privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்பார்வதியம்மாள், நளினி - அறிக்கை நாயகர்களின் IPL !!

பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!

-

vote-012‘‘ஆத்திரந்தான் தாங்க முல்ல(முடியல)….. ஆனா அறிக்கைக்கு மேல் தாண்ட முல்ல,”’’ மக்கள் கலை இலக்கியக் கழகம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் கடந்த கால அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக வெளியிட்ட பாடல் ஒலிப்பேழையின் ஒரு பாடலில் இப்படியான வரிகள் வரும். இன்றைய கருணாநிதியின் ஆட்சியிலும் தமிழ் தேசியவாதிகளின் நிலை இதுதான். இனி எவரேனும் ஈழம் தொடர்பாக ஆவேச அறிக்கைகளோ, ஆர்ப்பாட்டங்களோ செய்தால் ஆயுட்காலம் வரை சிறையில் தள்ளுவோம் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரும் என்றால் இவர்கள் அறிக்கை விடுவதையும் நிறுத்தி விடுவார்கள். இதுதான் இன்றைய திராவிட, தமிழ் தேசிய. ஈழ ஆதரவாளர்களின் நிலை.

ஆறு மாத கால மருத்துவ விசா பெற்று சென்னை வந்த பிராபகரனின் தாயார் பார்வதியம்மாளை, தமிழக போலீசின் துணையோடு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். அனுப்பியவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்று கருணாநிதி ஆதரவாளர்களும், “இல்லை இல்லை கருணாநிதிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது” என்று ஈழ ஆதரவாளர்களும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் எண்பது வயது முதிய தாய் இப்போது தற்காலிக விசாவில் மலேசியாவிற்கு விரட்டப்பட்டிருக்கிறார். விரைவில் அவருக்கான விசா காலம் முடியும் போது, அவர் விண்ணப்பித்திருக்கும் கனடா நாட்டிற்கான விசாவும் மறுக்கப்படும் நிலையில் மீண்டும் அவர் கொழும்புவுக்கே திரும்பக் கூடும். அப்படித் திரும்பினால் சிங்கள பாசிச பேரினவாத இலங்கை அரசு அவரை  மீண்டும் முகாம்களுக்குள் முடக்கக் கூடும். அல்லது முகாம்களிலிருக்கும் மக்களின் அவலம் பற்றிய பேச்சு புதிதாக எழாமல் இருக்க அவர் கனடாவுக்கு அனுப்புவதும் நடக்கலாம். இல்லை அவரை வைத்து புலம் பெயர்ந்த மக்களிடம், புலிகள் மீண்டு வரும் பேச்சுக்கள் எழலாம் என்றால் இலங்கையிலேயே முடக்கலாம்.

____________________________________________________

பார்வதியம்மாளை வைத்து நடத்தப்பட்ட ஐ.பி. எல் மேட்ச்:

பார்வதியம்மாளை வைத்து மேலாதிக்க இந்திய அரசும், கருணாநிதி தலைமையிலான பிழைப்புவாத மாநில அரசும், நெடுமாறன், வைகோ முதலான அட்டைக் கத்தி வீரர்களும் நடத்திக் கொண்டிருக்கும் விளையாட்டின் தொடக்கப்புள்ளி பிரபாகரனது தந்தை வேலுப்பிள்ளையின் சவ அடக்கத்தில் இருந்து துவங்குகிறது. ரகசிய தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இறந்த போது நெடுமாறன், வைகோ, திருமா என எல்லா தமிழின ஆர்வலர்களும் அறிக்கை விட்டனர். ஆனால் போரின் போது ஜெயலலிதா, கருணாநிதி என்று பிரிந்து நின்ற ஈழ ஆதரவாளர்களிடையே யார் ஸ்கோர் செய்வது என்ற போட்டி இருந்தது.

திருமா அறிக்கை விடுவதை விட அதிக பட்சமாக தனது தி.மு.க ஆதரவு எம்.பி பதவியைப் பயன்படுத்தி வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே பார்வதியம்மாளோடு அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பார்வதியம்மாளை தன்னிடம் அனுப்ப வேண்டும் என்று அவரது நண்பர்களான இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இங்கே வந்து பார்வதியம்மாளை சந்தித்த அனுபவம் பற்றி பக்கம் பக்கமாக ஜுனியர் விகடனில் உருகி எழுதினார். அதில் “கனடாவில் வந்து பிரபாகரன் தன்னைச் சந்திப்பாரென” பார்வதியம்மாள் சொன்னதாக எழுதினார். திடமான சிந்தனையோடு அவர் இருப்பதாகக் கதைத்தார். பின்னர் அதே தொடரில் அவரிடம் தடுமாற்றம் இருந்ததாகவும் எழுதினார். ஆனால் ராஜபக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தும் போது திருமா தடுமாறவில்லை என்பது முக்கியம்.

