Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 646

திண்ணியம் – வாயில் மலம் திணித்த ஆதிக்கசாதி வெறியர்கள்

13

2003-ம் ஆண்டு 22,23 தேதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் தோழமை புரட்சிகர இயக்கங்களும் இணைந்து தஞ்சை திருவள்ளுவர் திடலில் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா எனும் தாழ்த்தப்பட்ட மயானத் தொழிலாளி,  அவரது உறவினரான தலித் இளைஞர்களின் வாயில் கள்ளர் ஆதிக்க சாதிவெறியர்கள் மலத்தை திணித்த கொடூரத்தை விளக்குகிறார்.

திண்ணியம் மனுதர்மக் கொடுங்கோன்மையின் நீட்சி: இந்து மதமல்ல, இந்து மலம்!

ங்கள் ஊரில் கள்ளர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவற்றில் வெட்டியான் வேலை செய்யும் நான்கு குடும்பங்களில் நானும் ஒருவன்.

திண்ணியம் கருப்பையாசென்ற கலைஞர் ஆட்சியின் பொழுது பஞ்சாயத்துத் தலைவராக இருந்த ராஜலட்சுமி சுப்பிரமணியனிடம் தொகுப்பு வீடு வேண்டுமென்று கோரி 2000 ரூபாய் பணம் கொடுத்தோம். பணம் கொடுத்து மூன்றாண்டுகளாகியும் அவர்கள் வீடும் கட்டித் தரவில்லை; கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் இல்லை. அரசிடமிருந்து வீடுகள் ஒதுக்கப்பட்டபொழுது, ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியன் ஒரு வீட்டிற்கு ரூ.8000/- எனச் சட்ட விரோதமாக விலை நிர்ணயம் செய்து வசூலித்தார். எங்களிடம் அவ்வளவு பணமில்லாததால், ஏற்கெனவே நாங்கள் கொடுத்த பணத்தையேனும் திருப்பிக் கொடுக்க வேண்டினோம். நாங்கள் எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அப்பணத்தைத் தராமல் அவர்கள் இழுத்தடித்து வந்தனர்.

அமைச்சர் நேருவிடம் மனுக்கொடுத்துப் பார்த்தோம். அதற்கும் பலனில்லை. ஒருமுறை, நான் சுப்பிரமணியனிடம் சென்று, “ஐயா, உங்கள் காலில் கும்பிட்டு வேண்டுமானால் விழுகிறேன், எங்கள் பணத்தைக் கொடுத்துவிடுங்கள்” எனக் காலில் கும்பிட்டு விழுந்தேன். பலமுறை இழுத்தடித்தபின், இறுதியாக ‘உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ’ என்றும் சொல்லி விட்டார்.

இச்சூழலில் எங்கள் ஊர்க் கோயில் திருவிழாவும் வந்தது. பறையர் இனத்தைச் சேர்ந்த ஒருவரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் காப்புக் கட்டிக் கொள்வது வழக்கம். சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில், என் பெயர் வந்தது. நான் கள்ளர் சாதிப் பெரிய மனிதர்களிடம் சென்று, “நாங்க குடுத்த பணத்த ராஜலட்சுமி சுப்பிரமணியன் திருப்பிக் குடுக்கலன்னா காப்புக் கட்ட முடியாது. அந்த பணத்த கேட்டு வாங்கிக் குடுங்க” என்றேன். திருவிழா முடிந்த பின்னர் வரவு – செலவுக் கட்டத்தில் எங்கள் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம் எனச் சமாதானப்படுத்தினர். பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், திருவிழா முடிந்து ஒரு வாரமாகியும் எவரும் வாய் திறக்கவில்லை.

திண்ணியம் சாதிக்கொடுமை

வேறு வழியின்றி மறுபடியும் மே 20, 2002 அன்று எங்கள் ஊரின் கள்ளர் சாதியினரிடம் சென்று முறையிட்டேன். “ஐயா, உங்களுக்கு அடிமைத் தொழில் செஞ்சு வாழற எங்ககிட்டயே பணத்த வாங்கிட்டு திருப்பித் தரமாட்டேங்கறீங்களே, அந்தப் பணத்த திருப்பித் தர்றவரைக்கும் நாங்க உங்க வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு வெட்டியான் வேல செய்ய மாட்டோமுங்க” என்று தெரிவித்தேன். தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான வேதவல்லி காமராஜன் ‘அடுத்த திருவிழாவுக்குப் பெறவு பேசித் தீக்கலாம்’ என்றார். “ஐயா, ஏற்கெனவே ஒரு திருவிழா முடிஞ்சிருச்சு. இப்ப அடுத்த திருவிழாவும் முடிஞ்சிரும். எங்கப் பிரச்சினை மட்டும் தீரவே போறதில்லை. அதுனால, இனி நாங்க நாலு வெட்டியான் குடும்பமும் ஒங்களுக்கு வெட்டியான் வேல செய்ய மாட்டோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நேரே வீட்டிற்குச் சென்று என் தப்பை (பறையை) எடுத்துக் கொண்டு, கள்ளர் தெருக்களுக்குப் போனேன். ராஜலட்சுமி சுப்பிரமணியனிடம் நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கித் தரக் கோரியும், அது வரை நாங்கள் அடிமைத் தொழில் செய்ய முடியாதெனவும் தப்படித்துக் கொண்டே அறிவித்தேன். என்னுடைய மைத்துனர் இராமசாமியும், பெரியம்மா பையன் முருகேசனும் உடன் வந்தார்கள். யாரும் எங்களை வழி மறித்து, ‘ஏன் தண்டோரா போடுகிறாய்’ என்றோ, ‘நாங்க கேட்டு வாங்கித் தர்றோம்’ என்றோ கூறவில்லை. காலை 11 மணியிளவில் நாங்கள் அனைத்துத் தெருவிலும் தப்படித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிச் சென்று விட்டோம்.

முன்னாள் உபதலைவர் சேட்டு என்பவரின் முன்னிலையில் தான் நாங்கள் ராஜலட்சுமியிடம் பணம் கொடுத்தோம். அன்று மாலை, சேட்டுக்கு இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்து, பணம் கொடுத்த போது தான் அங்கில்லையென்று சொல்லுமாறு சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். அந்த சேட்டு எங்களிடம் வந்து காலையில் தண்டோரா போட்டதற்குக் கூட்டம் கூட்டியிருப்பதாகவும், என்னை அழைத்து வரச் சொன்னதாகவும் கூறினான். நானும் அவனோடு சென்றேன்.

திண்ணியம் வன்கொடுமை

பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன்பாக நிழற்குடையில் ஆசிரியர் சுப்பிரமணியன், நாயுடு இனத்தைச் சேர்ந்த அசோக், இராசேந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

சுப்ரமணியன் என்னை அருகில் வருமாறு கூப்பிட்டார். நானும் சென்றேன். “யார்ரா ஒன்னய தண்டோரா போடச் சொன்னது” எனக் கேட்டார். “யாரும் சொல்லலீங்க. எங்களுக்கு நாயம் கிடைக்கல. அதுனால நானாத்தான் தண்டோரா போட்டேன் என்றேன்.

“பறப்பயலுக்கு இம்புட்டுத் திமிரா என்னய எதுத்துக்கிட்டு நீ இந்த ஊர்ல வாழ்ந்துருவியா?” என்றபடியே, தன் கழுத்திலிருந்த துண்டை எடுத்து, என் குரல்வளையைச் சுற்றி இறுக்கத் தொடங்கினார். என்னக் கீழே தள்ளி செருப்புக் காலோடு என் குரல் வளையில் மிதிக்கத் தொடங்கினார்.

என் மனைவி கைக்குழந்தையை வைத்துக் கொண்டு என்னை அடிக்க வேண்டாமென்று என் மீது விழுந்து கெஞ்சினாள். இதனால், என் மனைவியும் குழந்தையும் கூட மிதிபட்டார்கள். இதனை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வாறு மிதிக்கப் பட்டதன் விளைவாக எனக்குச் சிறுநீரும் மலமும் வெளியேறி விட்டன.

“செருப்பால் அடிச்சசாதாண்டா பறப்பயலுக்கெல்லாம் புத்தி வரும். இனிமே எங்கள எதுத்துக்கிட்டு நீ எதுவும் செய்ய முடியாது. 25 குடும்பம் இருந்துகிட்டு நீ எங்கள எதுத்து தண்டோராவா போடுற?” என்றபடி மீண்டும் மீண்டும் அடித்தார். சுப்பிரமணியனின் சம்பந்தி தலையிட்டு, “இதற்கு மேல் அடித்தால் இவன் செத்துப் போயிருவான், பண்ண தப்புக்கு கால்ல கும்புட்டு வுழுந்து எந்திரிச்சுப் போ” என்றார். சுப்பிரமணியன் காலில் கும்பிட்டு விழுந்தேன். பிறகு நானும் என் மனைவியும் அங்கிருந்து அகன்றோம்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் மறுபடியும் இராஜலட்சுமியின் மகன் பாபுவும், முன்னாள் தலைவர் சோமசுந்தரமும் என்னை மறித்தனர். என்னோடு காலையில் வந்த இராமசாமியையும், முருகேசனையும் கூட்டிக் கொண்டு, மன்னிப்புக் கேட்டு மறுபடியும் ஊர் முழுக்கத் தண்டோரா போட வேண்டுமென்றனர்.

மறுநாள் காலை 12 மணிவரை நான் ஊரில்தான் இருந்தேன். அதன் பிறகு என் மாமனாரின் ஊர்த் திருவிழாவுக்காக நானும் என் மனைவியும கிளம்பிச் சென்றோம். உள்ளூர பயந்து போயிருந்த இராமசாமியும், முருகேசனும் ஆசிரியர் சுப்பிரமணியனிடம் மன்னிப்பு கேட்டு விடலாம், இரண்டு அடி கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.

சுப்பிரமணியனுடைய பழைய வீடு மெயின்ரோட்டில் உள்ளது. சுப்பிரமணியனுடைய மனைவி ராஜலட்சுமியும், ஐந்தாறு சொந்தக்காரர்களுக்கு அங்கே இருந்திருக்கின்றனர். இவர்கள் உள்ளே சென்று மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர். தரையில் அமரச் சொல்லி என்னிடம் கேட்டதைப் போன்றே யார் தூண்டியதெனக் கேட்டிருக்கின்றனர். இவர்கள் “யார் சொல்லியும் போகலீங்க. அவன்தான் போனான். நாங்க கூடப் போனோம்” என்று உண்மையை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கின்றனர். உடனே பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொண்டு இராமசாமிக்குத் தொடையிலும், முருகேசனுக்கு கழுத்திலும் சூடு போட்டிருக்கின்றனர். சுப்பிரமணியனுடைய சித்தப்பா மகன் குடியரசு என்பவர் முருகேசனை எட்டி உதைத்துத் தரையில் மோதியதில், முருகேசன் பல் தெறித்துப் போனது. முருகேசனுக்கு உடல் முழுக்க ஐந்தாறு இடங்களில் சூடு வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் வீட்டுக்கு வெளியே மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.

பிறகு, ஒரு கிழிந்த தப்பை வாங்கிக் கொடுத்து, மன்னிப்புக் கேட்டு ஊர் முழுக்க அடித்துச் செல்லச் சொல்லியிருக்கின்றார். உடனே, சுப்பிரமணியன், “நேத்திக்கு நல்லா கொட்டினீங்களாமே, இன்னிக்கு ஏண்டா சத்தமே வரல. நீங்க இப்படியெல்லாம் சொன்னா திருந்த மாட்டீங்க. எடுத்துக்கிட்டு வாங்கடா பீயை” என்று அவர் கத்த, அவருடைய சொந்தக்காரர்கள் ஒரு இரும்பு முறத்தில் மலத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கின்றனர். இராமசாமி வாயில் முருகேசனும், முருகேசன் வாயில் இராமசாமியும் மலத்தை ஊட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றனர்.

“என்ன சார், இத்தனைப் பேர் சேர்ந்துகிட்டு அடிச்சீங்க. மிதிச்சீங்க. சூடு போட்டீங்க. இப்ப பீயத் திங்கச் சொல்றீங்களே” என்று கேட்டிருக்கின்றனர். மறுபடியும் இருவரது கைகளிலும் சூடு வைக்கவே, இதற்கு மேலும் தாமதித்தால் சூடு வைத்தே கொன்று போடுவார்கள் என்றெண்ணிய இருவரும் வேறு வழியின்றி, உலகில் அடிமைக் காலந்தொட்டு இதுவரையில் எங்கும் நடைபெறாத கொடுமையாக இராமசாமி வாயில் முருகேசனும், முருகேசன் வாயில் இராமசாமியும் மலத்தை அள்ளி வைத்திருக்கின்றனர்.

“பறப்பயலுகளுக்கு இம்புட்டுத் திமிரா. கள்ளன எதுத்துக்கிட்டு இனி நீங்க எதுவும் செய்ய முடியாது. நாளைக்கு காலையில எங்ககிட்ட வந்தாத்தான் ஒங்களுக்குச் சோறு. காலகாலத்திற்கும் பறப் பயலுக்கு இந்தப் புத்தி இருக்கணும்” என்று சொல்லியிருக்கிறார். அந்த கிழிந்த தப்பிற்கு தலைக்கு 75 ரூபாய் பணமும் கேட்டிருக்கின்றனர். இருவரும் தங்களிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்துவிட்டு, சுப்பிரமணியன் காலில் விழுந்து கும்பிட்டு வீடு திரும்பியிருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட நானும் ஊருக்குத் திரும்பினேன்.

காயங்களுக்கு நாட்டு மருந்தைப் போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேல் வெளியுலகுக்குத் தெரிவிக்காமலே இருந்தோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் எங்கள் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைத் துவக்கினோம். நானும் அவ்வமைப்பில் உறுப்பினராக இருக்கிறேன். எங்கள் ஊரின் மாணவர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும், மனித உரிமை அமைப்புகளும் எங்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அளித்த தைரியத்தின் விளைவாக சுப்பிரமணியன் மீது வழக்கு தொடர்ந்தோம்.

அவனை மாவட்டகலெக்டர் குண்டர் சட்டத்தில் போட்டார். அவன் மீது ஏற்கெனவே ஆறு வழக்குகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அவன் மீது குண்டர் சட்டம் அமலாக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவாக அவன் வெளியில் வந்தவுடன் கள்ளர் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களுக்கு வேலையின்றி செய்து விட்டனர். நாங்கள் இன்று வாழவழியின்றி வறுமையில் வாடுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றுபட வேண்டும். நாம் சாகத்தான் போகிறோம், மீண்டும் பிறக்கப் போவதில்லை. எனவே எத்தகை வன்கொடுமை நடந்தாலும், உடனடியாக அதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்”
____________________________

புதிய கலாச்சாரம். மார்ச் 2003
____________________________

மெரினா அழகாகத்தானே இருக்கிறது…

2

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தப் போகிறார்களாம். எப்படி என்கிற கேள்விக்கான விடை யாருக்காக என்கிற கேள்வியை உடனடியாக எழுப்பி விடுகிறது. பதில்கள் அழகு என்பது நிச்சயம் வர்க்க சார்புடையதுதான் என்பதற்கான இன்னுமொரு நிரூபணமாகின்றன. இன்றைய மெரினாக் காட்சிகள் எவை? அதிகாலை விரிந்து கிடக்கும் நீலக்கடலும் வானும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தொட்டுக் கொள்ளுகின்றன. கதிரவன் இரத்தச் சிவப்பாய் உதிக்கும் போதே சிறுசிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன. நேரம் செல்லச் செல்ல அந்தக் கரும்புள்ளிகள் பெரிதாகி கட்டுமரங்களாகிக் கரையை நெருங்கும் காட்சி விரிகிறது. ஒவ்வொரு கட்டுமரத்திலும் மூன்றோ, நான்கோ மீனவர்கள். ஒரு பாடலுக்குரிய தாளம் போல துடுப்பு வலிக்கிறார்கள். அவர்கள் நேற்றோ, முந்தின நாளோ கட்டுச் சோறு கட்டிக்கொண்டு, உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குச் சென்றவர்கள். சுட்டெரிக்கும் வெய்யிலிலும் கொட்டி நடுக்கும் பனியிலும் பாடுபட்டு உழைத்த செல்வத்தோடு இதோ அவர்கள் கரைக்குத் திரும்புகிறார்கள்.

மெரினா

இதோ, கரையில் அவர்களின் சிறு பிள்ளைகளும், மனைவிமார்களும், வயோதிகப் பெற்றோர்களும் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். இவர்களும் அங்கே கரையை நெருங்குபவர்களும் சினிமாவில் காட்டப்படும் அழகு மனிதர்கள் அல்ல. பழச்சாறும், நட்சத்திரவிடுதி உணவும் தின்று, குளுகுளு அறைகளில் சொகுசாக வாழும் மினுமினுக்கும் வெளுத்த தோலும், பிதுங்கிவழியும் சதையும் அவர்களுக்கில்லை. காய்ந்து கருகிய தோலும், உழைத்து முறுக்கேறிய கரங்களும், ஒட்டிய வயிறுமாக இருக்கிறார்கள். தாம் ஈட்டிய செல்வத்தை அவர்கள் கரையின் மணலிலேயே கொட்ட, உறவினர்களும் வியாபாரிகளும் சூழ்ந்து கொள்கிறார்கள். அன்றைய உணவுக்கான மீன்களை விற்று விட்டு வலைக்கு வாடகையும், கடனுக்கு வட்டியும் கட்டுவதற்குப் புறப்படுகிறான் அந்த உழைப்பாளி. அன்று அவர்கள் முகத்தில் காணும் கலவையான உணர்வுகளை எந்தக் கலைஞனால்தான் முழுமையாக சித்தரிக்க முடியும்? மாலையில் சற்றே மாறுபட்ட கலவையான உணர்வுகளைக் கொண்ட மனிதர்கள் திரளுவதைக் காண்கிறோம். அங்கே கூடுபவர்கள் எல்லாம் உல்லாசத்துக்காக வருவதில்லை. மனப்புழுக்கத்தைப் பகிர்ந்துகொள்ள, உழைத்துக் களைத்தவர்கள் ஓய்வைநாட, சமூகத் தளைகளால் கட்டுண்ட காதலர்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள, மிகவும் குறைந்த செலவில் குடும்பம் குடும்பமாக மகிழ்ந்திருக்க மனிதர்கள் நாடிவருகிறார்கள். கடல் நீரில் காலை நனைத்து மகிழ்ச்சிகொப்பளிக்கும் உள்ளங்களைக் காண்கிறோம்,

இத்தனை அழகுக்கும் மத்தியில் சில அருவருக்கத்தக்க காட்சிகளும் உண்டு. ஊதிப்பெருத்த மனிதர்கள் பலர் தமது கொழுப்பைக் கரைக்க நாய்களுடன் காரில் வந்திறங்கி அதிகாலையில் நடைப்பயிற்சி செய்கிறார்கள். சமூக விரோதிகளின் கேடுகள் சிலவும் நடக்கின்றன. அப்புறம் அந்தக் கல்லறைகளும், அவற்றில் நடக்கும் பகுத்தறிவற்ற செயல்களும் – தேவையெல்லாம் இவற்றை அகற்றுவதுதான். ஆனால், ஆட்சியாளர்களோ, மலேசிய அரசுடன் – அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு 3,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து மெரினா கடற்கரையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.

மேட்டுக் குடியினரின் பார்வைக்கு மெரினா கடற்கரையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவர்குப்பங்கள் அசிங்கமாகத் தெரிகின்றனவாம். அவற்றை அகற்றி விட வேண்டுமாம். இனி நீர்ச்சறுக்கு விளையாட்டு, மிதக்கும் உல்லாச விடுதிகள், கரையிலோ நட்சத்திரக் கேளிக்கை விளையாட்டு விடுதிகள், வெளிநாட்டுத் தொழிலதிபர்களும் – அரசு அதிகாரிகளும் தங்கும் மாளிகைகள், அவர்களின் அலுவலகங்கள் – இவற்றை நிறுவி அழகுபடுத்தப் போகிறார்கள், ஆட்சியாளர்கள். ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடித்துப் பழக்கப்பட்டவர்கள் அல்லவா. பல ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் நிறைவேறும்போது சில ஆயிரம் கோடி ரூபாய்களாவது தேறும், கட்டுமானப் பணிகளில் ஒப்பந்தம் எடுக்கலாம்; கேளிக்கை – உல்லாச விடுதிகளில் பங்குதாரர்கள் – உரிமையாளர்கள் ஆகலாம்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன் பிடித்தொழிலைத் தாரைவார்ப்பதில் திரைகடல் ஓடாது திரைகடல் விற்று செல்வத்தைக் குவிக்கலாம்.

இலட்சக்கணக்கான மீனவர்குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் தரையில் விசிறியடிக்கப்படும் மீன்களைப் போல தொலைவில் கொண்டு போய்க் குவிக்கலாம். தலைமுறை தலைமுறையாகக் கடற்கரையில் பிறந்து, கடலிலேயே வாழ்ந்து, அங்கேயே மடிந்துபோன மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற சுவடே தெரியாமல் அழிக்கப்படுவர். நெசவாளிகள், விவசாயிகள், கீழ்நிலைப் பணியார்கள், இதோ, மீனவர்கள். இப்படி இருளில் தள்ளப்படும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பறித்து அவர்களின் துயரத்தில் இன்பம் காணும் குரூர – குறுமதியாளர்களின் ஆட்சியில் வேறென்ன நடக்கும்? ஆனால், உழைத்து உரமேறிய, இயல்பிலேயே போர்க்குணமிக்க மீனவர்களிடமிருந்து மெரினாவை அவ்வளவு எளிதாகப் பறித்துவிட முடியாது. படகோட்டி, மீனவ நண்பனாக வேடங்கட்டியவர், மீனவர்களை வெளியேற்றி மெரினாவை அழகுபடுத்த கொலைகாரன் தேவாரத்தை ஏவினார். மெரினா மணல் மீனவர் இரத்தத்தால் சிவந்து, ஐந்து மீனவர்கள் உயிரை குடித்தது, அந்த ஓநாய். ஆனால் மெரினாவை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அந்த துணிவும் உறுதியும் தொடரவேண்டும்.
____________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2003
____________________________

ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

29

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014  அனுபவங்கள் – 1

மீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு  எமது செய்தியாளர்கள் சென்ற போது நூற்றுக் கணக்கான வேடிக்கை, வினோத அனுபவங்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தப் பகுதியில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் – Vedic Science Research Centre என்ற திடுக்கிடும் பெயர் கொண்ட கோஷ்டியின் அனுபவத்தை பார்ப்போம்.

விஞ்ஞான ஆராய்ச்சி மையம் என்ற பெயருடன் வேதம் என்பதை ஒட்ட வைத்துக் கொண்டு பெயருக்கேற்றபடி “பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும்”, “பஞ்சாங்கம் ஒரு அறிவியல் பார்வை”, “பெரியபுராணச் சிந்தனை தொடர் சொற்பொழிவு” என்று ‘ஆய்வு’களை செய்து கொண்டிருக்கிறார்கள். விபூதி அணிவது முட்டாள்தனம், இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியபோது அவர் மீது வழக்கு தொடுத்த கோஷ்டி இதுதான். மற்றபடி யார் இவர்கள், பின்னணி என்ன என்று தெரியவில்லை. கடையின் பளபளப்பு, விளம்பர பிரசுரங்கள், நூல்களைப் பார்த்தால் ஏதோ இந்து என்ஜிவோ கும்பல் போலவும் இருந்தது.

கடையை நெருங்கும் போதே முஸ்லீம்கள், தீவிரவாதம், ஜிகாதி, பயங்கரவாதம், இந்துக்கள் பாவம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒருசேர ஒலித்துக்கொண்டிருந்தன. ‘வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரிலான  கடைக்கு உள்ளே நுழைந்தால் விஞ்ஞானத்திற்கும் ஸ்டாலுக்கும் சம்பந்தமே இல்லை. வீச்சரிவாள், சைக்கிள் செயின், கத்தி கபடா என்று ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டிய ஸ்டாலுக்கு விஞ்ஞானத்தை இணைத்து பெயர் வைத்திருக்கிறார்கள்.

எந்தப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவிகளோ தெரியவில்லை அனைவரையும் அந்த ஸ்டாலுக்குள் உட்காரவைத்து தொலைக்காட்சியில் எதையோ போட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைத்தும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன.

அந்த ஸ்டாலை சுற்றிலும் இந்து மதவெறியை கக்கும் நச்சுப்பிரச்சார சுவரொட்டிகளை எக்கச்சக்கமாக ஒட்டி வைத்திருந்தனர், சிறுபான்மையினரை குறிப்பாக இசுலாமியர்களை இழிவுபடுத்தும் வாசகங்களையும், அவர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தும் செய்திகளையும், பொய் பிரச்சாரங்களையும் எழுதி வைத்திருந்தனர். உள்ளே வருபவர்களை எல்லாம் ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு சுவற்றில் எழுதிவைத்திருந்த விவரங்களை எல்லாம் வெறித்தனத்துடன் ஒருவர் விளக்கி கொண்டிருந்தார்.

“சிறுபான்மையினருக்கு தான் இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் இருக்கு, இந்துக்களுக்கு என்ன இருக்கு சார்? இந்து தலைவர்களுக்கே கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை, கொலை செய்யப்படுகிறார்கள்” என்று கூறி “பாருங்க எவ்வளவு தேச பக்கதர்கள் கொல்லப்பட்டிருக்காங்க” என்று மனைவியால் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டவர்கள், கள்ளக்காதல், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்காக கொல்லப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்ட தேஷபக்தர்களின் நீண்டதொரு பட்டியலை காண்பித்து அனைவரையும் கண்ணீர் விடச் சொன்னார்.

“ஹிந்துக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகமே இல்லை. விஸ்வரூபம் என்கிற ஒரு படப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினை செய்தார்கள், அமெரிக்க தூதரகத்தையே முற்றுகையிட்டார்கள். இதையெல்லாம் நாம் அனுமதிக்கக்கூடாது.”

“ஆனா, இந்த அ.தி.மு.க, தி.மு.க எல்லாம் இவங்க கூட கூட்டணி வைக்க போட்டி போடுறாங்க, என்ன அநியாயம் பார்த்தீங்களா சார்.”

“அப்புறம் இதப் பாருங்க  சார், திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும் மணி மண்டபம் அமைக்கப் போறாங்களாம், அதுவும் நம்ம வரிப்பணத்தில சார். இவங்கெல்லாம் யார் சார், நம்ம இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினவங்க. அவங்களுக்கு மணி மண்டபம் அமைக்க விடக்கூடாது சார்” என்றார்.

அவர் பேசி முடித்ததும் “நீங்க சொன்னதுல ரெண்டு சந்தேகம். கூட்டணி வைப்பது பத்தி சொன்னீங்க, இந்துக்களோட கட்சி பா.ஜ.க தாழ்த்தப்பட்ட மக்களோட வீடுகளை உடைச்ச பா.ம.கவோடும் இன்னும் சாதிக் கட்சிகளான கொங்கு ஈஸ்வரன் கட்சி, பச்சமுத்து கட்சி இவங்களோட எல்லாம் கூட்டணி வைக்கிறதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றும் “திப்பு சுல்தானைப் பத்தி சொன்னீங்க. அவரு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரையே கொடுத்த மன்னராச்சே, அவரப் பத்தி இப்படி பேசலாமா” என்றும் கேட்டோம்.

“திப்புசுல்தான் இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினவன் சார்” என்று ஆரம்பித்தவர், “அந்த புத்தகம் எழுதினவரே இதோ வந்துட்டார் அவர்கிட்டயே கேளுங்க” என்று இன்னொருவரை கை காட்டி விட்டு எஸ்கேப் ஆனார்.

புத்தக ஆசிரியர் (பால கௌதமன் என்று பெயராம்) நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அக்மார்க் அம்பியாக காட்சியளித்தார்.

