privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்பார்வதியம்மாள், நளினி - அறிக்கை நாயகர்களின் IPL !!

பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!

-

vote-012‘‘ஆத்திரந்தான் தாங்க முல்ல(முடியல)….. ஆனா அறிக்கைக்கு மேல் தாண்ட முல்ல,”’’ மக்கள் கலை இலக்கியக் கழகம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் கடந்த கால அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக வெளியிட்ட பாடல் ஒலிப்பேழையின் ஒரு பாடலில் இப்படியான வரிகள் வரும். இன்றைய கருணாநிதியின் ஆட்சியிலும் தமிழ் தேசியவாதிகளின் நிலை இதுதான். இனி எவரேனும் ஈழம் தொடர்பாக ஆவேச அறிக்கைகளோ, ஆர்ப்பாட்டங்களோ செய்தால் ஆயுட்காலம் வரை சிறையில் தள்ளுவோம் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரும் என்றால் இவர்கள் அறிக்கை விடுவதையும் நிறுத்தி விடுவார்கள். இதுதான் இன்றைய திராவிட, தமிழ் தேசிய. ஈழ ஆதரவாளர்களின் நிலை.

ஆறு மாத கால மருத்துவ விசா பெற்று சென்னை வந்த பிராபகரனின் தாயார் பார்வதியம்மாளை, தமிழக போலீசின் துணையோடு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். அனுப்பியவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்று கருணாநிதி ஆதரவாளர்களும், “இல்லை இல்லை கருணாநிதிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது” என்று ஈழ ஆதரவாளர்களும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் எண்பது வயது முதிய தாய் இப்போது தற்காலிக விசாவில் மலேசியாவிற்கு விரட்டப்பட்டிருக்கிறார். விரைவில் அவருக்கான விசா காலம் முடியும் போது, அவர் விண்ணப்பித்திருக்கும் கனடா நாட்டிற்கான விசாவும் மறுக்கப்படும் நிலையில் மீண்டும் அவர் கொழும்புவுக்கே திரும்பக் கூடும். அப்படித் திரும்பினால் சிங்கள பாசிச பேரினவாத இலங்கை அரசு அவரை  மீண்டும் முகாம்களுக்குள் முடக்கக் கூடும். அல்லது முகாம்களிலிருக்கும் மக்களின் அவலம் பற்றிய பேச்சு புதிதாக எழாமல் இருக்க அவர் கனடாவுக்கு அனுப்புவதும் நடக்கலாம். இல்லை அவரை வைத்து புலம் பெயர்ந்த மக்களிடம், புலிகள் மீண்டு வரும் பேச்சுக்கள் எழலாம் என்றால் இலங்கையிலேயே முடக்கலாம்.

____________________________________________________

பார்வதியம்மாளை வைத்து நடத்தப்பட்ட ஐ.பி. எல் மேட்ச்:

பார்வதியம்மாளை வைத்து மேலாதிக்க இந்திய அரசும், கருணாநிதி தலைமையிலான பிழைப்புவாத மாநில அரசும், நெடுமாறன், வைகோ முதலான அட்டைக் கத்தி வீரர்களும் நடத்திக் கொண்டிருக்கும் விளையாட்டின் தொடக்கப்புள்ளி பிரபாகரனது தந்தை வேலுப்பிள்ளையின் சவ அடக்கத்தில் இருந்து துவங்குகிறது. ரகசிய தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இறந்த போது நெடுமாறன், வைகோ, திருமா என எல்லா தமிழின ஆர்வலர்களும் அறிக்கை விட்டனர். ஆனால் போரின் போது ஜெயலலிதா, கருணாநிதி என்று பிரிந்து நின்ற ஈழ ஆதரவாளர்களிடையே யார் ஸ்கோர் செய்வது என்ற போட்டி இருந்தது.

திருமா அறிக்கை விடுவதை விட அதிக பட்சமாக தனது தி.மு.க ஆதரவு எம்.பி பதவியைப் பயன்படுத்தி வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே பார்வதியம்மாளோடு அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பார்வதியம்மாளை தன்னிடம் அனுப்ப வேண்டும் என்று அவரது நண்பர்களான இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இங்கே வந்து பார்வதியம்மாளை சந்தித்த அனுபவம் பற்றி பக்கம் பக்கமாக ஜுனியர் விகடனில் உருகி எழுதினார். அதில் “கனடாவில் வந்து பிரபாகரன் தன்னைச் சந்திப்பாரென” பார்வதியம்மாள் சொன்னதாக எழுதினார். திடமான சிந்தனையோடு அவர் இருப்பதாகக் கதைத்தார். பின்னர் அதே தொடரில் அவரிடம் தடுமாற்றம் இருந்ததாகவும் எழுதினார். ஆனால் ராஜபக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தும் போது திருமா தடுமாறவில்லை என்பது முக்கியம்.

திருமா போய் பார்வதியம்மாளை சந்தித்து ஸ்கோர் செய்வதை  பொறுக்க முடியாத கலிங்கப்பட்டி சிங்கமோ, “பார்வதியம்மாளை அழைத்து வந்து என் தாய் போல பார்த்துக் கொள்ளப் போவதாக” முழங்கினார். சாதாரண போராளிகளைப் பெற்ற மக்களெல்லாம் முகாமில் என்ன ஏதுமென்றே தெரியாமல் சாகும் போது கூட சிங்கம் தனது கர்ஜனையை விடவில்லை. கடைசியில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தின் முயற்ச்சியில் பார்வதியம்மாள் இலங்கையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். மலேசியா சென்றார்கள். கனடாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்த போது கனடா பார்வதியம்மாவுக்கு விசா மறுத்தது.

பின்னர் இந்தியாவுக்கு விசா கேட்டு முயற்ச்சித்த போது ஆறு மாத மருத்துவ விசா வழங்கியது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம். இது யாரோ ஒரு குமஸ்தாவின் தவறினால் கூட கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். தகவல் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும்  தெரிவிக்கப்பட, அவர்கள் பார்வதியம்மாளை வரவேற்க இரவு பத்து மணிக்கு மேல் இரகசியாமாக சென்னை விமானநிலையத்திற்குச் சென்றார்கள். ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்பே விமான நிலையத்தின் வெளிப்பகுதியையும், பார்வையாளர் பகுதியையும், வரவேற்ப்புப் பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை புறநகர் போலீசா கொண்டு வந்திருந்தனர்.

தலைவர்கள் எவரும் பார்வதியம்மாளை நெருங்க விடாமல் தடுத்த போலிசார், பார்வதியம்மாளையும் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். நெடுமாறனும், வைகோவும் அழைக்கச் சென்றது பிரபாகரனின் தாயாரை. இவர்கள் ஏன் இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை? “பார்வதியம்மாள் வருகிறார், வரவேற்க வாருங்கள்” என்றிருந்தால் கூட சில ஆயிரம் பேர் திரண்டிருப்பார்களே! தனியாகச் சென்று இவர்களால் சாதிக்க முடிந்தது என்ன? முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் தொடங்கி தமிழக மக்களின் அரசியல் எழுச்சியை எத்தனை முறை காயடித்த இவர்கள் பார்வதியம்மாளுக்கு செய்தது  இறுதிக்கால உதவியா? அல்லது கையாலாகாதத்தனமா?

