privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்"இனியொரு" தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்!

“இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்!

-

vote-012“இனியொரு” தளத்தை நடத்தும் குழுவைச் சேர்ந்த தோழர் சபா.நாவலன் ஈழத்தை சேர்ந்தவர், தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார். ஜூலை, 2009 சமயத்தில் சென்னை வந்திருந்த போது அவரிடம் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது. வினவிற்காக இந்த நேர்காணலை எடுத்தவர் தோழர் இராவணன். தனது சென்னைப் பயணத்தின் நினைவுகளினூடாக தனது நேர்காணலைத் துவங்கினார் தோழர் சபா. நாவலன்.

”நான் சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறேன். எண்பதுகளில் அரசியல் காரணங்களுக்காக எல்லா விடுதலை இயக்கங்களும் தமிழகத்தை தங்கு தளமாக பயன்படுத்திய காலத்தில் டெலோவில் இயங்கிய நானும் அரசியல் நடவடிக்கைகளுக்காக சென்னைக்கு வந்திருக்கிறேன். நான் எண்பதுகளில் பார்த்த சென்னைக்கும் இன்றைக்கு பார்க்கும் சென்னைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தியாவின் நிலபுரபுத்துவ தன்மைகள் குறைந்து மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிக்கப்பட்டதன் அடையாளமாக சென்னை உருமாறியிருக்கிறது. சென்னையில் இன்றைய உருமாற்றத்தை வளர்ச்சியாக காண முடியுமா? என்று தெரியவில்லை. ஏனென்றால் ஐய்ரோப்பாவின் மூலதனக் குவியலும் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடும் இதை ஒப்பிட முடியாது. உலகமயமாக்கலின் ஒரு விளைவை இங்கு காண முடிகிறது. மேல் மத்திய தரவர்க்கம்  செல்வாக்குச் செலுத்தும் சென்னையில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சென்னையில் அழகிற்காக இங்கிருக்கும் பூர்வகுடி உழைக்கும் மக்களை அன்றாடம் அள்ளி எடுத்து வெளியில் வீசிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. இந்த  முரண்களூடாக இடது சாரிகள் தேசிய மூலதனத்தைப் அன்னிய மூலதனத்திற்கு எதிராக நிறுத்தும் செயற்பாட்டையும்  முன்னெடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

வினவுநாவலன் என்பதன் அடையாளம் என்ன?

நாவலன்: 7 ஆம் வகுப்புவரை நான் மலையகத்தில் படித்துக்கொண்டிருந்தேன், ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியராக இருந்தவர் திரு.பி.ஏ.காதர் அவர்கள். அவர் சண்முகதாசனின் மாவோயிசக் கட்சியின் ஆதரவு உறுப்பினராக இருந்தார். அவர்தான் எங்களுக்கு மார்க்சியம் சொல்லித்தந்தார். ஏழாவது வகுப்பின் இறுதியில் எங்கள் வகுப்பில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அப்போது காதரின் வழிநடத்தலில் “நாளை நமதே” என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடாத்தினோம். இப்போது காதரும்  பிரித்தானியாவில் தான் வாழ்கிறார். 7ம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் போது எனது பிறந்த நாள் பரிசை வாங்குவதற்காக அப்பா 10 ரூபா பணம் கொடுத்தார். அதை வைத்து நான் மாவோவின் படத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றதும் என்னை மலையகத்திலிருந்து  யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றிவிட்டார்கள்.  அப்போது எனது உறவினர்கள் வீட்டிலும், கல்லூரி விடுதியிலும் தங்கிக் கல்வி கற்றேன்.

யாழ்பாணத்தில் 8 வது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது விடுதலை இயக்கங்களின் தலை மறைவுச் செயற்பாடுகள் ஆரம்ப நிலையில் இருந்தன. பின்னாளில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து கொலைசெய்யப்பட்ட அற்புதராசா (ரமேஷ்) என்னுடைய பள்ளி நண்பன். அவருடைய பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள். இவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் நான் காதரிடம் கற்ற சோசலிசம் குறித்துப் பேச அவர்கள் தமிழீழம் குறித்துப் பேசுவார்கள்.

இவர்களூடாக மேலும் என்னைப் போல சில சிறுவர்களதும் உயர்தர வகுப்பு இளைஞர்களதும் தொடர்பு கிடைக்கவே நாங்கள் பள்ளிக்கூட மதிலேறிக் குதித்து கூட்டம் நடத்துவோம், விவாதிப்போம். சில நாட்களில் எனது சோசலிசமும் அவர்களது தமிழீழமும் இணைந்து சோசலிசத் தமிழீழம் என்ற முடிபில் இனிமேல் போராடுவதாகத் தீர்மானித்தோம்.

இதை நானும் இன்னும் சிலரும் சேர்ந்து போய் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியரிடம் தெரிவித்தோம்.அப்போது ஈழ நாடு பேப்பரின் சோசலிசத் தமிழீழத்திற்காக சிறுவர்கள் கூட்டம் போட்டுள்ளனர். என்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியாகியிருந்தது.

அது எங்கள் பள்ளியில் பிரச்சனையாகி எங்கள் பிரின்சிபால் என்னை ரத்தம் வருகிறபடி அடித்து விட்டார். எண்பதுகளில் போலீஸ், இராணுவ அடக்குமுறைகளை மீறி விடுதலை இயக்கங்களில் இணைவதென்பது ஒரு சமூக அங்கீகாராமாக இருந்தது.

ஈழப் போராட்டத்தைத் பாய்ச்சல் நிலையான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது இந்திய உளவு நிறுவனமான “ரா”. திட்டமிட்டுப் போராட்டத்தை அழிப்பதற்கான அத்திவாரததை இந்திய அரசுதான் மேற்கொண்டது.

இந்தியாவிடம் பயிர்ச்சிக்குச் செல்வது பற்றிய ஒரு விதமான மயக்கமான எண்ணங்கள் எல்லா இளைஞர்களுக்குமே இருந்தது.

அந்த வேளையில் மனோ மாஸ்டர் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு பிரபாகரனும் இன்னும் சிலரும் குட்டிமணி மற்றும் தங்கத்துரை தலைமையிலான குழுவில் இணைந்து கொண்ட காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் மனோமாஸ்டர். தமிழ் புதிய புலிகள் என்று இருந்த பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றியவரும் இவர்தான். மார்க்சிய சிந்தனைகளில் தேடல் ஆர்வம் கொண்ட மனோ மாஸ்டர், பின்னதாக கம்யூனிச இயக்கத்தின் தலைமையிலேயே தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, வேறு சிலரோடும் சேர்ந்து தத்துவார்த்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மக்களோடு மக்களாகக் கிராமங்களில் வாழ்ந்தார். 1983 வரை இவ்வாறான சிந்தனையைக் கொண்டிருந்த மனோமாஸ்டரை 83 ஜூலைக் கலவரங்களின் பின்னர் நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அந்த வேளையில் அவர் ரெலோ இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளராக இணைந்திருந்தார்.இந்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சிகாக ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் திரட்ட்ப் பட்டுக்கொண்டிருந்தனர்.

எனது மார்க்சிய ஈடுபாடு குறித்து அறிந்துகொண்ட மனோ மாஸ்டர், புதிய கருத்து ஒன்றை என்னிடம் சொன்னார். இந்தியா பயிற்சிவழங்கும் இளைஞர்கள் இலங்கைக்கு வந்து தமக்குள் மோதிக்கொள்ளப் போகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிராகச் செயற்படப்போகிறார்கள். இந்தியா தமிழீழத்தை எந்தக் காரணம் கொண்டும் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இறுதியில் போராட்டமும் பெரும் தொகைப் போராளிகளும் மக்களும் அழிவதிலேயே இந்த புதிய நகர்வுகள் முடிவடையப் போகின்றன என்றார். இந்த நிலையில் நாம் இவ்வியக்கங்களைச் சுற்றி பலமான மக்கள் திரளமைப்புக்களை கட்டியமைப்பதன்  ஊடாக அழிவுகளை மட்டுப்ப்படுத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தார். இவ்வாறான ஒரு கருத்தியல் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும் என்றும், இந்த வகையில் ரெலோ இயக்கத்தின் பலவீனமான தலைமையின் கவனத்திற்கு உட்படாமல் அவ்வியக்கத்தின் பலத்துடனேயே மக்கள் வேலைகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார்.

84 ஆரம்பத்தில் மனோமாஸ்டரின் அடுத்த கட்ட வேலைத்திட்டமாக ரெலோ இயக்கத்தின் மத்திய குழுவை  முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை திரட்ட அமைப்பதாகத் திட்டமிட்டார். அதற்கான உட்கட்சிப் போராட்டம் இந்தியாவில் ஆரம்பித்திருந்தது. இதனை ஆரம்பத்திலிருந்தே ரேலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் மறுத்திருந்தார். மத்திய குழு அமைத்து ரெலோ இயக்கத்தை ஜனநாயக மயப்படுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்பதே அவர் முன்வைத்த காரணமாகும். 84 இல் ரெலோ இயக்கத்தை கருணாநிதி ஊடாகவும் புலிகளை எம்.ஜீ.ஆர் ஊடாகவும் இந்திய உளவுப்படை கையாண்டது. மத்திய குழு அமைப்பதை கருணாநிதியும் நிராகரித்து விட்டதாக சிறீ சபாரத்தினம் கூறியிருந்தார். ஆனால் உட்கட்சிப் போராட்டம் தொடர்ந்தது. அவ்வேளையில் சுதன், ரமேஷ் என்ற இரு முக்கிய தலைவர்கள் சிறீ சபாரத்தினத்தால் கைது செய்யப்பட்டு சிறைவக்கப்பட, மனோமாஸ்டர் இந்தியாவிற்க்ச் செல்ல அவரைத் தொடர்ந்து நானும் இன்னும் 8 முக்கிய தள உறுப்பினர்களும் இந்தியா சென்றோம். அப்போது எனக்கு 19 வயது கூட நிரம்பவில்லை.

84 இல் கைது செய்யப்பட்ட சுதன் ரமேசை விடுதலை செய்யக் கோரி மரீனா பீச்சில் காந்தி சிலைக்குக் கீழ் காலவரையறையின்றி  உண்ணாவிரத்மிருந்தோம்.

இதே வேளை நாமெல்லாம் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை சென்ற வேளை மனோமாஸ்டரைப் புலிகள் இயக்கம் சுட்டுக் கொலைசெய்துவிட்டது. ஆளுமை மிக்க தலைவராகவும் சமூக உணர்வுள்ள புரட்சிக்காரனாகவும், பிரபாகரன் நன்கு அறிந்த அவர் நண்பனாககவும் இருந்ததால் இக்கொலை நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்தில் மார்க்சிய சிந்தனைகளைப் பிரயோகித்த மிகச்சிலருள் ஒருவரான மனோமாஸ்டரின் இழப்பு மிகப் பெரிய பின்னடைவு.

வினவுஇடது சாரி அமைப்புகளின் தலைமை பின்பற்றும் மத்தியக் குழு மாதிரியான அமைப்புக்கு இந்தியா ஏன் சம்மதிக்கவில்லை?

நாவலன் – ஒரு தேசீய இனவிடுதலை இயக்கத்தில் பல் வேறு சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு வர்க்கத்தட்டும் அவரவர் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தலைப்படும். இந்தியாவுக்கோ தங்களின் சொல்படிக் கேட்டு நடக்கும் அடியாட் படைகளே ஈழத்தில் போராளிகளாக தோற்றம் பெற வேண்டும்.மற்றபடி அடிமட்டத்திலிருந்து அமைப்புக் கட்டி இடதுசாரி அமைப்புகளுக்கே உள்ள தத்துவார்த்தத் தளத்தில் எந்த அமைப்பும் உருவாகி விடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது. இலங்கையில் பின்காலனியப் பகுதியின் நடைபெற்ற பல போராட்டங்கள் தீர்க்கமான சோசலிசப் புரட்சியை நோக்கிய வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிக்கான அமைப்புமுறைகளையும் வேலைத் திட்டங்களையும் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்தன.

வினவுஎல்லா போராளி அமைப்புகளுமே இப்படித்தான் இந்தியாவை நம்பி இருந்ததா? ஈழ விடுதலை என்னும் அரசியல் கேரிக்கையில் எந்த போராளிக் குழுக்களுக்குமே புரிதல் இல்லையா? அப்புறம் சீறி சபாரத்தினம் அவருடைய கொள்கை என்ன? அவர் எப்படி எல்லோருக்கும் தலைவர் ஆனார்?

நாவலன் – அவருக்கு அரசியல் ரீதியாகவோ கோட்பாட்டு ரீதியாகவோ எதுவிதமான அறிவோ படிப்பினைகளோ இல்லாமல் இருந்தது. இந்தியா எல்லாமே இந்தியா இந்தியா எங்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக் கொடுக்கும் என்னும் எண்ணத்துடனேதான் அவர் இருந்தார்.   மற்றபடி  ஆயுதப் போராட்டத்தின் துவக்கத்திற்கு வல்வெட்டித்துறை ஒரு மிக முக்கியமான பங்கு வகித்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வல்வெட்டித் துறைக்கும் ஒரு “தொப்புள்கொடி” உறவு இருந்தது. கூட்டணியின் பிரதான பண வழங்கல் வல்வெட்டித் துறையின் கடத்தல் தொழிலூடாகவே திரட்டப்பட்டது. இது தான் பிரபாகரனின் சொந்த இடமும் கூட.

இவர்களுக்கு இந்தியாவின் தென் பகுதி கடலோர நகரங்களோடு பெரும் கடத்தல் வணிகத் தொடர்பு இருந்தது. அந்தவகையில் பண மூலதனம் வட பகுதியில் முதன் முதலாக உருவான இடமும் வல்வெட்டித்துறைதான். ஒரு கட்டத்தில் சிங்களக் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் தமிழ் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்கும் நிதி ஆதாரமாக இருந்ததும் இந்தக் கடத்தல் காரர்கள்தான். வரலாற்று ரீதியாக இந்தக் கடத்தல்காரர்கள் போராளி இயக்கங்கள் மீது செலுத்திய செல்வாக்கும் எமது போராட்டம் சீரழிய ஒரு காரணமாக அமைந்தது.

எழுபதுகளில் ஜெகன், குட்டிமணி, தங்கதுறை போன்றவர்கள் கடத்தல் தொழிலில் செல்வாக்குச் செலுத்தியவர்கள். கடத்தல் தொழில் வரும் பெருமளவான நிதியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நிதியாக இவர்கள் வழங்கி வந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியோ இதற்குப் பதிலாக சட்டரீதியான பாதுகாப்பையும் அதிகார பீடங்களோடு தங்களுக்கு இருந்த உறவைப் பயன்படுத்தியும் இவர்களுக்கு உதவி வந்தார்கள். இது ஒரு பரஸ்பர பரிவர்த்தனை மாதிரி அந்தக் காலத்தில் நடந்து வந்தது.

அப்படி குட்டிமணி, தங்கதுறை குழுவின் கள்ளக் கடத்தலில் இணைந்த 16 வயது சிறுவன்தான் பிரபாகரன். சிங்களர்களுக்கு எதிரான பிரபாகரனின் எதிர்ப்பரசியலின் துவக்கம் என்பது இதுதான். அவர் குறி பார்த்துச் சுடுவதில் திறமை பெற்றவர்.தமிழரசுக் கட்சி தங்களின் அரசியல் எதிரிகளைக் கொல்வதற்கும் இவர்க்ளை பயன்படுத்திக் கொண்டார்கள். யாழ்பாண மேயர் துரையப்பா கொல்லப்பட்டது கூட  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் படுகொலைதான்.

அப்போது எழுபதுகளில் சிறிமாவோ பண்டாரநாயகே பதவிக்கு வந்த போது அந்நிய உற்பத்திகள் தடை செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் என். எம்.பெரேரா.

அதே சமையம் யாழ்பாண உள்ளூர் உற்பத்தி அளவு அதிகரிக்கவும் செய்கிறது. அரிசி உற்பத்தில் யாழ்பாணம் பெரும் பாய்ச்சலைச் சந்தித்த காலமாகவும் அது இருந்தது. பல யாழ்பாண விவசாயிகளே வட பகுதிகளாக முத்தையன் கட்டு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயத் தொழில் செய்த காலங்கள் கூட உண்டு. ஒரு பக்கம் உள்நாட்டு உறபத்தியின் அதிகரிப்பு, இன்னொரு பக்கம் கடத்தல் காரர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை. அதே காலக் கட்டத்தில்தான் இலங்கை அரசு தரப்படுத்தல் என்னும் சட்டத்தையும் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் அது இன ரீதியான படு பிற்போக்கு அம்சங்களோடு அறிமுகமானாலும் பிற்பாடு அது பிரதேசவாரியான தரப்படுத்தலாக மாற்றப்பட்ட போது அதில் முற்போக்குக் கூறுகள் இருந்தது. அதாவது பின் தங்கிய பகுதி மாணவர்கள் ஓரளவுக்கு வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருந்தது. இங்கே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறதல்லவா? அது மாதிரி ஒரு முற்போக்கு ஏற்பாடு. ஆனால் இந்த பிரதேசவாரியான தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்பாண வெள்ளாளர்கள்தான். அவர்கள் கூட வெவ்வேறு பெயர்களின் முகவரிகளில் கிழக்கு மாகாணத்திற்கும் வன்னிக்கும் வந்து தேர்வு எழுதி விட்டுச் செல்லும் சூழல் கூட இருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க மனோபாவத்தைக் கொண்ட யாழ்பாணத்தவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதும் அவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக தமீழக் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழீழ கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. தமிழீழக் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது அதை தடித்தனமாக ஒடுக்கிய போலீஸ் ஒரு பக்கம் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரண்ட கடத்தல்காரர்கள் ஒரு பக்கம் என மாணவர்கள், கடத்தல்காரர்கள் என இரு சக்திகளும் இணைகிறார்கள். ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி,  உமா மகேஸ்வரன், குட்டி மணி, தங்கதுறை, பிரபாகரன் எல்லோரும் இணைந்தே ஈழப் போராட்டத்தை துவக்குகிறார்கள். இந்த இணைதலின் வரலாற்றுப் பின்னணி என்பது இதுதான்.

