகளுக்குத்தானே மக்கள் கைதட்டுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். அதை வைத்து சம்பாதிக்கும் தயாரிப்பாளர் உங்களுக்கு உதவக் கூடாதா?

நித்தியானந்தன்: சினிமாவில் விபத்து பல இடங்களிலும் நடக்கலாம். நடனமாடும் போது கூட நடக்கலாம். ஆனா சண்டைக் காட்சியில் வாய்ப்பு அதிகம். அதுதானே சண்டைக்காட்சி?

வினவு: ஜிம்னாஸ்டிக் பண்ணும்போது என்ன விதமான விபத்துக்கள் நடக்கும்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கில் சம்மர் ஷாட் பண்ணும்போது நம்மோட ஆள் ஒருத்தர் இறந்தே விட்டார். “நாளை உனது நாள்” (விஜயகாந்த், நளினி நடித்த படம், இயக்கம் ஏ.ஜெகநாதன், தயாரிப்பு வாசன் பிரதர்ஸ், ஆண்டு 1984.) படத்தில் பெட் போட்டுதான் ஸ்பிரிங் போர்டில் சம்மர் ஷாட் அடித்தார். முதல் சம்மர் அடித்து இரண்டாவது அடிக்கையில் பாதியில் தலை தரையில் மோதி விட்டது. தண்டுவடத்தில் முறிவு. மறுநாள் இறந்துவிட்டார். அவர் பெயர் ரவி, வயது 28, தண்டையார் பேட்டையை சேர்ந்தவர். சமீபத்தில் ஷாகுல் என்பவர் தெலுங்கு படத்துல நடிக்கும் போது இதே போல் விபத்து நடந்து இறந்து விட்டார். சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கெல்லாம் அவர்தான் டூப் போட்டுள்ளார்.

வினவு: இப்படி அடிபடுபவர்களுக்கு நிவாரணத் தொகை எதாவது கிடைக்குமா?

நித்தியானந்தன்: யூனியனில் எல்லோரும் ஆளாளுக்கு கொஞ்சம் பணம் போட்டு குடும்பத்தினருக்கு கொடுப்போம். படத்தில் நடித்த கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும். லோகு என்பவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் டூப் போட்டு நடிக்கையில் அடிபட்டு விட்டது. கமல் சார் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுத்தார். அதுபோல அவர்களாக விரும்பினால் எதாவது நடக்கும்.

வினவு: ஜிம்னாஸ்டிக்கிலேயே இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதா?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கிலேயே ஒரு ஸ்டூல் தற்செயலாக நழுவி விட்டால் தலைகீழாக விழ வேண்டியதுதான். பயிற்சி எடுத்திருந்தாலும் இப்படி நடக்கும். விபத்துக்களை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாம் கடவுள் விட்ட வழிதான்.

வினவு: சண்டை காட்சிகளுக்கு முன் எதாவது பிரத்யேகமான உணவு கட்டுப்பாடு, வேறு தயாரிப்புகள் உண்டா?

nithyanandam-2நித்தியானந்தன்: அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. மத்தவங்களுக்கு கம்பெனி கொடுக்கும் அதே உணவைத்தான் சாப்பிடுவோம். ஆபத்து நிறைந்த காட்சிகளை சாப்பிடப் போவதற்கு முன்னரே எடுத்து விடும்படி நாங்கள் இயக்குநரை கேட்டுக் கொள்வோம். அவர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். சாப்பிட்டு விட்டு உடனே செய்தால் ஒரு மாதிரியாக இருக்கும். இல்லாவிடில் மாலை நேரத்தில், சாப்பிட்டு சில மணி நேரம் கழிந்த பிறகு காட்சிகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்வோம். மற்றபடி அங்கு தரும் இட்லி, பொங்கல், கறிக்குழம்பு எல்லாவற்றையும் சாப்பிடுவோம்.

வினவு: அப்படியானால் உடலை சக்தியுடன் பராமரிப்பதற்கான சிறப்பு உணவுக்கு என்ன செய்வீர்கள்?

நித்தியானந்தன்: அதை வீட்டில் சாப்பிட்டுக் கொள்வோம். பழங்கள், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். ஆளாளுக்கு இது வேறுபடும். சிலர் ஒன்றுமே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் பழங்களுடன் பயிறு வகைகள், சத்தான கீரைகள், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் பொதுவான டயட் என்றெல்லாம் கிடையாது.

வினவு: – ஜிம்னாஸ்டிக், ஆபத்து நிறைந்த ஷாட் போக என்னென்ன சண்டை வகைகள் உள்ளன?

நித்தியானந்தன்: வாள், கத்தி சண்டை, கொம்பு சண்டை, களறி சண்டை, குங்பூ, கராத்தே, குத்துச் சண்டைன்னு நிறைய இருக்கிறது.

வினவு: இப்போதைய மார்க்கெட்டில் சண்டை ட்ரெண்ட் என்ன?

நித்தியானந்தன்: இப்போது எதார்த்தமான சண்டைகளை விரும்புகிறார்கள். அதாவது இரண்டு பேர் சண்டை போட்டால் ஒருத்தரை ஒருத்தர் பிடித்து தள்ளுவது, அடிப்பது போன்றவை. எதார்த்தமான இத்தகைய சண்டைதான் இப்போது ட்ரெண்ட்.

வினவு: பழைய கத்திச் சண்டை, சிலம்பமெல்லாம் இப்போது கிடையாதா?

நித்தியானந்தன்: அதெல்லாம் கிராம சினிமா சப்ஜெக்ட் என்றால் கட்டாயம் கம்பு சண்டை இருக்கும். இதற்கெல்லாம் தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகள் இருக்காங்க. கம்புச் சண்டை, கத்திச் சண்டை போன்றவற்றுக்கு எங்களுக்குள்ளேயே தனித்தனி சங்கங்கள் உள்ளன.

glass-1வினவு: கண்ணாடியை உடைப்பதில் இப்போது ஆபத்தில்லை, முன்னர் இருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விளக்குங்களேன்.

நித்தியானந்தன்: முன்னாடி ஒரிஜினல் கண்ணாடியை உடைப்பார்கள். அதில் ஸ்பெஷலிஸ்டு நமச்சி வாத்தியார். அப்புறம் டி.எஸ். மணி, கண்ணாடி வரதன்னு பல கில்லாடிங்க இருந்தனர். அப்போ உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு காயம் ஏற்படும். இப்போது வரும் சில்வர் கிளாஸ் சுக்குநூறாக உடைந்து விடும் என்பதால் ரத்த காயம் இருக்கலாமே தவிர உயிருக்கெல்லாம் ஆபத்து இல்லை. இது கடந்த 15 ஆண்டுகளாக அறிமுகமாகியிருக்கும் புதிய டெக்னாலஜி. அதாவது கார், பஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கண்ணாடி இது.

வினவு: கண்ணாடி, மேசைகளை உடைப்பது எல்லாம் எப்படி எடுக்கிறீர்கள்?

நித்தியானந்தன்: கண்ணாடியில் சில புள்ளிகளில் மறைவாக பட்டாசு மருந்துகளை வைத்திருப்பார்கள். கண்ணாடியின் எதாவது ஒரு புள்ளியில் அடித்தால் அனைத்து பட்டாசுகளும் வெடிக்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். சில சமயங்களில் சுத்தியலை வைத்தும் உடைப்போம். கேமராவில் அதை மறைத்து விடுவார்கள். பட்டாசுகள் வெடிப்பதும், நாங்கள் உடைக்க கண்ணாடியில் கை வைக்கும் நேரமும் கரெக்டா இருந்தால் சரியா உடையும். நீங்கள் கவனித்து பார்த்தால் அப்படி உடையும் போது புகை வருவது தெரியும். அது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படுவது. சுவர்களை மோதி உடைக்கும் இடத்தில் உண்மையான செங்கற்களுடன் நாங்கள் மோதி உடைக்கும் இடங்களில் மாத்திரம் தெர்மோகோல் வைத்து டம்மியான செங்கற்களை வைத்திருப்பார்கள்.

வினவு: கார், பைக்குளில் பறந்து எகிறிக் குதிப்பது பற்றி கூறுங்களேன்.

நித்தியானந்தன்: அதற்கென ஜம்பர்கள் தனியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தனியாக பயிற்சியெல்லாம் கிடையாது. வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வேகத்தடைகளில் வீலிங் பண்ணி ஜம்ப் பண்ண பயிற்சி எடுப்பாங்க. மற்றபடி தைரியம்தான் வேணும். முன்னாடி அட்டைப் பெட்டிகளை வைத்து மோடி எடுக்கும் பயிற்சி கிடையாது. இப்போது எடுக்கிறார்கள். இதுபோக தண்ணீரில் குதிக்கும் கார், பைக் காட்சிகளை பயிற்சி செய்து பார்ப்பார்கள்.

car-4கார் ஜம்பிங்கைப் பொறுத்தவரை, முதலில் காரை பக்காவாக வெல்டிங் எல்லாம் செய்து விட்டு, அதற்குள்ளே ஒரு கூண்டு போல செய்து டிரைவர் பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். டமால், டுமால் என தலைகீழாக பல்டி அடித்த பிறகு பார்த்தால் கார் வெளியே அப்பளமாக நொறுங்கியிருக்கும். ஆனால் உள்ளே இருந்த ஆளுக்கு ஒரு சிறு பிசிறு கூட காயமோ பாதிப்போ இருக்காது. ஏனெனில் அவர்தான் கூண்டுக்குள் இருக்கிறாரே.

வினவு: விபத்துக்கள் ஏதும் நடந்து விட்டால் பாதுகாக்க, மருத்துவர், ஆம்புலன்சு போன்ற வசதிகள் படப்பிடிப்பு தளத்தில் இருக்குமா?

நித்தியானந்தன்: வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் அதெல்லாம் கடைபிடிக்க மாட்டாங்க. ஆனால் விபத்தெல்லாம் நடக்காது. கூண்டு நல்ல பலமாக இருக்கும். அப்புறம் வண்டியில் தேவையான அளவுக்கு மட்டும் தான் பெட்ரோல் வைத்திருப்போம். இல்லாவிடில் தீ விபத்து ஏற்பட்டு விடும் இல்லையா. அதனால் பயப்பட தேவையில்லை. முதலுதவியும் பெரிதாக தேவைப்படுவதில்லை.

வினவு: இங்கே சென்னையில் ஜம்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

நித்தியானந்தன்: ஒரு இருபது பேர் வரை இருப்பார்கள். வேறு மாநிலங்களில் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். மும்பையில ரேசர் பைக் போன்ற ஆபத்தில்லாத உயர் ரக பைக்கில் மட்டும்தான் ஜம்ப் செய்வார்கள். நம்மவர்கள் மட்டும்தான் ரிஸ்க்கெடுத்து எல்லா வகை பைக்குகளிலும் ஜம்ப் பண்ணக் கூடியவர்கள்.

வினவு: – நீங்களும் அந்த ரேசர் பைக்கை வாங்க வேண்டியதுதானே?

நித்தியானந்தன்: – இல்ல. அது விலை அதிகம். நம்ம ஆளுங்க சாதா பைக்குலயே அதையெல்லாம் பண்றாங்க. நம்மளயும் சாதா பைக்ல ஜம்ப பண்ண இப்பவும் இந்தி படங்களுக்கு கூப்பிடத்தான் செய்றாங்க. மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என நாம்தான் முன்னர் இங்கிருந்து சென்று வந்தோம். இப்போது அவர்களும் (கேரளா தவிர) கற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போ நம்ம மாஸ்டர்கள் அங்க போனால் சில ஸ்பெஷலான ஆட்கள் வேண்டும் என்பதற்காக இங்கிருந்து ஆட்களை அழைத்துக் கொண்டு போவார்கள்.

வினவு: ஜம்பர்களை எப்படி சேர்க்கின்றீர்கள்? அவர்கள் எந்த சமூகப் பின்னணியில் இருந்து வருகிறார்கள்?

Tony Jaa
டோனி ஜா

நித்தியானந்தன்: ஜம்ப் அடிக்கத் தெரிகிறதா என்று ஓரளவு பார்த்து விட்டு சேர்த்துக் கொள்வோம். அவர்களுக்கென தனியாக இங்கு சங்கம் உண்டு. வெளியில் இருந்து வருபவர்கள், ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக இருப்பவர்களையும் வண்டி ஓட்டுவதைப் பார்த்து சேர்த்துக் கொள்ளலாமே என்று காலப் போக்கில் சேர்த்துக் கொள்கிறோம். முதலில் சினிமாவில் இவர்களுக்கு காட்சிகள் குறைவு. இப்போது தேவை அதிகரித்து விட்டதால் தனியாக சங்கம் அமைக்கப்பட்டு விட்டது.

வினவு: வயது இதற்கு ஒரு தடையா?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. நாற்பது வயதிலேயே ஓய்வு பெற்று விடுபவர்களும் உண்டு. ஐம்பத்தைந்து வயதில் ஜம்ப் அடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது இருப்பவர்களில் சீனியர் கேப்டன் குமார், 59 வயசிலும் ஜம்ப் அடிக்கிறார். அவருக்கு இதுதான் தொழில் என்றாலும் இப்போது பகுதி நேரமாக கப்பல்களில் ஒட்டியிருக்கும் கிளிஞ்சல்கள், பாசிகளை அகற்றுவது, மூழ்கிய படகுகளை மீட்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மீனவ சமூகத்தை சேர்ந்தவர்.

வினவு: சண்டை நடிகர்கள், ஜம்பர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

நித்தியானந்தன்: – படத்துக்கு படம், மாஸ்டருக்கு மாஸ்டர் அது வேறுபடும். ஆட்டோவில் மீட்டர் போட்டு ஓட்டச் சொன்னாலும் மேலே போட்டுக் கேட்கலையா அது மாதிரிதான் இங்கும். குறைந்தபட்சம் என ஒரு தொகையை யூனியன் முடிவு செய்திருந்தாலும் அதனை விட அதிகமாக பேசி முடிவு செய்வதும் உண்டு. லோ பட்ஜெட்டுன்னா அது கிடைக்காது.

மாஸ்டர்களுக்கு இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். காட்சி ஒன்றுக்கு பத்தாயிரம் குறைந்தபட்சம் என்று ஊதியம் யூனியனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறையக் கூடாது. அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எந்திரன் படத்திற்கெல்லாம் ஒன்றரை கோடி வரை ஒப்பந்தமாச்சுன்னு நினைக்கிறேன்.

சண்டை போடுபவர்களுக்கு காட்சி ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தியில் ஆறாயிரம் ரூபாய்.  ஜம்பருக்கு மூவாயிரம் ரூபாய். இது மூன்று நாட்களுக்கானது. அதற்கு மேல் காட்சியை எடுக்க ஆகும் நாட்களுக்கு பாதி சம்பளம் தரப்படும்.

வினவு: ஒருவருக்கு மாதமொன்றுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும்?

motorcycle-1நித்தியானந்தன்: யூனியனில் இருக்கும் 600 உறுப்பினர்களுக்கு இருநூறு பேருக்கு தினசரி வேலை கட்டாயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு சொல்ல முடியாதுதான். உயரம், எடை, கட்டுமஸ்தான தோற்றம், திறமைகள் இருந்தால் நிறைய வேலை கிடைக்கும்.

வினவு: சராசரியாக ஒருவருக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

நித்தியானந்தன்: – அதை துல்லியமாக சொல்ல முடியாது. சில சமயம் சூட்டிங் இருக்கும், சில சமயம் இருக்காது. சில நேரம் சூட்டிங் இருந்தாலும் சண்டை போடுபவருக்கு ஓய்வு தேவைப்படும். ஆனாலும் ஓரளவு நன்றாக வேலை கிடைப்பவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை கிடைக்கும். எப்போதும் பிசியாக இருப்பவர்களுக்கு இருபதாயிரம் வரை கூட கிடைக்கும்.

வினவு: வெளியே மற்ற துறைகளில் உள்ள சம்பளத்தை ஒப்பிடும் போது இது குறைவாக இல்லையா?

நித்தியானந்தன்: அதெல்லாம் ஒப்பிடவே கூடாது. இரண்டாவது வேலை குறைந்து விட்டது. சூட்டிங்கும் பெரிதாக நடக்கவில்லை.

வினவு: நீங்கள் அப்படியொன்றும் ஆகா ஓகோவென சம்பாதித்து விட்டது போல தெரியவில்லையே?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது சார். நானெல்லாம் சம்பாதித்ததை மிச்சம் பண்ணியிருந்தால் வசதியாக மாறியிருக்கலாம். தினமும் இரண்டு படம் சூட்டிங் போவேன். ஆனால் அன்றன்று சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் செலவழித்தே தீர்த்து விட்டோம். அதனால் தான் முன்னேற முடியாமல் போய் விட்டது. அப்போதும் கூட எல்லோருக்குமே தண்ணி பழக்கம் இருந்தது என்று சொல்ல மாட்டேன்.  ஆனால் இப்போது வரும் பசங்க மிகவும் உசாராக இருக்கிறார்கள். மாறி விட்டார்கள்.

வினவு: மாஸ்டர்கள் படத்துல வேலை செய்யும் நிலைமை பற்றி சொல்லுங்களேன்.

jump-2நித்தியானந்தன்: குறைந்தபட்சம் சண்டை ஒன்றுக்கு ரூபாய் இருபதாயிரம் வரை வாங்க வேண்டும் என்பது விதி. சண்டை ஐந்து நாட்கள் வரை கூட எடுக்கப்படும். படம் ஒன்றுக்கு முழுக்கவும் ஒரே மாஸ்டர்தான் இருப்பார். படத்தின் பிரமாண்டம், சந்தையின் வீச்சைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடக் கூடும். மாஸ்டருக்கு சண்டை காட்சியுடன் கூடவே படத்தில் லொகேஷன் பார்ப்பது, நிர்வாகம் போன்ற சில வேலைகளும் உண்டு. நமது சென்னையில் 60 மாஸ்டர்கள் வரை இருக்கின்றனர்.

வினவு: நீங்கள் எப்போதிருந்து மாஸ்டர் ஆனீர்கள்?

நித்தியானந்தன்: 2008ல் இருந்து மாஸ்டர் ஆனேன். இதுவரை 30 படங்கள் பண்ணியிருக்கிறேன்.

வினவு: பிற மாஸ்டர்கள் பிசியாக இருக்கையில் வேலையை எடுத்து உங்களிடம் தரும் க்ளாஸ் ஒர்க் (சப் காண்ட்ராக்ட் அல்லது உள் ஒப்பந்தம்) முறை உண்டா? நீங்கள் அப்படி பண்ணியிருக்கிறீர்களா?

நித்தியானந்தன்: தருவார்கள். பண்ணியிருக்கிறேன். அப்படி தருகையில் அவர்களது பெயருக்கு இணையாக டைட்டில் கார்டில் கீழே எனது பெயரும் இருக்கும்.

வினவு: தமிழகம் போலவே பிற மாநிலங்களிலும் மாஸ்டர்கள் இருக்கிறார்களா?

நித்தியானந்தன்: ஆந்திராவில் 20 பேர், கர்நாடகாவில் பதினைந்து பேர், ஒரிசாவில், பாம்பேயில் சிலர் என இருக்கின்றனர்.

வினவு: கேரளாவில் இல்லையா?

நித்தியானந்தன்: கேரளாவுக்கு இங்கிருந்துதான் சண்டை நடிகர்கள் போகிறார்கள். காரணம் அங்கு மிகவும் ஈகோ பார்ப்பார்கள். கதாநாயகனிடம் செருப்பால் அடி வாங்க வேண்டுமென்றால் ‘ஐயோ, அதை ஏன் நான் வாங்க வேண்டும்’ என்று பதிலுக்கு எகிறுவார்கள். எனவே அதற்கெல்லாம் ஆட்கள் இங்கிருந்துதான் செல்கிறார்கள்.

வினவு: – சண்டைக் காட்சிகளுக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து அதிகம் வருகிறார்கள். சென்னை மீனவர்கள் அதிகமாக இத்துறைக்கு வரக் காரணம் என்ன?

நித்தியானந்தன்: தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் வருகிறார்கள். எனினும் மொத்தமுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்தான். அதிலும் பெரும்பான்மை மீனவர்கள்தான். காரணம் அவர்கள் தைரியமானவர்கள் என்பதோடு, கடற்கரையில் நிறைய நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்க முடிவது தான்.

வினவு: – மீனவர் தவிர வேறு என்ன சாதியினர் வருகிறார்கள்? பெண் சண்டை நடிகர்கள் உண்டா?

jump-3நித்தியானந்தன்: அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா சாதியில் இருந்தும் இத்தொழிலுக்கு வருகிறார்கள். சௌராஷ்டிரா சாதியினரும் உண்டு. முன்னாடிதான் பிராமின்ஸ் அரசு வேலை, ஐ.ஏ.எஸ்ன்னு போனார்கள். ஜிம்னாஸ்டிக், சண்டை திறமைகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம். பிராமின்சில் இருந்து கண்ணன் என்று ஒரு பையன் இருக்கிறான். எனினும் சிறுபான்மையாகத்தான் இவர்கள் இருக்கின்றனர். முஸ்லீம்கள் சிலரும் உண்டு. பெண்கள் கிடையாது.

வினவு: பெண்கள் சண்டை நடிகர்களாக முன் வருவதில்லையா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் இல்லை. பெண்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை. தேவைப்பட்டா ஆண்களே அந்த வேடத்தை டூப் போட்டு நடித்து விடுவோம். அந்தக் காலத்தில் வந்த லேடி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எல்லாம் அப்படித்தான். மார்பகங்களை மாத்திரம் வைத்து, ஸ்டிரெச் போட்டு பேண்டுடன் நடித்தால் வித்தியாசமாக தெரியாது. ஆங்கில படத்தில் கூட இதுதான் நிலைமை. அவர்களை விட ஆண்களுக்கு தான் தைரியம் ஜாஸ்தி.

வினவு: நீங்கள் சண்டைக் காட்சிகளில் நடிப்பதை உங்களது வீடுகளில் இருக்கும் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

நித்தியானந்தன்: எப்போதும் ஆபத்தில் இருப்பதால் பயத்துடன் தான் இருப்பார்கள். ஆனால் போக கூடாது என்றெல்லாம் தடுக்க மாட்டார்கள். இத்தனை நாள் இதை வைத்து தானே குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.

வினவு: உங்கள் அப்பாவைப் பார்த்து நீங்கள் சண்டை போடுபவராக வந்தது போல உங்கள் மகனையும் இந்த துறைக்கு கொண்டு வருவீர்களா?

நித்தியானந்தன்: என் மகனும் சண்டைக்காரனாகத்தான் இருக்கிறான். ஐந்து வருடம் படம் பண்ணினான். இப்போது பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேசன் படிக்க அனுப்பியிருக்கிறேன். அதில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதால் பார்க்கலாம் என்று. இல்லேன்னா சண்டைதான் வேலை.

வினவு: சண்டை நடிகர்கள் எல்லோரும் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களா?

Jackie-Chans-Clock-Stuntநித்தியானந்தன்: எல்லோரும் டிகிரி படிக்க வைக்கிறார்கள். தினேஷ் மாஸ்டர் பசங்களையெல்லாம் இஞ்சினியரிங் படிக்க வைத்தார்.  அவரு பையன் தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் மாஸ்டர். அவன் படித்து முடித்து விட்டு, எளிதாக இருக்கும், ஜாலியாக இருக்கும், வெளிநாடு எல்லாம் போகலாம் என்பதால் சினிமா சண்டை வேலைக்கே வந்து விட்டான்.

வினவு: உங்க வருமானத்த பாத்தா ஜாலி மாதிரி தெரியலையே?

