privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஏர்டெல் வேலை சமத்துவத்தை தருமா ?

ஏர்டெல் வேலை சமத்துவத்தை தருமா ?

-

இணையத்தில் எடுக்கப்ப்ட்ட மாதிரிப் படம்.

ழகப்பன் ஏர்டெல் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்று சொன்ன போது மகிழ்ச்சியோடு வேலை பற்றிக் கேட்டேன். கொஞ்ச நேரத்திலேயே அந்த வேலை அவரை சுயமரியாதை இல்லாம நடத்தறதுக்கு உதவியா இருக்குன்னு வருத்தமாயிருந்தது.

அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்  ‘ஏர்டெல்’ டிஷ் ஆன்டனா பழுதானதால் நிறுவனத்துக்குப் புகார் கொடுத்துருந்தாங்க. கம்பெனியோட வட்டார அலுவலகம் பக்கத்து நகரத்தில் இருந்தது. புகார் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவனத்தின் ஊழியர் அழகப்பனைச் சர்வீஸ் செய்ய நிர்வாகம் அனுப்பியது. இதுல என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா?

டிவி ஆன்டனா பழுதானது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் வீட்டில். பழுது பார்க்க வந்த அழகப்பன் அதே ஊரைச் சேர்ந்த தலித் சாதியைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெருவுல வச்சு சோறு போடும் பாத்திரத்தையே மூணு முறை தண்ணி விட்டு தீட்ட கழிச்சு வீட்டுக்குள்ள எடுத்துட்டுப் போற பழக்கத்த இன்னும் கடைபிடிக்கும் இந்த ஊருல, வீட்டுக்குள்ள போய் டிவி ஆன்டனா ரிப்பேர் செய்றது எப்படி?

அழகப்பனுக்கு இதே ஊருல ஏற்கனவே இப்படி பழுது பார்த்த திகில் அனுபவம் உள்ளது. அது தந்த கசப்பான நினைவுகள் இருக்கும் போது மீண்டும் ஒரு பெருங்கசப்பைச் சந்திக்க அந்தத் தம்பி ரொம்பவே தயங்கிச்சு. சாதி தன் வேலைக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதை மேலதிகாரியிடம் சொல்ல முடியாது. பிறகு ஊருக்குள்ளதான் அதிகம் வேலை இருக்குன்னு ஆதிக்க சாதிக்காரரை வேலைக்கு போட்டுருவாங்க, வேலை போயிரும். இந்த வேலையும் போச்சுன்னா பெத்தவங்க போல கைகட்டி இவங்ககிட்ட  தான் வேல செய்யனும். பழசுக்குத் திரும்பி போறத விட புதுசுக்கு போராடி பார்க்க நினைக்கும் வயசுப்பசங்க மனசோட ஆனது ஆகட்டுமுன்னு முடிவுக்கு வந்தவர் நேராப் புகார் கொடுத்த வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால் வீட்டில் ஆள் இல்லை.

“நான் ஏர்டெல்லருந்து வந்திருக்கேன். உங்க டிஷ் ஆன்டனாவுல பிரச்சனைன்னு புகார் வந்துருக்கு. வீட்டுக்கு வந்து பார்த்தா ஆள் இல்லை. அதான் போன் பண்றேன். நாளைக்கு வரட்டுமா? இல்ல காத்திருக்கவா?” என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டார்.

“நான் வெளியூர்ல இருக்கேன். வீட்டுச் சன்னல் சட்டத்தில் சாவி இருக்கும் நீங்க எடுத்துக் கதவை திறந்து வேலையைப் பாருங்க. எங்க அம்மா வயலுக்குத்தான் போயிருப்பாங்க வந்துருவாங்க” என்ற பதிலை கேட்ட அழக்கப்பனுக்கு தலைசுற்றியது.

வீட்ல உள்ளவங்க நேரில பார்த்தா, தான் யார்ன்னு தெரிஞ்சுரும், வேலை செய்வதா வேண்டாமான்னு முடிவு தெரிஞ்சுரும் என்று நெனச்சவருக்கு இப்படி ஒரு சோதனை.

“அது சரிபடாதுங்க ஆள் இல்லாம கதவை திறந்து எப்படிங்க உள்ளே போறது?”

“நீங்க எடுத்துட்டு போற அளவுக்கு வீட்டுக்குள்ள ஒன்னுமில்லைங்க. உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் குடுக்க கூட வீட்டுல பணம் இருக்கோ இல்லியோ பயப்படாம வேலையப் பாருங்க.” என்றார் வீட்டுக்காரப் பையன்.

