privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை - முனைவர் சேதுபதி

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி

-

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை

கதிராமங்கலம் ஆழ்துளை கிணறு

ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் 2002ஆம் ஆண்டு முதல், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுத்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு குழுவை சந்திக்கவும், களநிலவரத்தை ஆராயவும் கதிராமங்கலம் சென்றிருந்தபோது மக்கள் பருகும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மிக அதிக அளவில் மாசடைந்துள்ளதை கண்டு அதிர்ந்தேன். 100 முதல் 150 அடி ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளிவரும் நீரின் தன்மை எவ்வாறு இருக்கிறதென்றால், குடிநீரின் மேல்பரப்பில் கச்சாஎண்ணெய் (crude oil) படர்ந்திருந்தும், பெட்ரோல் நெடி கொண்டதாகவும், பழுப்பு நிறம் கொண்டதாகவும் மற்றும் சிறு சிறு மண்/தூசித்துகள்கள் கலந்ததாகவும் இருக்கிறது. அதே நீரை மறுநாள் பருக முடியாதபடி, குடிநீரின் நிறம் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது.

கதிராமங்கலம் கிராமத்தின் நீரின் தன்மையை கண்டறிய, இரண்டு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளுக்கு அருகில் உள்ள வீதியிலிருந்து, 13 நிலத்தடி நீர் (குடிநீர்) மாதிரிகளை எடுத்து வந்தேன். அனைத்து மாதிரிகளையும், ஒரே ஆய்வகத்திற்கு அனுப்பினால், ஆய்வின் முடிவு தவறாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று எண்ணி மாதிரிகளை பிரித்து இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆய்வின் முடிவுகளை சர்வதேச மற்றும் இந்திய குடிநீர் தரத்தின் அளவுகளோடு (Indian Water Quality Standards – IS 10500, Bureau of Indian Standards – BIS, World Health Organization standard WHO மற்றும் European Union Standard – EU) ஒப்பிட்டு பார்த்து, எனது ஆய்வறிக்கையை கீழே விவரித்துள்ளேன். ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு முன், இதற்கு முந்திய வருடங்களில் மத்திய நிலத்தடிநீர் மையம் (Central Ground Water Board) மற்றும் ஒ.என்.ஜி.சி (ONGC) ஆகியவற்றால் நடத்தப்பட்ட நிலத்தடிநீர் ஆய்வு முடிவுகளையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் அப்போது தான் நிலத்தடி நீரின் தன்மை, எவ்வாறு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளின் விளைவுகளால் மாறியுள்ளது என்று அறிந்து கொள்ள முடியும்.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – 2017

மத்திய நிலத்தடிநீர் ஆய்வறிக்கை (Central Groundwater Board) – நவம்பர் 2008

குடித்தண்ணீர் மாசு : ஒ.என்.ஜி.சி-க்கு எதிராக மாணவர்களின் போராட்டம்

நாகபட்டினத்திற்குப்பட்ட குத்தாலம் பேரூராட்சியிலிருந்து சில நிலத்தடிநீர் மாதிரிகளை 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நிலத்தடிநீர் மையம் ஆய்வு செய்தது. கதிராமங்கலம் கிராமம் குத்தாலம் பேரூராட்சியிலிருந்து 4 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. தங்களின் ஆய்வு முடிவுகளை, இந்திய குடிநீர் தர கட்டுப்பாட்டு (Bureau of Indian Standards) முறையுடன் ஒத்துப்பார்த்து, அவர்கள் அறிவித்த முடிவுகள் யாதெனில்,