நித்தியானந்தன்: அப்படியில்லை. சில பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். சினிமாவையே எடுத்துக் கொண்டால் எல்லா நடிகர்களும் வெற்றி பெறுவதில்லையே? சிலருக்கு குடும்ப பொறுப்புகள் ஜாஸ்தியா இருக்கும். என்னையே எடுத்துக் கொண்டால் தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது, அம்மாவை காப்பாற்ற வேண்டியதாயிற்று. சில பேருக்கு அந்த கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்காது.

வினவு: சில காட்சிகளில் தவறுதலாக நீங்கள் கதாநாயகர்களை அடித்து விட்டால் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

நித்தியானந்தன்: மன்னிப்பு கேட்போம். நம்ம மேல தப்பு இருந்தால் மாஸ்டர் திட்டுவார். அவங்க மேல தப்புண்ணா சமரசம் பண்ணி வைப்பார். இதுபோல நிறைய முறை நடந்துள்ளது.

வினவு: உங்களது அனுபவத்தில் காட்சிக்கு உகந்த முறையில் நன்றாக சண்டை போடும் கதாநாயகன் யார்?

நித்தியானந்தன்: – பிரபு சார், சரத் சார், அர்ஜூன் சார் எல்லோரும் நல்லா பண்ணுவாங்க. இருந்தாலும் ஒரு ஆக்சன், கிக் போன்றவற்றில் ஒரு லைவ்வான அனுபவம் பிரபு சாரிடம் தான் இருக்கும். காரணம் அவர் முறைப்படி குத்துச்சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு அதன் பிறகு தான் சினிமாவுக்கு வந்தார். அதனால் அவரது சண்டைக்காட்சிகள் பார்க்க அழகாக இருக்கும். முன்னாடியெல்லாம் இப்படி கற்றுக்கொண்டு வருவது பெரும்பாலும் கிடையாது. இப்போது வரும் நடிகர்கள் ஒரு வருடம் குத்துச்சண்டை, ஒரு வருடம் நடனம் என கற்றுக் கொண்டுதான் பிறகு நடிக்க வருகிறார்கள்.

ஜாக்கி சான் காயங்கள்
ஜாக்கி சான் முகத்தில் கண், காது , மூக்கு, உதடு,  தாடை அனைத்தும் எத்தனை தடவை உடைந்தன என்பதை சீன மொழியில் விளக்கும் வரைபடம்.

வினவு: ஒன்றுமே தெரியாமல் வரும் நடிகர்களை சண்டை காட்சியில் இயக்க நிறைய சிரமப்படுவீர்களே?

நித்தியானந்தன்: அவருக்கு ஏற்றது போல சின்னச் சின்ன காட்சிகளாக வைத்து எடுப்போம். நேரம் அதிகரிக்கும். வேறு வழி இல்லை. அவரால் ஒரு சின்ன குத்து விட முடியாதா. அதை வைத்து வைத்து கடைசியில் திறமையாக சண்டை போடுபவராக திரையில் பார்க்கையில் கொண்டு வந்து விடுவோம்.

வினவு: இரண்டு அடி, நான்கு அடி உயரத்திலிருந்து கூட கதாநாயகர்கள் குதிக்க மறுத்து அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?

நித்தியானந்தன்: முதலில் ஆபத்து இல்லை என மாஸ்டர் கதாநாயகர்களிடம் சொல்லுவார். அப்புறம் பெட் எல்லாம் போட்டு எடுக்க முயற்சி செய்வார். அதிலும் காலில் பிரச்சினை என்று எதாவது கதாநாயகன் சொல்லி மறுத்து விட்டால் வேறு வழியே இல்லை. டூப் போட்டு எடுத்து விட வேண்டியதுதான்.

வினவு: இப்படி உண்மையில் பயந்தாங்கொள்ளிகளாகவும், திரையில் வீரன் போலவும் கதாநாயகர்கள் தோன்றுவதற்கு யார் மூல காரணம்?

நித்தியானந்தன்: சண்டை போடுபவர்கள் மற்றும் மாஸ்டர்கள் தான் காரணம். ஒரு பயந்தாங்கொள்ளியை பெரிய மாஸ் ஹீரோவாக காட்டுவது அவர்கள்தான். ஒரு படத்தில் கூட இதைப் பற்றி ஒரு காட்சி வந்தது. உண்மையில் பயந்தாங்கொள்ளியாக இருப்பவர் படத்தில் மட்டும் மாட்டை அடக்குவார், தலையால் முட்டுவார், தீக்குள்ளே குதிப்பார்.

வினவு: சினிமாவின் பிற துறைகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக தருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கு எப்படி?

நித்தியானந்தன்: அதெல்லாம் சரியாக கொடுத்து விடுவார்கள். அடுத்த படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பணம் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று விதி இருக்கிறது. வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் யூனியனிலிருந்து புகார் கொடுப்போம். பெப்ஸியில் புகார் கொடுப்போம். பிறகு இரு தரப்பையும் கூப்பிட்டு பேசுவார்கள். முடியவில்லை என ஒரு மாத காலம் வரை அவகாசம் கேட்டார்கள் எனில் அட்ஜஸ்ட் பண்ணிப் போய்க் கொள்வோம். எப்படியானாலும் படத்தை வெளியிடுவதற்கு முன் பணத்தை வாங்கி விடுவோம்.

brucelee
புரூஸ் லீ

வினவு: சண்டை காட்சிகளில் எம்ஜிஆர் காலத்து கதாநாயகர்களுக்கும் இப்போதுள்ள கதாநாயகர்களுக்கும் என்ன வித்தியாசம்?

நித்தியானந்தன்: அப்போது சிலம்பம், ஜூடோ போன்ற சண்டைகள் இருந்தால் முறைப்படி கற்றிருக்க வேண்டும். தெரியாம பில்டப் கொடுக்க முடியாது. இப்போது சண்டையே தெரியவில்லை என்றாலும் சண்டை தெரிவது போல காட்ட முடியும். அந்தக் காலத்துல மெனக்கெட்டு அந்தக் கலைகளை கற்றுக்கொள்ள தேவை இருந்தது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் கதாநாயகன் கொஞ்சமா காலை தூக்கினால் கூட உயரத்தை உயர்த்தி காட்ட முடியும். துறைமுகங்களில் எப்படி வேலைகள் எல்லாம் தொழில்நுட்பத்தால் இப்போது எளிதாகியிருக்கிறதோ அது போலத்தான். முன்னர் தீயில் குதிப்பதென்றால் உண்மையிலேயே குதிப்பார்கள். அதையெல்லாம் இப்போது தொழில்நுட்பம் வந்து எளிதாக்கியிருக்கிறது.

வினவு: தீ சம்பந்தப்பட்ட காட்சிகளை  எடுப்பது பற்றி சொல்லுங்களேன்.

நித்தியானந்தன்: உடம்பெல்லாம் துணியை சுற்றிக்கொண்டு, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகளை அதற்கு மேல் அணிந்து கொள்வோம். தலைக்கு, கண்களுக்கு என பாதுகாப்பு கருவிகள் இருக்கும். உடம்பு முழுக்க தீப்பிடிக்காமல் இருப்பதற்கான சொல்யூஷனை தடவிக் கொள்வோம். படம் எடுக்கையில் தீ மட்டும் தான் தெரியும், போட்டிருக்கும் உடைகளெல்லாம் தெரியாது. வெளியே வந்த உடன் கோணிப்பை, சீஸ் பயர் கொண்டு தீயை அணைத்து விடுவோம். முகங்களில் ஆங்காங்கு காயம், கொப்புளங்கள் ஏற்படலாம். தீயணைப்பு உடைகள் அளவில் சிறியனவாக இருப்பதால் ஒல்லியாக இருப்பவர்கள்தான் இதற்கு போக முடியும். இதில் நம்மிடம் நான்கைந்து பேர் வரை உள்ளனர். ஆபத்து என்பதால் எல்லோரும் இதற்கு முன்வர மாட்டார்கள். ஒரு தீக்காட்சி பண்ணினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும்.

வினவு: எம்ஜிஆர் காலங்களில் சண்டை போடுபவர்கள் பக்கவாட்டில் கைகளை வீசி சண்டை போடுவதால் டைமிங் அதிகமாக இருக்கும். இப்போது ஜாக்கி ஷான் போன்றவர்களது சண்டை காட்சிகளில் நேரடியாக குத்து விடுவது போலவும், ஆக்ஷன் நேரம் குறைந்திருப்பதாக தெரிவது உண்மையா?

fire-1நித்தியானந்தன்: எல்லாமே சினிமா லென்சோட ஒளி சிதறடிப்புதான். மற்றபடி அனைவரது சண்டையும் ஒன்றுதான். இப்போது இது ட்ரெண்ட். அப்போது நடிகர்கள் கொஞ்சம் சத்தமாக பேசி நடிப்பார்கள். ஏன்னா அவங்க நாடகத்தில் இருந்து வந்தவர்கள். கடைசியில் உட்கார்ந்து கேட்பவனுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக அப்படி பயிற்சி பெற்றவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்தப்புறம் அது தேவைப்படவில்லை இல்லையா. அது போல்தான் இதுவும்.

வினவு: சண்டை நடிகர்களிடம் நட்சத்திர நடிகர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

நித்தியானந்தன்: – எல்லோருமே அன்பாகவும், மதிப்பாகவும் தான் நடத்துவார்கள். ரஜினி சார், பிரபு சார், அர்ஜூன் சார், விஜயகாந்த் சார் என எல்லோருமே ஒவ்வொரு விதமாக நன்றாக நடத்துவார்கள். எல்லோருக்குமே சண்டை நடிகர்கள் என்றால் ஒரு மதிப்பு மரியாதை இருக்கும், நன்றாக பேசுவார்கள், ஒரு அடி பட்டால் வந்து என்ன ஏது என்று பார்ப்பார்கள். மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ராஜ்குமார் சார் என எல்லோருமே நன்றாகத்தான் நடத்துவார்கள்.

வினவு: இவர்கள் தனியாக உங்களுக்கு ஏதாவது பணம், பரிசு எனத் தருவார்களா?

நித்தியானந்தன்: சிலர் விருப்பப்பட்டு ஒரு சண்டைக் காட்சி முடிந்தால் நடிகர்கள் இளைப்பாற கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். பாக்யராஜ், சத்யராஜ் போன்றவர்கள் கட்டாயம் ஒரு சண்டைக் காட்சி முடிந்தவுடன் ரூ.200 தருவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் ரஜினி சாரும் தருவார்.

வினவு: – மலையாளத்தில் இப்போது நடிகர்கள் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு விட்டார்களா? யார் நன்றாக சண்டை போடுவார்கள்?

நித்தியானந்தன்: மோகன்லால் நன்றாக பண்ணுவார். இப்போது நிறைய இளைஞர்கள் வந்துள்ளார்கள். அவர்களில் பிரிதிவிராஜ் சார் நன்றாக பண்ணுவார்.

வினவு: சண்டைக் காட்சிகளில் புதிய ட்ரெண்டுகள், தொழில்நுட்பம் போன்றவற்றை ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்வீர்களா?

car-2நித்தியானந்தன்: ஆமாம். என்ன மாதிரியான காட்சிகள், எவ்வளவு தூரத்தை, காலத்தை வைத்து எடுத்துள்ளார்கள் என்பதை கவனித்துக் கொள்வோம். குண்டு வெடிக்க என்ன தொழில்நுட்பம் புதிதாக வந்துள்ளது என்பதெல்லாம் அவற்றைப் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். மற்றபடி நேரடியாக அவர்களுடன் எல்லாம் எனக்கு தொடர்பில்லை. சிலருக்கு இருக்க கூடும்

வினவு: நீங்கள் பார்த்த சண்டை நடிகர்களில் உலகிலேயே மிகச் சிறந்தவர் யார்?

நித்தியானந்தன்: ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் பெஸ்ட். புரூஸ் லி ஒரு பவர். ஜாக்கி ஷான் அதை கிமிக்சோடு சேர்த்து செய்தார். இப்போது டோனி ஜா வந்திருக்கிறார். ஒவ்வொருத்தரும் முன்னர் இருந்தவர்களைத் தாண்டி இன்னொருபடி மேலே போய்தான் பண்ணியிருக்கிறார்கள்.

வினவு: சண்டைக் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர்கள் ஹாங்காங், சீனர்கள் என்று சொல்லலாமா?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. ஹாலிவுட்டில்தான் நிறைய ரிஸ்க் எடுக்கிறார்கள். சீனர்கள் செய்வது எல்லாம் கிம்மிக்ஸ்தான். பாலத்தில் இருந்து குதிப்பது, விமானத்தில் இருந்து குதிப்பது, அருவியில் மேலிருந்து குதிப்பது போன்றவற்றையெல்லாம் அங்கு உண்மையிலேயே செய்கிறார்கள். கிராபிக்சில் எல்லாவற்றையும் கொண்டு வர மாட்டார்கள். இப்போது கூட ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஒருவன் அருவியில் இருந்து குதித்திருக்கிறான். ஏனெனில் அவன் ஏற்கெனவே அதற்கு பயிற்சி பெற்றவன். அதனால் எளிதில் பண்ணி விட்டான். என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இல்லையா?

வினவு: அதெல்லாம் இங்கு பண்ணுவதற்கு என்ன தடையாக இருக்கிறது?

நித்தியானந்தன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அவ்வளவு சம்பளமும் இங்கு தர முடியாது. ஹாலிவுட் வேறு, இது வேறு.

வினவு: தமிழில் சண்டை நடிகர்களைப் பற்றி இதுவரை படம் ஏதும் வந்துள்ளதா?

கார் ஜம்ப்
100 மீட்டர் தூரத்தை தாண்டி குதிக்கும் முயற்சி

நித்தியானந்தன்: சசிக்குமார் எடுத்த டிஷ்யூம் திரைப்படம். இதில் எங்களது பிரச்சினைகள், கஷ்டங்கள், ஆபத்துக்களைப் பற்றிப் பேசியிருந்தார். அதுபோக பம்மல் கே. சம்மந்தம் ஒரு காமெடி படமென்றாலும் ஒரு சண்டை மாஸ்டரைப் பற்றி எதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.

வினவு: சண்டை மாஸ்டர்கள் குணச்சித்திர நடிகராக மாறிப் போவது இப்போது அதிகரித்துள்ளதா?

நித்தியானந்தன்: குறைவுதான். தினேஷ், பொன்னம்பலம், மணவை சங்கர், நந்தா சரவணன், முத்துக்காளை, ராஜேந்திரன் என சிலர்தான் போயுள்ளனர். சிலர் டிவி சீரியல்களுக்கும் நடிக்கப் போயுள்ளனர். இப்போது யூனியனுக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. செல்பேசி வந்து விட்டதால் அடுத்து என்ன வேலை, சம்பளம் எல்லாவற்றையும் அதிலேயே பேசி முடிவு செய்து விடுகின்றனர்.

வினவு: சண்டை நடிகர்களை ரவுடிகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாக சொல்கிறார்களே. உதாரணம் அயோத்தி குப்பம் வீரமணி, கபிலன் போன்றவர்கள். அதுபற்றி உங்கள் கருத்தென்ன?

நித்தியானந்தன்: அதெல்லாம் உண்மை கிடையாது. உறுப்பினர்கள் யாராவது இப்படியான செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் உடனடியாக உறுப்பினர் அட்டையை ரத்து செய்து விடுவார்கள். வழக்கு ஏதாவது வந்தால் உடனடியாக நீக்க மாட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும்.

பத்திரிகைக்காரர்கள் இதில் குழப்புகிறார்கள். சினிமாவில் வரும் துணை நடிகர்கள் வேறு, சண்டை போடுபவர்கள் வேறு, ரவுடியாக வருபவர்கள் வேறு. சண்டை போடுபவர்கள் எல்லோருமே உண்மையில் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. அப்படி சம்பந்தப்படும் பட்சத்தில் உறுப்பினர் அட்டை பறிமுதலாகும் என்பதால் பயந்து போய்தான் இருப்பார்கள். ரவுடிகளாக நடிப்பவர்கள் தனியாக இருக்கிறார்கள். அதில் இருப்பவர்கள் முடியெல்லாம் வளர்த்துக் கொண்டு தனியாக ஒரு ரவுடி போன்ற தோற்றத்தில் கம்பீரமாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்கள் தனி குரூப்.

வினவு: துணை நடிகர்கள் சங்கம் தங்களது சங்கத்தில் இல்லாதவர்களை நடிக்க வைத்தால் அதை எதிர்த்து போராடுகிறார்களே. அது போல நீங்கள் ஏன் எதிர்த்து போராடவில்லை?

நித்தியானந்தன்: அது படத்தின் இயக்குநரோட விருப்பம். அதில் எப்படி தலையிட முடியும்? அப்படி வந்தவர்களில் சிலருக்கு முன்னரோ, அதன் பின்னரோ ஒருவித குற்றப்பின்னணி இருக்கும். அப்படி இருப்பவர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராக முடியாது.

வினவு: சண்டை போடுபவர்களது சங்கத்திற்கு இது ஒரு கட்டிடம் தானா? எப்போது இதை கட்டினார்கள்?

நித்தியானந்தன்: இது ஒன்றுதான். முதலில் இது ஒரு குடிசையாக இருந்தது. 1968-ல் இக்கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டு எண்பதுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வினவு: இப்போது வேலைகள் பிரிந்து மலையாளம், தெலுங்கு ஆகியவற்றுக்கு போய் விட்டதால் இங்கு வேலை குறைந்து விட்டது. அஜீத்தின் வீரம் படத்தில் கூட இங்கிருந்து போனவர்கள் திரும்ப வேண்டியதாகி பிரச்சினை ஆனது. இதனை எப்படி தீர்த்துக் கொள்கிறீர்கள்?

நித்தியானந்தன்: மேல ஐகர்ப் இருக்கு. அதுக்கு கீழே பெப்ஸி இருக்கிறது. அதற்கு கீழே சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினை வந்தால் முதலில் ஐகர்ப்பில் புகார் செய்வோம். அது பெப்சிக்கு வரும். சம்பந்தப்பட்ட மாநில சங்கங்களை கூட்டிப் பேசி சமரசம் செய்து வைப்பார்கள்.

வினவு: ஆனால் பிற இடங்களில் வைத்திருப்பது போல தமிழ்நாட்டுக்கு தனியாக தமிழ் பெயரில் சங்கம் அமைக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்களே?

நித்தியானந்தன்: – அப்படி இயக்குநர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு மொழியில்தான் படம் பண்ணுகிறார்கள். நாங்கள் அப்படி கேட்கவில்லையே. நாங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, பெங்காலி எல்லாம் பண்றோம். இந்திய அளவில் சண்டைக்காட்சிகள் பண்ணுகிறோம். நமக்கு எதுக்கு மொழி? சண்டையில் திறமை இருந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் படம் பண்ண முடியும்.

வினவு: கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல மாஸ்டர்கள் இப்போது வந்து விட்டார்களா?

நித்தியானந்தன்: இப்போது கொஞ்சம் வந்து விட்டார்கள். பெங்காலிலும், இந்தியிலும் கூட வந்து விட்டார்கள். முன்னாடி படம் எடுக்க வேண்டுமானால் ஒரு இயக்குநரிடம் குறைந்தபட்சம் பத்து வருசமாவது குப்பை கொட்ட வேண்டும். இப்போது டிஜிட்டல் கேமரா வந்து விட்டதால் பத்து பேரு பத்து இடத்தில் அவனவன் படம் எடுக்க ஆரம்பித்து விட்டான். முன்னாடி படத் தொகுப்பாளராகணும்னா பிலிம் ரோலை அடுக்கி ரோலை சுற்றி வைக்க வேண்டும். இப்போது செல்பேசியிலும், கணிணியிலும் படத்தொகுப்பை எளிதாக செய்ய கற்றுக்கொண்டு விடுகிறார்கள். அதே போல்தான் சண்டைப் பயிற்சியிலும். முன்னாடி ஒரு மாஸ்டரிடம் சில ஆண்டுகளாவது இருந்துதான் ஆளாக முடியும். இப்போது சில ஹாலிவுட் படங்களைப் பார்த்தே ஆளாகி விடுகிறார்கள். இது ஒரு புதுமையான அறிவு வளர்ச்சிதான். விசயம், தொழில்நுட்பம் இருப்பதால் எளிதாக எல்லோரும் கற்றுக்கொள்ள முடிகிறது.

வினவு: நீங்கள் எடுத்த 30 படங்களில் நன்றாக ஓடியது எந்தப் படம்?

திருத்தணி திரைப்பட விழாவில் மாஸ்டர் நித்தியானந்தன்
திருத்தணி திரைப்பட விழாவில் மாஸ்டர் நித்தியானந்தன்.

நித்தியானந்தன்: நன்றாக ஓடியது என்று சொல்ல மாட்டேன். ஆனால் சண்டைக் காட்சிகள் பலரும் பாராட்டும்படி பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த திருத்தணி படம் பேசப்பட்டது. நான் அவன் இல்லை பார்ட் 2, மலையாளத்தில் லக்கிஜா போன்ற படங்களெல்லாம் பண்ணியிருந்தாலும் பெரிதாக இவையெல்லாம் ஓடவில்லை. ஆனால் என்னோட வேலை அதில் சுத்தமாக இருந்தது.

வினவு: மாஸ்டர், உங்களது பெயர் திரைப்படங்களில் எப்படி வரும்?

நித்தியானந்தன்: நித்தியானந்தன்தான் பேரு. டைட்டிலில் தீப்பொறி நித்யா என்றிருக்கும்.

வினவு: நீங்கள் எப்போது ஆரம்பித்து எப்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியை விட்டீர்கள்? ஏன் ஒரு காலகட்டத்துக்கு பிறகு சண்டைப் பயிற்சியாளர்களுக்கும், மாஸ்டர்களுக்கும் தொப்பையுடன் உடம்பு போட்டு விடுகிறது?

நித்தியானந்தன்: நான் 1978-ல் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு ஆரம்பித்து பத்து பதினைந்து ஆண்டுகள் வரை பயிற்சி செய்தேன். பெரியளவில் இல்லாவிடிலும் சம்மர் ஷாட், சில தாவிக்குதித்தல்கள் மட்டும் பண்ணினேன். முதலில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஆக ஆக உடம்பு போட்டு விடுகிறது. திருமணம், சாப்பாடு போன்றவையும் காரணங்கள்தான் சார்.

வினவு: சினிமா துறையிலேயே மற்றவர்கள் உங்களது சங்கத்தில் இருக்கும் ஒற்றுமையை ஒரு பொறாமையோடு பார்க்கிறார்கள்? இந்த ஒற்றுமைக்கு காரணம் என்ன?

நித்தியானந்தன்: இது மற்ற வெளியாள் யாரும் நினைத்தாலும் பண்ண முடியாத கலை. மற்றவற்றையெல்லாம் அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் இது உயிரை பணயம் வைப்பதாக இருப்பதால் அதைப் பார்த்து மிரளும் தயாரிப்பாளர் ‘ஏய் முதல்ல அவனுக்கு காசக் கொடுய்யா’ என்று சொல்வான். ஏனெனில் எந்த தயாரிப்பாளரும் சண்டை பயிற்சியாளரின் வயிற்றில் அடிக்க மாட்டான். தாமதமாக வேண்டுமானால் பணம் கிடைக்கலாமே தவிர அப்படியெல்லாம் தராமல் ஒரேயடியாக போய்விட மாட்டார்கள்.

வினவு: தமிழ் சினிமா சண்டைப்பயிற்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான, முக்கியமான, மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர் மற்றும் மாஸ்டர் யார்?

