privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பழைய பேப்பரே வெட்கப்படுது!!

பழைய பேப்பரே வெட்கப்படுது!!

-

“ஹிந்து சிக்ஸ் பிஃப்டி, தினமணி தினமலர் ஃபோர் பிஃப்டி, தினத்தந்தி த்ரீ ஃபிப்டி, விகடன், குமுதம், இந்தியாடுடே ஃபைவ் ருபீஸ்..” கடகடவென அதிகாரமாக குரல் வந்து விழ, நான் பழைய பேப்பர் வியாபாரியா?இல்லை அவர் வியாபாரியா என ஒருகணம் நிலைகுலைந்து போனார் பழைய பேப்பர் வியாபாரி.

“சார்!சார்! கொஞ்சம் நிறுத்து சார். விட்டா எங்கூட வியாபாரத்துக்கே வந்துருவ போல இருக்கு, அவ்ளோளாம் வராது சார்! எனக்குக் கிடைக்கறதே கிலோவுக்கு ஐம்பது பைசாவோ, ஒரு ரூவாயோதான்.. நீ இப்படி ரேட்டுப் போட்டா நான் பழைய பேப்பர் வியாபாரத்தையும் வுட்டுட்டு இனிமே எங்க போறதுன்னு தெரியல..”

“ஏம்ப்பா நான் என்ன தப்பாவா சொல்லிட்டேன். விவரந் தெரியாதவங்ககிட்ட நீ எப்படி வேணாலும் வியாபாரம் பண்ணிக்கோ… வீட்ல கம்ப்யூட்டர் இண்டர்நெட்டுனு வெச்சுகிட்டு நான் இது கூட தெரியாமலா இருப்பேன்.. நெட்ல பாத்தா இன்னைய ரேட்டு கரெக்டா வருது.. நான் ஒண்ணும் உன் கண்ணக் கட்டி ஏமாத்துல.. வேண்ணா பாக்குறியா.. ”

“காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல.. என்னா கம்ப்யூட்டரோ! கம்பியூட்டர விடு சார், என் வயித்தப் பாரு.. காலைலேர்ந்து வெறும் டீயிலயே மூணு சக்கர வண்டிய மிதிச்சுக்கிட்டு,மூணு நாலு மெத்தைல ஏறி பழைய பேப்பர வாரியாந்து வலி நோவுது சார். ஏமாத்திப் பொழைக்கணும்னா எனக்கு ஏன் சார் இவ்ளோ பாடு..”

“நோ..நோ.. இந்த ஆர்க்யூமெண்டே வேணாம். நாட்ல யார்தான் கஷ்டப்படல.. நான் கூடத்தான் காலைல எழுந்து சாப்பிட்டனோ, சாப்பிடலயோ டயத்துக்கு ஆபிசு ஓட வேண்டியிருக்கு.. நீ த்ரீ வீலர்னா நான் டூ வீலர்.. எல்லாருக்கும் கஷ்டந்தான்.. அதுக்காக ஒரு நியாயம் வேண்டாமா.. கட்டுப்படியானா எடு! ஒத்து வரலயா விடு.. டோண்ட் வொர்ரி!”

“இப்படிப் பேசினா எப்புடி சார்! மூணாவது மெத்தைல இருந்து வேற இவ்வளவையும் தூக்கியாந்தாச்சு, கம்ப்யூட்டர்ல அவன் ஆயிரம் போடுவான்.. காயிலாங் கடக்காரன் ஒத்துக்கணும்ல…”

“சரிசார், வேற என்ன பண்றது, நேரு சீரா போட்டுக்கலாம்.”

“என்ன நேரு சீரோ! நம்ம நாட்லயே இது ஒரு பெரிய ப்ராப்ளம்… தொழிலே இல்லேங்கறது, கொடுத்தா ஏட்டிக்குப் போட்டி பேசுவீங்க.. உன்ன சொல்லி குத்தமில்ல… ஸ்டேட் கவர்மெண்ட்டே சரியில்ல… சரி காலைல காட்டியும் வம்பு வேணாம்.. நீ மொதல்ல எடயப் போடு…”

“உங்கிட்ட நூறு ரூபா பேப்பர போடுறதுக்குல்ல நான் பத்து ரூபாய்க்கு பால் குடிக்கணும் போல இருக்கு.. ஓகே.. போடு..போடு..”

“என்னா சார்! பழைய பேப்பர்காரன்கிட்ட போயி இவ்ளோ வலி படுற, வீடு வந்து வாங்கிட்டுப் போறனே சார்… அம்பது பைசா, ஒரு ரூபா விட்டுக்கொடு சார்..”