திருமா போய் பார்வதியம்மாளை சந்தித்து ஸ்கோர் செய்வதை  பொறுக்க முடியாத கலிங்கப்பட்டி சிங்கமோ, “பார்வதியம்மாளை அழைத்து வந்து என் தாய் போல பார்த்துக் கொள்ளப் போவதாக” முழங்கினார். சாதாரண போராளிகளைப் பெற்ற மக்களெல்லாம் முகாமில் என்ன ஏதுமென்றே தெரியாமல் சாகும் போது கூட சிங்கம் தனது கர்ஜனையை விடவில்லை. கடைசியில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தின் முயற்ச்சியில் பார்வதியம்மாள் இலங்கையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். மலேசியா சென்றார்கள். கனடாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்த போது கனடா பார்வதியம்மாவுக்கு விசா மறுத்தது.

பின்னர் இந்தியாவுக்கு விசா கேட்டு முயற்ச்சித்த போது ஆறு மாத மருத்துவ விசா வழங்கியது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம். இது யாரோ ஒரு குமஸ்தாவின் தவறினால் கூட கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். தகவல் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும்  தெரிவிக்கப்பட, அவர்கள் பார்வதியம்மாளை வரவேற்க இரவு பத்து மணிக்கு மேல் இரகசியாமாக சென்னை விமானநிலையத்திற்குச் சென்றார்கள். ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்பே விமான நிலையத்தின் வெளிப்பகுதியையும், பார்வையாளர் பகுதியையும், வரவேற்ப்புப் பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை புறநகர் போலீசா கொண்டு வந்திருந்தனர்.

தலைவர்கள் எவரும் பார்வதியம்மாளை நெருங்க விடாமல் தடுத்த போலிசார், பார்வதியம்மாளையும் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். நெடுமாறனும், வைகோவும் அழைக்கச் சென்றது பிரபாகரனின் தாயாரை. இவர்கள் ஏன் இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை? “பார்வதியம்மாள் வருகிறார், வரவேற்க வாருங்கள்” என்றிருந்தால் கூட சில ஆயிரம் பேர் திரண்டிருப்பார்களே! தனியாகச் சென்று இவர்களால் சாதிக்க முடிந்தது என்ன? முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் தொடங்கி தமிழக மக்களின் அரசியல் எழுச்சியை எத்தனை முறை காயடித்த இவர்கள் பார்வதியம்மாளுக்கு செய்தது  இறுதிக்கால உதவியா? அல்லது கையாலாகாதத்தனமா?

இந்தியாவில் சில அதிகாரிகள் மற்றும் டெல்லித்தலைவர்களை வைத்து ஈழத்தை நைசாக தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கணக்குப் போட்டவர்களல்லவா! அத்தகைய லாபி வேலைகள் காயடிக்கப்பட்டாலும் அதை ஒத்துக்கொள்ளாத வீரர்கள் எந்தக் காலத்திலும் தமிழக மக்களைச் சார்ந்து போராடியதில்லை. இங்கு கூட பார்வதியம்மாளின் வருகையை வைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க வாய்ப்பு இருந்தும், அப்படிச்செய்தால் இந்திய அரசு அந்த அம்மாளை திரும்ப அனுப்பிவிடும் என்றே இவர்கள் யோசித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களை மன்றாடி, தாஜா செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்பதுதானே முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிந்தது?

___________________________________________________

சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்….

காரணம் – 1

2003இல் தமிழகத்தை விட்டு பிரபாகரனின் பெற்றோர் சென்ற போது அவர்கள் திரும்பினால் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய புலனாய்வுத்துறைக்கு ஜெயலலிதா எச்சரிக்கைக் கடிதம் எழுதியவுடன் பார்வதியம்மாளின் பெயரையும் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்து விட்டது இந்திய அரசு. அதனால்தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது கருணாநிதியின் வாதம்.

