privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கௌரவம்

-

sadண்மையை உரக்கச் சொல்லி நேர்மையா இருக்கிறதுதான் மனிதனுக்கு கௌரவம். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தத்தை அவரவர் வசதிக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி வளைச்சு நெளிச்சு போலி கௌரவமா உருமாறி ‘கௌரவம்’ இன்னைக்கி சித்தரவதைய அனுபவிக்குது.

இந்த போலி கௌரவம் நகரங்கள விட கிராமங்கள்ல இன்னமும் உயிர் நீக்கும் விசயமா இருக்கு. உள்ள இருக்குறது என்னண்ணு தெரியாம கலர் பேப்பரால அலங்கரிச்சும், கமுக்கமா கவர்லையும் மூடி மறைச்சு நகரங்கள்ள நடக்குற விழாக்கள்ள கௌரவம் நாசூக்கா நடபோடுது. ஆனா கிராமங்கள்ள தாம்பூலம் தட்டுவரிசையா சீர்வரிசை செய்முறையின்னு பந்தல் நிறைய பந்தா காட்டுது.

அடுத்த வேள சோத்துக்கு என்ன செய்றது என்ற நெலம இருந்தாலும் சட்டுன்னு ஒரு மணி நேரத்துல 1000 ரூபாய்க்கு மொய் செய்வாங்க. நாலு பேருக்கு முன்னால நாமும் கௌரவத்த காப்பாத்திட்டோம்ங்கற பெருமிதத்தோட ஈரத்துணிய வயித்துல கட்டிகிட்டு குப்புறப்படுத்துகிட்டு அழுவாங்க. இப்படி போலி கௌரவத்த காப்பாத்துனம்முனு வாழ்க்கைய தொலைச்சவங்க பலபேரு.

பல நாளா வீட்டுக்கு குண்டானோ, சட்டியோ அவசியமா தேவைப்பட்டுருக்கும். வீட்டு நெலமையும், கையில உள்ள பணத்தையும் மனசுல வச்சுகிட்டு இந்தா, அந்தான்னு தட்டி கழிச்சு, வாங்க மாட்டாங்க. ஆனா அஞ்சு வட்டிக்கி வாங்கியாவது சபையில செய்ய வேண்டியத செஞ்சு கௌரவத்த காப்பாத்திட்டதா மார்தட்டுவாங்க.

இந்த வறட்டு கௌரவத்த காப்பாத்த பெரும்பாலான குடும்பத்துல பல சிரமங்கள கடந்து வந்த ஏதாவது ஒரு கதை இருக்கும். எனக்குத் தெரிஞ்ச சில பேரோட வாழ்க்கையில இந்த ‘கௌரவம்’ போட்ட ஆட்டத்ததான் இங்க சொல்ல விரும்புறேன்.

ஒரு பொண்ணு தன் அனுபவத்த இப்படி சொன்னா.

“எங்க வீட்டுல ஒரு சோடி காளமாடு நின்னுச்சு. ரெண்டும் வெள்ள வெள்ளேருன்னு இருக்கும். ஒரு மாட்டுக்கு கொஞ்சம் கொம்பு வளச்சுகிட்டு இருக்கும். இன்னெரு மாட்டுக்கு நெத்தியில சின்னதா இந்தியா வரைபடம் போல கருப்பு கலர் கொஞ்சம் இருந்ததால பாக்க அழகா இருக்கும். எங்க வீட்டுக்கு உழவு ஓட்டுனது போக அந்த மாட்ட வச்சு எங்கப்பா கூலிக்கும் ஏரு ஓட்ட போவாரு. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே கொஞ்சம் வைக்கெ (வைக்கோல்) அள்ளி போட்டேன்னா அப்புடியே என் கைய நக்கும். குளத்துல எறக்கி மாட்டுமேல சவாரி செஞ்சேன்னா மறு கரைக்கி அலேக்கா கொண்டு போயி விட்டுடும். எங்க வீட்டுல உள்ள பசுமாடு கன்னுக்குட்டி போட்டு வளந்ததுதான் வளச்ச கொம்பு உள்ள இந்த காள மாடு. சின்னதுலேருந்து வளத்ததால எம் மேல ரோம்ப பாசமா இருக்கும். கடைசி வரைக்கும் இல்லாம பாதியிலேயே வீட்ட விட்டு போயிருச்சு.”