“நீங்க எழுதின இந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினேன். அதில ஒரு சந்தேகம். திப்புசுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்தானே. அவரைப் பத்தி ஏன் இப்படி எழுதியிருக்கீங்க”

“என்ன சார் நீங்க! ஆங்கிலேயரை எதிர்த்து அவன் எதுக்கு போராடினான்ன்னு பாருங்க. அவனோட தன்னோட முஸ்லீம் ஆதிக்கத்தை காப்பாத்தத்தான் போராடினான்”.

“இருந்தாலும், ஆங்கிலேயரை எதிர்த்து நம்ம மண்ணை காக்க போராடியது முக்கியமில்லையா”

பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் ஏதோ கேட்க முயற்சிக்க, “நீங்க போன வருசமே வந்து என்னோட ஆர்க்யூ பண்ணிட்டு போனீங்கள்ள. உங்க கிட்ட பேச எதுவுமில்ல சார்” என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.

தொடர்ந்து, “திப்பு சுல்தான் ஆங்கிலேயரோடு எத்தனை ஒப்பந்தம் போட்டுக் கொண்டான் தெரியுமா” என்றார்.

“கேள்விப்பட்டிருக்கேன், ஒரு ஒப்பந்தத்தில, தன்னோட இரண்டு மகன்களையும் பணயக் கைதிகளா அனுப்பி வைச்சிருக்காரு. வேறு எந்த மன்னனாவது நாட்டுக்காக தன்னோட குழந்தைகளை பணயம் வைச்சிருக்காங்களா. அந்தக் காலத்துல திருவிதாங்கூர், கொச்சி ராஜாக்கள் எல்லாம் இந்துவா இருந்து கிட்டே ஆங்கிலேயன் கிட்ட சரணடைஞ்சு அடிமையா நடந்துகிட்டாங்களே, அதோட ஒப்பிட்டுப் பாருங்க”

“நீங்க இதையெல்லாம் இவ்வளவு எளிமையா பார்க்கக் கூடாது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா? திப்பு சுல்தான் தன்னோட ஆதிக்கத்தை தக்க வச்சுக்க ஆங்கிலேயரை எதிர்த்ததை தேசபக்தின்னு சொல்ல முடியாது சார்” என்றார்.

“இந்து ராஜான்னு சொல்லிக்கிற திருவிதாங்கூர், கொச்சி மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையா இருந்து சுகமா வாழ்ந்த துரோகத்தை விட தன்னோட நாட்டை அன்னியனிடமிருந்து பாதுகாக்க போர்க்களத்துல போரிட்டு உயிர் தியாகம் செய்த திப்பு மேலானவர்தானே சார்.”

“கேரள ராஜாக்கள், எதுக்காக ஆங்கிலேயருக்கு அடிமையா இருந்தாங்கன்னு பார்க்கணும். இந்து மதத்தையும் இந்து மதத்தோட சொத்துக்களையும் பாதுகாக்கத்தான் ஆங்கிலேயரோட ஒப்பந்தம் போட்டுக் கிட்டாங்க” என்று தேசபக்திக்கு புதிய வரையறை சொன்னவர், தொடர்ந்து “திப்பு சுல்தானை பாருங்க, ஃபிரெஞ்சு காரங்கள கூடச் சேர்த்துக் கிட்டான், இந்தியா மேல படை எடுத்து வரும்படி ஃபிரெஞ்சு காரங்களுக்கு லெட்டர் போட்டிருக்கான்”

“ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதற்கு ஃபிரெஞ்சு தளபதிகளை சம்பளம் கொடுத்து தளபதிகளா வேலைக்கு வச்சுகிட்டாரு. ஆனா, இந்து ராஜாக்கள் எல்லாம் நம்மை நாட்டை அடிமைப்படுத்தின ஆங்கிலேயனுக்கு கால்ல விழுந்து கிடந்தாங்களே. அப்போ யாருக்கு மணிமண்டபம் வைக்கணும்?” என்று கேட்டோம்.

“அதெல்லாம் இருக்கட்டும். துலுக்கனுக்கு நம்ம நாட்டுல என்ன சார் வேல. ஹைதர் அலி யாரு, பஞ்சாபிலேருந்து வந்து மைசூர் மகாராஜாவை தூக்கி எறிஞ்சுகிட்டு ஆட்சியை புடிச்சவன். அவனை நாம எதுக்கு சார் மதிக்கணும்?” என்று பேச்சை மாற்றினார்.

“பஞ்சாபும் இந்தியாலதான இருக்கு, அப்போ ஹைதர் அலிக்கு சொந்த ஊரான பஞ்சாப் பாரதத்தில் இல்லையா? ”

இதில் அதிர்ச்சியானவர், “யாரு சொன்னாங்க, பஞ்சாபுக்கு அவன் எங்கேருந்து வந்தான், மத்திய ஆசியாவில இருந்து வந்தான். இவனுங்க எல்லாம் வந்துதான் நம்ம நாடு சீரழிஞ்சு போச்சு. நம்ம நாட்டோட பெருமைய மீட்டெடுக்கணும்”

“ஆனால, நம்ம அரசே அன்னிய முதலீடுதான் நம்ம நாட்டை வளர்க்க ஒரே வழின்னு சொல்லி வெளிநாட்டு கம்பெனிகள உள்ள விடுது. அது சரியா!”

“இப்போ நம்ம பலவீனமா இருக்கோம் சார். வெளிநாட்டில இருந்துதான் எல்லாம் வர வேண்டியிருக்கு. நம்ம நாடு எப்படி இருந்த நாடு தெரியுமா. இந்த நாட்டுல என்ன இல்லை சார். 1800-ம் ஆண்டுல உலக ஜி.டி.பில 40% நம்ம நாட்டுலதான் உற்பத்தி ஆகிட்டு இருந்துச்சு. அன்னியர்கள் வந்துதான் எல்லாம் சீரழிச்சிட்டாங்க”

“அப்படியா சொல்றீங்க. அப்படீன்னா முகலாயர் ஆட்சி முடியிற கால கட்டத்துல  அவ்வளவு சிறப்பா இருந்ததுன்னா அப்போது நம்ம நாட்டில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்திருக்குன்னு சொல்லுங்க”

1000 ஆண்டு அன்னியர் ஆக்கிரமிப்பு என்று புரட்டல் சொல்லும் சங்க வரலாற்றுப் பாரம்பரியத்தை விட்டுக் கொடுத்து விட்டோமோ என்று ஒரு கணம் திகைத்துப் போனவர், “அவன் நம்ம பொருளாதாரத்து மேல கை வைக்கல சார், அது நல்லா நடந்தாத்தான் வரி வசூலிக்க முடியும். ஆனா இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினான், அதை நெனைச்சு பாருங்க.” என்றார்.

“சரி, இன்னொரு சந்தேகம். இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி வெள்ளைக்காரன வெரட்டியடிச்சோம். ஆனால,  இன்னைக்கு ஐ.டி கம்பெனில வேலை பார்க்கிற நாங்கெல்லாம், வெள்ளைக்காரனுக்குத்தான் சலாம் போடுறோம். அவன் ஆட்டுவிக்கிற மாதிரிதான் ஆடுறோம். இந்த அடிமைத்தனத்துக்கு என்ன செய்றது?”

“அவன்தான் உங்களுக்கு காசு தாறான் சார். அப்போ அவன் சொல்றபடிதான் கேக்கணும். இன்னைக்கு எவன்னாலும் மேடையில ஏறி பொருளாதாரம், வளர்ச்சின்னு அடிச்சி விட்றான். ஜி.டி.பின்னா என்னன்னு தெரியுமா இந்த தாயளிகளுக்கு. ஜி.டி.பி எப்படி கணக்கு போடுறாங்கன்னு தெரியுமா. பேச வந்துட்டானுங்க, நம்ம நாட்டுல துலுக்கனுங்களுக்கு என்ன சார் வேலை” என்று சரமாரியாக கெட்ட வார்த்தைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார்.

பிறகு, “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்னு போட்டிருக்கீங்களே, அறிவியல் ஆராய்ச்சி என்னென்ன செய்றீங்கன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டோம்.

“செய்றோமே, இங்க பாருங்க இந்த வீடியோவை, பஞ்சாங்கம்கறது எவ்வளவு அறிவியல் பூர்வமானது. நம்ம பண்டிகைகள், சடங்குகள் எல்லாம் எப்படி அறிவியல் பூர்வமா  கொண்டாடுறோம், இதை எல்லாம் விளக்கி வீடியோ தயாரிச்சிருக்கோம்”

பழம் பஞ்சாங்கத்துக்கு வந்த வாழ்வை வீடியோவாக்கி போட்டுக் காட்டித்தான் அந்த பள்ளிக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்களா, என்று நினைத்துக் கொண்டே, “இதனால் என்ன பலன், இந்தியா சந்திராயன் ராக்கெட் விடுவதற்கு இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து கணக்கு போட முடியுமா” என்று விளக்கம் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே வேறு யாரோ அவரை கூப்பிட, விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]

–    வினவு செய்தியாளர்கள்.

விளம்பரங்களின் வில்லங்கம் – 24/07/2014

4

விளம்பரம்: நிறைய ஆசைகளுடன், நீங்கள் எதிர்பார்த்த பாண்டி ராம் சில்க்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனைக்கு அன்புடன் அழைக்கிறோம்….!

வில்லங்கம்: என்னடே பாண்டி ராம், என்னமோ காசி அகோரம் பண்டாரங்களை கூப்ட்டு, பாண்டி ரம் பார்ட்டி வெக்கிற மாறி அன்புடன் அழைக்கதெல்லாம் ரொம்ப ஓவர் பாத்துக்க!

@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: “பல இலட்சம் வினாடிகள் இலவசமாக பேச…. உடனே வாங்குவீர்! – “என் நண்பன் சூப்பர்” – இரவு நேர அழைப்புகள் நிமிடத்திற்கு 20 பைசா, மாதம் 200 எஸ்.எம்.எஸ், நெட் யூசேஜ் 200 எம்பி – 3 நாட்கள், சிம்கார்டின் விலை ரூ.46…….பி.எஸ்.என்.எல் விளம்பரம்

வில்லங்கம்: வி.எஸ்.என்.எல்-லுல டாடா ஆட்டையைப் போட்டான். ஏர்டெல், ரிலையன்சை ஏவிவிட்டு பி.எஸ்.என்.எல்லை முடிச்சான். இப்ப ஏம்டே இலட்சம் வினாடி, கோடி அவமானம்னு புலம்புதீக!

@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: கோவை ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ் வழங்கும் அதிரடி ஆடி கொண்டாட்டம். 8 கிராம் தங்க நகை வாங்கினால் ரூ.1008 தள்ளுபடி. வைர நகைகளின் செய்கூலி மீது 50% தள்ளுபடி. நகை வாங்கினால் புடவை, கைக்கைடிகாரம் இலவசம், விசேஷ சலுகைகள், தர வைரங்கள், 916 ஹால்மார்க்டு ஷோரும்……

வில்லங்கம்: ஏலே கோவை  சோஸுகோ, 8 கிராம் வாங்குறவனுக்குண்டான தள்ளுபடி 1008 ரூபாய வாங்காத ஏழைகளுக்கு கொடுப்பியாடே! வைரம் வாங்குறவனோட தள்ளுபடி செய்கூலியை வாங்காத அக்காமாருக்கு தருவியாடே! மாட்டேல்லா, பிறகு ஏம்லே ஆடி அதிரடி,மோசடி, செருப்படின்னு அளக்கீறு!

@@@@@@@@@@@@@@

விளம்பரம்: டாம்கால் – தமிழக அரசு நிறுவனம், மூலிகை கூந்தல் தைலம், இதர மூலிகை பொருட்களை விற்பனை செய்ய விநியோகஸ்தர்களை நியமனம் செய்ய விரும்புகிறது. 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

வில்லங்கம்: அய்யா ஆபீசருங்களா, டாஸ்மாக்குல ஆம்பளயாளுகளை குடிக்க வைச்சு மொட்டையை போட்டுட்டு, பொம்பளையாளுகளுக்கு கூந்தல் தலைம் விக்கீகளே, கொஞ்சமாச்சும் வெக்கப்படுங்கப்பா!

@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: சிறு சேமிப்பை விட சிறந்த முதலீடு, ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு – இனிமை ஹோம்ஸ் – மாமதுரையில் மாதம் ரூ.250 செலுத்தி 60 தவணையிலும், ரூ.500 செலுத்தி 30 தவணையிலும் அழகிய வீட்டு மனையை சொந்தமாக்குங்கள் – கே.என்.ஆர்.ரியல் எஸ்டேட், தெற்குமாசி வீதி, மதுரை-1.

வில்லங்கம்: அழகர்மலையில 15,000 ரூபாயில மனை தாரான்னு சொல்லுதானே, ஏலே மனை மலைக்கு கீழயா, மலைக்கு மேலயா?

@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: மதுரையின் நம்பர் 1 நகை மாளிகை பீமா ஜூவல்லரியின் ஜொலிக்கும் 5-ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள். நகை வாங்கினால் தங்க காசு, பழையை நகை மாற்ற 2% கூடுதல் மதிப்பு, வைர நகைகளுக்கு ரூ.5000 தள்ளுபடி, செய்கூலி தள்ளுபடிக்கள்………

வில்லங்கம்: ஏம்பா பீமா எங்கள மாறி ஏமாளிங்க இருக்குற வரைக்கும் நகைக் கடையால ஜொலிக்கது நீ தாம்லே!

@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: உங்கள் வாழ்வில் மலரும் நெஸ் கஃபே சன்ரைசின் நறுமணம், சிறந்த சுவையுடன் காலைப் பொழுதை கொண்டாடுங்கள்.

வில்லங்கம்: ஏய் ஏன் பீச்சாங்கைய ஒன் மூஞ்சியில வெக்க! காத்தால நாஷ்டாவுக்கே வழி இல்லாத ஜனத்துகிட்ட, ஒரு படத்துக்கு பத்தோ இருபதோ கோடிய அமுக்குற சூர்யா வூட்டுல சன்ரைசோ பொன் ரைசோ மலந்துக்கிணொ மாட்டிக்கிணோ போவட்டும்.

@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: உடல் பருமன் உள்ளோருக்கு 28 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கப்படும், ரூ.250 செலுத்தி பதிவு செய்தால் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு மருத்துவ ஆலோசனை இலவசம்*., நோயில்லா வாழ்க்கையை உணருங்கள். – rVITA.COM, *கண்டிசன்ஸ் அப்ளை!

வில்லங்கம்: அட்வைசு ஃப்ரீ, மெடிசன் மட்டும் கேஷ்ஷா? 5 கிலோ வெயிட்ட மெசின்ல குறைப்பியா, மெட்டபாலிசத்துல குறைப்பியா? கண்டிசன்ஸ் அப்ளைன்னு போட்டுக்கிணு, இன்னா ரிவிட்டு அடிக்கிறானுவோ, ஆருடே இந்த ஆர் விட்டாக்காரனுவ!

@@@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: டிராக்டர் உபயோகிப்போர் அனைவருக்கும் மேஸி ப்ளானட்டரி என்றாலே பளு இழுப்பதிலும் சேற்றுழவிலும் நோ – டென்ஷன் டிராக்டர்!

வில்லங்கம்: காவிரி தண்ணி வராம எங்கன சேத்துல உழ, விதைக்காத வயலுல எங்க அறுவடை செஞ்சு பளு இழுக்க! வெவசாயமே டென்சனுல சந்தி சிரிக்கியைல, டிராக்டர வாங்குனாத்தாம்டே டென்ஷன்! @@@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: பொன்னால் பெண்ணுக்கு பெருமையா? பெண்ணால் பொன்னுக்கு பெருமையா? கசானா ஜூவல்லரி, சென்னை.

வில்லங்கம்: வறுமையில இருக்குற அக்காமாருக்கு பொடலங்காய் பொறியலுக்கே நாதி இல்லேங்கிற நாட்டுல பொன்னு, பெண்ணு, பெருமைன்னு வறுத்துக்கிணு, நம்ம காச அடிக்கிற காசானா! நீ தாம்லே மோடி மஸ்தான்!

@@@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: புதிய அயோடக்ஸ் – அல்ட்ரா ஜெல், உங்கள் வலியை விட சக்தி வாய்ந்தது!

வில்லங்கம்: ஆத்தாடி, அப்ப ஜெல்ல போட்டா வலி டபுளாகுமான்னா, இது அயோடெக்சா, அய்யோடெக்சா!

@@@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: “ஆம் நான் ஒரு இத்தாலியன். ஆனால் என்னால் ஒரு அழகான ஜிலேபி உருவாக்க முடியும்” – மாற்றத்தில் சேருங்கள் – லியானர்டோ ஆலிவ் ஆயில்.

வில்லங்கம்: இத்தாலி பீசாவை துன்னுக்கிணு தொந்திய தள்ளிக்கிணு தள்ளாடுற குண்டு யூத்துங்களுக்கு போட்டியா சேட்டு கடை ஜிலேபிய அது ஆலிவ் ஆயில்ல முயுங்குனா இன்னா, பாமாயில்ல துன்னா இன்னா?

@@@@@@@@@@@@@@@@@@

விளம்பரம்: நாங்கள்தான் அவர்களை மாற்றினோம் – கிங்பிஷரில் பறந்து செல்லுங்கள் – விண்ணில் ஒரு அற்புத சேவையை அனுபவியுங்கள்!

வில்லங்கம்: கெவர்மெண்டு பாங்குல லோன வாங்கி பிளைட்ட வுட்டு கடைசியல மொட்ட போட்ட மல்லையா கம்பெனியில இப்ப கிங் பிஷர் சோடாதான் விக்கிது. ஆனா வானம் சர்வீஸுன்னு இன்னா பில்டப்பு!

@@@@@@@@@@@@@@@@@@

– காளமேகம் அண்ணாச்சி

 

ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !

1

காசா மீது இசுரேல் நடத்தும் பொருளாதார, இராணுவ தாக்குதல்கள் பற்றிய அனுபவம்

மெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)

பிப்ரவரி 20, 2003

அம்மா,

காசா - சிதைக்கப்பட்ட வீடு
காசா நகரின் அல் ஷேக் ரித்வான் பகுதியில் இடிக்கப்பட்ட ஒரு வீட்டை பார்வையிடுன் பாலஸ்தீனர்கள். இந்த வீட்டில் இசுரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

காசாவுக்கு போகும் சாலையை இசுரேலிய இராணுவம் இப்போது முழுமையாக தோண்டி போட்டு விட்டது. போகும் வழியில் இருந்த இரண்டு முக்கியமான சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டு விட்டன.

இதனால், அடுத்த காலாண்டு பல்கலைக்கழக படிப்புக்கு பதிவு செய்ய நினைக்கும் பாலஸ்தீனிய இளைஞர்கள் அதை செய்ய முடியாது.

மக்கள் வேலைக்குப் போக முடியாது.

மறு பக்கத்தில் மாட்டிக்கொண்டவர்கள் வீடு திரும்ப முடியாது.

மேற்கு கடற்கரை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த சர்வதேச ஆர்வலர்கள் அங்கு போக முடியாது. எங்களது சர்வதேச வெள்ளையருக்கான சலுகைகளை முனைப்பாக பயன்படுத்தினால் நாங்கள் அங்கு போவது சாத்தியமாகலாம். ஆனால், அப்படி முயற்சித்தால் சட்டவிரோதமாக எதையும் செய்திருக்காவிட்டாலும் நாங்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவது நடக்கலாம்.

இப்போது, காசா முனை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. “காசாவை மறுபடியும் ஆக்கிரமிப்பது” இசுரேலுக்கு உலக அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது நடக்காது என்று கருதுகிறேன். என்ன நடக்கும் என்றால் சர்வதேசத்தின் கவனத்தை கவராத சிறு தாக்குதல்களும், அடிக்கடி உணர்த்தப்படும் “மக்களை இடம் மாற்றுதலும்” நடக்கலாம்.

நான் ராஃபாவிலேயே தங்க முடிவு செய்திருக்கிறேன். வடக்கே போக திட்டமிடவில்லை. ஒப்பீட்டளவில் நான் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். அப்படியே பெரும் அளவில் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தால் எனக்கு அதிகபட்சம் நடக்கவிருப்பது கைது செய்யப்படுவதுதான்.

அமைதி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே அரசியல் கொலை செய்வது, நிலங்களை கைப்பற்றுவது என்ற ஷரோனின் (அப்போதைய இசுரேல் பிரதமர்) உத்தியை விட காசாவை மறுபடியும் ஆக்கிரமிப்பது உலக அளவில் பல மடங்கு அதிகமான கண்டனங்களை எதிர் கொள்ளும். தற்போதைய அணுகுமுறையில் எல்லா இடங்களிலும் குடியிருப்புகளை உருவாக்குவது சிறப்பாக நடந்து வருகிறது; பாலஸ்தீன சுய நிர்ணய உரிமைக்கான சாத்தியங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு வருகின்றன.

காசா - தப்பி ஒடும் மக்கள்
இசுரேல் தாக்குதலுக்கு உள்ளான காசா நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சஜய்யா நகரிலிருந்து தப்பி ஓடும் மக்கள்.

அன்பான பாலஸ்தீனர்கள் பலர் என்னை கவனித்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு ஒரு சிறு ஃபுளூ காய்ச்சல் வந்திருந்த போது அதை சரி செய்வதற்கு பல குடும்பங்களிடமிருந்து எலுமிச்சை பானங்கள் வந்தன. இதுவரை நாங்கள் தூங்கும் கிணற்றின் சாவியை வைத்திருக்கும் பெண் உன்னைப் பற்றி இன்னும் விசாரித்தார். அவருக்கு ஒரு துளி கூட ஆங்கிலம் பேச வராது. ஆனால் எனது அம்மாவைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதோடு, நான் உனக்கு தொலைபேசுகிறேன் என்று உறுதி செய்து கொள்கிறார்.

உனக்கும் அப்பாவுக்கும், சாராவுக்கும் கிறிசுக்கும் எல்லோருக்கும் எனது அன்பு.

ரச்சேல்

பிப்ரவரி 27, 2003

(அவரது அம்மாவுக்கு)

உன்னை நேசிக்கிறேன். உண்மையிலேயே உன்னை தேடுகிறது. நம் வீட்டுக்கு வெளியில் டாங்குகளும், புல்டோசர்களும் நிற்பதாகவும் நானும் நீயும் வீட்டுக்குள் இருப்பதாகவும் கெட்ட கனவுகள் காண்கிறேன்.

பரபரப்பான நிலைமை தோற்றுவிக்கும் சுரப்பிகள் (அட்ரீனலின்) அமைதிப் படுத்தும் மருந்தாக பல வாரங்களுக்கு வேலை செய்கின்றன. ஆனால் சில சமயம் மாலை நேரங்களில், நிலவரத்தின் தீவிரம் சிறிதளவு என்னை தாக்குகிறது. இங்கு உள்ள மக்களுக்காக உண்மையிலேயே மிகவும் அச்சப்படுகிறேன்.

நேற்று ஒரு அப்பா தனது இரண்டு குட்டிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் போவதை பார்த்தேன். அவர்கள் அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு டாங்குகள், தொலைதூர துப்பாக்கிச் சூடு கோபுரங்கள், புல்டோசர்கள், இராணுவ ஜீப்புகளின் பார்வையின் கீழ் நடந்து செல்கிறார்கள். அவரது வீடு வெடி வைத்து தகர்க்கப்படப் போகிறது என்று அவர் நினைத்திருக்கிறார்.

காசா - துயரம்
இசுரேலி தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட கேலானி குடும்பத்தின் உறவினருக்கு ஆறுதல் சொல்லும் அண்டை அயலார்.

ஜென்னியும் நானும் இன்னும் பல பெண்களுடனும் இரண்டு கைக்குழந்தைகளுடனும் அந்த வீட்டில் தங்கியிருந்தோம். நாங்கள் மொழிபெயர்ப்பில் செய்த தவறினால், அவரது வீடுதான் இடிக்கப்படப் போவதாக நினைத்து விட்டார். உண்மையில், பாலஸ்தீனிய எதிர்ப்புப் படையினரால் வைக்கப்பட்ட ஒரு வெடிகுண்டை அவரது வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தில் இசுரேலிய இராணுவம் வெடிக்கவிருந்தது.

இந்தப்பகுதியில் ஞாயிற்றுக் கிழமை சுமார் 150 ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டு குடியிருப்பு வெளியே அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தலைக்கு மேலும், அவர்களைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் பறந்து கொண்டிருந்தன. டாங்குகளும், புல்டோசர்களும் 300 பேருக்கு வாழ்க்கை அளித்து வந்த 25 பசுமைக் குடில்களை இடித்து சிதைத்தன.

தன் குழந்தைகளுடன் டாங்குகளின் குறிக்கு மத்தியில் நடப்பது வீட்டில் தங்கியிருப்பதை விட பாதுகாப்பானது என்று அந்த மனிதர் கருதுகிறார் என்பதை நினைத்து எனக்கு கதி கலங்கியது. அவர் தனது குட்டிக் குழந்தைகளுடன் கொல்லப்படப்போகிறார் என்று நினைத்து அவர்களுக்கும் டாங்குக்கும் நடுவில் நான் நின்று கொண்டேன். இத்தகைய நிகழ்வுகள் தினமும் நடப்பதுதான். ஆனால், இந்த அப்பா தனது குட்டிக்குழந்தைகளுடன் வெளியில் போனது குறிப்பிடத்தக்க வகையில் என் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் எங்களது தவறான மொழிபெயர்ப்புதான் அவரை வெளியில் வரச் செய்தது என எனக்கு தோன்றியதாகவும் இருக்கலாம்.

பாலஸ்தீன வன்முறை பிரச்சினையை மோசமாக்குகிறது என்று நீ தொலைபேசியில் சொன்னது குறித்து நான் நிறைய யோசித்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஃபாவைச் சேர்ந்த 60,000 தொழிலாளர்கள் இசுரேலுக்கு வேலைக்கு போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது 600 பேர் மட்டும்தான் போக முடியும். இந்த 600 பேரில் பலர் அங்கு இடம் மாறி போய் விட்டார்கள். ஏனென்றால், இங்கிருந்து அஷ்கெலோன் (அருகாமையில் உள்ள இசுரேலிய நகரம்) போகும் வழியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 3 சோதனைச் சாவடிகள் முன்பு 40 நிமிடங்களில் போக முடிந்த தூரத்தை இப்போது 12 மணி நேரத்திலும் கடக்க முடியாத பயணமாக மாற்றி விட்டிருக்கின்றன.

காசா பெண்கள்
குடியிருப்பின் மேல் பகுதியை ஒரு ராக்கெட் தாக்கியதைத் தொடர்ந்து அதிர்ச்சியுடன் வீட்டை காலி செய்யும் பெண்கள்.

காசா பன்னாட்டு விமான நிலையம் (ஓடுதளங்கள் அழிக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டது), எகிப்துடன் வர்த்தகத்துக்கான எல்லைச் சாவடி (கடந்து போகும் இடத்தின் நடுவில் மிகப்பெரிய இசுரேலியதொலைதூர துப்பாக்கி கோபுரம்), கடற்கரைக்குப் போகும் வழி (கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சோதனைச் சாவடியினாலும், குஷ் கதீஃப் குடியேற்றத்தினாலும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது) என 1999-ல் ராஃபாவின் பொருளாதார வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன. ராஃபாவில் இந்த முறை எதிர்ப்பு இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து அழித்தொழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 600. அவர்களில் பெரும்பான்மையோர் எதிர்ப்பு இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள், ஆனால் எல்லையில் வாழ்கிறார்கள் என்பதற்காக வீடுகளை இழந்தார்கள்.

