தற்போது யுத்தம் நடக்கும், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே உள்ள புறநகர்ப் பகுதியான கூத்தா (Ghouta) கடந்த ஐந்தாண்டுகளாக இரண்டு கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
இதற்கு முன்னர் இடிலிப் பிரதேசத்தை நோக்கி சிரியப் படைகள் முன்னேறிய நேரம், அங்கிருந்த கிளர்ச்சிக் குழுக்கள் துருக்கி மத்தியஸ்த்தத்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்றன.
ஒரு வாரத்திற்கு முன்னர், கூத்தா மீது யுத்தப் பிரகடனம் செய்த சிரிய அரசு இடிலிப் பாணி சமரசத்திற்கு முன்வந்திருந்தது. ஆனால், இம்முறை கிளர்ச்சிக் குழுக்கள் வெளியேற மறுத்தன. அத்துடன் மக்களையும் வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
கூத்தா பிரதேசத்தை மீட்பதற்கான சிரிய, ஈரானிய கூட்டுப்படை நடவடிக்கை எடுத்தது. சிரிய இராணுவப் பிரிவான “புலிப் படை” தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்ய விமானங்களும் குண்டு வீசியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நெருக்குதலால் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி தீர்மானம் எடுத்தது. அதற்கு ரஷ்யாவும் ஒத்துழைத்தது. உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப் பட வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.
சிரிய அரசு மட்டுமே ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவித்தது. இதற்கு கிளர்ச்சிக் குழுக்களை பொறுப்பேற்க வைக்க முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா.வினால் பயங்கரவாத அமைப்புகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. சிரிய அரசு அந்த குற்றச்சாட்டை பயன்படுத்தி மீண்டும் போரைத் தொடங்கியது.
ஐ.நா., சிரிய அரசின் மீது போர்நிறுத்த மீறல் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப் பட வேண்டிய அவசியம் இல்லை.
கூத்தா பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப் பட்டு நான்கு பெரிய மற்றும் சிறிய இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, தனித் தனியாகவோ செயற்படுகின்றன.
இவற்றில் மிகப்பெரிய இயக்கமான அல் நுஸ்ராவின் முந்திய பெயர் அல் கைதா. மிகத் தீவிரமான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்பது சொல்லாமலே புரியும். ஏனைய இயக்கங்களும் அப்படித் தான்.
சிரியப் படைகளின் எறிகணை வீச்சுக்கும், விமானக் குண்டுகளுக்கும் இதுவரை ஐநூறு பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள்.
அங்குள்ள மக்கள் விருப்பத்திற்கு மாறாக கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். போர் தொடங்குவதற்கு முன்னர் அரச ஊழியர்கள் டமாஸ்கஸ் சென்று வர அனுமதித்திருந்தனர். ஆனால், “பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு” பெண்களும், குழந்தைகளும் வெளியேற அனுமதிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மீது அமெரிக்க விமானங்கள் குண்டு போட்டன.ஒரு கட்டிடம் கூட மிச்சமில்லாமல் தரைமட்டமாகின. அன்று பலியான குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது பற்றி உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.
கூத்தா (Ghouta) பிரதேசம்
******
சிரியா போர் தொடங்கிய காலத்தில் இருந்து மறைக்கப் பட்டு வரும் சில உண்மைகள்:
- “மேற்குலகம், சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தெரிந்த விடயம். ஆனால், பெரும்பான்மை சிரிய மக்களின் ஆதரவைப் பெறாத பிழையான சக்திகளை தெரிவு செய்ததுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ” “சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சிக்கு பெரும்பான்மையான சிரிய மக்களின் ஆதரவு கிட்டவில்லை. சிரிய அரசுக்கான மக்கள் ஆதரவை, மேற்குலகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது! ஊடகங்கள் அங்கு நடக்கும் சம்பவங்களை மிகைப் படுத்திக் கூறுகின்றன.”
– இதைக் கூறியது சிரியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் Eric Chevalier.
(http://blog.lefigaro.fr/malbrunot/2012/03/syrie-un-diplomate-francais-me.html - “இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் வழிநடாத்தப்படும் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள், சிரிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.” — அமெரிக்காவின் உளவுத் துறை ஒத்துக் கொண்டுள்ளது.