“எங்க குடும்பத்துல நாந்தான் மூத்த பொண்ணு. நான் வயசுக்கு வந்ததுக்கு சடங்கு செய்ய முடியாதுன்னுட்டாரு, எங்க மாமா. ஒரே ஊருக்குள்ள மாமா இருந்தும் நம்ம பொண்ணுக்கு சடங்கு செய்ய மாட்டேன்னு சொல்லி அசிங்கப் படுத்திட்டாங்களேன்னு எங்க அம்மா அழுது பொலம்பிச்சு. அன்னைய நெலமைக்கி எங்க கையில சல்லி காசு கெடையாது.”

“சடங்குக்கு செய்ய மாமா வந்தா என்னென்ன முறை செய்வாங்களோ அதெல்லாம் எம்பிள்ளைக்கி ஒன்னு விடாம நானே செஞ்சு அவங்கள தலை குனிய வைக்கணுன்னு சொல்லி, நின்னது நிக்க அந்த ரெண்டு காளமாட்டையும் வெல பேசி வித்துட்டு சடங்கு செஞ்சாங்க எங்கம்மா. அந்த மாடு இருந்துருந்தா நாங்க பட்ட கஸ்டத்துக்கு கைதாங்கி உதவியிருக்கும். அது போனதால நாங்கதான் தலகுனிஞ்சு நின்னோம்.”.

சடங்கு தந்த சந்தோசத்த விட மாடு விட்டு பிரிஞ்ச சங்கடமும், அதனால பட்ட கஸ்டமும் ரொம்ப அதிகம். பொழப்புக்கு அடிப்படையா இருக்குற மாட்ட வித்து சடங்கு செஞ்சு கௌரவத்த காப்பாத்தி என்னத்த சாதிச்சோங்கற விரக்திதான் அந்த பொண்ணு பேச்சுல இருந்தது.

Wedding in Delhi டிவியில தொடங்கி ஏசி வரையும், பாதி மண்டபம் நெறம்ப பண்டபாத்திரம் வாங்கி வச்சு வாசல்ல காரும் நிறுத்தி வச்சு தகுதிக்கி மீறி ஆடம்பரமா தம் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாங்க ஒரு குடும்பத்துல. கல்யாணம் முடிச்ச ரெண்டாவது மாசம் வாங்குன பொருளுக்கெல்லாம் தவணைப் பணம் கட்டலன்னு கடங்காரன் வீடு தேடி வந்து மானத்த வாங்க ஆரம்பிச்சான். பின்னாடி வர்றத முன்னாடி யோசிக்காம கடன வாங்கிட்டு எப்புடி அடைக்கிறதுன்னு புரியாம கல்யாண பொண்ணுக்கு போட்ட நகைய கமுக்கமா சம்மந்தி வீட்டுக்கு தெரியாம வாங்கி கடன அடைச்சாரு அப்பாக்காரரு. நாலாவது மாசம் புருசன் பிரச்சினைன்னு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா. வருசம் ஆறாச்சு இன்னும் இங்கேயேதான் இருக்கா அந்த பொண்ணு.

இந்த அளவு எதுக்கு கஸ்டப்பட்டு கடன வாங்கி ஆடம்பரமா நல்லது கெட்டது செய்யணும். நம்ம அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டியதுதானே எதுக்கு இந்த வீணாப்போன பந்தா தேவையான்னு அவரு பங்களாளி ஒருத்தர்ட கேட்டதுக்கு

“சாதி, மதம், பாக்காம வருசவம்மெ (செய்முறை) இல்லாம, இந்த ஊருக்குள்ளையும் ஒரு சில கல்யாணம் நடந்துருக்கு. அவங்கல்லாம் கடன் தொல்ல இல்லாம பாக்க சந்தோசமா இருக்காங்க. ஆனா ஊருக்குள்ள நடக்குற மந்த நல்லது கெட்டதுக்கு அந்த குடும்பத்த முக்கியமா கலந்துக்கணுங்கற அக்கறையோட யாரும் கூப்புட்றது கெடையாது.