நித்தியானந்தன்: மாஸ்டர் ராஜசேகர், (பிட்சா, இவன் வேற மாதிரி என்ற படங்களெல்லாம் பண்ணியவர்) சமீபத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து மூன்று கண்ணாடிகளை உடைத்தார். அடுத்து மாஸ்டர் குமார். இவர் எகிறி குதிப்பது, தீயில் குதிப்பது எல்லாம் பயப்படாமல் செய்யக் கூடியவர். அந்தக் காலத்தில் சாம்பு என்று ஒரு மாஸ்டர் இருந்தார். முஸ்தபா என்று ஒருவர். நிறைய பேர் இறந்து விட்டார்கள். சிலர் இருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் இப்போதும் இருக்கிறார். அவர் நிறைய ஆபத்தான காட்சிகளெல்லாம் பண்ணியிருக்கிறார். படம் எடுக்கையில் பாதி உடம்பு தீயில் பற்றிக்கொள்ளும் விதமாக எல்லாம் பண்ணியிருக்கிறார்.

வினவு: இப்படி ஆபத்தான காட்சிகளில் பயம் தெரியாமல் இருப்பதற்காக பான்பராக் போடுவது, மது சிறிது அருந்திக்கொள்வது, வேறு போதை எல்லாம் செய்வீர்களா?

நித்தியானந்தன்: கிடையாது. பயமெல்லாம் ‘ஸ்டார்ட் கேமரா’ சொன்ன பிறகு சுத்தமாக இருக்காது. கயிற்றின் மேல் நடப்பவனைப் பார்த்தால் நாம்தான் பயப்படுவோம். அவன் அநாயசமாக நடப்பான். எல்லாமுமே பயிற்சிதான். கீழே இருந்து பார்ப்பவனுக்கு இருக்கும் பயம் அதை செய்பவனுக்கு இருக்காது. நமக்கே திரும்ப வந்து திரையில் அல்லது வீட்டில் உட்கார்ந்து பார்க்கையில் இதை நாமா பண்ணினோம் என்று ஆச்சரியமாக இருக்கும்.

வினவு: உங்கள் சங்க கட்டிடத்திற்கு ஏன் விட்டலாச்சார்யா பெயர் வைத்துள்ளீர்கள்? அதிகமான இடங்களில் எம்ஜிஆர் படம் வைத்துள்ளீர்கள்?

நித்தியானந்தன்: சங்கம் வைப்பதற்கு விட்டலாச்சார்யா தான் மூல காரணம். அவர்தான் சங்கம் வைக்க தூண்டுதலாக இருந்தார். அதை வைத்து தான் சம்பளத்தை பேசி முடிவு பண்ண முடியும் என்று எங்களுக்கு வழிகாட்டினார். எம்.ஜி.ஆர் படங்களில் 85% சண்டைக்காட்சிகள் இருக்கும் என்பதால் அதிகமாக எங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார். அதனால் தான் வைத்திருக்கிறோம்.

வினவு: தற்போது சண்டை யூனியனில் சேருவதற்கு எவ்வளவு கட்டணம்?

நித்தியானந்தன்: இப்போது மூணேகால் லட்சம்  கட்டினால்தான் சேர முடியும். அதுவும் நிறைய சோதனை, பயிற்சிகள்ள செலக்ட் ஆனாத்தான் கொடுப்பாங்க. ஏதாவது மாஸ்டர் அல்லது உறுப்பினரோட சிபாரிசும் வேண்டும். இருக்கிறவங்களுக்கே வேல அதிகம் இல்லேங்கிறதால இந்த கட்டணத்த அதிகரிச்சிருக்கிறோம். மத்தவங்களும் விரும்பி வருவதில்லை.

வினவு: வெளிநாடு படப்பிடிப்புக்கு உங்களை கூட்டிக்கொண்டு போனால் அந்த நாட்டு சம்பளம், இன்சூரன்சு எல்லாம் செய்து தருவார்களா?

நித்தியானந்தன்: இங்கேயே பேசி முடிவு செய்து கொள்வோம். சம்பளம் பெரும்பாலும் இங்கு 3 நாட்களுக்கு என்று இருப்பதை அங்கு போனால் ஒரு நாளைக்கு என்று பேசி முடிவு செய்து கொண்டுதான் கிளம்புவோம். முறையாக அங்கிருக்கும் கம்பெனிகளுக்கு சொல்லி அனுமதி பெற்று விட்டுதான் படப்பிடிப்பு துவங்கும்.

வினவு: நமது மாஸ்டர்கள் அங்குள்ள சண்டை நடிகர்களை பயன்படுத்துவது உண்டா?

நித்தியானந்தன்: அதுவும் நடக்கத்தான் செய்கிறது. உதாரணமாக பார்கோ, சுவரில் எகிறி எகிறி குதித்து அடிப்பது போன்றவற்றில் அவர்கள் நம்மை விட நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளுக்கு அந்த துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற வெளிநாட்டவர்களைப் பயன்படுத்தி நம்மவர்கள் இயக்குகிறார்கள்.

வினவு: – உங்களுக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் வரவில்லையா? ஏன்?

நித்தியானந்தன்: எனக்கு விருப்பம் எல்லாம் இல்லை. அதுல டயலாக் பேசணும், பாடி லேங்குவேஜ் வேணும். அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். கஷ்டம்கிறதுக்காக எல்லாம் முயற்சி பண்ணாம இருக்கவில்லை. இதுவே போதும்ணு இருந்துட்டேன்.

வினவு: அப்படி ஒருவேளை இதெல்லாம் கற்றுக்கொண்டு போயிருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்குமா?

நித்தியானந்தன்: கிடைத்திருக்கும். பத்தில் ஒன்றாவது வெற்றி பெறத்தானே செய்யும். ஆனால் நான் முயற்சியே செய்யவில்லை. அப்படியே சின்ன சின்ன வேடமாக கிடைத்ததால் பெரிதாக எதையும் நினைக்கவில்லை.

stuntman-dies-in-the-expendables-2-shooing
அமெரிக்க மேலாண்மைக்காக படமெடுக்கும் சில்வஸ்டர் ஸ்டாலெனுக்காக பல்கேரியாவில் நடந்த தி எக்ஸ்பண்டபிள் – 2 திரைப்பட படப்பிடிப்பில் ஒரு சண்டை நடிகர் உயிரிழந்தார், இன்னொருவர் காயமடைந்தார்.

___________________________________________

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !

1

கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !

பாகம் 1 – நெஞ்சை உருக்கும் சுரங்க வாழ்க்கை!

வினவின் நேரடிக் கள ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அருகில் இருக்கும் கோலார் தங்க வயலைத் தெரிவு செய்திருந்தோம். கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நிர்வாகத்தின் நரித் தனத்தினாலும், தொழிற்சங்கங்களின் துரோகத்தனத்தினாலும், அரசின் வஞ்சகமான பொருளாதாரக் கொள்கைகளாலும் மூடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கம் தான் அந்நகரத்தின் ஒட்டு மொத்த அடித்தளமும் ஆன்மாவுமாகும்.

இறந்து போன அந்த நகரத்தின் மாந்தர்களுக்கு நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகள் உள்ளன. தங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றி, தங்கள் வஞ்சிக்கப்பட்டது பற்றி, நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட துரோகத்தனங்கள் பற்றி.. இன்னும் இன்னும் ஏராளமான கதைகள் உள்ளன அவர்களிடம். உண்மையில் அக்கதைகள் நமக்கு தேவை தானா?

ஆம், மிக அவசியமான தேவை. ஏனெனில், கோலார் தங்க வயல் இறந்து போன நகரம் என்று சொல்வதை விட ஈரக் குலையறுத்து துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட நகரம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஆளும் வர்க்க எதிரிகளாலும், தொழிற்சங்க துரோகிகளாலும் செய்யப் பட்ட பச்சை ரத்தப் படுகொலை அது. நிர்கதியாய் நின்ற அந்த மக்களைத் தோற்கடித்த அதே எதிரிகளோடு தான் நாம் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

நமது எதிரிகளையும் துரோகிகளையும் புரிந்து கொள்ள அவர்களின் முந்தைய ’சாதனைகளைப்’ புரிந்து கொள்வது மிக அவசியமாகிறது. அந்த வகையில் கோலார் தங்க வயலின் மக்களும் அந்தத் தொழிலாளர்களும் நமக்கு ஆசான்களாக இருக்க எந்தத் தயக்கமும் இன்றி முன் வருகிறார்கள்.

இனி கோலார் தங்க வயல் சுரங்க பயணத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.

______________________________________

தொழிலாளர்களைச் சுமந்து கொண்டு பூமியின் மையத்தை நோக்கி மெல்லக் கீழ் இறங்குகிறது அந்த மின்தூக்கி(Lift). அது ஒரு சுரங்கம். துளைபோடுபவர் (Driller), வெடிப்பவர் (Blaster), பொது வேலையாள் (General Labor) என்று கலவையான வேலைப் பிரிவினைகள் கொண்டோர் அந்த மின்தூக்கியில் இருக்கிறார்கள். அவர்கள் முகங்களில் இருப்பதும் அதே போன்ற கலவையான உணர்ச்சிகள் தான். இதில் எத்தனை பேர் உயிரோடு மீண்டு வருவார்கள்? அத்தனை நிச்சயமாக பதிலளிக்க முடியாத கேள்வி இது.

பூமியின் கீழ் செல்லச் செல்ல ஒவ்வொரு 70 அடி ஆழத்திற்கும் ஒரு டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் அளவு உயர்கிறது. தொழிலாளர்களையும் சுரங்கத்தின் உள்ளே வெட்டிச் சேகரிக்கப்பட்ட உலோகப் படிமங்கள் கொண்ட கற்குவியலையும் ஏற்றியிறக்க நேர்மட்டமாக ஒரு நீண்ட குழி – 15 அடி விட்டம் கொண்ட இதை ஷாப்ட் (shaft) என்கிறார்கள். ஒவ்வொரு நூறடிக்கும் கிடைமட்டமாக எதிரெதிர் திசைகளில் வேர்கள் போல சில கிலோமீட்டர்கள் தூரம் குடைந்து செல்கிறார்கள் – இதை டனல் (tunnel) என்கிறார்கள்.

டனலின் உள்ளே உலோகச் சங்கிலிகளால் இணைக்கப்பட்டு ட்ராலிகளை இழுப்பதற்கான இருப்புப் பாதை ஏற்படுத்தப்பட்டிருக்கும். வெட்டியெடுக்கப்பட வேண்டிய உலோகம் எந்த திசையில் இருக்கிறது, அதை அடைய டனல் எந்த திசையில் முன்னேற வேண்டும், இடையில் பாறைகள் எந்தெந்த இடங்களில் எதிர்படும், அவற்றைத் தகர்க்க எத்தனை இடங்களில் வெடி வைக்க வேண்டும் என்பதையெல்லாம் சர்வேயர்கள் வரைபடமாக ஏற்கனவே அளித்திருப்பார்கள். டனல் எங்கே முடிவடைகிறதோ அங்கே துவங்குகிறது வேலை. சில ஆயிரம் அடி ஆழத்தில் சில தொழிலாளர்கள் பூமியைக் கிடை மட்டமாக குடைந்து முன்னேறிச் சென்று கொண்டேயிருக்கிறார்கள். ஏற்கனவே குடையப்பட்ட டனலின் முகப்புப் பகுதியிலிருந்து சில நூறு மீட்டர்களுக்கு மேற்கூரை மரச்சட்டங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

உலோகத்தை வெட்டியெடுக்கும் வேலை சற்றேனும் சுணக்கமாகி விடக்கூடாது என்பதை மனதில் கொண்டே சுரங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். நிலத்தின் மேற்பரப்பிலிருந்து ஷாப்டின் வழியே இறங்கி இடையில் எதிர்ப்படும் டனல் கிளைகளுக்குள் நரம்புப் பின்னல் போல் காற்றுக் குழாய்கள் செல்லும். காற்றுக் குழாய்களின் வழியே அழுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட காற்று டனலின் பல்வேறு பாகங்களுக்கு சப்ளை ஆகும். இது தவிற டனலின் முகதுவாரத்தில் மின் விளக்குகளும், உடலைக் குளிரூட்டிக் கொள்ள தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கும்.

தரைப்பரப்பில் மிகவும் விசை கூடிய குளிரூட்டி இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்படும் குளிர் காற்று இரும்புக் குழாய்களின் வழியே  சில கிலோமீட்டர்கள் தூரம் பூமியின் கீழ் செங்குத்தாக பயணம் செய்து, மேலும் சில கிலோமீட்டர்களைக் கிடைமட்டமாக கடந்து 160 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவும் டனலின் வால் நுனிப் பகுதிகளில் அழுத்தப்பட்ட காற்றாக வெளியேறும். இந்த நெடும் பயணத்தில் அதன் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்து ஆவியாகியிருக்கும்.

குழாய்க் காற்றை சுவாசிப்பது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை நீங்கள் உணர விரும்பினால், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நிற்காமல் பயணித்து வந்த பேருந்தின் ரேடியேட்டரில் இருந்து வெளியேறும் நீராவியின் முன் உங்கள் முகத்தை பத்து நிமிடங்களுக்கு வைத்துப் பார்க்கலாம். சுரங்கத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகளும் சோகையான கப்பிய வெளிச்சத்தையே அளித்துக் கொண்டிருக்கும். இயற்கையின் அந்தகார வலிமையின் முன் விஞ்ஞானத்தின் செருக்கு தோற்றுப் போகும் தருணங்களும் உண்டு – மின் தடையின் வடிவில்.

சுதந்திரமான காற்றோ, வெளிச்சமோ இல்லாத அழுத்தப்பட்ட வெளி (space) அது. தலைக்கு மேலே பல லட்சம் கோடி டன்கள் நிலம் சரிந்து விழ தருணம் பார்த்துக் கொண்டிருக்க, பூமியின் உக்கிரம் தன்னைக் குடைந்து சீண்டியவர்கள் மேல் தனது ஆத்திரத்தை வெப்பமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும். சுரங்கத்தின் கடைக்கோடியில் பூமியோடு நேரடிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் தங்கள் மானத்தைக் காக்க இடையில் அணிந்திருக்கும் ஜட்டியைத் தவிற வேறெதையும் உடலில் போட்டுக் கொள்ள முடியாது. ஏன் அப்படி என்பதை நீங்கள் அனுபவபூர்வமாக விளங்கிக் கொள்ள விரும்பினால் உடலின் மேல் தொலியை மொத்தமாக உரித்தெடுத்து விட்டு அதன் மேல் ஆடைகளை அணிந்து கொள்ளும் அனுபவத்தைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

தொழிலாளர் நலச்சட்டம் என்கிற வாயில்லாத, கண்ணில்லாத, காதில்லாத பூச்சியை ஏமாற்ற அளிக்கப்பட்ட முகக் கவசம், காலணிகள், தலைக்கவசம் போன்ற போன்ற வஸ்துக்களை பொருத்திக் கொண்டு வேலை பார்க்க முடியாது என்பது ஒரு எதார்த்தம்.

சூழலில் நிலவும் அழுத்தமும், வெப்பமும் உடலின் சமநிலையை எந்த நேரமும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டேயிருக்கும். காதுகளின் உள்ளே இருக்கும் மேலஸ், இன்கஸ், டேபஸ் என்கிற மூன்று  குருத்தெலும்புகளிடம் இருந்து நரம்புகளின் வழியே மூளை பெறும் தகவல்களின் அடிப்படையில் தான் உடலின் சமநிலை பேணப்படுகிறது. சுரங்கத்தின் உள்ளே நிலவும் சூழலுக்கு இந்த எலும்புகள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தவறினால் தவறான தகவல்களைக் கொடுத்து மூளையைக் குழப்பும். முன்னாள் சுரங்கத் தொழிலாளர்களில் சிலர் இன்றும் தங்களது இறுதி நாட்களை வறுமையிலும் சித்தம் கலங்கிய நிலையிலும் மன அழுத்தத்திலும் தான் கழிக்கிறார்கள். இந்த உலகத்தின் நிர்மாணத்திற்காக கனி வளங்களை வெட்டிக் கொடுக்கும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் பரிசு அது.

நாடி நரம்புகள் ஓய்ந்து ரத்தம் சுண்டிப் போன இறுதி நாட்கள் மட்டுமல்ல, இளமையின் முறுக்கும் தினவு மேலோங்கி நிற்கும் இளமைக் காலத்தில், தங்கள் பணிக் காலத்திலேயே நரகத்தின் சுவையை அன்றாடம் அனுபவிப்பவர்கள் அவர்கள்.

பாறைகளைப் பிளப்பதற்காக வெடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உண்டாக்கிய புகை மண்டலத்தோடு காற்றில் பரவியிருக்கும் வெப்பமும், சூழலில் பரவியிருக்கும் உலோகத் தூசுகளும் ஏற்கனவே வெப்பத்தில் வாட்டப்பட்ட உடலின் மேல் உண்டாக்கும் எரிச்சலை எதனோடு ஒப்பிடுவதென்று தெரியவில்லை. பௌதீக உலகத்தில் அதற்கான ஒப்பீடு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஒருவேளை கற்பனையாகச் சொல்லப்படும் நரகத்தில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பறைகள் உண்டாக்கும் கற்பனையான எரிச்சலை சொல்லலாம் – எனினும் அது வெறும் கற்பனைக் கதை தான்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

டனலில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் நீரை, குடிப்பதற்கும் உடலின் மேல் தெளித்துக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், 12,000 அடி ஆழத்தில் 160 டிகிரி பாரன்ஹீட்டுகளுக்கு மேல் தகித்துக் கொண்டிருக்கும் அனலில் அந்த நீரும் கொப்பளித்துக் கொண்டிருக்கும். எனினும் நீரை உடலின் மேல் தெளித்துக் கொள்வதும், தொண்டைக் குழியை ஈரப்படுத்தி வைப்பதும் தவிர்க்கவியலாத சடங்குகள் மட்டுமல்ல ஷிப்டு நேரம் முடியும் வரை உயிரைத் தக்கவைத்துக் கொள்ள, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள்.

சுரங்கத்தின் உள்ளே டனலின் கரங்கள் எங்கே நிறைவுறுகிறதோ அங்கே தொழிலாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உலோகத்தைத் தேடி கிடைமட்டமாக பூமியைக் குடைந்து முன்னேறிக் கொண்டிருப்பார்கள். எதிர்ப்படும் பாறைகளைத் அந்தத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். அம்மலைகள் டைனமைட்டுகளால் பிளக்கப் படும்போது பூமி குலுங்கும். அந்த அதிர்ச்சியில் டனலின் கூரை சரிந்து விழுந்தால் உடனடி மரணம், விழவில்லை என்றாலும் மரணம் தான். பின்னது மெல்லக் கொல்லும் மரணம்.

தொழிலாளர்கள் டனலின் நுனியில் நிற்கும் போது இடைப்பகுதிகளில் கூரை சரிந்து விட்டால் அந்த இடிபாடுகளை அகற்ற மீண்டும் வெடி வைக்க வேண்டியிருக்கலாம். அது அந்த டனலின் தாங்கு திறனைப் பொருத்தது. ஒருவேளை டன்னல் மீண்டுமொரு வெடியைத் தாங்காது என்றால், அடைத்துக் கொண்ட பகுதியை அப்படியே முத்திரையிட்டு விட்டு உலோகத்தைத் தேடிய அந்தப் பயணம் வேறு திசையில் தொடரும்.

என்றால், இடிபாடுகளுக்கு அந்தப் பக்கம் மாட்டிக் கொண்டவர்களின் கதி?

அவர்களைச் சுற்றிலும் தூசு மண்டலங்கள் சூழ்ந்திருக்கும். காற்றுக் குழாய்கள் கூரை இடிந்ததில் சேதமாகியிருக்கும். எனவே பிராணவாயு சீக்கிரம் தீர்ந்து போய் விடும். வாழ்க்கை இன்னும் சில மணித்துளிகள் இருக்கலாம், ஆனால் மரணம் நிச்சயம். அவர்கள் அழுது அரற்றுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.

உயிருடன் மீண்ட சில தொழிலாளர்களிடம் பேசிய போது அவர்கள் இவ்வாறு சொன்னார்கள் – “சுத்தமா அடச்சிக்கிட்டு இருக்கும் சார். அந்தாண்ட மாட்டிக்கினு இருக்கவங்க போடற சத்தம் கொழப்பமா கேக்கும். பேரு சொல்லி கூப்டுவாங்க. ரெஸ்க்யூ லைன் கிடைச்சதான்னு அவங்க சத்தம் போடறது கசங்கலா கேக்கும். நாம பதிலுக்கு இல்லைன்னு எப்டி சொல்ல முடியும்? ஒரு நாளு போகும், கொரலு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி அப்பால நின்னுடும்…”

ஆம். அவர்கள் தாம் உயிருடன் புதைந்து போனதை தாமே அறிந்து, தமது சாவு மெல்ல மெல்ல தம்மை நெருங்கி வளைப்பதை உணர்ந்து.. அந்த கணத்துக்காக காத்துக் கிடப்பார்கள். பின்னர் செத்துப் போவார்கள். ஆனால், உலோகத்தைத் தேடிய அந்த பயணம் நிற்காது. எஞ்சியவர்கள் தொடர்வார்கள் – தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, தங்கள் மனைவிமார்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து காப்பதற்காக, மாதா மாதம் சம்பளமாக கையில் கிடைக்கப் போகும் அந்தச் சொற்பக் காசுகளுக்காக.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சுரங்க விபத்துகளில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை விட மீட்கப்படாத உடல்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை ஏதாவது உலோகத்தைத் தொடும் போதோ, அல்லது நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தால் சுழலும் மின்விசிறியின் காற்றை அனுபவிக்கும் போதோ உங்கள் வாழ்க்கையின் அந்த மகிழ்ச்சியான தருணங்களை உத்திரவாதப்படுத்திக் கொடுத்த மனிதர்கள் ஒரு வேளை எங்கோ ஒரு சுரங்கத்தினுள் காணாப் பிணமாக இன்னும் உறங்கிக் கொண்டிருப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெடித்துச் சிதறிய பாறைத் துண்டுகளைச் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரது வேலை நேரத்துக்குள் அடைய வேண்டிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். டைனமைட் வெடித்துத் தீர்த்த பின் சிதறலாகக் கிடக்கும் பாறைகளோடு இன்னும் வெடிக்காத வெடிமருந்துக் குச்சிகளும் கிடக்கும். அப்படி தாமதமாக நிகழும் வெடி விபத்துகளில் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தனி கணக்கு.

உலோகத்தின் துணுக்குகள் கலந்த மண்ணையும், பாறைப் படிமங்களையும் சேகரித்து ட்ராலிகளில் அனுப்புவார்கள் தொழிலாளர்கள். மேற்பரப்பில் இவை ஒன்றாகச் சேகரிக்கப்பட்டு கிரஷர் மில்லுக்கு அனுப்பப்படும். கிரஷர் மில்லில் இவை ஒரே சமமான கற்துணுக்குகளாக உடைக்கப்பட்டு அங்கிருந்து கிரைண்டிங் மில் எனப்படும் அரவை மில்லுக்கு அனுப்பப்படும். கிரைண்டிங் மில்லில் உலோகப் படிமங்கள் கலந்த சிறிய கற்துணுக்குகள் மொத்தமாக அரைக்கப்பட்டு அனைத்தும் கலந்த பவுடராக்கப்படும்.

உலோகத் துணுக்கு கலந்த பவுடரோடு தண்ணீர் சேர்க்கப்பட்டு பல்வேறு கண்டெய்னர்களில் பசை போல குழைக்கப்படும். பின்னர் இந்தக் கலவையில் சயனைடு மற்றும் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு வேறு டாங்குகளில் சேர்த்து மீண்டும் நன்றாக குழைக்கப்படும். சயனைடும் ஆக்சிஜனும் சேர்ந்த இந்தக் கலைவையில் கார்பன் துண்டுகளைச் சேர்ப்பார்கள். வேதியல் மாற்றங்களுக்கு ஆளாகி கலவையில் கலந்துள்ள உலோகம் கார்பன் துண்டுகளோடு போய் ஒட்டிக் கொள்ளும்.