ராஃபா உலகத்திலேயே மிகவும் ஏழ்மையான பகுதி என்று அதிகாரபூர்வமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சமீபகாலம் வரை இங்கு ஒரு நடுத்தர வர்க்கம் இருந்தது. ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்பட்ட காசா மலர்கள் ஏரெஸ் சோதனைச் சாவடியில் 2 வாரங்கள் வரை தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு வாரம் ஆகி விட்ட பறித்த பூக்களுக்கு ஐரோப்பிய சந்தையில் என்ன மதிப்பு இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். எனவே அந்தத் தொழில் அழிந்து போனது. புல்டோசர்கள் மக்களின் வீடுகளையும் தோட்டங்களையும் அழித்து விட்டன. இதற்கு மேலும் இந்த மக்களுக்கு என்ன மிஞ்சியிருக்கிறது என்று உங்களால் ஏதாவது யோசிக்க முடிந்தால் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை.

நமது வாழ்க்கையும், நலவாழ்வும் முழுமையாக நெறிக்கப்பட்டு, சுருங்கிக் கொண்டே போகும் ஒரு இடத்தில் குழந்தைகளுடன் வாழ்ந்தால், படைவீரர்களும் டாங்குகளும் எந்த நேரத்திலும் வந்து பல ஆண்டுகளாக நாம் கட்டியமைத்து பாதுகாத்து வரும் பசுமைக் குடில்களை இடித்து சிதைத்து விடலாம் என்று தெரிந்தால், நம்மில் பலர் அடித்து உதைக்கப்பட்டு இன்னும் 149 பேருடன் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், நாம் நம்மிடம் எஞ்சியிருக்கும் மிச்சங்களை பாதுகாக்க ஏதாவது வன்முறை வழியை பயன்படுத்த முயற்சிக்க மாட்டோம் என்றா சொல்கிறீர்கள்?

தப்பி ஓடும் குழந்தைகள்
சஜாய்யா பகுதியிலிருந்து தப்பி ஓடும் குழந்தைகள்

மலர் தோட்டங்களும், பசுமைக் குடில்களும், கனி மரங்களும் அழிக்கப்படும் போது வருடக் கணக்கிலான உழைப்பும், கவனமும், பயிரிடுதலும் அழிக்கப்படும் போது உன்னை நினைத்து பார்க்கிறேன். ஒவ்வொன்றையும் வளர்ப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறது, எவ்வளவு நீண்ட கரிசனமான உழைப்பின் விளைவு அது. இது போன்ற நிலைமையில் பெரும்பான்மையோர் தங்களால் இயன்ற வழிகளில் எல்லாம் தங்களை தற்காத்துக் கொள்வார்க்ள். கிரெய்க் மாமா அதை செய்திருப்பார், பாட்டி கூட செய்திருப்பார் என்று நினைக்கிறேன். நான் கூட அப்படித்தான் செய்திருப்பேன்.

அகிம்சை போராட்டம் பற்றி என்னிடம் கேட்டாய்.

நேற்று வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்ட போது வீட்டின் அனைத்து ஜன்னல்களும் உடைந்து விட்டன. அவர்கள் எனக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள், நான் சிறு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது கூட அதை நினைக்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. அழிவை எதிர் கொள்ளும் மக்கள் எல்லா நேரமும் என்னை கொண்டாடுவதும் என்னை கவனிக்க பரபரப்பதும் என்னை கலங்கச் செய்கிறது.

அமெரிக்காவில் இருந்து கேட்கும் போது உங்களுக்கு இது எல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாக தெரியலாம். ஆனால், இங்கு வாழும் மக்களின் அதீத அன்பும், அவர்களது வாழ்க்கை வேண்டுமென்றே அழிக்கப்படுவதற்கான சாட்சியங்களும் இவை அனைத்தையும் கனவு போல தோன்ற வைக்கின்றன.

இது போல ஒன்று இந்த உலகில் நடக்க முடியும், அதை எதிர்த்து பெருமளவு கண்டனங்கள் இல்லாமலே நடக்க முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பும் நமது உலகில் எவ்வளவு கொடூரமானவற்றை அனுமதிக்கிறோம் என்பதை பார்க்கும் போதெல்லாம் எனது மனம் காயப்பட்டது போலவே இதுவும் என்னை உண்மையிலேயே புண்படுத்துகிறது.

இடது சாரியினர் ஆர்ப்பாட்டம்
காசா மீதான இசுரேலின் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் இசுரேலிய இடது சாரிகள்.

உன்னிடம் பேசிய பிறகு நான் சொல்வதை எல்லாம் நீ முழுவதுமாக நம்பவில்லை என்று நான் உணர்ந்தேன். அப்படி நம்பாவிட்டால் நல்லதுதான். ஒவ்வொருவரும் விமர்சனபூர்வமாக சிந்திப்பதன் முக்கியத்துவத்தை நான் அனைத்துக்கும் மேலாக மதிக்கிறேன். உன்னிடம் பேசும் போது மற்றவர்களிடம் பேசுவதை போல் இல்லாமல் சொல்வதை கறாராக உறுதிப்படுத்திய பிறகு பேச வேண்டும் என்பதற்கு நான் கவனம் எடுப்பதில்லை என்று உணர்கிறேன். நீ எப்படியும் சொந்தமாக தேடி விபரங்களை சரி பார்த்துக் கொள்வாய் என்று எனக்கு தெரிந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆனால், நான் சரியான வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறேனா என்று நான் கவலைப்படுகிறேன்.

மேலே நான் விவரிக்க முயன்ற அனைத்து நிலைமைகளும் – இன்னும் பலவும் – இந்த மக்கள் திரள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களையே படிப்படியாக, கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் பெருமளவில் நீக்கவும், அழிக்கவும் செய்து வருகின்றன. நான் இங்கு நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பது இதுதான். அரசியல் கொலைகள், எரிகணை தாக்குதல்கள், குழந்தைகளை சுடுவது எல்லாமே கொடூரங்கள்தான். ஆனால் அவற்றின் மீது கவனத்தைக் குவிப்பதன் மூலம் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தவற விடுகிறோமோ என்று கலக்கமாக இருக்கிறது.

இங்கு வாழும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர், பொருளாதார ரீதியாக தப்பிப்பதற்கு சாத்தியம் இருந்தாலும், தமது நிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் போராட்டத்தை கைவிட்டு வெளியேற நினைத்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் விசாவுக்கு விண்ணப்பிக்க கூட அவர்கள் இசுரேலுக்குள் போக முடியாது. ஏனென்றால் அவர்கள் போக விரும்பும் நாடுகள் (நம்முடைய நாடும் அரபு நாடுகளும்) அவர்களை அனுமதிக்கப் போவதில்லை.

ஒரு கூடாரத்தில் (காசா) உயிர் வாழ்வதற்கான எல்லா சாத்தியங்களும் துண்டிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஒரு இனப்படுகொலையாக தகுதி பெறுகிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு, அவர்கள் வெளியேற முடிந்தாலும் அது இனப்படுகொலைதான் என்று கருதுகிறேன். பன்னாட்டு சட்டத்தின்படி இனப்படுகொலை என்பதன் வரையறை இப்போது எனக்கு நினைவு இல்லை, நீ சரி பார்த்துக் கொள்ளலாம். இதை இன்னும் திறமையாக விளக்குவதற்கு நான் தேர்ச்சி பெற வேண்டும். இது போன்ற பெரிய வார்த்தைகளை அலட்சியமாக பயன்படுத்த நான் விரும்புவதில்லை என்று உனக்கு தெரியும். நான் உண்மையிலேயே வார்த்தைகளை அளந்து பயன்படுத்துகிறேன். தகவல்களை சொல்லி, கேட்பவர்கள் தாங்களே தமது முடிவுகளை எடுத்துக் கொள்ளும்படி விட்டு விடுகிறேன்.

கொல்லப்பட்ட காசா குழந்தைகள்
தாக்குதலில் கொல்லப்பட்ட அபு ஜராத் குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் மற்றும் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் குழந்தைகளின் உடலை தாங்கிச் செல்லும் பாலஸ்தீனர்கள்.

நான் புலம்பிக் கொண்டிருக்கிறேனோ! விடாப்பிடியான, மோசடியான ஒரு இனப்படுகொலையை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று என் அம்மாவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். நான் உண்மையிலேயே கலங்கி போயிருக்கிறேன். மனித இயல்பின் நல்ல தன்மையை பற்றிய எனது அடிப்படை நம்பிக்கை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இது நிற்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, இதை நிறுத்துவதற்காக நாம் அனைவரும் வேலை செய்வது தேவையானது என்று நினைக்கிறேன். அப்படி செய்வது ஒரு அதீத நடவடிக்கை என்று எனக்கு தோன்றவில்லை.

பேட் பெனாடரின் பாடல்களுக்கு நடனமாடும் விருப்பம் எனக்கு இருக்கிறது; ஆண் நண்பர்களை தேடிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்; உடன் வேலை செய்பவர்களுக்காக கேலிச் சித்திரங்கள் வரைய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இது நிற்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

வெளியேறும் சிறுவன்
காசா நகரின் வடபகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விடும்படி இசுரேல் இராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து தனது துணிகளை தலையில் சுமந்தபடி வெளியேறும் சிறுவன்.

நான் உணர்வது நம்பிக்கையின்மையும், அச்சமும்தான். பெருத்த ஏமாற்றம். இதுதான் நம்முடைய உலகத்தின் அடிப்படை நிதர்சனம் என்பதும் நாம் அனைவரும் இதில் பங்கேற்கிறோம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது.

இந்த உலகத்துக்குள் நான் பிறந்த போது இதை எல்லாம் நான் விரும்பி நான் வரவில்லை. காசாவில் வாழும் மக்களும் அவர்கள் இந்த உலகத்துக்கு வந்த போது இதை எல்லாம் கேட்கவில்லை. என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள். கேப்பிடல் ஏரியைப் பார்த்து, “இது ஒரு பெரிய உலகம், நான் அதை நோக்கி வருகிறேன்” என்று சொன்ன போது என் மனதில் இது இருக்கவில்லை. ஒரு இனப்படுகொலையில் பங்கேற்பது குறித்த உணர்வே இல்லாமல் சுகமாக, கிட்டத்தட்ட முயற்சியே இல்லாமல் வாழ முடியும் உலகுக்குள் வர நான் விரும்பியிருக்க மாட்டேன்.

வெளியில் இன்னும் பல பெரிய வெடிச் சத்தங்கள் கேட்கின்றன.

நான் பாலஸ்தீனத்திலிருந்து திரும்பியபிறகு எனக்கு பல கெட்ட கனவுகள் வரலாம். இங்கிருந்து போய் விட்டதற்காக தொடர்ந்து குற்றவுணர்ச்சி அடைவேன். ஆனால், அதை எல்லாம் இன்னும் கூடுதல் பணிகளுக்கு திருப்பி விடலாம். இங்கு வந்ததுதான் நான் செய்த நல்ல காரியங்களிலெல்லாம் சிறந்த ஒன்று.

நான் பைத்தியம் போல தோன்றினால், அல்லது வெள்ளையர்களை தாக்குவதில்லை என்ற தனது இனவாதத்தை இசுரேலிய இராணுவம் மாற்றிக் கொண்டால், அதற்கான காரணம் முழுக்க முழுக்க இதுதான் : மறைமுகமாக என்னால் ஆதரிக்கப்படும் ஒரு இனப்படுகொலையின் மத்தியில் நான் இருக்கிறேன். இந்த இனப்படுகொலைக்கு எனது அரசாங்கம் பெருமளவு பொறுப்பானது.

உன்னையும் அப்பாவையும் நேசிக்கிறேன். புலம்பலுக்கு மன்னித்துக் கொள்.

சரி, அருகில் யாரோ ஒரு புதிய மனிதர் சில பட்டாணிகளை சாப்பிடத் தருகிறார். அதை சாப்பிட்டு விட்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ரேச்சல்

நன்றி : கார்டியன்
மின்னஞ்சல்கள் ஆங்கிலத்தில்

படங்கள் : நன்றி latimes.com

கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !

0

த்திரப்பிரதேச மாநிலத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள கத்ரா சதாத்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் கடந்த மே 27 அன்று இரவில் யாதவ் சாதிவெறியர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை உள்நாட்டில் மட்டுமின்றி, எல்லை தாண்டியும் அம்பலப்படுத்திவிட்டது. அவ்விரண்டு சிறுமிகளும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என முதலில் கூறப்பட்டாலும், அவர்கள் இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஷாக்கியா சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தற்பொழுது தெரியவந்திருக்கிறது.

கொல்லப்பட்ட சகோதரிகள்
யாதவ் சாதிவெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டுக் கொல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்களை கீழே இறக்க மறுத்து, நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டம்.

கத்ரா கிராமத்தில் யாதவ் சாதியினர் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்கள் வசதிமிக்க புதுப் பணக்கார விவசாயிகளாகவும் அரசியல் செல்வாக்குமிக்கவர்களாகவும் உள்ளனர். இதுவன்றி, பதாவுன் மாவட்டம் முழுவதுமே யாதவ் சாதிவெறியர்களும் மற்றும் அவர்கள் கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் குண்டர்களும் வைத்ததுதான் சட்டமாக இருந்து வருகிறது. இந்தப் பின்னணிதான் சாதியப் படிநிலை அடுக்கில் யாதவ் சாதியினருக்குச் சேவை செய்யும் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஷாக்கியா சாதியைச் சேர்ந்த அச்சிறுமிகளுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்யும் துணிவைக் குற்றவாளிகளுக்குத் தந்திருக்கிறது. அச்சிறுமிகளின் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஒரு மாமரத்தில் அவர்களை உயிரோடு தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றிருப்பதை யாதவ்களின் சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தின் குறியீடாக, தங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது எனச் சவால்விடும் யாதவ் சாதிவெறி பயங்கரவாதத்தின் குறியீடாக மட்டுமே காண முடியும்.

அச்சிறுமிகள் கடந்த மே 27 அன்று இரவில் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காக தமது வீட்டுக்கு அருகேயுள்ள வயல்வெளிக்கு வந்த சமயத்தில், உள்ளூரைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்களான பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், உர்வேஷ் யாதவ் உள்ளிட்டு நான்கு பேரால் கடத்திச் செல்லப்பட்டனர். இதற்கு சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் என்ற இரண்டு உள்ளூர் போலீசார் உடந்தையாக இருந்துள்ளனர். அச்சமயத்தில் சிறுமிகள் கூக்குரல் எழுப்பியதைக் கேட்டு ஓடிவந்த அவர்களது மாமா ராம்பாபுவை அக்கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் துரத்தியடித்திருக்கிறது.

சிறுமிகள் யாதவ் சாதியைச் சேர்ந்த கும்பலால் கடத்தப்படுவதைக் கண்ணால் கண்ட நேரடி சாட்சியான ராம்பாபு, அச்சிறுமிகளின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு ஊரில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றபொழுது, அங்கிருந்த உதவி ஆவாளர் ராம்விலாஸ் யாதவ், ராம் பாபு குறிப்பிடும் நபர்கள் “கௌரவமானவர்கள்” எனக் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதோடு, அச்சிறுமிகளுள் ஒருவரின் தந்தையான சோஹன்லாலின் கன்னத்தில் அறைந்து துரத்தியடித்துவிட்டார். இதன்பின் அவர்கள் கிராமத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ள மற்றொரு போலீசு நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்ல முயன்றதை போலீசு கான்ஸ்டபிள் சர்வேஷ் யாதவ்தான் தடுத்து நிறுத்தியிருக்கிறான்; சர்வேஷ் யாதவ்தான் பப்பு யாதவிடம் அச்சிறுமிகளைக் கொன்றுவிடுமாறு ஆலோசனை கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சிறுமிகளைக் கடத்தியது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியது, உயிரோடு தூக்கிலிட்டுக் கொன்றது வரையிலும் உள்ளூரைச் சேர்ந்த இரண்டு போலீசாருக்குத் தொடர்பிருந்தாலும், கத்ரா போலீசு தொடங்கி அம்மாநில போலீசு இயக்குநர் வரையிலுமான ஒட்டுமொத்த போலீசு துறையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டதற்கு அதனின் சொந்த (யாதவ்) சாதிப்பற்றும் ஆதிக்க சாதிவெறியும்தான் முதன்மையான காரணமாகும்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
அரியானாவின் பாக்னா கிராமத்தைச் சேர்ந்த நான்கு தாழ்த்தப்பட்ட மாணவிகளைப் பாலியல் பலாத்காரப்படுத்திய ஜாட் சாதிவெறியர்களைக் கைது செய்யக் கோரி டெல்லி – ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

அம்மாநில டி.ஜி.பி.யாக உள்ள ஏ.எல்.பானர்ஜி விசாரணை தொடங்கிய நிலையிலேயே, அதனைத் திசைதிருப்பிவிடும் உள்நோக்கத்தோடு, “இக்கொலைகள் சொத்துக்காக நடந்திருக்கக்கூடும்; இறந்துபோன பெண்களின் நெருங்கிய உறவினர்களே இக்கொலைகளைச் செய்திருக்கலாம்; குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் அப்பாவிகள்; கொல்லப்பட்ட சிறுமிகளுள் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது நிரூபணமாகவில்லை” என்றெல்லாம் வெளிப்படையாகவே குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.

இக்குற்றத்தை மறைத்துவிடவும், நீர்த்துப்போகச் செய்யவும் உ.பி. போலீசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் கேவலமான முறையில் அம்பலமாகித் தோல்வியடைந்த பிறகுதான் உ.பி.யை ஆளும் சமாஜ்வாதி கட்சி தன்னை நியாயவானாகக் காட்டிக் கொள்ளும் அடிப்படையில் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து, ஐந்து இலட்ச ரூபாயை நட்ட ஈடாகத் தரவும் முன்வந்தது. எனினும், உ.பி. அரசின் இந்தத் திடீர்க் கரிசனமெல்லாம் அதற்கு எந்தவொரு மரியாதையையும் பெற்றுத் தரவில்லை. அச்சிறுமிகளின் பெற்றோர் உ.பி. அரசு வழங்கிய ஐந்து இலட்ச ரூபாய் இழப்பீடு தொகையை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் முகத்தில் அறைந்தாற்போல, “எங்களுக்கு நீதிதான் வேண்டுமே தவிர, நட்ட ஈடல்ல” எனத் தெரிவித்தனர்.

இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டு, சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் என்ற இரண்டு உள்ளூர் போலீசுக்காரன்கள் மற்றும் பப்பு யாதவ் சகோதரர்கள் உள்ளிட்டு ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் வழக்கைத் திசை திருப்பும் முயற்சிகளும் தொடருகின்றன. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதைத்தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வழக்கிலோ இதுவரை கேட்டிராத அதிசயமாக, வழக்கின் முக்கிய சாட்சிகளான கொல்லப்பட்ட சிறுமிகளின் பெற்றோரையும், மாமாவையும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை நீதிமன்றத்தின் மூலம் பெற்றிருக்கிறது சி.பி.ஐ. “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாட்சியங்கள் பொய் சொல்லக்கூடியவர்கள்” எனப் பல்வேறு வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்கள் கருத்துத் தெரிவித்திருப்பதால், இந்த அனுமதிக்குப் பின்னுள்ள நோக்கத்தைச் சந்தேகிக்காமல் இருக்கமுடியாது. நீதிமன்றம், போலீசு, சி.பி.ஐ., என அதிகாரத் தாழ்வாரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்க சாதி கண்ணோட்டத்தின் நீட்சியாகவே இப்பரிசோதனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியைக் காண முடியும்.

***

ச்சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்திய பா.ஜ.க., உ.பி. அரசைக் கலைத்துவிடுவோம் என மிரட்டவும் செய்தது. ராகுல் காந்தி, மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறும் நாடகத்தை நடத்திவிட்டுப் போனார்கள். எனினும், இவர்கள் அனைவரும் இச்சம்பவத்தைச் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகவும், உ.பி. அரசைக் குண்டர்களின் அரசாகக் காட்டுவதற்கும்தான் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, இதற்குப் பின்னுள்ள யாதவ் சாதிவெறியைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

வினிதா
தமிழகத்தின் குளித்தலை கோட்டப் பகுதியில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளம்பெண் வினிதா.

ஒரு சில முதலாளித்துவ அறிவுத்துறையினர் அச்சிறுமிகளின் வீட்டில் கழிப்பறை இல்லாததால்தான் இந்தக் கொடிய சம்பவம் நடந்துவிட்டதெனப் புலனாய்வு செய்து, கழிப்பறை கட்டுவதுதான் இதற்குத் தீர்வு என முன்மொழிந்தனர். இந்த வாதத்தைக் கப்பெனப் பிடித்துக் கொண்ட உ.பி. அரசு, “கத்ராவில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்ட இருக்கிறோம். இதனால் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காது” என அறிவித்தது. இதன் பின்னுள்ள முட்டாள்தனம் நிறைந்த வக்கிரம் ஒருபுறமிருக்க, கத்ராவில் கழிப்பறைகள் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை தொடங்கப்படவில்லை. அதேசமயம், ஓட்டுக்கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஒரு ஹெலிகாப்டர் இறங்குதளம் அக்கிராமத்தில் அமைக்கப்பட்டுவிட்டது.

சமூக நீதி பேசும் ஓட்டுக்கட்சிகளின் வக்கிரமும் ஆணாதிக்க கொழுப்பும் சந்தர்ப்பவாதமும் இதோடு நின்றுவிடவில்லை. கத்ரா சம்பவம் பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு பெண் நிருபரிடம், “நீங்கள் எந்த அபாயத்தையும் சந்திக்கவில்லைதானே? ” எனக் குதர்க்கமாக எதிர்க்கேள்வி எழுப்பினார் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ். ஒருபுறம் கத்ரா சம்பவத்தையும் சமாஜ்வாதி அரசையும் கண்டிப்பதாக சவுண்டுவிட்டுக் கொண்டிருந்த பா.ஜ.க.இன்னொருபுறம் அகிலேஷுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டது. “எந்தவொரு அரசும் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சியிலிருந்து காப்பாற்றிவிட முடியாது; சில வன்புணர்ச்சிக் குற்றங்கள் சரியானவை; சில தவறானவை” என அகிலேஷுக்காகப் பரிந்து பேசினார், பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கௌர் நியாயப்படுத்திய அதேவேளையில்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பழங்குடியினப் பெண், கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான சம்பவம் நடந்தது. மேலும், மோடி அரசில் இரசாயனம் மற்றும் உரத்துறையின் துணை அமைச்சராக இருக்கும் நிகல்சந்த் மேக்வால் மீது கும்பல் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருப்பதும் அம்பலமானது. “இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு” எனப் பதில் அளித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள நிகல்சந்துக்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்கியது, பா.ஜ.க.

கடந்த மார்ச் மாதம் காங்கிரசு ஆளும் அரியானா மாநிலத்திலுள்ள பாக்னா எனும் கிராமத்தைச் சேர்ந்த பதின்வயதுடைய நான்கு தாழ்த்தப்பட்ட பெண்கள் – அதிலொரு பெண் பதின்மூன்றே வயதான சிறுமி – மாலை நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காகத் தமது வீட்டுக்கு அருகிலுள்ள வயல்வெளிக்குச் சென்றிருந்த சமயத்தில் அவர்கள் ஐந்துபேர் கொண்ட ஜாட் சாதிவெறியர்களால் கடத்திச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, மயங்கிய நிலையிலேயே வயல்வெளியில் தூக்கியெறியப்பட்டனர். இந்த வன்கொடுமையைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஐந்து குற்றவாளிகள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

உ.பி.யின் கத்ரா கிராமத்திற்கு வந்து உங்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன் என ஜம்பம் அடித்துவிட்டுச் சென்ற ராகுல் காந்தி, பாக்னாவில் நடந்த வன்கொடுமை குற்றம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைப் பிற்படுத்தப்பட்டவனாக அடையாளப்படுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கத்ரா சம்பவம் பற்றிப் பேச மறுக்கிறார். இந்த “ஒற்றுமை” குறித்து மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்ச்சியைக் கண்டித்து நடுத்தெருவுக்கு வந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் கத்ரா, பக்னா சம்பவங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது குறித்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்கள் கேள்வி எழுப்ப வேண்டிய தருணமிது.

கத்ராவிலும் பாக்னாவிலும் நடந்துள்ள இப்பாலியல் வன்கொடுமைகள் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் வெளியே தெரிந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியான போராட்டங்கள் எதுவுமே நடைபெறாததால், தமிழகத்தில் குளித்தலை கோட்டப் பகுதியில் ஆறு தாழ்த்தப்பட்ட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் – கடந்த ஆறு மாதத்திற்குள் நடந்தவை இவை – சுவடே தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. அதேபொழுதில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலே நீதி கிடைத்துவிடும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த நிலைமைகள் அனைத்தும் நீதி வேண்டுமா, இறுதி வரை எதிர்த்துப் போராடு என்ற உண்மையைத்தான் உரத்துச் சொல்கின்றன.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

நஜி அல் அலி: பாலஸ்தீன் ஹந்தாலாவைக் கொல்ல முடியாது !

0

“அமெரிக்காவைப் பற்றி அரபு மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நஜி அல்-அலியின் கேலிச் சித்திரத்தை பார்த்தாலே போதும்” என்று எழுதியது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. “கேலிச்சித்திரம் வரைபவர்களில் முதுகெலும்புள்ள தைரியசாலிகளில் முதன்மையானவர் அவர்” என்றது டைம்ஸ் பத்திரிகை. “தனது கேலிச் சித்திரங்களை பாஸ்பாரிக் அமிலம் கொண்டு வரைகிறார்” என்றது ஜப்பானிய தேசிய நாளிதழ் அசாஹி. “பதினெட்டாம் நூற்றாண்டு துவங்கி இதுவரையில் வந்தவர்களில் தலைசிறந்த கேலிச் சித்திரக்காரர்” என்று அவரது மறைவுக்கு பிறகு 1988-ல் தங்கப் பேனா பரிசை அளிக்கையில் சர்வதேச நாளிதழ் வெளியிடுவோர் சங்கம் கூறியது.

இப்படிப்பட்ட பெரும்பெயர் வாய்ந்த நஜி அல்-அலி என்ற பாலஸ்தீன கேலி சித்திரக்காரர் தனது கூர்மையான அரசியல் கார்ட்டூன்களுக்காக இசுரேலின் மொசாத் உளவாளியால் 1987 ஜூலை 22 அன்று தனது 49-வது வயதில் லண்டனில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஹந்தாலா
ஹந்தாலா

இன்றைக்கும் அவர் தீட்டிய ஹந்தாலா என்ற கற்பனை குழந்தை பாத்திரம் உலகெங்கிலும் அமெரிக்க எதிர்ப்பு போராளிகளின் முதன்மையான கதாபாத்திரமாக இருக்கிறது. பின்புறம் மடித்த கைகளை காட்டியபடி நிற்கும் அந்த பத்து வயது சிறுவனது உடைகள் கிழிந்திருக்கின்றன. காலில் செருப்பு இல்லை. தலை முடி அலங்கோலமாக இருக்கிறது. அகதி முகாமில் இருக்கும் பத்து வயது சிறுவன்தான் ஹந்தாலா. அவன் தன் தாயகத்தை அடையும் வரை வளர மாட்டான். தனித்துவமானவன் அவன். அவனது புறங்கை மடிப்பு என்பது வெளியில் இருந்து வரும் தாயகத்திற்கான அமெரிக்க பாணி தீர்வுகளை மறுப்பது, அதாவது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை.

ஹந்தாலா என்ற அரபுச் சொல்லுக்கு கசப்புத்தன்மை என்று பொருள். “நான் எனது கடமையில் இருந்து தவறாமல் இருப்பதற்கான எனது ஆன்மாவின் குறியீடாக ஹந்தாலா இருந்தான்” என்று தான் வடித்த அந்த பாத்திரத்தைப் பற்றி நஜி அல்-அலி குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் அந்த சிறுவன் ஒரு கேலிச்சித்திரப் பாத்திரம் மட்டுமல்ல, போராளிகளது பொறுப்புணர்வின் குறியீடாகவும் இருந்தான்.