ஆனா நாம அப்படி செஞ்சா ஊரு என்ன சொல்லும் ‘வக்கத்தப்பய கட்டிக்குடுக்க முடியலன்னா கழுத்த நெரிச்சு கொன்னுட்டு போயிருக்கலாம். யாரு, என்னான்னு தெரியாம தகுதி தராதரம் இல்லாம பொண்ண குடுத்துட்டான்’னு அசிங்கப்படுத்திட்டு போயிருவாங்க. நாலு பேருக்கு முன்ன நாமும் தலநிமுந்து நிக்கணுன்னா ஊரோட ஒத்துத்தானே வாழ வேண்டியிருக்கு.”ன்னு சொன்னாரு.

இந்த வறட்டு கௌரவம், செய்முறை சீர்வரிசையின்னு பணம் சம்மந்தபட்ட ஒன்னா மட்டும் முடிஞ்சுப்போறதில்ல. அதுக்கு ஒருபடி மேலே போயி கௌரவத்துக்காக மனசாட்சியை இரும்பாக்கிக்குது.

சாதிமாறி கலப்பு திருமணம் செஞ்சுகிட்ட ஒரு பொண்ண சேத்துக்காத பெத்தவங்க மனசுக்குள்ள மகளையும் வெளியில கௌரவத்தையும் 25 வருசமா சொமந்துகிட்டு இருந்தாங்க. பிள்ளபாசம் தாங்க முடியாம ஊர்க்காரங்க, சொந்தக்காரங்களுக்கு தெரியாம சில முறை திருட்டுத்தனமா மகள பாத்துட்டு வந்தாங்கலே தவிர ஊரறிய ஏத்துக்கல. ஒருநாள் அனாதையா வெளியூருல செத்துக்கெடந்தாரு அப்பா. சொந்தபந்தங்களுக்கு பயந்துகிட்டு எம்பொண்ணுக்கு சொல்லணும்னு வலியுறுத்த முடியாம, தன் ஆதங்கத்த பலபேரு ஒப்பாரிக்கு நடுவுல சத்தத்தோட சத்தமா வெளிய தெரியாம சொல்லியழுதது அந்தம்மா. வறட்டு கௌரவத்தால பிள்ளையில்லா பொணமா போனாரு அந்த அப்பா.

இவங்க பெத்த பிள்ளைய ஏத்துக்கிட்டா கௌரவம் போயிருன்னு நெனச்சாங்க, அதவிட ஒரு படி மேலே போயி கௌரவத்துக்காக மனுசத்தன்மையே இல்லாம கொலை செஞ்ச குடும்பங்களும் இருக்கு.

ஒரு போலீசு அதிகாரியோட பொண்ணு தாழ்த்தப்பட்ட பையன காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்த பொண்ண நயவஞ்சகமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து (எந்த முறையில கொன்னாங்கன்னு தெரியாது) கொன்னுட்டாங்க. 50 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்தண்ட நடந்த இந்த அவலத்த ஏதோ வீர செயலா நெனச்சு பொண்ணோட பொணத்த சொந்த கிராமத்துக்கு தூக்கிட்டு வந்து கௌரவத்த நெல நிறுத்தினான் சட்ட ஒழுங்க பாதுகாக்குற வேலையில இருக்கும் போலீசு அதிகாரி. உணர்வுகள மனசரிஞ்சு ஏத்துக்காம இந்த போலி கௌரவம் மனுசங்கள எந்த எல்லைக்கும் கொண்டு போயிருது.