(https://www.jungewelt.de/loginFailed.php?ref=/artikel/179801.im-blindflug.html) - சிரியாவினுள் அதிகரித்து வரும் ஜிகாத் போராளிகளின் பிரசன்னம் காரணமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆயினும், சிரியாவின் ஆதரவின்றி ஹிஸ்புல்லா பலவீனமடையும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறையும் என்ற காரணங்களால், இஸ்ரேல் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதித்தது.
(http://www.jpost.com/Opinion/Op-Ed-Contributors/The-case-of-Syria-could-prove-different ) - சிரிய அரச படையினர் மனித உரிமைகளை மீறும் விடயம் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், கிளர்ச்சிக் குழுக்களும் குற்றங்களை இழைத்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், இவற்றோடு சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையணிகளில் சேர்த்தல்… இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.
(https://www.hrw.org/news/2012/03/20/syria-armed-opposition-groups-committing-abuses)
*******
சிரியாவில் நடப்பது என்ன? நாம் யாருடைய அரசியலைப் பேசுகின்றோம்?
எதிரும் புதிருமாக காணப்படும் முதலாளிய- தமிழ் வெகுஜன ஊடகங்களும், சுன்னி- இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும் ஓரணியில் நின்று சிரியாவுக்காக அழுகிறார்கள் என்றால், பின்னணியில் ஏதோ ஒரு அரசியல் சக்தி அவர்களை ஒன்றிணைக்கிறது என்று அர்த்தம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் (Afrin) பிரதேசம் துருக்கி படையினரால் தாக்கப் பட்டது. அப்போதும் பொது மக்களின் உயிரிழப்புகள், சொத்தழிவுகள் அதிகமாக இருந்தன. விமானக் குண்டுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் படங்கள் வெளியாகின. அது குறித்து சர்வதேச மட்டத்தில் எந்த எதிர்வினையும் எழவில்லை. எங்கும் கள்ள மௌனம் நிலவியது.
அப்ரின் பிரதேசத்தில் பலியான மக்களின் அவலக் குரல் வெகுஜன ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. அங்கு கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக யாரும் அழவில்லை. அந்தப் படங்களை யாரும் பார்க்கவில்லை. சமூக வலைத்தளங்களில் செயற்படும் ஒருவர் கூட கொந்தளிக்கவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
குர்தியர்களும் சுன்னி முஸ்லிம்கள் தானே? அது தமிழ் பேசும் சுன்னி முஸ்லிம் மதவாதிகளின் உணர்வுகளை தட்டி எழுப்பாதது ஏன்? சிரியாவில் குர்தியரும் தனிநாடு கேட்டு போராடிய தேசிய விடுதலை இயக்கத்தவர் தானே? அது தமிழீழத்தை தலையில் வைத்திருக்கும் தமிழ்த்தேசியவாதிகளின் கண்களை உறுத்தாது ஏனோ? அப்போது மட்டும் கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருந்தது ஏனோ?
எனக்கு இந்த லாஜிக் என்னவென்று புரியவில்லை. உலக நாடுகளை விட்டு விடுவோம். சிரியாவில் நடக்கும் சிக்கலான யுத்தத்தில் எந்தப் பக்கத்தில் மக்கள் கொல்லப் பட்டாலும் கண்டிப்பதை விட்டு விட்டு, குறிப்பிட்ட சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழுவது ஏனோ?
டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கூத்தா பிரதேசம், கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அமெரிக்கா, சவூதி அரேபிய நிதியில் இயங்குவதால், அவர்கள் வெளியிடும் தகவல்களும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிரச்சாரப் போரில் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் செயற்படுகின்றன.