வினவுகடத்தல்காரர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி, இன்னொரு பக்கம் இலங்கை அரசாங்கம் என இவர்களுக்கிடையிலான முரண்பாடே தமீழீழப் போராட்டத்தின் துவக்கமாக இருந்தது என்கிறீர்கள்? அப்படி என்றால் இலங்கையில் சிங்களர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான இன முரண் இல்லை என்கிறீர்களா?

நாவலன் – அப்படிச் சொல்லவில்லை. சிங்கள் பௌத்த மேலாதிக்கவாதம் என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதாகவும் சிங்கள இனவாதம் இலங்கையில் இருந்தது, இன்றும் இருக்கிறது.

ஆக தமிழ்ப் பேசும் மக்களிற்கு எதிரான சோவனிச வடிவிலான பெருந்தேசிய அடக்குமுறை என்பதே இனப்பிரச்சனையின் ஊற்றுக்கண்.  பண்டாரநாயகா காலத்தில் 58 வது ஆண்டில் இருந்தே அது வெளிப்படையான கலவரங்களாக உருவாகி விட்டது. இலங்கையில் இருந்து பிரித்தானியா வெளியேறிய போது இலங்கைத் தீவினுள் இன முரண்பாட்டை உருவாக்கி விட்டுத்தான் வெளியேறியது. அனகாரிக தர்மபால என்கிற சிங்கள பெருந்தேசியவாதி இப்போதும் சிங்களர்களின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்படுகிறார். ” தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளி கொல்ல வேண்டும் ” என்று சொன்னவர் தர்மபால.இலங்கைப் பாடப்புத்தகங்களில் தேசத்தின் கதாநாயகனாகவும், இலங்கை தேச நிர்மாணத்தின் சிற்பியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

மகாவம்சம் என்னும் சிங்களர்களின் புனித நூல் பாலி மொழியில் மட்டுமே இருந்தது சிங்களத்தில் இல்லை. பிரித்தானிய கவர்னருடைய நிதி உதவியிலும் அவர்களில் திட்டத்திலும்தான் மகாவம்சம் சிங்கள மொழிக்கு மாற்றப்படுகிறது. பாலி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மகாவம்சத்தை மூன்று லட்சம் பிரதிகளாக எடுத்து கிராமங்கள் வரை பரவியிருந்த எல்லா விகாரைகளுக்கும் கொடுத்தார்கள். மகாவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்குமான போர் என்பதை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான போர் என்று பொயான புனைவுகளை ஏற்படுத்தினார்கள். இனவாதத்தை தத்துவார்த்தத் தளத்தில் நிறுவனமயப்படுத்தியவர்தான் தர்ம்பாலா. பின்னர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான முதல் தாக்குதல் இன முரணைத் தூண்டும் விஷயத்தை முன் வைக்கிறார் அவரது சகோதரர் 1915 ல் முதல் சிறுபான்மையினருக்கு (தமிழ் முஸ்லீம்களுக்கு) எதிரான தாக்குதல் டி.எஸ். சேனநாயகா காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது சிறுபான்மை வணிகர்களுக்கு எதிரானத் தாக்குதல்.

பிரித்தானிய ஆதிக்கத்திற்கு முன்னைய காலத்திலேயே தேரவாத தமிழ் நாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகத் தேரவாத பௌத்தத்தைப் பாதுகாப்பது என்ற செயற்பாட்டுத் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துவிட்டது. இதைத்தான் கேம்பிரிட்ஜ்  பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹொப்ஸ்பவும் போன்ற ஆய்வாளர்கள் தேரவாத பௌத்தம் இயல்பிலேயே தேசியவாதக் கூறுகளைக் கொண்டுள்ளதாக இலங்கையை உதாரணம் காட்டுகிறார்கள். இதை தேசிய வாதம் குறித்த மார்க்சிய தியரிக்கு எதிராகக் கூட அவர்கள் பிரயோகித்து விவாதிக்கிறார்கள். இது அடிப்படையில் தவறான கருத்து என்றாலும், இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில்  இந்தியாவிற்கு எதிரான ஒருங்கமைப்பு ஒன்று காணப்பட்டதை பலரும் குறித்துக் காட்டுகிறார்கள். இது ஒரு தேசிய இணைவையும் கொண்டிருந்தது. ஆக, இந்திய மன்னர்களுக்கு எதிரான பௌத்தர்களின் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டங்களாகக் புனையப்படது. இதனையே சோவனிச இனவாதத்தை விதைப்பதற்கான மகாவம்ச ஆதாரங்களாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

வினவுஅப்ப்போது ஒன்று பட்ட இந்தியா என்பதே இல்லையே…. சிறு சிறு நிலப் பகுதிகளை ஆண்ட குறு நில மன்னவர்கள் அவர்களை கட்டுப்படுத்திய பெரு நில மன்னர்கள் என்ற ஆட்சிமுறைதான் இங்கே இருந்தது.

நாவலன் – ஆமாம் இலங்கைக்கு வெளியே இருந்த சமாஸ்தானங்கள். அல்லது சேர, சோழ, பாண்டிய, பராக்கிரமாபாகு போன்ற இன்றைய தென்னிந்தியாவின் அன்றைய சமஸ்தானங்களின் செல்வாக்கு இலங்கையின் மீது அதிகமாக படிந்திருந்தது. இவர்கள் படையெடுத்துப் போய் வெற்றி கொண்ட வரலாறுகளும் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் வெற்றி கொண்ட இடங்களில் இவர்கள் இருந்து ஆட்சி செய்ததில்லை அங்கே தனக்கான பினாமி ஒருவரை நியமித்து வருகிறார்கள். இத்தகைய போக்குகள் தென்னிந்திய மன்னர்களுக்கு எதிராக மனோபாவத்தை சிங்களர்களிடமும் பௌத்த பிக்குகளிடமும் உருவாக்கியது. தென்னிந்திய மன்னர்கள் மீதான அச்சம் இலங்கையில் அல்லது சிங்கள ஆட்சி பீடத்தில் வித்தியாசமான சமூக அமைப்பை உருவாக்கியது. சிங்கள மன்னனான துட்டகைமுனுவுக்கு எல்லாளன் மீதிருந்த கோபம் கூட தென்னக மன்னர்களுக்கு எதிரான கோபம்தான். துட்டகைமுனு, எல்லாளன் யுத்தம் கூட தமிழர் சிங்களர் போராக உணரப்பட்டதும் இதனால்தான். இலங்கையில் பௌத்தத்தின் துவக்கம் கூட இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகளில் இருந்து உருவானதுதான். அந்த அடிப்படையில்தான் பௌத்த எதிர்ப்புணர்வும் முக்கோண சமூக அமைப்பாக உருவாக்கியது. முக்கோணம் என்றால் மூன்று மூலைகள்…. ஒரு மூலையில் மன்னர்கள், இன்னொரு மூலையில் பௌத்த பிக்குகள், இன்னொரு மூலையில் மக்கள். மன்னனுக்கு படைகள் தேவைப்பட்டால் பௌத்த பிக்குகளிடம் கேட்பார்கள் பிக்குகள் மக்களிடம் கேட்பார்கள்.மக்கள் மன்னனுக்கு சேவை செய்வார்கள்.  16 அம் நூற்றாண்டில் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி இலங்கைக்குச் செல்கிறார். அப்படிச் செல்லும் போது கண்டிய  தமிழ் மன்னன் ராஜசிங்கன் என்பவனால் அவர் சிறைப்படுத்தப்பட்டார்., அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கும் போது சிங்களம் படிக்கிறார்.பின்னர் அவர் வெளியில் வந்து பயணம் செய்யும் போது மீண்டும் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அங்கே எவருக்கும் சிங்களம் தெரியாது. எல்லோரும் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். அவரை விகாரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்புறம் பொலநருவ செல்கிறார். ஆக தமிழர் சிங்கள முரண் என்பது அப்போது மக்களிடம் இல்லை.

தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். அனுராதபுரம் இப்போது தூய சிங்களப் பகுதி. இங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றமடைந்திருக்கிறார்கள். ஆக, மொழி என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.

அதி அதிகார பீடங்களிடம் இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் மீதான இன முரண் என்பது தென்னிந்திய தமிழ் மன்னர்களுக்கு எதிரான முரணாகத்தான் துவக்கத்தில் இருந்திருக்கிறது. அது தமிழ் மக்களுக்கு எதிரான் இன முரணாக பின் காலனீயச் சூழலில் தான் உருமாற்றம் அடைகிறது. இன்னொரு பக்கத்தில் பார்த்தால் மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்துதான் பௌத்தம் இலங்கைக்குச் சென்றது. தமிழ் நாட்டில் பௌத்தம் கோலோச்சிய காலத்தில் இலங்கையில் இரண்டு விகாரைகள் இருந்தது. ஒரு விகாரையில் தமிழில் பௌத்த வழிபாடும் இன்னொரு விகாரையில் பாலி மொழியிலும் நடக்கிறது. எங்குமே சிங்கள மொழி இல்லை. இங்கே பௌத்தத்தை புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாக வைணவம் கட்டமைத்த அதே நேரம் இந்திய எதிர்ப்புணர்வு அங்கே எழுகிறது. அந்த விகாரைகள் கிராமங்கள் முழுக்க பிரித் நூல் ஓதுவதாக இருந்தால் பாலி மொழியில் ஓதுவார்கள். சைவ மதத்தின் கூறுகள் பௌத்தத்திலும் இருந்தது. ஆனால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் தேரவாத பௌத்த மரபு உருவாகிறது.

வினவுஇன்றும் கூட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவுடன் தங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களை தங்களை இந்தியாவோடு இணைத்துப் பார்க்கிறார்களா? அதாவது இந்திய அபிமானம் என்பது இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கிறதா?

நாவலன் – யாழ்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை எப்படி இழிவான பார்வையோடு பார்த்தார்கள் என்பது தெரியும்தானே? இந்தியாவில் உள்ள தமிழகத் தமிழர்களைக் கூட அவர்கள் வடக்கத்தியான் என்றுதான் அழைப்பார்கள். உண்மையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவோடு தங்களை அபிமானாபடுத்திப் பார்த்ததாக நான் நினைக்கவில்லை.  ஆனால் இந்தியா குறித்த கற்பனை தமிழ் தேசிய வாதிகளால் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இந்தியத் தொடர்புகளும் , வல்வெட்டித்துறை ஊடான தொடர்பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய முற்போக்குப் போராட்ட இயக்கங்களுடனோ போராட்ட  இயக்கங்களுடனோ தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவைக் கோபப்படுத்தக் கூடாது என்பதில் புலிகள் உட்பட்ட போராளிக் குழுக்கள் அவதானமாக இருந்தார்கள்.

வினவுவிடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டம் ஏன் தோற்றுப் போனது?

நாவலன் – தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வியடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் நடத்த வேண்டிய போராட்டத்தை நாங்கள் தீர்மானிக்க வேண்டிய போராட்டத்தை இந்தியா எப்போது தீர்மானிக்கத் துவங்கியதோ எங்கள் குழுக்களுக்கு எப்போது இந்தியா ஆயுதம் கொடுக்கத் துவங்கியதோ அப்போதே நாங்கள் தோற்றுப் போனோம். விடுதலைப்புலிகள் எதிர்ப்பியக்கம் என்பது மாறி அரசாங்கத்தின். பிராந்திய அதிகார வர்க்கங்களின் கையாட்களாகவும் அடியாட்களாகவும் மாறிப் போகும் சூழல் உருவானது. இத்தகைய போக்குகளினூடேதான் முப்பதாண்டுகாலம் நீண்டு சென்றிருக்கிறது எமது ஆயுத போராட்ட வரலாறு.  இப்போது வன்னிப் போரின் முடிவை தமிழ் மக்களின் அல்லது எதிர்ப்பியங்களின் தோல்வியாக நான் பார்க்கவில்லை. ஒடுக்கப்படும் ஆசிய மக்களின் தோல்வியாக நான் பார்க்கிறேன். உலக மயமாக்கத்தில் மூலமாக எழும் ஆதிக்கத்தை நிலை நிறுத்துக் கொள்வதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக இலங்கையை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் என் கருத்து, இந்த எகாதிபத்தியங்களின் விளையாட்டில் பங்கெடுத்தும் இழுபட்டும் கடந்து வந்த முப்பதாண்டுகால வரலாறுதான் புலிகள் கதை.

வினவுஉலக முதலாளித்துவத்திற்கு உதவக் கூடிய மூலதனங்கள் எதுவும் இலங்கையில் இல்லையே? மத்திய கிழக்கிலோ ஆப்ரிக்கா, செர்பியா, போஸ்னியா போன்ற நாடுகளில் இருக்கும் வளங்கள் போன்று இலங்கையில் இல்லாத போது. உலக முதலாளியம் ஏன் இலங்கையை சூறையாட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

நாவலன் – கிரீஸ்சில் ஒரு இனப்படுகொலை நடந்தது. இதே மாதிரியாக மக்களையும் போராளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து உணவைத் தடுத்து கூட்டாக படுகொலை செய்தார்கள்.இந்தோனேஷியாவில் நடந்ததை விட கொடூரமான இனப்படுகொலை அப்போது யுத்தப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளை மட்டும் விடச் சொல்லி கேட்டார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வெளியில் வந்தார்கள். அப்படி வந்தக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுத்தார்கள். அப்படி தத்தெடுத்த எலனி என்றொரு சிறுமி வளர்ந்த பிறகு நூல் ஒன்றை எழுதினார். அது பின்னர் சினிமாவாகக் கூட வந்தது . கிரீஸ்சில் பெட்ரோல் கிடையாது. ஏகாதிபத்தியங்களுக்கு நேரடியாக எந்த நலனும் அங்கு இல்லை. ஆனால் இன ரீதியாகவோ, வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ ஒடுக்கப்படுகிற மக்கள் எதிர்ப்பியங்களை நடத்தும் போது முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்பதுதான் க்ரீஸ் படுகொலைகள் நமக்கு சொல்லும் செய்தி.

அது போன்ற முயற்ச்சிதான் வன்னியில் நடந்தது. வன்னிக் கொலைகள் அதற்கு மேற்குலகின் மௌனமான சம்மதங்கள் என இந்தியாவின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது வன்னிப் போரின் உத்தியைத்தான் இந்தியா லால்கரில் தொடங்கி அதை வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவு படுத்துகிறது. அங்கே மட்டும் பெட்ரோல் இருக்கிறதா? என்ன? ஒரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களுடன் வடகிழக்கு தொடர்பாக இந்தியா செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இன்னொரு பக்கம் உலக முதலாளிகளுக்கிடையில் இருக்கும் உள் முரண்பாடுகள் இருக்கின்றன. உலக முதலாளிகளின் ஆதிக்கம் இருந்தாலும் கூட உள் முரண்பாடுகள் என்பதை தேசீய முதலாளியமாக கொள்ள முடியாது என்றாலும் கூட அந்த உள் முரண்பாட்டிற்கு பிராந்திய தன்மை இருக்கிறது . அதை இலங்கைப் போரில் காண முடிகிறது. இலங்கை தீவிரமாக மேற்குலகிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறது. ஐநாவை துச்சமென மதிக்கிறது இலங்கை. ஐநாவின் சட்ட வல்லுநர் ஒருவரிடம் சமீபத்தில் பேசிய போது அவர் சொன்னார். இன்றைக்கு இருக்கிற உலக பொருளாதார சூழலில் இந்தியாவையும், சீனாவையும் எதிர்த்து மேற்குலகம் இலங்கையில் எதையுமே செய்ய முடியாது என்றார். முரண் இந்தியாவுக்கும் சீனாவுக்கிமிடையிலானதாக இருந்தால் மேற்குலகம் ஒரு நிலை எடுத்திருக்கும். இங்கே இந்தியாவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் சார்ந்திருத்தல் என்பது சுயாதீனமானது. பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருக்கும். ரஷ்யா ஏதேனும் அழுத்தம் கொடுத்தால் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் அந்த சார்பு நிலையில் சுயாதீனம் இருக்கிறது.சுயநலம் சார்ந்த இந்த சுயாதீனம் இப்போது சீனா சார்ந்தும் அமெரிக்கா சார்ந்தும் இந்தியா இருக்கிறது. ஆசியப் பொருளாதாரம் என்பது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதற்கு அப்பால் ஆசியாவின் பொருளாதார உருவாக்கத்தின் பரிசோதனைக் கூடம்தான் இலங்கை.  இந்த பிராந்திய பொருளாதார உருவாக்கத்திற்கு இலங்கையில் பலியானவ்ர்கள்தான் வன்னி மக்களும் புலிகளும். இத்தகைய இனப்படுகொலை இன்னொரு பத்தாண்டுகளுக்கு ஆசியாவில் தொடர வாய்ப்புண்டு.

வினவுநீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஈழத் தமிழ் மக்களை ஆசியப் பொருளாதாரத்தின் சூழ் நிலைக் கைதிகள் என்கிறீர்கள். இது சிங்கள இனவாதத்தையும் அவர்கள் நடத்திய இனப்படுகொலையின் கோரத்தையும் திசை திருப்புவதாக அமைந்து விடாதா?

நாவலன்:  நான் சிங்கள அரசு பயங்கரவாதிகளின் இனகொலைகளையோ, அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் கொன்றொழித்ததையும் இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக சரத்பொன்சேகா என்றாலும் ராஜபட்சே சகோதரர்கள் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஆசியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார உருவாக்கமும் ஏகாதிபத்தியங்களின் பயங்கவராத கதையாடலையும் சிங்கள பேரினவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வருகிறேன். இலங்கையைப் பொறுத்த வரை இனவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் இலங்கையின் சிங்கள பௌத்த மேன்மையை கட்டி வைத்திருக்கிறது. இந்தியாவில் இறையாண்மை என்னும் போலித் தேசீயவாதம் கட்டமைக்கப்படுகிறதோ அது போலதான் இதுவும். இதை எல்லாம் விட சிங்கள இனவாதத்திற்கு எதிராக சாத்வீக போராட்டங்கள் சாத்தியப்படாது. இனவாதத்திலிருந்து சிறுபான்மை மக்களின் விடுதலை என்பது வன்முறை போரட்டமாகவே இருக்க முடியும். ஆனால் அதிகார பீடங்களோடு இணைந்து செய்ல்படும் புலிகள் மாதிரியான வலதுசாரிக் குழுக்களால் முன்னெடுக்கப்படும் தேசியவாதப் போராட்டங்களால் இனவாதத்தை எப்போதுமே வெற்றிக் கொள்ள முடியாது. இலங்கையில் இனவாதம் வெற்றி கொள்ளப்பட்டால் மட்டுமே சிங்கள பௌத்த இனத்திற்குள் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை உணரும் சூழல் உருவாகும்.

வினவுஇப்போது சிங்கள உழைக்கும் மக்களுக்கும் சிங்கள முதலாளிகளுக்குமிடையிலான முரண்பாடு இப்போது இல்லை என்று சொல்கிறீர்களா? அல்லது பலவீனமாக இருக்கிறது என்கிறீர்களா? அல்லது இவர்கள் இரண்டு பேரையுமே சிங்கள இனவாதம் இணைகிறது என்று சொல்கிறீர்களா?

நாவலன் – முப்பதுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியை உலகம் கிரேட் டிப்பிரஷன் என்று பதிவு செய்கிறது. அந்த கிரேட் டிப்பிரஷனின் பாதிப்பு இலங்கையில் தேயிலைத் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. சிங்களத் தொழிலாளிகள் வேலை இழக்கிறார்கள். ஆனால் ஐக்கிய தேசீயக் கட்சி இந்த வேலை இழப்பிற்கு காரணமாக அப்போது சுட்டிக் காட்டியது மலையாளிகளை கிட்டத்தட்ட முப்பதாயிரம் மலையாளிகளை இலங்கையை விட்டுத் துரத்தினார்கள். இலங்கையில் தொழிற்சங்கம் கட்டும் முயற்ச்சி துவங்கியதும் அந்தக் காலக்கட்டத்தில்தான் அன்றைக்கு ஏகாதிபத்தியங்களின் நலனை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக கட்டமைத்தார்கள். ஆக, சிங்கள  மக்கள் மத்தியிலிருக்கும் வர்க்க முரணைத் தணிக்கும் கருவியாகவே சோவனிசம் பயன்படுகிறது. ஆனால் இன்று உலக முதலாளித்துவம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்க நலன் சார்ந்தது மட்டுமல்ல. ஜி 20 மாநாட்டில் ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தை சொல்லி நிற்கிறது.மக்களின் இடப்பெயர்வு பிற்போக்கான ஒன்றாக நடக்கிறது. உலக முதலாளித்துவத்தின் முரண்பாடு என்பது ரஷ்ய, சீனா நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு எதிரானதாகவும் இருக்கிறது. உருவாகிவரும் இந்த புதிய பொருளாதார கட்டமைப்பு எங்கே தங்களின் சுரண்டல் நலனை பாதித்து விடுமோ என்று அமெரிக்காவும் இந்த நாடுகளை கையாளத் துவங்குகிறது. அதனால்தான் புவி வெப்பமடைதல் தொடர்பாக அமெரிக்கா எழுப்பும் கேள்விகள் நெருக்கடிகள் எல்லாமே இந்த நாடுகளின் வளர்ச்சியைக் குறைவைத்துதான் செய்யப்படுகிறது.

வினவுதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டங்கள், தியாகங்களுக்கு உணர்வு பூர்வமான ஆதரவு இருக்கு. முப்பதாண்டுகாலமாக தனி ஈழக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்கள் என்கிற அளவில் தனிப்பெரும் அமைப்பாக அவர்கள் இங்கே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். கடைசியாக நடந்த தீக்குளிப்புகள் கூட உதாசீனம் செய்ய முடியாத ஆதரவு நிலையில் வெளிப்படுதான். முத்துக்குமாரின் மரண சாசனம் முற்போக்குக் கூறுகளைக் கொண்டது. இந்த ஆதரவை அவர்கள் எப்படி பயப்படுத்திக் கொண்டார்கள்?

நாவலன் – இதில் இரண்டு விதமான பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதிகாரவர்க்கங்கங்களோடு மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்தில் நெடுமாறன். வைகோ போன்றவர்களிடம் நெருங்கினார்கள். இன்னொரு பக்கம் சரவ்தேச அதிகார வர்க்கங்களின் வலைப்பின்னலை தங்களின் ஆயுத பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் போர் நிறுத்தம் கோரி உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் போராடிய தமிழக மக்களின் உணர்வு என்பது இங்குள்ள சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளுக்கு எதிராக இருந்தது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் இது வெளிப்பட்டது. அது போல வழக்கறிஞர்கள், மாணவர் போராட்டங்களிலும் இது வெளிப்பட்டது. ஆனால் புலிகள் இந்த மக்கள் எந்த சந்தர்ப்பவாத தலைமைகளிடம் அதிருப்தியுற்றிருந்தார்களோ அவர்களுடனே தொடர்பு வைத்திருந்தார்கள். இந்தியாவிடம் கடைசி வரை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்களின் எழுச்சியை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதிகார வர்க்கங்களை நம்பினார்களே தவிற தமிழக மக்களின் எழுச்சியை நம்பவில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் புலிகளின் அதிகாரவார்க்கத்துடனான சமரசம் அவர்களை அழித்துக்கொள்வதிலேயே முடிந்திருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் ஒன்றை நான் சொல்ல முடியும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசிய போது ஐந்து நாட்கள் இரண்டு லட்சம் மக்கள் பிரித்தானிய மக்கள் தெருவுக்கு வந்து பாலஸ்தீனியர்களுக்காக போராடினார்கள். ஆனால் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக எந்தப் போராட்டங்களிலும் பிரித்தானியா மக்களோ ஏனைய மக்கள் விடுதலை ஆதரவுக் குழுக்களோ துளி அளவு கூட கலந்து கொள்ள வில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் புலிகளோடு நெருக்கமாக இருந்தவர்கள்  அதிகாரவர்க்கமும் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுமே அவர்களோடுதான் இவர்கள் நெருக்கம் பேணினார்களே தவிற அங்குள்ள முற்போக்கு சக்திகளையும் ஏனைய எதிர்ப்பியங்கங்களையும் புலிகள் கண்டு கொள்ளவில்லை. இவர்களோடு நட்பாக இருந்த மேற்குலக நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் கட்சி நலன்களுக்காக, தங்களின் அரசு நலனுக்காக, தங்களின் தேச நலனுக்காகத்தான் இப் போராட்டங்களுக்கு வந்து போஸ் கொடுத்தார்களே தவிற அவர்களுக்கு மக்கள் நலன்களோ, மனிதாபிமான நலன்களோ கூட அவர்களுக்கு இல்லை. இதுவரை ஈழப் போருக்கு எதிராக உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் தமிழக மக்களே. ஆனால் அம்மக்களின் எதிர்ப்புணர்வை புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

வினவுஇனப்படுகொலையே ஈழத்தில் நடக்கவில்லை என்று ஜெர்மன் சுசீந்திரன் புதுவிசை இதழில் சொல்லியிருக்கிறார். இன்னொரு சாரார் இனப்படுகொலை பற்றி பேசாமல் புலிகள் செய்த தவறுகளைப் பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார்களே?

நாவலன் – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல்வேறு சக்திகள் இருக்கிறார்கள். போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் தனது பட்ஜெட்டில் மூன்று லட்சம் டாலர்களை புலிகளுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடுகிறது. ராஜதந்திரம் என்பது புலிகளுக்கு நிலவும் ஆதரவைக் குலைப்பதும் அவர்களின் சர்வதேச வலையமைப்பைச் சிதைப்பதும்தான் இலங்கை அரசின் நோக்கம். இன்று இலங்கை அரசின் பண உதவி  கிடைக்கிறது. மற்றபடி சுசீந்திரன் ஒரு தன்னார்வக் குழு  நிதி உதவிகளைப் பெறும் போது சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும் அந்தக் கட்டுப்பாடு என்பது இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்வதாகக் கூட இருக்கலாம். இன்னுமொரு பகுதியினர் புலிகள் மீதான விமர்சங்களை மட்டுமே முன் வைப்பதன் மூலமும் எதிர்ப்பியங்களின் நோக்கங்களை சிதைப்பதன் மூலமும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் சூழல் வெளிப்படையாகவே தெரிகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு 83 &ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிராக நெடுங்குருதி என்றொரு நிகழ்வை பிரான்சில் நடத்தினார்கள்.

இலங்கை அரசு விழாவாகவே அது நடந்தது. மேற்கில் உள்ள தலித் அமைப்புகளும் கூட இப்போது இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகின்றது. அவர்கள் இப்போது இலங்கை அரசிற்கு எதிராக பேசுவதில்லை. போர் முடிந்ததும் இவர்கள் இலங்கையில் கட்சியாகப் பதிவு செய்துகொண்டனர். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு மக்களிடம் எவ்விதமான மதிப்பும் கிடையாது. இவர்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில் இலங்கை அரசோடு இணைகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் முதலாவது எதிரி யார்? இரண்டாவது எதிரி யார்? என்பதை எல்லாம் நிராகரிக்கிறேன். காரணம் இது ஒரு தத்துவார்த்த பிரச்சனை அல்லாமலும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு காரணம் புலிகள் அல்ல. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கமே இந்த இனவாதத்தின் காரணகர்த்தாக்க்கள். 1958 ஆம் ஆண்டுகளில் தொடங்கி காலம் தோறும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. புலிகளின் ஆயுதப் போராட்டம் சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் ஐம்பதாம் ஆண்டு இருந்த தேவையை விட, எழுபதுகளில், எண்பதுகளில், தொண்ணூறுகளில் இருந்த தேவையை விட இன்று மிக அதிகமான அரசியல் தேவைகள் தமிழ் மக்களுக்கு இப்போது உருவாகியிருக்கிறது. இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு மிகத் தீவீரமான போராட்டத்திற்கான தேவை ஒன்று உருவாகியிருக்கிறது.    மனிதர்கள் கொசுக்களைப் போல கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகமே வேடிக்கை பார்க்க மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலைகளின் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல அவர்களை பாதுகாக்க எத்தனிக்கிற எவருமே போர்க்குற்றவாளிகள்தான்.

வினவு – 2004 – ஆம் ஆண்டு தென்கிழக்கு கடலோரங்களைத் தாக்கி மாபெரும் மக்கள் பேரழிவையும் இயர்க்கை அனர்த்தனத்தையும் தோற்று வித்த சுனாமிக்குப் பின் புற்றீசல் போல தன்னார்வக்குழுக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்தார்கள். இப்போது துயரமான முறையில் வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னால் தன்னார்வக்குழுக்களுக்கு இது பெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது? இல்லையா? ஒவ்வொரு பேரழிவுமே தன்னார்வக்குழுக்களுக்கு கொண்டாட்டம்தான் இல்லையா?

நாவலன்– தன்னார்வ நிறுவனங்கள் என்பதன் பிரதான நோக்கமே, அவர்களது வார்த்தைகளில் சொல்வதானால் ” சமூகக் கோபத்தைத் ”  தணிப்பது என்பதே. இதற்காகக் குடிமைச் சமூகங்கம், அடையாள அரசியல் போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். மனித உரிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தலித்தியம் போன்ற சுலோகங்களில் வர்க்க அரசியலை நீக்கிவிட்டு வெறும் சமூகப் பிரச்சனையாக முன்வைக்கின்றனர். இவற்றை நோக்கி ஒருபுறத்தில் அடிமட்ட மக்களையும் இன்னொரு புறத்தில் சமூக உணர்வுள்ள படித்த மத்தியதர வர்க்கத்தையும் இதன் பணியாளர்களாக உள்வாங்கிக் கொள்கின்றனர்.  இலங்கையில் 80 களில் இறுதியில் மனித உரிமை குறித்துப் பேச பல தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்தன. இருப்பினும் ஜே.வீ.பி போராட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்கள் தெருத் தெருவாகக்  கொலைசெய்யப்பட்ட போது யாரும் அங்கில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு கொலையைக் கூட பதிவுசெய்யவில்லை. ஜே.வி.பி இடது சாரிக் கோசங்களுடன் நடத்திய போராட்டம் தெற்காசியாவில் புரட்சியாக மாறக்கூடும் என்ற தன்னார்வ நிறுவனங்களை இயக்கும் வல்லரசு நாடுகளதும்  அவற்றின் துணை அமைப்புக்களதும் பயவுணர்வுக்குக் காரணம்.

புலிகளின் பிற்பகுதி  தன்னார்வ நிறுவனங்களின் பொற்காலம். அவர்கள் அரசியல் பேசுகிறார்கள். மனித உரிமை பேசுகிறார்கள். கூட்டங்களையும் கருத்தரங்கங்களையும் ஒழுங்கமைக்கிறார்கள். மனித் உரிமை மீறல் என்று கூக்குரல் போடுகின்ற எதாவது ஒரு தன்னார்வ  நிறுவனம் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என அங்கீகரிக்கிறதா?  மார்கா என்ற கொழும்பு தன்னார்வ ஆய்வு நிறுவனம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சேரன், ஜெயதேவெ உயாங்கொட, குமாரி ஜெயவர்தன, நுஹ்மான்  போன்றோரின் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. தேசிய இனப்பிரச்சனை குறித்த நூல்களும் வெளிவந்தன. ஆனால் இனப்படுகொலை நிகழும் போது இவர்கள் மூச்சுக்கூட விடவில்லை. இது மட்டுமல இலங்கை தன்னார்வ நிறுவனங்களின் மைக்ரோ எக்கானமி புரெஜக்டுகளின் பிரதான மையங்களில் ஒன்று. மக்களை இவர்களின் பிச்சைக்காரர்களாக மாற்றுவதே இவர்களின் பணி. பிலிப்பைன்ன்ஸ் போராட்டமே இவர்கள் சீரழிக்கப்பட்டது. பங்களாதேஷ் இன்று இவர்களாலேயே பிரஞ்சைஸ்ட் நாடு என அழிக்கப்படுகிறது. பங்களாதேஷில் உற்பத்தி அழிக்கப்பட்டு, பல்தேசியக் கம்பனிகள் தேசத்தைச் சின்னாபின்னமாக்கிவிட்டன.

வினவு – ”ஈழம் செத்து விட்டதுஎன்கிறார் இந்து ராம். ”ஈழம் சாத்தியமில்லைஎன்கிறார் ஷோபா சக்தி. பேராசிரியர் .மார்க்ஸ் போன்றவர்கள் எதிர்ப்பியங்களோ மக்கள் இயக்கங்களோ சாத்தியமில்லை என்பதை ஈழம் காட்டுகிறது என்கிறார். உங்கள் கருத்து என்ன?