  1. இங்குள்ள குடிநீர் எந்த நிறமுமற்று (Colour property), எந்த ஒரு நெடியுமற்று (Odour property) சீராக இருக்கிறது.
  2.  குடிநீரின் கடினத்தன்மையானது (Hardness property), இந்திய குடிநீர் தரம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமான அளவில் இருக்கிறது. இதற்கான காரணம் குத்தாலம் பேரூராட்சியில் உள்ள மண்ணில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து மிக அதிகமாக இருப்பதால், அது இங்குள்ள நிலத்தடிநீரின் தன்மையை பாதிக்கின்றது. (நீரின் கடினத்தன்மையானது நீரில் கலந்துள்ள சுண்ணாம்பு சத்தின் அளவை பொறுத்து, நீரின் தன்மையயை கடினமாக அல்லது மென்மையாக மாற்றும்).
  3. நிலத்தடி நீரில் நைட்ரைட் (Nitrate) உப்பின் அளவானது, இந்திய குடிநீர் தரம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமான அளவில் இருக்கிறது. இதற்கான காரணம் அதிகமான செயற்கை (வேதியியல்) உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், நீரில் நைட்ரைட் உப்பின் தன்மை அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய நிலத்தடிநீர் ஆய்வின்படி குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட நிலத்தடி நீர் மக்கள் பருகுவதற்கு ஏற்றபடியும் மற்றும் வீட்டின் தேவைகளுக்கும் பயன்படும் வகையிலும் உள்ளது. ஆனாலும் குத்தாலம் பேரூராட்சியில் அதிகமான அளவு நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதனால், நிலத்தடிநீர் மட்டம் மிக வேகமாக கீழே சென்று கொண்டிருக்கிறது. அதனால், குத்தாலம் பேரூராட்சியில், நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கு ஏற்ப எந்த ஒரு மேம்பாட்டையும் செய்யாமல், அதிக அளவில் நிலத்தடி நீரை உபயோகிக்கும் எந்த ஒரு தொழிலும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும். உவர்ப்பு நீர் உள்ளே வரவும் மற்றும் நீரின் மட்டம் கீழே செல்லவும் ஏதுவாக இருக்கும்.

ஒ.என்.ஜி.சி சுற்றுசூழல் ஆய்வறிக்கை – நவம்பர் 2013

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒ.என்.ஜி.சி நிறுவனம் காவேரி டெல்டா பகுதிகளில், ஹைட்ரோகார்பன் கிணறுகளால் ஏற்படும் சுற்றுசூழல் விளைவுகளை அறிந்துகொள்ள பல்வேறு சோதனைகளை நடத்தினர். நிலத்தடிநீர் மாதிரிகளை குத்தாலம் மண்டலத்திலிருந்து எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர் (கதிராமங்கலம் கிராமம் குத்தாலம் மண்டலத்தில் தான் உள்ளது). நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை இந்திய குடிநீர் தர நிர்ணய அளவுகளுடன் (IS 10050) ஒப்பிட்டு, அவர்கள் அளித்த முடிவானது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கதிராமங்கலம் மக்கள் பயன்படுத்தும் நீர்; பற்றி எரியும் தேங்கியுள்ள நீர்

நீரில் கலந்துள்ள “மொத்த கரைந்த தாதுஉப்புக்கள் (Total Dissolved Solids) ஒரு லிட்டர் குடிநீரில் 243 முதல் 3252 மில்லிகிராம் அளவிலும், நீரின் கடினத் தன்மையானது (Hardness) ஒரு லிட்டர் குடிநீரில் 78 முதல் 1032 மில்லிகிராம் அளவிலும் உள்ளதாக தெரிவித்தார்கள். இவற்றில் மொத்த தாதுஉப்புக்களின் அளவும் மற்றும் நீரின் கடினத்தன்மையின் அளவும் இந்திய குடிநீர் தரம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமானதாக உள்ளது. இதனால் தான், குடிநீர் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது என்று இந்த அறிக்கையும் குறிப்பிடுகிறது. ஆனால், மிக முக்கிய தாது உப்புகள் மற்றும் உலோகங்களான ஃப்ளோரைடு, செம்பு, துத்தநாகம், குரோமியம் மற்றும் கேட்மியம் ஆகியன நீரில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகக் குறைவாக உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், ஒ.என்.ஜி.சி (ONGC) தனது ஆய்வறிக்கையில் ஏனோ “குத்தாலம் மண்டலத்திற்கு உட்பட்ட நிலத்தடிநீர் மக்கள் பருகுவதற்கு மற்றும் ஏனைய வீட்டு தேவைகளுக்கும் உகந்த தன்மையுடன் உள்ளதா? இல்லையா? என்று எங்கும் கூறவில்லை”.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் தன்மையின் ஆய்வறிக்கை – ஆகஸ்ட் 2017