உலோகம் களையப்பட்ட, சயனைடு கலந்த ஆபத்தான அந்தக் கழிவுகள் சுரங்கத்தின் சுற்றுவட்டாரங்களில் மலை போல் குவிக்கப்படுவதற்காக லாரிகளில் அனுப்பப்படும். உலோகம் ஒட்டிக் கொண்டிருக்கும் கார்பன் துண்டுகள் ஸ்ட்ரிப்பிங் வெஸ்ஸல் (Stripping Vessel) என்கிற பெரிய கலனுக்குள் செலுத்தப்பட்டு அங்கே அமிலக் கரைசலால் குளிப்பாட்டப்படும். அமிலக் கரைசல் கார்பனில் இருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும்.

அடுத்து உலோகத்தை சுத்திகரிக்கும் பணி. உலோகம் கலந்திருக்கும் கலவை நேர் மற்றும் எதிர் மின் தகடுகள் கொண்ட பெரிய மின்சார கலனுக்குள் செலுத்தப்படும். அங்கே கலவையின் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படும். சுத்தமான உலோகம் எதிர்மின் தகடுகளோடு ஒட்டிக் கொள்ள எஞ்சிய கழிவுகள் அகற்றப்பட்டு விடும்.

நிலத்தின் கீழ் நடக்கும் சுரங்கப் பணிகள் மட்டுமல்ல,  நிலத்தின் மேல் உள்ள சுரங்க ஆலைகளில் உலோகத்தை மண்ணிலிருந்தும் கல்லில் இருந்தும் பிரித்தெடுக்க செய்யப்படும் தொடர் நிகழ்வுகளும் தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சியெடுப்பவை தான்.  ஆபத்தான வேதியல் கலவைகள் கிளப்பும் நெடியோடு தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் அவர்களின் வாழ்க்கையை பெருகநகர போக்குவரத்து நெருக்கடியில் டீசல் புகைக்கு மூக்கைச் சுளிக்கும் நாம் எப்படித் தான் புரிந்து கொள்வது? அது அத்தனை கடினமும் இல்லை நேரடி அனுபவம் எல்லா நேரங்களிலும் தேவையுமில்லை,

அந்தத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை நம்மோடு பகிர்ந்து கொள்வதை கேட்க கனிவான காதுகளும் பதிவு செய்து வைக்க ஈரமான நெஞ்சமும் இருந்தால் கூட போதும். ஆனால், அது எல்லோருக்கு இருந்து விடுகிறதா என்ன?

நாம் பேசிக் கொண்டிருக்கும் உலோகமானது மண்ணிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு பிற கனிமங்களில் இருந்து பிரிக்கப்பட்டு, தர நிர்ணயம் செய்யப்பட்டு, சுரங்க நிர்வாகத்தால் உலோகத்திற்கான பிரத்யேக  சந்தையில் விற்கப்பட்டு, பின் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குண்டான பட்டறைகளில் முன்கூட்டியே தீர்மானம் செய்து தெரிவு செய்யப்பட்ட வடிவத்தில் வளைக்கப்பட்ட பின் தான் – உங்கள் கையில் மோதிரமாக மின்னிக் கொண்டிருக்கிறது.

உங்களால் மின்னும் அதன் அழகை ரசிக்க முடிகிறதா?
________________________________________

”மாலூர்ல செக்யூரிட்டியா இருக்கேன் சார். பேரு வேலு”

“சுரங்கம் மூடும் போது உங்களுக்கு எத்தனை வருச சர்வீஸ் இருந்தது”

“இருவத்தஞ்சி வருசம் போட்டேன். எங்கப்பாவுக்கு முப்பது வருசம். எங்க தாத்தாவுக்கு முப்பத்தஞ்சி வருசம்…”

”உள்ளே என்ன வேலை செய்திட்டு இருந்தீங்க?”

”எல்லாம் ஜென்ரல் லேபரு தான்”

“வேலை எப்படி இருந்தது?”

“அது என்னா சார்… கீழே போனா பொணம், மேல வந்தா பணம்”

”எவ்ளோ சம்பளம் வாங்கிட்டு இருந்தீங்க?”

“நாலாயிரத்தி முன்நூறு தந்தான்…பிடிச்சதுக்கு அப்புறம் முவாயிரத்தி தொள்ளாயிரம் கையில வந்தது. ரெண்டு பே கமிஷன் ஏமாத்திட்டான் சார்”

”உங்களுக்கு நுரையீரல்ல எத்தனை ஓட்டை இருக்கு”

“ஆஸ்பத்திரி கணக்கு முப்பது… ஆனா எப்படியும் நூறுக்கு மேல இருக்கனும்”

“…….”

“ஹா ஹா ஹா… இன்னா சார் மூஞ்சி சுருங்கிப் போச்சி? இதுக்கே பயந்துட்டியா? இருநூறுக்கு மேல போனா அஞ்சி வருசம் ஆயுசு சார். நமக்கு நூறு துளைக்கு மேல தான் இருக்கனும்… எத்தினி நம்பருன்னு சொல்லத் தெரியல. இன்னும் ஒரு நாலு வருசத்துக்காவது அப்பப்ப கொஞ்சம் மக்கார் பண்ணிகிட்டே வண்டி ஓடிடும்னு தான் நெனைக்கிறேன். அதுக்குள்ள புள்ளைக்கி ஒரு கலியாணத்தை முடிச்சிட்டா போதும்…”

சுரங்கத் தொழிலாளர்கள் அனைவருக்கும் (ஆம், விதிவிலக்கின்றி அனைவருக்கும்) நுரையீரலில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டே தீரும். அதை அவர்கள் தங்கள் பேச்சு வழக்கில் ’துளை’ என்கிறார்கள் அந்நோயின் பெயர் சிலிக்காஸிஸ்…

கட்டுரையின் தொடரும் பகுதிகளில் நாம் சிலிக்காஸிஸ் குறித்து மட்டுமல்ல, தொகுப்பாக கோலாரின் வரலாறு, மூடப்பட்ட தங்கச் சுரங்கத்தின் வரலாறு, மூடப்பட்டதன் உண்மையான பின்னணி, மக்களின் இன்றைய வாழ்க்கை குறித்து அறிந்து கொள்வோம்….

(தொடரும்)
_________________________________________________
–    வினவு செய்தியாளர்கள்
படங்கள் : நன்றி KGF Online

இனி உங்களுக்கு ரயில் பயணம் கிடையாது – மோடி

34

மோடி வந்தால் வளர்ச்சி வரும் என்று இணையத்தில் இடைவிடாமல் கரடியாய் கத்திய கோயிந்துகள் விரக்தியில் ஓடி ஒளிந்து கொள்ளும் வகையில் நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு.

மோடிஅரசு தாக்குதல்
நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு

அடுத்த 5 ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ், மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை முழுவதுமாக நீக்கி விட்டு அவற்றின் இடத்தில் மூன்றடுக்கு குளிர்பதன பெட்டியை பொருத்தப் போவதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, தென்னக ரயில்வேயின் பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் தயாரிப்பதை முழுமையாக நிறுத்தி விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மாற்றப்பட வேண்டிய நிலை வரும் போது அவை நீக்கப்பட்டு, குளிர்பதன பெட்டிகள் சேர்க்கப்படும்.

ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், தேவையான நிதியை திரட்ட இந்த முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. இந்த நவீனப்படுத்தலில் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வசதிகளை ஒழித்துவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டும்தான் ரயில் பயணம் என்பதை மோடி கும்பல் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

அரசுக்குத் தேவையான நிதியை திரட்ட ‘முதலாளிகளுக்கு வரியை உயர்த்தினால் அவர்கள் எல்லாம் வரி ஏய்ப்பு செய்வார்கள், அல்லது வேறு நாட்டுக்கு ஓடிப் போய் விடுவார்கள், நாடு வளராது’ என்று கார்ப்பரேட் வரிச்சலுகைகளை நியாயப்படுத்துகிறார்கள் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்கள். உண்மைதான், எவ்வளவு சுமையை இறக்கினாலும், ரயில் பயணத்தை குறைத்துக் கொண்டு, அல்லது பயணிப்பதையே நிறுத்திக் கொண்டு அடங்கிப் போகும் நடுத்தர வர்க்கத்தை மோடி தலைமையில் பிழிந்து எடுக்கப் போகிறது ஆளும் வர்க்கம். வேண்டுமானால், ‘இந்தியா ராக்கெட் விட்டது, லார்ட்ஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது’ என்று தேசப் பெருமிதத்தில் வயிற்றை நிரப்பிக் கொள்வது மட்டும்தான் நடுத்தரவர்க்கத்துக்கு எஞ்சியிருக்கும்.

இரண்டாம் வகுப்பு பெட்டிகளை ஒழித்துக் கட்டும் இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எர்ணாகுளம்-நிஜமுதீன்(டெல்லி) மங்களா எக்ஸ்பிரசில் ஒரு இரண்டாம் வகுப்பை பெட்டியை நீக்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த ரயிலில் ரூ 925 செலவில் 2-ம் வகுப்பில் டெல்லிக்கு பயணம் செய்தவர்கள் அதே பயணத்துக்கு ஏ.சி பெட்டியில் போக ரூ 2,370 செலவழிக்க வேண்டியிருக்கும்.

சென்ற ஞாயிற்றுக் கிழமை முதல் மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்–2 பெட்டி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி–4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது 10 ஆக குறைந்து, ஏசி பெட்டிகள் 4 ஆக உயர்ந்திருக்கின்றன; 72 டிக்கெட்டுகள் ஏசி கட்டணத்துக்கு மாறியிருக்கின்றன. படிப்படியாக 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 0 ஆகி, 3 ஏசி பெட்டிகள் 14 ஆக மாற்றப்படும்.

அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தட்கல் முறையில் மாற்று இடம் வழங்கப்படுகிறது. “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே பெட்டியில் இடம் ஒதுக்க முயற்சி செய்யப்படும்” என்று ஒரு அதிகாரி சமாதானம் கூறியிருக்கிறார். முன்பதிவு சுழற்சிக் காலம் (60 நாட்கள்) முடிவது வரை கூட பொறுக்காமல் மக்கள்மீது உடனடியாக தாக்குதலை இறக்கும் மோடியின் வேகம்தான் பன்னாட்டு/இந்திய முதலாளிகளின் விருப்பம்.

சென்னை எழும்பூரிலிருந்து மங்களூர் சென்டிரல் போகும் வண்டி எண் 16859-ல் எஸ்-7 என்ற பெட்டி ஒழித்துக் கட்டப்படுகிறது, மங்களூர் சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வண்டி எண் 16860ல் எஸ்-9 என்ற பெட்டி இனிமேல் இணைக்கப்படாது. அவற்றுக்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏசி சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் வண்டிகளில் இருந்து நீக்கப்படும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் நடு படுக்கையை அகற்றி விட்டு அவற்றை இருக்கை பயணிகள் மட்டும் செல்லும் ரயிலில் பயன்படுத்த போவதாக ரயில்வே கூறியிருக்கிறது.

மோடியின் வளர்ச்சி என்பது டாடாவுக்கும், அதானிக்கும், அம்பானிக்கும்தான், உழைக்கும் மக்கள் மீதும், நடுத்தர வர்க்கம் மீதும் அது பெரும் சுமையாக இறங்கும் என்பதை மறைத்து ‘ஆட்டோ ஓட்டுபவர்களும், இளநீர் வெட்டுபவர்களும், ஐ.டி துறையினரும் என சாதாரண மக்கள் பெருவாரியாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்‘ என நடுத்தர வர்க்க வாசகர்களை நம்பவைக்க முயன்ற கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி இப்போது ரயில் கட்டண உயர்வு குறித்தோ, 2-ம் வகுப்பு ஒழிப்பு என்ன சொல்வார்? வெப்ப மண்டல நாடான இந்தியாவில் இனி வெக்கையின்றி ஏசியில் ‘மக்கள்’ பயணம் செய்யலாம், வேர்வையின் கஷ்டங்கள் இல்லை என எழுதுவாரோ?

மேலும் ரயில் நிலையங்களில் ‘அங்கேயே கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம்’ என்றெல்லாம் இனி ‘பிளடி இந்தியாவை’ சலித்துக் கொண்டு அவர் எழுத வேண்டியதில்லை. ஏனெனில் இனி நம்மைப் போன்ற பரதேசிகளும், நடுத்தர வர்க்கமும் கூட ரயில்வே நிலையத்திற்கு போகவே மாட்டோம். உடை கலையாத கனவான்கள் மட்டும் வந்து போகுமிடமாக ரயில் நிலையங்கள் மாறிய பிறகு பத்ரி அவர்களின் கனவு ரயில் நிலையம் அமுலுக்கு வரும்.

மோடியின் ஆட்சியில் இத்தகைய சாதாரண மக்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் புல்லட் ரயில்களில் அல்லது ஏசி பெட்டியில் பயணிக்கும் கனவான்களுக்கென, ஸ்பெசல் நடைபாதை, பூங்காக்கள், நட்சத்திர விடுதி ஓய்வறைகள், சிறு மல்டிபிளக்சுகள், ஷாப்பிங்மால்கள், கிளப்புகள், ரயில்களையே மாளிகைகளாக்கும் திட்டம் எல்லாம் அமல்படுத்தலாம். இதற்கெல்லாம் நிதி வேண்டுமென்றால் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகளை ஒழிக்க வேண்டும் என்பது சரிதானே?.

ஏ.சி பெட்டியில் போக வசதியற்ற உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் ஏசி பெட்டிகளுக்கு பின் இணைக்கப்பட்டுள்ள சாதாரண பெட்டிகளில் கூட்டமாக தொங்கிக் கொண்டே வருவது பணக்காரர்களின் கண்களில் படாமல் தவிர்க்க அவர்களுக்கென தனி நடைமேடையை ஸ்டேசனுக்கு வெளியே அமைக்கவும் மோடி அரசு ஏற்பாடு செய்து தரும்.

தப்பித் தவறி கனவான்களின் நடைபாதையில் சாதாரண மக்கள் வந்து விட்டால் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கும் ரயில்வே வழிகாட்டுகிறது. கடந்த 25-ம் தேதி மும்பை புறநகர் ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு எடுத்திருந்த 65 வயது பெண் பயணி ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியிருக்கிறார். பயணச் சீட்டை பரிசோதித்த பெண் பரிசோதகர்கள் இருவர் அவரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். தன்னிடம் ரூ 25 மட்டும் இருப்பதாக பயணி சொல்லவே, அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டு அவமானப்படுத்தியிருக்கின்றனர்.

மேலும், சட்டங்களும், விதிமுறைகளும் உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு கறாராக அமல்படுத்தப்படும் என்பதற்கு டெல்லி போக்குவரத்துத் துறையும் வழிகாட்டுகிறது.

1973-ம் ஆண்டு ஒரு பயணிக்கு 15 பைசா சீட்டுக்கு பதிலாக 10 பைசா சீட்டு கொடுத்த பேருந்து நடத்துனர் ரன்வீர் சிங்-ஐ எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் 40 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனருக்கு ஆதரவாக பணியாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு உயர்நீதிமன்றத்தில் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்றமும் பணியாளர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு சொன்னது. அதற்குள் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டிருந்த ரன்வீர் சிங்குக்கு முன் தேதியிட்ட ஊதியம், ஓய்வுக்கால சலுகைகள் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம்.

‘சட்டத்தை எல்லாம் ஸ்டிரிக்டா இம்ப்ளிமென்ட் பண்ணணும் சார்’ என்று டிராஃபிக்  ராமசாமிகள் பேசும் வீரம் இது போன்ற வயதான ஏழை பெண்களிடமும், ரன்வீர் சிங் போன்ற தொழிலாளர்களிடம் பாய்ச்சப்படுகிறது. இந்திய அரசுக்கு இயற்கை எரிவாயு எடுத்து தர காண்டிராக்ட் எடுத்து, பல மடங்கு விலை உயர்த்தி வாங்க பிளாக் மெயில் செய்யும் அம்பானி, அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற சதி செய்த டாடா, மிட்டல் போன்ற முதலாளிகளிடம் இந்த சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மட்டுமல்ல, தேவைப்பட்டால் வளைந்து கொடுத்தோ இல்லை புதிதாக வேறு வடிவில் பிறந்தோ காப்பாற்றும்.

எந்த மக்களை ஓட்டுப் போட வைத்து ஆட்சிக்கு வருகிறார்களோ அந்த மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மாறாக காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காக ஆறுவழிச்சாலைகள், புல்லட் ரயில்கள், நவீன நகரங்கள் என்று திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொடுக்கின்றன.

ரயில் கட்டண உயர்வு, மானிய விலை சமையல் வாயு ரத்து, மாதம் தோறும் டீசல் விலை உயர்வு, சேவை வரி மூலம் மக்களை சுரண்டுதல் என்று அடுத்தடுத்து மோடி அரசு தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதைத் தவிர உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் வேறு வழியே இல்லை.

காவி கல்லுளிமங்கன்

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கிடையாது என்பதை ஏற்கப் போகிறீர்களா? இல்லை மோடிக்கு எதிராக களம் இறங்குவீர்களா?

–    அப்துல்

மேலும் படிக்க

நாமக்கட்டி ஆண்டால் பண்டாரம் பரதேசிகளே புரபசரு !

10

குஜராத்தில் அறிவியல் பாடம் : மகாபாரதத்தில் ஸ்டெம் செல்கள், வேதங்களில் கார்கள்!

குஜராத்தின் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கட்டாய பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரம், வரலாறு, புவியியல் பற்றிய தகவல்களை கற்பிப்பதோடு நிற்கப் போவதில்லை. அறிவியல் பற்றி குறிப்பாக முக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றி தனது சொந்த கண்ணோட்டத்தையும் அவை கற்றுக் கொடுக்கப் போகின்றன.

தீனாநாத் பத்ரா
‘அறிவியல் உண்மை’கள் அடங்கிய தேஜோமய் பாரத் புத்தகத்தை எழுதிய, ஆர்.எஸ்.எஸ்சின் கல்விப் பிரிவான வித்யா பாரதி நிறுவனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் தீனாநாத் பத்ரா.

“…ஸ்டெம் செல் ஆராய்ச்சியை தாங்கள்தான் கண்டு பிடித்ததாக அமெரிக்கா சொல்லிக் கொள்கிறது. ஆனால், இந்தியாவின் டாக்டர் பால்கிருஷ்ண கன்பத் மாதாபூர்கர் உடல் உறுப்புகளை மறுஉருவாக்கம் செய்வதற்கான வடிவுரிமையை ஏற்கனவே பெற்றிருக்கிறார். இந்த ஆராய்ச்சி புதியது இல்லை, டாக்டர் மாதாபூர்கர் இதை மகாபாரதத்திலிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். .

‘குந்திக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான ஒரு மகன் பிறந்தான். இரண்டு ஆண்டுகளாக கருத்தரிக்க முடியாமல் இருந்த காந்தாரி இதைக் கேள்விப்பட்டவுடன் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அவரது வயிற்றிலிருந்து ஒரு சதைப் பிண்டம் வெளியில் வந்தது. ரிஷி வியாசனை வரவழைத்தனர். அவர் சதைப் பிண்டத்தை பார்த்து விட்டு அதை ஒரு குளிர்ச்சியான குடத்தில், சில மூலிகைகளுடன் போட்டு வைத்தார். பின் அந்த சதைப்பிண்டத்தை 100 துண்டுகளாக வெட்டி அவற்றை நெய் நிரம்பிய 100 குடங்களில் தனித்தனியாக போட்டு வைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து 100 கவுரவர்கள் பிறந்தனர்.’

மகாபாரதத்தில் இதைப் படித்ததும், மாதாபுர்கர் ஸ்டெம் செல் தன்னுடைய கண்டுபிடிப்பு இல்லை என்று உணர்ந்தார். அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” தேஜோமய் பாரத் பக்கம் 92-93.

“தொலைக்காட்சியை 1926-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் லோகி பயர்ட் என்ற பாதிரியார் கண்டுபிடித்தார் என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால், இதை விட புராதனமான தூர்தர்சனுக்கு நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறோம். இந்திய ரிஷிகள் தமது யோகக் கலையின் மூலம் திவ்ய திருஷ்டியை பெற்றிருக்கிறார்கள். தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு இதில் ஆரம்பித்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மகாபாரதத்தில் அஸ்தினாபுர அரண்மனைக்குள் உட்கார்ந்து கொண்டு தனது திவ்ய சக்தியை பயன்படுத்தி சஞ்சயன் குருட்டு திருதராஷ்டிரனுக்கு குருட்சேத்திரத்தில் நடக்கும் மகாபாரத போர் பற்றி நேரடி வருணனை அளித்திருக்கிறார்.” — பக்கம் 64.

“இன்று மோட்டார் கார் என்று அறியப்படுவது வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. அது அனஷ்வா ரத் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக ஒரு ரதம் குதிரைகளால் இழுக்கப்படுகிறது. அனஷ்வா ரத் என்றால் குதிரைகளால் இழுக்கப்படாத ரதம் என்று பொருள் அல்லது யந்த்ர ரதம். அதுதான் இன்றைய மோட்டார் கார். ரிக் வேதம் இதைப் பற்றி குறிப்பிடுகிறது…” — பக்கம் 60

மேலே சொன்ன பகுதிகள்’ அடங்கிய தேஜோமய் பாரத் என்ற 125 பக்க புத்தகம் குஜராத் அரசின் அனைத்து ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டாய பாடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில பள்ளி பாடநூல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் வரலாறு, அறிவியல், புவியியல், மதம் மற்றும் பிற “அடிப்படைகள்” பற்றிய “உண்மைகளை” சொல்ல முயற்சிக்கிறது.

நரேந்திர மோடி
தீனாநாத் பத்ராவின் புத்தகங்களுக்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆசி வழங்கினார்.

தேஜோமய் பாரத் புத்தகம், ஆர்.எஸ்.எஸ்சின் கல்விப் பிரிவான வித்யா பாரதி நிறுவனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் தீனாநாத் பத்ராவால் எழுதப்பட்ட இன்னும் 8 புத்தகங்களுடன் வினியோகிக்கப்பட உள்ளது. குஜராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு குஜராத் பாடநூல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பத்ராவின் புத்தகங்கள் மாநில அரசால் கட்டாய பாடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை தாங்கி வெளியாகியுள்ளது.

புத்தகத்தில் ஆத்யாத்மிக் பாரத் (ஆன்மீக இந்தியா), அகண்ட பாரத் (பிரிக்கப்படாத இந்தியா), விக்யான்மய் பாரத் (விஞ்ஞான இந்தியா), சமர்த் பாரத் (திறமையான இந்தியா) போன்ற அத்தியாயங்கள் உள்ளன.

புத்தகத்தின் உள்ளடக்க ஆலோசகர் ஹர்ஷத் ஷா, காந்திநகர் குழந்தைகள் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர். அவர் 2006 வரை குஜராத் வித்யாபாரதியின் தலைவராக இருந்தவர். மேற்பார்வை குழுவில் வித்யா பாரதியுடன் தொடர்புடைய ருதா பர்மார் மற்றும் ரேகா சுதாஸ்மா ஆகியோர் உள்ளனர்.

“தேஜோமய் பாரத் நமது செறிவான கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீகம், தேசப் பற்று பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கிறது. மாணவர்களுக்கு பொருத்தமான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வினியோகிக்கப்பட உள்ளன. மற்றவர்களுக்கு ரூ 73 விலையில் 5,000 பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.” என்கிறார் ஹர்ஷத் ஷா.

