privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்திப்பு சுல்தான் - விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

-

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்
ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

  1. திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி ! | வினவு!…

    திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை….

  2. நாட்டுக்காக பிள்ளைகளை பணயக்கைதியாக கொடுத்த திப்பு
    தம் மக்களுக்காக நாட்டை கூறு போடும் இன்றைய அரசியல்வாதிகள்

    கடைசிப் போரில் தப்பிச்செல்லாமல் போரிட்ட மன்ன்னைக் கேட்டறியாத வெள்ளையர்களின் வியப்பு

    மக்களை நேசித்த குடிமகன் திப்புவும் தங்களை மாத்திரமே நேசித்த மராத்தா மற்றும் நிஜாம்களும் நிறைந்த தேசத்தில் திப்புவைப் போன்றவர்கள் நீடிக்க முடியாதுதான். மீர் சதக் போன்றவர்கள் இன்று வளர்ச்சி என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திப்புவின் பிள்ளைகளோ கேட்க நாதியற்றவர்களாக தூக்குக் கயிறை முத்தமிடுகிறார்கள் அல்லது போராடுகிறார்கள்.

    அன்று இங்கிலாந்தின் குலைநடுக்கமான திப்புவுக்கு நாம் வழித்தோன்றலாக வேண்டுமென்றால் நாம் அமெரிக்காவின் குலைநடுக்கமாக வேண்டும் இன்று.

    கூலி கொடுக்காமல் வேலை வாங்க கூடாது என 200 ஆண்டுகளுக்கு முன்னரே உத்தரவிட்ட மன்ன்ன் திப்பு. கூலியே தராமல் மக்களை வருத்தும் இன்றைய முதலாளிகளும் சாதிப் பண்ணைகளும்

    போதையை தடைசெய்த மன்ன்ன் திப்புவும் போதையையே மக்களின் பெரும்பாலானவர்களுக்கு தரும் இன்றைய அடிமை அரசும்

    உலக அதிசயங்களுக்காக உயிர்நீத்த மக்களின் துயரத்தால் அதிசயங்களை அளந்த மன்ன்ன் திப்புவும், மன்னர்களின் துயரத்தையே பேசும் நவீன அடிமைகளும்

    மைசூர் அரசின் கப்பற் போக்குவரத்து துறையை ஆரம்பித்த திப்புவும், இலாபத்தில் இயங்கும் நவரத்னாவில் ஒன்றான் சிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவின் 63 சதவீத‌ பங்குகளை இப்போது விற்பனைக்கு விட்டு இருக்கும் அடிமை அரசும்.

    ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம் – வெல்லெஸ்லி எப்படிச் சொன்னாய் இன்றும் பொருந்துகிறதே ! என்ன வித்தியாசம் மக்கள் மன்னர்களாகவும் திப்பு நக்சல்பாரிகளாகவும் இருக்கிறார்கள்.

    மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா
    துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா

  3. உண்மையிலேயே நினைவு கூறத்தக்க ஒரு மாவீரன். சுதேசி பேசிக் கொண்டே நாட்டைக் கூட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கும், ஒரு விடுதலைப் போரின் சுயநலமான தலைமைக்கும் திப்புவின் வரலாறு ஒரு சிறந்த பாடம்.

  4. ம‌க்க‌ளை முட்டாளாக்கி க‌ற்கால‌த்திற்க்கு கூட்டி செல்லும் ராமாய‌ண‌ம் ம‌ற்றும் ம‌ஹாபார‌த‌ க‌ர்ப்ப‌னை க‌தைக‌ளை “வீர‌காவிய‌ம்” என்றும் மாவீர‌ன் திப்புவின் வ‌ர‌லாரற்று ச‌ரித்திர‌த்தை “க‌ற்ப‌னை க‌தைக‌ள்” என்று அறிவிப்போடு காவிக‌ளின் க‌ய‌வாளித்த‌ன‌த்தால் அர‌சு தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பினார்க‌ள். வ‌ழக்க‌ம் போலவே வினவின் இந்த‌ ப‌திவும் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து.