கதிராமங்கலம் கிராமத்தில் இரண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அருகில் எடுக்கப்பட்ட 13 நிலத்தடிநீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

குடிநீரில் கலந்துள்ள “மொத்த கரைந்த தாது உப்புகளின்” அளவானது ஒரு லிட்டர் தண்ணிருக்கு 2840 மில்லிகிராம் உள்ளது. இந்த அளவானது இந்திய குடிநீர் தரக் கட்டுப்பாட்டு (IS:10500 standards) ஏற்கத்தக்க (Acceptable Limit) அளவான 500 மில்லிகிராம் அதிகமாகவும் மற்றும் அனுமதிக்கப்பட்ட (Permissible Limit) அளவான 2000 மில்லிகிராம் அதிகமாகவும் உள்ளது. ஏற்கத்தக்க அளவை விட அதிகமாக இருப்பதால் இந்த நீரை பருகும் மக்களுக்கு இரைப்பை மற்றும் குடல் பகுதியில் வலி உண்டாக வாய்ப்பு உள்ளது.

இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய முறையின் படி, நீரின் கலங்கள் தன்மையானது (Turbidity) 1 NTU முதல் 5 NTU வரை தான் இருக்கவேண்டும். ஆனால் இங்கு 16 NTU-க்கு மேல் உள்ளது. அதனால் தான் குடிநீர் கலங்கிய படி சிறு சிறு மண்/தூசித்துகள்கள் அதிகமாக காணப்படுகிறது.

குரோமியம் (Chromium) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.7 மில்லிகிராம் உள்ளது. இந்த அளவானது இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.05 மில்லிகிராம் விட மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நீரை பருகும் மக்களுக்கு வயிற்று வலி, அல்சர் தீடிரென உடல் நடுங்குதல், சிறுநீரக கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் மற்றும் தீடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளை அழிக்க வரும் மீத்தேன் திட்டம்

காட்மியம் (Cadmium) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.03 மில்லிகிராம் உள்ளது. ஈயம் (Lead) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.03 மில்லிகிராம் உள்ளது. இந்த இரண்டு உலோகங்களும் இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.01 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதால், நிலத்தடி நீரை நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதிக அளவு கேட்மியம் கலந்த நீர் மனித உடலுக்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் உலோகமாகும். கண்டிப்பாக சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக அளவு ஈயம் கலந்த நீரை பருகுவதால் மூளை, மத்திய நரம்பு மண்டலம், சிறுநீரக மற்றும் கல்லீரல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிக்கல் (Nickel) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.7 மில்லிகிராம் உள்ளது. இந்த அளவானது ஐரோப்பிய யூனியன் குடிநீர் தரக்கட்டுப்பாடு நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.02 மில்லிகிராமை விட மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நீரை பருகும் மக்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி Allergy) சம்பத்தப்பட்ட நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுந்த இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாட்டின் நிர்ணய அளவு கிடைக்கவில்லை.

இரும்பின் (Iron) அளவு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.81 மில்லிகிராம் அளவும் மற்றும் மாங்கனீசு (Manganese) 10.2 மில்லிகிராம் அளவும் உள்ளது. இந்த இரண்டுமே இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.3 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதால் தான் நீரின் தன்மை அடர்ந்த பழுப்பு நிறத்தில் உள்ளது.

கோபால்ட் (Cobalt) உலோகம் ஒரு லிட்டர் நீரில் 0.29 மில்லிகிராம் கரைந்துள்ளது. இந்த அளவானது இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.0002 மில்லிகிராமை விட மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நீரை பருகும் மக்களுக்கு இருதய நோய், குடல் இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று போக்கு, வாந்தி, நுரையீரல் புற்றுநோய், எடை குறைதல், சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு, சுவாசம் சம்பத்தப்பட்ட பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நீரில் உள்ள பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவு, இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய அளவுமுறைப்படி 5 மில்லிகிராம் அளவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 2.3 மில்லிகிராம் அளவு தான் உள்ளது. குறைந்த அளவிலான ஆக்சிஜன் நீரில் இருப்பதால், கதிராமங்கலத்தின் நிலத்தடி நீர் அதிக அளவில் மாசுபடிந்துள்ளது என்று உறுதியாக அறியமுடிகிறது.