அறியாத வயசுலேயே கட்டிக்குடுத்து இருவது வயசுக்கெல்லாம் வாழ்க்கையை எழந்துட்டு வந்த ஒரு பொண்ணு தன்ன புரிஞ்ச ஒருத்தர் கூட பழக ஆரம்பிச்சது. இது வீட்டுக்கு தெரிஞ்சு அந்த பொண்ணோட அம்மா கருவாட்டுல வெசத்த கலந்து வறுத்து வச்சுட்டு, “நானும் ஓவ்வயச கடந்து வந்தவதான், இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்”. என்றாராம்.

பெத்த பிள்ளைய விட கௌரவம்தான் எனக்கு பெரிசு. ஆனாலும் துடிதுடிச்சு உயிர் போறத கண்கொண்டு பாக்குற கல்நெஞ்சக்காரி நானில்ல என் செரமத்த புரிஞ்சுகிட்டு நீயே சமத்தா நடந்துக்கங்கற தொனியில இருக்கு இந்தம்மா செஞ்ச காரியம்.

மனுசனுக்கு கௌரவங்கறது மத்தவங்கள வாழவச்சு பாக்குறதுலதான் இருக்கு. ஆடு, மாடு கோழி, குஞ்சுன்னு வாய் பேசாத உயிரோட உணர்வ புரிஞ்சு நடந்துக்குற மனுசன் சாதி வெறியில பெத்த பிள்ளைய கொன்னுட்டு மிருகத்த விட கேவலமா நடந்துக்குறாங்க.

இன்னைய நெலமைக்கி உலகத்துல எந்த பொருளெல்லாம் மார்கெட்டுக்கு வந்துருக்கோ அதெல்லாம் வச்சுருந்தாதான் கௌரவம்னு கருதுராங்க. அதுக்காக ஒரு பக்கம் மனுசன் மாடா உழைக்கிறான். இன்னொரு பக்கம் செய்ய கூடாத செயல்களையும் செஞ்சு மனுசுத்தன்மையையே இழக்குறான். இது பணம் சம்பந்தபட்டதா மட்டும் இல்லாம சாதி சடங்கு சம்பர்தாயம்னு நீண்டுகிட்டுப் போயி ஒரு கட்டத்துல மனுசன மனுசனே கொன்னு தீக்குறான்.

கௌரவமா வாழ்றது மனுசனுக்கு அழகு. ஆனா வறட்டு கௌரவத்துக்காக வாழ்றது மனுசனுக்கு இழிவு. இருக்குற நிம்மதிய கெடுத்துட்டு இல்லாத ஒன்னுக்காக வறட்டு கௌரவத்த ஜென்ம சனியனா கட்டிக்கிட்டு தூக்கி சுமக்குற எத்தனையோ பேரு வாழ்க்கைய நரகமா வாழ்ந்துட்டு இருக்காக.

இந்த வறட்டு கௌரவம் உள்ளத உள்ளபடி ஏத்துக்க வைக்காது. நாமளே அறியாம பண்ணின தவற, தவறுன்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க வைக்காது. பொதிசுமக்கும் கழுதையா வறட்டு கௌரவத்தை வாழ்நாள் பூறா சுமக்கவைக்கும். மொத்தத்துல மனுசன மனுசனா வாழ விடாது.

– சரசம்மா

  1. சிறந்த யதார்த்தமான எழுத்து. இது போன்ற பதிவுகள் தொடர்ச்சியாகக் கொண்டுவர வேண்டுகிறேன் .

  2. நோபல் பரிசு வென்ற ஒரு நூலில் வரும் கதாபாத்திரமான விலைமாதொருத்தி, பெரிய அதிகாரிகளின் மனைவிகளின் கற்பை தன் தொழிலால் காப்பாற்றிய பின்பு,அவர்களால் முதலில் ஏளனப் படுத்தப் பட்டிருந்தாலும் பின் அவர்களை ஏளனமாகப் பார்க்கும் நிலைக்கு உயர்த்திக் காட்டிய -ஒரு இலக்கிய எழுத்தாளனின் “கௌரவம்” இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது,போலிக் கௌரவம் பிடித்த மனிதர்கள் மத யானையை காட்டிலும் மோசமானவர்கள்…அழியட்டும் போலி கௌரவங்கள்.

Leave a Reply to paaval பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க