  5. “திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்.”

    கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி ஒவ்வொரு பகுதியாக படிக்கலாம்.

    1.
    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்! (பகுதி-1)

    2./1012வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 2

    3.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 3

    4.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4

    5.http://www.satyamargam.com/1413>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5
    ==================
    அல்லது அடியிலுள்ள சுட்டியை சொடுக்கி

    “திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்.” 5 பகுதிக‌ளையும் உள்ளடக்கிய கட்டுரை படிக்கலாம்.

    பிராமிணர்களின் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

    ….

  6. அற்புத மாவீரன் திப்புவின் வரலாற்று ஆவணத்திற்கு அருமையாக வடிவம் கொடுத்து தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    மயிர் கண்கள் சிலிர்த்தன, வீரம்
    கண் மயிரில் துளி வழிந்தன, பரிதாபம்.

    அந்நாரின் நினைவு கூறுவோம்.

    ஓங்குக என்றென்றும் அவர் புகழ்!

  7. Dear vinavu,
    first i read the above essay with the normal pace. but reading line by line i could not lift my eyes and my heart beat increased . what a great historical essay written in simple but touching manner. this is the first time in my life i got so much attracted to an article so deeply and really i have to salute our great hero Thipu.
    my congrats to the author who is coming down to our heart and putting the messge and great work grreat info with superb naration. best wishes. keep it up….

  8. Miga arumaiyaana pathivu.. engalai pondravarkalukku nalla ennangalaium naatu ptraium suya nalaminmaium villakkum intha maathiriyaana pathivukalukku engal manamaartha vaalthukkal vinavu.. Great Salute..

  9. வாழ்த்துகள் நண்பரே..

    கட்டுரையை படிக்க படிக்க மனதில் பெருமிதம் தோன்றும் வகையில் அற்புதமான நடையில் வந்திருக்கிறது..

    தொடர்ந்து இது போன்ற இடுகைகளை எதிர்பார்க்கிறேன்…

  10. சொல்லாத சோகம் பாடலை இணைத்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

    மீண்டும், மீண்டும், மீண்டும் வாசிக்கும் கட்டுரைகளில் ஒன்று இது. திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி இந்திய வரலாற்றின் மணிமகுடம்

  11. மாவீரன் திப்புவின் வரலாறை தனக்கே உரிய பாணியில் எங்கள் மனதில் பறை அறைந்துவிட்ட வினவு தொடரட்டும் உமது பணி

  12. உருக்கமாக சரித்திர நிகழ்வுகளை இழைத்தோடி, ஒரு மாவீரனுக்கு செய்ய வேண்டிய உயர்ந்த மரியாதையை இப்பதிவு செய்திருக்கிறது. திப்பு என்றும் மனதில் நீங்காத ஒரு வீரனாக பவனி வருவார், அவர் புகழ் ஓங்கட்டும்.

    அசாத்தியமான ஒரு கட்டுரைக்கு, வினவு குழுவிற்கு நன்றி.

  13. நாட்க்காக தியாகங்கள் புரிந்ததியாகிகளை நாயாகளும் ஈனப்பிறவிகளும் அடிமைகளும் சாதி,மத தலைவர்களாக மாற்றுவதை ஒழித்துக்கட்ட புதுஇரத்தம் பாய்ச்சிக் கொண்டேஇருங்கள்

  14. ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

  15. ஒரு கட்டுரைக்கு இப்படி உணர்வை பிழிந்து இதயத்தை உருக்கி, அந்த எழிர்ச்சியை, அந்த தோழ்வியை, அந்த கானல் நீராகி போன கனவு தேசத்தை இழந்த வழியையும், கண்ணீரில் கொணரும் ஆற்றல் இருக்க முடியுமா!!! கண்ணீர் மல்க படித்தேன். அந்த மாவீரன் இன்றைய நம் மானமிழந்த நிலையில் மிக தேவை.