இந்தியாவில் சில அதிகாரிகள் மற்றும் டெல்லித்தலைவர்களை வைத்து ஈழத்தை நைசாக தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கணக்குப் போட்டவர்களல்லவா! அத்தகைய லாபி வேலைகள் காயடிக்கப்பட்டாலும் அதை ஒத்துக்கொள்ளாத வீரர்கள் எந்தக் காலத்திலும் தமிழக மக்களைச் சார்ந்து போராடியதில்லை. இங்கு கூட பார்வதியம்மாளின் வருகையை வைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க வாய்ப்பு இருந்தும், அப்படிச்செய்தால் இந்திய அரசு அந்த அம்மாளை திரும்ப அனுப்பிவிடும் என்றே இவர்கள் யோசித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களை மன்றாடி, தாஜா செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்பதுதானே முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிந்தது?

___________________________________________________

சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்….

காரணம் – 1

2003இல் தமிழகத்தை விட்டு பிரபாகரனின் பெற்றோர் சென்ற போது அவர்கள் திரும்பினால் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய புலனாய்வுத்துறைக்கு ஜெயலலிதா எச்சரிக்கைக் கடிதம் எழுதியவுடன் பார்வதியம்மாளின் பெயரையும் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்து விட்டது இந்திய அரசு. அதனால்தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது கருணாநிதியின் வாதம்.

காரணம் – 2

செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாக மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணம். அதற்காக விரைவில் அன்னை சோனியாவை சந்திக்கப் போகிறார் அய்யா. இந்த நேரத்தில் அதுவும் நெடுமாறன், வைகோ மூலமாக வரும் பார்வதியம்மாளை இங்கே அனுமதித்து ஏதாவது ஒன்று ஆகிப்போனால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத இன்னொரு தலைவலியை சந்திக்க நேரிடும், என்று கருணாநிதியே தமிழகத்தில் சிகிச்சை அளிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இது ஈழ ஆதவரளார்களிடையே சொல்லப்படும் காரணம்.

இந்த இரண்டு காரணங்களுமே உண்மையானவைகளாக இருக்கும் எல்லா சாத்தியங்களோடுதான் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைமைகளும் இயங்குகின்றன. இந்த இரண்டு துரோக, வஞ்சக தலைவர்களின் அடிவருடிகளாக மாறிப் போன ஈழ ஆதரவாளர்களின் நிலையைப் பாருங்கள். முத்துக்குமாரின் மரணத்தின் போது ஜெ-வின் மனம் புணபடக்கூடாது  என்று நினைத்த வைகோ இந்த விஷயத்திலும் கருணாநிதியைத் திட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். இன்னொரு ஈழ நடிகரான திருமாவோ கருணாநிதிக்கு இதில் தொடர்பில்லை எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு என்று பதறிப்போய் அறிக்கை விடுகிறார். அதையே கி.வீரமணியும் கருணாநிதியின் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திடீர் ஈழத் தயாக மாறிய ஜெ இப்போது கொடநாட்டில் செட்டிலாகிவிட்டார். கடிதம் எழுதாமல் கூட இவர்களை ஏமாற்றலாம் என்பதை தெரிந்து கொண்ட கருணாநிதியோ பார்வதியம்மாள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் அதை பரிசீலித்து மத்திய அரசுக்கு வழக்கம் போல் கடிதம் எழுதத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

போருக்குப் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மக்களின் முதியவர்களின் கதை பரிதாபகரமானது. பலரும் நந்திக்கடலில் தங்கள் குடும்பத்தின் முதியவர்களை விட்டு விட்டு வந்த பரிதாபக் கதைகளும் உண்டு. பேரினவாத இலங்கை அரசு தமிழ் மக்களுக்காக அமைத்த வதை முகாம்களில், முதல் மூன்று மாதங்களின் சராசரியாக வாரம் ஒன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று தெரியாத பல முதியவர்கள் இப்போது நல்லூர் கந்தசாமிக் கோவில் வாசலிலிலும், யாழ்பாணத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டூரிஸ்டுகளாக வரும் சிங்களர்களிடம் கையேந்தி நிற்கும் ஈழத் தமிழ் முதியவர்கள் குறித்தோ, போரில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் மக்கள் குறித்தோ பேசாத தமிழ் தேசியவாதிகள், பார்வதியம்மாளுக்காக பேசுவது அவர் பிரபாகரனின் தயார் என்பதால்தான். அதனால்தான் பார்வதியம்மாளை அபகரித்து தாங்கள் பேணுவதன் மூலம் தங்கள் மீது விழுந்துள்ள கறைகளைக் கழுவ நினைக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு தாங்களும் ஒரு காரணமென்று அதாவது புலிகளுக்கு தமிழகத் தேர்தலை வைத்து நம்பிக்கையூட்டியவர்கள், பா.ஜ.கவும், ஜெயாவும் வந்தால் கூட அதே முடிவுதான் என்பதைக்கூட ஏற்காத புத்திசாலிகள் இப்போது பிரபாகரனது அம்மாவை வைத்து தங்களது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

_____________________________________

அரசியல் நேர்மையின்மை

பிரபாகரன் இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் விரைவில் வெடிக்கும் என்று அவ்வப்போது அறிக்கை விடுவதுதான் நெடுமாறனின் அரசியல் அஜெண்டா. “கடைசி வரைப் போராடி களத்தில் நின்று போராளிகளும் பிரபாகரனும் மடிந்தார்கள்” என்று  எழுதினால்கூட துரோகி என்கிற இவர்களிடம், “பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார்” என்று கேட்டால், “அதற்குத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்” என்று துவக்கத்தில் சொன்னவர்கள், இப்போது “பிரபாகரன் தமிழ் மக்களின் இதயங்களில் வாழ்கிறார், அவர் நேதாஜியை நேசித்தார், நேதாஜி போலதான் அவரும்” என்று அடுத்த ஏமாற்று தந்திர அஸ்திரத்தை ஏவுகிறார்கள்.

ஈழ மக்களின் நிராதரவான வாழ்வு பற்றிய மவுனம், பிரபாகரன் வருவார் என்று அவருக்கும் போராளிகளுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக்கூட வழங்காமை என்று புலிகள் ஆதரவுக் கண்ணோட்டத்தின்படியே கூட ஒட்டு மொத்த அரசியல் வீழ்ச்சிக்கே இவர்கள்தான் காரணம். பத்தாம் பசலித்தனமான இவர்களின் நடவடிக்கையைப் புரிந்து கொண்ட இந்திய அரசோ, இவர்களை டீல் செய்வது ஈஸி என்று ஏகத்துக்கும் ஆட்டம் காட்டுகிறது. பாவம் அறிக்கையைத் தாண்டி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தங்கி நிற்கிறார்கள் அறிக்கை நாயகர்கள்.