அலியின் கார்ட்டூன்களில் வசனங்கள் மிகவும் குறைவு. ஆனால் அனைவருக்கும் புரியும்படியான எளிமையான படங்களுடன், அழுத்தமான கோடுகளாலும் அவை மக்களிடையே புயல் வேகத்தில் பரவின. முதலில் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த ஹந்தாலா அவரது பிற்கால கேலிச்சித்திரங்களில் எதிரிகளின் ராணுவத்துக்கெதிராக கல்லெறிபவனாகவும், பேனாவையே வாளாக மாற்றி ஏந்துபவனாகவும் மாறத் துவங்கினான்.

அலியின் பாத்திரங்களில் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் யாரும் நேரடியாக இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதை உருவகப்படுத்த சில பாத்திரங்களை மாத்திரம் படைத்தார் அலி. ஹந்தாலா அந்த வகையில் போராடும் சிறுவனாக, சற்றேறக்குறைய அவரது வாழ்க்கையின் பாத்திரத்தையே பிரதிபலிப்பவனாக இருந்தான்.

நஜி அல் அலி
நஜி அல் அலி

ஆம். 1936-ல் அல்-சஜரா என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் பிறந்த அலி பன்னிரெண்டு வயதில் 1948-ல் அங்கிருந்து குடும்பத்தோடு லெபனானில் உள்ள எய்ன் அல்-ஹில்வா அகதி முகாமிற்கு கட்டாயமாக குடிபெயர வேண்டியதாகிறது. ஆம், அப்போது தான் இசுரேல் என்ற தேசம் பாலஸ்தீனத்தை சூறையாடி உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 480 பாலஸ்தீனிய கிராமங்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு குடிபெயர்ந்த  சோகத்தில் இருந்த அலி என்ற சிறுவனது தாய்நாடு மீதான ஏக்கத்தில் அதன்பிறகு பத்தாண்டுகள் கழித்து உருவான பாத்திரம்தான் ஹந்தாலா. பிற்காலத்தில் அவரே குறிப்பிட்டது போல உலகெங்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், தேசங்கள் அனைவரின் பிரதிநிதியாக ஹந்தாலா மாறினான். ஒடுக்கப்படுவோரின் விடுதலை வேட்கைக்கு மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுமில்லை.

அறுபதுகளில் உருவான அரபு தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அலி அதில் இருந்த மார்க்சிய லெனினிய குழுக்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டார். அரபு இளைஞர்கள் பலரும் அறுபதுகளில் வீதிக்கு வந்து போராடத் துவங்கினர். லெபனான் நாட்டின் சுவர்களில் கேலிச்சித்திரங்களை வரைவது எனத் துவங்கிய அரசியல் நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் சிறையில் இதனை மேலும் கூர்மையான அரசியல் விமர்சன ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை கண்டுகொண்டு, சிறைச் சுவர்களில் எல்லாம் கேலிச்சித்திரங்களைக் கரித்துண்டுகளைக் கொண்டு தீட்டத் துவங்கினார். அங்கு அவரது சித்திரங்களைப் பார்த்த இன்னொரு போராளியும், பத்திரிகையாளருமான ஹாசன் கனாஃபினி இவரது ஓவியங்களை பெய்ரூட்டில் இருந்த வெளியாகும் ஹுரியா பத்திரிகையில் வெளியிட உதவி செய்தார். விடுதலையான அலி பெய்ரூட்டிலும் ஷாட்டிலா அகதி முகாமில் ஒரு அகதியாக இருந்தபடி சின்ன சின்ன வேலைகளுக்கு சென்று வந்தார்.

1957-ல் ஒரு கார் மெக்கானிக்காக படித்துவிட்டு சவுதிக்கு சென்ற அவருக்கு தோட்ட வேலைகள்தான் கிடைத்தன. ஒரு அகதி என்பதால் மறுக்கப்பட்ட வாய்ப்புகளை அவரும் எதிர்கொள்ள நேர்ந்தது. பின்னாட்களில் அவரது கேலிச் சித்திரங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதாரண அராபியர்கள் வருவதற்கு இதுவும் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம். 1960-ல் லெபனான் திரும்பிய அவர் அங்கு ஓவியக்கலையைப் பயிலத் துவங்கினார். ஆனால் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்ல நேர்ந்த காரணத்தால் படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டியதாயிற்று.

கல்லெறியும் ஏசு1960-61-ல் அரபு தேசிய இயக்கத்தில் இருந்த தனது தோழர்களுடன் இணைந்து ‘அழு குரல்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தத் துவங்கினார். 1963-ல் குவைத் வந்தவர் மீண்டும் கெய்ரோ அல்லது ரோமில் போய் கலை சார்ந்த படிப்புகளை தொடர வேண்டி வேலைகளுக்கு செல்லத் துவங்கினார். அல்-டாலி என்ற அரபு தேசிய நாளிதழ் ஒன்றில் ஆசிரியர், கேலிச் சித்திரக்காரர், வடிவமைப்பாளர் எனப் பல வேலைகளைப் பார்க்கத் துவங்கினார். 1968 முதல் அல்-சியாஸா என்ற பத்திரிகையில் வேலை பார்த்தவர், 1974-ல் லெபனான் திரும்பி அல்-சபீர் என்ற பத்திரிகையில் வேலை செய்யத் துவங்கினார்.

1982-ல் லெபனானை இசுரேல் ஆக்ரமித்தபோது சில நாட்கள் இசுரேலிய ராணுவத்திடம் கைதியாக இருந்தவர் அப்போது வரைவதை நிறுத்த வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் கருத்துரிமைக்கான அவரது ஓவியங்களில் சைலன்ஸ் என்ற குறியீடுகள் அதிகரித்தன. பிறகு 1983-ல் அவர் குவைத் நாட்டுக்கு இடம்பெயர நேர்ந்தது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் நெருக்குதல் காரணமாக 1985-ல் லண்டனுக்கு குடிபெயர்ந்த அலி கடைசியில் மொசாத்திற்கு வேலை பார்த்த ஒரு பாலஸ்தீன துரோகியால் பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கார்ட்டூனிஸ்டான அவரது வலது கண்ணை குறிவைத்து அவன் சுட்டான்.

போராளிகளின் ஓவியத்தை கூட ஆக்ரமிப்பாளர்களால் அனுமதிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தாக்குதல் அமைந்திருந்தது. அதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் யாசர் அராபத்தையும், அவரது பெண் தோழியையும் பற்றி ஒரு கார்ட்டூன் வரைந்த காரணத்துக்காக அவருக்கு கொலை மிரட்டல் வந்திருந்தது.

ஃபாத்திமா

அமெரிக்க ஏகாதிபத்தியம், இசுரேலின் அடாவடித்தனம், அரபு நாடுகளின் அடிமைத்தனம் என எல்லாவற்றையும் தனது கேலிச் சித்திரங்களால் சாடிய அலியின் கார்ட்டூன்களில் சிலவற்றை எதிரிகளால் நிச்சயமாக ஜீரணிக்கவே முடியாது. சிலுவையில் அடிக்கப்பட்ட ஏசுநாதர் தன் கைகளை விடுவித்துக் கொண்டு கல்லெறியும் காட்சியும், அரபு நாடுகளில் உள்ள ஷேக்குகளின் வாய்க்கு யு.எஸ் என்ற ஜிப் வைத்து பூட்டப்பட்டிருப்பதையும், அரபு பெண்களை இசுரேல் ராணுவம் குதறுவதையும், அகதி குழந்தைகள் பற்றிய கார்ட்டூன்களையும் பார்ப்பவர்கள் நிச்சயமாக எதிரியாக இருக்கும் பட்சத்தில் அல்-அலியை மன்னிக்க வாய்ப்பே இல்லை.

மறுபுறம் அரசியல் உணர்வற்ற நடுத்தர வர்க்கத்தினரின் மனசாட்சியை கிளறும் வகையிலும் அக்கேலிச்சித்திரங்கள் பேசுகின்றன. மக்களுக்கோ தமது அடக்கப்பட்ட குரலின் ஓங்கிய முழக்கமாக அவரது கேலிச்சித்திரங்கள் உணர்வூட்டின. உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கோ அல்-அலியின் ஓவியங்கள் பாசிசத்திற்கெதிரான போராட்டத்திற்கு உதவும் படைக்கலன்களாக மின்னின.

கருப்பு வெள்ளையில் தனது பாத்திரங்களை படைத்திருக்கும் நஜி அல்-அலி அவற்றை பெரும்பாலும் நல்லது-கெட்டது, அழகு-அவலட்சணம், ஏழ்மை-ஊதாரித்தனம், நீதி-அநீதி, வலிமை-கையறுநிலை, தியாகம்-சந்தர்ப்பவாதம், இருள்-வெளிச்சம் என முரண்பாடுகளை காட்சிப்படுத்தியே அரசியலை மக்கள் முன்வைத்தார். இழந்த தாயகமான பாலஸ்தீனம், அகதிகள் முகாம், தாயகம் திரும்புதல் என்பதன் அடையாளமாக பாத்திமா என்ற தாய் பாத்திரத்தை தாயகத்தின் குறியீட்டாக பதிய வைத்திருந்தார் அலி. பாத்திமாவின் கண்ணீர் துளிகளும், அவள் மூடியிருக்கும் துப்பட்டாவின் கருப்பு வண்ணமும் துயரத்தின் சாயலை கூட்டும் வண்ணம் சித்திரம் வரையப்பட்டிருக்கும். அவளது கழுத்துப் பகுதியில் அநேகமாக பழங்காலத்து வீட்டின் பழைய பாணி திறவு கோல் ஒன்று சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வீடற்ற அகதிகளின் குறியீடாக, நாடற்ற மக்களின் ஏக்கமாக அந்த திறவுகோல் அவரது கார்ட்டூன்களில் நீங்காத இடம்பெற்றிருக்கும்.

ref7பாலஸ்தீனத்தை பங்குபோட நினைத்த அரபு நாடுகளின் சகோதர துரோகத்தை சில இடங்களில் சுட்டிக் காட்டியிருந்த போதிலும், அரபு ஒற்றுமையையும் அவரது கார்ட்டூன்கள் வலியுறுத்தின. அதே நேரத்தில் அங்குள்ள சாதாரண அரபு மக்களுக்கும், ஷேக்குகளுக்கும் உள்ள வர்க்க முரண்பாட்டை தோலுரிக்கவும் செய்தார். அங்குள்ள ஆட்சியாளர்கள் மனித உரிமைக்கெதிராக இருப்பதையும், ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக இருப்பதையும் சுட்டிக்காட்டும் அவரது கார்ட்டூன்களில் சிறுவர்களும், பெண்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களாக, எளியவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். போர் நடக்கும் பாலஸ்தீன பகுதியில் இது எதார்த்தம் என்பதால் இதனை வரைவதை தவிர வேறு வழி அவருக்கு முன் இல்லை. எனினும் தனிநபர்களின் அர்த்தமற்ற துயரங்களை பரிசீலிக்கும் இலக்கிய மேட்டிமைத்தனத்தில் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

இத்துடன் நல்லவனுக்கு குறியீடாக அல் சலாமா என்ற சாதாரண அரபு முதிய மனிதனை காட்டியிருப்பார். கிழிசலான உடையும், மொட்டைத் தலையும், உயரமானவனாகவும் காட்டப்படும் அந்த ஏழை அரேபியன் பெரும்பாலும் அகதி, கிறிஸ்தவன், இசுலாமியன் என எல்லா தரப்பிலும் அல் சலாமா இருப்பதாக காட்டியிருப்பார். தீயவர்களாக அமெரிக்க முதலாளிகள், அரபு ஷேக்குகளை காட்டும்போது அவர்களுக்கு கால்களே இருக்காத (வெளியே தெரியாத) அளவுக்கு குண்டாக இருப்பார்கள். பார்த்தாலே பூதங்களைப் போன்ற தோற்றம் தரும் அழகற்ற மனிதர்களாக அவர்களை சித்தரித்திருப்பார்.

யாசர் அராபத் அணிந்திருக்கும் சால்வைதான் பாலஸ்தீனின் அடையாள வண்ணமாக இருக்கும். குப்பியா என்றழைக்கப்படுத் அந்த துணியை பெண்கள் அணிந்தால் அது நல்லவர்கள், பாதிக்கப்படுபவர்களை குறிப்பதாகவும், நாகரிக கோமான்களான ஆண்கள் தொப்பி செய்து அணிந்திருந்தால் கெட்டவர்களாகவும் அவரது கார்ட்டூன்கள் காட்டின.

அவரது ஒரு கார்ட்டூனில் அல் சலாமாவை நோக்கி ஒரு குண்டு தீயவன் (அமெரிக்க எண்ணெய் முதலாளிதான்) “நீ யார் ஷியாவா, சன்னியா” என்று கேட்பான். பதிலுக்கு அல் சலாமா “நான் அராபியன்” என்பான், அல்லது “பசியோடிருப்பவன்” என்பான். இன்னொரு கார்ட்டூனில் அல் சலாமா “மன்னர்களின் கடவுள்களை மக்களும் வழிபடுவது தான் சரி” என்று அப்பாவியாக சொல்வான். பதிலுக்கு ஹந்தாலா “நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்” என்று புதிய சமூகத்தின் பிரதிநிதியாக காட்சியளிப்பான். இதெல்லாம் அரபு நாடுகளில் இருந்து கொண்டே போராடி போராடி, கொலை மிரட்டல்களை நாள்தோறும் சந்தித்து சந்தித்து, நாடுகளின் நாடு கடத்தல்களையும் மீறி வரைந்து சாதித்தவை என்பதை நினைக்கையில் ஆச்சரியமாகவும், காலம் கடந்த பிறகும் வியப்பாகவும் இருக்கிறது.

ref5பெரும்பாலான அவரது ஓவியங்களுக்கு வசனங்கள் தேவைப்படவில்லை அல்லது குறைவாக மட்டுமே தேவைப்பட்டன. முட்கம்பிகளை பிய்த்து அதன் நடுப்பகுதியை மண்ணில் நட்டி அதில் ஆலிவ் மலரை செருகி வைப்பாள் பாத்திமா, மறுபுறம் இருக்கும் இருண்ட வானத்தில் பிறை நிலவு மாத்திரம் வெள்ளையாக இருக்கும், ஹந்தாலா அதனை நோக்கி கையில் இருக்கும் கல்லை எறிய ஆயத்தமாவான். இதற்கெல்லாம் பொழிப்புரை தேவையில்லை. அதனால்தான் அவர் இறந்து முப்பது ஆண்டுகள் ஆன போதிலும் இப்போதும் ஹந்தாலா மீண்டும் மீண்டும் அரபு நாடுகளில் போராடும் மக்களிடையே பிரபலமாக இருக்கிறான்.

ஜூலை 22 அவர் சுடப்பட்ட நாள். மரணத்துக்கு சில நாட்களுக்கு முன் அவரது கார்ட்டூன் ஒன்று அவரது மரணத்தை முன்னறிவித்தது. அதில் “சாக விரும்புகிறீர்களா அல்லது வாழ விரும்புகிறீர்களா” என்ற எச்சரிக்கையுடன் ஆட்சியாளர்களின் விளம்பரம் இருக்கும். இதற்கிடையில் அதனை புறக்கணித்து தாய்நாட்டுக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுதான் ஒரு பாலஸ்தீனத்து அகதியின் நிறைவேறாத தாயகத்திற்கான குரல். அதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞன் வெளிப்படுத்தும் கடைசிக் குரலாகவும் இருக்க முடியும் என்பதை தன் வாழ்நாளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து காண்பித்து, அதனால் ஏற்பட்ட மரணத்தையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அல்-அலி நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.

நாளிதழின் கடைசிப் பக்கத்தில் தான் அவரது கார்ட்டூன்கள் வெளியாகும். ஆனால் சாமானிய மக்களின் முதற்பக்கமாக அந்த கடைசிப் பக்கங்கள் மாறின. பாத்திமா ஒரு விடுதலைப் போராளியாகவும் இவரது கார்ட்டூன்களின் அந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் பாத்திரமேற்க துவங்கினாள். அப்போது உண்மையில் சிறுவர்களோடு சேர்ந்து பெண்களும் நேரடியாக தெருவுக்கு போராட முன்வந்தார்கள் என்பதை நெகிழ்ச்சியோடு தனது நேர்காணல் ஒன்றில் நஜி அல்-அலி நினைவுகூர்ந்திருப்பார். குரலற்ற மனிதர்களின் குரலாகத்தான் தனது கார்ட்டூன்கள் இருப்பதாக அலி குறிப்பிட்டார்.

davidcampaccordபாலஸ்தீன மண்ணில் அரபியர்களின் குரலை உலகம் காதுகொடுக்க மறந்த அல்லது மறுத்த போது தவிர்க்கவியலாமல் அலியின் கார்ட்டூன்கள் அதனை உலகத்தின் காதுகளுக்கும், கண்களுக்கும் கொண்டு சேர்த்தன. அதனால்தான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்படி சொன்னது. அதனால்தான் எதிரிகள் அவரை கொலை செய்ய நீண்ட காலம் திட்டம் தீட்டினார்கள். 49 வயதில் அவர் இறக்கவும் நேரிட்டது. கடைசி ஆண்டில் மட்டும் ஏறக்குறைய நூறு கொலை மிரட்டல்களை அவர் லண்டன் நகரத்திலேயே சந்திக்க நேர்ந்தது என்றால் அந்தப் போராளியின் மன உறுதியை என்னவென்று சொல்வது..

அவரது பாத்திரமான ஹந்தாலா ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றின் பிரதிநிதியாகவே இருந்தான். அதனால் அவன் அகில உலக பிரதிநிதியாக மாறத் துவங்கினான். எகிப்து, வியட்நாம், தென்னாப்பிரிக்கா என இடம்பெயரத் துவங்கினான். பாலஸ்தீனம் என்பதை புவியியல்ரீதியாக தான் குறிப்பிடவில்லை என்றும், அதனை ஒரு மனிதர்கள் வாழும் ஒரு சமூகமாக தான் பார்ப்பதாகவும் அலி குறிப்பிட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆம். அவரே சொல்வது போல அகதி முகாமில் இருந்தவர்கள் யாரும் செல்வந்தர்கள் இல்லை. சிறிதளவு நிலத்தையும் பறிகொடுத்த சாதாரண பாலஸ்தீனியர்கள்தான் பிறகு அகதிகளானார்கள் என்று குறிப்பிடுகிறார் அலி. “பூர்சுவாக்களுக்கு அகதி முகாமில் என்ன வேலை” என்று சுய எள்ளலுடன் கேட்கிறார். முள்வேலி முகாம் வரையிலும் உலகெங்கிலும் கடைசி வரை இந்த வர்க்கத்தினர்தான் அகதிகளாக மீந்து நிற்கிறார்கள் என்பதை பார்க்கும்போது அந்த கலைஞன் கூறியது சரிதான் என்பது இப்போதும் நிரூபணமாகிறது.

fatima7அரபு விடுதலை இயக்கங்களின் ஆயுத வழிபாட்டை எதிர்த்து பேசியவர்களின் மிக முக்கியமான கலைஞன் இவர். “அவர்களது முகாம்களில் ஆயுதங்கள் இருந்த அளவுக்கு அரசியல்ரீதியில் தெளிவு இருக்கவில்லை” என்பதை தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிற்கால அமைதி ஒப்பந்தங்கள் என்ற பெயரில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் செய்த துரோகங்களை பார்க்கையில் அவரது கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை புரிந்து கொள்ளலாம். அல்-ஹெல்வா பற்றிய அவரது கணிப்பு இது. பின்னாட்களில் அமெரிக்க தீர்வுக்கு அடிபணிந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரை 1982-ல் தெற்கு லெபனான் பகுதியில் ஊடுருவிய இசுரேலை சமாளிக்க முடியாத கோழைத்தனத்தை எல்லாம் சாடிய அவர் அப்போது பெண்களும், சிறுவர்களும் களமாடியதால், இசுரேலிய ராணுவத்தினர் பன்னிரெண்டு வயது சிறுவர்களைப் பார்த்து பயப்படும் நிலைமை உருவாகியதை கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததையம் நேர்காணல் ஒன்றில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்.

மீண்டும் அங்கிருந்த சுவர்களில் ‘பாலஸ்தீன புரட்சி நீடூழி வாழ்க’ என்று சிறுவர்களால் எழுதப்படுவது துவங்கியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் அந்த உண்மையான மக்கள் கலைஞன்.

ஆம். நஜி அல் அலி கொல்லப்பட்டிருக்கலாம். ஹந்தாலாவும், ஃபாத்திமாவும் கொல்லப்பட முடியாதவர்களாக இறுதி வரை போராடுவார்கள்.

மேலும் சில கார்ட்டூன்கள் (பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கௌதமன்

போலி கம்யூனிஸ்டுகளுக்கு தேவைப்படாத நிஜப் போராளி !

6

டேப் காதர் : இது அவலத்தின் குரலல்ல 2

டேப் காதர் – இது அவலத்தின் குரலல்ல-1

  • விவாதங்களின்போது மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர்கள் ஏன் மார்க்சையோ லெனினையோ மேற்கோள் காட்டுவதில்லை?
  • பாஜக போன்ற வலதுசாரி சக்திகளைவிட மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இயக்கங்களை ஏன் இவர்கள் அதிகமாகவெறுக்கிறார்கள்?
  • அரை நூற்றாண்டு காலம் தன்னலம் கருதாமல் உழைத்த கட்சியில் இருந்து காதர் ஏன் வெளியேறுகிறார்? அரைநூற்றாண்டு காலம் உழைத்த ஒரு தொண்டரை ”சிலகாலம் கட்சியில் இருந்தவர்” என குறைத்து மதிப்பிடும் அவசியம் ஏன் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வருகிறது?
போலி கம்யூனிஸ்ட்
இவர்கள் மார்க்சியத்தை புறக்கணிப்பது என்பது ஒரு வாழ்வியல் நிர்ப்பந்தம்.

மேற்சொன்ன கேள்விகள் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் அவற்றுக்கான பதில் ஒன்றுதான். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கம்யூனிஸ்ட் எனும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு அதன் அடிப்படைகளை அநாவசியம் என ஒதுக்கி வைத்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக அரசு அதிகாரத்தைப் பெறுவது அல்லது குறைந்தபட்சம் அதில் பங்குதாரராவது எனும் ஜோடனைகள் அற்ற பிழைப்புவாதத்தை கொள்கையாக ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே கட்சி உறுப்பினர்களுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்துவதற்கான தேவையில்லாது போகிறது.

சில மாநிலங்களில் அதிகாரத்தை சுவைத்த பிறகு, வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் அதிகாரத்தை பகிர்ந்துகொண்ட பிறகு மார்க்சியமானது தேவையற்ற நிலைப்பாடு என்பதில் இருந்து எதிர் நிலைப்பாடாக உருமாற்றமடைகிறது. இன்றைய நிலையில் புரட்சி குறித்து பேசும்ஒரு மார்க்சிஸ்ட் கட்சித்தொண்டன் அவனது சொந்தக்கட்சியைத்தான் அதிகம் விமர்சனம் செய்தாக வேண்டும்.

ஆகவே இவர்கள் மார்க்சியத்தை புறக்கணிப்பது என்பது ஒரு வாழ்வியல் நிர்ப்பந்தம். பலரும் கருதுவதுபோல அது ஒரு அலட்சியமோ அல்லது நெகிழ்வுத்தன்மையோ அல்ல. கம்யூனிசத்தின் அடிப்படைகளை விட்டு விலகி ஓடியது மட்டுமல்ல இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு உள்ள பற்றுதலை மிகத்தீவிரமாக வெளிப்படுத்துவது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். மாவோயிஸ்டுகள் மீது கடுமையான விமர்சனம் வைக்கும் கட்சியாகவும், பாராளுமன்றத்தின் மாண்பைப் பற்றி பெரிதும் அங்கலாய்க்கும் கட்சியாகவும் இருப்பதும் இவர்கள்தான். பாஜக, காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கங்களைவிட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைத்தான் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் அதிகம் வெறுக்கின்றன. இதன் வாயிலாக நாங்கள் அவர்கள் இல்லை என மக்களுக்கு இவர்கள் உரக்கச் சொல்கிறார்கள்.

இந்த சமரசம் இந்திய தேர்தல் அரசியலில் அவர்களுக்கு எந்த சிக்கலையும் தருவதில்லை. கட்சியில் இருக்கும் பழைய ஸ்டாக்குகளில் பலர் நேர்மையாளர்களாகவும் எளிமையானவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பீட்டளவில் நேர்மையான கட்சியாக தெரிகிறது. அவர்களது இந்த ஒற்றைத் தகுதியையும் மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்கள் காலாவதியாக்குகின்றன. இவர்கள் இல்லாதபட்சத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை போலிகள் என சொல்ல ஆட்கள் இருக்கப்போவதில்லை, இவர்களது தகுதியை ஒப்பிட யாரும் இருக்கப்போவதில்லை, எது கம்யூனிசம் என ஒரு சாமானியன் அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கப்போவதில்லை. தங்களது இருப்பை சிக்கலாக்கும் இயக்கங்களாக இந்த புரட்சிகர அமைப்புகள் இருப்பதால் அவர்களைத் தங்கள் முதல் எதிரியாக கருதுகிறார்கள், ஒருவகையில் அது உண்மையும்கூட.

இது வெறும் அனுமானமல்ல. “இது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் அல்ல” என வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் டி.கே ரங்கராஜன் குறிப்பிட்டார். சமீபத்தில் தா.பாண்டியன் கொடுத்த விகடன் பேட்டியில் “தாராளமயத்தை எதிர்க்கும் ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே. மற்ற எல்லா கட்சிகளும் அக்கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகு நாங்களும் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார். இடதுசாரிகளின் அபாரமான பேச்சாளர்கள்கூட தங்களது கட்சியின் மோசமான சமரசங்களால் பொது விவாதங்களில் பதில்பேச இயலாமல் தடுமாறுகிறார்கள். இவையெல்லாம் தங்களை இடதுசாரிகள் என அடையாளப்படுத்த இயலாத அளவுக்கு இவர்கள் சென்றுவிட்டதைக் காட்டுகின்றன.

இந்த கொள்கைச் சிக்கலுக்கும் காதரின் உழைப்பை மார்க்சிஸ்ட் கட்சி மறைப்பதற்கும் என்ன சம்மந்தம்? மிகச்சிறிய தொடர்புதான், அது காதர் தன்னை பராமரிக்க தெரிவு செய்த நபர்கள்.

ஒருவேளை காதர் ஆதரவற்றோர் விடுதியில் இருந்திருந்தால் மார்க்சிஸ்ட் கட்சி அவரே முடிவெடுத்து அலுவலகத்தை விட்டு விலகியதாக மட்டும் சொல்லியிருக்கும். டேப் காதருடைய கட்சிப்பணியை குறைத்து சொல்லும் அவசியம் அவர் மகஇக தோழர்களின் ஆதரவில் இருப்பதால்தான் வருகிறது. ”அவர் எங்கள் கட்சிக்காக 50 வருஷம் உழைத்தவர்” என ஒப்புக்கொண்டால், “காதர் ஏன் மகஇகவுக்கு போனார்” எனும் கேள்வியை அவர்களால் தவிர்க்க இயலாது. அந்தக் கேள்வி எது கம்யூனிசம் எனும் விவாதத்தையும் அதன் தொடர்ச்சியாக யார் கம்யூனிஸ்ட் எனும் தெளிவையும் உருவாக்கிவிடுமோ எனும் அச்சமே இவர்களது புரட்சிகர இயக்கங்கள் மீதான வெறுப்பிற்கான தோற்றுவாய். ஆகவே காதர் பற்றிய மார்சிஸ்ட் கட்சியின் விளக்கத்தை ஒரு மாவட்ட நிர்வாகியின் குற்றமாக கருதுவது பாமரத்தனமானது, அந்த இடத்தில் சங்கரய்யாவோ, வரதராஜனோ இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

kader-3ஏறத்தாழ ஐந்து மணிநேரம் தொடர்ந்த எங்களது உரையாடலில் டேப் காதர் உணர்ச்சிவயப்பட்டது ஒரேயொரு முறைதான். அவர் திரு. வெங்கடாசலத்திற்காக தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தருணம்.