“பாத்தியா, பேச ஆரம்பிச்சுட்ட, பேசாம எடயப் போடு! பழைய பேப்பர்னா சும்மாவா? ஐ நோ எவரிதிங்… பழைய அட்டப்பெட்டிய வெச்சுதான் அம்பானியே பணக்காரணானான் தெரியுமா? ஏதோ ஹிண்டு பேப்பர படிச்சிட்டு சும்மா வீட்ல கெடக்குற ஜடம்னு என்ன நெனச்சியா? ஐ எம் ஏ ப்ராஞ்ச் மேனேஜர் ஆஃப் சிட்டியூனியன் பேங்க்… எபவ் டொண்ட்டி ஃபைவ் இயர்ஸ் சர்வீஸ்!”

“சரளமாக கல் வந்து விழுவது போல ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து விழ.. பழைய பேப்பர் வியாபாரிக்கு எடை குழறியது… இரு சார்.. ஒரு கிலோ கல்ல எடுத்துட்டு வந்துர்றேன்,” என்று வண்டியை நோக்கி நகர்ந்தார்..

“இவனுகள சாதாரணமா நெனக்காதீங்க, இந்தத் தராசு, கல்லு எல்லாமே ஃப்ராடு.. கிலோ கணக்குல நம்மகிட்ட அடிச்சுட்டுப் போயிடுவான்! நம்ம அபார்ட்மெண்ட்டு மாதிரி எத்தன பேரு? எத்தன கிலோ அடிப்பாங்க, கணக்குப் போட்டு பாருங்க.. சும்மா நடிப்பாங்க சார்… இங்க சம்பாரிச்சு ஊர்ல போயி வட்டிக்கு விடுவான், வீடு கட்டுவான். ஒண்ணு தெரியுமா, அவன் லைஃப்ப என்ஜாய் பண்ற மாதிரி நாம கூட பண்ண முடியாது… இந்த காச வாங்கி நாம ஒண்ணும் பேங்க்ல போடப் போறது கெடயாது.. சனங்கள ஏமாத்த முடியாதுன்னு அவன் தெரிஞ்சுக்குனும் பாருங்க.. அதுக்குத்தான் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கறது…” பக்கத்து வீட்டுக்காரரிடம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்..

“தோ சார்!…” பேப்பர், பத்திரிகையை வகைப்படுத்தி நிறுத்துப் போட்ட வியாபாரி, “குறிச்சுக்க சார்.. இங்கிலீசு ஆறு கிலோ, தமிழ் மூணு கிலோ, புத்தகம் நாலு கிலோ” என்று லாவகமாக மனதுக்குள்ளேயே கூட்டிக் கொண்டு எதிரில் நிற்பவரை கண்களால் எடை போட்டுக் கொண்டே சாக்குப் பைக்குள் பேப்பரை அசக்கி அசக்கி திணித்தார். கூடவே கின்லே காலி பாட்டிலை நசுக்கி உள்ளே திணித்தார்.

“என்னப்பா நீ பாட்டுக்கும் எடை போடாமயே நசுக்கிப் போடுற.. அதயும் நிறு” என்றார் பேங்க்காரர் படபடப்பாக…

“சார் அதுக்கல்லாம் எட கெடயாது சார்… மொத்தமா ஒரு ரூபா போட்டுக்க.”

“என்னப்பா, பத்து பாட்டில் போட்டுருக்கேன். ஒரு ரூபாங்கற..”

“நீ அம்பது போட்டாலும் அது தலையெழுத்து அவ்ளோதான் சார்.. காயலாங்கடைல வந்து பாரு.. உன் கம்பியூட்டரு மண்ட ஓடுக்கே அங்க மதிப்பு கெடயாது.. சும்மா ஒடச்சுதான் போடுவோம்.”

“ஏமாந்தவனா இருந்தா இன்னும் நீ அள்ளி விடுவ.. உங்கிட்ட போட்டது மொதல்ல என் தப்பு, சரி.. சரி.. பணத்தக் குடு…”

“உன்ன ஏமாத்தி நா என்ன அம்பானியா ஆகப்போறேன். ஏன் சார் நீ வேற.. பேசக்கூடாதுன்னு வேற சொல்ற.. இந்தா சார் உன் பணம் அறுபத்தேழு..”