தேஜோமய் பாரத்தின் “உண்மை”களை என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்துடன் எப்படி பொருத்துவீர்கள் என்று கேட்ட போது, அகமதாபாத் மண்டல கேந்திரீய வித்யாலயா கூட்டமைப்பின் உதவி ஆணையர் பி தேவ் குமார், “அரசின் கொள்கைகளை பின்பற்றி அமல்படுத்துவதுதான் அரசு ஊழியரான எனது கடமை. என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்தில் இது வரை எந்த மாற்றமும் எங்களுக்கு சொல்லப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

பாரதம்
“நமது அன்புக்குரிய பாரத பூமியை சூத்திர பெயரான ‘இந்தியா’ என்று அழைத்து நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்ளக் கூடாது”

(அதாவது, இந்துத்துவத்திற்கேற்ப என்.சி.ஆர்.டி அறிவியல் பாடத் திட்டங்களை மோடி அரசு மாற்றி அமைத்தால், அடிபணிந்து மாணவர்களுக்கு அதை போதிப்பதுதான் தனது கடமை என்கிறார் அவர்)

நமது நாட்டை இந்தியா என்று அழைப்பதற்கு தேஜோமய் பாரத் எதிர்ப்பு தெரிவிக்கிறது. “நமது அன்புக்குரிய பாரத பூமியை சூத்திர பெயரான ‘இந்தியா’ என்று அழைத்து நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்ளக் கூடாது. நமது நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பிரிட்டிஷாருக்கு என்ன உரிமை இருக்கிறது. நாம் இந்த சதித்திட்டத்துக்கு பலியாகி நமது நாட்டின் ஆன்மாவை மறந்து விடக் கூடாது” (பக்கம் 53)

“மதத்துக்காக உயிரை விடுவது சிறந்தது. அன்னிய மதம் துன்பத்தின் ஊற்றுக் கண்” என்று இந்தப் புத்தகம் பக்கம் 118-ல் குறிப்பிடுகிறது. “குரு கோவிந்த் சிங்குக்கு அஜித் சிங், ஜூசார் சிங், ஜோராவர் சிங், ஃபதே சிங் என்று நான்கு மகன்கள். அவர்களை மதம் மாற்றுவதற்காக அரசரின் ஆட்கள் பெரிதும் முயற்சித்தார்கள். ஆனால், “எங்கள் தாத்தா குரு தேஜ்பகதூர் இந்து மதத்தை காப்பதற்காக உயிர் தியாகம் செய்தார். அது போல நாங்களும் எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர எங்கள் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று கூறி விட்டார்கள்.

சரி, அவர்களே சொல்லிவிட்டார்கள், வேசிமகன் என்றழைக்கப்படும் சூத்திரர்களுக்குத்தான் இந்தியா சொந்தம், பார்ப்பன பனியா ‘மேல்’ சாதியினருக்குத்தான் பாரதம் சொந்தம்! இனி பாரதத்திற்கு பாடை கட்டும் வேலையை பார்த்தால்தான் உழைக்கும் மக்களின் இந்தியாவை மீட்க முடியும். இல்லையேல் மீண்டும் மனு தருமம், வருணாசிரம கொடுமைகள், கல்வி-அறிவை மறுக்கும் பார்ப்பனிய குருகுல மடங்கள், பெண்களின் கால்களுக்கு சங்கிலி போடும் ஆணாதிக்க கொடுமைகள் அத்தனையும் முழு வீச்சில் அமல்படுத்தப்படும்.

நன்றி Science lesson from Gujarat: Stem cells in Mahabharata, cars in Veda 

இந்த தருணத்தில் அதாவது 2014-ம் ஆண்டில் நடக்கும் மோடி ஆட்சி எப்படி இருக்குமென்று  1993-ம் ஆண்டே கணித்த, “நாமக்கட்டி ஆளப் போகுது...” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடலை கேட்டு மகிழுங்கள்.

பாரதீய ஜனதா… எப்பேற்பட்ட கட்சி தெரியுமா.  பார்ப்பனர்கள், பணக்கார சேட்டுக்கள், பழைய மன்னர்கள்  இவனுங்க நடத்துற கட்சி.

அத்வானியும், அசோக் சிங்காலும், முரளி மனோகர் ஜோஷியும், பஜாஜும், டால்மியாவும், விஜயராஜே சிந்தியாவும் எல்லாம் மேப்படி ஆளுங்கதான்.

இவனுங்க ஆட்சிக்கு வந்தா கேடு காலம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. உழைப்பாளி மக்கள் எல்லாருக்கும் ஊத்திக் கொழைச்சி ஒரே நாமமா போட்டுருவானுங்க. சாமானியப்பட்ட நாமம் இல்ல, ராஆஆஆம நாமம்.

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு
நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது

ஏ படிச்சவனுக்கு பட்ட நாமம்,
பாட்டாளிக்கு குட்ட நாமம்
விவசாயிக்கு வட்ட நாமம்
நம்ம தேசத்துக்கே இரட்டை நாமம்

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது

விடியகாலம் எழுந்திருச்சி, வேகமாக குளிச்சு முழுவி
மாட்டுக்கெல்லாம் நாமம் போட்டு, மறக்காம சாணம் போட்டு
ஏரு பூட்டி வயலில் இறங்கி, வேர்வை சிந்த பாடுபட்டு
அந்தி சாயும் நேரம் பார்த்து ஆண்டை வூடு திரும்பி வந்து
வுழுந்து அவனை கும்பிட்டாக்க
ரெண்டு உண்டக்கட்டி தந்திடுவான்

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது

பறையடிக்கிற சாதிக்கு பட்டம் படிப்பெல்லாம் எதுக்கு
துணி வெளுக்குற சாதிக்கு தொழில் கல்விதான் எதுக்கு
அப்பன் தொழிலை செய்யிறதுக்கு இட ஒதுக்கீடு எதுக்கு
மண்டலுக்கு பண்டல் கட்டு, மனுநீதியை தூசி தட்டு

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது

சங்கம் வைக்க வேணுமா, இந்தா புடி சார்ஜ்ஷீட்
ஏ இன்குலாபு சிந்தாபாத், இன்கிரிமென்டு கட்டு
போனசு வேணுமா போயிட்டு வா டிஸ்மிஸ்ஸூ
அட கோரிக்கையை சொல்லணும்னா வேற ஒரு ரூட்டு இருக்கு
ஒரு கொட்டாய கட்டிகிட்டு பஜகோவிந்தம் பாடு.

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது

கடனப்பத்தி கவலை விடு, கடவுள் மேல பாரத்தை போடு
ஆலயங்கள் இருக்கும் போது ஆலைகள் எதுக்கு விடு
அகண்ட பாரதத்திலே அமெரிக்காவை இழுத்துப் போடு
அந்த அமெரிக்கா காரனையும் இந்துவாக மாத்திப்புடு

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது

அம்மான்னு சொல்லாதே, மாதாஜின்னு சொல்லு
அப்பான்னு சொல்லாதே, பிதாஜின்னு சொல்லு
வணக்கத்தை தள்ளு, நமஸ்தேஜி சொல்லு
ஆழக் குழி தோண்டி தமிழ அதில் தள்ளு

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது

பண்டாரம் பரதேசிங்கதான் பள்ளிக்கூட வாத்தியாரு
பத்து அவதாரங்கதான் பாரதத்தின் வரலாறு
பூகோள பாடத்திலே சிவன் தலையில கங்கை ஆறு

அப்ப பாடம் நடத்துறது யாரு

வரலாறு சொல்லித் தர வாரியாரு வருவாரு
விஞ்ஞான தமிழ் வாத்தியாரெல்லாம் விட்டாப் போதும்னு ஓடுவாரு
அத்தனைக்கும் அத்தாரிட்டி காஞ்சி சங்கராச்சாரியாரு

நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது

– மக்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டில் வெளியிட்ட “அசுர கானம்” என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ள பாடல்.

60 நிமிட பாடல் ஒலி குறுந்தகடு பார்ப்பனிய இந்து மதவெறியை எதிர்ப்போரின் ஆயுதம் அசுரகானம்

குறுந்தகட்டின் விலை ரூ 30

தொடர்புக்கு:
————————————–

புதிய கலாச்சாரம், 16,முல்லைநகர் வணிக வளாகம்,

2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),

அசோக் நகர், சென்னை – 600 083.

தொலைபேசி எண்: 044-23718706

கழிப்பறை கட்ட மறுத்தால் கலெக்டர் ஆபிசில் மலம் கொட்டுவோம் !

2

திருச்சி அரியமங்கலம் – உக்கடை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கழிவறை கட்டித்தர மறுக்கும் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம்!

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்கள் சாதாரண உழைக்கும் வர்க்கத்தினரே.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தனிக்கழிவறை கட்ட பொருளாதார வசதி இல்லாததால் மாநகராட்சி கழிப்பறையை நம்பி உள்ளனர்.  20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்படாமல் சிதிலமடைந்த ஒரு கழிப்பறையும், 8 கழிவறைகள் கொண்ட ஒரு கழிப்பறையும் உள்ளன. இதில் 8 கழிவறைகள் உள்ள கழிப்பறை பெண்களுக்காகவும், ஆண்களுக்கு கழிப்பறை இல்லாத நிலை உள்ளது. பெண்கள் கழிப்பறையில் 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 2 கழிப்பறை என்ற அவலநிலை உள்ளது.

மாநகராட்சி முறையாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தராததால் 2 மாதத்திற்கு முன்பு அந்த 2 கழிவறைகளும் செயல்படாமல் இழுத்துப் பூட்டப்பட்டுவிட்டது. இதனால் பெரும்பாலான பெண்கள் எப்போது இரவு நேரம் வரும் என்று எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவல நிலை குறித்து எத்தனையோ முறை மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என மாறி மாறி புகார் மனு கொடுத்தும் அதிகார வர்க்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையை மாற்றி தருவதாக கூறி பல அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்கி ஏப்பம் விட்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இதனால் அரசியல் கட்சி, அதிகாரிகள் என எவர் மீதும் நம்பிக்கை இழந்த மக்களின் நிலையை கேள்விப்பட்டு அங்கு சென்ற புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மக்களை கூட்டி பேசினர்.

அதிகார வர்க்கம் என்பது இயல்பிலேயே முதலாளிகளுக்காகவும், ஆளும் வர்க்கத்திற்காகவும் சேவை செய்யக் கூடியது என்றும், அது ஒரு போதும் உழைக்கும் வர்க்கத்திற்காக சேவை செய்யாது என்றும், இதனை மாற்ற நமக்கான ஒரு போராட்டக்கமிட்டி அமைத்து, அரசை எதிர்த்து போராடினால் மட்டுமே நமது கோரிக்கை நிறைவேறும் என்றும் விளக்கினோம். நாம் பேசியதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் மக்கள், நமது அமைப்பும் வழக்கம் போல் வந்து சும்மா பேசி சென்று விடுவார்களோ என்று சந்தேகத்துடனே நம்மை அணுகினர். அதை செயலில் பரிசீலியுங்கள் என்று நம்பிக்கையூட்டி, முதலில் போராட்டக் கமிட்டி கட்டப்பட்டது. பிறகு மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் உக்கடை பகுதி பொதுமக்கள் சார்பில் ,

‘ திருச்சி அரியமங்கலம் – உக்கடை பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கழிவறை கட்டித்தர மறுக்கும் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம்!

நவீன தீண்டாமை கொடுமைக்கெதிராக மலம் அள்ளிக் கொட்டும் போராட்டம்

இடம் :- மாவட்ட ஆட்சியர் அலுவலம் திருச்சி. ‘

மேற்கண்ட முழக்கத்துடன் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி பிரச்சாரம் செய்யப்ட்டது.

அடுத்த நாள் காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நம்மை தொடர்பு கொண்டு, “ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி உங்களை பார்ப்பதற்கு நேரம் கேட்டார்” என்று பு.மா.இ.மு மாவட்ட செயலாளரிடம் கேட்டனர். அவர் மாலை 5 மணிக்கு பார்ப்பதாக கூறினார். “ஊர்மக்கள் வேலைக்கு சென்று வர இரவு நேரம் ஆகும் என்பதால், காலை 6 மணியளவில் ஊர்மக்களை கூட்டி வைக்கிறோம், வந்து பேசி உத்தரவாதமளியுங்கள்” என்று கூறினோம்.

பிறகு மறுநாள் காலை (11-07-14) அன்று மக்களிடம் இந்த விசயத்தை சொல்லும் போது ‘எவனாவது வருவான், பாத்துட்டு செஞ்சி தரோம்னு சொல்லிட்டு போயிருவான், இதுக்கெதுக்கு தோழர் எல்லாரும் இருக்கணும்’ என்று மக்கள் கேட்டனர். “இன்று ஒருநாள் மட்டும் இருங்கள்” என்று நாம் (பு.மா.இ.மு) சொன்னதும் மக்கள் அனைவரும் இருந்தனர்.

மாநகரசெயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவ ராமன் தலைமையில் பல்வேறு அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் வந்ததை மக்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அதுவரை அந்தப்பக்கமே எட்டிப்பாக்காத மாமன்ற உறுப்பினர் அன்புலெட்சுமி அவரது சகோதரர்களுடன் ஓடோடி வந்தார்.

இவற்றை எல்லாம் பரிசீலித்து சொல்ல அரை மணி நேரம் ஆகும். நீங்கள் அனைவரும் அருகில் உள்ள வட்ட அலுவலகத்திற்கு வாருங்கள் என அதிகாரிகள் நம்மையும், மக்களையும் அழைத்தனர். மக்களிடம் இதை சொல்லி அப்பகுதி போராட்டக்கமிட்டியுடன் தோழர்கள் சென்றனர்.

ஒவ்வொரு கோரிக்கையாக ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் செய்து தருகிறோம் என்று எழுதி கையெழுத்திட்டு மக்களிடம் கொடுத்தார், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவ ராமன். இதுவரை எழுத்துபூர்வமான உத்திரவாதம் எதுவும் மாநகராட்சி அதிகாரிகள் தந்ததில்லை. முதல் முறை அவர்களே நேரே வந்து நம்மிடம் ஆவணங்களை தருகிறார்கள். அதனால் எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்துள்ளது என்றனர் மக்கள்.

“நாம் அளித்த கோரிக்கைகளை அவர்கள் கொடுத்த கால கெடுவிற்குள் செய்து முடிக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்” என்றும், “அதுவரை தற்காலிகமாக நிறுத்தலாமா?” என்று கேட்டபொழுது, ஊர்மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். “முழுவதுமாக போராட்டத்தை நிறுத்தவில்லை, தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தப்பட்டது” என்று எழுதுமாறு மக்கள் கூறினர். அதனடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலாளர் தோழர். சேக் எழுதி கையெழுத்திட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

நமது போராட்டம் அதிகாரிகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் போது தான் வேலைகள் நடக்கும் என்றும், அதற்கு சங்கமாகவும், போராட்டக்கமிட்டியாக இணைந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றும், சங்கமாக இணைவதன் அவசியத்தை விளக்கியும் மக்களிடம் தோழர்கள் பேசினர்.

அதிகாரிகள் 3 மாதத்திற்குள் கழிவறையை கட்டி தந்து விடுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்துள்ளனர். அது நடைபெறாதபட்சத்தில் போராட்டம் மீண்டும் தொடரும். அந்த வகையில் மக்களை ஒன்றிணைக்கும் வேலையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அங்கு செயல்பட்டு வருகிறது.

இவண்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
திருச்சி.
தொடர்புக்கு :- 9943176246

தஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு

29

மோடி அரசின் சமஸ்கிருத வார கொண்டாட்டம் – மனுதர்மத்தை நிலைநாட்டும் சதித் திட்டம்

என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த ஜூலை 25 அன்று காலை 10.30 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சூத்திரன் படிப்பதை தடுப்பது மனுநீதி!

சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி அடிப்பது மோடிநீதி!

சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் மோடிஅரசின் இந்து மதநெறி பண்பாட்டுத் தாக்குதலை முறியடிப்போம்!

என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கோரும் அரசு சுற்றறிக்கை எரிக்கப்பட்டது.

மகஇக  மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் தனது உரையில்,  “பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு பேரும் தனியார் மய, தாராள மய, உலகமய கொள்கையை அமல்படுத்துகின்றனர். பா.ஜ.க அரசு வெளிப்படையாக இந்து மதவெறியை தூண்டி விட்டு பார்ப்பன பாசிசத்தை வளர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்
தொடர்புக்கு : 9443157641, 9443188285

வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவுபடுத்திய நீதிபதி கர்ணன் !

6

“மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுபடுத்திய நாட்டமை நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!”

கடந்த (24/07/2014) அன்று மூத்த வழக்குரைஞரும் மக்கள் வழக்குரைஞருமான சங்கரசுப்பு அவர்கள் அவருடைய வழக்கிற்காக ஆஜராகும் பொழுது, நீதிபதி கர்ணன்

“எலி அம்மணமா ஓடுதுன்னு என போஸ்டர் ஓட்டுறியா?
இரு, இரு! உன்ன புழலுக்கு அனுப்பி, களி தின்ன வைக்கிறேன் பார்”

– என ஒருமையிலும், மரியாதை இல்லாமலும் ஆவேசமாக கத்தினார்.

ஏன் இந்த ஆவேசம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாதுமணல் கொள்ளையன், மக்கள் விரோத தேசத்துரோக வைகுண்டராஜன் தரப்பு மத்திய அரசிடம் தாதுமணல் எடுப்பதற்கான லைசென்ஸை புதுப்பிக்க முயன்ற பொழுது, மத்திய அரசு அதை ரத்துசெய்துவிட்டது.

மத்திய அரசு, இந்நாட்டின் கனிம வளங்கள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்திற்காக லைசன்சை ரத்து செய்யவில்லை. மணலில் தாதுப்பொருளை பிரித்து எடுக்கும் பொழுது அதில் இருந்து பரவும் மாசுவினால் ஏற்படும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவும் ரத்து செய்யவில்லை. தப்பும் தவறுமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே ரத்து செய்தது!

இயற்கை – கனிமவளம் சூறையாடப்படுவது, இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்து மத்திய மாநில அரசுகள் கவலைப்படாததற்கு காரணம் அவை நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய, தாராளமய, உலகமய மறுகாலனியாதிக்க கொள்கைகளே! இந்த நாசகாரக் கொள்ளையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த அடிப்படையில் தான் தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராகவும், இயற்கை கனிம வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருகிறது.

இதன் தொடர்ச்சியாகத் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் தாதுமணல் சூறையாடலையும் இதனால் அப்பாவி மக்கள் கேன்சர் நோய் இன்னும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை முன்னெடுத்தது!

  • மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து, பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளை மீனவ மக்கள் உதவியுடன் ஆய்வு செய்து, வைகுண்டராஜன் அடித்த தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்தியது.
  • ஊடகங்கள் மூலமாகவும், நேரடி பிரச்சாரத்தின் மூலமாகவும் மக்கள் மத்தியில் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தியது.
  • தமிழகம் தழுவிய அளவில் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் என தொடர்ந்து அம்பலப்படுத்தவும் செய்தது.
  • உண்மை அறியும் குழு அறிக்கையை லட்சகணக்கில் அச்சிட்டு மக்கள் மத்தியில் விநியோகித்தது.
  • தமிழக அரசு நியமித்து ஆய்வு செய்த சுகன் தீப் சிங் பேடியின் அறிக்கையை வெளியிட வேண்டும். தாது மணல் அள்ளுவதை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என மதுரை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை (W.P. (Md) No: 6683/2014) தாக்கல் செய்து உள்ளது.

இத்தருணத்தில் தான் தாதுமணல் கொள்ளையன் லைசென்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லி சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கண்ணன் அவர்களிடம் வைகுண்டராஜன் தரப்பு வழக்கை தாக்கல் செய்தது. இதை அறிந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ளும்படி மனுதாக்கல் செய்தது.

இதனடிப்படையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்ந்த வழக்குரைஞர்கள் (W.P. No.12862 to W.P.No: 12880) வழக்காடும் பொழுது நீத்பதி கர்ணன் அதை காது கொடுத்து கேட்காமல், “நீங்கள் என்ன சமூக ஆர்வலரா? சுதந்திரத்தை வாங்கித் தந்தவரா? எப்பொழுது பார்த்தாலும் விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே உங்கள் வேலையாகிவிட்டது. அரசாங்கம் லைசென்ஸ் தருகிறது. அவர்கள் லைசன்ஸ் பெற்று கனிமங்களை அள்ளுகிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது? கடல் எங்கே இருக்கிறது? ஊர் எங்கே இருக்கிறது? எதற்காக வந்து இங்கே தொல்லை தருகிறீர்கள்?” என 15 நிமிடம் வைகுண்டராஜன் தரப்பு வழக்குரைஞரைப் போல கடுமையாக கத்தித் தீர்த்தார்.

வழக்கின் விசாரணையில் நடுநிலையோடு விபரங்களை கேட்டறியாமல், வைகுண்டராஜன் வழக்குரைஞரை போல பேசுவதை குறிப்பிட்டு, இந்த வழக்கை நீதிபதி கர்ணன் விசாரிக்ககூடாது என மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தலைமை நீதிபதியிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்பு ஆஜரானார். உடனே நீதிபதி கர்ணன் “எந்த முகாந்தரத்தில் இந்த வழக்கில் சேர்கிறீர்கள்? மனுதாரருக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்?” என சீறினார்.

“மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்கள். அந்த பகுதியில் சுற்றுச் சூழலே கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அரசும் ஒரு ஆய்வை நடத்தி கனிமம் அள்ளுவதை தடை செய்துள்ளது. அந்தத் தடையை விலக்கி, கனிமங்கள் அள்ளுவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளித்தால் கனிம கொள்ளையர்களுக்கு இந்த நீதிமன்றம் உதவி செய்வதாக ஆகிவிடும்” என்றார் சங்கரசுப்பு.

உடனே நீதிபதி கர்ணன் “என்ன துணிச்சல் உங்களுக்கு? நான் கனிம கொள்ளையர்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்ல! இப்போதே உடனடியாக அவர்கள் கேட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டு விடுவேன். என் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. மீறிப்போனால் என்ன செய்வீர்கள்! என்னைப் பற்றி நோட்டிஸ் போடுவீர்கள். ஆர்ப்பாட்டம் செய்வீர்கள்; அவ்வளவு தானே..! என்னுடைய சர்வீஸில் இதுபோல எத்தனையோ பார்த்துவிட்டேன். இதெல்லாம் எனக்கு சாதாரணம். இதற்கெல்லாம் அசரும் நபரும் நான் அல்ல!” என சீறினார்.

இதற்கு வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்கள் “கனிம கொள்ளையர்களுக்கு நீதிமன்றம் துணைபோகிறது என்று சொல்லவில்லை. நீதிமன்றம் துணை போய்விடக்கூடாதே என்று தான் சொன்னேன்” என நிதானமாக விளக்கமளித்தார்.

“வைகுண்டராஜனால் அரசாங்கத்துக்கு எத்தனை வரி வருவாய் வருகிறது என தெரியுமா? இப்படிப்பட்டவர்கள் தொழில் செய்வதால் தான் அரசுக்கு வரி வருவாய் வருகிறது” என்று வைகுண்டராஜன் வக்கீலைப் போல வக்காலத்து வாங்கினார் நீதிபதி கர்ணன்.

இதற்கும் வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்கள் “தொழில் வளம் என்பது சுற்றுச்சூழலை அழித்து வளர்ந்தால் அதை எதிர்க்கவேண்டியது எங்களது கடமை. இந்த கனிமக் கொள்ளையின் காரணமாக கடலே சிவப்பு நிறமாக மாசுபட்டிருக்கிறது. மக்களுக்கு கேன்சர், இன்னும் இதுபோன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கியிருக்கின்றன” என்று விளக்கமளித்தார்.