முடிவுரை (ஆய்வுச் சுருக்கம்)

2008-ஆம் ஆண்டு மத்திய நிலத்தடிநீர் ஆய்வறிக்கை, குத்தாலம் பகுதியிலுள்ள நிலத்தடிநீர் மக்கள் பருகுவதற்கு உகந்ததாக உள்ளது என்று அறிவித்துள்ளது. 2013- ஆம் ஆண்டு, ஒ.என்.ஜி.சி (ONGC) ஆய்வறிக்கை, நிலத்தடிநீரில் கலந்துள்ள தாது உப்புக்கள் மற்றும் உலோகங்களின் அளவு நீரில் கண்டுபிடிக்க முடியாத அளவு குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் 2017 ஆம் ஆண்டு (எனது) ஆய்வின் படி, நிலத்தடிநீரில் கரைந்துள்ள சில முக்கிய தாது உப்புக்களும் மற்றும் உலோகங்களும் இந்திய மற்றும் சர்வதேச குடிநீர் தரக்கட்டுப்பாட்டு தரக்கட்டுப்பாட்டுகளின் நிர்ணய அளவுகளுக்கு மேல் உள்ளதால் குடிநீர் மிகவும் மாசடைந்துள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் “சில முக்கிய தாது உப்புக்களும் மற்றும் உலோகங்களின்” உண்மையான அளவை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டால் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு உண்டாகும் என்று வேண்டுமென்று தங்களின் அறிக்கையில் தவிர்த்து விட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடுக்கப்பட்ட பதிமூன்று (13) நிலத்தடி நீர் மாதிரிகளில், ஒன்பது (9) மாதிரிகள் மிகவும் மாசடைந்த நிலையில் உள்ளது. ஏனெனில் இந்த நீர் மாதிரிகள் (Water Samples) எல்லாம் ஹைட்ரோகார்பன் கிணறுக்கு அருகில் உள்ள வீடுகளின் குழாய்கள்/கிணறுகளில் எடுக்கப்பட்டது. மீதி 4 மாதிரிகள் ஆய்வு முடிவுகளின்படி, நீர் மக்கள் பருகும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த மாதிரிகள் எடுத்த வீடுகளெல்லாம் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு தூரத்தில் உள்ளது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அதிக அளவில் வெவ்வேறு விதமான இரசாயன பொருட்களை பயன்படுத்துவார்கள் இந்த இரசாயன பொருட்களை சரியான அளவிலோ அல்லது முறையான வழிகாட்டுதல்களின் படியோ கைக்கொள்ளாவிட்டால், இவைகள் கண்டிப்பாக நிலத்தடி நீரையும் மண்ணையும் பாதிக்கும். சில முக்கிய உலோகங்கள் குடிநீரில் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு பயன்படுத்தும் இரசாயன பொருட்கள் கலந்த களிமண் கூழ் (mud fluids), டீசல், குரோமியம், இரும்பு-குரோமிய கலவை (Ferro-Chrome), மெலிப்பான்கள் (Thinners), எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய் குழாகளிலிருந்து கசிந்து வெளியேறும் கச்சா எண்ணெய் ஆகியவையாகும். கதிராமங்கலத்தின் நிலத்தடிநீர் எந்த வகையில் மாசுபட்டிருந்தாலும், இங்குள்ள நிலத்தடிநீர் மக்கள் பருகுவதற்கு மற்றும் வீட்டு வேலை பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. இந்த மாசடைந்த நீரை தொடர்ந்து பருகினால் தோல் நோய் முதல் புற்று நோய் மற்றும் குடல் அரிப்பு முதலிய நோய்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கதிராமங்கல மக்களும், இவர்களின் மனித உறவுகளான நாமும் விழிப்புணர்வோடு ஒன்றிணைந்து, இதை அரசு அதிகாரிகள், அரசு மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தி தொடர் கோரிக்கைகள் / வழக்குகள்/ போராட்டங்கள் மூலம் மண்ணையும், நீரையும், மக்களையும் மீட்க வழி செய்வோமாக..!

Dr. சேதுபதி, PhD.
Geologist