நாவலன்- கோரிக்கைகள் தொடர்பாக பார்த்தால். அக்கோரிக்கைகள் ஐம்பதாம் ஆண்டு தொடங்கி வைக்கப்படுகிறது. பண்டா செல்வா ஒப்பந்தம் என்பதே தமிழ் மக்களுக்கான சம உரிமை கோரும் ஒப்பந்தம்தான் எழுதப்பட்ட நாளிலேயே அது கிழித்தெறியப்பட்டது. ஓரளவுக்கு ஜனநாயகத்தைப் பேணிய அரசாங்கங்கள் இருந்த காலத்திலேயே தமிழர்களுக்கு இதுதான் நடந்தது. ஆனால் இன்று இருப்பவர்களோ இனப்படுகொலை செய்த மோசமான போர்க் குற்றவாளிகள். கிரிமினல்கள், இந்த கிரிமினல்களுக்கு எதிராக அன்றைக்கு போராட்டங்களுக்கு ஆதரவளித்த கோரிக்கைகளை முன்வைத்துப் சமாதான வழியில் ஆயுதப் போராட்டம் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். சிங்களர்களின் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறை, தமிழ மக்களுக்கு எதிரான இனவாதம். என்கிற அளவில் இனவாதத்தை வீழ்த்த ஆயுதப் போராட்டமே தீர்வு. ஆனால் இது சரியான திசைகளின் முன்னெடுக்கப்பட்டாக வேண்டும். இன முரண் கூர்மையடைந்து ஆயுதப் போராட்டம் வேர் விட்ட காலத்தில் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு இருந்தது. தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் புலிகளின் தற்கொலைத் தாக்குதல், விகாரைகளில் பௌத்த அப்பாவிகளைக் கொன்று குவித்தமைதான் தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்ற எண்ணம் தோன்ற காரண்மாகிவிட்டது. சரியான திசை வழிகளின் எமது ஆயுத போராட்டம் பயணித்திருக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களே எங்களோடு இணைந்து போராடியிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனி ஈழம் என்கிற கோரிக்கை கூட அதனூடாக காலாவதியாகும் சூழல் ஏற்பட்டிருக்கும். இன்று இரு தரப்பிடமுமே அந்தச் சூழல் இல்லை. இன அடக்குமுறை பிரிந்து போகும் சுய நிர்ண போராட்டம் எனபது அவசியமானது. ஆனால் தந்திராபாய ரீதியில் தனி ஈழப் போராட்டம் வெற்றியளிகுமா? என்று தெரியவில்லை. எப்போது இலங்கை மக்கள் ஏகாதிபத்தியங்களிடம் இருந்தும் பிராந்திய விஸ்த்ரிப்பு நோக்கங்கள் கொண்ட அரசுகளிடம் இருந்தும் விடுதலை பெறுகிறார்களோ அதுவே உண்மையான விடுதலையின் பாதையாக அமையும். தவிர இன்று எதிர்ப்பரசியல் சாத்தியமில்லை என்ற கருத்துக்களும், ஆயுதப் போராட்டங்கள் பலமான எதிரியின் முன்னால் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதும், மார்க்சியத்திற்கு எதிராக இன்று மேற்கு வழியாகப் பரப்பப்படும் கருத்துக்கள்.

வினவு – குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களையும் போராளிகளையும் குவித்து வைத்து சிங்களப் பேரினவாத இராணுவம் கொன்று குவித்த போது புலத்து மக்களும் தமிழக மக்களும் கூட போருக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் இந்தப் போருக்கு எதிராக ஏன் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் போராட வில்லை?

வட கிழக்கில்  இயல்பாகவே உருவாகக் கூடிய  எல்லா மக்கள்திரள் அமைப்புக்களும் தமிழ் தேசிய இயக்கங்களால்  சிதைக்கப்பட்டிருந்தன. மக்கள்  போராட்டங்களின்  ஆதார சக்தியே க்கள் திரள் அமைப்புக்கள் தான். மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், கலாச்சார அமைப்புக்கள், கலை அமைப்புக்கள் என்று எல்லாமே 80 களில் ஒவ்வொரு தேசியவிடுதலை அமைப்புக்களின் வால்கள் போல மாற்றப்பட்டிருந்தன. பின்னதாக புலிகளின்  கட்டுப்பாட்டுக்குள் அவை உட்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 90 களின் பின்னர் புலிகளைச் சாரத அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. சில தந்திரோபாய நடைமுறைகளூடாக புதிய ஜனநாயக் கட்சி புத்தூர், நிச்சாமம், கன்பொல்லை, சங்கானை  போன்ற இடங்களில் தமது வறிய கூலிவிவசாய அமைப்புக்களைப் பேணிவந்த சூழல் காணப்பட்டாலும், 90 களின் பின்னர் இவர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பின்னர், இந்தச் சூழல் இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு மிகவும் துணைபோனது.

இலங்கை அரசும் அதன் துணைக்குழுக்களும் கிராமங்களில் உருவாகும் சிறிய சங்கங்களைக் கூட புலிகள் என முத்திரையிட்டு அழித்தனர். கிழக்கில் பிள்ளையான் மற்றும் கருணா தலைமையிலும் வடக்கில் டக்ளஸ் குழு தலைமையிலும் தான் வெகுஜன அமைப்புக்கள் உருவாகும் சூழல் காணப்பட்டது. ஆக, வட  கிழக்கு என்பது புலிகளுக்கும் அரசிற்கும் உரித்தான திறந்வெளிச் சிறைச்சாலைகளாகவே காணப்பட்டன. இரண்டிற்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூடி சமூக விடயங்களைப் பற்றிப் பேசக் கூட முடியாத நிலையே காணப்பட்டது. இன்றும் சோவனிச இலங்கை அரசாங்கம் அப்படி ஒரு அடக்குமுறைக்குள் தான் மக்களை வைத்திருக்கிறது. இன்று அரசின் துணைக்குழுக்களின் அடக்குமுறை அபிவிருத்தி என்ற பெயரில் நியாயம் கற்பிக்கப்படுகிறது.

வினவு- வடக்கு கிழக்கு மக்கள் போராடாமல் போனதற்கு இராணுவக் கண்காணிப்புதான் காரணம் என்கிறீர்கள். இது போன்ற ஒரு சூழலே காஷ்மீரிலும் இருக்கிறது. வீதிக்கு வீதி இராணுவத்தைக் குவித்திருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்த எதிர்ப்புகளையும் மீறி காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். அது போல மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய இராணுவங்களுக்கு எதிராக மக்கள் அஞ்சாமல் போராடும் போது ஈழத்தில் மட்டும் அது சாத்தியமில்லாமல் போனதற்கு தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சி காரணம் என்று சொல்லலாமா?

80 களில் இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவ அரசியல் பயிற்சிகளை வழங்கிய போதே அனைத்து மக்கள் திரள் அமைப்புக்களும் சிதைக்ப்பட ஆரம்பித்துவிட்டன. கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி போன்றவை பெரிய அளவில் அமைப்பாக்கப் பட்ட மக்கள் திரள்களைக் கொண்ட அமைப்பாகும். 83 மூன்றாம் ஆண்டு இந்திய இராணுவப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெற்றுகொள்வதற்காக இந்திய அரசு ஈழ அமைப்புக்களின் பலத்தை நிரூபிக்குமாறு கோரியது. இதனால் ஈ.பி.ஆர்.எல் என்ற இயக்கம் மேற்குறித்த அனைத்து அமைப்புக்களையும் தனது அங்கங்களாகப் பிரகடனம் செய்து வடகிழக்கு எங்கும் சுவரொட்டிகளை ஒட்டியது. துண்டுப்பிரசுரங்களூடாகவும், வெளியீடுகளூடாகவும் பிரச்சாரம் மேற்கொண்டது. இதனால், இந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இலங்கை இராணுவத்தாலும் பொலீசாராலும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். அவையெல்லாம் சட்டவிரோத அமைப்புக்களாக மாற்றமடைந்தன. இந்திய உளவு  அமைப்புக்களின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளாகவே இது கருதப்படுகிறது.

திடீரென சுனாமிபோல் உள்ளீடு செய்த இந்தியத் தலையீட்டிலிருந்து சுதாகரித்துக் கொள்ள நீண்ட நாட்கள் சென்றன.  85 களின் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, தேசிய மாணவர் மன்றம் போன்ற அமைப்புக்கள் வளர்ச்சிபெற்றன. 1986 இல்  தேசிய மாணவர் மன்றம் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து  கொண்ட பாதுகாப்பு வலையத்திற்கு எதிரான ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதே வேளை புதிய ஜனநாயகக் கட்சி   வடபகுதிக் கூலிவிவசாயிகள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தது. 80 களின் இறுதியில்   இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் வடக்கும் கிழக்கும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் வரப்பட்டது. இந்த நிலையில் புலிகள் சாரா அனைத்து அமைப்புக்களும் தடைசெய்யப்பட்டன அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது.தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை  முதலில் அங்கீகரித்த அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கூட வட கிழக்கிலிருத்து அப்புறப் படுத்தப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பிலிருந்து, மினிபஸ் உரிமையாளர் சங்கம் ஈறாக, கிராமிய சன சமூக நிலையங்கள் வரை புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டுள் மட்டுமே  இயங்கின.  இந்தச் சூழலைப்  புரிந்துகொண்ட  சர்வதேசத் தன்னார்வ நிறுவனங்கள் சில  புலிகளோடு இணந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இன்று தமிழ்ப் பிரதேசங்கள் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு திறந்வெளிச் சிறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. இரண்டு பகுதிகளிலுமே சாதாரண சாமானியனின் கொல்லைப்புறம் வரைக்கும் இரணுவமும் துணைக்குழுக்களும் சென்று வருகின்றன. வன்னி முகாம்கள் வெளிப்படையாக அங்க்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலை. இரண்டு போர்க்குற்றவாளிகளில் ஒருவரை, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோட்டவர்களில் ஒருவரை தமது தலைவராகப் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் சிங்கள அரச பாசிசம் வளர்ந்துள்ளது. வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய இலங்கையின் பகுதிகளுக்குள் தமிழ் பேசும் மக்கள் ஒருவகையான பயத்துடனேயே வாழ்கிறார்கள். ஆக, இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட சூழல்.

வினவு :  புலியெதிர்ப்பு அரசியல் குறித்து?

இலங்கை அரசின் பேனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இலங்கை அரசின் இனவழிப்பிற்கு எதிராகவும் போராடுவதற்கான உரிமையைக் கோரி புலிகளுக்கு எதிராகப் போராடியவர்களும்  போராடி மடிந்தவர்களும் முதலாம் வகையினர். மறுபுறத்தில் புலி எதிர்ப்பு என்பது அரச ஆதரவு என்ற நிலையை எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது வகையினர். புலிகளிற்கு எதிரான போராடும் உரிமையைக் கோரியவர்களுள் பலர் இன்றைய சூழலில் எதிர்ப்பியக்கங்களை ஆரம்ப்பிப்பதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

வினவு: புலம் பெயர்ந்து வாழும்ஈழத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழல் என்ன? ஈழப் போராட்டத்தில் புலம் பெயர் மக்களின் நிலை என்ன?

இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் புலம்பெயர்ந்த பெரும்பாலனவர்கள் தமது மத்தியதர வர்க்க வாழ்னிலையை உறுதிப்படுத்திக்கொள்ள பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். சிலவேளைகளில் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் பெரும்பாலும் 16 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் 40 வயதிற்கு உள்ளாகவே முதுமை அடையும் பரிதாபகரமான நிலையே காணப்படுகிறது. தவிர, ஐரோப்பிய நாடுகளுக்கு வருபவர்கள் இங்குள்ள கலாச்சாரத்துடன் இசைவடைய முடியாத மன அழுத்தங்களுடனேயே வாழ்கிறார்கள். இங்கும் இலங்கையின் சாதி அமைப்பு முறையை அப்படியே பேணுகின்ற ஒரு தொடர்பு நிலையே காணப்படுகிறது. தமிழ் சமூகத்தைத் தவிர ஏனைய சமூகங்களுடன் எந்தத் தொடர்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் சந்ததியினர் ஐரோப்பியர்களுடன் இணைந்துகொள்ள முற்படுகின்ற வேளையில் ஒருவகையான கலாச்சாரப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்கான ஆயுதமாக புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அமைகின்றன.

பெற்றோரே தமது பிள்ளைகளை புலிகளின் அமைப்புகளில் இணைந்து செயற்படுவதை ஊக்குவிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் தமிழர்களோடு இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

வன்னிப் படுகொலைகளின் போது புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுற்ற புலியெதிர்ப்புப் போராட்டங்களில் தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) என்ற புலி ஆதரவு இலைஞர் அணியின் பங்களிப்பே பிரதானமானதாக அமைந்தது. நடந்த ஊர்வலங்களில் ஐரோப்பாவில் பிறந்த இளைஞர்களே அதிக அளவில் பங்காற்றினர்.

தவிர, புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கை அரசின் இன்ப்படுகொலையிலிருந்தும் இன அடக்கு முறையில்லிருந்தும் தப்பிவந்தவர்கள். இவர்களின் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வுகளின் வடிகாலாக அமைந்தது புலிகள் மட்டுமே. இன்று புலிகளற்ற சூழலில் இவர்களின் தலைமைக்கான தேடல் புதிய சூழல். இச்சூழலை இலங்கை அரசும் இந்திய அர்சும் தமக்குச் சாதகமானதாக மாற்ற முற்படுகின்றன என்பது அபாயகரமானது. புலம் பெயர் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் அதிகாரவர்க்கம் சார்பானதாகவே அமைந்துள்ளன. சில சிறிய குழுக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகள் என்று போராட்டங்களை நடத்துகின்ற போதும் அவர்களுடன் எந்தத் தொடர்பும் அற்ற நிலையிலேயே புலிசார் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் புலிகளின் அமைப்புக்களூடாக நம்பியிருந்த எல்லா அதிகார வர்க்கம் சார்ந்த அமைப்புக்களாலும் கைவிடப்பட்டதை அவர்கள் உணரும் இன்றைய சூழலைப் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் பயம்படுத்திக் கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. ஒரு இனத்தின் விடுதலை என்பது எத்தனை தியாகம் வாய்ந்தது, எத்தனை வீரம் மிக்கது என்பதை இந்த உலகம் புரிந்துக் கொள்ளவேண்டும். புலிகள் மீதும் ஈழவிடுதலை மீதும் சேறு பூசும் இன்னோர்/”இனியொரு” முயற்சி.

    http://tamilanveethi.blogspot.com/2009/12/blog-post_27.html

    • ரதி,
      முழுநேர்காணலையும் போகிறபோக்கில் சேறு பூசும் முயற்சி என்று முத்திரை குத்துவதற்குப் பதில் குறிப்பான விசயங்களில் உள்ள வேறுபாட்டை விவாதிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.

      • ரதி, நண்பர் ரியல் சொல்வது சரியே, பொத்தாம் பொதுவாக ஈழவிடுதலை மீது சேறு பூசுவது என்று சொல்வது தவறு. மேலும் தோழர்.நாவலன் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் தனது கருத்துக்களையும்தானே முன்வைக்கிறார், அதில் பிழையிருந்தாலோ, விமர்சனம் செய்யலாம் அல்லது மாற்று கருத்து இருந்தால் விவாதிக்கலாம், இன்றைய தேதியில் ஈழப் பிரச்சனைக்கு நமக்கு தேவை விவாதமேயன்றி முத்திரை குத்துதல் அல்ல.. தவிர நீங்கள் அவதானிக்கவேண்டிய ஒரு விடயம்..அவர் நடைமுறை அரசியலில் இருக்கிறார், ஈழப்போராட்டம் தொய்வடையாமல் இருக்க தொடர்ச்சியாக தன்னாலான பங்களிப்பை செய்து வருகிறார். இதிலிருந்துதான் அவரை அணுகவேண்டும் என்று நான் கருதுகிறேன். மாற்றுக்கருத்து சொல்வோருக்கு வாய்பளிக்க வேண்டிய நேரமிது, தவறவிடக்கூடாது.

        • //ஈழப்போராட்டம் தொய்வடையாமல் இருக்க தொடர்ச்சியாக தன்னாலான பங்களிப்பை செய்து வருகிறார். //
          நல்ல விடயம் செய்யட்டும். ஆனால், இப்படி பங்களிப்பு செய்பவர்களில் யார் என்னை ஓர் ஈழத்தமிழராக பிரதிநிதிதுவப்படுத்துவதில் “எனக்கு உடன்பாடில்லை” என்பது பற்றிய உள்ளகக்கிடக்கையை நான் வெளியிட்டேனே தவிர யாரையும் நான் முத்திரை குத்துவதில்லை. நான் யாரையாவது முத்திரை குத்துவதாக, நீங்கள் என்னை முத்திரை குத்தும் முஸ்தீபுகளில் இறங்காதீர்கள், மா.சே. // மாற்றுக்கருத்து சொல்வோருக்கு வாய்பளிக்க வேண்டிய நேரமிது, ..// மாற்றுக்கருத்து என்பது புலிஎதிர்ப்பு அரசியலாகிவிட்ட சூழலில் மேற்கொண்டு நான் எதிர்வினை ஆற்றப்போவதில்லை.  

        • அதற்குள் இப்படி கோபித்துக்கொண்டால் எப்படி ரதி? எவ்வ்வளவோ விசயங்கள் நடந்து முடிந்து விட்டன. இப்போது நாம் மனந்திறந்து பேசவில்லை என்றால் இறந்தகாலத்தின் விடையறியாக் கேள்விகளுக்கு தீர்வு காண்பது எங்ஙனம்?