இந்திய ஆளும் வர்க்கங்களை நம்பித்தான் ஈழத்தின் தலைவிதி இப்படியான துயர நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதில் பாதி பங்கு புலிகளுக்கும், மீதி பங்கு அவர்களின் குத்தகை ஆதரவாளர்களான இந்த அறிக்கை நாயகர்களுக்கும்தான் சேரும். தமிழக மக்களை அரசியல் எழுச்சி மூலம் அணிதிரட்டி டெல்லியைப் பணியவைக்கலாம் என்ற நம்பிக்கை அற்ற புரோக்கர் அரசியல்வாதிகள் பார்வதியம்மாள் என்ற மூதாட்டிக்கு மட்டும் எப்படி சிகிச்சை வழங்க முடியும்? முதலில் எல்லாவகை நோய்களையும் கொண்டு அரசியல் நடத்தும் இந்த அறிக்கை நாயர்களை தமிழக மக்களும், ஈழ மக்களும் கண்டு கொள்ளவேண்டும்.

__________________________________________

டோண்டு ராகவனின் திமிர் பற்றி…….

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய செயலை பதிவுலகில் அனைவரும் கண்டிக்கும் போது அக்மார்க் பார்ப்பனரான டோண்டு மட்டும் அதை ஆதரித்து சோவின் குரலைப் பிரதிபலிக்கிறார். இங்கே டோண்டு ராகவனை பதிவுலகில் பலரும் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களது கண்டிப்பில் கூட அரசியலுக்குப் பதில் ஒரு முதிய மூதாட்டியைக் கூட மனிதாபிமானம் இல்லாமல் டோண்டு வெறுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் டோண்டுவுக்கு மனிதாபிமான ரீதியான வெறுப்பு இப்போதா புதிதாக வந்திருக்கிறது?

அவர் பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இசுரேலைப் புகழ்கிறார். குஜராத்தில் இந்துமத வெறியர்கள் மோடி தலைமையில் முசுலீம் இன மக்களைப் படுகொலை செய்த போது மோடியை ஆதரிக்கிறார். டாக்டர் ருத்ரன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறார் என்பதால் அவரை மனநலமற்ற மருத்துவர் என்று இழிவாகப் பேசுகிறார். ஓட்டல் தொழிலாளிகள் சலிப்பாக வேலை செய்தால் பாய்ந்து பிடுங்குகிறார். நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரிக்கும் போது பெரியார் மணியம்மை திருமணம் பற்றி நரித்தனத்துடன் எழுதுகிறார். இப்படி எல்லா சமூகப் பிரச்சினைகளிலும் மக்கள் விரோத சிந்தனையைக் கொண்டிருக்கும் டோண்டு, பார்வதி அம்மாளின் பிரச்சினையில் அவர் பார்வை படி சரியாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பார்வையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் வெறும் மனிதாபிமான முறையில் அவரைக் கண்டிப்பதனால் டோண்டுகளின் கொழுப்பு குறையப் போவதில்லை.

__________________________________________

நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு – கருணை கோராதே, அரசியலாக்கு…….!!

மிகப் பெரிய மனிதப் படுகொலையை துணை நின்று நடத்தி முடித்து விட்டன, இந்திய இலங்கை அரசுகள். இனிமேலாவாது இந்தியா தமிழ் மக்கள் மீது கருணை காட்ட வேண்டும், காட்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அதனால்தான் இவர்கள் தொடர்ந்து ஈழம் அமைவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்றும். அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு ஈழம் என்றும், ஈழத்தை ஒரு அடியாள் தேசமாக கற்பனை செய்கிறார்கள். இதற்கெல்லாம் இந்தியா மசியுமா, என்ன?

இந்தியாவின் அடியாளாக ஈழம் இருப்பதை விட, இந்திய முதலாளிகளின் சந்தைக்காக ஒன்றுபட்ட இலங்கைதான் தேவை என்பது என்றோ முடிவாகிவிட்ட விசயம். மற்றபடி பேரினவாதத்தின் பிடியில் சிக்கித் திணறும் ஈழ மக்களின் கண்ணீரெல்லாம் இந்தியாவிடம் செல்லுபடியாகாது. அப்படியான கருணை எதையும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது இந்தியா காட்டாத போது அவர்களின் நிலங்களை குறிவைத்து போரையும் நடத்தி வருகிறது. இப்படியிருக்க நாட்டின் இன்னொரு எல்லையோரச் சமூகமான ஈழத் தமிழ் மக்களிடம் மட்டும் எப்படி இந்தியா கருணை காட்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை. இம்மாதிரி சிந்தனைப் போக்கில் இருந்துதான் நளினி மீது சோனியா கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் பிறக்கிறது.

நளினியின் விடுதலை மறுக்கப்படும் ஒவ்வொரு வேளையும் ராஜீவ் கொலையை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஈழத்தில் நரவேட்டையாடிய பாசிச ராஜீவின் கொலை என்பது அதன் எதிர்வினையே என்பதை முகத்திலறைந்து சொல்ல வேண்டும். ராஜிவ் காந்தியை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கு பசப்பத் தேவையில்லை. ஆம். புலிகள்தான் கொன்றார்கள். ஆனால் அதன் மூலத்தை விசாரிக்க வேண்டும் என்று நாம் கோரினால் இறுதியில் ஈழத்திற்கு படை அனுப்பிய ராஜீவும், இந்திய அமைதிப் படை இராணுவத்தின் அதிகாரிகளும்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள்.

இதை அரசியல் ரீதியாக எழுப்பி, அதற்கு ஆதரவாக தமிழக மக்களை அணிதிரட்டி போராடும் போதே நளினியை மட்டுமல்ல, அநியாயமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மற்ற போராளிகளையும் விடுவிக்க முடியும். மாறாக நளினி இருபது வருடம் சிறையில் இருந்துவிட்டார், ஏதோ கொஞ்சம் பாத்து விடுதலை செய்யுங்கள் என்று மனிதாபிமான முறையில் பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. இதைத்தான் கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ முதல் அரசியலே தெரியாமல் பிதற்றும் உண்மைத்தமிழன் வரை பலரும் பேசுகிறார்கள். இந்த மனிதாபிமான முகமூடிக்குள் ஒளிந்திருப்பது இந்திய அடிமைத்தனம். இந்த அடிமைகளை நம்பி ஈழம் மட்டுமல்ல, நளினியும் விடுதலை அடைய முடியாது.

நளினியை விடுதலை செய்யக் கோரும் குரல்கள் இனி எழக்கூடாது என்பதற்காகத்தான் சிறையில் செல்பேசி சிக்கியதாக ஒரு புதுக்கதையை கிளப்பியிருக்கிறார்கள். இதன்படி நளினிமேல் புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு அவரது நிரந்தர சிறை உறுதி செய்யப்படும். மனிதாபிமான முறையில் குரல் எழுப்பியவர்கள் கூட இந்த சட்டப்படியான தண்டனை நீட்டிப்பை எதிர்க்க முடியாதல்லவா!  அரசியலற்ற குரல்களை அரசியல் சட்டப்படியே முடக்கிவிட்டார்கள்.