“கேன்சர் வந்ததென்றால் மருத்துவ சான்றிதழ் எங்கே? உடம்புக்கு முடியவில்லை என்றால் 108 ஆம்புலன்ஸை அழையுங்கள். மருத்துவனையில் போய் படுங்கள்” என மக்களின் உயிரை மயிராக மதித்து பதிலளித்தார்.

மீண்டும் மதியம் வந்து தீர்ப்பளிக்கிறேன் என சொல்லிவிட்டு, மதியத்திற்கு பிறகு அமர்ந்ததும் நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு, இறுதியில் “விசாரணையை பிறகு தொடர்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றவர், தாதுமணல் கொள்ளையனுக்கு ஆதரவாக வாதாடியதோடு அவனுடைய தரப்பு வழக்குரைஞர் தான் என்பதை நிரூபித்துவிட்டார்.

இதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக

“இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா?

பொதுமக்களே, வழக்குரைஞர்களே!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன்.

இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.
எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா?
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த தாதுமணலை
சிந்தாமல் சிதறாமல் நாடு கடத்துவதற்கு
அனுமதி வழங்கவே!

இப்பொழுது புரிகிறதா?
எலி ஏன் அம்மணமாய் ஓடுகிறதென்று?
கடலோர மக்களின் உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
மக்கள் விரோத, தேசத்துரோக வைகுண்டராஜனுக்கு
துணை போகும் நீதிபதி கர்ணனின் நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம்!”

– என்ற முழக்கங்களை வடித்து சுவரொட்டிகளாக ஒட்டினோம்.

வழக்கில் எதிர்மனுதாரராக இணைந்ததும், சுவரொட்டி ஒட்டியதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து வழக்காடிய மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவைத்தான் நீதிபதி கர்ணன் இவ்வளவு இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

இப்படி ஒருமையில் பேசி, இழிவாக பேசிய நீதிபதி கர்ணனை மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்பு அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும், வழக்குரைஞர்களை தரக்குறைவாக நடத்தும் நீதிபதி கர்ணனின் நாட்டமைத்தனத்தை முறியடிக்கவும் அனைத்து வழக்குரைஞர்களும் ஓர் அணியாக திரண்டு போராடுவோம்.

இது தொடர்பாக கடந்த 25-ம் தேதியன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை கிளை சார்பாக “மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய நாட்டமை நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!”

என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் நுழைவுவாயிலில் மதியம் 1.30 அளவில் ஆவின் கேட்டருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

“இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா?

பொதுமக்களே, வழக்குரைஞர்களே!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன்.

இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

கடலோர மக்களின் உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
மக்கள் விரோத, தேசத்துரோக வைகுண்டராஜனுக்கு
துணை போகும் நீதிபதி கர்ணனின் நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம்!

மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!
மக்கள் வழக்குரைஞர் சங்கரசுப்புவிடம்
பகிரங்க மன்னிப்பு கேள்!”

முழக்கங்களை உயர்நீதி மன்றம் முழுவதும் எதிரொலித்தனர்.

1000 துண்டறிக்கைகள் வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ஆர்வத்துடன் எல்லோரும் வாங்கி சென்று படித்தார்கள். குறைவான நேரத்திலேயே துண்டறிக்கைகள் தீர்ந்து போனது!

மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், ஜனநாயக சக்திகளும், வழக்குரைஞர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழமையுடன்,

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை, தொடர்புக்கு : 9842812062

சதுரங்க வேட்டை: ஏமாற்றுக்காரன் ரசிக்கப்படுவது ஏன் ?

10
sathuranga-vettail 1

sathuranga-vettail 1துரங்க போட்டிகளில் பல உத்திகள், பாணிகள் உண்டென்றாலும் பொதுவில் தாக்குதல், தற்காப்பு என இரண்டாகப் பிரிக்கலாம். எந்தக் களமாக இருந்தாலும், சண்டை எனப்படுவது தன்னை பாதுகாத்துக் கொண்டு எதிரியை வீழ்த்துவதுதான். ஆனால் சதுரங்கத்தில் ஒரே அளவு படை, மீற முடியாத விதிமுறை காரணமாக தாக்குதல் பாணிதான் பலரும் ஆட விரும்பும் முறை.

தற்காப்பு என்பது எதிரியின் ஆற்றலுக்கு பயந்து பாதுகாப்பாக ஆடுவது என்ற வகையிலும் இருக்கும். ஆனால் அதே பயம் இருப்பதாக காட்டிக் கொண்டு எதிராளியை திசைதிருப்புவது வேறு வகை.

இந்த உளவியலின் படி எதிராளியை தாக்கும்படி ஆசை காட்டி, உள்ளிழுத்து, தவற வைத்து இறுதியில் ராஜாவிற்கு குறி வைத்து ஆட்டத்தை வெல்ல வேண்டும். இந்தக் கூற்றின் பொருளை போட்டியில் ஒரு எதிராளிக்கு உணர வைப்பது கடினம். ஒரு கணத்திலாவது இந்த உளவியல் தாக்குதலில் எதிராளியை விழ வைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம்.

சதுரங்க வேட்டைக் கலையில் கொட்டை போட்ட நாயகன் காந்தி பாபு அவர்களில் ஒருவன். பாதையோர மூணு சீட்டிலிருந்து, கோபுரக் கலச ரைஸ் புல்லிங் வரை அவனது ஏமாற்றுக் கலையின் ‘படைப்புத்திறனுக்கு’ ஏமாறாதவர்கள் எவருமில்லை. படத்தைப் பார்க்கும் மக்களை எடுத்துக் கொண்டாலும் ரசிக்காதவர் மிச்சமில்லை.

பழங்கால சந்தன வண்ண செவ்வியல் வடிவமைப்பு அட்டைகளில் தனித்தனி அத்தியாயங்களாக காட்டப்படுகிறது காந்தியின் யாத்திரை. அட்டையில் பழமை இருந்தாலும் சமகால நவீன உலகில்தான் காந்தி பாபுவின் பயணம். காசு தேடும் இந்த ஓட்டத்தில் அவனோடு இறுதி வரை ஒரு சிலரைத் தவிர்த்துவிட்டு பணம் தவிர யாரும் உடன் வருவதில்லை – அவனும் விடுவதில்லை – அவர்களும் விரும்புவது இல்லை.

மண்ணுள்ளி பாம்பு, மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, லில்லி புட், கடன் வாங்கிக் கொடுப்பது, போலீசு – நீதிமன்றங்களை விலைக்கு வாங்குவது, எதிரிகளால் அனுப்பப்படும் ரவுடி கும்பலை வியூகத்தால் முறியடிப்பது, அட்சயை திரிதியை, ரைஸ் புல்லிங், இடையில் அவன் அனாதையான முன்காலக் கதை என்று போகிறது பயணம். இறுதியில் ராசிபுரம் மலைப்பகுதியின் குடிசையில் மனைவி கைக்குழந்தையோடு ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற்றுக் கொள்கிறான் காந்தி பாபு. படைப்பைப் பொறுத்தவரை அது விருப்ப ஓய்வா இல்லை தற்காலிக ஓய்வா என்பதில் தெளிவில்லை.

அவனிடம் வேலை தேடி வரும் ஏழைப் பெண் பானுவிடம், ஏமாற்றுக்காரனாக மாறிய கதையை கூறுகிறான் காந்தி பாபு. அதையும் அனுதாபத்திற்காக கூறவில்லையாம். சித்திரவதை எடுபடாத போது, “ஏன் நீ எப்படி பணத்தாசை பிடித்து அலைகிறாய்?” என்று காவல் துறை உதவி ஆணையர் கேட்கிறார். “ பசி, காசில்லாமை, அம்மாவின் பிணத்தைக் கூட புதைக்க முடியாமை…இதெல்லாம் அனுபவித்து பார்த்திருக்கிறீர்களா” என்று வலியை மீறிய சீற்றத்துடன் கேட்கிறான்.

அவனது நடிப்பையும், நம்ப வைக்கும் திறமையையும் அறிந்த அதிகாரி கூட, அந்தக் கேள்வி நடிப்பல்ல என்று கணநேரம் திகைத்து போகிறார். அதே அதிகாரியிடம், ஆரம்பத்தில் தான் ஏன் அனாதை ஆனேன் என்று அவன் கூறவில்லை. தப்பு செய்யும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நீதியை கதையாக சொல்வார்கள் என்று போலீசு அவனது கதையை புறந்தள்ளும் என்கிறான்.

அவன் மட்டுமல்ல பிறப்பிலேயே பணக்காரராக பிறக்காத அம்பானி, பில்கேட்ஸ், புரட்சித் தலைவர், கண்டக்டர் ரஜினிகாந்திற்கும் கூட ஆரம்பத்தில் இப்படி ஒரு இல்லாதவனின் பின்கதை இருக்கத்தான் செய்கிறது. இடையில் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து இறுதியில் சட்டத்தையே மண்டியிட வைத்தது அம்பானியின் சாம்ராஜ்ஜியம். பில்கேட்சோ போட்டிகளின் விதிமுறைகளை மறுத்து கள்ளாட்டம் ஆடி, ஏகபோகத்தை நிறுவுகிறார். திராவிட இயக்கமும், வெண்திரையும் தந்த பிரபலத்தை வைத்து தனது கட்சியை காலடியில் விழ வைக்கிறார் எம்ஜிஆர். திரைத்துறை முதலாளிகளோ பிளாக்கில் சுருட்டிய காசு உதவியுடன், ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கினார்கள்.

எனினும் இவையெல்லாம் ஏமாற்று என்பதாக அல்லாமல், ஏழையின் சொல் அம்பலம் ஏறிய சாதனைகளாகவே வியந்தோதப்படுகின்றன. ஏழ்மைக்கு நேர்மையான தீர்வு கண்கூடாக கிடைக்காத போது ஏமாற்று வித்தைகள் ஏணிப்படி முன்னேற்றமாக ஏக்கத்துடன் ரசிக்கப்படுகின்றன.

எனினும் காந்திபாபு எப்படி ஒரு மோசடிப் பேர்வழியாக மாறினான், என்று அதற்கொரு நியாயத்தை வைக்க முனைந்த இயக்குநரின் நோக்கம் இங்கே நிறைவேறியிருக்கிறதா? இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான விடைதான் நமக்கு முக்கியம்.

படைப்பாளியின் உலகக் கண்ணோட்டத்திலிருந்து கருக்கொள்ளும் ஒரு கதை, எழுதப்படும் போது தன் போக்கில் இயல்பாக வளர்ந்து, எழுத்தாளன் யோசித்திராத களங்களுக்கெல்லாம் செல்வது உண்மையே. அதுவே சினிமாக் கலை என்றால், வர்த்தக நலனின் வரம்புகளால் உணர்ச்சிகளையும், நியாயங்களையும், வழமைகளையும் அல்லது அற்பவாத உணர்ச்சிகளை முன்வைத்து ‘வழக்கம்’ போல் சுபம் போட வேண்டியிருக்கிறது.

இரண்டையும் கணக்கில் கொண்டாலும் இந்த கதையின் ஆன்மா என்ன? ரசிகனின் இதயத்தை தொடும் சூட்சுமம் எது? நாமறிந்த மோசடி சம்பவங்களை நாமறியாத முறையில் ஒரு த்ரில்லரின் மயக்கத்தில் தாலாட்டுவதால்தான் பார்வையாளர்கள் கட்டுண்டு போகிறார்கள்.

விதவிதமான ஏமாற்று கதைகளில் காந்தி பாபுவின் அசாத்திய திறமையை வியக்கும் ரசிகனுக்கு அனாதை முன்கதை சுருக்கமோ, விளக்கமோ தேவையில்லை. அறுசுவை விருந்தில் வயிறு புடைக்க புசித்து விட்டு களைப்புடன் வரும் ஒருவனிடம் பசி குறித்து என்னதான் அருமையாக, ஆற்றாமையாக, கண்ணீரை வரவழைக்கும் தேர்ச்சியுடன் கதை சொன்னாலும் அது எடுபடுமா என்ன?

உழைப்பினால் முன்னேற முடியாது, அடுத்தவன் உழைப்பை அபகரித்துத்தான் பணக்காரனாக முடியும். இதுவே காந்தி பாபுவின் வாழ்க்கை நீதி. அவனது நீதியின் பயணம் நிதி தேடும் கலையில் பணத்தாசை கொண்டோரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாமென்பதாக நிலை பெறுகிறது.

இயக்குநர் முதலில் காந்தி பாபுவின் அசாத்திய திறமை கொண்ட ஏமாற்றுக் கதைகளை உருவாக்கியிருக்கலாம். பிறகு அதற்கோரு தமிழ் சினிமா நீதிப்படி உபதேச காட்சிகளை வலிந்து சேர்த்திருக்க வேண்டும். இந்த ஒட்டுதல் இங்கே எடுபட்டிருந்தால் மோசடி சம்பவங்களை பார்வையாளர்கள் ரசித்திருக்க மாட்டார்கள். ஏழை ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையில் மோசடிக்காரனாக மாறுவது நடக்காத ஒன்றல்ல. ஆனால் அந்த சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்த்தும் பொருட்டோ, விரிக்கும் பொருட்டோ இந்தக் கதை தோன்றவில்லை.

படத்தில் வரும் அனேக ஏமாற்றுக் கிளைக்கதைகள் குறித்து வினவில் நிறைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதைப் படித்திருக்கும் தேர்ந்த வாசகர்கள் படம் பார்க்கும் போது ஒன்றிப் போனாலும் புரிந்து கொள்ள கொஞ்சம் முயல வேண்டும்.

படம் முழுக்க காந்தி பாபுவின் மோசடிகள் புதுமை என்ற அளவில் மட்டுமல்ல, அவனது பணச்சுருட்டுக் கலை தோற்றுவிக்கும் பொன்மொழிகளும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. காசு வாங்க கருணையை எதிர்பார்க்காதே – ஆசையைக் கிளப்பு, குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யும் எந்த தவறும் குற்றமல்ல, ஏமாற்றுபவனுக்கு ஏமாற்றுவபன் குரு, அந்தக் கலையை சொல்லிக் கொடுத்திருக்கிறான், பொய்யில் கொஞ்சம் உண்மை கலந்திருந்தால்தான் நம்பத் தோன்றும் என்று அவை காட்சிகளின் விறுவிறுப்பை ‘காரண காரிய’ அறிவால் அதிகப்படுத்துகின்றன. உண்மையில் இந்தக் காரண காரிய தர்க்க அறிவின் ஊற்று மூலம் தனிநபர் காரியவாதமா இல்லை சமூகநலனை உணர்த்தும் அறமா? ரசிகர்களோ இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்ட சிரிப்புணர்ச்சியிலும், மோசடி வித்தையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். விசயம் தெரிந்தவர்களோ அந்த வசனங்களின் கூரிய முரண்பாட்டில் கொஞ்சம் மயங்கவும் செய்கிறார்கள்.

இதையே திருப்பி பார்க்கலாம். மோசடிக்காரனது வாதங்களை கச்சிதமாக முன்வைக்கும் இயக்குநர் அவனால் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பை எந்தக் கோணத்திலிருந்தும் காட்டவில்லை. அவர்கள் அனைவரும் பேராசை எனும் சுயநலத்திற்கு தண்டிக்கப்படுவதில் தவறே இல்லை. இதுவே காந்திபாபுவின் வாதம்.

ஈமு கோழி பண்ணையில் ஈர்க்கப்பட்ட விவசாயிகளோ இல்லை திண்டிவனம் நகைக்கடையில் பாதிவிலைக்குத் தங்கம் வாங்க குவிந்த மக்களோ, மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் இணைந்து கழிப்பறை நீரை அமெரிக்க மருந்து நீராக விற்ற திருப்பூர் இளைஞர்களோ பேராசைக்கு பலியாவதை எப்படி பார்ப்பது?

sathuranga-vettail 2உழைத்து முன்னேறலாம், படித்து சாதிக்கலாம், 2020-ல் இந்தியா வல்லரசு என்றெல்லாம் கூவித் தெரியும் அப்துல் கலாமின் எதிர்ப்பதம்தான் ஆசையால் மக்கள் ஏமாந்ததாக உபதேசிப்பது. இதனால் மக்களிடையே பேராசை இல்லையா, ஏமாறுவது சரியா என்பவர்கள் ஆசையை ஆட்டுவிப்பது மனநிலையா, வாழ்க்கை சூழலா என்று ஆராய வேண்டும்.

மதுரை கிரானைட் அதிபர் மூவேந்தர் இலாபம் பார்ப்பதற்காக அல்ல, கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற ஏதாவது மாய சக்தி கிடைக்காதா என்று கோபுர கலச ரைஸ் புல்லிங் மோசடியில் ஏமாறுகிறார். செட்டியாரோ வசதியான வாழ்க்கை கிடைத்தும் கூடுதல் பணம் அதுவும் உழைக்காமல் கிடைத்தால் நல்லது என்று குறுக்கு வழியில் போனதால் மண்ணுள்ளி பாம்பு மோசடியில் ஏமாறுகிறார். இவர்களும் மக்களும் ஒரே ஆசையால்தான் ஏமாறுகிறார்கள் என்றால் உண்மையான ஏமாளிகள் நாம்தான்.

இப்போது டாஸ்மாக்கில் மொய்யெழுதும் தொழிலாளிகள் முன்பு சுரண்டல் லாட்டரிக்கும் சேர்த்தே எழுதினார்கள். கோடியில் ஒருவனுக்கு இலட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கானோர் லாட்டரி வாங்குவது எதற்காக? இருக்கும் வாழ்க்கையில் இல்லாமையின் பிரச்சினைகள் வளர்வதற்கேற்ப லாட்டரி போன்ற மாயைகள் சட்டென்று கவ்விக் கொள்கின்றன.

அடுத்து ஏழையாகவே இருந்தாலும் சுற்றியிருக்கும் நுகர்வு கலாச்சார வாழ்க்கையின் ஆசைகள் பேதமின்றி அனைவரையும் ஆட்கொள்கிறது. கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் ஏதோ அற்புதம் நடந்து வாழ்க்கை மாறாதா என்று அவர்கள் நினைக்கத்தான் செய்வார்கள். ஈமு கோழியை வாங்கும் விவசாயிகள் எல்லாம் விவசாயத்தில் இலாபம் பார்த்தவர்களா என்ன? இல்லை திருப்பூர் இளைஞர்கள் எம்எல்எம்மில் அலைந்து திரிந்து ஆள்பிடித்து சேர்ப்பதற்கு உழைக்கவில்லையா? அப்படி உழைத்தால் கோல்டு, டயமண்ட், பிளாட்டினம், எம்டியாக பறக்கலாம் என்று காந்திபாபு குறிவைத்து அடிக்கும் போது நாளை கிடைக்க இருக்கும் கனவு வாழ்க்கை, அவர்களை அடிபணியச் செய்கிறது.

ஆனால் ஏமாற்றுதலை கலை போலச் செய்யும் காந்தி பாபு, திருந்துவதற்கான காரணங்களை மட்டும் இயக்குநர் தமிழ் சினிமா மரபுப்படி முன் வைக்கிறார். அவன் அடிபட்டு மிதிபட்டு, குழந்தை குட்டி என்று ஆன பிறகுதான் மோசடி கூடாது என்ற போதி தத்துவத்தை கண்டடைகிறான். அதையும் கருத்து சார்ந்து அல்ல, உணர்ச்சி சார்ந்தே பார்க்கிறான்.

தனது சொந்த வாழ்க்கை இன்னல்கள் காரணமாக திருந்துபவன், மக்களின் துன்ப துயரத்தை பார்த்து திருந்தவில்லை. உண்மையில் இது திருந்துதலா இல்லை திருந்துதலின் பெயரில் மற்றுமொரு மோசடியா?

மற்றவரது நலனை ஏறி மிதிக்கலாம் என்று ஒருவனின் சுயநலம் குற்ற உணர்வின்றி முடிவு செய்யும் போது, அவனது சுயநலம் குற்ற உணர்வோடு திருந்துவது மட்டும் எப்படி சாத்தியம்? குற்ற உணர்வின்றி செய்யும் எதுவுமே குற்றமில்லை என்றால் இந்த திருந்துதலில் மட்டும் நேர்மை எப்படி இருக்கும்? ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்  குற்றம் குறித்த அளவுகோலும், தண்டனையும் அவர்களது நலனுக்கேற்ப செயல்படுவதால்தான் பொது வாழ்க்கையில் மோசடி செய்யும் கனவான்களிடம் குற்ற உணர்வின் தடயத்தைக் கூட காண முடியாது.

ஆனால் மக்களைப் பொறுத்தவரை சமூக உறவின் நெறிமுறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதால்தான் பெரும்பான்மை சமூகம் ‘குற்றமோ’ இல்லை கலகமோ செய்யாமல் விதியே வாழ்க்கை என்று ஓடுகிறது. இதுதான் காந்தி பாபுவின் பலமே அன்றி பேராசை பெருநஷ்டம் என்பதாக காட்டப்படும் மக்களின் மனப்பாங்கு அல்ல. சமூக விழுமியங்கள் எனப்படுபவை தனி மனிதனின் பௌதீக சுயத்தை பாதுகாக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை. பெரும்பான்மை மக்கள் அந்த பாதுகாப்பை மேற்கொள்ளும் அரசியல் அமைப்பில் பங்கேற்கும் போது குற்ற உணர்வு மட்டுமல்ல, குற்றமும், தண்டனையும் கூட அருகிப் போகும் அல்லது உள்ளது உள்ளபடி அமுல்படுத்தப்படும். அதைத்தான் புதிய (மக்கள்) ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.

மக்களிடம் இருக்கும் நேர்மைக்கு அஞ்சியே, தான் சொல்லும் ஒரு பொய்யில் கொஞ்சம் உண்மை இருக்கும் என்கிறான் காந்தி பாபு. ஆனால் முழுப் பொய்யை விட அரை உண்மை ஆபத்தானவை. காந்தி பாபு மட்டுமல்ல, பின் நவீனத்துவம், ஜே கிருஷ்ணமூர்த்தி – ஓஷோ போன்ற நவீன குருக்கள், ஓட்டுக் கட்சிகள், கார்ப்பரேட் ஊடகங்கள் அனைவரும் கூட அரை உண்மைகளை பொய்யோடு கலந்துதான் கடை விரிக்கிறார்கள்.

இவர்களது கருத்துக்களை ஒரு வாழ்வியல் போக்கோடு பொருத்திப் பார்த்தாலே அவற்றின் இயலாமையும், போதாமையும் மட்டுமல்ல மோசடியும் வெளிப்பட்டுவிடும். ஒரு விசயத்தை ஏதோ சில முன்முடிவுகளோடு அணுகினால் அதுதான் ஆடம்பரம், அப்படி இல்லாமல் பார்ப்பதே எளிமை என்று ஜேகே பேசும் போது வார்த்தைகளை ரசிக்கும் அறிஞர்களும் நடுத்தர வர்க்கமும் கேள்வியின்றி சரணடைகிறார்கள். ஆனால் அநீதியான முறையில் வேலை இழக்கும் ஒரு தொழிலாளி தனது முதலாளி குறித்து எந்த முன்முடிவும் இல்லாமல் ‘எளிமையாக’ அணுக முடியுமா?

ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகள் மக்களின் துன்ப துயரம் புரட்சியாக வெடித்து விடாமல் இருக்கும் பொருட்டு ஆன்மீகத் தணிப்பு வேலைகளை திணிக்கிறார்கள். அதன் பொருட்டே வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்று ஆரம்பித்து அதை தீர்க்கும் வழியை தவிர்த்துவிட்டு இருப்பதை வைத்து வாழுங்கள் என்று ஆறுதல் தருகிறார்கள். இப்படித்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் எனும் அரதப் பழசான வழக்கு பல நூறு முறைகளில் புதிது புதிதாக உற்பத்தி செய்யப்படுகிறது.