  16. the same Thomas Munro records this :

    ///According to Thomas Munro, a Scottish soldier and the first collector of Canara, around 60,000 people,[8] nearly 92 percent of the entire Mangalorean Catholic community, were captured; only 7,000 escaped. Francis Buchanan gives the numbers as 70,000 captured, from a population of 80,000, with 10,000 escaping. They were forced to climb nearly 4,000 feet (1,200 m) through the jungles of the Western Ghat mountain ranges. It was 210 miles (340 km) from Mangalore to Seringapatam, and the journey took six weeks. According to British Government records, 20,000 of them died on the march to Seringapatam. According to James Scurry, a British officer, who was held captive along with Mangalorean Catholics, 30,000 of them were forcibly converted to Islam. ///

    http://en.wikipedia.org/wiki/Tipu_Sultan#Attitude_towards_Christians

    is it true or is it false propoganda on wiki ?

  17. நவீனத்துவம் என்ற வலையில் வசமாக மாட்டிக் கொண்டு மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தவிக்கும் நம் போன்றவர்களுக்கு ஒரு கனவுக் காட்சியாகவே மாவீரன் திப்புவின் வாழ்க்கை இருக்கிறது. ஒரு குறுகிய காலப்பகுதியில் இத்தனை விடயங்களை சாதித்திருப்பது அல்லது சாதிக்க முயற்சித்திருப்பது அவரது நம்பிக்கையையும் அதன் விளைவாக அவருக்கு கிடைத்த உலகளாவிய பார்வையின் விசாலத்தையும் காட்டுகிறது. மக்கள் மன்னன் திப்பு சுல்தானின் திரிபடையாத முழுமையான வாழ்க்கை வரலாற்றை வினவு போன்ற ஒரு தளத்திடம் எதிர்பார்க்கிறோம். தாராளமயம் தனியார்மயம் என்று நிகழ்காலத்தில் நாம் முகம் கொடுக்கும் பல்வேறு சவால்களை எதிர் கொள்வதற்கு திப்புவின் வரலாறு ஒரு உந்து சக்தியாக எம் இளைய தலைமுறைக்கு நிச்ச்சயம் இருக்கப் போகின்றது.

  18. ஒரு மிகச்சிறந்த மாவீரனை நினைவு கூர்ந்து எழுதி அவருடைய தியாகத்தை மற்றவர்களெளக்கு தெரியப்படித்திய வினவிற்கு சபாஸ்

    அதே திப்பு இன்று பார்பனர்களால் மதவாதியாகவும், கொடுங்கொலனாகவும் சித்தரிக்கப்படுகிறார். ஏனென்றால்

    எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார்

    அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமை,ரத்து செய்திருக்கிறார். அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

    இதற்காகவே இன்று அவர் அவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்.

    ஒரு மிகச்சிறந்த மாவீரனை மறந்து விட்டு, அன்று ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா போட்டு சர் பட்டம் பெற்ற பார்பனர்களை தியாகிகலாகவும் நல்லவர்களாகவும் கூறுகின்றனர்

  19. நினைவு கூறத்தக்க ஒரு மாவீரனின் கதயை படம் எடுதால் அதை கர்ப்பனை என போட சொல்கிரது (முச்லிம் என்ப்தால்) சங்பரிவார கூட்டம், கர்ப்னை ராமனை உன்மையாக பாவிக்கிரது

  20. திப்புசுல்தானின் முழுமையான சரித்திரம் பாடபுத்தகஙக்ளில் சேர்ககப்படவேண்டும்! இந்திய சரித்திரத்தை எல்லா மானில அரசுகளுடனும், பொதுமக்களுடனும் கலந்து ஆலோசித்து மறுனோக்கு செய்யப்படவேண்டும்! என் சி ஆர் டி / மத்திய கல்வித்துறை தன்னிச்சையாக பாடபுதகஙகளில் கை வைப்பதை தடுக்க வேண்டும் !

    • They should also talk a lot about India before 1206,India after mughal rule,talk about Rajputs,Shivaji Maharaj,Sikh Empire,The realities of the bigotedness of all the mughal kings and the sultans,the culture of destroying temples and building mosques,hyderabad nizam,they should also talk about muslim rule in India destroying buddhism and bakhtiyar khilji burning the nalanda library.