    • ரதி,
      இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் அவசியமும் தேவையும் 80களை விட 90 களை விட இன்று அதிகமாகவே உணரப்படுகிறது. அந்தப் போராட்டம் முன்னைப் போல் முள்ளி வாய்க்கால் மூலையில் முடிந்து போய்விடக் கூடது என்று நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன். நான் மட்டுமல்ல, பலர், பழையவற்றிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலம் நோக்கி முன்னேற வேண்டும் என்று கருதுகிறார்கள். அதை ஏன் தவறு என்று சொல்கிறீர்கள்.?

      • அரசுக்கெதிராக போராட முற்படும் சக்திகளுக்கு எதிராக போராடவேண்டும். இனம் இனத்தேசியம் இனத்துக்கான விடுதலை எல்லாம் அதிகாரவர்க்கத்தின் சுயநலம். நேற்றய சாதியம் தான் இன்றய தேசியம். முதலாளிகளாக புலம்பெயர்ந்து சுகபோகமாக வாழ்ந்து கொண்டும் அரச கட்டுப்பாடுகளில் சுகமாக வாழ்ந்து கொண்டும் வறிய மக்களைக் வேலைக்காரராகக் கொண்டு தமிழீழம் பெற்றுவிடத் துடித்த அதிகாரவர்க்க சுயநலமே வன்னி மக்களின் வாழ்வை அழித்தது. இந்த இனம் சிதைக்கப்படவேண்டும். இனம் என்ற அனைத்துவித அடயாளத்தில் இருந்தும் மக்கள் வெளியேறவேண்டும். இனம் மொழி மதம் சாதி இவற்றை துறந்து தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையில் தான் இனிப்போராட்டம். அதனையே ஊக்குவிக்க வேண்டும். தமிழ்த்தேசியம் என்று எவன் உச்சரிக்க முற்படுகின்றானே அவனே முதல் எதிரி.

      • நாவலன் (சபா நாவலன்?), 
        உங்கள் போராட்டம் நியாயமானதென்றால் அதை நான் தவறென்று எப்படி சொல்ல முடியும்? இது என்னைப்பற்றிய உங்களின் தவறான முன்முடிவு. ஆனால், இப்போதெல்லாம் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று கிளம்பும் பலர் தங்களை நியாயப்படுத்த புலிகளை களங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் வழங்கிய பேட்டியில் கூட வல்வெட்டித்துறையையும், குட்டிமணி, தங்கத்துரை, நான் மதிக்கும் தேசியத்தலைவர் பிரபாகரன் உட்பட ஈழவிடுதலைக்காய் உயிர்கொடுத்தவர்களை  “கடத்தல்காரர்கள்” என்று ஓர் களங்கத்தை கற்பிப்பது தான் உங்களையும் அவர்கள் பட்டியலில் சேர்த்துப்பார்க்க வைக்கிறது. குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரும் நீங்கள் சொல்வது போல் கடத்தல்காரர்கள் என்பதலா கொடூரமாக கொல்லப்பட்டார்கள்? பிரபாகரன் தன் பதினைந்து வயதிலிருந்து ஈழவிடுதலைக்காக எப்படிப்பட்ட ஓர் கடினமான வாழ்வை தொடங்கினார் என்பதை அந்த ஊர் மக்கள் தான் அறிவர். ஏதோ போகிற போக்கில் அந்த மூன்று போரையும் கடத்தல்காரர்கள் என்று கேவலப்படுத்திவிட்டீர்களே. உங்கள் நியாயமான போராட்டம் எதுவோ அதை தொடருங்கள். ஆனால், அதை பழையவற்றிலிருந்து கற்றுக்கொண்டு என்று புலிகளை அவதூறு சொல்வதிலிருந்து தொடங்காதீர்கள்.   

    • நாணயமான ஒரு நேர்காணல். திறந்த மனதுடன் படித்துப் புரிந்து கோண்டால் கடந்தகாலத் தவறுகளை உணர வழியிருக்கிறது.

      //நாங்கள் நடத்த வேண்டிய போராட்டத்தை நாங்கள் தீர்மானிக்க வேண்டிய போராட்டத்தை இந்தியா எப்போது தீர்மானிக்கத் துவங்கியதோ எங்கள் குழுக்களுக்கு எப்போது இந்தியா ஆயுதம் கொடுக்கத் துவங்கியதோ அப்போதே நாங்கள் தோற்றுப் போனோம்.//

      வினவு தளத்தில் பலமுறை பல இடங்களில் இதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். இந்தியத் தலையீடு என்றைக்கும் ஈழத்திற்கு உதவாது. ஈழத்தில் தலையிடுவது இந்தியாவுக்கும் உதவாது.

  2. வல்வெட்டித்துறை கடத்தல் குழு இளைஞர்களும், யாழ்ப்பாணத்து ‘உயர்சாதி’ தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிகளும்தான் பின்னிப்பிணைந்து ஈழப்பிரச்சினைக்காக விடுதலை இயக்கங்களை பிரசவித்தன என்பதிலிருந்தே அதன் இன்றைய தோல்வியை அன்றைய மூலத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

  3. சபா நாவலனின் கருத்துக்களின் முக்கியத்துவம் அவரது நேர்மையான சுயவிமரசனப் பங்கான தன்மையிலேயே உள்ளது.
    அது வெறுமே புலிகள் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல. மாறாக வேறு திசைகளிலும் விமர்சனங்கட்கு வழி தேடுவதாகவும் உள்ளது.
    ஒரு முழுமையான விசாரணைக்கான நல்ல தொடக்கப்புள்ளி இது. அவ்வாறே இதைப் பயன்[படுத்துவது நல்லது.

  4. நாவலன் மட்டும் எப்படியாக யாழ்ப்பாண வெள்ளாளமேலாதிக்க உளப்பாங்கிலிருந்து விலகினாரென்று தெரியவில்லை. அடித்தாற்போல, தரப்படுத்தலிலே யாழ்ப்பாண வெள்ளாளர் பாதிக்கப்பட்டதுமட்டுமே ஈழப்போராட்டம் என்னுமாற்போல எழுதிவிட்டுப்போகிறார். முன்னர் ஒரு முறை இதே அடியாக ஷோபா சக்தியின் சத்தியக்கடதாசியிலும் வந்திருந்தது.

    இப்படியான கிழக்குக்கும் வன்னிக்குமாக இன்றைக்கு அழுகின்ற புதுயாழ்ப்பாணத்து மேலாதிக்கவாதிகள், கிழக்கிலோ வன்னியிலோ தமிழ்பேசும்மக்களினது பாரம்பரியபிரதேசங்கள் சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றத்தினாலே அமுக்கப்பட்டதையோ காலாகாலத்துக்கும் இம்மக்கள் பயத்துடனேயே வாழ்ந்திருப்பதையும் சொல்வதில்லை. யானையைப் பார்க்கும் தமிழ்நாட்டுக்குருடர்களுக்குக் ஆனைக்காற்கதைசொல்லிக் காசு பறிக்கும் வழிகாட்டிகளாகத்தான் இவர்களைப் பார்க்கமுடிகிறது. எல்லாவற்றினையும் பிரபாகரன் தலையிலே சாய்த்துவிட்டுச் சந்தோஷமாக நகர்கிறது இவர்களுக்கு வாய்ப்பாகிப் போனது. உங்களுக்கென்ன ஒரு புரட்சிக்கு ஒரு விளம்பரபோஸ்(ட்)!

  5. நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10) என்ற பதிவில் இரயாகரன் எழுப்பியுள்ள கேள்விகள்

    //
    1. நெருக்கடிகள் ஏற்படும் போது, ஆளைக் காணமுடியாது. சிலவேளை சில நாட்கள் அது நீடிக்கும்.

    2. புரட்சிகர போராட்டத்திலும் குறுக்கு வழியையும், வெட்டியோடும் வழியையும், சுழியோடும் வழியையும் கையாள்வான். கூட்டு வேலை முறையிலும், புரட்சிகர அரசியலுக்குள்ளும், இது எதிர்நிலை பாத்திரத்தை ஏற்படுத்துவதில்லை அல்லது சாதகமாகவும் கூட மாறுகின்றது. (உதாரணமாக அண்மையில் மருதையன் பேட்டியை எடுத்த நாவலன், மருதையனை ஏமாற்ற நூற்றுக்;கணக்கான ஈமெயில்கள் வந்து குவிகின்றது என்று பச்சையாகவே புளுகினான். )

    இப்படி தனிப்பட்ட புரட்சிகரமல்லாத குணாம்சங்களை கொண்ட நாவலன், எம் எல்லோருடனும் நின்றான்.//

    மேலும் சீட்டிங் சீட்டுக் கம்பெனி நடத்திப் பணத்தை சுருட்டிக் கொண்டு ஒடியது, வேலையாள்களுக்கு பணம் கொடுக்காமல் கம்பி நீட்டியது என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை இரயா வைக்கின்றார்.

    மேலும் நமது தோழர் மருதையன் அவர்களின் பேட்டியை வெளியிட்டு ஒரு நரிவேடம் போட முயல்கிறார் என்றும் பல்லாயிரக்கணக்கிலான இமெயில்கள் வந்தன என்று புளுகுவதாகவும் கூறுகிறார்.

    இதற்கெல்லாம் வினவின் / நாவலனின் பதில் என்ன ?

    அறிவுடைநம்பி

  6. தோழர் அறிவு.
    இவற்றையெல்லாம் சட்டை செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து.
    இர‌யாக‌ர‌ன் எழுதுவ‌து ச‌ற்றும் நாக‌ரீக‌ முறையில் இல்லை என்ப‌து முத‌ல் விச‌ய‌ம், இர‌ண்டாவ‌தாக இத்தனை பாகங்களாக எழுத்தித்தள்ளும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளை எல்லாம் இத்த‌னை ஆண்டுக‌ளாக‌ தன‌க்குள் ம‌ட்டும் வைத்துக்கொள்ள‌ச்சொல்லி அவருக்கு நிர்ப‌ந்த‌ம் கொடுத்த‌து எது அல்லது யார் ? மூண்றாவதாக‌ இதே கேள்வி ச‌பா நாவ‌ல‌னுக்கும் அசோக் யோக‌னுக்கும் கூட‌ பொருந்தும் அதை அடுத்ததாக பார்ப்போம். நான்காவதாக‌ ஆயிரம் தவறுகள் இருந்தாலும் க‌ள‌த்தில் நிற்கும் புதிய‌ ஜ‌நாய‌க‌க்க‌ட்சியுட‌ன் இணைந்து நின்று செய‌ல்ப‌டும் தோழ‌ர் சிவ‌சேக‌ர‌த்தையோ அல்ல‌து அந்த‌ பாட்டாளி வ‌ர்க்க‌ க‌ட்சியையோ தனிநபராக‌ ஐரோப்பாவில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு விம‌ர்சிக்க‌ யாருக்கும் உரிமையில்லை. எனவே ஒரு கட்சியை விம‌ர்சிக்க‌வே கூடாது என்று நான் சொல்ல‌வ‌ர‌வில்லை. விம‌ர்சிக்க‌லாம், அந்த‌ க‌ட்சியுடன் தோழ‌மைபூர்வ‌மான‌ உற‌வை பேணிக்கொண்டு அவ‌ர்க‌ளுடைய‌ பிர‌ச்சார‌த்தை ஐரோப்பாவில் எடுத்துச்செல்லும் ஒரு கிளையாக‌, முக‌வ‌ராக‌ இருந்து கொண்டு அத‌ன் பிற‌கு க‌ட்சியின் த‌வ‌றுக‌ளை தோழ‌மையுட‌ன் சுட்டிக்காட்ட‌லாம். ஆனால் இவ‌ர்க‌ள் அதையெல்லாம் விட்டுவிட்டு ஐரோப்பாவில் உட்கார்ந்து கொண்டு பாசிச சூழலில் வேலை செய்யும் ஒரு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்த‌ முற்ப‌டுகிறார்க‌ள். சுருக்கமாகச் சொல்வதென்றால் நடைமுறையிலிருக்கும் நபர்களாகட்டும் கட்சியாகட்டும் அவர்களை நடைமுறையில் இல்லாதவர்கள் முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள‌ வேன்டும். ஆனால் மேற்கூறிய‌ இருவ‌ரிட‌மும் கூட‌ அதே த‌வ‌றுக‌ள் (அதாவ‌து அவ‌ர்க‌ளும் இரயா குறித்து ஒரு ப‌திவு எழுதினார்க‌ள் அதில் இரயா மீது இத்த‌னை ஆண்டுக‌ளாக சொல்லாத தமக்குள் மட்டுமே வைத்துக்கொண்டிருந்த‌‌ குற்ற‌ச்சாட்டுக‌ளை பிர‌ச்ச‌னை என்று வந்த‌ போது வைத்தார்க‌ள்.) உள்ள‌ன‌ எனினும் அவ‌ர்க‌ளும் அவ‌ர்களுடைய‌ த‌ள‌மும் புஜ‌ க‌ட்சியுடன் ஒரு தோழ‌மை உறவைப் பேணுகின்ற‌ன‌. அந்த‌ க‌ட்சி தொட‌ர்பான‌ செய்திக‌ளும் க‌ட்சி செய‌லாள‌ரின் அறிக்கைக‌ளும் அங்கு நடைபெறும் கூட்ட‌ம் பற்றிய‌ அறிவிப்புக‌ளும் அந்த‌ த‌ள‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ வ‌ருகின்ற‌ன‌. அவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் மார்க்சிய‌ம் தெரியாதா ? இர‌யாக‌ர‌ன் எழுதுவ‌தைப் போல‌ அவ‌ர்க‌ளும் க‌ட்சியை ப‌ற்றியும் தோழ‌ர் சிவ‌சேக‌ர‌த்தை ப‌ற்றியும் அவர்களுக்கு அறிவுரை கூறியும் எழுத‌ முடியாதா ? ஆனால் அவ‌ர்க‌ள் அப்ப‌டியான‌ பெரிய‌ண்ண‌ன் வேலையை பார்ப்ப‌தில்லை என்கிற‌ அம்ச‌த்தில் தான் அந்த‌ தோழ‌ர்க‌ளை நான் ம‌திக்கிறேன்.

    இர‌யாக‌ர‌ன் எழுதிய‌த‌ற்கு அவ‌ர்கள் இது வரை பதில் என்கிற முறையில் ஒரே ஒரு க‌ட்டுரை ம‌ட்டும் தான் எழுதியிருக்கிறார்க‌ள். ஆனால் இர‌யாவோ எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த‌ ச‌ண்டைக்குள் இந்த‌ தோழ‌ர்க‌ள் இற‌ங்க‌வில்லை. மொத்தமாகச் சொல்வ‌தென்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் மிகக்குறைவாக இருக்கும் முற்போக்கு புரட்சிகர நபர்களையும் கலைத்துவிடும் கலைப்புவாத வேலையை தான் இர‌யாக‌ர‌னும் ஸ்ரீர‌ங்க‌னும் செய்து வ‌ருகிறார்க‌ள்.

    • நடைமுறையற்ற தனிமனிதவாதம் இறுதியில் எங்குபோய் முடியுமென்பதின் வாழும் சாட்சியமாய் இரயாகரன் மாறிவிட்டார். ஒரு குழாயடி சண்டைக்கும் கீழாய் அவர் சமீப காலமாய் எழுதிவரும் அக்கப்போர்களை பார்க்கும் போது மார்க்சியம் என்பது என்றைக்குமே ஏட்டுச்சுரைக்காயாக இருக்கமுடியாது என்பது தெளிவு. ஈழப்பிரச்சினை என்றால் அது தன்வழியாகத்தான் தீர்வு காணப்பட்டே ஆகவேண்டும் என்ற மமதை அவரை உந்தித் தள்ளுகிறது. புலிகளுக்கு பிறகு பல இடங்களில் எழுந்துள்ள மாற்று அரசியல் முனைப்புகளெல்லாம் தன்னிடம் அனுமதி பெற்று செல்லவேண்டும் என்பது அவரது உறுதியான விதி. அதேபோல இந்தியாவில் இருக்கும் ம.க.இ.கவினரும் கூட ஈழவிவகாரத்தில் அவரது பார்வையைக் கொண்டே செயல்படவேண்டும் என்ற கோமாளித்தனமான பார்வையும் அவரிடத்தே உள்ளது. தோழர் நாவலன் தோழர் மருதையனை ஏமாற்றுவதற்கு என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம். தோழர் மருதையனை யார்வேண்டுமேனாலும் ஏமாற்றலாம், தோழர் இரயாகரன் மட்டுமே ஜாக்ரதையாக ஏமாற்றாமல் பார்த்துக்கொள்வார் என்றால் எதைச் சொல்லி அழ? தோழர் மருதையனுக்கும், ம.க.இ.கவினருக்கும் சுயபுத்தி கிடையாதாம், இவர் அவ்வப்போது கடன் கொடுத்து உதவுவராம். தோழர் இராயகரனோடு முரண்பாடு உள்ள மற்ற ஈழத்து தோழர்கள் இவரை சட்டை செய்யாமல் தங்கள் பணிகளை துடிப்போடு ஆற்றுவதே இவருக்கு அளிக்கப்படும் சரியான பதிலாக இருக்கும். அதை விடுத்து இவரது சீரியல் கில்லர் நோய்கள் வேறு எவரையும் தொற்றவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது

      • நீங்க சொல்லி வாய் மூடல ( கீபோர்டுலேருந்து கையெடுக்கல) அதுக்குள்ள தமிழரங்க எதிர்வினைய பாருங்க ரியலு….!!!!!!!!!!!!!!!!!!!!
        _______________________________________________________
        வினவாதே மூடு !