எனவே நளினி பிரச்சினையில்அரசியல் நேர்மையோடு  அணுகாமல் சோனியாவிடமும், கருணாநிதியிடமும், மனுக் கொடுப்பதால் ஆகப் போவது எதுவும் இல்லை. நளினியிடமோ, பார்வதியம்மாளிடமோ இவர்கள் கருணை காட்டப் போவதும் இல்லை. அரசு பயங்கரவாதம் உங்களை மென்மையாக அதட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றால் அறிக்கைதான் பதிலாக வருகிறது. ஆமாம் அறிக்கைகள்…… அறிக்கைகள்….. அறிக்கைகள்……….ஆமாம் இவர்கள் அறிக்கைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவற்றினைப் புறந்தள்ளி அரசியலைப் பேசுவோம். அநியாயத்தினை வெல்வோம்.

________________________________________________

–    இராவணன்

(தோழர் இராவணன், வினவு தளத்தில் மட்டும்தான் எழுதுகிறார்; மற்ற தளங்களில் எழுதுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. //இந்த மனிதாபிமான முகமூடிக்குள் ஒளிந்திருப்பது இந்திய அடிமைத்தனம். இந்த அடிமைகளை நம்பி ஈழம் மட்டுமல்ல, நளினியும் விடுதலை அடைய முடியாது//
    சரியான கருத்து…. வெட்டி பேச்சு வீரர்கள்…. எதுவும் மாறபோவது இல்லை  

  2. தமிழ் தேசியவாதிகள் எந்த பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் திருந்தவே மாட்டார்கள். போரின் போது இவர்கள் மீது கொஞ்சம் பரிதாபம் இருந்தது. இப்போது நினைத்தால் கோபம்தான் வருகிறது. ஈழ மக்களையோ இங்குள்ள தமிழர்களையோ நம்பாமல் இவர்கள் ஜெ,கருணாநிதியை நம்பி பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களை நம்பி பல இளைஞர்கள் அரசியல் ரீதியாக அழிந்து போகிறார்கள்.

  3. பின்னிடீங்க தூள் கிளப்புங்க வயதான மூதாட்டியை மனித நேயம் இல்லாமல் அனுப்பிய இந்திய நாய்களுக்கும் தமிழ் தேசிய வியாபாரிகளுக்கும் சவுக்கடி

    • எங்க இதை படிச்சிட்டு..
      என்னால இன்னும் ஒரு இரண்டு பேரு படிக்கிறாங்க…
      இப்படி சலிசிகிட்டா எப்படி….
      ஆனால்,  படிச்சா மட்டும் போதாது…

  4. டோண்டுவைப்பற்றியெல்லாம் எழுதி தொடர்ந்து அவரை பெரிய ஆளாக ஆக்குவதை வினவு நிறுத்திக்கொள்ளலாம்.( இது வேண்டுகோள்)
    பத்துப்பேர் படிக்காத லீனாவின் கவிதையை லட்சம் பேருக்கு கொண்டு சென்றதும் அப்படித்தான். தோழர்கள் உடனடி வினையாற்றுதலில் சிறிது கவனம் செலுத்தி செய்யவும். உண்மைத்தமிழன் எல்லாம் அறிவுரை சொல்லும் அளவுக்கு வினவுத்தோழர்களா என அதிர்ச்சி ஏற்படுகிறது.

    [நீக்கப்பட்டது – வினவு]

  5. பிரபாகரனின் அரசியல் போர் தந்திரமுறை தவறாக அமைந்த போதிலும் (இந்திய குள்ள நரிகளை நம்பியது )அவர் இறந்த போது மரியாதைக்காக தமிழர்கள் அவருக்காக ஒரு சொட்டு கண்ணீரை கூட விட முடியாமல் தடுத்த கூட்டம் தான் மாறன் ,மாளவன்&மான் கம்பெனி யினர் ,அரசியல் லாபத்திற்காக பிரபாகரனுடைய குடும்பத்தையே பிணமாக்கி ஆதாயம் அடையும் கூட்டம் தான் இது .இவர்கள் இருக்கும் வரை எந்த தமிழருக்கும் பயன் இல்லை .இவர்களின் நாடகத்தை அம்பலபடுதிய தோழருக்கு நன்றி …. 

  6. [obscured] “இனியொரு .காம்” இணைய தளத்தில் இதை எழுதிய பொது வெளியிடவேயில்லை!.
    ருவாண்டா படுகொலைக்கு” /Both Germany (before World War I) and Belgium ruled the area in a colonial capacity. The Germans, like the Belgians before them, theorized that the Tutsi were originally not from sub-Saharan Africa at all. They thought that they had migrated from somewhere else. The German colonial government gave special status to the Tutsi, in part because they believed them to possess racial superiority. The Germans considered the Tutsi more ‘presentable’ compared to the Hutu, whom they viewed as short and homely. As a result, it became colonial policy that only Tutsis could be educated, and only Tutsis could participate in the colonial government. Since the Hutus were in the majority such policies engendered some intense hostility between the groups, who had been peaceful enough with each other before colonization[citation needed]. The situation was exacerbated when the Belgians assumed control following World War I. Recognizing their ignorance of this part of Africa, they sought advice from the Germans, who told them to continue promoting the Tutsis, which they did.
    When the Belgians took over the colony in 1916, they felt that the colony would be better governed if they continued to classify the different races in a hierarchical form. Belgian colonists viewed Africans in general as children who needed to be guided, but noted the Tutsi to be the ruling culture in Rwanda-Burundi. In 1959 Belgium reversed its stance and allowed the majority Hutu to assume control of the government through universal elections.
    / இது காரணம்!.

    இலங்கையின் “முள்ளிய வாய்க்கால் படுகொலைக்கு” /Colonel Henry Steel Olcott (August 2, 1832 – February 17, 1907) was a military officer, journalist, lawyer and the co-founder and first President of the Theosophical Society.

    He was the first well-known person of European ancestry to make a formal conversion to Buddhism. His subsequent actions as president of the Theosophical Society helped create a renaissance in the study of Buddhism. He is still honored in Sri Lanka today for these efforts. He is considered a Buddhist modernist for his efforts in interpreting(சுய திரிபு) Buddhism through a Westernized lens(சமூக கண்ணாடி) .

    Olcott has been called by Sri Lankans “one of the heroes in the struggle of our independence and a pioneer of the present religious, national and cultural revival.” More ardent admirers have claimed that Olcott as a Bodhisattva.
    / இது காரணம்!.