அழகப்பனுக்கு என்ன செய்றதுன்னு புரியல. போன்ல பேசர வீட்டுக்கார மனிதரை நேர்ல பாக்கும் போதும் பேசும் போதும் சாதி வித்தியாசம் காட்டாத மரியாதை அவர் பேச்சில் தெரியும். அது அவர் பார்க்கும் ஆசிரியர் வேலைக்கான அருகதையாய் கூட இருக்கலாம். அதை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது. வேலை நடக்க வேண்டுமே என்று வீட்டுக்குள் விடுவார்களே தவிர சாதியை விட்டு விடமாட்டார்கள் என்பது அழகப்பன் கணிப்பாக இருந்தது.

“விசயம் அது இல்லிங்க நான் யாருன்னு தெரியாம பேசறீங்க, நானு எஸ்சி தெருவைச் சேந்த அழகப்பன்.”

“அட நம்ம அழகப்பனா? ஆரம்பத்துலேயே சொல்லி இருக்கலாமே, எதுக்கு இவ்வளவு தயங்குற. உன்னோட வேலையத் தானே செய்ய வந்துருக்க நீ பாட்டுக்கு போயி வேலையப் பாரு. எந்த பிரச்சனையும் இல்ல.”

வேலைக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் ஊருக்குள் 20 வேலைகளுக்கு மேல் பார்க்க வேண்டி இருந்தது. முடிந்த அளவு தவிர்த்தது போக பார்த்த வேலைகளில் வீட்டுக்குள் விட யோசித்தவர்கள் தான் அதிகம். இவர் ஒருவர் தான் விதிவிலக்கு. சாதி வெறி புடிச்சு பேசற ஊருக்குள்ள அவர் படித்த படிப்பும் பார்க்கும் வேலையும் அவரை பண்புள்ளவரா மாத்திருக்கு” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் அழகப்பன்.

இப்படித்தான் ஊருக்குள் ஆதிக்க சாதி வீடுகளில் வேலை செய்ய வேண்டி வரும்போது அழகப்பன் மிகவும் பதட்டம் அடைகிறார். வீட்டுக்காரங்க அனுமதியோடு உள்ள போய் வேலை பார்க்கிறார். அவர்களும் இந்த வேலைக்கு வேறு வழி இல்லாமல் அனுமதிக்கிறாங்க. அதப்பாத்துட்டு இருக்க முடியல சிலருக்கு. காலம் காலமா உண்ட சோத்துக்கு திண்ண கங்குல நின்னவங்க இன்னைக்கி வீட்டுக்குள்ள வாராங்களே இனி என்ன நடக்குமோங்கற நடுக்கத்துல நெஞ்சுல ஈரம் இல்லாம இப்பவும் பேசத்தான் செய்றாங்க.

அழகப்பனும் அவர் கூட வேலை செய்யும் வேறு ஒரு இளைஞருமாக அதே ஊருக்குள்ள ஒரு வீட்டுக்கு டிஷ் ஆன்டனா பொருத்த போயுள்ளனர். வீட்டுக்காரருக்கு வந்தது யார் என்று தெரியும்.

“என்னப்பா நீ ஏர்டெல்ல தான் வேலை பாக்குறியா. பரவால்லையே நாங்க பாரு இன்னமும் வெட்டிகிட்டும் கொத்திகிட்டும் வயல் வேலை பாக்குறோம் நீ படிச்சு வேலைக்கு போற. நாடு முன்னேறிருச்சு. ஆள் அனுப்புறோம்னு சொன்னாங்க, நீதான் வருவேன்னு நெனைக்கல. பரவால்ல. ஹோம் தியேட்டர் வாங்கி இருக்கேன் அதையும் சேத்து பொருத்திக் குடுத்துட்டு போ” என்று கூறியுள்ளார்.

அழகப்பனோடு வந்தவருக்கு முதலில் புரியலேன்னாலும் அப்பால முழுக்க புரிஞ்சுக்கிட்டார்.

நடு வீட்டில் ஒயர், செட்டாப் பாக்ஸ், ஆண்டனா, ஸ்பீக்கர் எல்லாத்தையும் பரப்பி வைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க அழகப்பன் தொடங்கி இருக்கார். அதே தெருவைச் சேர்ந்த வேறு இரண்டு பேர் நடந்த வேலையைப் பார்த்துச் சென்றார்கள். மரத்தடியில் நின்ற வீட்டுக்கார பையனிடன் போய் “யார்ரா இது. சின்னக்கருப்பு மகனாடா இவன். நடு வீட்டுல உக்கார வச்சு என்னடா பன்னிட்டு இருக்கிங்க” என்று கேட்டுள்ளார்கள்.