காரணம் – 2

செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாக மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணம். அதற்காக விரைவில் அன்னை சோனியாவை சந்திக்கப் போகிறார் அய்யா. இந்த நேரத்தில் அதுவும் நெடுமாறன், வைகோ மூலமாக வரும் பார்வதியம்மாளை இங்கே அனுமதித்து ஏதாவது ஒன்று ஆகிப்போனால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத இன்னொரு தலைவலியை சந்திக்க நேரிடும், என்று கருணாநிதியே தமிழகத்தில் சிகிச்சை அளிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இது ஈழ ஆதவரளார்களிடையே சொல்லப்படும் காரணம்.

இந்த இரண்டு காரணங்களுமே உண்மையானவைகளாக இருக்கும் எல்லா சாத்தியங்களோடுதான் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைமைகளும் இயங்குகின்றன. இந்த இரண்டு துரோக, வஞ்சக தலைவர்களின் அடிவருடிகளாக மாறிப் போன ஈழ ஆதரவாளர்களின் நிலையைப் பாருங்கள். முத்துக்குமாரின் மரணத்தின் போது ஜெ-வின் மனம் புணபடக்கூடாது  என்று நினைத்த வைகோ இந்த விஷயத்திலும் கருணாநிதியைத் திட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். இன்னொரு ஈழ நடிகரான திருமாவோ கருணாநிதிக்கு இதில் தொடர்பில்லை எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு என்று பதறிப்போய் அறிக்கை விடுகிறார். அதையே கி.வீரமணியும் கருணாநிதியின் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திடீர் ஈழத் தயாக மாறிய ஜெ இப்போது கொடநாட்டில் செட்டிலாகிவிட்டார். கடிதம் எழுதாமல் கூட இவர்களை ஏமாற்றலாம் என்பதை தெரிந்து கொண்ட கருணாநிதியோ பார்வதியம்மாள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் அதை பரிசீலித்து மத்திய அரசுக்கு வழக்கம் போல் கடிதம் எழுதத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

போருக்குப் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மக்களின் முதியவர்களின் கதை பரிதாபகரமானது. பலரும் நந்திக்கடலில் தங்கள் குடும்பத்தின் முதியவர்களை விட்டு விட்டு வந்த பரிதாபக் கதைகளும் உண்டு. பேரினவாத இலங்கை அரசு தமிழ் மக்களுக்காக அமைத்த வதை முகாம்களில், முதல் மூன்று மாதங்களின் சராசரியாக வாரம் ஒன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று தெரியாத பல முதியவர்கள் இப்போது நல்லூர் கந்தசாமிக் கோவில் வாசலிலிலும், யாழ்பாணத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டூரிஸ்டுகளாக வரும் சிங்களர்களிடம் கையேந்தி நிற்கும் ஈழத் தமிழ் முதியவர்கள் குறித்தோ, போரில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் மக்கள் குறித்தோ பேசாத தமிழ் தேசியவாதிகள், பார்வதியம்மாளுக்காக பேசுவது அவர் பிரபாகரனின் தயார் என்பதால்தான். அதனால்தான் பார்வதியம்மாளை அபகரித்து தாங்கள் பேணுவதன் மூலம் தங்கள் மீது விழுந்துள்ள கறைகளைக் கழுவ நினைக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு தாங்களும் ஒரு காரணமென்று அதாவது புலிகளுக்கு தமிழகத் தேர்தலை வைத்து நம்பிக்கையூட்டியவர்கள், பா.ஜ.கவும், ஜெயாவும் வந்தால் கூட அதே முடிவுதான் என்பதைக்கூட ஏற்காத புத்திசாலிகள் இப்போது பிரபாகரனது அம்மாவை வைத்து தங்களது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

_____________________________________

அரசியல் நேர்மையின்மை

பிரபாகரன் இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் விரைவில் வெடிக்கும் என்று அவ்வப்போது அறிக்கை விடுவதுதான் நெடுமாறனின் அரசியல் அஜெண்டா. “கடைசி வரைப் போராடி களத்தில் நின்று போராளிகளும் பிரபாகரனும் மடிந்தார்கள்” என்று  எழுதினால்கூட துரோகி என்கிற இவர்களிடம், “பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார்” என்று கேட்டால், “அதற்குத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்” என்று துவக்கத்தில் சொன்னவர்கள், இப்போது “பிரபாகரன் தமிழ் மக்களின் இதயங்களில் வாழ்கிறார், அவர் நேதாஜியை நேசித்தார், நேதாஜி போலதான் அவரும்” என்று அடுத்த ஏமாற்று தந்திர அஸ்திரத்தை ஏவுகிறார்கள்.