  7. //நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றால் அறிக்கைதான் பதிலாக வருகிறது. ஆமாம் அறிக்கைகள்…… அறிக்கைகள்….. அறிக்கைகள்…//

    கஞ்சி குடிக்க்காமல் கூட இருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால், அறிக்கை விடாமல் தூக்கம் வராது போலிருக்கிறது இவர்களுக்கு.
    நல்ல பதிவு
    . வாழ்த்துகள்

  8. நீங்கள் என்ன செய்தீர்கள் இப்படி சேற்றை வாரி வீசியதை தவிர தோழர்களே! புலிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்று கூட சொல்லாத ஈழ ஆதரவாளர்கள் தானே நீங்கள்.பிள்ளை பிடிக்க ஆயிரம் வழிகள் உங்களுக்கு அதில் இதுவும் ஒன்று .

    • பிள்ளை பிடிக்க ஆயிரம் வழிகள் உண்டு தான்… கண்டிப்பாக பிள்ளை பிடித்துதான் அக வேண்டும்… பலர் பிடித்து கொண்டுதான் இருகிறார்கள்.. ஆனால் அதில் நேர்மை தேவை…  ஆனால், அந்த பிள்ளை பிடித்ததில் ஈழ விவகாரத்தில் முதல் இடத்தில உள்ளது தலைவர் நெடுமாறன் தான் என்று நினைக்கிறேன்…

    • புலிகளை பற்றிய ம.க.இ.க நிலைப்பாடு 25 வருடமாக எல்லோருக்கும் தெரிந்ததே, வினவிலும் அதைப்பற்றி கட்டுரைகள் வந்துள்ளதே…எதர்க்கும தொடர்புடைய பதிவுகளை வாசியுங்கள் எட்டப்பராசன் .. பெயர் பொருத்தம் தற்செயலாக இருந்தாலும் சிறப்பாகவே உள்ளது

    • உங்களைப் போல் முன்னொன்று பேசி பின்னொன்று பேசக்கூடாது என்பதால் தான் .. ஆரம்பத்தில் இருந்தே புலிகளின் வழிமுறையை ஆதரிக்க வில்லை .. ஈழப் போராட்டம் தோற்றதற்கு அது தான்(சரியான வழிமுறை இல்லாததே ) காரணம் … புரட்சியும் போராட்டமும் மக்களுடன் கலந்து இருக்க வேண்டும் .. அங்கு தான் வெற்றி கிடைக்கும் ..

  9. டோண்டு, போண்டா, லீனா மாதிரி ஆட்களை எல்லாம் போது கவனமாக எழுத வேண்டும். இப்படி எல்லாம் எழுதும் போது அவர்கள் அதை வைத்தே விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். மான அவமானம் தொடர்பான உணர்வு கூட இல்லாமல் இவர்க்ள் விளம்பரம் தேட இவர்களைப் பற்ரி எழுதும் போது அதற்கு வாய்ப்புக் கொடும்மாமல் இருக்க வேண்டும். வினவுக்கு வாழ்த்துக்கள்

  10. லீனா அம்மையார், டோண்டு ராகவன் பட்டியலில் திராவிட மாயை சுப்புவையும் சேர்த்துக்கொள்ளவும். சமீப பதிவுகளில் இவரும் விளம்பரம் தேடிகொள்கிறார்.அதையும் உதறிவிட வேண்டும்.

  11. வாழ்த்துக்கள்! முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின் வந்த ஓர் ஒழுங்கான கட்டுரை.

  12. வாய் சொல் வீரர்களின் வார்த்தைகளை அழகாக கோர்த்து அவர்களின் படத்தை சிறப்பாக அம்பலபடுத்தி இருகின்றீர்கள்.

  13. நீங்களும் இப்படியே எழுதிகொண்டே இருங்கள் அவர்கள் அறிகைவிட்டுகொண்டே இருக்கட்டும் கடைசியில் பூனைக்கு மணி கட்டுவது யார் ? அதாவது ஈழம் இழந்த முடிந்த ஒன்று………..

  14. ///இந்தியாவின் அடியாளாக ஈழம் இருப்பதை விட, இந்திய முதலாளிகளின் சந்தைக்காக ஒன்றுபட்ட இலங்கைதான் தேவை என்பது என்றோ முடிவாகிவிட்ட விசயம்/// சரியான பார்வை இராவணன் நன்றி.

  15. //முதலில் எல்லாவகை நோய்களையும் கொண்டு அரசியல் நடத்தும் இந்த அறிக்கை நாயர்களை தமிழக மக்களும், ஈழ மக்களும் கண்டு கொள்ள வேண்டும்//. ஈழமக்கள் எப்போதோ கண்டுவிட்டார்கள். தமிழக மக்கள்????

    • ஈழமக்கள் எப்போதோ கண்டுகொண்டுவிட்டார்கள். உண்மை. உண்மை. உண்மை. சத்தியமான வார்த்தை, பிரகாஷ். இவர்களின் கோமாளி அரசியல் கூத்தை நம்பி ஓர் வயதான மூதாட்டி அதுவும் இந்தியாவுக்கு…..:( 🙁 தமிழக தமிழர்களே, கடந்த சில நாட்களாக பதிவுலகில் நன் தொங்கிக்கொண்டு கவனித்ததில், உண்மையில் இது எங்களை (ஈழத்தமிழர்கள்) விட உங்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. காரணம் என்னவென்று நாங்கள் உங்களுக்கு விளக்கத்தேவையில்லை. உடல் நலம் குன்றி, மனம் சோர்ந்து போயிருக்கும் ஓர் மூதாட்டியை தேவையில்லாமல் அலைக்கழிக்கிறார்கள் என்கிற எங்களின் தார்மீக கோபம் தவிர.  

      நாங்கள் அடிமைகள் என்பதை ஒத்துக்கொள்கிறோம். எங்கள் விடுதலையை உலகமே எதிர்த்தபோதும் நாங்கள் ஏதோ வகையில் எங்கள் விடுதலைக்காய் முயன்றுகொண்டுதான் இருக்கிறோம். காரணம், எந்த இலாப நோக்குடனான அரசியலும் எங்களை வழிநடத்தியதில்லை. இந்த “அறிக்கை மாமணிகளை” கண்டு, கேட்டு, ஆராய்ந்து அறியவேண்டியவர்கள் யார்???????????