        இன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.
        புதைப்பதற்கு சவுக்கந் தோப்புக்களும்
        எலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்
        எங்கள் கண்காணிப்பில் தான்
        வினவு என்பது வீண் வார்த்தை

        அடங்கிப் போ ஆசான்கள் வருகின்றார்கள்.
        எந்தக் கற்களையும் புரட்டிப் பாராதே
        நாளைய புரட்சிக்காரர்கள் அங்கும் பதுங்கியிருக்கலாம்.
        வீண் வம்பு பேசாதே வினவாதே விலகிப்போ
        காட்டிக் கொடுக்கும் தோழனா நீ ?

        புதியதாய் இனியொரு வியூகம் அமைப்போம்
        வினவுவோர் எல்லாம் தூர விலகுங்கள்
        கொலைக்களங்கள் தாண்டி வந்ததால்
        எங்கள் கைகளிலும் சிவப்பு
        இது தான் உங்களுக்கு வெறுப்பு என்றால்
        வழிவிடுங்கள் தூ! தூய்மைவாதிகளே

        விடுதலையின் விரோதிகளைச் சரித்தபோது
        விழுப்புண்கள் சொரிந்த இரத்தம் நமது கைகளிலும்
        சொல்லிவிட்டுப் போகின்றோம் சுயவிமர்சனமாய்
        விலகுங்கள் வீணர்களே மக்கள் என்ன அறிவாளிகளா?

        !!!!!!!!!!!!!!!!!!
        எப்புடி?

      • தளபதிங்க தவறு செய்ய மாட்டாங்க கவிதைக் கீழே பாத்தப்ப சத்தியமா இது உங்க நக்கலுன்னுதா நெனச்சேன்.
        மெய்யாவே இப்புடி ஒரு தமிழரங்க எதிர்வினை வந்துச்சா?

        நானொரு முட்டாளுங்க
        ரொம்ப நல்லாப் படிச்சவுங்க நாலு பேரு சொன்னாங்க ….

  7. அன்புடன் அறிவுடை நம்பி,
    இவ்வாறான குற்றச் சாட்டுக்களுக்கு நான் உண்மையில் பதிலளிக்க விரும்பவில்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் யார் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். அவற்றிற்குப் பதில் சொல்வதெல்லாம் சுய விளம்பரமாகக் கூட முடிவடையலாம்.
    1.பெரும்பாலான நெருக்கடியான காலகட்டங்களில் நான் உறுதியாகவே நின்றிருக்கிறேன்.புலிகளால் இரண்டு தடைவைகள் கைது செய்யப்பட்டிருக்கிறேன். இரயா இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் இந்திய இராணுவத் துணைக் குழுக்களால் 2 தடைவை கைது செய்யப்பட்டு பலமாகத் தாக்கப்பட்டுள்ளேன். புலம் பெயர் நாடுகளில் பல தடவை அனைத்து அரஜாகங்களுக்கு எதிராகவும் போராடியுள்ளேன். 95 இற்கும் 97 இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியிலான இரண்டு வருடங்களில் மட்டும் பண நெருக்கடி காரணமாக புலம்பெயர் நாட்டில் எனது அரசியல் வேலைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
    2 நான் எந்தச் சீட்டுக் கொம்பனியும் நடத்தவில்லை. ஐரோப்பாவில் அப்படி எதுவும் நடத்த முடியாது. தொலைபேசிக் கொம்பனி ஒன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்த ஒரு நண்பர் நடத்த ஆரம்பித்த போது அவருடன் அதை சேர்ந்து நடத்தியது உண்மை. அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் இது குறித்து வீணான வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அவரே ஒத்துக்கொள்கிறார்.
    3. மருதையன் பேட்டியின் போது மின்னஞ்சலை பார்த்துக் கொண்டிருந்தவர் சூர்யோதயம் வானொலியின் மின்னஞ்சலிலும், குரல் வெப் மின்னஞ்சலிலும், இனிஒரு அஞ்சலிலும் நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்தது உண்மையே.
    தவிர,
    //நாவலன் தாக்கப்படுவது நாவலன் பேசும் மார்க்சியம், மக்களை பற்றி பேசிவிடும் என்ற அச்சம் தான், அவர் மீதான அவதூறாகின்றது. இந்த பொறுக்கி அரசியல், நாவலனின் ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் கேட்கின்றது. நாவலன் தனது சொந்த பெயரில் எழுதுகின்றார். சரி நீங்கள் யார்? இதில் உங்கள் நேர்மை ஒழுக்கம் முதல் அவதூறு வரை நிர்வாணமாகின்றது.
    நாவலனை இழிவுபடுத்துவர்கள் ஒன்றைத் தெரிந்த கொள்ளுங்கள். உங்களை போன்று இந்திய இலங்கை கூலிக்குழுவாக, அவர்கள் பின் நாவலன் தவண்டவரல்ல. கடந்த காலத்தில் நீங்கள் செய்யாதவைகளை, அவர் மக்களுடன் நின்று உங்களை எதிர்த்துச் செய்தவர்.
    ஜனநாயகத்தைக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். ரெலோ இயக்கத்தினை எதிர்த்து உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவர். இவரும், நேரு (என்.எல்.எவ்.ரி யில் சேர்ந்த போது ரெலோவால் கொல்லப்பட்டவர்), மனோ மாஸ்ட்டர் (புலிகளால் கொல்லப்பட்டார்) நடத்திய அந்த போராட்டம் தான், சென்னை மரினா பீச் உண்ணாவிரதம் வரை சென்றது. இது மட்டுமல்ல பாசறை என்ற அமைப்பின் ஊடாக இயங்கிய அவர், பல வெகுஜன அமைப்புகளில் முன்னணி வழிகாட்டியாக செயல்பட்டவர். அக்கால பல ஜனநாயக போராட்டத்தில் ஊக்கமாக பங்கு பற்றியவர். இப்படி பல.
    உங்களைப் போல் இந்திய இலங்கை அரசுகளின் பின் தவண்டு நக்கி திரிந்தவர் அல்ல, நக்குபவருமல்ல. கொலைகளைச் செய்தவரல்ல. முதலில் நீங்கள் வெளிப்படையாக வந்து, உங்கள் அரசியலை வையுங்கள். பின் நாவலனை விமர்சியுங்கள்.//
    இது சுய தம்பட்டத்திற்காக் நான் சொன்னதில்லை. என்னப்பற்றி சரியாக இரண்டு வருடங்களின் முன்னர் இரயாகரன் அவரது இணையத்தில் எழுதியது. இதற்குரிய லிங்க்:http://tamilcircle.net/index.php?view=article&catid=73%3A2007&id=476%3A2008-04-17-07-23-08&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=76

    நான் இனியொருவில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசிய குறித்து எழுதிய கட்டுரைக்கு அரச ஆதரவு இணையத் தளங்களில் வந்த அதே குற்றச்சாட்டுக்களைத் தான் இன்று ரயாகரன் என்மீது சுமத்துகிறார். அதாவது நான் யாரையோ ஏமாற்றினேன் என்று. அந்த நேரத்திலும் நான் அதற்குப் பதிலளித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் என் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கப்பட்டது. யார் தெரியுமோ? இரயாகரன் தான் பதிலளித்தார். இதோ அந்தப்பதில்:
    //அண்மையில் நாவலன் எழுதிய ‘மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்” என்ற கட்டுரைக்கு, அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாது போன ஈ.பி.டி.பியின் மகிந்த சிந்தனை, நாவலன் மீதான தனிப்புட்ட பல குற்றசாட்டுகளுடன் அதற்கு பதிலளித்தது. ‘வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்! இதற்கு சபா நாவலன் ஒரு குறியீடு!….” என்று, தாம் மக்களுக்கு எதிராக இழைத்த தமது துரோகத்தை மூடிமறைக்க, இப்படி தலைப்பிட்டு கூறுகின்றனர்.//
    அதற்குரிய லிங் இதோ:http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5186:2009-02-22-22-10-3

    அறிவுடை நம்பி இணையத் தளங்களில் இரத்தம் வழியாத குறையாக இன்னும் நாம் நமது கலாச்சாரத்தை வளர்த்துள்ளோ. இராயாகரன் குறித்தோ அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்தோ நான் எதுவும் எழுத உத்தேசமில்லை. இவ்வாறான ஆயிரம் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்து எனது காலத்தை வீணட்டிக்கவும் விரும்பவில்லை. தயவு செய்து ஆக்கபூர்வமான அரசியல் விவாதங்களுக்குள் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். வினவும் இதைக் கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன். நன்றி

  8. //தயவு செய்து ஆக்கபூர்வமான அரசியல் விவாதங்களுக்குள் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். //
    உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

    உங்கள் இந்த கட்டுரை, தமிழீழ விடுதலையில் உள்ள திட்டமிட்ட சுய அழிவு கூறுகளை நன்றாக விளக்குகிறது.

  9. ரியல் என்கவுன்டர்,சுப்பர்லிங்க்
    தோழர் இராவணனுடனான உரையாடலில் இரயாகரனைப் பற்றி ஏதும் கூறவில்லைலே? இது குறித்த விவாதங்களைத் தவிர்த்து, இந்திய அரச ஆதிக்கம், மக்கள் திரள் அமைப்புக்களின் முக்கியத்துவம், ஆசியப் பொருளாதாரம், பின் உலகமயமாதல் போன்ற நிறைய விடயங்கள் குறித்த குறிப்புக்கள் தொடர்பாக ஏன விவாதங்களை ஆரம்பிக்கக்கூடாது?

  10. என்னைப் பொறுத்தவரையில் ஈழப் பிரச்சனையை நாவலன் நேர்மையாகத்தான் அணுகிறார்.வல்வெட்டித்துறையின் கடத்தல் தொழில் என்கிற பின்னணியில் ஆயுதப் போராட்டம் வேர்விட்டதான குரல் ஒன்று வரும் என்றால். இலங்கைத் தீவில் உள்ள பிரச்சனையே கடத்தல் காரர்களுக்கும், கடத்தை ஒழிப்பவர்களுக்குமான பிரச்சனையாக ஊர்வாகி வளர்ந்தது என்றாகிவிடும். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. முப்பதாண்டுகால புலிகளின் போராட்டத்தில் இன்று நம்க்கு பல் வேறு விமர்சங்கள் உண்டு. ஆனால் அங்கு போராடி மடிந்த பிராபாகரன், மற்றும் புலிப் போராளிகளின் தியாங்களை கொச்சைப் படுத்த முடியாது. இன்னொரு போராட்டம் ஒன்று உருவாகும் நிலையில். நந்திக்கடலில் நடந்த மோசமான முடிவு இன்னொரு போராளி அமைப்பிற்கு ஏற்படக் கூடாது என்பதாலேயே நாம் விமர்சிக்க விரும்புகிறோம். ஆனால் இன்று சில சி.பி.எம் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோர். பிரபாகரனின் மரணத்தை டக்ளஸ் தேவானந்தாவின் குரலில் நின்று மகிழ்கிறார்கள். இவர்கள் விரும்புகிற வக்கிர எண்ணத்தை எல்லாம் வன்னி மக்கள் சொன்னார்கள். பிரபாகரனை செருப்பால் அடிப்பேன் என்று வல்வெட்டித்துறையில் சொன்னார்கள். என்றூ இவர்கள் விரும்புவதை ஈழ மக்களின் பெயரால் இங்கு கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் பேட்டிகளாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் யதார்த்த நிலைகளை கணக்கில் எடுக்காமல் பழைய புளித்துப் போன வீர சாகசக் கதைகளையே அளந்து கொண்டிருக்கும், தமிழ் தேசிய வாதிகள். இன்னொரு பக்கம். ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையே மறுத்தும் இழிவும் செய்துவரும் போலிக் கம்யூனிஸ்டுகள் என்று. மிகக் கேவலமான வங்குரோத்து சூழலுக்குள் தமிழர் அரசியல் சிந்தனை சிக்குண்டு கிடக்கிறது. ஈழ மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிற எல்லா போராடும் எண்ணம் கொண்டவர்களுமே இன்று கடந்த காலத் தவறுகளைப் பேசி புதிய வழிமுறையில் போராட்ட முன் வரவேண்டும். ஆனால் தவறுகளைப் பேசும் போது தயவு செய்து போராளிகளை இழிவு செய்யாதீர்கள்.

  11. ‘சிந்திக்காமல், கண்மூடித்தனமாக ஒரு தலைவரது கவர்ச்சியில் மயங்கி அவரைப் பின்பற்றுவது கூடாது. இந்தியாவில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுவது என்பது உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு அரசியலில் பெரும்பங்கு வகிக்கிறது. சமய நெறியில் பக்தி, ஆன்ம விடுதலைக்கு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுதல் என்பது நிச்சயமாக ஜனநாயக சாவுக்கு வழிவகுத்து, அதன் விளைவாக சர்வாதிகாரத்துக்கு அழைத்துச்சென்றுவிடும்’
    – டாக்டர் அம்பேத்கர்.
    அவர் சொன்னது இந்தியாவில் ,ஆனால் அது ஈழத்திற்கும் பொருந்தும் .இப்படி அம்பேத்கர் சொன்னதால் தமிழுக்கு அவர் என்ன செய்தார் ? என்று கேட்டக் கூடியவர்கள் ஈழத்து தமிழ் தேசிய வாதிகள்.
    இலங்கையில் நடைபெறுகின்ற இன்றைய இன ஒடுக்கலின் ஆரம்பம் 1915 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம் மக்ககளுக்கு எதிரான கலவரத்துடன் தொடங்கியது.சிங்களவருக்கு காவடி தூக்கி லண்டன் வரை சென்று வழக்கை வெற்றி செய்தது தமிழ் தலைமை.லண்டன் திரும்பிய சேர்.பொன்.ராமநாதனை கொழும்பு துறைமுகத்திலிருந்து பாராளுமன்றம் வரை சிங்களவர்கள் தூக்கி சென்றார்கள். அப்போது முஸ்லிம்களை தமிழ் பேசும் மக்கள் என்று தமிழ் தலைவர்கள் பார்க்கவில்லை.
    பின்னர் சிங்களவர்களால் மலையாளிகள் விரட்டப்பட்டனர்.அப்போதும் தமிழ் தலைவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
    பின் இந்திய வம்சாவழி தமிழ் தோட்ட தொழிலாளிகள் தமிழ் தலைவர்கள்
    சம்மதத்துடன் விரட்டியாடிக்கப்பட்டார்கள் .ஏனென்றால் கம்முநிஸ்ட் களுக்கு அவர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. 1956 இல் தமிழருக்கு எதிரான கலவரம் வெடிக்கிறது.பண்டாரநாயக்காவை தமிழ் தேசியவாதிகள் பச்சை இனவாதியாகவே சித்தரிப்பார்கள்.
    சமீபத்தில் ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை எழுதிய வரலாற்று நூல் ஒன்றில் பண்டாரநாயக்கா எப்படி சூழ்நிலையின் கைதியாக விளங்கினார் என் விளக்குகிறார். எஸ்.பொன்னுத்துரை புலிகளின் ஆதரவாளர். அவரது மகன் (அருச்சுனா ) புலி போராளி.எஸ்.பொன்னுத்துரையாலும் பண்டாரநாயக்காவை இனவாதி என கூறமுடியவில்லை.
    தங்களை பெரிய மேதாவிகள் என எண்ணி திரிபவர்கள் யாழ்பாணத்து மேட்டு குடியினர். அவர்கள் தங்கள் அரசியில் அபிலாசைகளை எல்லாம் அப்பகாத்து மாரிடம் (வழக்கரின்ஜரிடம் ) ஒப்படைத்துவிட்டிருன்தனர்.பொய்யிலும் ,பித்தலாட்டமும் அவர்களது தொழில் . கிணற்று தவளை மனப்பான்மையும் ,தங்கள் தான் அதி உயர்ந்தவர்கள் என்ற மமதையும் நிறைத்தவர்கள் யாழ்ப்பாணத்து மக்கள் ஆதலால் மற்றவர்களை மதிப்பதே இல்லை.வெளி ஊரில் வாழ நேர்ந்தாலும் மற்றவர்களுடன் கலப்புக்களை ஏற்படுத்த விரும்பாதவர்கள்.
    ஏனென்றால் சைவமும் ,தமிழும் அவாறான காரியங்களுக்கு இடம் கொடுக்காது.இதன் பின்னால் ஒளிந்திருப்பது “சாதி வெறி ” என்பது தான் உண்மை. மற்றவர்கள் மீது எப்போதும் அவ நம்பிக்கை ,அதன் அடிப்படையில் எழுப்பப்பட்ட விடயங்கள் தான் மற்றவர்கள் குறித்து இழிவாக பேசுவது. சில உதாரணங்கள் :
    இந்தியா மக்கள்= வடக்கதயான்கள் / “வயிற்ருகுத்தை நம்பினாலும் வடக்கனை நம்பகூடாது ”
    இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் =தோட்டக்காட்டான்கள்/ தற்குறிகள்/நாகரீகமற்றவர்கள்.
    கிழக்கு மாகான மக்கள் = மட்டகிளப்பான்கள் (சூனியக்காரர்கள்)
    முஸ்லீம் மக்கள் = தொப்பி பிரட்டிகள் /நயவஞ்சகர்கள்.
    சிங்களவர்கள் = முட்டாள்கள் / மூளையில்லாதவர்கள்.
    தாழ்ந்த சாதியினர் = மற்றதுகள் ,அதாவது மனிதர்களே அல்ல ,பிராணிகள்,ஜந்துக்கள்.
    கிருஸ்தவர்கள்.= நம்பாத வேதகாரர்.
    ஆக சைவ வேளாள தமிழர்களே உலகத்தின் உன்னத மக்கள் ! இவர்கள் தான் அப்பர் ,சுந்தரர் , மணிவாசகர் களின் நேரடி வாரிசுகள். இந்த அகம் பாவம் தான் எல்லா பாதகங்களுக்கும் அடி கோலியது.
    மார்க்சிய -லெனினிய இயக்கம் தீண்டாமைக்கு எதிராக சங்கானை என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் ,முற்ப்போக்கு எண்ணம் கொண்டோரரையும் ஒன்றிணைத்து போராடிய போது, “சைவத்தையும் ,தமிழையும் வளர்த்த தலைமை ” பார்லிமெண்டில் என்ன பேசினார்கள் தெரியுமா ?
    சீனாவுக்கு ஒரு ஷாங்காய்
    ஈழத்திற்கு ஒரு சங்கானை …. என்று நக்கு சுழட்டியது. தமிழ் தேசிய ஒற்றுமைக்கு இது அவசியம் என கருதவில்லை.தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய அந்த போராட்டங்களுக்கு முழுதும் எதிராக நின்றவர் “அடங்கா தமிழன் ” என்று புகழ் பெற்ற சுந்தரலிங்கம் .அவர் தான் தமிழீழம் என்பதை முதன் முதலாய் முன் மொழிந்தவர்.போராட்டத்தில் அவர் மண் கவ்வியது வேறு கதை. இந்த பின்னணி தெரியாத இந்திய தலித்திய வாதிகள் எல்லாம் ஈழத்தில் சாதி பிரச்சனை எல்லாம் கிடையாது என்பது போல கதைப்பது சிரிப்புக்கிடமானது.(தமிழீழத்தில் எல்லாம் இது ஒழிக்கப்பட்டுவிட்டதாம்.)
    சிங்கள இனவாதம் வளர்க்கப்பட்டது போலே தமிழ் இனவாதமும் வளர்க்கப்பட்டது. தீர்வு காண தவறிய தமிழ் தலைமைகள் இளைஞ்ர்களை
    உசுப்பி விட்டது .தை பொங்கலுக்கு தமிழ்ழீழம் வருகுது என்று கதை அளந்தது.தங்களது அரசியல் எதிரிகளின் மேல் இளைஞ்சர்களை ஏவி விட்டது .
    கடத்தல்காரர் எப்படி போராளிகலானார்கள்.?