கடந்த ஐந்தாண்டு காலமாக நடக்கும் சிரியா போரில் அடிக்கடி காணும் காட்சிகள் இவை. அரசும், கிளர்ச்சிக் குழுக்களும் மாறி மாறி பிரச்சாரம் செய்வது வழமை. ஒருவர் மாறி ஒருவர் போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தி, தமக்கு சார்பானவர்களின் அனுதாபத்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
இதனால் களைப்படைந்த மேற்கைரோப்பிய ஊடகங்கள், தற்போது நடக்கும் கூத்தா யுத்தம் தொடர்பான தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்றாடம் செய்தி தெரிவிக்கும் போதும், “கிளர்ச்சிக் குழுக்களின் பிரச்சார மையத்தால் வெளியிடப் பட்ட உறுதிப் படுத்தப் படாத தகவல்கள்” என்று சேர்த்தே சொல்கின்றன.
சிரியா இராணுவம் ஒன்றும் சிறந்தது அல்ல. அரச படைகளின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளம் பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவை போர்க்குற்றங்களுக்குள் அடங்கும் என்பதில் மறுப்பில்லை. இருப்பினும், கிளர்ச்சியாளர்களும் புனிதர்கள் அல்ல. ஐ.எஸ். வானத்தில் இருந்து குதிக்கவில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
ஐ.எஸ்.கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மீதான போரின் போதும், ஏராளமான பொது மக்கள் கொல்லப் பட்டனர். குழந்தைகளும் பலியாகின. ஐ.எஸ். அந்தப் படங்களைக் காட்டி பிரச்சாரம் செய்து அனுதாபம் தேடியது. “உலகமே பார்த்துக் கொண்டிருக்க எம்மின மக்களை இனப்படுகொலை செய்கிறார்கள்” என்று ஓலமிட்டனர். கொத்துக் குண்டுகள் வீசப் பட்டதாகவும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.
இந்த விடயத்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும், வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இடையில் நல்ல ஒற்றுமை உள்ளது. சரி, அது உங்களுக்கிடையிலான இரகசியமான கொள்கை உடன்பாடு. இதற்குள் எதற்கு மற்றவர்களை இழுக்கிறீர்கள்?
சிரியாக் குழந்தைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் போலி மனிதநேயவாதிகள், யேமன் குழந்தைகள் கொல்லப் பட்ட நேரம் எங்கிருந்தார்கள்? அங்கு நடக்கும் போர் பற்றி, பலியான மக்கள் பற்றி ஒரு நாளாவது பேசி இருப்பார்களா?
சிரியாவுக்கும், யேமனுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே அரேபிய தீபகற்பத்தில் தான் உள்ளன. இரண்டு நாடுகளிலும் கொல்பவர்களும், கொல்லப் படுபவர்களும் அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் தான்.
யேமனில் குண்டு போட்டு குழந்தைகளைக் கொல்வது சவூதி அரேபிய விமானங்கள் என்பதால், யாருக்கும் அதைப் பற்றி அக்கறை இல்லை. சவூதி அரேபியாவுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதால் சர்வதேசமும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. அது பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டப் படுவதில்லை.
சிரியாப் போரின் ஆரம்ப காலங்களில் அந் நாட்டின் பெரும் பகுதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அப்போது, ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்த ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். அந்த நடவடிக்கையின் போது பலர் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் பலர் குடும்பத்தோடு கொல்லப் பட்டனர்.
அப்போது யாரும் சிரியக் குழந்தைகளுக்காக அழவில்லை. கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், ஒரு “கிறிஸ்தவ நாடு” கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதபாணிகள், இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ கிராமங்களை தாக்கி அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை படுகொலை செய்தனர். எத்தனை கிறிஸ்தவர்களுக்கு இந்த விபரம் தெரியும்? எத்தனை பேர் அந்தப் படங்களை பகிர்ந்து கொண்டார்கள்? பூஜ்ஜியம்.
அந்நேரம் மேற்குறிப்பிட்ட இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள். அமெரிக்கா, சவூதி அரேபியாவால் நிதி, ஆயுதம் கொடுத்து வளர்க்கப் பட்டவர்கள். ஆகவே எல்லோரும் பேசாமடந்தைகளாக வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.
பாரபட்சமின்றி அனைத்துக் கொலைகளையும் கண்டியுங்கள். அது நேர்மையானது. சந்தர்ப்பம் பார்த்து, “நண்பர்கள்” பாதிக்கப் படும் போது மட்டும் பொங்கி எழுவது, குறுகிய அரசியல் ஆதாயம் கருதி செய்யப் படும் பிரச்சாரம். அதற்குப் பெயர் இரக்கம் அல்ல, பிணத்தை காட்டி காசு வாங்கும் ஈனத்தனம்.