  16. தமிழ் ஈழ மக்களை பகடைக்காயாக வைத்து அரசியலும், பண வருவாயும் சேர்த்து கொள்ள கடந்த 40 வருங்களாய் தமிழக தேசியவாதிகளும் இங்குள்ள சில ஊடகங்களும் ஈடுபட்டுவருகின்றன. இதனால், 2008-ல் ஈழத்தில் மக்களை ஒன்றாய் ஒரு குறுகிய இடத்தில் குவித்து கொத்துக் கொத்தாய் குண்டு போட்டு கொன்றான் சிங்களவன். அப்போதும், தமிழக தேசியவாதிகளாய் நோக்கப்பட்டுவரும் நெடுமாறன், வைகோ, திருமா, வீரமணி போன்றவர்கள் ஈழ மக்களின் துயரை வைத்து அரசியல் சித்து விளையாடியும், அதற்காக பணங்களை கறந்ததும் நடந்தது. ஈழ துடைத்தெடுக்கப்பட்டும், இன்றும் இந்த தேசியவாதிகள் திருந்துவதாய் இல்லை. மாறாய் இன்னும் ஈழ மக்களை வைத்து கறக்க முடியுமா என்றும், தமிழக அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள அறிக்கைகளும், சிறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இன்றைய துருப்புச் சீட்டாய் இவர்களுக்கு கிடைத்த செய்தி தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த வயதான முதாட்டி பார்வதி அம்மாள்.
    மக்களோடு தன்னுடைய வயதான பெற்றோரையும் வைத்து கடைசி வரை போராடி, தானும் மக்களின் துயரங்களிலும் பங்கெடுத்து வந்தவர் தான் தேசிய தலைவர். அவர் அன்று நினைத்திருந்தால், குறைந்தபட்சம் தன்னுடைய வயதான பெற்றோர்களை தப்பி வைத்திருக்கலாம். அப்படி எண்ணாமல், தன் மக்களுக்கு நேர்ந்த கதிதான் தன்னுடைய பெற்றோருக்கும் என இயங்கி வந்தால் அந்த மாபெரும் தலைவன்.
    முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பிறகு, சிங்கள காடையர்களின் பிடியில் இருந்து, பிரபாகரனின் தந்தை இறந்து போனார். இனியும் வயதான பிரபாகரனின் அன்னையை வைத்திருந்தால், தங்களின் அரசியலுக்கு இடஞ்சல் வருமென எண்ணிய சிங்கள இராசபட்சே அரசு, இவரை வெளியேற அனுமதித்தது.
    அப்போது, கனடாவில் உள்ள பிரபாகரனின் ஒரு சகோதரிக்கு தெரிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார். சிவாஜி லிங்கம் 2008 முதல் தமிழகத்தில் தங்கியிருந்து பல தமிழ் தேசியவாதிகளிடம் நப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தார். அதில் முக்கியமானவர்தான் பழ.நெடுமாறன். பழ.நெடுமாறன் இவருடைய நட்புக்காக தமிழகம் சிவாஜி லிங்கம் வரும் போதெல்லாம், உலகத் தமிழர் பேரமைப்பின் கோட்டூர்புர அலுவலகத்தை கொடுத்து உதவினார். (கோட்டூர்புர அலுவலகமும் ஒரு அவுஸ்த்திரேலிய தமிழர் உலகத் தமிழ் பேரமைப்பிற்கு கொடுத்தது….). இந்த நன்றி மறவா சிவாஜி லிங்கம், நெடுமாறனுக்கு கைத்தடியானார். (சிவாஜி லிங்கம் பெரும்பாலும் தமிழகத்தில் 2008 முதல் 2009 மே வரை தங்கி இருந்ததற்கான இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்றாலும், பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நேர்மையின்மையை கருதி இங்கு இன்று வரை வெளிவராத செய்தியை தருகிறோம். தமிழர்கள் எல்லாம் மதித்துக் கொண்டிருக்கும் தமிழினப் போராளிகளான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை…இவர்களை ஈழம் பற்ற அறிந்த எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். இந்த மாபெரும் முன்னாள் போராளிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்த பிறகு இன்று அவர்களுடைய குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது பற்றி தமிழக தேசியவாதிகள் மறந்து விட்டனர். மறப்பதில் நமது தமிழக மக்களையும் இணைத்துக் கொள்ளலாம். இப்படி மறக்கப்பட்ட மேற்சொன்ன ஒரு போராளியின் – இங்கு போராளியின் பெயரை குறிப்பிடுவது போராளியின் தியாகம் கருதி கொடுக்கப்பட வில்லை – சென்னையில் உள்ள குடும்ப துயர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உதவுவது போன்று, போராளியின் மனைவியை எம்.பி என்ற தைரியத்தில் வலைவிரித்து விழ வைத்ததால்தான், சிவாஜி லிங்கம் அதிக நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்தார் என்பதுதான் இன்னொரு கதை.)
    முதலில் பிரபாகரனின் தாயாரை மாலத்தீவுக்கு அனுப்பிய பின்னர், மலேசியவுக்கு வந்து சேர்ந்தார். சிகிச்சைக்காக சென்னை செல்லலாம் என சிவாஜி லிங்கத்திடம் கேட்கப்பட்டதும், சிவாஜி லிங்கம் பத்து நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். ஆனால், அப்போதே சென்னை விமான நிலையத்தினுள் இந்திய அரசு அனுமதி மறுத்து திரும்ப கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், சிவாஜி லிங்கம் நெடுமாறனையும், வைகோவையும் தொடர்பெடுத்து, பார்வதி அம்மாளை கவனித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார்.
    இதுதான் தக்கசமயம் என எண்ணிய நெடுமாறன் மற்றும் வைகோவும், தங்களின் ஈழச்சரிவுக்கு ஒரு முட்டு கொடுக்கவும், கருணாநிதியின் அரசியல் செல்வாக்குக்கும் தமிழக மக்களிடத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்த எண்ணி காய்களை நகர்த்தினர். முதல்வர் கருணாநிதியின் ஈழ துரோகம் தமிழ் மக்களால் என்றும் மறக்க கூடியது அன்று. இதற்காக பல குட்டிகர்னங்களை மே 2008 பின்னர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு 100 கோடி ரூபாய் நலத்திட்டங்கள். அவர்களின் வீட்டிற்கு ஒரு டி.வி. அகதிகள் இருக்கும் இடத்தில் கழிப்பிடங்கள், ரோடுகள், அகதிகள் அனைவரையும் இந்திய குடியுரிமை அளிக்கும் திட்டம் என திட்டங்களை வாரி இரைத்து வருகிறார். ஆனாலும், கருணாநிதியின் துரோகம் புலம் பெயர் மக்களால் மறக்க முடியவில்லை. இப்படி 60, 70 ஆண்டுகளாய் அரசியல் செய்து வரும் கருணாநிதியின் குணம் நன்றாய் தெரிந்திருந்தும், நெடுமாறனும், வைகோவும் பிரபாகரனின் தாயாரை அழைத்து வர விமான நிலையம் சென்றனர்.
    ஆனால், மலேசியாவில், விசா பெற்றுக் கொண்ட பார்வதி அம்மாளின் செய்திகளை அறிந்து கொண்ட இந்திய உளவுத்துறை, கருணாநிதியிடம் யோசனை கேட்டது. கருணாநிதி, பார்வதி அம்மாள் யாருடைய பின்புலத்தில் தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற வருகிறார் என கேட்டுள்ளார். அப்போது, உளவுத்துறை உண்மையை கக்கியது. முதியர் ஒருவர் வந்தாலும், நெடுமாறன்-வைகோ மூலம் வருவது கருணாநிதியால் அனுமதிக்க முடியாது. ஏனெனில், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இவர்கள் இருவரும் நாள்தோறும் அரசியல் செய்வார்கள் என நினைத்தே, சென்னைக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். பின்னர் அதற்கான காராணத்தை ஜெயலலிதா மீதும் போட்டு தானும் தப்பித்து கொண்டார். இந்நிகழ்வை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள திருமா, வீரமணி, சீமான் போன்றோர் அறிக்கை விட்டு தங்களின் அரசியல் லாபத்தை கூட்டி கொள்ள நினைத்தனர். திரும்பவும், ஈழத்திற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை போன்றவைகளை கையிலும் எடுக்கின்றனர்.
    மனித நேயங்களை மறந்து திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், சாவு வீட்டில் பிணமாகவும் இருக்க நினைக்கும், தமிழக அரசியல் வாதிகளும், தேசிய வாதிகளிடையே சிக்கி தவிக்கும் அந்த மாபெரும் தலைவனை பெற்றெடுத்த அந்த தாயை, இப்போது கருணாநிதி தன்னால் தான் தமிழகத்தில் வர முடிந்தது என்றும், இன்னும் அவர் இங்கு வருவாரேயானால், அவருக்கு தன்னுடைய பொறுப்பிலேயே சிகிச்கை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.
    எது எப்படியாயினும், ஈழத்தை வைத்து அரசியல் நடத்தி பணம் பார்க்கும் சுயலாபம் சேர்த்துக் கொள்ள தமிழக அரசியல் வாதிகளும் இயக்க வாதிகளும் முடிவுடன் உள்ளனர். அதற்கு சில ஈழ ஊடகங்களும் துணை நிற்பதுதான் வேதனையிலும் வேதனை!