  21. https://www.vinavu.com/2010/12/02/tipu-sultan/

    //எதிர்கொண்டார் திப்பு//

    //குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி//

    //விதித்தான் கார்ன்வாலிஸ்//

    //தொடங்கினார் திப்பு.//

    //எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் //

    //எழுதுகிறான் வெல்லெஸ்லி//

    //பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி//

    அதாவது, தாக்கப்பட்ட சுல்தானுக்கு ர் , தாக்கிய ஆங்கிலேயருக்கு ன்.

    Few centuries back, Muhamadan raiders like Gazni Muhamad attacked India. Vinavu, if at all you write about these episodes, can you use the same ‘respect’ to them? Do you have any such articles

    • Dear Brother Hari Kumar,

      Compulsion is not allowed in islam..A man who want to be a muslim if he accepted truely by his soul and not by anyone’s compulsion..so if tipu forceily converted hindus to islam then tipu is not a muslim

      • //Compulsion is not allowed in islam//

        This is what Muslims say loudly but converting forcibly is what they do actually. Pakistan is an example that shows what happens to non-muslims in a muslim majority land…They will be raped if they dont convert…they will be killed if they dont convert..The religion of peace is the one that has maximum number of terrorists…Everything is a compulsion in Islam.

      • Abuthahir

        I am not a kid to believe something because u say so and u shud also try to go read up history instead of believing your local maulana.

        go tell people that tipu is not a muslim,why dont muslims condemn all those invaders who went around forcing people to convert.

  22. //ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். //

    They should have prefered any rule over the Muhamadan rule. Thus, the title of துரோகி need not always be bad.

    //டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு//

    //துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்//

    And, you call his fight ‘freedom fight’? Vinavu, you must be crazy.

  23. //திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.//

    //அல்லா எமக்குச் சாவு வராதா//

    So, these மக்கள் are his muhamadan subjects. You could have removed ‘அல்லா’ to make it look like as though muhamadans as well as non-muhamadans were grieving.

  24. விக்கி இருக்கும் திப்பு பற்றிய பகுதிகளைப் படித்தால், திப்பு பற்றிய ஒரு தவறான கண்ணோட்டமே வருமாறு எழுதப்பட்டுள்ளது. வெலிங்க்டன், காரண்வாலிஸ் முதலிய ஆங்கிலேய அதிகாரிகளை மேதைகளாகவும், திப்பு திருவாங்கூர், தஞ்சாவூர் பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்படும் அளவு படையெடுப்புகளின் போது கொள்ளையிடலை நடத்திய மன்னன் என்று விக்கி முழுவதும் சேறு இறைக்கின்றது. இதனை கண்டிப்பாக மறுத்து ஒரு கட்டுரை ஆதாரங்களோடு வெளியிட வேண்டும்.

  25. In the aftermath of the 1780 Battle of Pollilur, 7,000 British soldiers were held imprisoned by Haidar Ali and Tipu Sultan in the fortress of Seringapatnam. Of these, more than 300 were forcibly circumcised.[28] Cromwell Massey, who kept a secret diary during his captivity, wrote: “I lost with the foreskin of my yard all those benefits of a Christian and Englishman which were and ever shall be my greatest glory.”[29] Adolescent captives were, in addition to being circumcised, made to wear female clothes. James Bristow, a teenage artilleryman, revenged himself by circumcising dogs, believing that this would harm the religious feelings of the Muslim warders. The prospect of punishment did not deter him, because “compelling us to undergo an abhorred operation [was] so base and barbarous an act of aggression, that it was impossible to reflect on it with temper.”[30] James Scurry, also a prisoner of war, confirms in his book, The Captivity, Sufferings, and Escape of James Scurry (1824), that English soldiers, Mangalorean Catholics, and other prisoners were forcibly circumcised.[31] In 1784, when Tipu returned from Mangalore, he brought back tens of thousands of Mangalorean Catholics from Kanara and subjected them to forced circumcision.[32] A Hindi idiom ‘Mar-mar ke Musalman bana’ (meaning ‘make Muslim by repeated beating’) can be traced to originate from forcible conversion of Hindus.