காந்தி பாபுவும் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டே நம்பிக்கையூட்டும்படி பேசி ஏமாற்றுகிறான். அறிஞர்களின் ஏமாற்றுத் தத்தவம், ஆன்மீக சுரண்டலை சப்தம் போடாமல் செய்கிறது என்றால் காந்தி பாபுவின் சுரண்டல், பணம் எனும் பொருளாதாரம் சார்ந்து மறைவாக செய்கிறது.

ஏமாற்றுவதற்கு கருணையை அல்ல, ஆசையைத் தூண்ட வேண்டும் என்கிறான் காந்தி பாபு. ஆசையும், கருணையும் கூட வர்க்கங்களுக்கேற்ப பொருள் விளக்கத்திலும் செயல் நடைமுறையிலும் எண்ணிறந்த முறையில் வேறுபடுகின்றது. ஏழைகள் அவலத்திலும் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள். பணக்காரர்கள் ஆடம்பரத்தின் விரயத்திலும் மேலும் மேலும் வசதிகளை பெருக்குவார்கள். காந்தி பாபு போன்ற மகா மோசடிக்காரர்களுக்கும் கருணை வழங்க பானு போன்ற ஏழைகள் காத்திருப்பார்கள். அதே ஏழைகளை கருணையின்றி சுரண்ட முதலாளிகள் மட்டுமல்ல, காந்தி பாபுவும் எப்போதும் முயல்கிறார்கள்.

இது ஏதோ சிறிய வயதில் அனாதையாக்கப்பட்ட காந்தி பாபுவின் எதிர் வினை என்கிறார் இயக்குநர். காவல் துறை ஆணையரும் இயற்கை சமநிலை குலைவு என்று வருத்தப்படுகிறார். அப்படிப் பார்த்தால் அயோத்திக் குப்பம் வீரமணியும், ஆட்டோ சங்கரும், தாவுத் இப்ராஹிமும், சர்வதேச மாஃபியாக்களும் இந்த சமநிலை குலைவின் விளைவுகளா என்ன?

ஏழையின் சம நிலை குலைவு ஒரு கலகம் எனும் நடவடிக்கையைத் தாண்டி போவதில்லை. சான்றாக லண்டன், தென் அமெரிக்க கலகங்கள். அந்த கலகங்களுக்கு தண்டனையாக வாழ்க்கை முழுவதும் வேலை கிடைக்காமல் நலிந்து சாகும் அளவுக்கு இங்கிலாந்து அரசு அவர்களை தண்டித்திருக்கிறது. இந்த உண்மையான கலகம்தான் தாங்க முடியாத சுரண்டலின் விளைவுகள். இதுவே ஒரு தனிநபரான ஏழையிடம் ஏற்பட்டால் அது கொலை, தற்கொலை, சின்ன திருட்டு, கோபம், அடிதடி என்பதற்கு மேல் தாண்டாது. மாறாக அது மாபெரும் சாம்ராஜ்ஜியம் போல கட்டியமைக்கப்படுகிறது என்றால் அது ஏழையின் கலகம் அல்ல. நிறுவனமயமான ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின் அங்கத்தினன் மட்டுமே அப்படி விரிந்த திருட்டு சாம்ராஜ்ஜியத்தை நடத்த முடியும். அவன் ஆரம்பத்தில் ஏழையாக இருந்தாலும் கூட.

மேலும் சிறு வயதில் திருட்டு, அடிதடி, ரவுடி என்று மாறும் ஏழைச் சிறுவர்கள், விரைவிலேயே எந்த மதிப்பீடுகளும் அற்ற முழுக் குற்றவாளியின் மனதை அடைந்து விடுவார்கள். உழைக்காமல்  பிழைப்பது, உல்லாசமாக வாழ்வது என அவர்களது மனப்பாங்கே மாறிவிடும். அவர்களெல்லாம் இன்றும் சின்ன வயது துக்கங்களுக்காகத்தான் தொழில் செய்கிறார்கள் என்றால் துக்கம் என்ற வார்த்தையை நாம் அழிக்க வேண்டியிருக்கும்.

ஆக குற்றம், ஏமாற்று, திருந்துதல், குற்ற உணர்வு, மக்களோடு உறவு என்ற முழுமையில் ஒரு மோசடிக்காரனின் எதிர்மறைப் பாத்திரம் மட்டுமே இங்கு கவர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. பொதுவில் எதிர்மறை நாயகனது பாத்திரங்களுக்கு வரவேற்பு இருக்கும். அனைத்தையும் எதிர்த்து பேசும் அவர்களின் ‘கலக’ எதிர்ப்புக்கு கலகம் செய்ய விரும்பியும், வாய்ப்பற்ற மக்கள் ஆதரிக்கவே செய்வார்கள். ஆனால் காந்தி பாபு இங்கே மக்களை ஏமாற்றுவது குறித்து மட்டும் பேசுகிறான். தன்னை நியாயப்படுத்துவதற்காகவே இயக்குநரின் உதவியால் தத்துவம் பேசுகிறான்.

எம்.ஆர்.ராதா அனைத்து படங்களிலும் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தாலும் அவரது நோக்கம் பொதுவில் மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம், பணக்காரர்களை எதிர்ப்பதாக இருந்தது. மேலும் திராவிட இயக்கம், பெரியார் போராட்டங்களோடு இணைந்திருந்ததால் மட்டுமே ராதாவின் கலை வாழ்வு அர்த்தமுள்ள எதிர்மறை நாயகனாக வெளிப்பட்டது.

அஜித் நடித்த மங்காத்தா படம் கூட எதிர்மறை நாயகனை துதிக்கும் படம்தான். அதையும் சதுரங்க வேட்டையையும் பிரிப்பது இங்கே உண்மை சம்பவங்கள் மற்றும் அரசியல் குறியீடுகள் அதிகம் வருகின்றன. இவை இல்லா விட்டால் இதுவும் ஒரு சிறு முதலீட்டு மங்காத்தா படம்தான்.

தனது கதைக்கு அரசியல் பின்னணியை பொருத்துவதற்கு இயக்குநர் வெகுவாக பாடுபட்டிருக்கிறார். தொட்டதை தங்கமாக்கும் கிரேக்க மன்னனோடு தொடர்புடையதுதான் மிடாஸ் டச் என்றாலும் நாம் அதை ஜெயா சசி மிடாஸாக பார்க்கலாம். ஆம்வேயை நினைவு படுத்தும் எம்.எல்.எம் அமெரிக்க ஏரியின் மருத்துவ தண்ணீர், மதுரை கிரானைட் கொள்ளை பிஆர்பியோடும், முக்குலத்தோர் சாதி சங்கங்களையும் நினைவுபடுத்தும் மூவேந்தர், முழுத்தமிழ் பேசும் ரவுடி, நீதிமன்றங்களின் ஊழலை காட்டும் வழக்கு நடைமுறை, காந்தி பாபுவின் கைதை ஒட்டி ஊடகங்களின் பரபரப்பு தலைப்பு செய்திகள் எல்லாம் காட்சிக்கு காட்சி வருகின்றது.

sathuranga-vettai-4.jpgஆனால் இவை அனைத்தும் அரசியல்வாதி கெட்டவன் எனும் பொதுப் புத்தியாக சுருங்கி விடுகிறது. சிங்கப்பூராக்குவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு நிறைவேற்றாத அரசியல்வாதிகளை கைது செய்ய முடியுமா என்று கேலி செய்கிறான் காந்தி பாபு. இதை கை தட்டி ஆதரிக்கும் மக்கள் உண்மையில் நம் விவசாய நாட்டை சிங்கப்பூராவாக்குவது சரியா என்றோ அந்த கனவை விதைத்த ஊடகங்களையோ, இல்லை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் முதலாளிகளின் நலனுக்காக ஒரு வேளை சிங்கப்பூராக மாற்றினால் எத்தனை மக்கள் நிலமிழுந்து, வாழ்க்கையிழந்து துரத்தப்பட வேண்டும் என்றோ பார்ப்பதில்லை. இதுதான் அரசியலற்ற அரசியல் வெறுப்பு. அல்லது அரசியல்வாதிகளை மட்டும் வெறுக்க வைக்கும் ஆளும் வர்க்க முனைப்பு.

மோசடிப் பணத்தில் பாதியை “மக்கள் பணத்தில் பாதி மக்களுக்கே” என்று ஒரு தோழர் உண்டியலில் போடும் காந்தி பாபு, தன்னை முதலாளியாக விரும்பும் கம்யூனிஸ்டு என்று கூறிக் கொள்கிறான். திருப்பதியில் கருப்புப் பணத்தை போடும் கைகள் மற்றும் இந்தியாவை சோசலிச நாடு என்று அறிவத்துக் கொள்ளும் நமது அரசியல் சட்டத்திற்கும் இயக்குநரின் இந்த ‘அறிவார்ந்த’ வசனம் மற்றும் காட்சிக்கும் என்ன வேறுபாடு?

எனினும் இந்த படத்தில் இயக்குநர் இப்படி ஒரு கருவை எடுத்து புதுமையாகவும், கூர்மையாகவும் சொல்வதற்கு தனது  திறமைகைள பயன்படுத்தியிருப்பது உண்மை. ஆனால் அந்த ‘மை’கள் எல்லாம் சேர்ந்து எதிர்மறை பாத்திரமே ஆற்றியிருக்கிறது.

மரபான தமிழ் சினிமா களங்களிலிருந்து மாறுபட்டு புதிய களங்களை கண்டறியும் புதிய இயக்குநர்கள், அந்த புதுமையோடு தான் உறவாடும் களங்களின் சமூக அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்வது புதுமையை விட முக்கியத்துவம் வாய்ந்தது.

இல்லையேல் ஈமு கோழி பண்ணை, அட்சயை திரிதை-தங்கத்தின் பெயரில் விதவிதமான தள்ளுபடி, ரியல் எஸ்டேட் சலுகை, எம்எல்எம் நிறுவனங்கள் போன்ற மோசடி கம்பெனிகளுக்கு விளம்பரங்களை கொடுத்து விட்டு, விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று படிக்க முடியாத எழுத்துருவில் போட்டு விட்டு, அந்த கம்பெனிகள் அம்பலப்பட்டால் ஒன்றுமே நடக்காத மாதிரி விளம்பரங்களை நிறுத்தும் விகடன் குழுமம்தான் தற்போது சதுரங்க வியூகம் படத்திற்கு 52 மதிப்பெண்ணையும் கொடுத்திருக்கிறது.

குற்ற உணர்வு இல்லாமல் செய்யும் எதுவும் தப்பே இல்லை என்பது இங்கு பொருத்தமாக இருக்குமோ?

 

யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்

24

யாதும் – முஸ்லிம் எதிர்ப்பு வரலாற்றுப் புரட்டைத் திரைகிழிக்கும் ஆவணப்படம்

முஸ்லிம் மக்களை ‘அந்நியர்களென்றும், அந்நிய மதத்தைப் பின்பற்றுகின்ற அவர்களுக்கு நாட்டுப்பற்றே கிடையாது’ என்றும் கடந்த 25 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்தி வரும் பொய்ப்பிரச்சாரம் பெரும்பான்மை சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழப்பதிந்து விட்டது. இந்தப் பொதுக்கருத்தின் துணை இருக்கும் தைரியத்தில் போலீசு முசுலிம் இளைஞர்கள் மீது எண்ணற்ற பொய்வழக்குகளை தடையின்றிப் போடமுடிகிறது.

பொட்டல்புதூர் தர்கா
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பொட்டல்புதூர் தர்கா

எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், “தான் அதற்குக் காரணமல்ல” என்பதை நிரூபிக்கும் நிலைக்கு ஒவ்வொரு முசுலிமும் தள்ளப்படுகின்றான். கோவை குண்டுவெடிப்பு முதல் அக்-ஷர்தாம், சூரத் வழக்குகள் வரை, எண்ணற்ற பொய் வழக்குகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலிம் இளைஞர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வைத் தொலைத்துள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பர் 6 போன்ற நாட்களில் முசுலிம் ஒருவர், ரயிலிலோ பேருந்திலோ அச்சமின்றி பயணம் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப் பட்டுவிட்டது. ஒட்டுமொத்த முசுலிம் சமூகத்தையும் பொது நீரோட்டத்திலிருந்து அச்சுறுத்தி அகற்றுவதில் பெரிய வெற்றியை இந்துமதவெறியர்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலை உருவாக்கியதில், அவர்களால் திரித்துப் புரட்டப்பட்ட வரலாறுக்கு முக்கிய பங்கு உண்டு.

இதன் எதிர்விளைவாக, கணிசமான முசுலீம் இளைஞர்கள் – உயர் கல்வி கற்றவர்கள் கூட – அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர். இசுலாமியர்களாகப் பிறந்த யாரும் தமது மதத்தையோ அல்லது மத கடுங்கோட்பாட்டுவாத அமைப்புகளையோ விமரிசிக்கக் கூடாது என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இசுலாமியர்களை மிரட்டுகின்றன. அவர்களை துரோகிகள் என்று தூற்றுகின்றன. இவ்வாறு முசுலிம் அடிப்படைவாதம் பெருகுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகின்றனர். இரு தலைக் கொள்ளி எறும்பாக இசுலாமிய மக்கள் தவித்து வரும் இந்தச் சூழலில்தான், ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை கோம்பை அன்வர் இயக்கி வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் முஸ்லிமாகிய இயக்குநர், தனது வேர்களையும் அடையாளத்தையும் தேடிப் புறப்படும் பயணத்தில் நம்மையும் உடன் அழைத்துச் செல்கிறார். எவ்விதமான கருத்துப் பிரச்சாரமும் இல்லாமல் வரலாற்றுத்தரவுகளையும் சான்றுகளையும் மட்டும் நம் முன்வைக்கிறார் அன்வர். இவற்றின் வழியாகவே உண்மையை வாசகன் உணர்ந்து கொள்ளச் செய்துவிடுகிறார் இயக்குநர். இதுதான் இந்த ஆவணப் படத்தின் மிகப்பெரும் வலிமை.

பொட்டல்புதூர் தர்காவினுள்
பொட்டல்புதூர் தர்காவினுள்

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும், தில்லி சுல்தான்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் (எனவே அந்நியர்கள், துருக்கர்கள், துலுக்கர்கள்) என்று உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கருத்தை இப்படம் கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறது.

பாபர் வருகைக்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோவிலின் கல்வெட்டு ‘துருக்கன் அகமது’வைப் பதிந்துள்ளதும், அக்கோவில் கட்டப்படும் முன்பே உறையூரில் (இன்றைய திருச்சியின் ஒரு பகுதி) வாழ்ந்து மறைந்த நத்தர் வலி எனும் இறைநேசரின் தர்ஹாவும், ஆழ்வார் திருநகரியில் காணப்படும் அராபி வணிகர்களின் மரக்கலங்களின் புடைப்பு சிற்பங்களும் ஆர்.எஸ்.எஸ் பரப்பி வரும் திரிக்கப்பட்ட வரலாற்றை மறுத்து, தென் இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாற்றைச் சொல்கின்றன. நறுமணப் பொருட்களின் வழித்தடம் வழியாக அரபு நாடுகளிலிருந்து மலபார், சோழமண்டலக்கரை வழியாக கேரளம், தமிழ்நாட்டிற்கு இஸ்லாம் வந்ததை கண்முன்னே காணக்கிடைக்கும் ஆதாரங்களை எடுத்து வைத்து நிறுவுகிறது ‘யாதும்’.

தமது வழிபாட்டு இடங்களை உருவாக்கிய இஸ்லாமியர்கள் அந்தந்தப் பகுதியில் நிலவிய கட்டடக்கலை வடிவங்களிலேயே மசூதி, தர்ஹாக்களைக் கட்டியுள்ளதை பல்வேறு ஆதாரங்களுடன் அன்வர் நிறுவுகிறார். கேரளத்தில் கொல்லம் ஓடு வேய்ந்த கட்டிடங்களாகவும், தமிழகத்தில் திராவிடபாணிக் கட்டுமானங்களாகவும் காட்சியளிக்கின்றன அன்று கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிகள்.

தர்காக்களில் வழிபட அனைத்து மக்களும் சென்றுவருவதையும், கோவில்கொடை போன்றே சிலம்பம், தவில், நாதஸ்வரத்துடன் தமிழ்நாட்டில் நடத்தப்படும் சந்தனக்கூடு விழாக்களையும் தமிழ் முஸ்லிம்களின் கலாச்சாரமாகப் பதிந்திருக்கிறார் அன்வர்.

அஞ்சுவண்ணம் கல்வெட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தின் களக்காட்டுக்கு அருகில் உள்ள ஏர்வாடியில் கண்டெடுக்கப்பட்ட அஞ்சுவண்ணம் கல்வெட்டு – அஞ்சுவண்ணம் தெருவில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை குறிப்பிடுகிறது.

தமிழிலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் மறைத்து வந்துள்ள ஒரு பகுதியையும் தொட்டுக் காட்டியுள்ளார் – அது, இஸ்லாமியர்கள் தமிழுக்கு செய்த பணி. ‘ஆயிரம் மசாலா’ எனும் கேள்வி பதில் நூலில் தொடங்கி, கிஸ்ஸா, நாமா, முனாஜாத் போன்ற புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் தமிழுக்கு அறிமுகம் செய்ததையும், தமிழ் இசைக்கு இசுலாமியர்களின் பங்களிப்பையும் கவிஞர் அப்துல் ரகுமானின் பேட்டி வழியாகவும் குமரி அபுபக்கரின் பாடல்கள் வழியாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தினை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சிரமங்களுக்கிடையே எடுத்துள்ள அன்வர், கத்திமீது நடப்பது போன்ற செயலைச் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எனலாம். நீ தமிழனா, முஸ்லிமா என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு “யாதும்” என்று விடை தந்திருக்கிறார் இயக்குநர். ஒருசார்பாக எதனையும் சொல்லாமல் பார்வையாளர்களின் சிந்தனையைக் கிளறிவிடும் வகையில் ”இவையெல்லாம் வரலாற்று ஆதாரங்கள். நீங்களே அவற்றிலிருந்து உணர்ந்து கொள்ளுங்கள்” எனச் சொல்லாமல் சொல்லியுள்ளது இப்படம்.

இப்படத்தில் குறிப்பிடப்படும் இரண்டு விசயங்கள் வரலாற்றை எப்படிப் பார்க்கவேணடும் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நமக்குத் தருகின்றன.

  • பதினாறாம் நூற்றாண்டில் வடகேரளத்தின் சாமோரின் மன்னர் ஆண்ட பகுதியை கைப்பற்ற வந்த போர்த்துகீசியர்களை முறியடித்தவர் குஞ்ஞாலி மரைக்காயர் எனும் படைத் தளபதியாவார். அவரின் துணையோடு அந்நியப் படையெடுப்பை முறியடித்த சாமோரின் (சாமுத்ரி) மன்னர், மீனவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை முஸ்லிமாக மாற்றவேண்டும் என்று அரசாணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார் என்பதைக் கூறுகிறார் கேரளத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர்.
  • திருவிளையாடல் புராணத்தில் வரும் பிட்டுக்கு மண்சுமந்த படலத்தை மதுரையில் இருக்கும் புட்டுத்தோப்பு திருவிழாவில் சடங்காக ஆண்டுக்கு ஒரு முறை நடத்துகின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மண்டபம் கீழ்த்தளத்தில் திராவிடக் கட்டடக்கலையையும் மேல்தளத்தில் இஸ்லாமிய பாணியையும் (பெர்சியன்) பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாரம்பரிய உரிமையாக தீர்த்தத் தொட்டிக்கு வேலி அடைப்பவர் முகைதீன் பிச்சை எனும் முஸ்லிமாவார்.

ஆவணப்படம் கூறும் குறிப்பிட்டுச் சொல்லிடும் இவ்விரண்டு விசயங்களையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

மிஸ்கல் பள்ளி
கோழிக்கோடு, குட்டிச்சிறாவில் உள்ள மிஸ்கல் பள்ளி

சாமுத்ரியின் காலத்தில் இந்து-முஸ்லிம் பகையோ, ஏன் இந்து மதம் எனும் கருத்தோ இன்றுள்ள அர்த்தத்தில் உருவாகிடவில்லை. இந்து என இன்று அறியப்படும் பெரும்பான்மை சமூகம் ஒரே மதமென உருவாகியிருக்கவில்லை. பல்வேறு சாதிகளும், அவைகளின் தனித்தனி வழிபாட்டு முறைகளுமே இருந்தன. சாமுத்ரிக்கும் குஞ்ஞாலி மரைக்காயருக்கும் இருந்த நெருங்கிய உறவு கூட சாமுத்ரிக்கும் மீனவர்களுக்கும் இருந்ததில்லை. மேலும் குடும்பத்தில் ஒருவர் முஸ்லிமாக மாறச்சொல்லி சாமுத்ரி மன்னன் மீனவர்களுக்கு உத்தரவிட்டிருப்பதற்கு காரணம் வலுவான போர்ப்படையை, மரைக்காயரின் தலைமையில் கட்டி, தனது அரசதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்லாமை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதே.

இதனை மத நல்லிணக்கம் என்றோ, இந்து மன்னரின் பெருந்தன்மை என்றோ கருதுவது அபத்தம். மீனவர்கள் முஸ்லிமாக மாறுவதால் இந்து மதத்தினரின் எண்ணிக்கை குறைவது பற்றி இன்று இராம. கோபாலன் குமுறுவது போன்ற சிந்தனையே பதினாறாம் நூற்றாண்டில் கிடையாது. இந்தப் பதற்றம், காலனியாட்சியாளர்கள் ஒன்றுபடுத்தப்பட்ட இந்தியாவை உருவாக்கிய பின்னர், இந்து என்று பெயர் சூட்டியதற்குப் பின்னர், இன்னின்னாரெல்லாம் இந்து என்று சட்டரீதியில் வரையறுத்ததற்குப் பின்னர் உருவானது. கஜினியின் சோமநாதபுரப் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்டவர்களில் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்ததாக ரோமில்லா தபார் குறிப்பிடுவதையும், சிவாஜியின் படையில் முஸ்லிம்கள் இருந்ததையும் இந்தக் கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.

குஞ்ஞாலி மரைக்காயர் இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று போற்றப்படுபவர். அன்று தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீனவர்களை முஸ்லிமாக மாறச்சொன்ன சாமுத்ரி மன்னன், பின்னர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கொண்டு, குஞ்ஞாலி மரைக்காயரைக் காட்டிக் கொடுக்கவும் தயங்கவில்லை என்பதையும் இங்கே நினைவிற்கொள்ளவேண்டும்.

ஆழ்வார்திருநகரி கந்தூரி
ஆழ்வார்திருநகரி கந்தூரி

மதுரை புட்டுத்திருவிழாவில் தீர்த்தத் தொட்டிக்கு வேலி கட்டுபவர் முஸ்லிமாக இருப்பது மக்களிடையே நிலவி வந்த சமூக உறவுக்கான ஒரு சான்று. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கோவில்கள், திருவிழாக்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு சாதிகளுக்கும் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப் பட்டு வட்டார அளவில் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சேவை சாதியினரின் பங்களிப்பை உறுதிப்படுத்திட திருவிழாக்களில் அவர்களைக் கவுரவிக்கும் ‘சுதந்திரங்கள்’ ( சுதந்திரம் = தானியமாகவோ, பணமாகவோ அளிக்கப்படும் சிறப்பு ஊதியம்) இருந்தன. கைவினைஞர்களும் இவ்வாறு திருவிழாக்களோடு பிணைக்கப்பட்டிருந்தனர். அச்சாதியினர் மதம் மாறியபோதிலும் அவர்களின் மதமாற்றத்தை, அன்றைய சமூகம் (இந்து மதம் எனும் கருத்துருவாக்கம் உருவாகும் முன்னர் இருந்த சாதிய சமூகம்) பெரிதாக கருதவில்லை. கைவினைஞர்கள் மதம் மாறினாலும் அதே நிலவுடைமைக்கால உறவுகள் நீடித்தன என்பதையே முகைதீன் பிச்சையின் குடும்பம் இன்னமும் புட்டுத்திருவிழாவில் சேவை செய்து கவுரவத்தைப் பெற்றுக் கொள்வது காட்டுகிறது.