    http://viratamilmagan.blogspot.com/2010/04/blog-post.html

    •  ஈழத்தமிழர்களை குழப்பும் ஓர் கைங்கரியத்தை எத்தனையோ பேர் சாதுர்யமாக செய்துகொண்டுதானிருக்கின்றனர். ஊடகங்கள் தர்ம, நியாய விழுமியங்களை நழுவவிட்டு எதைத்தான் சம்பாதிக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் நீங்கள் சொல்லும் கடைசி நான்கு வரிகளும் தான் பதிலாய் வருகிறது. 

  17. தமிழ் நாட்டில் தமிழும் இல்லை தமிழனுக்கும் உரிமை இல்லை. இங்கே நடப்பது நாடகம், அரசியல் குடும்ப வியாபாரம். முள்ளி வாய்க்கால் அவலம் நடந்து ஓராண்டு ஆகப்போகிறது, இந்தியாவை தவிர வெட்டரு நாடுகள் ஈழ விடுதலைக்கு நிச்சயம் உதவப்போகிறார்கள். அதற்கு ஒரே வழி நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம்தான்.

  18. VINAVU,.Good work done by exposing these paper tigers ! Malayasia is having more humanity than India by allowing her to return to Malaysia. How a ailing fragile woman can harm our country. It is the death of Humanity in our country,.. Anyway you have done a great job of exposing these TAMIL STALWARTS ! My depest sympathies to Parvathy Ammal

  19. திருமாவளவன், வைகோ, நெடுமாறன் (இந்த பகுத்தறிவு கங்கு, முத்துக்குமரனின் மறைவின் போது, “சனிப் பொணம் தனித்து போகாது” என்று ஒரிஜினல் இந்துவை போலப் பேசினார்.) ஆகியோரின் அநியாய பாசிச அரசியல் முத்துக்குமார் மரணம், ஈழப் படுகொலைகள், பார்வதி அம்மாள் வெளியேற்றம் என்று எல்லா விடயங்களிலும் அம்பலப்பட்டு வருகின்றது. ஆனால் அது வெகுஜெனங்களை சென்று அடையவில்லை. கல்கண்டு குமுத ஆனந்த தினமல வாசகர்கள் இவர்களுடைய முகத்தினை அறியக் கூடவில்லை. தமிழகத்தில் படித்தவர்கள் கொஞ்சம். அந்த கொஞ்சத்திலும் கொஞ்சம்தான் இவர்களை அறிந்து உள்ளனர் என்பதுதான் சோகம். படித்தவர்களில் இந்த கொஞ்சம் போனவர்கள் தவிர மற்றவர்கள் பங்கமாக மேற்கூரிய ஏடுகளின் லட்சிய வாசகர்களாக உள்ளனர். தாய்நாடே இதுதான் உனது விதியா ?

  20. மிக அருமை. அருமையான பதிவு, தோழருக்கு வாழ்த்துக்கள்.ஒரு வேண்டுகோள்.  இனி டோண்டுவை பற்றி எழுத வேண்டாம்.

    • பதிவு நன்றாக வந்துள்ளது தோழர்……

      இது போன்று முக்கியமான செய்திகளைப் பற்றி பேசும்போது சற்று கவனமாக இருக்கவும். இங்கு  டோண்டு போன்றவர்களைப் பற்றி பேசியது சரியல்ல தோழர்…..அது  கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைப்பதாகத் தோன்றுகிறது.

  21. வினவு கும்பல் எதைப் பிடுங்கியது என்று தெளிவுபடுத்தினால் நல்லது.
    [obscured] மயிர் பிடுங்குவது மட்டுமே மகஇக கும்பலின் வேலை.வாங்கின காசுக்கு மேல கூவ வேண்டாம்.

    • துரோகிகளை மக்களிடம் அம்பலபத்துவதே பெரிய புடிங்கி வேலைதான் புரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று ஆதாரமே இல்லாமல் புளுகவில்லை. என்ன செய்வது நேர்மை விலகும் போது அவதூறுதான் துணைக்கு வருகிறது.
      விளக்குமாறுக்கு பெயர் பட்டுகுஞ்சமாம் உங்கள் பெயர் ராவணன் என்பதை போல…

  22. பொய்கோ மற்றும் கொடுமாரன் ஈழத்தாய் யை வைத்து நடத்திய அரசியல் பிளைபுதனமும் மற்றும் ஆளுங்கட்சியின் படை வீரர்களும் வீடியோ ….

  23. சீமானே கண்டுக்கவே மாட்டுது வினவு தளம்… அவர் கூடத்தான் அடுத்த வருடம் தமிழீழத்தில் சந்த்திப்போம் ந்னு சொல்லுராரு. மேலே போட்டிருக்கிற (படம்) அவங்கள விட அதிகமா தமிழ் – ரத்தம் – மண்ணு ந்னு செண்டிமெண்ட்டா பேசி கோடிக்கணக்குள அப்பாவி ஈழ தமிழ் மக்கள் கிட்ட இருந்து கொல்லை அடிச்சிட்டு இருக்கார். இந்த காமெடி பீச ஏன் கண்ணா ஒரு வரி கூட எழுத மாட்டுரிங்க…. (அவர் அடிக்கிறதுல ஏதாச்சும் கவனிக்கிறாரா?(இது சும்மா விளையாட்டுக்கு – நீங்க அப்படி பட்ட ஆள் இல்லைன்னு தெரியும். அப்ப ஏன் உங்க கீபோர்ட் சீமான டைப்படிக்க மறுக்குதுன்னு தெரியல).

