privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!

ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!

-

  • ஜெயா, அறிவில் அவ்வையார், துணிவில் ஜான்சி ராணி, அன்பில் அன்னை தெரசா! (தினமணி, மகளிர் மணி, 14.12.2016)
  • ஜெயாவின் மனம் பொன்மனம் போன்றது. (நடிகர் ரஜினிகாந்த்)
  • போயசு கார்டனில் இட்லி கடை நடத்த அனுமதித்த மகராசி ! (இட்லிக் கடை நடத்தும் சரசுவதி, தமிழ் இந்து, 09.12.2016)
  • துணிச்சலான அரசியல் நடவடிக்கைகளாலும், ஆட்சிக் காலங்களில் உறுதியோடு அவர் எடுத்த முடிவுகளாலும் இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களால் நினைவுகூரப்படுவார். (ஆனந்த விகடன், 14.12.2016)

ன்பு, துணிவு − இந்த மனிதப் பண்புகளுக்கான வரையறை என்ன?

1996−இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் அறிக்கை விட்டதைக்கூட மனதில் வைத்துக் கொள்ளாமல், எனது மகளின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் எனக் கூறுகிறார், ரஜினிகாந்த்.

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல்.
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல்.

போலீசாரிடம் என்னைத் தேடிக் கொண்டு வரச் செய்து, போயசு கார்டனில் மீண்டும் இட்லிக் கடை தொடங்கி நடத்த அனுமதித்தார் என நினைவுகூர்கிறார், சரசுவதி.

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவக்குமார், சரசுவதி உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடம் ஜெயா வெளிப்படுத்திய அக்கறையை, பெருந்தன்மையை, அன்பைக் கொண்டு அவரை மதிப்பிடுவதா? அல்லது தமிழகத்தின் பல்வேறு மக்கட் பிரிவினரின் கோரிக்கைகளின்பால் அவரும், அவரது அரசும் காட்டிய ‘‘அக்கறையை’’க் கொண்டு அவரை மதிப்பிடுவதா?

அறக்கட்டளை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கும் முதலாளிகள்தான், தனது தொழிலாளர்கள் அரைக்காசு சம்பளம் அதிகமாகக் கேட்டால் வேலையை விட்டுத் துரத்தி அடிக்கிறார்கள். முதலாளிமார்கள் தொழிலாளிகளின் வயிற்றலடிப்பதை மறைத்துவிட்டு, அவர்களது வள்ளல்தனத்தைக் கொண்டாட முடியுமென்றால், ஜெயாவின் கருணையையும் தமிழகம் கொண்டாடலாம்..

சரசுவதியைத் தேடிப்பிடித்து இட்லிக் கடை நடத்த அனுமதித்த ஜெயா, அதேவிதமான அன்பை, அக்கறையை, பள்ளிக்கூட மாணவர்களுக்குச் சமைத்துப் போடும் சத்துணவுப் பணியாளர்கள், அமைப்பாளர்களின்பால் காட்ட மறுத்தார். தமக்கு மற்ற அரசு ஊழியர்கள் போல ஊதியமும், ஓய்வூதியமும் தரக் கோரி அவர்கள் போராட முனைந்தபோது, அப்பணியாளர்களை சென்னைக்குள்ளேயே வராமல் தடுத்துத் துரத்தியது, ஜெயாவின் போலீசு.

2001 சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வரான ஜெயா, கிட்டதட்ட பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலையிலிருந்து ஒரே நாளில் துரத்தியடித்து, அவர்களின் வாழ்க்கையைச் சூனியமாக்கினார். இதற்கு, அப்பணியாளர்கள் முந்தைய தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர, வேறு காரணங்கள் ஜெயாவிற்குத் தேவையாக இருக்கவில்லை. இந்த அநீதிக்கு எதிராக அப்பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்காடி வென்ற பிறகும், ஜெயாவின் மனதில் கருணை பிறக்கவில்லை. இறுதியாக, 2006 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், தனது தேர்தல் வெற்றிகளைக் கணக்கிட்டு, அவர்களை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவைப் பெறுவதற்குள்ளாக, 80−க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் மாண்டு போனார்கள்.

அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

இதைவிடக் கொடுமையானது, மக்கள் நலப் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிய ஜெயாவின் அடாவடித்தனம். மக்கள் நலப் பணியாளர்கள் 1989−ஆம் ஆண்டில் அப்போதிருந்த தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர்கள். 13,500 ஊழியர்கள் இருபது ஆண்டு காலம் பணியாற்றி வந்ததை ஒரு பொருட்டாகவே கருதாமல், 2011−இல் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே அவர்களை வேலையிலிருந்து நீக்கியது, அம்மா அரசு.

மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இந்த அநீதியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்களைப் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இதனை எதிர்த்து அ.தி.மு.க. அரசு தொடுத்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவர்களுக்குப் பணி வழங்காவிட்டால், ஆறு மாத சம்பளத்தை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில், அவர்களைப் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இந்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, அ.தி.மு.க. அரசு உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அம்மா அரசின் இந்த அலைக்கழிப்புகளையும், போதிய வருமானம் இல்லாத வாழ்க்கையையும் எதிர்கொள்ள முடியாத அப்பணியாளர்களுள் இருபதுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர்.

தன்னை எதிர்த்து அறிக்கைவிட்ட, மேட்டுக் குடி வர்க்கத்தைச் சேர்ந்த ரஜினிகாந்திடம் காட்டிய பெருந்தன்மையை, மக்கள் நலப் பணியாளர்களிடம் ஜெயா காட்ட மறுத்தது ஏன்? தி.மு.க.வால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சி மட்டும் இதற்குக் காரணமில்லை. மக்கள் நலப் பணியாளர்கள் தன்னிடம் கையேந்தி நிற்காமல், விடாப்பிடியாக தன்னை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்ற ஜெயாவின் பாசிசத் திமிர்தான் இதன் அடிப்படை.

ஜெயாவின் கருணையும், எம்.ஜி.ஆரின் வள்ளல்தனமும், மக்கள் தம்மை அண்டி, தமது கருணைக்காகக் கையேந்தி நிற்க வேண்டும் என்ற பண்ணையார்களுக்கே உரிய சிந்தனையிலிருந்து பிறந்தவை. எந்தவொரு மக்கட்பிரிவும் எந்தவொரு கோரிக்கைகாகவும் போராடக் கூடாது. மாறாக, தம்மிடம் இறைஞ்சிப் பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்ட கட்சி அ.தி.மு.க. இந்த விதியை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கும், அவர்களை ஒடுக்குவதற்கும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடியவர்களாக அவர்கள் இருவருமே இருந்தனர்.

பெப்சி நிறுவனத்துக்கு நாளொன்று 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து தாரை வார்ப்பதை ரத்து செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருநெல்வேலி−சிப்காட் வளாகத்தின் அருகே நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடியில் காயமுற்ற அக்கட்சியின் தொண்டர்கள்.
பெப்சி நிறுவனத்துக்கு நாளொன்று 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து தாரை வார்ப்பதை ரத்து செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருநெல்வேலி−சிப்காட் வளாகத்தின் அருகே நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடியில் காயமுற்ற அக்கட்சியின் தொண்டர்கள்.

கும்பகோணம் பள்ளி தீக்கிரையான சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் இழப்பீடு வழக்கை எடுத்துப் பாருங்கள், கூடுதல் இழப்பீடு கோரிப் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களால் தொடரப்பட்ட வழக்கில், அது பற்றி விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையில் கமிசனை அமைக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். நீதிமன்ற உத்தரவுப்படி கமிசன் அமைப்பதால் ஜெயா அரசிற்கு நட்டமோ, அவமானமோ ஏற்படப் போவதில்லை. ஆனாலும், தன்னகங்காரம் காரணமாக அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது, அம்மா அரசு.

பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் சில சலுகைகளைக் கோரித் தொடர்ச்சியாகப் போராடுகிறார்கள் என்பதாலேயே, அவர்களைச் சந்திக்க மறுத்தது, ஜெயா அரசு. அதோடு, பார்வையற்றோர் என்ற பச்சாதாபம்கூட இன்றி, போலீசை ஏவிவிட்டு அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி, அவர்களை நகரத்திற்கு வெளியே கடத்திக்கொண்டு போய் சுடுகாட்டில் வீசியெறிந்தது.

தாமிரவருணி தண்ணீரை அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனமான கோக்கிற்கு அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொடுப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட ஜெயாதான், அம்மா குடிநீரை அறிமுகப்படுத்தினார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது எனத் திமிராக அறிவித்த ஜெயாதான், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க முன்வந்தார்.

இப்படித் தமிழக மக்களின் மீது அம்மா பொழிந்த கருணை மழையின் பின்னே ஏமாற்றுத்தனங்களும் மோசடிகளும் நிறைந்திருக்கின்றன. நம் மீது அடிமைத்தனத்தைத் திணிக்கிறது, ஜெயாவின் கருணை. அவரது துணிவோ ரவுடிக் கும்பலின் அடாவடித்தனத்தை மட்டுமே நமக்கு நினைவூட்டுகிறது.

2006−11 தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஜெயாவைத் தவிர மற்ற அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட சமயத்தில், ஜெயா, சட்டசபைக்குள் அ.தி.மு.க.வின் சார்பாகத் தனியொரு ஆளாகச் சென்று ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசியதைச் சுட்டிக்காட்டி, ஜெயாவின் துணிச்சலை அசாதாரணமான ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். ஜெயாவின் இந்தத் துணிச்சலுக்கு அச்சட்டமன்றத்தில் தி.மு.க. கடைப்பிடித்துவந்த குறைந்தபட்ச ஜனநாயகம் முக்கிய காரணமாக இருந்ததை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன.

அ.தி.மு.க. அரசால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் திருச்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. அரசால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் திருச்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அதேசமயம், ஜெயா, தனது ஆட்சி நெடுகிலும் சட்டமன்றத்தை எப்படி நடத்தினார்? தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை எதிர்த்தோ, விமர்சித்தோ பேச எழுந்தாலே, அக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதை, இடைநீக்கம் செய்வதை விதியாகவே மாற்றினார். சட்டமன்றத்தில் தான் ஆற்றும் உரைகளை, அறிவிக்கும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்துப் பேசக் கூடாது என்பதற்காகவே, சட்டமன்றத்தை ‘‘110 மன்றமாக’’ மாற்றினார். சட்டமன்றத்திற்கு வெளியே அவரை, அவரது ஆட்சியை விமர்சித்த எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்குகளை அடுக்கடுக்காகப் போட்டு, விமர்சன உரிமையைப் பறித்தார். ஆளுங்கட்சியை எதிர்த்து நின்ற ஜெயாவின் ‘‘துணிச்சல்’’, எதிர்க்கட்சிகளை, பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள மறுப்பதேன்?

காரணம், ஜெயா போன்ற பாசிச ஆட்சியாளர்களுக்கு உரித்தான பயம். பொதுமக்களை, எதிர்த்தரப்பை, விமர்சனங்களை எதிர்கொள்ள ஜெயா போன்ற பாசிச ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். 2011−இல் அவர் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, இனி பத்திரிகையாளர்களைத் தான் வாரம் ஒருமுறை சந்திக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என்பது உடனடியாகவே அம்பலமானது. அவரது ஆட்சியில் உயர் அதிகாரிகள்கூட அவரைச் சந்திக்க முடியாது என்றபடி ஜெயா போயசு தோட்டத்திற்கு பதுங்கிக்கொண்டு, மர்மமான வாழ்க்கையைத்தான் நடத்தி வந்தார்.