ஈழ மக்களின் நிராதரவான வாழ்வு பற்றிய மவுனம், பிரபாகரன் வருவார் என்று அவருக்கும் போராளிகளுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக்கூட வழங்காமை என்று புலிகள் ஆதரவுக் கண்ணோட்டத்தின்படியே கூட ஒட்டு மொத்த அரசியல் வீழ்ச்சிக்கே இவர்கள்தான் காரணம். பத்தாம் பசலித்தனமான இவர்களின் நடவடிக்கையைப் புரிந்து கொண்ட இந்திய அரசோ, இவர்களை டீல் செய்வது ஈஸி என்று ஏகத்துக்கும் ஆட்டம் காட்டுகிறது. பாவம் அறிக்கையைத் தாண்டி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தங்கி நிற்கிறார்கள் அறிக்கை நாயகர்கள்.

இந்திய ஆளும் வர்க்கங்களை நம்பித்தான் ஈழத்தின் தலைவிதி இப்படியான துயர நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதில் பாதி பங்கு புலிகளுக்கும், மீதி பங்கு அவர்களின் குத்தகை ஆதரவாளர்களான இந்த அறிக்கை நாயகர்களுக்கும்தான் சேரும். தமிழக மக்களை அரசியல் எழுச்சி மூலம் அணிதிரட்டி டெல்லியைப் பணியவைக்கலாம் என்ற நம்பிக்கை அற்ற புரோக்கர் அரசியல்வாதிகள் பார்வதியம்மாள் என்ற மூதாட்டிக்கு மட்டும் எப்படி சிகிச்சை வழங்க முடியும்? முதலில் எல்லாவகை நோய்களையும் கொண்டு அரசியல் நடத்தும் இந்த அறிக்கை நாயர்களை தமிழக மக்களும், ஈழ மக்களும் கண்டு கொள்ளவேண்டும்.

__________________________________________

டோண்டு ராகவனின் திமிர் பற்றி…….

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய செயலை பதிவுலகில் அனைவரும் கண்டிக்கும் போது அக்மார்க் பார்ப்பனரான டோண்டு மட்டும் அதை ஆதரித்து சோவின் குரலைப் பிரதிபலிக்கிறார். இங்கே டோண்டு ராகவனை பதிவுலகில் பலரும் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களது கண்டிப்பில் கூட அரசியலுக்குப் பதில் ஒரு முதிய மூதாட்டியைக் கூட மனிதாபிமானம் இல்லாமல் டோண்டு வெறுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் டோண்டுவுக்கு மனிதாபிமான ரீதியான வெறுப்பு இப்போதா புதிதாக வந்திருக்கிறது?

அவர் பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இசுரேலைப் புகழ்கிறார். குஜராத்தில் இந்துமத வெறியர்கள் மோடி தலைமையில் முசுலீம் இன மக்களைப் படுகொலை செய்த போது மோடியை ஆதரிக்கிறார். டாக்டர் ருத்ரன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறார் என்பதால் அவரை மனநலமற்ற மருத்துவர் என்று இழிவாகப் பேசுகிறார். ஓட்டல் தொழிலாளிகள் சலிப்பாக வேலை செய்தால் பாய்ந்து பிடுங்குகிறார். நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரிக்கும் போது பெரியார் மணியம்மை திருமணம் பற்றி நரித்தனத்துடன் எழுதுகிறார். இப்படி எல்லா சமூகப் பிரச்சினைகளிலும் மக்கள் விரோத சிந்தனையைக் கொண்டிருக்கும் டோண்டு, பார்வதி அம்மாளின் பிரச்சினையில் அவர் பார்வை படி சரியாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பார்வையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் வெறும் மனிதாபிமான முறையில் அவரைக் கண்டிப்பதனால் டோண்டுகளின் கொழுப்பு குறையப் போவதில்லை.

__________________________________________

நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு – கருணை கோராதே, அரசியலாக்கு…….!!

மிகப் பெரிய மனிதப் படுகொலையை துணை நின்று நடத்தி முடித்து விட்டன, இந்திய இலங்கை அரசுகள். இனிமேலாவாது இந்தியா தமிழ் மக்கள் மீது கருணை காட்ட வேண்டும், காட்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அதனால்தான் இவர்கள் தொடர்ந்து ஈழம் அமைவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்றும். அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு ஈழம் என்றும், ஈழத்தை ஒரு அடியாள் தேசமாக கற்பனை செய்கிறார்கள். இதற்கெல்லாம் இந்தியா மசியுமா, என்ன?