வீட்டில் போதுமான மளிகைப் பொருட்கள் இல்லாததால் காதரின் மனைவி தொடர்ந்து இரண்டு நாட்கள் வெறும் அரிசிக்கஞ்சியை மட்டுமே சமைத்திருக்கிறார். அதனால் கோபித்துக்கொண்டு அவரது மூத்த மகன் வீட்டைவிட்டு வெளியேற, அந்தத் தகவலை காதருக்கு தெரிவிக்க அவரது இளைய மகன் பேருந்துக்குக் காசில்லாமல் பத்து கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறான். அதன் பிறகு வெங்கடாசலம் கொடுத்த இருபது ரூபாய் அவ்வீட்டின் நிலைமையை ஓரளவு சரிசெய்திருக்கிறது. அவரது நாடகக்குழுவில் இருந்த ஒரு நடிகர் வறுமை தாங்காமல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுவில் பாடப் போயிருக்கிறார். இவற்றை சொல்லும்போது மட்டும்தான் காதர் கண்கலங்கினார்.

( வெங்கடாசலம் : தஞ்சையின் குறிப்பிடத்தக்க கம்யூனிஸ்ட் போராளி. தலித் மக்கள் உரிமைகளுக்காக கடுமையாக போராடியவர். அதன் காரணமாகவே சொந்த சாதிக்காரர்களால் கொல்லப்பட்டார். தஞ்சை பூதலூர் வட்டாரத்தில் அவர் நினைவாக தலித் மக்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வெங்கடாசலம் என பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றுவரை அப்பெயர் சூட்டப்படுவது அங்கு தொடர்கிறது).

காதரின் ஐம்பதாண்டுகால கட்சி வாழ்வில் இப்படி ஏராளமானவை நடந்திருக்கும். அப்போதெல்லாம் கட்சியை விட்டு வெளியேறாத காதர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அழைத்தும் சினிமாவில் பாட முயற்சி செய்யாமல் கட்சிப்பணியாற்றிய காதர், அவர் உருவாக்கி வளர்த்த நாடகக்குழுவில் இருந்து கட்சி அவரை விலகச் சொன்னபோது அதனை மறுக்காமல் கட்சி சொன்ன வேலையை பார்க்கப்போன காதர், ஏன் நடமாட்டம் அற்றுப்போன, ஆதரிப்பாரற்ற தனது எண்பதாவது வயதுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியைவிட்டு விலக முடிவெடுக்கிறார்?

பொருளாசை, பதவி ஆசை என மார்க்சிஸ்ட் கட்சியால்கூட குற்றம்சாட்ட இயலாது. கொள்கை முரண்பாடு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு வர வாய்ப்பில்லை, மேலும் அவர் இப்போதும் மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது பெரிய புரிதல் கொண்டவராக இல்லை. அப்படியிருக்கையில் வேறென்ன காரணத்திற்காக அவர் தனக்கிருக்கும் வாழ்நாள் முகவரியாய் இருக்கும் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும்??

எல்லா தோழர்களும் மார்க்சியத்தை கற்றாய்ந்துவிட்டு கம்யூனிஸ்டாவதில்லை. சமூக அவலங்களை கண்டு சினம் கொண்டு அதற்கு உரிய தீர்வை கம்யூனிஸ்ட் இயக்கம் தரும் எனும் நம்பிக்கையோடு அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறார்கள். அவர்கள் ஒரு கம்யூனிஸ்டாக முழுமையடைய ஒரு தொடர் கற்றலும், நீண்ட விவாதமும் களப்பணியும் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தைத் தருகிற இயக்கத்தில் இருக்கும் தோழர்கள் தோல்விகளின்போதோ இழப்புகளின்போதோ நம்பிக்கையிழப்பதில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் (அல்லது இந்திய கம்யூனிஸ்ட்) கட்சி ஒரு பழைய இரும்புக் கடையைப்போல செயல்படுகிறது. கட்சியில் இணைபவனது நோக்கம் எதுவாயினும் அவனது மதிப்பு ஒன்றுதான். தொழிலாளர் உரிமை எனும் எளிய லட்சியத்தோடு தனது பணியைத் துவங்கிய காதருக்கு அரைநூற்றாண்டுகாலத்துக்குப் பிறகும் அவரது லட்சியத்துக்கான எந்த நியாயமும் அங்கு செய்யப்படவில்லை. மாறாக போராளிகள் எனும் நிலையில் இருந்து சமரசவாதிகளாகி இறுதியில் பிழைப்புவாதிகளாக மாறி நிற்கும் தன் கட்சித் தலைமையின் போக்கு காதரின் உழைப்பைக் கேலிசெய்வதாக இருக்கிறது. தன் இழப்புகளைவிட அது அர்த்தமற்றுப்போனதுதான் அவரை கட்சியைவிட்டு விலகச் செய்திருக்கிறது.

காதர் குடும்பத்தின் புறக்கணிப்புதான் மார்க்சிஸ்ட் கட்சியின் புறக்கணிப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. காதர் என்றில்லை, நேர்மையாகவும் தீவிரமாகவும் சமூகப்பணியாற்றும் கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினர் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் ”கம்யூனிஸ்டுகளை அவர்கள் குடும்பம்கூட ஏற்றுக்கொள்வதில்லை, ஆகவே இது தோல்விகரமான அமைப்பு” என்று குறிப்பிட்டார். அது அவரது பொதுவுடமை வெறுப்பிலிருந்து வெளிப்பட்ட சொல்லென்றாலும், பொதுவில் குடும்பப் புறக்கணிப்பென்பது பொதுவுடமைவாதிகள் எதிர்கொள்ளும் சவாலாகவே இருக்கிறது. கம்யூனிச சிந்தனை ஒருவனுக்கு எட்டிப்பார்க்கையிலேயே சுற்றம் இத்தகைய உதாரணங்களைச் சொல்லியே ஒருவனை அச்சுறுத்துகிறது.

‏‏இன்றைய சமூக அமைப்பு மகிழ்ச்சி என்பது பணம் சேர்ப்பதில் இருப்பதாக கருதுகிறது. ஒரு கம்யூனிஸ்ட், மகிழ்ச்சியானது சமூகத்துக்கான உழைப்பில் இருப்பதாக கருதுகிறான். அந்தஸ்து என்பது வசதிகள் நிறைந்த வாழ்க்கையில் இருப்பதாக சமூகம் கருதுகிறது. கம்யூனிஸ்டுகள் சமூகமதிப்பு என்பது எளிமையில் இருப்பதாக கருதுகிறார்கள். தனிமனிதன் நன்றாக இருந்தால் போதும், நாடு நன்றாக இருக்கும் எனக் கருதுகிறது சமூகம். நாடு நன்றாக இருந்தால்தால் தனிமனிதன் நன்றாக இருக்க முடியும் என்கிறது கம்யூனிசம். வாழ்க்கை, மகிழ்ச்சி மற்றும் கௌரவம் பற்றிய கண்ணோட்டத்தில் இன்றைய சமூகத்துக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் உள்ள இந்த முரண்பாடு குடும்பத்தில் உருவாகும்போது, ஒரு பொதுவுடமைவாதி தன் குடும்பத்தின் கண்களுக்கு பிழைக்கத்தெரியாதவனாக உபயோகமற்றவனாகத் தெரிகிறான்.

காதரின் கட்சிப்பணிகளால் அவர் குடும்பத்துக்கு சில இடையூறுகள் வந்திருக்கலாம். ஆனால் அவர் தன் குடும்பத்தை பராமரிக்காமல் விட்டுவிடவில்லை. ஒரு குடிகாரனைப்போலவோ அல்லது சாமியாரைப்போலவோ எந்த கம்யூனிஸ்டும் தன் குடும்பத்தை நிராதரவாக விட்டுவிடுவதில்லை. ஆகவே ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவது அந்த குடும்பத்தின் தவறேயன்றி அந்த கம்யூனிஸ்டின் தவறல்ல. குழப்பமாக இருப்பின் காதரை ஏற்றுக்கொள்ளாத அவரது குடும்பம் ஏன் அவர் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை மட்டும் பங்கிட்டுக்கொண்டது எனும் கேள்வியை தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் குழப்பத்துக்கான தீர்வு கிடைக்கலாம்.

இவற்றையெல்லாம் வைத்து ஒரு கம்யூனிஸ்டின் வாழ்வு தண்டனை போன்றது என கருதவேண்டாம். லௌகீக வாழ்விற்கான எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிற மனிதர்கள் பலரைக்காட்டிலும் காதர் மகிழ்சியாக இருக்கிறார். அவருக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத மனிதர்கள் பலர் அவரை கவனித்துக்கொள்வதில் பங்கேற்கிறார்கள். அவரை பராமரிக்கும் செல்வி, ராஜேந்திரன் தம்பதியினர் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் அதனை செய்கிறார்கள். தோழர் ராஜேந்திரன் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி, ஒற்றை மின்விளக்கு குடிசை அவர்களுடையது, தோழர் செல்வி ஒரு நாள் வாழ்வை நகர்த்த ஐம்பது குடம் தண்ணீர் சுமக்க வேண்டும். விறகு செலவை குறைக்க தினசரி சுள்ளி பொறுக்க வேண்டும். இவ்வளவு சிரமமான வாழ்விற்கு மத்தியிலும் அவர்கள் இதற்கு முன்னால் சந்தித்திராத ஒரு முதியவரை தங்களுடன் வைத்து பராமரிக்கிறார்கள், தங்கள் ரேஷன் அரிசி உணவை அவருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த மேலான மனிதப்பண்புகளை இவர்கள் பெறக்காரணம் அவர்கள் ஏற்றுக்கொண்ட கம்யூனிசம் எனும் கொள்கைதான்.

(செல்வி மற்றும் ராஜேந்திரன் வீட்டில் டேப் காதர் தங்கவைக்கப்படும் முன்பு, அவர் சில காலம் மகஇக தஞ்சை கிளை நிர்வாகி தோழர் ராவணன் வீட்டில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். ராவணன் தன் தஞ்சை குடியிருப்பை காலி செய்யவேண்டியிருந்த காரணத்தால் காதரை தங்கவைக்க வேறு இடத்தை தோழர்கள் பரிசீலித்திருக்கிறார்கள். காதர் அடிக்கடி சிகிச்சைக்கு செல்லும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகாமையில் ராஜேந்திரன் வீடு இருந்தபடியால் அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்)

எங்கள் உரையாடலில் ஒரு சிறு பகுதி கீழே,

கேள்வி : உங்களைப்போலவே பல பொதுவுடமைத் தோழர்கள் தங்கள் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்திருக்கிறார்கள். அதனை எப்படி தவிர்க்கலாம் என கருதுகிறீர்கள்?

காதர் : குடும்பத்தில் எல்லோரையுமே இயக்கத்துக்கு அழைத்துவருவதுதான் வழி.

ராஜேந்திரன், செல்வி தம்பதியரை எண்ணிப் பார்க்கும்போது இது எத்தனை அற்புதமான யோசனை என்பதை உங்களாலும் உணர இயலும்.

– தொடரும்

வில்லவன்.

மோடியின் இந்தியா – கேலிச்சித்திரங்கள்

5
தில்லி பெண்களுக்கு எச்சரிக்கை
தில்லியின் பெண்களே எச்சரிக்கை – சாஹப் நகரத்தில் உள்ளார். பின் தொடரப்படுவதை தவிர்ப்பதற்கான உதவி தொலைபேசியை அழையுங்கள் 1091 (நன்றி : Ankit Lal – https://twitter.com/ankitlal/status/406736385140219904/photo/1)
தனிச்சிறப்பானரவர்களுக்கு
மேட்டுக்குடி (நன்றி : Oleg Dergachov, Russia)
நாடாளுமன்றம்
இந்த 552 ஐட்டங்களையும் நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஆம்! (நன்றி : https://www.facebook.com/pages/Funny-Indian-Political-Cartoons)
வால்மார்ட்
வால்மார்ட் – இந்திய சந்தைக்குள் நுழையவிருக்கிறது
(நன்றி : Dr. Thomas A. Kodenkandath, USA)
வளர்ச்சி
ஃபேக்கு மோடி தயாரிக்கும் வளர்ச்சி பற்றிய வதந்திகளும் அதை பரப்பும் ஊடகங்களும் (நன்றி : Sabrinazar)
ஊட்டச்சத்து
நன்றி : Panju Gangoli – India
தேர்தல்
சுதந்திரமான, நியாயமான தேர்தல் இல்லை!
கொள்ளை நெருப்புக்கும், கொலைகார பயங்கரத்துக்கும் இடையேயான தேர்தல் (நன்றி Ajit Ninan, Times of India)
மோடியால் முடியும்
மன்மோகன் சிங் சாதித்ததை, மோடியும் செய்து காட்டுவார் ! (நன்றி : Santosh)

 

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

84

ஃபீதாயின் ரச்சேல்

மெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப் படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.

மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]

ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இசுரேல் அரசையும் அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடும் இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள்.

ரச்சேல் கோரி
ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்

ரச்சேல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. “பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் அவள் முன்னணியில் நின்றதாக ரச்சேலை நினைவு கூர்கிறார்கள் அவளது ஆசிரியர்கள்.

குறிப்பாக பாலஸ்தீன மக்களின் துயரத்தைத் தன் சொந்தத் துயரமாகவே கருதினாள் ரச்சேல். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் தருணத்தில் உலகின் கவனம் அங்கே திரும்பியிருக்கும் போது, பாலஸ்தீனத்தை இசுரேல் விழுங்கி விடும் என்று அவள் அஞ்சினாள்.

ரச்சேல் கோரி
ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர்.

அதைத் தடுப்பது தம் கடமை என்று கருதிய ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர். பாலஸ்தீனத்தில் இசுரேல் அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காசா பகுதியில், ரஃபா எனும் சிறு நகரில் பாலஸ்தீன ஏழை மக்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது அந்த இளைஞர் குழு.

திடீர் திடீரென இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அத்தகைய சம்பவம் ஒன்றினைத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறாள் ரச்சேல்.

“நாங்கள் புல்டோசரை மறித்து நின்றோம். மண்வாரியில் எங்களை அள்ளி வீசினான் ஓட்டுனர். நாங்கள் வீட்டின் ஒரு முனையில் கிடந்தோம். மறுபாதியை இடித்துத் தள்ளியது புல்டோசர்.”

மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள். பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.

“நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஒரு அமெரிக்கக் குடிமகனைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?” என்று தன் பெற்றோருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறாள் ரச்சேல்.

ரச்சேல் கோரி தெரு
ரச்சேல் கோரி தெரு (பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் ரச்சேல் பெயரில் தெரு)

பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.

ரச்சேல் ஒரு மனிதாபிமானியா, வீராங்கனையா, தியாகியா, அல்லது போராளியா? அவள் ஒரு போராளி. ஃபிதாயீன்!

ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். பாலஸ்தீனத்தின் மீசை அரும்பாத இளைஞர்களும் இளம் பெண்களும் தம் உடலையே வெடிமருந்து கிடங்காக்கி வெடிக்கச் செய்து இசுரேலை நிலைகுலையச் செய்கிறார்கள். அவர்களுடைய இலக்கு யூதவெறி அரசு.

ரச்சேலின் இலக்கோ அமெரிக்க சமூகத்தின் அலட்சியம்; உலக மக்களின் மவுனம். வெடிமருந்துகளால் தகர்க்க முடியாத இந்த ‘எதிரியை’ முறியடிக்க அந்த அமெரிக்க மாணவி கண்டுபிடித்த அதி நவீன ஆயுதம் ரத்தம்.

“நாம் வாழும் வாழ்க்கை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தால்…” –  ரச்சேலின் கடிதம்.

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :

சிண்டி, கிரெய்க் கோரி
2007-ம் ஆண்டு நடந்த “ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வா” ஆர்ப்பாட்டத்தில் ரச்சேலின் பெற்றோர். சிண்டி, கிரெய்க் கோரி

நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

ஒலிம்பியா ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் ஒலிம்பியா நகரில் அமைதி ஆர்ப்பாட்டம்

எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.

ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க… வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…

அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003
____________________________
புதிய கலாச்சாரம் மே 2003
____________________________

படங்கள்  : விக்கிபீடியா

ரச்சேல் கோரி கொல்லப்பட்ட உடன், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன்  “தெளிவான, ஒளிவு மறைவில்லாத விசாரணை நடத்தப்படும்” என்று வாக்குறுதியளித்தார்.

ஆனால், இசுரேலின் இராணுவ விசாரணை “இராணுவத்தின் மீது எந்தத் தவறும் இல்லை, புல்டோசரின் ஓட்டுனர் ரச்சேலைப் பார்க்கவில்லை” என்று முடிக்கப்பட்டது.

ரச்சேல் கோரியின் பெற்றோர் இஸ்ரேலிலுள்ள ஹைஃபா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த நீதிமன்றம், இஸ்ரேலிய அரசு ரச்சேலின் மரணத்துக்கு பொறுப்பாகாது என்று தீர்ப்பு சொல்லி விட்டது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இராணுவங்களின் கொலைக்குற்றங்களுக்கான நீதி, ஏகாதிபத்தியங்களின் நீதிமன்றங்களில் கிடைக்கும் என்றும் யாரும் நம்பவில்லைதான்.

சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !

11
ராமதாசு
ராமதாசு தமிழர் கலாச்சாரத்திற்காக கூவுவதைப் பார்க்கையில், குப்பையைக் கிளரும் கோழிக்கே குமட்டி வருது வாந்தி!

வேட்டித்தொகை!

டுத்துவதற்கு கொள்கை இல்லாதவர்களுக்கு
ஓசியில் கிடைத்தது ஒரு வேட்டி,
தன்னையும் தமிழனென்று காட்டிக் கொள்ள
ஆளாளுக்கு போட்டி!

அரி பரந்தாமனின்… வேட்டியல்லவா!
அதனால், தேசத்தையே வலம் வருகிறது,
அறுக்கப்பட்ட தலித் வினிதாவின் உடலோ
குளித்தலைக்குள்ளேயே அடங்கிப்போனது!
வேட்டிக்குள்ள மதிப்புகூட
தாழ்த்தப்பட்டவர்களின்
தோலுக்கில்லாத தேசத்தில்
தமிழர் கலாச்சாரத்தை தாங்கிப்பிடிக்க
எத்தனை குரல்கள்! எத்தனை கட்சிகள்…!

தலித் இளைஞர்கள்
ஜீன்ஸ்பேன்ட்டும், கூலிங்கிளாசும் அணிவதையே
தாங்கிக் கொள்ள முடியாத ராமதாசு
தமிழர் கலாச்சாரத்திற்காக
கூவுவதைப் பார்க்கையில்,
குப்பையைக் கிளரும் கோழிக்கே
குமட்டி வருது வாந்தி!

சாதிவெறியர்
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வீச்சரிவாளைத் தூக்கும் சாதிவெறியர்களும் தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்ற
களத்தில்…

தமிழர் பண்பாட்டில்
காதலும் ஒன்று – அதை
தாழ்த்தப்பட்டவர்கள் செய்தால்
தகாது என்று

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு
வீச்சரிவாளைத் தூக்கும் சாதிவெறியர்களும்
தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்ற
களத்தில் நிற்பதைக் கண்டு,
காரித்துப்பி அம்மணமாய்
வயலுக்குள் ஓடுது நண்டு!

கிடைத்த வேட்டியை
தன் சாதி அளவுக்கு
கிழிக்கிறார்
தினமணி வைத்தி,
“கோவிலுக்குள் சட்டையைக் கழட்டச் சொல்வது
ஆதிக்கமல்ல, கோயில் ஒழுங்கு ” என்று
அடுத்த ஆப்பு தனக்கு வருவதற்குள்
எடுத்து விடுகிறார் எட்டு முழத்தை…
” கோயில் கொடியவர்களின் கூடாரமென்றால்
அதை புறக்கணிப்பதுதான் சுயமரியாதை…
நடைமுறையை எதிர்த்து போராடுவது
அநாவசியம்… ” என்று

கோயிலில் சட்டை
“கோவிலுக்குள் சட்டையைக் கழட்டச் சொல்வது
ஆதிக்கமல்ல, கோயில் ஒழுங்கு ” – தினமணி வைத்தி

கிடைத்த வேட்டியில்
வாரப் பார்க்கிறார்,
வீட்டுக்குள் திருடன் வந்தால்
வீட்டையே விட்டு விடுவாரோ வைத்தி!
கோயில் எங்களது
கூடாரம்தான் உன்னது
கொடியவனை ஓட்டிவிடுவதுதான் நீதி!
தேர்தலையும், முதலாளித்துவக் கட்டமைப்பையும்
புறக்கணிப்பவர்களைப் பார்க்கையில் மட்டும்
பின் ஏன்? – உன் அடிவயிற்றில் கொடுந் தீ!

சேலைகட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு? என
சினிமா கவலையில் ஜில்லிட்டுப் போன
வைரமுத்துவும்,
வேட்டி நீளத்துக்கு
இலக்கியக் கவலையில் விறைத்துப்போய்
அறிக்கைத் தமிழனாய்
தன்னை அடையாளப்படுத்துகிறார்,
வேட்டி காத்த மாரியம்மனுக்கு
ஒரு பாராட்டு,
கூடவே ” தமிழகப் பள்ளிகளில்
தமிழ் நுழைய முடியவில்லையே”
என ஒரு வேண்டுதல்!

கருணாநிதி, வைரமுத்து
“அதிகாரமிக்கவர்கள் ஆவன செய்ய வேண்டும்” என இரைஞ்சும் வைரமுத்துவுக்கு முத்தமிழ் கலைஞர் மு.க.வும் நெருக்கம்.

“அதிகாரமிக்கவர்கள்
ஆவன செய்ய வேண்டும் ”
என இறைஞ்சும் வைரமுத்துவுக்கு
அப்துல்கலாமும் நெருக்கம்
முத்தமிழ் கலைஞர் மு.க.வும் நெருக்கம்.
இவர்கள் அதிகாரத்திலிருக்கும் போது
கவிப்பேரரசின் படையெடுப்பு எதற்கோ?

“வெட்டி எடுத்தால் வேட்டி!
துண்டாடினால் துண்டு!”
இலக்கணமெல்லாம் சரிதான் கவிஞரே!
போராட்டத்தின் பக்கமே தலைவைத்துபடுக்காமல்
இப்படி கொட்டி தீர்த்தால் வைரமுத்துவா?
வடுகப்பட்டியிலிருந்து வர்க்கப்பட்டியில் அடைந்த
பத்மஸ்ரீயின் விடுதலை உணர்வுக்கு
வேட்டி மட்டும் போதுமா?

ப.சிதம்பரத்தின் வேட்டி
உலக வங்கிக்கு உள்ளாடை,
காங்கிரஸ் கரை வேட்டி
ஈழத்தமிழர்களுக்கு கோடித்துணி,
பா.ஜ.க. காவிக் கறை வேட்டி
தலித், சிறுபான்மையினருக்கு தூக்குக் கயிறு
ஓட்டுக் கட்சிகளின் வேட்டி
நாட்டைச் சுருட்டும் மூட்டைத் துணி,
‘ மினிஸ்டர் ‘ காட்டன் என்று
நெசவின் வசவுகள் நிறையவே உண்டு!
வர்க்க, சாதி, மதத்திற்கேற்ப
வகை வகையான வேட்டிகள் உண்டு!

110 விதி
மத்த பிரச்சனையெல்லாம் மண்ணைக்கவ்வ நூத்தி பத்து விதியின் கீழ் முக்கியப் பிரச்சனையாய் வேட்டிக்கு முழங்கினார் வீராங்கனை!

இத்தனை விறுவிறுப்பான காட்சிகளோடு
வேட்டி கட்டியவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க
கடைசியில் தமிழ் கலாச்சாரத்தை
காக்கும் கிளைமாக்ஸ்
சேலை கட்டிய ஜெயாவுக்கு கிடைத்தது!

மத்த பிரச்சனையெல்லாம் மண்ணைக்கவ்வ
நூத்தி பத்து விதியின் கீழ்
முக்கியப் பிரச்சனையாய்
வேட்டிக்கு முழங்கினார் வீராங்கனை!
ஒருவாரம் சட்ட சபையையும்,
தமிழ்நாட்டையும் ஓட்ட
வேட்டி படம் வசூலில் சாதனை!

வை.கோ. முதல் வைரமுத்துவரை
வாயில் வேட்டியை திணித்தது அம்மா!
“அறம் காத்த அம்மா
தமிழர் நலம் காத்த அம்மா” என
கலைப்புலி தாணு முதல்
விலைப்புலி நெடுமாறன் வரை
ஒரே வேட்டியில் பல மாங்காய்!

குடி, கூத்து
இந்த ஆபாசக் கும்பலையே தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்
என்பதுதான் தமிழகத்துக்கே பெருமை!

“ஆடை அணிவது அவரவர் உரிமை
வேட்டி அணிவது தமிழரின் பெருமை”
என மேட்டுக்குடி கிளப்புகளின்
வர்க்கக் கொழுப்பை கண்டிப்பது சரிதான்!
எனினும், வேட்டியைத் தாண்டி
கொஞ்சம் வெளியே வந்து சிந்திப்பதே அறிவுடைமை!
வேட்டியோடு சூதாட அனுமதித்தால்
வேட்டியோடு குத்தாட்டம் பார்க்கவிட்டால்
வீரத்தமிழனுக்கு பிரச்சனை முடிந்ததா?

பிரச்சனையே,
கிழக்கு கடற்கரை ரிசார்ட்டுகள் முதல்
கிழக்கிந்திய கம்பெனி கால கிளப்புகள் வரை
வர்க்கக் கொழுப்பில் கொட்டமடிக்கும்
குடி, கூத்து, கும்மாள மடிக்கும்
அனைத்து ‘கிளப்பையும்’ கிளப்பு என்பதுதான்!
குடல் திமிரும், உடல் திமிரும் கொண்ட
இந்த ஆபாசக் கும்பலையே
தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்
என்பதுதான் தமிழகத்துக்கே பெருமை!

டாஸ்மாக்
வேட்டி கட்டுவதும் தமிழன் பண்பாடு டாஸ்மாக் ஓரம் வேட்டி அவிழ்ந்து கிடப்பதும் தமிழன் பண்பாடு

வேட்டி கட்டுவோம்
அதை சாதி, மத, வர்க்கக் கறைகளை
உதறிக் கட்டுவோம் என்பதே சரி!
சீன்கள் எதுவாயிருந்தால் என்ன
சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால் போதும்
என்பதும்,
விவகாரம் எதுவாயிருந்தால் என்ன
வேட்டி கட்டினால் போதும் என்பதும்
தமிழன் கலாச்சாரம் அல்ல
தரகன் கலாச்சாரம்!

விமர்சனமற்றுப் பார்த்தால்
வேட்டி மட்டுமா தமிழன் பண்பாடு
வட்டி கூடத்தான் தமிழன் பண்பாடு!
பத்து வட்டிக்கு பர்மா, மலேயா,
என பாராண்ட தமிழன் என பாராட்ட முடியுமா?
வேட்டி கட்டுவதும் தமிழன் பண்பாடு
டாஸ்மாக் ஓரம் வேட்டி அவிழ்ந்து கிடப்பதும்
தமிழன் பண்பாடு
எனில் விளங்குமா தமிழ்நாடு?

வேட்டியில் யார் கையை வைத்தாலும்
விடமாட்டேன் என்று
தமிழர் கலாச்சாரம் பேசும் ஜெ. தான்
ஆரம்பக் கல்வியிலேயே ஆங்கிலத்தை திணித்து
தமிழைத் தரிசாக்குவது,
வேட்டிக்கு வந்தவர்கள்
இதற்கு ரோட்டுக்கு வந்து போராடினால்
அதுதான் பண்பாடு!