“பாத்தியா திரும்பவும் வேலயக் காட்டுறியே, எவ்ளோ கணக்கு சரியா சொல்லு…”

“என்னா சார், உன் கண்ணயா மறைச்சுட்டேன். அறுபத்தேழு ரூபா எழுபத்தஞ்சு காசு வந்துச்சு.. சில்லறை இல்லையேன்னு நோட்டா குடுத்தேன்.. இந்தா ஒரு ரூபாயா வெச்சுக்கோ…”

“என்னமோ, நீ எனக்கு பிச்ச போடற மாதிரி சொல்ற.. நாலு தெரு அலையாம உனக்கு லம்ப்பா இங்க கெடைக்குது.. இதுல நீ சலிச்சுக்குற, இதையே கார்ல போறப்ப மவுண்ட்ரோட்ல மொத்த வியாவாரிகிட்ட போட்டேன்னு வெச்சுக்க, எனக்கு நூறு ரூவா கெடச்சிருக்கும். சரி.. சரி.. உங்கிட்ட பேசப் பேச பிரச்சனைதான், ஒரு எழுபது ரூபாயா எடு… வேஸ்ட் ஆஃப் மை டைம்.. வேஸ்ட் ஆஃப் மை எனர்ஜி, ஒண்ணு தெரிஞ்சுக்க.. என்னிக்கும் நேர்மையா வாழப் பழகு… லைஃப் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கும்… தொழில சுத்தமா செய்யி… செய்யும் தொழிலே தெய்வமுன்னு சும்மாவா சொன்னான்..” பேசிக் கொண்டே போக பழைய பேப்பர்காரர் சடாரென எழுபது ரூவாயாக கணக்குத் தீர்த்தார்.

வேண்டாத சுமையாக சாக்குப் பையை சுமந்தவர் முணகிக் கொண்டார், “என் பைலேர்ந்து ஒரு மூணு ரூவாய புடுங்கறதுக்கு தத்துவம் வேற! அடச்சே..” ஒரு கணம் துருபிடித்த இரும்பை உதறிப் பார்ப்பது போல மௌனமாக இமைகளை உதறி பேங்க்காரரை உற்று நோக்கியவாறு நகர்ந்தார்.

“என்ன அப்படிப் பாக்கறீங்க, காசு பெருசில்ல சார்.. நம்மள ஒண்ணுந் தெரியாத முட்டாள்னு நெனக்கிறாம் பாருங்க, அதான் நானும் விடல…” ஹி..ஹி..ஹி. பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது சாமர்த்தியத்தைப் பகிர்ந்து கொண்டு டக் டக் கென்று மாடியேறினார் பேங்க்காரர்…

________________________________________________________________________

– சுடர்விழி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

________________________________________________________________________

  1. பழைய பேப்பரே வெட்கப்படுது!!…

    காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல…..

  2. ‎”என் பைலேர்ந்து ஒரு மூணு ரூவாய புடுங்கறதுக்கு தத்துவம் வேற! அடச்சே..”
    மேட்டுத்தர வர்க்கத்தை பார்த்து பல்லிளித்த வார்த்தைகள்…

  3. தெருத்தெருவாக பொருட்களை சுமந்து வந்து விற்பவர்களுடன் ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம் சண்டையிடும் நம்மில் பல பேர், பெரியக் கடைகளுக்கு சென்று, தெரிந்தே அதிக விலை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். கேட்டால் ‘அது பிராண்ட் சார்’. இது போன்ற ஆட்களின் முகத்தில் அறைகிறது இந்த கதை. பகிர்வுக்கு நன்றி.

  4. சுடர்விழிக்கு வாழ்த்துக்கள்! அருமையான எதார்த்தம். நிஜத்தை பதிவு செய்தது போல் இருக்கிறது. கதையின் பொருளும், நோக்கமும் அதுதான் என்று நினைக்கிறேன்.கதாசிரியர் யாருக்கு ஆதரவாகவும் தன் கருத்தை திணிக்கவில்லை.நிறைய சிந்திக்க வைக்கிறது. .

  5. //*
    “என்ன நேரு சீரோ! நம்ம நாட்லயே இது ஒரு பெரிய ப்ராப்ளம்… தொழிலே இல்லேங்கறது, கொடுத்தா ஏட்டிக்குப் போட்டி பேசுவீங்க.. உன்ன சொல்லி குத்தமில்ல… ஸ்டேட் கவர்மெண்ட்டே சரியில்ல… சரி காலைல காட்டியும் வம்பு வேணாம்.. நீ மொதல்ல எடயப் போடு…”
    *//

    சிட்டி யூனியன் பேங்க் மேனேஜர் அபவ் 25 இயர்ஸ் சர்வீஸ், பார்ப்பன ஜெயலலிதா ஆட்சி செய்தாலும் ஸ்டேட் கவர்மெண்ட் சரியல்ல என சொல்வாரா?

    மாட்டாரே?

    பார்ப்பனர்கள் தங்கள் எதிரிகளை எப்போதும் சரியாக தாக்கி கொண்டே இருப்பார்கள்…

Leave a Reply to கன்னம்.காம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க