  12. கடத்தல்காரர் எப்படி போராளிகலானார்கள்.?
    வல்வெட்டித்துறை கடத்தல் கார்களின் கோட்டை! குட்டி மணி பிரபலமான ஒரு கடத்தல் காரர். 1970களில் தடை செய்ய பட்ட வெடி பொருட்களை கடத்தி வருவது அவரது தொழில். வல்வெட்டித்துறை வாசிகளிடம் கடத்தல் தொழில் பற்றி கேட்டால் அது ஒன்றும் தவறான காரியம் கிடையாது /அதாவது சமுதாய குற்றம்கிடையாது /அரச குற்றம் என்று தான் பதில் வரும் .ஏனென்றால் அரசு சிங்கள அரசு ,ஆகவே இது சிங்கள அரசுக்கான செயல் என்பது மாதிரியான் பதில் தான் வரும்.”எப்படியாவது சம்பாதிக்கதானே வேண்டும் இதில் என்ன தவறு”இப்படியான பேச்சு சாதாரணம்.. 1930/40 களிலேயே அங்கு கடத்தல் வளர்ந்திருந்தது.திடீர், திடீர் பணக்காரர்கள் தோன்றி மறைவது அங்கே இயல்பு.கடத்தல் பணம தமிழ் தேசிய வாதிகளுக்கும் பய்ச்சபட்டது.ஆகவே தமிழ் தேசியத்தை த்தட்டிகேட்கும் உரிமை அவர்களுக்கு முதிசம் ஆனது.
    ஆனாலும் சாதி அடிப்படையில் இவர்கள் கரையார்( மீன் பிடி தொழில் ) எனப்பட்டனர்.இது போதும் தானே வெள்ளார்களுக்கு !அவர்களை மட்டம் தட்டுவதற்கு ! பொருளாதரத்தில் உயரத்தில் இருந்த அவர்களை வெள்ளாளர்களால் அடக்கமுடியது போனது.இதன் காரணத்தாலேயே “ஆறுமுக நாவலர்” என்ற சைவ தொண்டரால் கரையார்கள் இழிவு படுத்தபட்டார்கள்.ஆறுமுக நாவலர் சிலை வல்வெட்டித்துறை நோக்கி ஊர்வலமாக வர இருந்த போது ,வல்வையில் மனித மலம் ஊத்த இருப்பதை அறிந்த நாவலர் சிலை ஊரூராக தலை தெறிக்க ஓடியது பொய்யான செய்தி அல்ல.

  13. கடத்தல் நபர்களின் கடல் போக்குவரத்து ,இந்திய தொடர்பு அவர்களை ஒரு சக்தியாக மாற்றி விட்டது.
    சிங்களவர்களின் இனவதாமும் ,இந்தியன் எல்லை விஸ்தரிப்பும் இளைஞ்சர்களின் கண்ணை மறைத்தது.இந்தியாவில் பயிற்சி எடுத்தாரக்ள.இந்திய ராணுவம் பயிற்சி கொடுத்தது. ஈழத்தில் இருந்த மார்க்சிய- லெனினுய வாதிகளை எல்லா இயக்கங்களும் மிரட்டினார்கள். உங்களோடு நிறைய பேச வேண்டும் என்று கூறி மிக சிறந்த மா-லெ தோழர் கங்காதரனை சுட்டு கிணற்றில் வீசினார்கள்.பல தோழர்கள் மிரட்டப்பட்டனர்.மா-லெ தோழர்களோடு உரையாடிய இயக்க வாலிபர்கள் கண்காநிக்கபட்டனர் /சுடப்பட்டனர்.
    தங்களது இயக்கங்களில் துடிப்பான வாலிபர்களை எல்லாம் அழித்தார்கள்.
    சகோதரனை. மச்சானை,மாமனை ,அக்காளை,தங்கையை துரோகிகள் ஆக்கினான்ர்கள். மற்றவர்களுக்கு செய்த போது சிரித்தார்கள்.போராளிகளை “எங்கட பொடியன்கள் ” உச்சி முகர்ந்தார்கள்.”அவங்கள் சும்மா யாரையும் சுடமாட்டான்கள் ” என்றார்கள். வாய் திறந்தவர்கள் எல்லாம் பிணமானார்கள். போராட்டத்தில் இழப்புகள் தவிர்க்க முடியாது என்றார்கள்.
    தங்கள் பிள்ளைகளை எல்லாம் வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள்.
    பத்து லட்சம் பேர் வெளிநாடுகளில் ஊர்வலம் போனார்களே ? ஏன் ? ஏன் யாழ்ப்பாணத்தில் ஊர்வலம் போகவில்லை.? ஏன் போகவில்லை? அங்கு தான் இருக்கிறது அந்த மாபெரும் சக்தி.! அதுதாம் சுயநலம் என்ற சக்தி !வெளிநாடுகளில்ஊர்வலம் போனா உயிருக்கு ஆபத்தில்லை.ஊரில் என்றால் ஆபத்து ! /நாங்கள் வீடியோ பாப்போம் !
    இதுதானே யாழப்பாணத்து மேட்டுக் குடியினரின் அழுகிய புத்தி ! நாங்கள் கோயில் கட்டுவோம், தேர் இழுப்போம் ,சாதி பார்போம் ! தங்களை படித்தவர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் எல்லாம் சர்வதேச தெருக்களிலே தேர் இழுக்கிறார்கள்.
    இந்தியாவில் தமிழ்நாட்டில் உருவான திராவிட எழுச்சியின் பாதிப்பே ஈழத்தில் ஈழ கோரிக்கை எழ காரணம் .ஆனால் அங்கே இருந்த பிராமண
    எதிர்ப்பு, நாத்திகம் ஓரங்கட்டபட்டு மொழி மட்டும் எடுக்கப்பட்டது.தமிழ் நாட்டில் இருந்த முற்போக்கு இங்கிருக்க வில்லை. இன்றும் தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனை கொண்டுதான் எல்லா காரியங்களையும் செய்விக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பார்ப்பானும் ஈழத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
    தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்தார்கள் பொடியன்கள்.மக்கள் அந்நிய பட்டாலும் பரவாயில்லை ,பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் ஈழத்தை நாம் பெற்று விடுவோம் என்றார்கள் .
    சமயம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கள அரசு கொடுக்கும் பணத்தை எல்லாம் வாங்கி கொண்டார்கள். புது புது விளக்கங்கள் சொன்னார்கள்.
    வெளிநாடுகளில் பணம் வசூலித்தார்கள்.சினிமா காட்டினார்கள் .

    காட்டுக்கு ஓடினார்கள். மக்களையும் கொண்டு போனார்கள் .
    என்னென்னமோ எல்ல்லாம் பேசினார்கள் .பேச்சு வரத்தை என்றார்கள் ,கப்பலோட்டினார்கள்.பிளேன் ஓட்டினார்கள்.துப்பு துலக்கினார்கள்.
    ஒன்றும் முடிந்தபாடில்லை ! கள்ள கடத்தல்காரர் தொடக்கி வைத்தார்கள்.

    கள்ள கடத்தல்காரர் ( கே .பி ) முடித்து வைத்தார்.
    இப்போ சொல்லுங்கள் கட்டுரையாளர் ரதி அவர்களே !
    இதற்கெல்லாம் யார் பொறுப்பு ? பிரபாகரனா ? மக்களா ? இந்த தவறுகளை எல்லாம் மனம் திறந்து பேசாமல் முன்னே செல்லும் வழியை காண முடியாது ! இப்படி பேசாமல் போனது தான் எல்லா விபரீதங்களுக்கும் காரணமாயின .வெளி நாட்டு தமிழர்களும் உள்நாட்டு தமிழர்களும் ஒன்றாக உரையாட வாய்ப்பு வேண்டும்.
    உள்நாட்டு தமிழர் தாம் தம்மக்கு என்ன தேவை என்பதை சொல்லவேண்டும் .நாம் இங்கிருந்து கொண்டு திணிக்க கூடாது .அங்குள்ள நிலைமை தான் அதை தீர்மானிக்கும் .

    “எது புற நிலை உன்ன்மைகளோ அதிலிருந்து தான் முடிவுகளுக்கு செல்ல வேண்டும்.ஏற்கனவே முடிவு செய்த கருத்த்தை வைத்து கொண்டு பேச கூடாது ” என்றார் லெனின்.
    அதுவும் இவ்வளவு கேவலப் பட்ட பிறகும் !!!!!


  14. பதிந்தவர் kumanan, January 10, 2010

    தோழர் என்ற வார்த்தையே பாவிக்காமல் தடை செய்த இயக்கம் இரண்டு. ஒன்று புலி. மற்றது ரெலோ. அந்தளவுக்கு இந்த இரண்டு இயக்கங்களும் மாக்சிய விரோத நிலைப்பாட்டில் இருந்தன. இதனை நான் கூறவில்லை. இன்று நாவலனுடன் உறவு வைத்திருக்கும் தோழர் செந்தில்வேல் கூறியுள்ளார். இவ்வாறு செந்தில்வேல் அவர்களால் சுட்டிக்காட்டப்படு���் மாக்சிய விரோத இயக்கமான ரெலோவில் ஏழுவயதில் மாக்சியவாதியான நாவலன் எப்படி சேர்ந்தார் என்பது ஆச்சரியம் மட்டுமல்ல நாவலன் மொழியில் சொன்னால் அதிர்ர்ர்ந்துவிட்ட���ன். அதுவும் முதலில் அற்புதராஜாவுடன் தொடர்பு வைத்திருந்த நாவலன் அற்புதராஜா இருந்த மாக்சிய இயக்கம் என அறியப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தில் சேராமல் மாக்சிய விரோத இயக்கமான ரெலோவில் ஏன் சேர்ந்தார்? இதற்கு பிறவி மாக்சியவாதியான நாவலன் பதில் சொல்லாவிட்டாலும் அவரின் பேட்டியை பிரசுரம் செய்த வினவு பதில் தருமா?

    பதிந்தவர் rajani, January 10, 2010

    ஏழு வயதில் தான் மாக்சியவாதியானேன் என்று நாவலன் வினவு பேட்டியில் குறிப்பிட்டிருப்பத��� படித்த எனது நண்பர் ஒருவர் “அது எப்படி ஏழுவயதில் மாக்சியம் புரியும்?”; என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் “அது ஒன்றுமில்லை. பிரபாகரன் தான் பதினேழு வயதில் போராட்டத்திற்கு வந்ததாக எப்போதும் கூறுவார்.அவரை விட தான் திறம் என்று காட்டுவதற்காக நாவலன் இப்படி கூறுகின்றார்” என்றேன். “அதற்காக ஏழு வயதில் மாக்சியம் எப்படி புரியும்?” என்று மீண்டும் அவர் என்னிடம் கேட்டார். எனக்கு எரிச்சல் வந்துவிட்டது. என்றாலும் சமாளித்து கொண்டு ஒருவாறாக “சம்பந்த நாயனார் மூன்று வயதில் பால் குடித்து ஞானம் பெற்றார் என்பதை எப்படி நம்புறோமோ அதுபோல் எமது நாவலனும் மாக்சிய ஞானம் பெற்றார் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை “ என்றேன். இதைக் கேட்ட நண்பர் சிரித்துக்கொண்டு இப்போது தனக்கு நன்கு விளங்குகிறது என்றார். அதுமட்டுமல்ல “இதுதான் நாவலன் அடிக்கடி கூறும் இயங்கியல் விதி போலும்” என்றார்.

    பதிந்தவர் lingam, January 10, 2010

    வினவு தளத்தில் நாவலன் கூறுகிறார் “சீட்டு பிசினஸ் ஜரோப்பாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை யாரும் செய்ய முடியாது” என்கிறார். தான் செய்த சீட்டு பிசினஸ்ஜ இப்படி சட்டத்தின் உதவி மூலம் மறுக்கிறார். அவருடைய இந்த வாதத்தின்படி பார்த்தால் ஜரோப்பாவில் புலிகள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ள���டியால் அங்கு புலிகள் இயக்கமோ அல்லது அவர்களின் செயற்பாடோ இருந்திருக்கக்கூடா���ு. ஆனால் அங்கு புலிகள் இயக்கம் பலமாக இருப்பதுடன் இன்றும் பல செயற்பாடுகளை மேற்கொள்வதை நாம் பார்க்கிறோம். நாவலன் அவர்களே இது எப்படி நிகழ்கிறது என்று கொஞ்சம் விளக்குவீர்களா? கேட்பவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடியும் என்பார்களாம். ஜரோப்பாவில் அம்பலப்பட்டவர்கள் இப்போது இந்தியாவில் குப்பை கொட்டுகிறார்கள். இந்தக் கூத்து எத்தனை நாள் அரங்கேறும் என பார்ப்போம்.