பார்ட்டி
வீக் என்ட் பார்ட்டி! டிஸ்கொதே, வீதிக்கு வீதி சாராயக்கடை, விபச்சாரம்…

வீக் என்ட் பார்ட்டி! டிஸ்கொதே
வீதிக்கு வீதி சாராயக்கடை, விபச்சாரம்
இணையதள ஆபாச மெமரிகார்டு,
பெண்களை கடத்தி பாலியல் வன்முறை
இத்தனை ஏகாதிபத்திய அழுக்கையும்
அடித்து வெளுக்காமல்
வேட்டியை மட்டும் சலவைக்குப் போட்டால்
வீரத் தமிழனா?

புரிந்துகொள்!
ஆடையில்லாத மனிதன்
அரை மனிதன்
போராடாத மனிதனோ
முழு அம்மணம்!
இயற்கையை எதிர்த்த
போராட்டத்தின் ஊடே
தரித்துக் கொண்டதுதான்
ஆரம்ப ஆடை.

ப சிதம்பரம்
ப.சிதம்பரத்தின் வேட்டி உலக வங்கிக்கு உள்ளாடை

தாத்தா காலத்திலிருந்து
எலி அம்மணமாகத்தான்
ஓடிக் கொண்டிருக்கிறது,
அந்த காலத்திலிருந்து
அண்டி வாழும் நாய்க்கு
குண்டித் துணியில்லை…
சூழலுக்கெதிராய்
போராடிய மனிதன் தான்
தேவைகளுக்கேற்ப
ஆடை அணிந்தான்

சுரண்டலின் தீவிரத்தில்
உழைக்கும் மக்களிடமிருந்து
உடைமைகளை மட்டுமல்ல
உடைகளையும் பறித்தது ஆளும் வர்க்கம்.

உடுக்கை, உடுப்பு, துணி, ஆடை
குப்பாயம், மெய்ப்பை, பட்டுடை,
கலிங்கம், புடவை, கச்சு, தானை, படாம்…
என ஆடையைக் குறிக்கும்
ஆயிரம் சொல் புழங்கிய
தமிழ்ப் பெருமையில்
தாழ்த்தப்பட்டவர்களை
ஆடை மறுக்கப்பட்ட அரை மனிதனாக
அலையவிட்ட சிறுமையும் அடங்கும்!

பொங்கொளி… பூம்பட்டுடை அரசனுக்கு
உரைசால் பொன்னிறம் வணிகனுக்கு
தாழகம் செறிந்த உடை வேளாளனுக்கு…
என வர்ணத்திற்கேற்ற வகைப்பாடுடையை
வர்ணிக்கிறது சிலப்பதிகாரம்!
அது மட்டுமா?
கணவனை இழந்த கைம்பெண்கள்
பஞ்செடுத்து, நூல் நூற்ற பணிப் பெண்களாய்
‘பருத்திப் பெண்டிர்’ என அழைக்கப்பட்டதும் வரலாறு,
அடக்கம் என்பது உயர்ந்தோர் முன்
வாய் மூடலும், ஆடை ஒடுக்கலும்
என்பது தொல்காப்பிய வழக்காறு.

பாடுபடும் பாட்டாளி
படைசூழ் மன்னனுக்கும் மனுநீதி பார்ப்பனனுக்கும் ஆணவப் பட்டு, பாடுபடும் பாட்டாளிகளுக்கோ கோமணக் கட்டு!

படைசூழ் மன்னனுக்கும்
மனுநீதி பார்ப்பனனுக்கும்
ஆணவப் பட்டு,
பாடுபடும் பாட்டாளிகளுக்கோ
கோமணக் கட்டு!
இதுதான் மன்னராட்சி வழங்கிய
தமிழ் கலாச்சாரத்தின் குறுக்குவெட்டு.

தாழ்த்தப்பட்ட சவரர், புளிஞர்
வேட்டுவப் பெண்களுக்கு தழையே ஆடை,
துகில் பட்டும், வட்டுடையும்
புதுநூல் பூந்துகிலும்
உயர்ந்தோர் ஆடையென
கண்ணை உருத்தும் காட்சிகளுடன்
பெருங்கதையும், சிந்தாமணியும் காட்டும்
ஆண்டபரம்பரை தமிழ் கலாச்சாரம்!

தழைய தழைய வேட்டி
பண்ணையாரின் உடை
தமிழச்சி மார்பை மறைக்கவும்
சேலை அணியத் தடை,
இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை,
“முழங்காலுக்கு கீழே
சேலையை இழுத்துவிட்டது யாரு?
மணலி கந்தசாமி பாரு” என
தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின்
நடவுப் பாடல்
கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!

சாதிவெறி
செருப்பு போடக் கூடாது அக்கிரகாரத்தில், ஆதிக்கசாதி தெருவில்
நடக்கக் கூடாது…

மேலாடை அணியக் கூடாது,
துண்டை தோளில் போடக் கூடாது
செருப்பு போடக் கூடாது
அக்கிரகாரத்தில், ஆதிக்கசாதி தெருவில்
நடக்கக் கூடாது… என அடுக்கடுக்காக
உழைக்கும் ஒரு பகுதி
தாழ்த்தப்பட்ட தமிழர்களை
அடக்கி ஒடுக்கியதுதான்
ஆளும் வர்க்க தமிழன் பண்பாடு!

செருப்பும் அணிவோம்
ஆதிக்கசாதித்திமிரை எத்தியும் நடப்போம்,
என போராட்ட கலாச்சாரத்தால்
தமிழர் பண்பாட்டை தகுதிபடுத்தியவர்கள்
கம்யூனிஸ்டுகள்!

சும்மா வரவில்லை
அனைவருக்கும் வேட்டியும், சேலையும்
அம்மாம் பெரிய
போராட்ட வரலாறுண்டு தமிழகத்தில்
அந்த பெருமைக்கு காரணம் கம்யூனிசம்!

வேட்டியும், சட்டையும்
அனைவரும் அணிந்தது
பன்னெடுங்காலப் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்தில்
அந்த சுயமரியாதையை நெய்தது
கம்யூனிஸ்டுகளின் நீரோட்டம்!

பெரியார்
நூலை நூற்கக் கற்ற தமிழனுக்கு மக்களை இனம் பிரிக்கும் ‘நூலை’ அறுக்கவும் கற்றுக்கொடுத்தார் பெரியார்!

நூலை நூற்கக் கற்ற தமிழனுக்கு
மக்களை இனம் பிரிக்கும்
‘நூலை’ அறுக்கவும்
கற்றுக்கொடுத்தார் பெரியார்!
தமிழன் வேட்டியின் பார்ப்பனக் கறையை
பெரியார் வெளுத்த வெளுப்பில்
எல்லா தோலுக்கும் சுரணை வந்தது!

வேட்டியை ‘இந்து வின்’ அடையாளமாக்கி
கோயில் பாம்புகள் படமெடுத்தபோது
கைலிகட்டி பெரியார் காலால் மிதித்தார்.

போராட்ட மரபில்
விளைந்த வேட்டியை
இறுக்கிக் கட்டு!
ஆனால்,
கட்டிய வேட்டியோடு
நீ எங்கே போகிறாய் என்பது தான்
காலம் எழுப்பும் கேள்வி!
திரும்பவும்
வாய் வீச்சுக்காரர்களின் வக்கனைக்கா?
இல்லை
வர்க்கப்போராட்டத்தின் போர் முனைக்கா!

தமிழ்நாட்டில் சாதியம்
பண்ணைகளைச் ‘சாமி’ என்றதை பழங்கதையாக்கிய நாட்டில்
மீண்டும், பன்னாட்டுக் கம்பெனி சாமி பெயரில் அர்ச்சனை நடக்கிறது!

தமிழ்மொழி உடுக்கை
இழந்தவன் கையில்
மீண்டும்
இந்திச் சருகு திணிக்கப்படுகிறது!
பகுத்தறிவு தறிகள்
ஓடிய வீட்டில்
மீண்டும்,
பார்ப்பன சமஸ்கிருத பாடை நுழைகிறது!

பண்ணைகளைச் ‘சாமி’ என்றதை
பழங்கதையாக்கிய நாட்டில்
மீண்டும்,
பன்னாட்டுக் கம்பெனி சாமி பெயரில்
அர்ச்சனை நடக்கிறது!
அம்மணமாய் சாதிவெறி
நாகரிகத் தொட்டிலை கிழிக்கிறது!
இந்தப் பாசிச இருட்டை உதறிக்கட்டும்
வேட்டியோடு வெளியே வா தமிழா!

– துரை.சண்முகம்

முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் – நேர்காணல்

16

வினவு ஏழாம் ஆண்டு துவக்கத்தை ஒட்டி திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர்களை சந்தித்து உரையாடலாம் என முடிவு செய்தோம். இனி முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமாரின் நேர்காணலை படியுங்கள்!

இயக்குநர் ராம்குமார் ஒரு சாதாரண தொழிலாளியைப் போன்றோ அல்லது ஒரு சிறுநகரத்து எளிய இளைஞனைப் போலவே இருந்தார். வயது 31, திருப்பூரைச் சேர்ந்தவர், 12-ம் வகுப்பிற்கு பிறகு, தபால் வழிக் கல்வியில் இளங்கலை படித்தவர். பள்ளி நாட்களிலேயே கதை, கவிதை, கட்டுரை, பேச்சு என்று சொந்த முயற்சியில் வளர்ந்தவர். ஆனந்த விகடனில் இவரது கார்ட்டூன்களும், நகைச்சுவை துணுக்குகளும் வெளி வந்திருக்கின்றன.

வினவு: திரைப்படத்துறைக்கு எப்படி வந்தீர்கள்? யாரிடமாவது பயிற்சி எடுத்தீர்களா, வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ராம்குமார்:  நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டு அதிலிருந்து திரைப்படமாக வந்ததுதான் முண்டாசுபட்டி. காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்கள் முதலில் குறும்படமாக உருவாகி பின்னர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அதைப் பார்த்து தான் இப்படத்தையும் பண்ண முயற்சித்தேன். ஏற்கெனவே செய்த கதையாக இருந்ததால் படம் செய்வது கடினமாக இருக்கவில்லை. வேறு ஒரு சப்ஜெக்டாக இருந்திருந்தால் பயிற்சி தேவைப்பட்டிருக்கலாம்.

வினவு:  இதற்கு முன் எத்தனை குறும்படம் எடுத்துள்ளீர்கள்? அதையும் நீங்களாகவே கற்றுக் கொண்டீர்களா?

ராம்குமார்:  ஏழு வரை எடுத்துள்ளேன். முண்டாசுபட்டி கலைஞர் டி.வி.க்காக எடுத்தது. அதற்கு முன் எடுத்தவை எல்லாம் ஒரு பயிற்சிக்காக எடுத்தவை என்பதால் அமெச்சூர் தனம் கட்டாயமாக இருக்கும். குறும்படம் என்பது வேறு. அது மாற்றுச் சினிமாவிற்கானது. சினிமாவில் சொல்ல முடியாத, இயலாத விசயங்களை சொல்வதற்கானது. ஆனால் நான் குறும்படத்தை சினிமா பயிற்சி எடுப்பதற்காகவே செய்தேன். போட்டிக்காகவும் குறும்படத்தை எடுக்கவில்லை. பயிற்சிக்காகத்தான் எடுத்தேன். சரி கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்புவோம் என அனுப்பி வைத்தேன்.

வினவு: பலரும் சினிமாவிற்கு வர நினைப்பதுண்டு. உங்கள் சினிமா ஆர்வம் எப்படி வளர்ந்தது?

ராம்குமார்:  பெருந்துறையில்தான் (ஈரோடு) பத்தாவது வரை படித்தேதன். அப்போது சினிமா ஆர்வம் மட்டும்தான். அதற்காக என்ன முயற்சிகள் செய்ய வேண்டும்  என்றெல்லாம் தெரியாது. சினிமா குறித்த செய்திகள், பேட்டிகளை மட்டும்தான் கிடைக்கும், செய்தித்தாள்களில் படிப்பேன். அதற்கப்புறம் எனது குடும்பம் திருப்பூருக்கு மாறியது . திருப்பூரில்தான் பன்னிரண்டாது வரை படித்தேன்.

இயக்குனர் ராம்குமார்
இயக்குனர் ராம்குமார்

ஆறாவது படிக்கும் போது இருந்தே பள்ளிக்கூடத்தில் நடக்கும் ஓவியம், கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் யாரும் வழிகாட்டாமல் நானே சென்று கலந்து கொண்டேன். அப்போது எனக்கு எதுவும் பெரிதாக தெரியாது. எல்லோரும் யாரிடமாவது வழிகாட்டல் ஆலோசனை போன்றவற்றை பெறுவார்கள். ஆனால் நானே தகவல்களை தேடி தேடித்தான் இதற்கெல்லாம் என்னை தயார் செய்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாகத்தான் நானே இயக்குநர் ஆகலாம் என்றும் இப்போது முடிவு செய்தேன்.

முதல் படத்திலேயே சிம்புதேவன் சார் எனக்கு உதவி இயக்குநராக வாய்ப்பு தந்த போதும் எனது வீட்டில் குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாக அப்படத்தில் பணியாற்ற இயலவில்லை. ஊருக்கு போய் விட்டேன்.

வினவு: முதல் படம் செய்த அனுபவத்தில், புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் எது முக்கியமான தடையாக இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

ராம்குமார்:  நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் கட்டாயம் இங்கே வாய்ப்பிருக்கிறது. என்னிடமே சில சின்னச்சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல கதை இருந்தால் சொல்லும்படி என் படம் வெற்றிபெற்ற பிறகு கேட்கிறார்கள். என்னிடம் இல்லாவிட்டாலும் எனக்கு தெரிந்த யாரிடமாவது இருந்தாலும் சொல்லுமாறு கேட்கிறார்கள்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எந்த பின்புலமும் கிடையாது, எந்த சிபாரிசும் கிடையாது. எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது. நானாக முயற்சி செய்து முயற்சி செய்துதான் படம் எடுக்க பயின்றேன். சிம்புதேவன் சாரை சந்திப்பதற்கு கூட யாரிடமோ தொலைபேசி எண்ணை வாங்கி ஃபோன் செய்து என்னுடைய கார்ட்டூன்களை அவரிடம் நேரில் காட்டி என நிறைய படிகளைத் தாண்டிய பிறகு தான் சேர்த்துக் கொண்டார்.

முண்டாசுப்பட்டி தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் கூட என்னோட பின்புலம் என்ன, படத்தில் இதற்கு முன் வேலை செய்திருக்கிறேனா என்றெல்லாம் பார்க்கவில்லை. என்னுடைய குறும்படத்தை பார்த்தார், என்னுடைய திரைக்கதையை பார்த்தார். நன்றாக இருக்கவே ஒத்துக் கொண்டார்.

வினவு:  நல்ல தரமான ஸ்கிரிப்ட் என்பதை முடிவு செய்வது யார்?

ராம்குமார்: என்னோட ஸ்கிரிப்டே மிகவும் தரமானது என்று சொல்ல மாட்டேன்.  ஒரு நல்ல படைப்பாளிக்கும், பார்வையாளனுக்கும் இடைப்பட்ட படமாகத்தான் என்னுடையது இருக்கிறது. அதாவது பார்வையாளனை வசப்படுத்தும் ஒரு நல்ல கதைன் என்றும் சொல்லலாம்.

வினவு:  ரிலையன்சு, ஃபாக்சு ஸ்டுடியோ போன்ற நிறுவனங்களின் உயர் மட்ட நிர்வாகிகளுக்கு நீங்கள் காட்ட விரும்பும் கதை, தமிழ் வாழ்க்கை எதுவும் தெரிந்திருக்காது. அவர்கள் எப்படி உங்கள் கதையை தெரிவு செய்வார்கள்?

ராம்குமார்: தயாரிப்பாளர் சி.வி.குமார் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கிறார், அவரால் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க முடிகிறது என்பதால் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்படுகிறார்கள். கதை, கதை மாந்தர்கள், நடிகர்கள், நான் உட்பட எல்லாவற்றையும் தெரிவு செய்ய வேண்டியது சி.வி.குமாரின் பொறுப்பு. நல்லபடியாக ரிசல்ட் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வட இந்தியாவில் வெற்றி பெற்றதைப் போல இங்கும் நல்ல தயாரிப்பாளரை வைத்து வெற்றி பெற விரும்புகிறார்கள்.

வினவு: ஹாலிவுட் திரைப்படங்கள் முதலிலேயே திரைக்கதையை கொடுத்து அது அமெரிக்க நலனுக்கு உட்பட்டதுதான் எனச் சொல்லி படத்தை எடுப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அதனால் அங்கு எடுக்கும் திரைப்படங்களும் அமெரிக்க நலனுக்கு பாதகம் விளைவிக்காத வகையில்தான் எடுக்கப்படுகின்றன. இங்கும் சான்றாக  கோக், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு எதிரான கதையாக இருக்கும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் தடை வந்தால் எப்படி அந்த முரண்பாட்டை எதிர்கொள்வீர்கள்?

ராம்குமார்: இங்கும் முதலிலேயே திரைக்கதையைக் கொடுத்துதான் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் பெப்சி, கோக் போன்றவற்றுக்கு எதிராக மறைமுகமாக சில காட்சிகளை வைத்திருக்கிறோம் என்றால் பேசி சரி பண்ணி அதனை வைக்க போராட வேண்டும். சம்பிரதாயமாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அக்காட்சிகளை வைக்க நான் போராடுவேன். விட்டுத்தர மாட்டேன்.

என்னுடைய திரைப்படத்திலேயே மூடநம்பிக்கை பற்றி, பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி எல்லாம் வெட்டியான் பேசுவார். இதற்கெல்லாம் என்னோட தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டார். இதெல்லாம் வைக்க வேண்டும் என்று என்னுடைய சிந்தனையில் ஏற்கெனவே இருந்தது.

வினவு: அதற்கான காரணம் என்ன?

பாரதியார்ராம்குமார்: பெரும்பாலும் செய்தித்தாள்களில் படிக்கும் விசயங்கள் தான். அரசியல் ஈடுபாடு என்றால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். ஆனால் சினிமாவில் தீவிரமாக இருந்து விட்டதால் தீவிரமாக இறங்கவில்லை. பொதுவாக அடிப்படையாக பகுத்தறிவு ஆர்வம் இருந்தது.

மேலும் சிறு வயதில் இருந்தே படிப்பதில் ஆர்வம் இருந்தது. பாரதியார், பெரியார் போன்றவர்களை ஆர்வமாக படித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாரதியாரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எட்டாம் வகுப்பு படிக்கையில் எனது கட்டுரைப் போட்டியில் பாரதியார் புத்தகம்தான் எனக்கு பரிசளிக்கப்பட்டது. அதனைப் படித்தேன். பிறகு அவரது கருத்துக்கள், அதன் பிறகு அது தொடர்பாக வந்த பிறரது விசயங்களையும் என படிக்க ஆரம்பித்தேன்.

வினவு: பாரதியாரை குறிப்பாக பிடிப்பதற்கு என்ன காரணம்?

ராம்குமார்: அவர் இருந்த சூழலில் இருந்து வேறுபட்டு, முரண்பட்டு எழுதியிருக்கிறார் என்பதுதான். அவரது பாடல்களில் பிடித்தது என்று குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்கும் ‘தேடிச் சோறு நிதம் தின்று…’ என்ற பாரதியின் கவிதை எல்லோரையும் போலவே பிடிக்கும். அதிலும் எல்லோரும் சொல்லும் முதல் வரிகளுக்கு பின்னர் நீண்டு கொண்டு போகும் பிந்திய வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரே இரண்டு கதாபாத்திரமாக நின்றும் சில இடங்களில் பேசியிருப்பார்.

வினவு: பாரதிதாசனைப் படித்திருக்கிறீர்களா? பெரியாரைப் பற்றியும் சொல்லுங்களேன்!

ராம்குமார்: பாரதிதாசனை அந்தளவுக்கு படித்ததில்லை. இனிமேல் அவற்றையெல்லாம் படிக்க வேண்டும். பெரியாரை ஓரளவு படித்திருக்கிறேன். பள்ளி நாட்களில் போட்டிகளில் பரிசாக கிடைத்த புத்தகங்கள் மூலம்தான் பெரியாரும், பாரதியாரும் அறிமுகமானார்கள். அதுவரை காமிக்ஸ் உலகில் இருந்தேன். பின்னர் தமுஎகச கூட்டங்களுக்கு செல்வது மூலம் பெரியார் மற்ற தலைவர்கள் குறித்து விரிவாக அறிய முடிந்தது.

பெரியார் பற்றி நாலு வார்த்தைகளில் சொல்ல முடியாது. அவர் கடவுள் மறுப்பு மட்டுமல்ல, சாதி ஒழிப்பு உள்ளிட்டு பல பிரச்சினைகளுக்காக போராடியிருக்கிறார். இதெல்லாம் தெரியாமல் படம் எடுக்க வந்திருந்தால் இப்படி பண்ணியிருப்பேனா என்று தெரியவில்லை.

வினவு: ஒரு படைப்பாளி என்ற முறையில் ஒரு சமூக அரசியல் விசயங்களோடு முழுமையாக இறங்கா விட்டாலும் ஒரு தொடர்பைப் பேணுவது, தெரிந்து கொள்வது சரி என்று கருதுகிறீர்களா?

ராம்குமார்: இனிவரும் படங்களில் முடிந்தளவுக்கு சமூக பொறுப்புணர்வோடு சில விசயங்களை வைக்க வேண்டும் என்றுதான் கருதுகிறேன்.

வினவு: ஒரு கலைஞனோ படைப்பாளியோ ஒரு அரசியல், கட்சி என்று போனால் தனித்துவத்தை இழந்து விடுவான் என்று சில படைப்பாளிகள் கூறுகிறார்களே? அது கட்சி என்று மட்டுமல்ல, கருத்து ரீதியாக நீங்கள் பகுத்தறிவு பற்றி படம் எடுத்தால் பெரியார் கட்சி என்பார்கள். ஏழைகளைப் பற்றி நகைச்சுவையாக எடுத்தாலும் கம்யூனிஸ்டு என்று சொல்லி விடுவார்கள். உதாரணமாக உங்களது படத்தை வைத்து உங்களை பெரியார் கட்சி  என்று சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

ராம்குமார்: கண்டிப்பாகப் பெருமைப்படுவேன். நான் சாமி கும்பிடுவதையோ குலசாமி கும்பிடுவதையோ தவறு என்று சொல்லவில்லை. மனப்பாரத்திற்காகக் கூட சிலர் சாமி கும்பிடுகின்றனர். ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளைத்தான் சாடுகிறேன். குலசாமியெல்லாம் பாரம்பரியமாக கும்பிடுவது. அதனை முழுக்கவும் முட்டாள்தனமென்று ஒதுக்கி விடவும் முடியாது.

இது தவிர படித்தவர்களே பந்தியில் சாப்பிட்ட எச்சில் இலைகளில் படுத்து உருண்டதாக செய்தித்தாளில் படித்தேன். மிகவும் கேவலமாக இருந்தது. இதன் உச்சபட்சமானது நரபலி. அதுவும் குழந்தைகளை நரபலி கொடுப்பதையெல்லாம் அனுமதிக்கவே முடியாது.

வினவு: இதே கிராமத்து மூடநம்பிக்கை குறித்து வந்த “வெங்காயம்” திரைப்படம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ராம்குமார்: வெங்காயம் போன்ற திரைப்படங்களும் இப்படி குறும்படமாக இருந்து பிறகு திரைப்படமானதுதான். திரைமொழி அதில் தரமாக இல்லா விட்டாலும், இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளில் அருமையாக எளிய மனிதர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர். அது ஒரு நல்ல படம்.

அதிலும் கழுத்தை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனுக்காக பணம் வேண்டி பாண்டிச்சேரியில் வழியில் செல்வோரிடம் கையேந்துவார் கூத்துக்காரரான அப்பா. அப்போது எதாவது வேலை செய்தால் பணம் தருகிறேன் என்று ஒருவர் சொல்லவே, யார் என்ன என்று கூட பாராமல் நடுத்தெருவிலேயே தனக்கு தெரிந்த கூத்தை நடித்துக் காட்டுவார் அந்த அப்பா. ஒருபுறம் மருத்துவமனையில் மகனை வைத்திருக்கும் நிலையில் துயரத்துடன் அவர் ஆடுவது நெகிழ்ச்சியாக இருந்தது, கண்ணீரை வரவழைக்க கூடிய அளவில் இருந்தது. காட்சிகளும் இரண்டாம் பாதியில் தரமாகவே இருந்தது.

தமிழ் சினிமா பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்குக்காகத்தான் வருகிறார்கள். அவர்களுக்கு டாகுமெண்டரி போட்டால் பார்க்க மாட்டார்கள். கட்டுரையாக கொடுத்தாலும் படிக்க மாட்டார்கள். அதையே அவர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக கொடுத்தால் கட்டாயம் பார்ப்பார்கள். நானே இப்படத்தை டாகுமெண்டரியாக எடுத்திருந்தால் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கொஞ்சம் காமெடி கலந்து கொடுத்தால் நிச்சயம் மக்கள் வரவேற்பார்கள்.

வினவு: காமெடி என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது. நீங்கள் கூட எளிய மக்களின் மூட நம்பிக்கைகளைத்தான் கிண்டல் செய்துள்ளீர்கள். சங்கராச்சாரி, கார்ப்ரேட் சாமியார்கள் பற்றி..

ராம்குமார்: வினவில் கூட இந்த விமர்சனம் வைத்திருக்கிறீர்கள். உங்களது கருத்து சரிதான். ஆனால் இந்தக் கதையில் அதனைக் கொண்டு வர முடியாது. காரணம் இது நடப்பது ஒரு சிறு கிராமத்தில். சாமியார்களைப் பொறுத்தவரையில் கிராமம், நகரம் என்று எடுத்துக் கொண்டாலும் ஏமாற்றுவது என்ற தன்மையில் அவர்கள் தங்களுக்குள் ஒன்றுபடுகிறார்கள். நீங்கள் சொல்வது போல நகரத்தில் ஏமாற்றும் பெரிய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி படம் எடுக்க களம் அமைந்தால் கட்டாயம் எடுக்கலாம்.

வினவு: அப்படி எடுப்பதற்கு முயன்றால் அனுமதிப்பார்களா?

ராம்குமார்: நாம் விமர்சன ரீதியாக படத்தை முன்வைக்க நினைத்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள். அந்த வகையில் ஒரு தடை இருக்கிறது. நிறைய இயக்குநர்கள் நிறைய சொல்ல நினைப்பது அதனால் முடியாமல் போய் விடுகிறது.

நான் கூட வெட்டியான் பாத்திரம் பேசுவது போன்ற விசயங்களில் பெரியாரை எல்லாம் வைத்திருந்தேன். ஆனால் கால அவகாசத்தைக் குறைக்க வேண்டியதாக இருந்ததால் அதனை நீக்க வேண்டியதாயிற்று.

வினவு: இந்தப் பகுதியை நீக்க வேண்டும் என நிர்ப்பந்தம் இருந்ததா?

ராம்குமார்: அப்படி இல்லை. இன்னும் சொல்லப் போனால் மூடநம்பிக்கை, சாதி பற்றி நான் குறிப்பிட்டவற்றையெல்லாம் பற்றி எந்த தடையுமில்லை. அந்த வகையில் முதல் பட வாய்ப்பில் எனக்கு இவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுத்திருப்பது பெரிய விசயம் தான். ஆனால் நீளமாக இருக்கிறது என்பதாக மட்டுமே குறைக்க வேண்டியிருந்தது. அதனால் அப்பகுதியை எடுக்க வேண்டியதாயிற்று.