“ஏர்டெல் கம்பனிலதான் வேலை பாக்குறானாம். கம்பனிலேருந்து வரச்சொல்லி இருக்காங்க. நானும் ஒரு மாசமா அலையிறேன். இந்த ஸ்பீக்கர மாட்டுவோமுன்னு ஒருத்தனும் கெடைக்கல அதான்” என்று இழுத்துள்ளார் ஏர்டெல்ல புகார் கொடுத்தவர்.

சாதிக் கொடுமை

“காலம் கெட்டுப் போச்சுடா அவங்கப்பன் காலத்துல மாட்டு கொட்டையில உட்காந்து சோறு சாப்புட அஞ்சுவான். இவன் ஏதோ பொண்ணக் கட்டுன மாப்பிளையாட்டம் நடு வீட்டுல உக்கார்ந்திருக்கான் பாரு. உங்களச் சொல்லி குத்தமில்ல எல்லாம் அந்த டிவி படுத்துற பாடு.”

அழகப்பனுக்கு காதுல விழுந்தாலும் அந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துள்ளார். போங்கடா உங்களுக்கு நான் வேலை பாக்க முடியாது என்று சொல்ல முடியாததற்கு காரணம் மேலதிகாரிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம். காதில் விழாத மாதிரி இருந்துள்ளார். இதையெல்லாம் பிரச்சினையாக்கினால் வேலையும் போய் விடும். கம்பெனியும் இனிமேல் இது மாதிரி ஊரில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத்தான் போட வேண்டும் என்று முடிவு செய்து விடுவார்கள்.

கூட வந்த பையன் ஆண்டனா பொருத்திக் கொண்டு வீட்டுக்கு மேல இருந்துள்ளார். அவருக்கு காதுல விழுந்துருக்குமோ என்ற அச்சத்தோடும் அவமானத்தோடும் அழகப்பன் பதட்டத்துடன் இருந்தார்.

“இந்த அவமானத்துக்குப் பிறகு ஊருக்குள்ள வேலையின்னா பாக்க கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா இதை மேலதிகாரிகிட்ட சொல்லி வேலைக்கே ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு நெனச்சுதான் மீண்டும் இங்கன வந்து நிக்க வேண்டியதா போச்சு.”

“வெளியூருன்னா பிரச்சனை இல்லை நாம யாருன்னு தெரியாது போனமா வேலையை பாத்தமான்னு வந்துட்டே இருக்கலாம். இவனுங்ககிட்ட வேலை பாக்கறதுக்கு நாண்டுகிட்டுச் சாகலாம். ஊருக்குள்ள இந்த வேலைக்கி ஆள் கெடைக்காமயும் டிவி பாத்துப் பழக்கப்பட்டு போயி சும்மாருக்க முடியாமதான்  நம்மள வீட்டுக்குள்ள விட்றாய்ங்கென்னு தெரிஞ்சதும் கோபமாதான் இருந்துச்சு. என்னடா பொழப்பு இது, எதுக்கு இந்த கேடுகெட்ட சாதி வெறி புடிச்சவங்ககிட்ட வேலை பாக்கனுமுன்னு தோணும். ஆனா எதுத்து கேக்க முடியல.”

கக்கத்துல துண்ட வச்சுகிட்டு கூழ கும்புடு போட்டு பேசுனது. தவிச்ச வாயிக்கி கையில தண்ணிய வாங்கி குடிச்சது, பாத்திரமில்லாம பன ஓலையில கஞ்சி ஊத்துனது இது போல எத்தனையோ எங்கப்பங்கூட சின்னப் பிள்ளையா போனப்ப பாத்திருக்கேன். இப்புடியேப் பழகி பழகி அந்த நடுக்கத்துலேயே எனக்கும் வீட்டுக்குள்ள போறதுக்கு ஒடம்பு கூசுது.

ஊருக்குள்ள மரக்கா நெல்லுக்காக அறுப்புக்கு போனப்ப சாதிக்கு அடிபணிஞ்சு போற நிலமை இருந்ததையும், இதுலேருந்து விடுபட தட்டுத்தடுமாறி ஏதோ கொஞ்சம் படிச்சுட்டு வேலைக்கி போன பின்னும் அதே நிலைமை நீடிப்பதையும் அழகப்பன் பேச்சு உணர்த்தியது.

ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.

– சரசம்மா

(உண்மைச் சம்பவம், பெயர் – அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)