    From wikipedia…

  26. The Tipu rocket pictures drawn in NASA-USA.
    British people are capturing Tips unused rockets and modified them and enriched the rocket technology.

    long back I read this from A.P.J Abul kalam book Wings of fire.So this information may need some corrections

  27. ஹிஸ்பீட், ஹரிகுமார், ஆன்மிக வல்லரசு என்பதில் நான் இட்ட பின்னூட்டம் இங்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    அதே விக்கிலீக்கில் கிராம்வெல் உள்ளிட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் டைரி குறிப்புகளை காழ்ப்புணர்வுடன் கூடிய திரிபுகள் என்று பின்னால் வந்த ஆங்கிலேய அதிகாரிகளே எழுதி வைத்து உள்ளனர்.

    சோழன் //தர்மராஜா காலகட்டத்தில் திப்புசுல்தானை மீண்டும் தாக்குவான் என்று பயந்து பிரிட்டிஷாருடன் திருவிதாங்கூர் ஓர் ஒப்பந்தம்போட்டுக்கொண்டது. //
    என்ன சோழன் உளறீங்க !!! http://www.keralahistory.ac.in/tsm_2.htm என்ற திருவிதாங்கூர் அரசுப் பற்றிய ஆவணத்தில், நவாப் மற்றும் பாளையக்காரர்களை அடக்க பிரிட்டிஷ்க்கு உதவிதயதால் தான், பிரிட்டிஷ் – திருவிதாங்கூர் ஒப்பந்தம் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டு உள்ளது. அதனால்தான் ஐதரும், திப்புவும் திருவிதாங்கூரைத் தாக்கினர்.

    The part played by Travancore under Maharaja Rama Varma Karthika Thirunal in settling the political map of South India and helping to promote Pax Britanica is also explained in considerable detail. The suppression of the “irrepressible” Poligars of Tinnevelly and the buttressing of the authority of the Nawab of the Carnatic were achieved by the East India Company with the active help of the Maharaja who sent large armies to fight the enemy at Vasudevanallur, Nellithankavila and many another places. However, the Maharaja was obliged to recognise the formal precedence of the Nawab through the persuasion of the Company’’ officers. The participation of Travancore in the war between the East India Company and Mysore is described in the older books. But the magnitude of her services and her sacrifices, and the value of the assistance which she rendered to the English in the consolidation of their power in South India have not hitherto been adequately treated or clearly explained. An attempt to fill up the gap is made in this Volume.//

    மேலும், திருவிதாங்கூர் உள்ளிட்ட மற்ற பரம்பரை அரசர்கள் விஸ்தரிப்பில் ஈடுப்பட்ட மாதிரியே சாமானியக் குடும்ப மன்னரான ஐதர் அலி ஈடுபட்டாலும், இந்த நாட்டின் எதிரிகளுக்கு உதவுவதாக ஒருபோது போராடியதில்லை. மாறாக அவர்களை அழிக்க வேண்டும் என்றே போராடினார். அதனால்தான் திப்புவைப் பற்றிய குறிப்பில் காரன்வாலிஸ் “திப்புவைப் போல மற்ற மன்னர்கள் இல்லாதது தனது அதிர்ஷடம் என்று” குறிப்பு எழுதினார்.

    —– மிக லேட்டான பின்னூட்டம் என்றாலும் மதிப்பான பின்னூட்டம்

    • I come from Travancore myself and the Maravars and the Nairs used to have great enemity between themselves.

      But the Maharaja chose the evil looters British East India Co over the murderous,bigot Tipu Sultan who wanted to extend the Ottoman Empire in South India.

      Thanks but no Thanks.

      Travancore was always attacked only for the gold it had,which is proven now.

      The Maharaja is a legend for never having even learnt where the gold was(so as to avoid it being stolen by Tipu or the British) and now he died as a common man.

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க