வினவு: நீக்கப்பட்ட அந்தப் பகுதியை கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.

ராம்குமார்: பெரிதாக ஒன்றுமில்லை. வெட்டியானோட அப்பாவை ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவார்கள். பள்ளிக்கூடத்தை காமராசர் திறந்து வைத்தபோது அவர்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டார்கள். கள்ளச்சாராயம் குடித்து ரத்த வாந்தி எடுத்து இரண்டு பேர் பள்ளிக்கூடத்தில் இறந்து கிடப்பதை வைத்து ரத்தக்காட்டேரி அடித்துதான் அவர்கள் இறந்து விட்டதாக கிராமத்தினர் நம்புவார்கள். அப்போது ‘இல்லை இவர்கள் கள்ளச்சாரயம் குடித்துதான் இறந்தார்கள்’ என்று சொல்லியதால் அவனது அப்பாவை ஊரை விட்டே தள்ளி வைப்பார்கள். அப்போது அவர் பெரியாரை அந்த ஊருக்கு கூப்பிட்டு வந்து இதனை காட்டுவதாக கற்பனையில் ஒரு காட்சியை வைத்திருந்தேன். அவர் சொல்லியும் கிராம மக்கள் கேட்க மாட்டார்கள். நீள அதிகம் காரணமாக அதனை எடுக்கும்படி ஆகி விட்டது.

ராம்குமார்: ஒருவேளை நீங்கள் இதனை வைத்திருந்தால் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவர்கள் எதிர்த்திருப்பார்களா?

பெரியார்ராம்குமார்: இல்லை, அப்படி சொல்ல முடியாது. ஆனால் முகநூலில் நான் கிராமத்தை இழிவுபடுத்தி விட்டதாக ஒரு விமர்சனம் வந்துள்ளது. நான் கிராமத்தை இழிவுபடுத்தவில்லை. மூடநம்பிக்கை நிறைந்த ஒரு கிராமத்தைதான் காட்டியிருக்கிறேன். மூடநம்பிக்கை இல்லாத கிராமம் என்று எதார்த்தத்தில் ஏதுமில்லை. இரண்டாவது முண்டாசுபட்டி என்பதே ஒரு கற்பனை கிராமம்தான்.

ஆனால் தலையில் தேங்காய் உடைப்பதோ, கதவில் திரும்பிப் போ என்று எழுதியிருப்பதோ உண்மையில் இருப்பதுதான். “இன்று போய் நாளை வா” என்று ஒரு கிராமத்தில் எழுதி வைத்திருப்பதை ஒரு செய்தித்தாளில் படித்து விட்டுதான் இப்படி கொஞ்சம் மாற்றி “திரும்பிப் போ” என்று சொல்லியிருக்கிறேன். காட்டேரி அதனை படித்து விட்டு திரும்பிப் போய் விடும் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கை இன்றும் கூட இருக்கிறது. நோய்க்கு கூட காரணத்தை வேறு எதிலாவது தேடுவது இன்னமும் இருக்கிறது.

ஊரில் இல்லாத மூடநம்பிக்கை எதையும் நானாக கற்பனை செய்து கொண்டு எழுதவில்லை. இந்தக் கதைக்களத்திற்கு இதனை சொல்ல முடியும் என்பதால் பிறவற்றை சொல்ல முடியவில்லை. கிராம சூழலில் காட்டும்படியாகப் போயிற்று.

வினவு: முண்டாசுபட்டியில் படிப்பறிவற்ற மக்கள் மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள். நகரத்தில் படித்தவர்கள் நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ், சாய்பாபா வாயில் இருந்து சிவலிங்கத்தை எடுக்க வைப்பது போன்ற மூடநம்பிக்கைகளில் இருக்கிறார்களே?

ராம்குமார்: ஆமாம். மூடநம்பிக்கையை வெறுத்து கிண்டல் செய்பவர்களிடமும் வேறுவிதமான மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் சொல்வது போன்றவர்கள் இப்படியானவர்கள்தான். அவன் அளவில் மூடநம்பிக்கைகள் தனியாக ஒருபுறம் இருக்கும். மட்ட அளவில் கீழிறங்கும்போது மற்ற மக்களின் மூடநம்பிக்கைகளை இவர்கள் கிண்டல் செய்வார்கள். தலையில் தேங்காய் உடைப்பது போன்றவற்றை இப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

வினவு: அவர்களையும் கேள்வியோ கிண்டலோ கேட்பது போல வைத்திருந்தால் பார்த்திருப்பார்களா? உதாரணமாக தருமபுரி இளவரசன் கதையை எடுப்பதாக இருந்தால் ஆதிக்க சாதி பார்வையாளர்கள் ரசிப்பார்களா?

ராம்குமார்:  அதை காமடியாக எடுக்கக் கூடாது. ரசிக்கும்படி, பார்வையாளனை உணரும்படி செய்யும் அளவுக்கு சீரியசாக எடுக்க வேண்டும். எடுக்கவும் முடியும். மேம்போக்காக, எந்திரகதியில் படம் எடுத்தால் நிச்சயமாக பார்வையாளனை கதையில் ஒன்ற வைக்க முடியாது.

வினவு: அப்படி எடுத்தால் தயாரிப்பு தரப்பில் ஆதரவு இருக்கும் என்று சொல்ல முடியாதே?

ராம்குமார்: இல்லை. ஆதரவு இருக்கும். நேரடியாக சொல்ல முடியாதுதான் என்றாலும் இது சாத்தியம்தான். இப்போது “காதல்” (பாலாஜி சக்திவேல்) திரைப்படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நேரடியாக சாதியை குறிப்பிட்டே டயலாக்குடன் படம் எடுத்திருப்பார்கள். அதனை ஒரு நகைச்சுவையுடன் ஆரம்பித்து ஒரு இணை பாத்திரத்தோடு கதையை நகர்த்தி செல்வார் இயக்குநர். எனக்கு அந்தப் படத்தை பார்த்த பாதிப்பு ஒரு வாரம் வரை இருந்தது. நன்றாக ஓடவும் செய்தது. இளவரசன் கதையை பெயர் மாற்றம் செய்து, சாதியை நேரடியாக குறிப்பிடாமல் எடுத்தால் நிச்சயம் எடுக்க முடியும்.

வினவு: இந்திய சினிமாவில் காதல் பற்றிதான் பெரும்பாலான சினிமாக்கள் வருகின்றன. ஆனால் உண்மையான காதல் கத்தி, அருவாள், சாதி என்று தானே இருக்கிறது?

ராம்குமார்: காதலைப் பொறுத்தவரையில் இப்போது ஒரு மாற்றம் இருக்கிறது. எல்லோரும் நகரத்துக்கு வேலை பார்க்க வந்து ஆண் பெண் தங்களுக்குள் பழகுவதால் காதல் ஏற்படுவது சகஜமாகி உள்ளது. சம அந்தஸ்து உள்ள சாதியினர் தங்களுக்குள் காதலிக்கும் போது பிரச்சினையில்லாமல் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். சில சாதியினர்தான் அதனையும் தடுக்கின்றனர்.

வினவு: முன்னரும் அப்படித்தானே இருந்தது?

ராம்குமார்:  நான் சார்ந்த சாதியில் அப்படி பெரிதாக பார்ப்பதில்லை. ஆனால் சில சாதிகள் அதனை கறாராக இறுக்கமாக கடைபிடிக்கின்றனர்.

வினவு: கோவையில் கொங்கு வேளாள சாதியினர் அருந்ததியினரை எப்படியெல்லாம் நடத்துகின்றனர்? கோவை ஈசுவரன், பாமக போன்றவர்கள் டிவி விவாதங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தங்களுக்கு எதிராக மோசடியாக பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். ஆனால்  காங்கேயம் நகரத்திலேயே கூட்டம் நடத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகளுக்கு திருமண மண்டபங்களே தர மறுக்கிறார்கள். அருந்ததி சாதியினை சேர்ந்த பொறியாளர் ஒருவரை மின்வாரியத்தில் இருந்து மாற்ற அமைச்சர் வரை முயற்சியிருக்கிறார்கள்……

periyar-ambedkarராம்குமார்: இதெல்லாம் எனக்கே புதிய செய்திதான். ஆனால் நான் ஒரு சம்பவத்தை செய்தித்தாளில் படித்தேன். ஒரு நகர் மன்றத் தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக உறுப்பினர்களான மேல்சாதிக்காரர்கள் உட்கார்ந்திருக்க அவர் மட்டும் நின்று கொண்டேதான் மொத்த கூட்டத்தையும் நடத்த வேண்டுமாம். இது நான் எங்கள் பகுதியில் கேள்விப்பட்ட ஒன்றுதான். இதுபோல நிறைய நடந்துள்ளது. உண்மைதான்.

வினவு: இவையெல்லாம் வைத்து பார்வையாளர்களை கவரும்விதமாக படமெடுக்க முடியும் என்று கருதுகிறீர்களா ?

ராம்குமார்:   நிச்சயமாக முடியும். பார்வையாளனையும் ரசிக்க வைத்து, அவனும் நியாயமானவனாக இருக்கையில் கட்டாயம் படம் எடுக்க முடியும்.

வினவு: அப்படி எடுக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

ராம்குமார்: கண்டிப்பாக எடுப்பேன். பார்வையாளர்களை உணரும்விதமாக கன்வின்ஸ் பண்ணும் விதமாக ஸ்கிரிப்டை ரெடி பண்ணி முடித்து விட்டுதான் இதனைத் தொடங்க வேண்டும். அதில் தோற்றுவிட்டால் பிறகு அந்த சப்ஜக்டையே எடுக்க முடியாத அளவுக்கு எதிர்மறை உதாரணமாக நாம் போய் விடும் ஆபத்து உள்ளது. அதாவது சாதியை பற்றி படம் எடுத்தாலே இப்படித்தான் ஓடாது என்று பெயர் வந்து விடும். ஒரு விசயத்தை சொன்னாலும் கமர்சியல்ரீதியாக வெற்றி பெற்றால்தான் நல்ல படம் என்றே சொல்வார்கள்.

வினவு: ஆனால் வெற்றியடையும் படங்களில் இப்படி சமூகரீதியிலான கருத்துள்ள படங்கள் குறைவுதான். வெற்றிபெறுவதற்கென்றே இருக்கும் ஃபார்முலா, மசலா போன்றவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?

ராம்குமார்: அவர்களை கருத்து வைக்கும்படி நாம் சொல்ல முடியாது. அது அவர்களது உரிமை. ஆனால் சமூக கருத்துக்களை எனது அடுத்தடுத்த படங்களில் வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் கதை எப்படி எப்படி அமையப் போகிறதோ என்று எனக்குத் தெரியவில்லை.

வினவு: மற்ற இயக்குநர்கள் பலரும் எது வெற்றி பெறுகிறதோ அதனைத்தானே செய்கிறார்கள்?

ராம்குமார்: அதில் தப்பேயில்லை. நான் கூட கமர்சியலான படம்தான் பண்ணியிருக்கிறேன். அதில் சில மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். வழக்கமான காதல், அதற்காக கிராமத்துக்கு போவது, காதலுக்காக போராடுவது என்று கமர்சியலான கதைதான் என்னுடையதும். அதில் நான் சொல்ல வந்த விசயங்களை வைக்கும்போது ஆர்வமாக மக்கள் பார்க்கிறார்கள். ‘அட ஆமாப்பா இப்படியெல்லாம் இருக்கும்தானே’ என அவர்களுக்கு தோன்ற வேண்டும். ஒரேயடியாக ஆவணப்படம் பிரச்சாரம் மாதிரி ஆகி விடக் கூடாது. ‘அட என்னப்பா எப்போ பாரு புத்தி சொல்லிட்டே இருக்கான்னு’ அங்களுக்கு தோணிட கூடாது. ஆனாலும் கமர்சியலாக வெற்றி பெற்றால்தான் பிறகு படம் பண்ண முடியும்

வினவு: உங்களுக்கு பிடித்த தமிழ் திரைப்பட இயக்குநர் யார்?

ராம்குமார்: பாலாஜி சக்திவேல். அடுத்து சிம்புதேவன் சாரிடம் வேலை செய்யாவிட்டாலும் அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும். அவருடைய இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி ஒரு சாதாரண கதைதான் என்றாலும் அதிலும் அவர் ஒரு சமூக பொறுப்பான விசயத்தை வைத்திருப்பார். எல்லா படங்களிலுமே சிம்பு தேவன் சார் இதனை செய்திருக்கிறார். பெரும்பாலும் அது பார்ப்பவர்களை போய் சேர்ந்தது. அதே நேரத்தில் புலிகேசி மற்ற படங்களை விட நன்றாக படம் போனதால் மக்கள் விசயங்களை எடுத்துக்கொண்டார்கள். எனவே சமூக பொறுப்புணர்வோடு கூட மக்கள் ரசிக்கும்விதமாக படம் எடுத்தால் நிச்சயமாக நல்ல படங்களைத் தொடர்ந்து தர முடியும்

வினவு: உங்களுக்கு ஏன் பாலாஜி சக்திவேலை பிடிக்கும்?

ராம்குமார்: எளிமையாகவும் வலிமையாகவும் கதைகளை சொல்லியிருப்பார் அவர். எளிய மனிதர்களைப் பற்றி படம் எடுத்திருப்பார். காதல் ஒரு நல்ல படம், கல்லூரி, வழக்கு எண் என எல்லாமுமே நல்ல படங்கள். முதல் படம் சாமுராய் மட்டும் எனக்கு பிடிக்காது. பிந்திய மூன்று படங்களிலுமே எளிய மனிதர்களை பற்றி மிகவும் வலிமையாக கதை சொல்வார். எதார்த்தத்தை கூடுமானவரையில் பிரதிபலிப்பதாக அவரது படங்கள் இருக்கும். வழக்கு எண் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எளியவர்கள் எப்படி வலியவர்களால் அடக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். முடிந்தளவுக்கு ரசிக்கும்படியாகவும் எடுத்திருக்கிறார்.

வினவு: மத்தியில் மோடி அரசு வந்துள்ளது. இந்தி திணிப்பு, சிபிஎஸ்சி பள்ளியில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது……… இந்தி திணிப்பால் தமிழ் சினிமாவில் இருப்பவர் என்ற முறையில் உங்களது கருத்து என்ன?

ராம்குமார்: இந்தியில் விளம்பரங்கள் போன்றவற்றையெல்லாம் தமிழ் செய்தித் தாள்களில் பார்த்தேன். முற்றிலும் இது தவறுதான். ஆனாலும் நான் திரைப்பட வேலைகளில் மூழ்கியிருந்ததால் நீங்கள் கூறிய செய்திகளை தெரிந்து கொள்ளவில்லை. ஆனாலும் நான் பார்த்த வரையில் தமிழ் பத்திரிகையில் இந்தி விளம்பரம் என்பதெல்லாம் திணிப்பது போன்ற விசயம்தான். முகநூலில் இந்தி என உத்திரவு போட்டது எல்லாம் வேண்டுமென்றே திணிப்பது போல்தான் இருந்தது.

இதனை முதல் நடவடிக்கையாக வைத்துக்கொண்டு நம்மை ஆழம் பார்க்கிறார்கள். இதற்காக ஒரு போராட்டம் வர வேண்டும். நமது அரசியல் தலைவர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இப்போதுதான் இதனைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். ஒரு சமூக இயக்குநர் என்ற முறையில் முழுமையாக இதில் எல்லாம் இறங்கி பார்க்க வேண்டும் என்பதை அவசியம் ஒத்துக்கொள்கிறேன்.

வினவு: ‘முண்டாசுபட்டி போன்ற படங்கள் எல்லாம் ஒரு துணுக்கு போல. அதில் ஒரு வாழ்க்கை இருக்காது’ என்று ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. சூது கவ்வும், பீட்சா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் எல்லாம் எதாவது மக்கள் ரசிக்கும் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு கார்ட்டூன் போல செய்கின்றனர். அதில் ரசனையான சினிமா மொழியோ, வாழ்க்கையோ இருக்காது, எல்லோருக்கும் உரிய கதையாகவும் இருக்காது அது என்கிறார்கள்.

ராம்குமார்: வழக்கமாக எடுப்பதைத்தான் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறோம். அதைத்தான் அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற விமர்சனங்கள் முன்னரும் வந்துள்ளன. குறும்பட இயக்குநர்கள் எளிதாக வாய்ப்பு பெற்ற காரணத்தால் கூட மற்றவர்கள் இந்தக் கருத்தை சொல்லியிருக்கக் கூடும். இம்முயற்சிகள் ஒரு மேம்பட்ட வடிவத்தில் தான் திரைமொழியை கொண்டு போயிருக்கிறது. வழக்கமான கதாநாயகன், க்ளைமாக்ஸ், கதை சொல்லும் பாணி போன்வற்றை உடைத்துதான் வேறுவிதமாக அவரவர்களுக்கான பாணியில் இவை சொல்லப்பட்டுள்ளன. இந்த படங்களின் உள்ளடக்கத்தோடு உடன்படவில்லை என்றாலும், இந்த புதிய கதை சொல்லும் பாணி தவறு கிடையாது. இதற்காக குற்ற உணர்வை அடைய தேவையில்லை. இது ஒரு வடிவம் மட்டும்தான். முண்டாசுபட்டி வழக்கமான சினிமா கதைதான். களம் மட்டும்தான் வேறு. ஒரு வித்தியாசமான கிராமம் அவ்வளவுதான்.

வினவு: வடிவமா உள்ளடக்கமா என்ற கேள்வியில் இலக்கியம் தொடங்கி சினிமா வரை வடிவம்தான் முக்கியம் என்கிறார்கள் உலக சினிமா, இலக்கியம் எல்லாம் பார்த்து படித்த இலக்கியவாதிகள் பலர். ஆனால் வெங்காயம் போன்ற திரைப்படங்கள் மேக்கிங் என்ற முறையில் தரமில்லை என்றாலும் கருத்து என்றளவில் தரமாகவும் பார்க்கும் படியாகத்தானே இருக்கிறது. பெரியார் கூட எளிய மொழியில் அலங்காரமில்லாமல்தானே பாமரர்களையும் கவர்ந்தார். உங்கள் கருத்தென்ன?

ராம்குமார்: முண்டாசுபட்டியில் மூடநம்பிக்கையை பற்றி சொன்னாலும் தமிழ் பார்வையாளன் ஏற்றுக்கொள்கிறான். வெங்காயம் படத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இதையே பிரச்சாரம் செய்த பெரியாரையும் ஏற்றுக்கொள்கிறான். சொல்கிற விதம்தான் முக்கியம். பார்வையாளர்களுக்கு பிடிக்கும்படியாகவும், ரசிக்கும்படியாகவும், உணரும்படியாகவும் சொன்னால் கட்டாயம் ரசிக்கிறார்கள். இயக்குநர் என்ன நினைத்தாரோ அதனையே ரசிகனும் உணரும்படியாக எடுத்துவிட்டால் அதுவே போதுமானது. அது நகைச்சுவைப் படமோ, காதல் படமோ, சோகப்படமோ, மூடநம்பிக்கை எதிர்ப்பு படமோ எதுவானாலும் இதுதான் முக்கியமானது.

எப்போது தியேட்டருக்குள் உட்கார்ந்த பிறகு பார்வையாளன் படத்தை உணர ஆரம்பித்து விட்டானோ அப்போதே அவனுக்கு படம் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. திரைமொழியை தரமாக வைப்பதை விட ரசிகனை உணர வைப்பதுதான் கமர்சியல் படமோ அல்லது உலக படமோ அதற்கு முக்கியம்.

பாலாஜி சக்திவேல் சார் படத்தில் கூட கதைமொழி வேறு மாதிரித்தான் செய்திருந்தார். ஆனால் காட்சிக்கு காட்சி வலி அதிகரிப்பதை பார்வையாளன் தனக்குள் உணர்ந்தான். அதுதான் முக்கியம். அதை விட்டு விட்டு நீங்கள் என்னதான் சொன்னாலும் பார்வையாளன் உணரும்படி சொல்லாவிடில் அது வெறும் டம்மியாகத்தான் போகும்.

வினவு: கமர்சியல் இயக்குநர்களும் இதைத்தானே மறு தரப்பில் நின்று சொல்கிறார்கள். பொதுவாக மக்கள் எளிய பிரச்சினையில்லாத சப்தம் மட்டும் நிறைந்த சந்தானம் காமெடியைத்தான் ரசிக்கிறார்கள். உங்கள் படத்தில் கூட காட்டப்பட்டுள்ள கள்ள உறவு பற்றிய காமெடியை விமர்சனம் செய்திருந்தோம்…..

ராம்குமார்: எழுதும்போது கொஞ்சம் காமடியாக வர வேண்டும் என்பதற்காக எழுதியது அது. படத்தில் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் வராமல் பார்த்துக் கொள்வேன். விமர்சனம் வந்தபோது அதனை நான் நன்றாகவே உணர்ந்தேன்.

வினவு: மற்றவர்கள் இதனை ஒரு ஒழுக்கவாதமாக மட்டும் விமர்சனம் செய்துள்ளார்கள். கள்ள உறவு ஏன் தோன்றுகிறது, கணவன் மனைவி இடையே சமத்துவம் ஜனநாயகம் இல்லாததும் விவாகரத்து செய்வதும் இங்கே உரிமையாக இல்லை. அப்படி இல்லையா?

ராம்குமார்: நீங்கள் சொல்வது போன்ற சமூக பின்னணியோடு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் என்னுடைய கதையில் கொஞ்சம் அதிகப்படியாக போய் விட்டேன். இனிமேல் இப்படியான காட்சிகள் வைப்பதை தவிர்க்கப் பார்க்கிறேன்.

வினவு: அதிலும் அந்தப் பெண் பலருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள். மொத்தத் திரைப்படத்திலும் இப்படி ஒரு காட்சி மாத்திரம் குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறதே!

ராம்குமார்: பிற படங்களில் பெண்களை மோசமாகத்தான் பெரும்பாலும் காட்டியிருக்கிறார்கள். நானும் கதைக்காக அப்படி ஒரு பாத்திரத்தை வைத்து விட்டேன். தவறுதான். இனிமேல் இப்படி வராமல் இருக்க முயற்சிப்பேன் என்பதை விட அறவே தவிர்த்து விடுவேன் என்றுதான் உறுதி கூறுகிறேன்.

வினவு: படத்தில் நாயகன், நாயகியை விடவும் துணை கதாபாத்திரங்களில் உள்ளவர்கள் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக நடிக்க வைத்திருந்தீர்கள். ஒரு இளைஞர் என்ற வகையிலும் இவ்வளவு சீனியர்களை எப்படி உங்களது எதிர்பார்ப்பிற்கேற்ப இயக்க முடிந்தது?

ராம்குமார்: இந்த கதைக்கு நாயகன், நாயகி, ஆனந்தராஜ் தவிர அனைவரும் புதுமுகங்களாய் இருப்பதுதான் தேவைப்பட்டது. இல்லையென்றால் மக்களுக்கு பாத்திரங்கள் பதியாமல் போய்விடும். அதனால் ஆடிஷன் எடுக்கும் போதே அனைவரையும் தெரிவு செய்து படப்பிடிப்பிற்கு முன் பயிற்சி கொடுக்க முடிந்தது. அதில் ஒரு சிலர் அதிகம் வசனம் பேசாமல் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். முண்டாசுப்பட்டியில்தான் குறிப்பிடும்படியான வேடத்தில் நடித்திருந்தார்கள். நான் சொன்ன கதையை ஏற்றுக் கொண்டு அவர்களும் சிறப்பாக ஒத்துழைத்ததால் இது சாத்தியமானது.

வினவு: நாங்கள் எழுதிய முண்டாசுப்பட்டி விமரிசினம் படித்திருக்கிறீர்களா?

ராம்குமார்: முழுவதும் படிக்கவில்லை. செல்பேசியில் படிக்க வேண்டியிருந்த காரணத்தால் பாதி வரைதான் அதில் தமிழ் தெரியவே அது வரைதான் படிக்க முடிந்தது. அதாவது எளிய மனிதர்களது மூடநம்பிக்கையை விமர்சிப்பது பற்றியது வரைக்கும்தான் படிக்க முடிந்தது. அதன் பிறகுதான் விமர்சனம் வலுவாக ஆரம்பிப்பதாக நினைத்தேன். ஆனால் எழுத்துக்கள் தெரியாத காரணத்தால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.

(பிறகு என்ன விமரிசனம் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்.)

வினவு: ஆண்மை குறைவு என்று எடுத்துக் கொண்டால் அது நம் ஊரில்  கவுண்டமணி காலத்தில் இருந்தே காமெடியாக இருக்கிறது. இங்கு பாலியல் என்பதே இந்துமத பார்ப்பனிய மரபில் வெளிப்படையாக பேசுவதை தடுக்கிறது. இப்படி பேசக் கூடாத ஒன்றாக இருப்பதால்தான் ஒரு காமெடியாக எடுக்கப்பட்டு மக்களால் சிரிக்கவும் படுகிறதா? தமிழகத்தின் பல கிராமப்புறங்களில் இதனால் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உண்டு. என்ன சொல்கிறீர்கள்?

ராம்குமார்: என் படத்தில் கூட அவருக்கு நான்கு மனைவிகள் கட்டியிருப்பதாகத்தான் காட்டியிருந்தேன். இது ஒரு பெரிய பிரச்சினைதான்.

வினவு: வெறும் நகைச்சுவை என்பது வெறும் சிறு மாறுபாடுகளை மட்டுமே காமெடியாக கொண்டுள்ளன. சமூக நகைச்சுவைக்கான களனைத்தான் நீங்கள் எடுத்துள்ளீர்கள். தமிழில் பெரும்பாலும் காமெடிதான் உள்ளது. சமூக நகைச்சுவைக்கு சாப்ளினை உதாரணமாகக் காட்ட முடியும். படம் பார்க்கும்போது காமெடியாக தெரிந்தாலும் வெளியே வரும்போது சமூகம் குறித்த அழுத்தமான அனுபவத்தை அது நமக்குள் தோற்றுவிக்கிறது. அத்தகைய மவுனப்படங்கள் இப்போது சாத்தியமா, தேவையா?

ராம்குமார்: ஒரு கார்ட்டூனிஸ்டாக நான் சொல்வது இதுதான். கார்ட்டூன் தனியாக இருக்கும். கேப்சன் தனியாக இருக்கும். இரண்டில் எதனை மறைத்து விட்டாலும் இன்னொன்று மாத்திரம் தனித்து இருந்தால் பொருள் தராது. வெறும் மன்மோகன் சிங்கை வரைந்து விட்டு அப்படியே விட்டுவிடுவது சரியில்லை. எதாவது கீழே எழுத வேண்டும். அது போலத்தான் பேச்சும், காட்சியும் அவசியம் என்றுதான் கருதுகிறேன். பேச்சு காட்சியை மேலும் வலுப்படுத்த உதவும்.

சதுரங்க வேட்டை கூட முக்கியமான படம். அவசியம் நீங்கள் விமர்சனம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன். ஈமு கோழி, மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவன் எப்படி ஊரையெல்லாம் ஏமாற்றி கடைசியில் அவனே தவறை உணர்ந்து எப்படி திருந்துகிறான் என்பது பற்றிய படம் அது. இதில் சினிமாத்தனமும் இருக்கும். இருந்தாலும் நீங்கள் பார்த்து எழுத வேண்டிய முக்கியமான படம் இது.

வினவு: அவசியம் பார்க்கிறோம். புதிய இயக்குநர்களின் பலம் என்ன?