வரலாற்றுப் போக்கில் மக்களிடையே முகிழ்த்திருக்கும் இத்தகைய இணக்கமான உறவுகள் தொடர்வதைக்கூட இன்றைய இந்து, முஸ்லிம் மதவெறியர்கள் சகித்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்து அல்லது முஸ்லிம் என்ற மத ரீதியான வரையறைக்குள் மக்களின் பண்பாட்டையும், வாழ்க்கையின் எல்லா விதமான நடவடிக்கைகளையும் அடக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.

திராவிட பாணிக் கட்டிடக் கலையே தமிழ்முஸ்லிம்களின் கட்டிடக்கலையாக இருந்ததை அன்வர் சொல்லும்போது, இக்கட்டிடங்கள் எழும்பிய காலத்தில் வஹாபியிச முல்லாக்களோ, தவ்ஹீத் ஜமா அத் களோ உருவாகியிருக்கவில்லை என்பது நற்பேறு என்றே தோன்றுகிறது. அக்காலத்தில் சீனத்தில் பரவிய இஸ்லாம், சீனக் கட்டிடப் பாணியில் இருந்ததைப் போன்றே இங்கும் இயல்பாக இம்மண்ணின் கலை வடிவத்தையே வரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்று தூய இஸ்லாம் பேசும் வஹாபி அடிப்படை வாதம், இவற்றுக்கு எதிதராக பத்வா பிறப்பிக்க கூடும்.

****

ஆழ்வார்திருநகரி கந்தூரி
ஆழ்வார்திருநகரி கந்தூரி

ந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாம் பரவிய வரலாற்றிலிருந்து சூஃபி ஞானிகளைப் பிரித்துப் பார்க்க முடியாது. சூஃபிகளின் இசைப்பாடல்கள், அவர்களது எளிய வாழ்க்கைமுறை, அவர்களில் பலர் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் சேவைச்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தது போன்ற காரணங்கள் இஸ்லாம் பரவுவதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் – குறிப்பாக பஞ்சாப், சிந்து மாநிலங்களில் – ஏராளமான இஸ்லாமியர்கள் சூஃபி மார்க்கத்தில் பற்றுள்ளவர்களே. இந்த தர்ஹா வழிபாடும், சந்தனக்கூடு போன்ற விழாக்களும் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல அனைத்து மதத்தினரிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் சுற்றுலா செல்லும் மக்கள் சிக்கல் முருகனுக்கு ஒரு கும்பிடு, நாகூர் தர்ஹாவுக்கு ஒரு கும்பிடு, வேளாங்கண்ணிக்கும் ஒரு கும்பிடு என்பதைத்தான் நடைமுறையில் வைத்திருந்தனர். இன்றும் அது தொடரத்தான் செய்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் முதல் ஆஜ்மீர் தர்ஹா வரை இதுதான் நடப்பு.

அதனால்தான் “தர்ஹாக்களுக்கு செல்லாதீர்” என இந்து முன்னணி இந்து மக்களைக் கோருகின்றது. அத்துடன் “மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகளை”, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பார்ப்பன இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்கிறது. “முஸ்லிம் பக்கீரான ஷிர்டி சாய்பாபாவை வழிபடக்கூடாது” என இந்துக்களுக்கு துவாரகா சங்கராச்சாரி சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். இதனை சாய்பாபா பக்தர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். வாரணாசியிலேயே சங்கராச்சாரியின் உருவப்படங்களை எரித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், வஹாபிகளும், தவ்ஹீத் ஜமா அத் போன்ற அடிப்படைவாத இயக்கங்களும் “தர்ஹாக்கள் இஸ்லாமல்ல” என்று அவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் கூச்சலிடுகிறார்கள். இடிக்கிறார்கள். இவர்களை இந்து பார்ப்பன கும்பலின் ஜாடிக்கேத்த வஹாபி மூடி என்று சொல்லலாம்.

கோம்பை தாமிர பட்டயம்
வலங்கை சாதியினரால் தமது பெண்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுத்த முஸ்லீம்களுக்கு நன்றி கூறும் இடங்கை சாதியினர் – கோம்பை தாமிர பட்டயம்.

சூஃபி மார்க்கம், தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு போன்ற “ஹராம்களை” ஒழிக்கத் துடிக்கும் வஹாபியிசம் உலகெங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உறுதி செய்ய வேலை செய்கிறது. இஸ்லாம் பரவிய நாடுகளில் 19-ம் நூற்றாண்டு வரை இந்தத் தூய்மைவாதம் இருந்ததில்லை. சர்வதேசிய ஒற்றை அடையாளமாக இஸ்லாமை உருவாக்கிடும் நோக்கில் செயல்படும் இந்த அடிப்படை வாதமே, ஏகாதிபத்தியம் உருவான 19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில்தான் உருவானது. இன்று இதன் புரவலராக இருப்பது சவுதி அரேபியா.

‘இந்து’ மதம் என்று இன்றைய பொருளில் அழைக்கப்படும் மதமும், இதே காலகட்டத்தில் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கிடும் போக்கில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சட்டரீதியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இதுவே தங்களின் ஆதிக்கத்துக்கு உகந்ததாய் இருப்பதை உணர்ந்த பார்ப்பன, பனியா கும்பல் இந்து-இந்தி-இந்தியா என்பதை உயர்த்திப் பிடிக்கிறது.

தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, சூஃபி மரபு போன்றவை இந்து முஸ்லிம் உழைக்கும் மக்களிடையே இயல்பாக நிலவும் நல்லிணக்கத்தைப் பேண உதவி செய்வதாலும், இந்து வேறு, முஸ்லிம்வேறு என்று பிரிப்பதற்கான வாய்ப்பைத் தடுப்பதாலும், இருதரப்பு மதவெறியர்களுமே இதனை எதிர்க்கின்றனர்.

இவர்கள் யாருக்கும் ‘யாதும்’ ஆவணப்படம் நிச்சயமாக உவப்பாய் இருக்காது. வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இல்லாமல், இப்படம், பெரும்பான்மை மதத்தினர் மத்தியில் திரிக்கப்பட்ட வரலாறு உருவாக்கியிருக்கும் சித்திரத்தைக் கலைத்துப் போடுவதோடு, முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கனவையும் கலைத்துவிடுகின்றது. அந்தவகையில் இப்படம் ஆக்கப்பூர்வமான பங்கினைச் செய்துள்ளது.

“யாதும்” ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பொய்களில் சிக்குண்டு கிடக்கும் இந்துக்களையும், தவ்ஹீத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு வரும் இசுலாமியர்களையும் தவறான பார்வையிலிருந்து இப்படம் விடுவிக்கும்.

ஒருபுறம் நாட்டை அந்நிய ஏகபோக நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொண்டே, இந்த மண்ணோடு ஒன்றிப்போன முசுலிம் மக்களை அந்நியர்களாக சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் நடவடிக்கை, எத்தகையதோர் கீழறுப்பு வேலை என்பதை உணர்ந்திட இப்படம் துணைபுரியும்.

_____________________

பின்குறிப்பு:

தமிழ் எழுத்தாளர் ஜோ டி குருஸ், இப்படத்தில் மீனவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த நல்லுறவிற்கு சாட்சியமளித்துள்ளார். (அது அவர் மோடி பக்தராக மதம் மாறுவதற்கு முன்னரே எடுக்கப்பட்ட பேட்டி) மஸ்கோத் அல்வா விற்பதற்கு தங்கள் ஊருக்கு வரும் முஸ்லிம் வியாபாரிகளை சாச்சா, சாச்சி என அழைத்துப் பழகியதாக தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஜோ.டி.குருஸ். அதே வாய்தான் இன்று முஸ்லிம்களைக் கொன்றுகுவித்த மோடியை ஆதரித்து மேடையேறிப் பிரச்சாரம் செய்கிறது. இந்த அசம்பாவிதத்துக்கோ அசிங்கத்துக்கோ இயக்குநர் பொறுப்பாக முடியாது.

________________

கோம்பை எஸ். அன்வர் – அறிமுகக் குறிப்பு

“அசைட்” என்று சென்னையை மையமாகக்கொண்டு வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் தனது ஊடகப் பயணத்தை துவக்கியவர் கோம்பை எஸ். அன்வர்.

இன்று “வரலாற்றை” பதிவு செய்வதை தனது முக்கியப் பணியாகக் கருதுகிறார். ஆய்வாளராக தென்னிந்திய முஸ்லிம் வரலாற்றை ஆய்வு செய்யும் அவர், குறிப்பாக பெரிதும் தவறுதலாக எழுதப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட, முஸ்லிம் வரலாற்றில் கவனம் செலுத்துகிறார். கி.பி 1600-ல் இருந்து கி.பி 2000 வரையிலான சென்னை வரலாற்றைத் தொகுத்தளிக்கும் “Madras Gazateer Project”-ல் அவரும் ஒரு பங்களிப்பாளர். அண்மையில் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது வருடத்தைக் கொண்டாடும் நோக்கோடு “பெரிய கோவில்” பற்றிய குறும்படங்களை இந்திய தொல்லியல் துறைக்காக எடுத்திருக்கிறார்.

__________________

– செங்கதிர்

__________________

யாதும்..

வேர்களையும் அடையாளத்தையும் தேடி ஒரு தமிழ் முஸ்லீமின் வரலாற்றுப் பயணம்
ஒளிக்குறுந்தகடு, விலை: ரூ 200

யாதும் ஆவணப்படம் குறித்து மேலும் அறிந்திட Yaadhum

ஆவணப்பட முன்னோட்டம்

 

ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

0

(அமெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)

2. ஆக்கிரமிப்புக்கு மத்தியில் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்கள், ஆக்கிரமிப்பை  எதிர்க்கும் இசுரேலின் ஜனநாயக சக்திகள்

ஐநா பள்ளி
ஜூலை 24 அன்று ஐநா நடத்தும் பள்ளியை இசுரேல் தாக்கியதில் காயமடைந்த சிறுமியுடன் மருத்துவமனையில் அவளது அப்பா. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் – நன்றி : time.com

(ரச்சேலின் கடிதங்கள் – 1 அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் )

பிப்ரவரி 28, 2003

(அவரது அம்மாவுக்கு)

எனது மின்னஞ்சலுக்கு நீ போட்ட பதிலுக்கு நன்றி. உன்னிடமிருந்தும் என்னைப் பற்றி அக்கறை கொண்டுள்ள மற்றவர்களிடமிருந்தும் கடிதம் வருவது உண்மையிலேயே எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

நான் உனக்கு கடிதம் எழுதிய பிறகு எங்கள் குழுவிடமிருந்து பிரிந்து 10 மணி நேரம் தகவல் தொடர்பு இல்லாமல் தாக்குதல் முனையின் முன்னணியில் உள்ள ஹை சலாம் குடும்பத்துடன் போய் தங்கினேன். அவர்கள் எனக்கு உணவு தயாரித்து தந்தார்கள், அவர்களிடம் கேபிள் டிவி இருக்கிறது. அவர்களது வீட்டின் முன் அறைகள் இரண்டின் சுவர்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதால் அவற்றை பயன்படுத்த முடியாது. எனவே, மொத்த குடும்பமும் – 3 குழந்தைகளும் பெற்றோரும் – ஒரே அறையில் தூங்குகின்றனர். இளைய மகள் இமானுக்கு அருகில் தரையில் நான் படுத்திருந்தேன். எல்லோரும் போர்வைகளை பகிர்ந்து கொண்டோம். மகனின் வீட்டுப் பாடம் செய்ய சிறிது உதவி செய்தேன்.

அதன் பிறகு எல்லோரும் “பெட் சிமெட்ரி” என்ற மோசமான படத்தை பார்த்தோம். அதை பார்ப்பதற்கு நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. வெள்ளிக் கிழமை விடுமுறை நாள். நான் கண் விழித்த போது அவர்கள் அரபி மொழியில் மாற்றம் செய்யப்பட்ட “கம்மி பியர்ஸ்” நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு விட்டு, அங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நம் ஊரில் நாம் சனிக்கிழமை காலையில் கார்ட்டூன் பார்ப்பதை போன்ற உணர்வை இந்த குடும்பத்துடன் ஒரு போர்வைக்குவியலின் மத்தியில் அனுபவித்தேன்.

சிதைக்கப்பட்ட வீடுகள்
இசுரேலிய வான்வழி தாக்குதலில் சிதைக்கப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் ஒரு பாலஸ்தீன பெண் (நன்றி : aljazeera.com)

அதன் பிறகு கொஞ்ச தூரம் நடந்து, பி’ராசில் என்ற இடத்துக்கு போனேன். அங்குதான் நிடால், மன்சூர், பாட்டி, ரஃபாத் மற்றும் என்னை முழுமனதுடன் தத்து எடுத்துக் கொண்ட பெரிய குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்கிறார்கள்.

ஒரு நாள், பாட்டி அரபு மொழியில் சைகை உரை ஒன்றை நிகழ்த்தினார். பல முறை வாயால் ஊதி, தனது கருப்பு போர்வையை சுட்டிக் காட்டினார். “புகை பிடிப்பது என்னுடைய நுரையீரலை கருப்பாக மாற்றி விடும் என்று அறிவுரை சொல்ல ஒருவர் இங்கு இருக்கிறார் என்ற தகவல் எனது அம்மாவுக்கு பெருமளவு ஆறுதலாக இருக்கும்” என்று அவரிடம் சொல்லுமாறு நடாலிடம் சொன்னேன். நுசரத் முகாமிலிருந்து வந்திருக்கும் அவர்களது உறவினரை சந்தித்து அவரது கைக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.

நிடாலின் ஆங்கிலம் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. அவன் என்னை “மை சிஸ்டர் (எனது சகோதரி)” என்று அழைக்கிறான். பாட்டிக்கு “ஹலோ, ஹவ் ஆர் யூ?” என்று சொல்ல கற்றுக் கொடுக்கிறான்.

வெளியில் டாங்குகளும் புல்டோசர்களும் போய்க் கொண்டிரும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்களுக்குள்ளும் என்னிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாலஸ்தீன நண்பர்களுடன் இருக்கும் போது நான் மனித உரிமை பார்வையாளர், ஆவணப் படுத்துபவர், நேரடி நடவடிக்கை போராளியாக இருப்பதை விட குறைந்த அளவே அச்சப்படுகிறேன். நீடித்து நடக்கும் ஒரு போராட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இவர்கள் ஒரு நல்ல வழிகாட்டி.

இனபிரிப்புச் சுவர்
காசா முனையை சூழ்ந்து கட்டப்பட்டுள்ள இசுரேலின் இனஅழிப்புச் சுவர் (நன்றி : aljaseera.com)

நிலைமை இவர்களையும் பாதிக்க ஆரம்பிக்கும், ஒரு நாள் இவர்களையும் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கும் என்று எனக்கு தெரிகிறது. ஆனால், நடந்து கொண்டிருக்கும் நம்ப முடியாத கொடூரங்களுக்கு மத்தியில், இறப்பின் இடைவிடாத இருப்பின் மத்தியில் சிரிப்பு, கருணை, குடும்ப நேரம் என்று தமது மனிதத் தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் அவர்களது வலிமையை பார்த்து வியக்கிறேன்.

இன்றைய காலை அனுபவத்துக்குப் பிறகு நான் பல மடங்கு ஆறுதலாக உணர்கிறேன்.

மனிதர்களிடம் நிரம்பியிருக்கும் தீங்கு செய்வதற்கான திறமையைப் பற்றி எழுத நான் கணிசமான நேரம் செலவிட்டிருக்கிறேன். ஆனால், மோசத்திலும் மோசமான சூழ்நிலைகளில், மனிதர்கள் உறுதியுடன் தமது மனிதத்தன்மையை தக்க வைத்துக் கொள்வது இதுவரை பார்க்காததை இங்கு நான் பார்க்கிறேன் என்பதையும் சொல்ல வேண்டும். இதைத்தான் மனித கௌரவம் என்று சொல்ல வேண்டும்.

இங்கு உள்ள மக்களை நீங்கள் ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவேளை ஒரு நாள் அந்த சந்திப்பு நடக்கலாம். ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டையும், ஜனநாயக இசுரேலிய நாட்டையும் எனது வாழ்நாளில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைப்பது உலகெங்கிலும் போராடும் மக்கள் அனைவருக்கும் வியக்கத்தக்க நம்பிக்கைக்கான ஆதாரமாக விளங்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்க ஆதரவிலான ஜனநாயக விரோத அரசுகளின் கீழ் துன்புறம் மத்திய கிழக்கில் உள்ள அரபு நாட்டு மக்கள் அனைவருக்கும் அது நம்பிக்கையளிக்கும் ஆதாரமாக இருக்கும்.

________________

பிப்ரவரி 8, 2003

தாக்குதலுக்குப் பின்
காசா நகர் மீது இசுரேல் நடத்திய வான் வழி தாக்குதலின் விளைவுகளுடன் போராடும் பாலஸ்தீனர்கள்  (படம் : நன்றி aljazeera.com)

நேற்று இரவு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பல அக்கறையான பதில்கள் வந்தன. பெரும்பாலானவற்றுக்கு பதில்போடுவதற்கு இப்போது நேரம் இல்லை. உங்கள் அனைவரின் ஊக்குவிப்பு, கேள்விகள், விமர்சனங்களுக்கு நன்றி.

வந்த கடிதங்களில் டேனியலின் எதிர்வினை எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். யூத மக்களிடையே ஆக்கிரமிப்புக்கு இருக்கும் எதிர்ப்பும், இசுரேலிய ராணுவத்தில் பணி புரிய மறுப்பவர்களின் துணிச்சலும், நமது பெயரில் கொடூரங்கள் நடத்தப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குகின்றன.

பிப்ரவரி 7, 2003 அன்று ரச்சேலுக்கு வந்த மின்னஞ்சல்

நான் இசுரேலிய பாதுகாப்பு படையில் சேம இராணுவ அலுவலராக (reserve first lieutenant) வேலை செய்கிறேன். போரை உணர்வுரீதியாக எதிர்ப்பவர்களால் இராணுவ முகாம்கள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் பலர் குடும்பங்களுடன் வாழும் சேமப் படையினர்; கடந்த காலத்தில் போர்க்களத்தில் தமது வீரத்தை நிரூபித்தவர்கள். பலர் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; எப்போது வெளி வருவார்கள் என்று தெரியவில்லை.

AWOLS (அனுமதி இல்லாமல் பணியை புறக்கணிப்பவர்கள்), பணியாற்ற மறுப்பவர்கள் இவர்களின்எண்ணிக்கை எங்கள் தேச வரலாற்றில் இது வரை இல்லாத அளவு அதிகரித்திருக்கிறது.

வலன்சியா, ஸ்பெயின்
ஸ்பெயினில் உள்ள வலன்சியாவில் இசுரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படம் : நன்றி rt.com)

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடிய இலக்குகளின் மீது சுடுவதற்கான உத்தரவுகளை நிறைவேற்ற மறுப்பது அதிகரித்திருக்கிறது.

இசுரேலில் வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், ஷரோனின் பழிவாங்கலுக்காக தமது வீடுகளையும் தொழில்களையும் மக்கள் இழந்து வரும் நேரத்தில் பல தொழில்முறை படை வீரர்கள் – அவர்களில் பலர் விமானிகள், உளவுத் துறையினர் – பச்சைப் படுகொலைகளுக்கான உத்தரவுகளை மறுத்து சிறையையும், வேலையின்மையையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இராணுவ நீதித் துறையின் வேலைகளை செய்ய வேண்டும். ஓடிப் போன படைவீரர்களை தேடிப் பிடித்து கொண்டு வர வேண்டியதுதான் எனது வேலை. 18 மாதங்களாக நான் வேலைக்குப் போகவில்லை. மாறாக, சர்வதேச ஆர்வலர் குழுக்கள் எங்கள் படைவீரர்கள் செய்வதாக கூறும் குற்றச் செயல்களை நேரில் பார்க்கவும் படம் பிடிக்கவும் எனது திறமைகளையும், தகுதிகளையும் பயன்படுத்தி வருகிறேன்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். இசுரேல் மிக மோசமான சில தலைவர்களின் கீழ் உள்ளது என்று கருதுகிறேன். குடியேறிகளும், உள்ளூர் காவல்துறையினரும் ஒருவருக்கொருவர் உள்கையாக உள்ளனர். எல்லைக் காவல் படையினர் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். 40% இசுரேலிய மக்கள் அவர்களை நினைத்து வெட்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்த விபரங்கள் மற்றவர்களுக்கும் தெரிய வந்ததால் எஞ்சிய 90% இசுரேலிய மக்களுக்கும் காவல் படையினர்  அவமானமாகி விடுவார்கள்.

நாசரேத் ஆர்ப்பாட்டம்
இசுரேலின் நாசரேத் நகரில் அரசை எதிர்த்து அரபு இசுரேலியர்கள் ஆர்ப்பாட்டம் (படம் : நன்றி rt.com)

உங்களால் முடிந்த அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள். கைச்சரக்கை சேர்த்து எதையும் மிகைப்படுத்த வேண்டாம். ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் இங்கு உள்ள ஊடகங்கள் திறமையான பிரச்சார கருவிகளாக செயல்படுகின்றன.

இந்த கடிதத்தை உங்கள் நண்பர்களுக்கு கொடுக்கவும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பணி புரியும் பல படைவீரர்கள் அவர்கள் பார்ப்பதை குறித்து மிகவும் வெறுப்படைந்திருக்கிறார்கள்.

இசுரேலிய பாதுகாப்பு படைகள் மத்தியில் “தொவ்ஹர் ஹனேஷெக்” என்ற கௌரவ நடத்தை உள்ளது. நிராயுதபாணியான ஒரு கைதியை கொல்வது அல்லது மனிதப் பண்புக்கு மாறான உத்தரவை நிறைவேற்றுதல் போன்ற கொடுமையான ஒன்றை செய்யப் போகும் சக படைவீரரிடம் இதைத்தான் நாங்கள் சொல்வோம். இதன் பொருள் “ஆயுதத்தின் புனிதம்”.

ஒரு படைவீரரிடம் அவரது மொழியிலேயே பேசும் இன்னொரு சொற்றொடர் “தேகல் ஷஹோர் – அதன் பொருள் “கருப்புக் கொடி”. “அதா மெடாசட் தேகல் ஷஹோர்” என்று சொன்னால், “நீங்கள் நியாயத்துக்குப் புறம்பான உத்தரவை நிறைவேற்றுகிறீர்கள்” என்று பொருள். இசுரேலிய படைவீரர்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம், “அற்பத்தனமான, தவறாக வழிநடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்” இதைச் சொல்லக்  கேட்பது பல படைவீரர்களை அதிர்ச்சியடையச் செய்யும்.

சாத்தியப்படும் போதெல்லாம் படைவீரர்களுடன் உரையாட முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்களை முகமற்றவர்களாக செய்திருப்பது போல, நீங்கள் அவர்களை மனிதத் தன்மை இல்லாமல் கருதும் தவறை செய்து விடாதீர்கள். மரியாதையும் சரி, அவமரியாதையும் சரி பொருத்தமானதோ இல்லையோ தொற்றிக் கொள்ளக் கூடியவை.

நீங்கள் நல்ல செயல் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு நன்றி.

அமைதியை விரும்பும்,

டேனி

நன்றி : கார்டியன்
மின்னஞ்சல்கள் ஆங்கிலத்தில்