அப்போது குழந்தைகளை கொன்றவர்கள் தாம் சார்ந்த சுன்னி இஸ்லாமிய மதப் பிரிவினர் என்பதால், தமிழ் பேசும் சுன்னி முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. அதே மாதிரி, தாம் ஆராதிக்கும் அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்பதால், வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும் கண்டுகொள்ளவில்லை. இது தான் உண்மை.
நன்றி : தோழர் கலையரசன்
எனக்கும் இதுதான் புரியவில்லை. மீடியா தற்பொழுது வல்லாதிக்க குழுக்களின் கைப்பாவையாக மாறி ரொம்ப நாட்களாகிறது. சவுதி தலைமையிலான யு,ஏ,இ எகிப்து நாடுகள் ஏமனில் தாக்குதல் நடந்த பொழுது பாதிக்கப்பட்ட மக்களின் செய்திகள் அதிகம் வரவேயில்லை மிக சொற்பமாக அது மட்டுமல்ல அங்கு காலராவினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டபோதும் அதே நிலைமைதான். சமீபத்தில் சிரியாவில் துருக்கி நாடு ஆப்ரின் என்ற இடத்தை தாக்கும் பொது இதே போலத்தான், வான் தாக்குதல் தான், மக்கள் இறக்காமல் இருந்திருப்பார்களா? அதேபோல ஈராக் ஐ,எஸ்ஸை ஒழிக்கிறேன் அன்று ஆயிரக்கணக்கான் மோசூல் வாசிகளை கொன்றபோது அது பற்றிய விஷயங்களில் மீடியாக்களில் பார்த்தது போல ஞாபகமே இல்லை., ஒன்று மட்டும் புரிகிறது, அமெரிக்க மற்றும் அதன் நேச முஸ்லிம் நாடுகளின் தாக்குதல்களை கூடிய மட்டில் மீடியாக்களில் வராது தவிர்த்துக் கொள்வது, அவர்களுடைய அல்லது அவர்கள் சார்ந்த படைகளுக்கு பாதிப்பு என்றால் விஷயம் மீடியா தொடங்கி சோசியல் மீடியா வரை பொங்கி வழிவது. ஆனாலும் அப்பாவி பொதுமக்கள் இறப்பது வேதனை தரக்கூடியதே.
நம் நாட்டிலும் இது போன்ற நிகழ்வுகளுக்காகத்தான் வலதுசாரி இந்துத்துவா இயக்கங்கள் டஜன் கணக்கிலான பெயர்களில் இறங்கி சிறுபான்மை, கம்யூனிஷம் போன்ற எதிர்கொள்கை உடையோரை அழிக்க அவ்வப்போது ட்ரையல் எடுத்துக் கொண்டே இருகின்றனர். ரிபப்ளிக் டி.வி , நியூஸ் 18 போன்ற தொலைக்காட்சி சானல் முதற்கொண்டு பிராந்திய தொலைக்காட்சிகள் வரை கைவசப்படுத்தி தங்களுடைய ஆதிக்கத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டேயிருக்கின்றனர். இவர்களுக்கு யார் புல்ஸ்டாப் போடுவது என்பதே இப்போதைய கவலை.
சரி, சரி, தோழர் கலையரசன்,அப்துல் அலீம், இப்ப என்ன , எங்கள் நண்பன் ரஷியா கொல்றப்ப மட்டும் கேட்கறீங்க, அமெரிக்கா செய்யறப்ப கேட்க மாட்டன்றீங்க: இதுதான் உங்கள் குற்ற சாட்டு.
இந்த வெறி செயலை தூண்டியது சிரியாவின் ஆசாதை பிடிக்காத துருக்கி எர்டொஹன், கட்டார் மன்னர், சௌதி மன்னர். பிறகு எல்லோரும் (இரான், இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர், அமெரிக்கா, ரஷ்யா) சேர்ந்து கொண்டனர். எல்லோரும் வில்லன்கள்தான், பொது மக்கள்தான் பாவம்