இந்தியாவின் அடியாளாக ஈழம் இருப்பதை விட, இந்திய முதலாளிகளின் சந்தைக்காக ஒன்றுபட்ட இலங்கைதான் தேவை என்பது என்றோ முடிவாகிவிட்ட விசயம். மற்றபடி பேரினவாதத்தின் பிடியில் சிக்கித் திணறும் ஈழ மக்களின் கண்ணீரெல்லாம் இந்தியாவிடம் செல்லுபடியாகாது. அப்படியான கருணை எதையும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது இந்தியா காட்டாத போது அவர்களின் நிலங்களை குறிவைத்து போரையும் நடத்தி வருகிறது. இப்படியிருக்க நாட்டின் இன்னொரு எல்லையோரச் சமூகமான ஈழத் தமிழ் மக்களிடம் மட்டும் எப்படி இந்தியா கருணை காட்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை. இம்மாதிரி சிந்தனைப் போக்கில் இருந்துதான் நளினி மீது சோனியா கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் பிறக்கிறது.

நளினியின் விடுதலை மறுக்கப்படும் ஒவ்வொரு வேளையும் ராஜீவ் கொலையை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஈழத்தில் நரவேட்டையாடிய பாசிச ராஜீவின் கொலை என்பது அதன் எதிர்வினையே என்பதை முகத்திலறைந்து சொல்ல வேண்டும். ராஜிவ் காந்தியை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கு பசப்பத் தேவையில்லை. ஆம். புலிகள்தான் கொன்றார்கள். ஆனால் அதன் மூலத்தை விசாரிக்க வேண்டும் என்று நாம் கோரினால் இறுதியில் ஈழத்திற்கு படை அனுப்பிய ராஜீவும், இந்திய அமைதிப் படை இராணுவத்தின் அதிகாரிகளும்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள்.

இதை அரசியல் ரீதியாக எழுப்பி, அதற்கு ஆதரவாக தமிழக மக்களை அணிதிரட்டி போராடும் போதே நளினியை மட்டுமல்ல, அநியாயமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மற்ற போராளிகளையும் விடுவிக்க முடியும். மாறாக நளினி இருபது வருடம் சிறையில் இருந்துவிட்டார், ஏதோ கொஞ்சம் பாத்து விடுதலை செய்யுங்கள் என்று மனிதாபிமான முறையில் பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. இதைத்தான் கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ முதல் அரசியலே தெரியாமல் பிதற்றும் உண்மைத்தமிழன் வரை பலரும் பேசுகிறார்கள். இந்த மனிதாபிமான முகமூடிக்குள் ஒளிந்திருப்பது இந்திய அடிமைத்தனம். இந்த அடிமைகளை நம்பி ஈழம் மட்டுமல்ல, நளினியும் விடுதலை அடைய முடியாது.

நளினியை விடுதலை செய்யக் கோரும் குரல்கள் இனி எழக்கூடாது என்பதற்காகத்தான் சிறையில் செல்பேசி சிக்கியதாக ஒரு புதுக்கதையை கிளப்பியிருக்கிறார்கள். இதன்படி நளினிமேல் புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு அவரது நிரந்தர சிறை உறுதி செய்யப்படும். மனிதாபிமான முறையில் குரல் எழுப்பியவர்கள் கூட இந்த சட்டப்படியான தண்டனை நீட்டிப்பை எதிர்க்க முடியாதல்லவா!  அரசியலற்ற குரல்களை அரசியல் சட்டப்படியே முடக்கிவிட்டார்கள்.

எனவே நளினி பிரச்சினையில்அரசியல் நேர்மையோடு  அணுகாமல் சோனியாவிடமும், கருணாநிதியிடமும், மனுக் கொடுப்பதால் ஆகப் போவது எதுவும் இல்லை. நளினியிடமோ, பார்வதியம்மாளிடமோ இவர்கள் கருணை காட்டப் போவதும் இல்லை. அரசு பயங்கரவாதம் உங்களை மென்மையாக அதட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றால் அறிக்கைதான் பதிலாக வருகிறது. ஆமாம் அறிக்கைகள்…… அறிக்கைகள்….. அறிக்கைகள்……….ஆமாம் இவர்கள் அறிக்கைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவற்றினைப் புறந்தள்ளி அரசியலைப் பேசுவோம். அநியாயத்தினை வெல்வோம்.

________________________________________________

–    இராவணன்

(தோழர் இராவணன், வினவு தளத்தில் மட்டும்தான் எழுதுகிறார்; மற்ற தளங்களில் எழுதுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)

vote-012

தொடர்புடைய பதிவுகள்