    பதிந்தவர் aruna, January 10, 2010

    சபா நாவலன் தனது இனியொரு தளத்தில் வெளியிடும் அய்யரின் கட்டுரையில் புதிய புலிகள் என்ற இயக்கத்தின் பெயரை தமிழீழவிடுதலைப்புல���கள் என்று மாற்றியவர்கள் பெயர் பட்டியலில் மனோ மாஸ்டர் அவர்களை குறிப்பிடவில்லை.ஆனால் வினவு வெளியிட்டிருக்கும் நாவலனின் பேட்டியில் மனோ மாஸ்டர்தான் இந்த பெயர்மாற்றத்தை செய்தவர் என்று நாவலன் குறிப்பிட்டுள்ளார். இதில் எது உண்மை எனக் கேட்டு ஒரு நபர் இனியொருவில் பின்னோட்டம் இட்டும் நாவலன் பதில் கூறாது வழக்கம்போல் மௌனம் காக்கிறார். வினவாவது இது குறித்து கருத்து கூறுமா?
    இந்திய உளவுப்படையினால் இயக்கப்படும் ஈ.என்.டி.எல.;எவ் இயக்கத்துடன் அசோக்கிற்கு மட்டுமல்ல சபா நாவலனுக்கும் நெருக்கமான உறவுகள் உண்டு. குறிப்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த ரி.பி.சி ராமராஜ் என்பவருடன் நாவலனுக்கு இருக்கும் நெருக்கம் இதனை நன்கு நிருபிக்கின்றது. ராமராஜ் பின்னனியில் நாவலன் மேற்கொண்ட இந்திய பயணம் ஏற்படுத்தும் சந்தேகத்தை நாவலன் விளக்காவிடினும் நாவலனுடன் உறவு வைத்திருக்கும் வினவு தோழர்கள் விளக்குவார்களா?
    மாவோவின் கட்டுரையை வெளியிட்டு தாங்களும் மாவோயிஸ்டுக்கள் என விம்பம் உருவாக்கும் இனியொரு ஆசிரியர்களான அசோக் நாவலன் ஆகியோரிடம் நேரிடையாக சவால் விடுகிறேன்.தோழர் ஸ்டாலினை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்க���ா? தோழர் ஸ்டாலின் குறித்து மாவோ முன்வைத்த விமர்சனத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ரொட்ஸ்கி குறித்து மாவோ முன்வைத்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறீர்க���ா? அசோக் நாவலன் இருவரும் இதுகுறித்து ஒருபோதும் பதில் அளிக்கமாட்டார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.ஆனால் நாவலனை பேட்டி கண்டு பிரசுரம் செய்யும் வினவு தோழர்கள் இது குறித்து கருத்து கூறுவார்களா?
    மாக்சியத்தின் பேரால் திரிபுவாதத்தை முன்வைத்து எதிர்ப்புரட்சிகர பணிகளை மேற்கொள்ளும் இனியொரு கும்பலை அம்பலப்படுத்துவதே உண்மையான புரட்சிவாதிகளின் பணியாகும்.

  15. நாமும் தான் அதிர்ந்து விட்டோம். மனோ மாஸ்ரர் தமிழ் மக்கள் பேரவையில் இருந்ததாகவே கேள்விப்ட்டுள்ளோம்.
    இவர் தமிழரசன் கொடுத்த அரசியல் விளக்கத்திற்கு விளக்கம் கொடுத்த ஐக்கிய இலங்கைக்கான புரட்சியை முன்வைத்ததாகவே வரலாறு இருக்கின்றது. ஆக இவர் புலிகளில் இருந்து விலகி ரொலேவில் சேர்ந்ததாக கூறுவது எவ்வகையில் சரி என்பதை வினவு அறியத்தருமா? இல்லை தமிழகப் போராளி தமிழரசன் உயிருடன் இல்லை என்பதற்காக யாரும் எதைனையும் கூறிவிட முடியுமா?

  16. தனிநபர் தாக்குதல்களா அல்லது கருத்தை சுமந்து திரியும் நபர்கள் மீதான தாக்குதலா? இதனை எவ்வாறு பாகுபடுத்துவது. கருத்துக்கள் பல வகை கொண்டிருக்கின்றது. இதில் புரட்சிகர – எதிர்ப்புரட்சிகர கருத்துக்கள் என்றிருக்கின்றது. இந்த கருத்தைச் சுமந்து வருபவர்களை அம்பலப்படுத்த வேண்டாம் எல்லாவற்றை மறைத்து விடுவோம் என்று கூறுவது எந்தவகையில் சரியானது என்பதை நடுவராகிய வினவு கூறுவீர்களா?

    நபர்களின் பிரபல்யம் என்பது புரட்சியை சாதித்து விடுமா? அல்லது எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு விட்டு தமிழ் பேசும் மக்களை மாத்திரம் அல்லாமல் அனைத்து இன வர்க்கத்திற்கும் துரோகம் செய்யும் என்பதை ஏன் நடுவராகிய வினவு எச்சரிக்க முயலவில்லை?

    இங்கு வினவின் பங்காக எதிர்ப்புரட்சிகர முகாமின் செயற்பாட்டு யுக்தியா வெற்றி கொண்டிருக்கின்றது என்பதை சமூகத்திற்கு முன் கொண்டுவர வேண்டிய வரலாற்றுக் கட்டாயமும் இருக்கின்றது.

    ம.க.இ.க போன்ற புரட்சிகர அரசியலில் இருந்து தடம் புரட்டுவரும் எதிர்ப்புரட்சிகர கூறுகளை வெற்றி கொள்ள வேண்டிய தேவை ம.க.இ.க விற்கு உண்டு என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இன்றுள்ளது.

    கணணி வசதிபடைத்த நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கம் புரட்சிக்கு கண்ணிமாக நடப்பதை பாசாங்கு செய்து கொண்டு எதிர்ப்புரட்சிகர கருத்துக்களை விதைப்பதை புரட்சிகர சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • ஏம்பா டேனியல், புலம் பெயர் நாடுகளில் உள்ள மார்க்சியவாதிகளான நீங்கள் ஒரு 10 பேர் தேருவீங்களா? உங்களுக்குள்ள ஒரு ஒத்துமைய கட்டி அமைக்கவும், முரண்பாடுகளை பேசி தீக்கவும் முனைப்போ, உழைப்போ இல்ல, நடைமுறையில இருக்குற கட்சியில்ல, எது சரியான வழிங்கறதுல ஒரு விவாதம் இல்ல.. புலி எதிர்ப்புங்கள ஒன்னத்தவிர உங்களுக்குள்ளாற எதுலயாவது ஒத்துமையிருக்கா. எவன் உசத்திங்கற தெருச்சண்ட, அடுத்தவன் எப்படியெல்லாம் கேவலமானவன்கறத நிரூபிக்கற ஜேம்சு பாண்டு வேல, இத்ததானேய்யா 20 வருசமா செஞ்சுகிட்டு வற்றீங்க.  இதுக்கு ஒரு நேர்மையான சுயவிமர்சனம் ஒருத்ருகிட்டயும் இல்ல.இப்படி பொழப்பு நாறும் போதே செயல்பாட்டுல இருக்குற அமைப்புகள நொட்ட செல்றீங்களே..? விளங்கிடும்!

  17. புலிகள் இயக்கம் இரண்டாக பிளவுபட்டபோது பலர் “புதியபாதை” என்னும் பிரிவாக செயற்பட்டனர். சிலர் பிரபாகரன் தலைமையில் செயற்பட்டனர். புதியபாதை மீண்டும் பழைய பாதையில் செல்வதை கண்டு விரக்தியுற்ற வாத்தி, மாமா, ஜயர்,அழகன், நெப்போலியன் ஆகியோர் அதில் இருந்து விலகினர். இதில் வாத்தி ,ஜயர், மாமா ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா சென்றனர். இந்நிலையில் பிரபாகரனுடன் சென்ற மனோமாஸ்டர் மற்றும் சசி என்பவர்கள் பிரபாகரனுடன் முரண்பட்டு அதில் இருந்து விலகினார்கள். வாத்தி, அய்யர்,மாமா ஆகியோரின் ஆதரவுடன் நாட்டில் இருந்த அழகன்,நெப்போலியன்,மனோமாஸ்டர்,சசி,பாலன்,மனோ ஆகியோரால் “தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை” என்னும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாக்சிச லெனிச மாவோசிச வழியில் ஜக்கிய இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சி என்னும் கொள்கையை முன்வைத்து “பேரவை” இயக்கம் இயங்கியது. இந்திய நக்சல்பாரிகள் சிலரின் உதவியுடன் இந்தியாவில் இருந்த வாத்தி தயாரித்து அனுப்பிய இவ் கொள்கை விளக்கத்தை “பேரவை”யின் கொள்கையாக ஏற்கவைத்ததில் மனோமாஸ்டரின் பங்கு அளப்பரியது. ஆனால் 1983 ம் ஆண்டு கலவரத்திற்கு பின்னர் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் மனோமாஸ்டர் “பேரவையில்” இருந்து விலகி “ரெலோ” இயக்கத்தில் செயற்பட வைத்தன. மாவோயிச வழியில் ஜக்கிய இலங்கையில் புதியஜனநாயகப் புரட்சி என கூறிய மானோ மாஸ்டர் மாக்சிய விரோத இயக்கமான ரெலோவில் சேர்ந்து செயற்பட்டது தவறு என பேரவைத் தோழர்கள் அப்போது சுட்டிக்காட்டினார்கள். ரெலோவில் நடந்த உட்கட்சிப் பேராட்டத்தின் பின்னர் மனோமாஸ்டரும் தனது தவறினை பேரவைத் தோழர்களிடம் ஒத்துக்கொண்டார்.
    எனவே மானோமாஸ்டர் புலிகள் இயக்கத்தில் இருந்து நேரிடையாக ரெலோ இயக்கத்திற்கு வந்ததாக பொருள்பட நாவலன் பேட்டியில் கூறியிருப்பது தவறாகும். அதேபோல் மனோமாஸ்டர் ஜக்கிய இலங்கைக் கொள்கையில் இருந்தார் என்பதையும் நாவலன் தனது பேட்டியில் குறிப்பிட தவறியுள்ளார்.
    மேலும் புதிய புலிகள் என்னும் பெயரை தமிழீழவிடுதலைப்புலிகள் என பெயர் மாற்றம் செய்ததில் மனோமாஸ்டருக்கு எந்தப் பங்கும் இல்லை. அதை அய்யரும் தனது கட்டுரையில் தெரியப்படுத்தியுள்ளார். எனவே தான் பேட்டியில் கூறியது தவறு என்பதை நாவலன் இப்போது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
    1983ம் ஆண்டுக்குப் பின்னரே நாவலன் அரசியலுக்கு வந்தமையினால் அவருக்கு முன்னர் நடந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர் கூறிய தவறுகளை பெரிது படுத்த தேவையில்லை. மேலும் அவர் ஒருபோதும் மாக்சிய இயக்கம் எதிலும் இருந்ததில்லை. மாக்சிய விரோத இயக்கமான ரெலோவில் அதிலும் ஓரிரு வருடங்களே இருந்துள்ளார். எனவே அவர் மாக்சிய இயக்கங்கள் குறித்தோ அல்லது போராட்ட வரலாறு குறித்தோ தவறான கருத்துக்களை வெளிப்படுத்துவது குறித்து ஆச்சரியபட தேவையில்லை.

  18. கடுப்பாகிப்போனவன்

    அவர்களே

    நீங்கள் குறுப்பிடும் தனிநபர் சொந்த நடத்தை பற்றிய கிசுகிசு மாதிரி எழுத்துக்களில் நமக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும் பொதுவாக்க கருத்தைப் பற்றிய விமர்சனங்களும் மற்றும் வரலாற்றை தமது பங்கிங்கு தமது எண்ணத்திற்கு இசைவாக கூறுவது பற்றியே இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
    ஐரோப்பிய வாழ்நிலையில் புரட்சிகர செயற்பாட்டைக் கொள்வார்கள் என்பது பற்றி நடைமுறைதான் விடைகொடுக்கும். ஒரு சமூகமாற்றத்தை விரும்பும் மனிதன் என்ற வகையிலும் சமகால நிகழ்வுகளுக்கு கருத்துக் கூறமுடியும் தானே.

  19. சபா நாவலன் கூறும் பல விடயங்கள் நேர்மையாகவும், ஜதார்த்தமாகவும், நிதர்சனமாகவையும் தெரிகின்றன. இருப்பினும் வல்வெட்டித்துறை ஆதிக்கம் குறித்து சற்று வெறுப்பு உணர்வோடு கூறுவது போல் இருக்கின்றது, அக்காலத்தில் விடுதலை போராட்டத்திற்கு பணம் தேவையாக இருந்ததும், கடல் பயணங்கள் தவிர்க்க முடியாமல் இருந்ததும் உண்மையானதே. MGR ஒரு இந்திய உளவாளி என்பதை புலிகள் MGR உடனான அல்லது அவரின் நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்திருப்பதன் மூலம் உணர்ந்து இருக்கமுடியும். புலிகள் உட்டபட ஏனைய தமிழ் தரப்பினரும் பகுப்பாய்வு முறைமையை கையாளவில்லை. மேலும் எனது கருத்துக்களையும் இங்கு உங்களிடம் பகிர்கின்றேன்.

    அடக்கப்பட்ட இனம் மிகவும் அவதானத்துடன் நிமிர வேண்டும், அதற்க்காக எல்லோரையும் சந்தேகப் படுதல் என அர்த்தம் அல்ல. யார்தான் சகோதர கொலைகளை செய்யவில்லை அவர் அவர் தம் விரல் வீககங்களுக்கு ஏற்ப படுகொலை செய்தவர்களே. LTTE, PLOTE, EPRLF, TELO,TEA……..
    எல்லோரும் தமிழர்களின் எயமனர்களாகவே இருந்தனர் இருக்கவும் ஆசைப் பட்டனர். அவர் அவர் தமது பலப் பரிட்சையின் அடிப்படையில் முன்னுக்கு வந்தனர். இவர்களை எல்லாம் ஒருநிலை படுத்தி, தவறுகளை திருத்தி சரியான பாதையில் விடுதலைப் போராட்டத்தை தடம் பதிக்க செய்ய முடியாத ப(த)டித்த புத்தி ஜீவிகளான எமது சமூகம், மோட்டு சிங் களவனிடம்? தோற்று விட்டோம். பிரபாகரனை குறை சொல்லுவதோ அல்லது வாழ்த்து பாடுவதோ இன்றைய காலத்தின் தேவை அல்ல. இக்கட்டுரை மூலம் நாம் எதிர் காலத்தில் எவ்வாறு புத்தி பூர்வமாக செயல் படவேண்டும் என்பதே எமக்குரிய செய்தியாக இருக்க வேண்டும். “யதார்த்தத்தை விளங்கி கொள்ள முடி யாத புத்தி ஜீவித்தனம் செத்துப்போன பிணம் ஒன்றின் மூளைக்கு சமனானது”. (கிட்டத்தட்ட ஈழதமிழர்களைப் போல, அவர் தம் போராட்ட முனைப் புகளை போலவும்…) மிகச் சரியான விடுதலைப் போராட்டம் பிழையான முறையில் வழிநடத்தப் பட்டதா?… இதனை விவாதித்து கொண்டிருப்பதில் பயனில்லை. நிகழ் காலத்திற்கும் எதிர் காலத் திற்குமாய் சரியான வழி முறைகளை தேடுவோம். இறுதியாக அனைவரிடமும் பகிர்வதற்கு சில விடயங்கள். …
    சரியான சக்திகள் பிழையான முறையில் போராடி தோற்றன. பிழையான சக்திகள் சரியான முறையில் போராடி தோற்றன. எங்குமே யனநாயக பண்பு இரட்சிக்கப் படவில்லை. போராட்டம் மக்கள் மயப் படுத்தப் படவில்லை.

    சுதந்தர போராட்டம் என்பது முழுமக்களின் பங்களிப்புகளின் மூலம் உட்கட்சி ஜனநாயகம், சமத்துவ பேணல், கருத்தாய்வு, பகுப்பாய்வு ராஜதந்திர நகர்வு என்பவற்றின் மூலம் கட்டுமானம் இடப்பட்டு வளற்ச்சி அடையுமாயின், அது முழுமை அடையும்.

    “வீதிக்கு இறங்கி கொடியை தூக்கி கோசம் போடுதல் மாத்திரம் மக்கள் போராட்டம் என அர்த்தம் கொள்ளுதல் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் அனர்த்தம் மாத்திரமே! அது தான் மக்கள் போராட்டம் என்றால் ஒரு புரட்சிகர உழைப்பிற்க்கு அர்த்தம் இருக்காது”.

    எனவே வெறும் விமர்சனங்கள் கறிக்கு உதவாது. வீண் விவாதங்கள் மூலம் சமூக வறட்சியை உருவாக்கமுடியுமே தவிர சமூக மலர்ச்சியை அல்ல. உங்கள் விவாதங்கள் விமர்சனங்கள் சமூக விடுதலையை, தேச உருவாக்கத்தை, ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்குமே ஆனால் எழுதுங்கள்.

    அத்துடன் அத்துடன் எழுத்தில் மாத்திரம் கவனம் செலுத்துவதோடு நில்லாது புலத்திலும் தளத்திலும் செயலூக்கமான வெகுஜன கட்டுமானங்களை உருவாகுவதற்கும் சமகாலத்தில் முயற்சிக்க வேண்டும்.

    இல்லையேல்! சூ(பே)னாவின் முனையால் தொடர்ந்தும் சிந்தியுங்கள். உங்கள் எயமானர்களின் எலும்பு துண்டிற்காய்………..

    பண்புடன்
    S.G.ராகவன். (கனடா)

  20. யாழ்பாணத்து படித்த / மேட்டு குடியினரின் கோஷமான தமிழீழம் மீள் ஆய்யுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.புலம் பெயர்ந்த நாடுகளில்லிருந்து கொண்டு அங்குள்ள மக்களை மேலும் ஆபத்தில் வீழ்த்த கூடாது.
    ” அத்துடன் அத்துடன் எழுத்தில் மாத்திரம் கவனம் செலுத்துவதோடு நில்லாது புலத்திலும் தளத்திலும் செயலூக்கமான வெகுஜன கட்டுமானங்களை உருவாகுவதற்கும் சமகாலத்தில் முயற்சிக்க வேண்டும்.” என்பது சரியான பார்வை.
    விடுவார்களா பினாமிகள் ?????!!!!!

Leave a Reply to Rathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க