அவர் முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களைச் சந்தித்ததே கிடையாது. அவரோ, அவரது கட்சியோ மக்கள் பிரச்சினைகளுக்காக எந்தப் போராட்டங்களையும் நடத்தியது கிடையாது. பேரரசர்கள் உப்பரிகையிலிருந்து மக்களுக்குத் தரிசனம் தருவது போல, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் நான்கைந்து பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டுப் பறந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஜெயா, தனது ஆட்சியில் துணிச்சலான பல நடவடிக்கைகளை, முடிவுகளை எடுத்ததாக அவரைத் துதிபாடும் பத்திரிகைகள் எழுதுகின்றன. அந்த நடவடிக்கைகளுள் பெரும்பாலானவை, அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நினைத்த நேரத்தில் தூக்கியடித்தவைதான். அடிமைகளைக் கொல்லும் வழக்கம் இன்று இருந்திருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற பெயரில் உலவி வந்த அடிமைகளின் கதி அதோகதியாகியிருக்கும்.

இதற்கு அப்பால், பால் விலை மற்றும் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைத் தடாலடியாக உயர்த்தி அறிவித்ததை; வேலை நிறுத்தம் செய்த இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலைநீக்கம் செய்ததை; தமிழின உரிமைக்காகக் குரல் கொடுப்பதை ஒடுக்கியதையெல்லாம் அவரது துணிச்சலாக, திறமையாகச் சொல்லுகிறார்கள். குரூரமான மனோநிலை கொண்டவர்கள்தான் மக்களின் மீதான பாசிச ஒடுக்குமுறைகளைத் துணிச்சல், திறமை என்று பாராட்ட முடியும்.

ஜெயா, பார்ப்பன சாதியில், மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர். கான்வெண்டில் படித்தவர். இந்தச் சூழலில் வளரும் யாருக்கும் தான்தோன்றித்தனமும் திமிரும் கூடப் பிறந்த குணமாகவே இருக்கும். ஜெயாவிடமோ இதற்கு மேலே அதிகாரமும் இருந்தது. அவரது துணிவு இதிலிருந்துதான் கருவாகி உருவானது. சுருக்கமாகச் சொன்னால், சரளமாக இங்கிலீஷ் பேசும் மேட்டுக்குடி பார்ப்பனத்தி என்பதாலேயே ஜெயாவின் ரவுடித்தனங்களும் தான்தோன்றித்தனங்களும் துணிவாகக் காட்டப்பட்டன.

ரவுடிகளைக் கண்டு மக்கள் ஒதுங்கிச் செல்லுவதை, ரவுடியின் வீரமாக, துணிவாக மொழிபெயர்க்க முடியாது. அதுபோலத்தான் ஜெயாவின் துணிச்சல். உண்மையில், அவர் யாரையும் நம்பவில்லை. சந்தேகம், பயம் காரணமாக தனது கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், மன்னார்குடி குடும்பத்தை உளவுத்துறையைக் கொண்டு வேவு பார்த்தார். எம்.ஜி.ஆரைப் போல, ஜெயாவிற்குத் தனது உறவினர்களோடு நெருக்கம் இருந்திருந்தால், அவர்களையும் வேவு பார்த்திருப்பார். பாசிஸ்டுகள் தமது நிழலைக்கூட நம்புவதில்லை. அதைக் கண்டும் அஞ்சும் கோழைகள் அவர்கள்.

வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்து சந்துபொந்துகளுக்குள் மறைந்துகொள்ளும் கரப்பான் பூச்சிகள் போல, ஜெயாவும், சசியும் அச்சம், சந்தேகம், கோழைத்தனம் காரணமாக, போயசு தோட்டம், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட்டுகளில் பதுங்கியே காலம் கழித்தனர். ஊழல் பணத்தை எண்ணிப் பதுக்கி வைக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் இந்தத் தலைமறைவு வாழ்க்கையே வசதியாகப் போனது.

– அறிவு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017