    ஈழ மக்களின் இரத்த பணத்தில் மே 18ல் மதுரையில் 3 கோடி செலவில் பிரமாண்ட கூட்டம் நடைபெற போது…. அது யாரு காசு?????/??/

    எப்படியோ போங்க வினவு…. உங்க கிட்ட முழுமையான நேர்மை இல்ல இந்த பதிவுல/…..

    • ஆமா வினவு, பரட்டை சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு…. சீங்கிறமா சீமானுக்கு ஒரு ஆப்பு வையிங்க.. அந்த ஆளோட ஆபாசம் தாங்கலமூடிலடா சாமி….

      • கேள்விக்குறி,

        நாம கேட்டா, நாங்கெல்லாம் ”மதுரக்காரய்ங்க, பாசக்காரய்ங்க”, அதுனால தான் உங்களால ஆபாசம் தாங்க முடில’ அப்பிடீங்றானுங்க… சிஷ்யபுள்ளிங்கோ….

        வினவு இந்த மே 17-18 லயும் சீமான் மதுரயில ஏதோ கூட்டம் நடத்த போறாராமே?
        உண்மையா இருந்தா ஒரு பதிவெழுதி போடுங்க…
        அப்படியே அண்ணன் அழகிரியின் அனுமதி வாங்கிட்டு தான் கூட்டம் நடக்குதான்னும் விசாரிச்சு பாருங்க வினவு!

        சர வெடி கொஞ்ச நாள் வெடிச்சிக்கிட்டு கிடக்கட்டும்!

    • பத்த வெச்சிட்டீயே பரட்டை 🙂

      இந்த நேர்மை எனக்கு ரெம்ப…… பிடிச்சிருக்கு!

      கீப் இட் அப்!

  24. இங்க டோண்டு இராகவன் பற்றி எழுதக்கூடாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு புரியலியே..??? பதிவுலகத்துல இருக்கும் போது பதிவர்கள கண்டுக்காம இருக்க முடியுமா என்ன????

    • டோண்டுவ நோண்டுறதுலயே குறியா இருக்கீங்களே, கேள்விக்குறி!

      இது சும்மா ஊல்லலாயி! 🙂

  25. ஆம் பார்வதி அம்மாள் விடயத்தை வைத்து எழுச்சி ஆக்காமல் அதை வைத்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்……. டோண்டு ராகவன் போன்ற புல்லுருவி பதிவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் …………
    இந்த அட்டை கத்தி வீர்கள் வை கோ திருமா போன்றவர்கள் வாய்ச்சொல் வீரர்களே ………………..!!!!!!!

  26. \\ கருணை கோராதே, அரசியலாக்கு//
    அவர்கள் அரசியலாக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் ஓட்டுப் பொருக்கி அரசியலுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வடிவில் அரசியலாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அது மக்களுக்கான அரசியலல்ல, நமக்கான அரசியலல்ல என்பது தான் நாம் உணரவேண்டியது. அதை இந்தக்கட்டுரை மிகச்சிறப்பாக செய்திருக்கிறது.

    செங்கொடி 

  27. அவுக வருமானத்துக்கு வேட்டு வச்சுருவிங்கபோல, ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல சான்ஸ் போய்கோ அண்ட் கம்பெனிக்கு, வெறும் வாயை மெண்டவனுக்கு நல்ல அவல்.

  28.  நெடுமாறனும், வைகோவும் அழைக்கச் சென்றது பிரபாகரனின் தாயாரை. இவர்கள் ஏன் இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை? “பார்வதியம்மாள் வருகிறார், வரவேற்க வாருங்கள்” என்றிருந்தால் கூட சில ஆயிரம் பேர் திரண்டிருப்பார்களே! தனியாகச் சென்று இவர்களால் சாதிக்க முடிந்தது என்ன? முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் தொடங்கி தமிழக மக்களின் அரசியல் எழுச்சியை எத்தனை முறை காயடித்த இவர்கள் பார்வதியம்மாளுக்கு செய்தது  இறுதிக்கால உதவியா? அல்லது கையாலாகாதத்தனமா?

  29. நன்றி,வினவு.
    ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துவதை அவர்கள் விடுவதாக தெரியவில்லை.எனவே மக்களாகிய நாம்தான் அதை புரிந்து கொண்டு ,அதில் இருந்து அவர்களை[ ஓட்டுப் பொருக்கி ]வெளியேற்றி, பேரினவாதத்தின் பிடியில் சிக்கித் திணறும் ஈழ மக்கள் வெளிக்கொணர முடியும் என்பதை அறிய வைத்ததற்கு.

  30. “”வினவு கும்பல் எதைப் பிடுங்கியது என்று தெளிவுபடுத்தினால் நல்லது.
    [obscured] மயிர் பிடுங்குவது மட்டுமே மகஇக கும்பலின் வேலை.வாங்கின காசுக்கு மேல கூவ வேண்டாம்.””
    துரோகிகளை மக்களிடம் அம்பலபத்துவதே பெரிய புடிங்கி வேலைதான் புரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று ஆதாரமே இல்லாமல் புளுகவில்லை. என்ன செய்வது நேர்மை விலகும் போது அவதூறுதான் துணைக்கு வருகிறது.
    விளக்குமாறுக்கு பெயர் பட்டுகுஞ்சமாம் உங்கள் பெயர் ராவணன் என்பதை போல…

  31. கட்டுரை முழுவதும் எழுப்பபடும் கேள்விகள் முக்கியமானவைசீரியஸாக சிந்திக்க வேண்டியவை 
    இந்த பிழைப்புவாத கும்பல் இந்திய உளவுத்துறையின் கை கூலிகள்
    நன்றி தோழர் இராவணன்

  32. இந்திய தேசம் பின்னால் இருந்து குத்தும் தேசம். அதன் அன்மையில் எந்த தேசம் வளர்ந்தாலும் அதனைப் பொருத்துக்கொள்ள விரும்பாதத் தேசம். இந்தியாவிக்கு சரிநிகராக பாக்கிஸ்தான் வளர்ந்து வருவதை அதற்கு பொருத்துக்கொள்ள முடியாமலும் சவாலாகவும் உள்ளது. இதில் தமிழர்கள் ஆற்றல் மிக்கவர்கள், அவர்களும் ஒரு தனித்தேசமாக வளர்ந்து விட்டால், தென்னாந்தியப் பிராந்தியத்தில் “இந்தி” எனும் ஆதிக்கம் உலக அரங்கில் இருந்தே மங்கிவிடும் அச்ச நிலையே, தமிழர்களை, சிறுமைப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களின் மனங்களை சிதைத்து உள்ளூர மகிழ்ந்துக்கொள்கிறது. அதன் உணர்வலைகளை டோண்டு போன்றோரின் எழுத்திக்களும் எடுத்துரைக்கின்றன… 

Leave a Reply to parattai பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க