ராம்குமார்: நல்ல திரைக்கதைதான் பலம். இதுதான் அறிமுக இயக்குநர்களுக்கு அவசியம். யாருடைய சிபாரிசும் தேவையில்லை. குறைந்த முதலீட்டில் நல்ல திரைக்கதை இருந்தால் திரைப்படம் பண்ண நிறைய சிறு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். நானும் இன்னமும் நிறைய சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பாலாஜி சக்திவேல் சார் போன்றவர்கள் களத்தில் இறங்கி போய் தெரிந்து கொள்வார். அந்த பாத்திரமாகவே வாழ்ந்து விடுவாராம். எளிமையாக, எளிய மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள யாரிடமும் கேட்காமல் அவரே நேரடியாக களமிறங்கி மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வாராம். அதனால்தான் அவரது திரைப்படங்களில் பாத்திரங்கள் அதாகவே வாழ்ந்து காட்டுகின்றனர். மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதனால்தான் நீங்கள் கேட்டவுடன் டக்கென அவரைப் பிடிக்கும் என்று சொன்னேன். மற்றபடி நேரில் அவர் எனக்கு அறிமுகம் எல்லாம் இல்லை. கல்லூரி படம் கூட சரியாக போகாவிட்டாலும் அதே போல எளிய வலுவான கதை சொல்லும் பாணியை அவர் கைவிடவில்லை. இதனைத்தான் அவரிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். அவரிடமிருந்து கற்றுக்கொண்டுமிருக்கிறேன்.
__________________________________________________
நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !

3

னியார் கல்வி – ஆங்கிலம் – தரம் என்பதோடு ஒன்றோடொன்று பிய்க்க முடியாத வஜ்ஜிரமாய் தனியார்மயத்தால் பட்டிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள் மக்கள். உலகமே “பூச்சி மருந்து”ன்னு சொன்னாலும் வெறப்பா நின்னு, ‘கோக், பெப்சி குடிக்கறதுதான் ஸ்டேட்டஸ், நம்பர் ஒன்!’ என்று ஸ்டெடியாய் நிற்பவர்கள்தான் பலர். சமூக அவலங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

எல்லாம் தெரிஞ்சவங்க
“எங்களுக்கேவா! நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்!”

இந்தியாவின் வல்லரசுக் கனவில் துண்டு போடும் வர்க்கத்திடம், போகும் பாதையை குறித்து நாம் எச்சரித்தால், “எங்களுக்கேவா! நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்!” என்று பிரமிப்பூட்டுகிறது.

“உலகம் கருவிகளால் உணரப்படக்கூடியது அல்ல, கருத்துக்களால் ஆராயப்பட வேண்டியது” என்று வாயெடுத்தால் “வந்துட்டாருப்பா! வள்ளுவரு!” என்று நக்கலடிக்கும் இந்த மாடர்ன் மண் குதிரைகளை அதே ரூட்டில் காலி செய்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள்.

சரவெடி ஆங்கிலம், ‘இண்டர்நெட்’, ‘ஹேன்ட்சம் லுக்’, நடை, உடை, பாவனைகளில் சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் “கேம்பஸ் இன்டர்வியூ” என்ற பெயரில் பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளார்கள் டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சவுமியா, புதுச்சேரியைச் சேர்ந்த பீனா இருவரும்.

வெறும் பாவனைகளிலேயே காலந்தள்ளும் தனியார் கல்வியின் தரத்தை தனியார்மயத்தின் அசல் பதிப்பு, பாவனைகளாலேயே வென்றுவிட்டது!

நடந்தது இதுதான்.

சவுமியா, சபானா இருவரும் சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்து, “நாங்கள் டெல்லியை தலைமையகமாகக் கொண்ட பிரபல சாப்ட்வேர் நிறுவனம், எங்களுடைய பெங்களூர், ஐதராபாத், சென்னை கிளைகளில் உங்களுக்கு உடனடி சொர்க்கம்” என்று சொல்லி மாணவர்களிடம் ரொக்கம் ரூ 1,500 -ஐ கறந்துள்ளனர். கடைசியாக, ஒரு கல்லூரியில் சந்தேகம் வந்து சில மாணவர்கள் புகார் செய்ய இப்போது பிடிபட்டுள்ளனர்.

“எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை” என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் இருவரும்.

கட்டடம் கட்டிய திருடனின் கல்லாவுக்கு பாதகமில்லை, கட்டம் கட்டிய திருடர்கள்தான் மாட்டிக் கொண்டார்கள்! பாதிக்கப்பட்டதோ வழக்கம்போல மாணவர்கள்.

சவுமியா, சபானா
‘கவர்மென்ட் காலேஜ்லாம் வேஸ்ட் சார்! புவர் மேனேஜ்மென்ட், நோ குவாலிட்டி’ என்று இலக்கணம் பேசும் நடுத்தர வர்க்கத்திற்கு பாக்கெட் பணத்தை காப்பாற்றக் கூட உதவவில்லை இந்த தரமான தனியார்மயக் கல்வி. (படம் : நன்றி தினகரன்)

இதில் பணத்தை பறிகொடுத்த மாணவர்களின் அறியாமை ஒருபக்கம் இருக்கட்டும். ‘நாங்கல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட், டிசிப்ளின், கேரன்ட்டி, சேஃப்’ என்று பிட்டு போடும் தனியார் கல்லூரிகளின் யோக்யதை இவ்வளவுதான் என்பது தெரிய வந்துள்ளது.

வெளியிலிருந்து கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டு எவன் வந்தாலும், யார்? உண்மையா? போலியா? என்ற எந்த விசாரணையும் இன்றி, ‘எங்க காலேஜில் படிச்சா உடனே நேரா சொர்க்கம்தான்’ என்று வழிப்பறி செய்யும் இந்த மேனேஜ்மென்ட்தான் ‘தரமான’ தனியாராம்!

‘கவர்மென்ட் காலேஜ்லாம் வேஸ்ட் சார்! புவர் மேனேஜ்மென்ட், நோ குவாலிட்டி’ என்று இலக்கணம் பேசும் நடுத்தர வர்க்கத்திற்கு பாக்கெட் பணத்தை காப்பாற்றக் கூட உதவவில்லை இந்த தரமான தனியார்மயக் கல்வி.

தனியார் கல்லூரி முதலாளியிடம் கட்டு கட்டாக ஏமாந்துவிட்டு “மச்சான்! என்னமா ஏமாத்திட்டாடா!” என்று மெட்டு போட்டு ராகம் வேற!

ஏதுடா, எங்கேந்தோ வந்து ‘நாளைலேந்து உங்க வாழ்க்கையே டாப்புல’ங்குறானே இதுக்கு அடிப்படை இருக்கா? என்று நடைமுறையிலேந்து ஆராய்ந்து பார்க்காத இந்த மறுகாலனிய மசக்கைதான், எங்கேந்தோ வந்து ஒரு வெளிநாட்டு கம்பெனி, ‘நாளைலேந்து நாட்டை வல்லரசாக்கப்போறேன், வளர்ச்சியாக்கப்போறேன்’, என்று மோடி சைசுக்கு மூட்டையை அவிழ்த்து விட்டாலும் சுத்த மாங்கா மடையனாக்கும் ஆரம்பம்.

வெறும் சாஃப்ட்வேரையும், இ.மெயிலையும் காட்டியே ஏமாற்றும் அளவுக்கு ஒரு உள்ளீடற்ற மாங்கா மடையனை உருவாக்குவதுதான் தனியார் கல்லூரிகளின் தரம். கோபம் வந்தா கொடுத்த காசுக்கு, ஏவிவிட்ட கல்லூரி முதலாளிகளிடம் காட்டுங்கள் பார்க்கலாம்.

பெங்களூரு ஆர்ப்பாட்டம்
பெங்களூரு தனியார் பள்ளியில் சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதை எதிர்த்து போராடும் பெற்றோர்

தனியார் மயத்தின் பரிதாபம், கேலிக்கூத்து ஒருபக்கம் எனில், பெங்களூர் தனியார்பள்ளியில் நடந்திருக்கும் இன்னொரு சம்பவமோ சோகத்தையும், கேட்பவனுக்கு ஆத்திரத்தையும் வரவழைக்கக் கூடியது.

பெங்களூர், மாரத்தஹள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமியை அதே பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரும், செக்யூரிட்டிகாரரும் சேர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்… இந்தத் தகவல் கூட பெற்றோர்களுக்கு தானாகவே தெரியவந்துள்ளது. தகவல் தெரிந்தும் பள்ளி நிர்வாகம் குற்றவாளிகளை போலீசில் ஒப்படைக்காமல் ‘பள்ளியின் நற்பெயருக்கு’ களங்கம் வராமல் பாதுகாத்துள்ளது. இந்த தனியார் பள்ளியின் தரத்தை நம்பி ரூ 1.95 லட்சம் நன்கொடையாகத் தந்து, தன் மகளை இதில் சேர்த்திருக்கிறார்கள் பெற்றோர்கள். தமிழகத்திலும் நற்பெயர் கட்டணக் கொள்ளைக்கு பஞ்சமில்லை!

‘அரசாங்கப் பள்ளிக்கூடம்னா கண்ட கண்ட பசங்களும் வருது, கெட்ட பழக்கம் வரும், டிசிப்ளின், டீசென்ட் இருக்காது’ என்று நடுத்தரவர்க்கம் தனியார் பள்ளிகளை தரமானதாக கருதி பிள்ளைகளை இப்படி பாழும் கிணற்றில் தள்ளுகிறது.

கண்ட கண்ட காலிகளும், ரவுடிகளும், திருடர்களும் பள்ளி முதலாளிகளாக இருக்கும்போது, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத நடுத்தரவர்க்கம், கடைசியில் பட்டு அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது!

“அரசாங்கப் பள்ளியில் அனைவருமே ஒழுக்கமானவர்களா?” என்று கேட்கலாம். சமுதாயத்தையே தனியார்மயம் வன்புணர்ச்சி செய்வதன் நீட்சி அங்கும் உண்டுதான்! அங்காவது கேட்டைத் தாண்டிப் போய் கேட்க நாதியுண்டு, தனியார் பள்ளி முதலைகளோ மொத்த குற்றத்தையும் மூடி மறைத்து விடுகிறார்கள், செய்திகளில் கசிவது கொஞ்சம்தான்.

சென்னை ஜேப்பியார் கல்லூரி மாணவி, வேல்டெக் மாணவி, திருவொற்றியூர் தனியார்பள்ளி மாணவி இப்படி தமிழகமெங்கும் தனியார் கல்விக் கூடங்களில், நாமக்கல் உண்டு உறைவிட பள்ளிகளில் பல வடிவங்களில் மாணவர்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

உங்கள் பணத்துக்கு அல்ல உயிருக்கே கேரண்டி கிடையாது என்பதுதான் அன்றாடம் தனியார்மயம் உணர்த்திடும் உண்மைகள்! அனுபவத்தில் புரிந்துகொண்ட கர்நாடக மக்கள் தனியார்பள்ளியை தம் கையால் சூறையாடி இருக்கிறார்கள்.

‘வேட்டி’ பிரச்சனைக்கு நாள் கணக்கில் கிழியும் தமிழகமே, சீருடையணிந்து பள்ளிக்குப் போகும் நம் பிள்ளைகளை சீரழிக்கும் தனியார்மயத்திற்கு எதிராக உன் மானம் துளிர்ப்பது எப்போது?

– துரை.சண்முகம்

கோழிக் கழிவும் கட்டுப்படியாகாத சாம்பாரும் !

7

ட்டிறைச்சி தொழிலை உதாரணமாகக் கொண்டு அரசமைப்பும் பார்ப்பனியமும் எப்படி மக்களை அலைக்கழிக்கின்றன என்பது வினவின் பதிவொன்றில் விளக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற சூழலில் ஏழைகள் அசைவத்தையும் சைவத்தையும் எவ்விதம் அணுகுகிறார்கள் என்பதற்கு மேலும் சில அனுபவங்களை பரிசீலிப்பது, உணவு பழக்கத்தையும் தீர்மானிக்கின்ற வர்க்கப் பிரச்சனையை நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கோழிக் கழிவு
கோழி இரைப்பை, இருதயம், ஈரல்

ஆடு, கோழி என்று வரும் பொழுதே அதை வாங்கி உண்ண வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பாக இருப்பது சில்லறை என்று மேல்தட்டு வர்க்கத்தால் ஒதுக்கித் தள்ளப்படுகிற கழிவுகளே.

பொதுவாக மதுரை போன்ற நகரங்களில் கோழிக் கடையில் இரண்டு வரிசைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கும். ஒன்று கிலோ கணக்கில் கறிவாங்குபவர்கள். மற்றொரு தரப்பு சில்லறை வாங்க வருபவர்கள். இந்த சில்லறை என்ற வகையில் கோழியின் தோல் (கொழுப்பு என்று பலரும் வாங்குவதில்லை), கழுத்து (இதை உண்பது கவுரவ குறைச்சல் என்று சில சாதிகள் கருதுவதும் வழக்கம்), மண்ணீரல் வரும். மேற்கொண்டு, கோழித்தலை மற்றும் கால்கள் ஓசியாகவோ அல்லது பத்து இருபது ரூபாய்க்கோ வாங்குவார்கள். இதிலேயும் பணக்காரர்கள் இடைஞ்சலாக வருவார்கள். தங்களது நாய்க்குப் போட வேண்டுமென்று சிலபேர் முன்கூட்டியே சொல்லிவைப்பதும் உண்டு.

ஓட்டாண்டியாக இருக்கிற சில நடுத்தர வர்க்கமும் இதை நாய்க்கு வாங்குகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களுக்கு வாங்கிச் செல்வார்கள். கறி என்று இல்லாமல் ரேசன் அரிசிக்கும் இதே கூத்துதான். இரையாக கோழிக்கு போடுகிறேன் என்று கூறிவிட்டு இட்லி, தோசைக்குப் போட்டு தமது கவுரவத்தை காப்பாற்ற முயல்வார்கள். தாம் சுரண்டப்படுகிறோம் என்பதை வெளிக்காட்டாது போராட்டத்திலும் கலந்து கொள்ளாது ஏழைகளை ஏளனமாக பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மனோபாவத்திற்கு இது ஒரு சான்று. இன்னும் சிலர் வெறும் கோழிச் சில்லறை வாங்கினால் தம்மை குறைவாக மதிப்பிடுவர் என்று ஒப்புக்கு 200 கிராம் அல்லது கால்கிலோ என்று வாங்குவார்கள்.

கோழி பாதங்கள், தலை
சாதாரண முனியாண்டி விலாஸ் வகைகளிலான அசைவ ஓட்டல்களில் கூட சிக்கன் குழம்பில் கோழியின் கால்கள், தோல்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழகம் முழுவதிலுமுள்ள சாதாரண முனியாண்டி விலாஸ் வகைகளிலான அசைவ ஓட்டல்களில் கூட சிக்கன் குழம்பில் கோழியின் கால்கள், தோல்கள் இடம்பெற்றிருக்கும். வேலைக்கு போகும் தொழிலாளிகள் இதையே கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். இதற்கென்று தனி விலை கிடையாது. இன்னும் கோழி, ஆடுகளின் எலும்புகளை மட்டும் கடித்து சுவைக்கும் பழக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கின்றது. வெளிநாடுகளிலோ எலும்புக்கு அருகில் உள்ள சதைப்பகுதிவரை தின்று விட்டு தூக்கி எறிவார்கள். அவர்களுக்கு கழிவான எலும்பு இங்கே உழைக்கும் மக்களின் சுவையான பதார்த்தமாக கருதப்படுகிறது.

கைநிறைய சம்பாத்தியம் என்று சொல்கிற பொழுது கைநிறைய என்கிற வார்த்தை இன்னும் ஒரு ஆண்டையினிடத்திலே கையேந்தி நிற்கிற ஒரு உழைப்பாளியின் அவலத்தையே நினைவுறுத்துகிற பொழுது கால்கிலோ கறியும் ஒரு கிலோ சில்லறையும் வாங்குகிற ஓட்டாண்டியாக்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்திற்கும் வாழ்நிலைக்கும் எது காரணம்?

இதில் பார்ப்பனியம் மற்றொரு வகையில் புகுந்து விளையாடும். எப்படி என்றால் ‘தகப்பன் இருப்பவன் கோழித் தலையை திங்கக் கூடாது!’ என்று ஒரு வழக்கம். ஆனால் வயிறு என்று வருகிறபொழுது பெயருக்கு ஆதிக்கசாதி என்று வெளியில் காட்டிக்கொண்டு மறுபுறம் கதவைச் சாத்திக்கொண்டு தின்பது நடுத்தெருவிற்கு வந்த ஆதிக்கசாதிகளிடையே காணப்படுகிற வழமையான வழக்கம்.

பார்ப்பனியத்தின் மற்றொரு பரிமாணத்தையும் கவனிப்போம். பொதுவாக இந்துக்கள் வெள்ளி, செவ்வாய்களில் அசைவம் உண்ணமாட்டார்கள். ஒரு நடுத்தர வர்க்கத்திற்கு இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு சாம்பார் வைப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு மளிகைகடைகளுக்கு போகும் அவசியமில்லாத பலபேருக்கு துவரம்பருப்பின் விலை பாசிப்பருப்பின் விலையைக் காட்டிலும் மிக அதிகம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக சாம்பார் என்று வந்தால் ஏழைகளுக்கு பாசிப்பருப்புதான் கதி. இதுவும் ரேசன் அரிசியின் ஊறல் வீச்சத்திற்கு துப்புரவாக ஒத்து வராது. ரசம், புளிமண்டி என்று போக வேண்டும்.

கோழிக் கழிவு
பல மக்கள் வெள்ளி மற்றும் விரதநாட்கள், சபரி சீசன் நாட்களில் அசைவ விலை குறைவாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குவார்கள்

அது தவிர, பீன்ஸ், காலிபிளவர், கேரட், நூக்கல் போன்றவை இங்கிலிபீசு காய்களின் விலை எப்பொழுதும் அதிகம். அவற்றை வாங்கி குழம்பு வைப்பது கட்டுப்படியாகாது. மிஞ்சிப்போனால் கத்தரிக்காய் அல்லது கொத்தவரங்காய் அல்லது உருளைக்கிழங்கு மட்டுமே கையைக் கடிக்காமல் இருக்கிற காய்கள். ஆக வெள்ளி, செவ்வாய்களில் மட்டுமல்ல குழம்பு என்று வருகிற பொழுது உழைப்பாளிகளின் சாய்சில் சாம்பார் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் அதே சமயம், கதம்பம், கம்ப்யூட்டர் சாம்பிராணி வாங்குகிற காசுக்கு உடைந்த முட்டை நான்கு வாங்க முடியும். வாழ வேண்டும் என்கிற பொழுது நகர்ப்புற ஏழைவர்க்கம் வெள்ளி செவ்வாய்களில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மத நம்பிக்கைகளை கழற்றி வைத்தால்தான் ஓரளவு குடும்பத்தை ஓட்ட முடிகிறது.

இன்னும் பல மக்கள் வெள்ளி மற்றும் விரதநாட்கள், சபரி சீசன் நாட்களில் அசைவ விலை குறைவாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை மதநம்பிக்கைதான் விலை குறைப்பிற்கு உத்திரவாதம் தரும் ஒன்று.

ரமண மகரிசி சுட்ட அப்பளம் தின்று தியானத்தில் முக்தி அடைந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பது கிலோ சிமெண்டு மூட்டை தூக்குகிற சித்தாளுக்கு சுட்ட அப்பளத்தால் என்ன பலன் உண்டு? ஒருவருக்கு கலாச்சாரமாக கடப்பாடாக இருக்கிற உணவு, உழைக்கும் மக்களின் பலபிரிவினரை பிரதிபலிப்பதேயில்லை என்கிற பொழுது மதங்கள் யாருக்காக இருக்கின்றன? இதில் பல நேரங்களில் நடுத்தரவர்க்கம் தன்னை பக்தனாக காட்டிக்கொள்ள முடியாமல் பகல்வேசம் போடுகிறது என்பதுதான் நிதர்சனம்!

ஆட்டு நாக்கு
வறுத்த ஆட்டு நாக்கு

சரவணபவனில் ஐம்பது ரூபாய் கொடுத்து தோசை தின்னும் வர்க்கங்கள் நெல்பேட்டையில் சூத்தை கத்தரிக்காய்களை பொறுக்குகிற, உடைந்த தக்காளியை சல்லிசாக வாங்குகிற, முற்றிய வெண்டைக்காயில் வற்றல் போடுகிற ஓட்டாண்டி வர்க்கங்கள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறிவது பார்ப்பனியத்தின் சடங்கு சம்பிரதாய எல்லைகளைத்தான். அதனால் தான் கோழித்தலையை தகப்பன் இருந்தும் உண்கிறார்கள். உடைந்த முட்டையின் கருகிய மணம் சாம்பிராணியின் புகையையும் தாண்டி வெள்ளி, செவ்வாய்களில் மணக்கிறது.

ஆடு என்ற வருகிறபொழுது ஒரு கிலோ கறிக்கு கணிசமான ரூபாயை சம்பளத்தில் இருந்து எடுக்க வேண்டும். அது சாத்தியமல்ல என்பதால் இங்கும் ஆட்டின் பல உறுப்புகள் தான் ஏழைகளுக்கு அசைவம். ஆட்டுத்தொட்டியில் ஆட்டின் பல உறுப்புகள் விலைக்கு வைக்கப்பட்டிருக்கும். சான்றாக ஆட்டின் நாக்கு ஒன்று மட்டுமே இருநூறு கிராம் கறியை ஈடு செய்ய போதுமானது. பல நேரங்களில் நுரையீரலை மட்டும் வாங்கிச் செல்கிற குடும்பங்களும் உண்டு. இதைப் படிக்கிறவர் அசூசையாகவோ அல்லது முதன்முதலில் கேள்விப்படுபவராகவோ கூட இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் இந்துமதம், கலாச்சாரம், புனிதம் என்று கதைக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க.

இது ஒருபுறமிருக்க, பல ஆதிக்க சாதிகள் மூலநோய் குணமாகும் என்று கருணைக்கிழங்கு தின்பது ஒருபக்கம் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் (மதுரை கீழ்பாலத்தில் காணலாம்) பன்றிக்கறியும் வாங்கிப் போவர். ஆனால் பார்ப்பனியத்தை ஆழமாக கடைபிடிப்பவர்களும் இவர்களே. பார்ப்பனர்களை விட வைகுண்ட ஏகாதேசி விரதம், பிரதோசம் என்று பீக்கு முந்திய குசுவாக இருப்பார்கள்.

மேற்கண்ட உதாரணங்களில் நாம் பார்ப்பது வாழ்க்கை என்று வருகிற பொழுது இந்துக்களே பார்ப்பனியத்திற்கு எதிராகவும் அரசமைப்பிற்கு எதிராகவும் பல சமயங்களில் நிற்க வேண்டியிருக்கிறது என்பது தான்.

இறைச்சி உணவு
சுரண்டப்பபட்ட மக்கள் சூத்தைக் கத்தரிக்காய், உடைந்த தக்காளி, கோழிச் சில்லறை, ஆட்டு நாக்கு, சில்லி பீப் என்று பொழுதை ஓட்டுகின்றனர்.

இசுலாமியரையும் சேர்த்துக் கொள்வோம். பன்றிக்கறி அடிப்படைவாதத்தில் வருகிற பொழுது அதையும் தாண்டிய ஒன்று ஹலால் சம்பந்தப்பட்டது. ஓதி அறுக்கப்படாத கறி ஹராம் என்ற நிலையிலும் பிற கறிகள் மலிவாக கிடைக்கிற இடங்களில் இசுலாமியர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். பல இசுலாமியர்கள் பிற வீட்டின் விசேசங்களில் கிடாவெட்டு விருந்துகளிலும் கலந்து கொள்கிறார்கள். ஓட்டல்களிலும் உணவருந்துகிறார்கள். இன்றைக்கு இந்நிலைமை வெகுவாக மாறி வந்திருக்கிறது. மக்களைப் பிரித்தாள்வதில் பிஜேக்களும் ஆர் எஸ் எஸ்களும் பங்குபங்காளியாக உள்ளே புகுந்து வேலை செய்கிறார்கள். பள்ளிவாசல்களே இன்றைக்கு இருதரப்பாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கிறோம். இதில் ஹலால் மூலமாக இசுலாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மதஅடிப்படைவாதிகள் வெறியுடன் இருக்கிறார்கள். மத அடிப்படைவாதம் இவர்களிடத்தில்தான் இருக்கிறதே தவிர மக்களிடையே கிடையாது. பசுவை புனிதம் என்கிற அரசியலுக்குள் ஆர் எஸ் எஸ் இழுத்தும் தவ்ஹீத் போன்ற சக்திகள் இசுலாமியரை பிரித்தாள்வதையும் பெரு முயற்சியுடன் செய்கிறார்கள்.

தொகுப்பாக சைவம் அசைவ அரசியலில் அரங்கேற்றம் செய்யப்படுவது என்ன?

  1. உணவை வைத்து எங்கெல்லாம் இந்துத்துவத்தின் குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் சாதி மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. மேல்தட்டு வர்க்க ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி தின்பதில்லை என்று காட்டிக்கொள்கிற பொழுது மாட்டுக்கறி ஆதிக்கசாதி உட்பட ஏழை வர்க்கங்களுக்கு விலை மலிவான மாற்றாக இருக்கின்றது. இதில் தடை ஏற்படுத்தும் பொருட்டு பார்ப்பனியமே இன்றுவரை கோலோச்சுகிறது.
  2. ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்ட நடுத்தரவர்க்கம் மதத்தையும் கைவிடமுடியாமல் சைவமும் உண்ணமுடியாமல் அசைவமும் உண்ண முடியாமால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.

    சைவம் - அசைவம்
    ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்ட நடுத்தரவர்க்கம் மதத்தையும் கைவிடமுடியாமல் சைவமும் உண்ணமுடியாமல் அசைவமும் உண்ண முடியாமால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.
  3. சுரண்டப்பபட்ட மக்கள் அசைவத்திற்கு ஆட்டுத்தொடையோ சைவத்திற்கு கோபி மஞ்சூரியனோ அல்லாமல் சூத்தைக் கத்தரிக்காய், உடைந்த தக்காளி, கோழிச் சில்லறை, ஆட்டு நாக்கு, சில்லி பீப் என்று பொழுதை ஓட்டுகிற பொழுது வர்க்க பிரச்சனையே மேலோங்கி நிற்கிறது.  இங்கு மதமோ அரசோ மயிரளவு மதிப்பு கூட மக்களுக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை.
  4. இந்தியாவில் இந்து மதத்தின் பிற சாதிகள் இந்து எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கிற பொழுது இசுலாமியர்கள் இந்து எதேச்சதிகாரத்திற்கு மட்டுமல்ல இசுலாமிய அடிப்படைவாதத்திற்கும் எதிராக போராட வேண்டும் என்பதே பல்வேறு தருணங்கள் நிரூபிக்கின்றன.

தான் சார்ந்திருக்கிற மதம் தன் வாழ்நிலைக்கு தீர்வல்ல என்று ஒரு இந்துவோ இசுலாமியரோ பரிசீலிப்பாரேயானால் அவர்கள் புரட்சிகர இயக்கங்களோடு கைகைகோர்க்க வேண்டும். அதற்கு இந்து என்றோ இசுலாமியன் என்றோ சடங்கு சம்பிரதாயத்தின் பால் போற்றப்படும் அடையாளங்களுக்கு வேலையில்லை. ஏனெனில் இங்கு காசு இருப்பவனுக்குத்தான் மதமும் கலாச்சாரமும் இன்ன பிற கருமாந்திரங்களும். ஒன்றுமில்லாத நாம் நம்மை ஒரு பக்தனாக காட்டிக்கொள்வதும் மதத்தின் கீழ் இருத்திக் கொள்வதும் முழுக்க முழுக்க கையாலாகாத தனமாகும். பார்ப்பனியயமும் வஹாபிசமும் அடிப்படையில் வேறுவேறல்ல. முதலாளித்துவம் வளர்த்தெடுத்த களவாணிகள் இவர்கள். இதிலிருந்து நம்மை மீட்டெடுக்க, புடம் போட்டுக் கொள்ள வர்க்கப் போராட்டத்தில் இணைவதைத் தவிர வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?

– ஆய்வகன்