privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

-

எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்றாடம் பல கொலைகளும், விபத்து மரணங்களும், இயற்கைச் சாவுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா வழியிலும் மரணம் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுத் தருணங்கள் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. வாழ்வைப் பற்றியே நினைக்க நேரமில்லாத போது சாவைப் பற்றி நினைக்க முகாந்திரமேது?

என்றாலும் இந்தச்சாவு ஒரு கணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேரங்காடிகளும், சங்கிலித் தொடர் கடைகளும் முளை விட்ட நேரம். சிறுவணிகத்தை பெருவணிகம் முந்திச் சென்ற காலம். பெருகிவரும் நடுத்தர வர்க்கத்தின் முன்னேற்றத்தின் அளவுகோலாக சூப்பர் மார்க்கெட்டுகள் உதிக்கத் தொடங்கியிருந்தன. காய்கறிக் கடைகளும் பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் நகரெங்கிலும் சற்றே பிரம்மாண்டமாய் கடைவிரித்த நேரம். புறநகர் பகுதி ஒன்றில் புதிதாகத் துவங்கப்பட்ட அந்த காய்கனி அங்காடியில் வாரம் ஒரு முறையாவது காய்கள் வாங்கச் செல்வது உண்டு.

சிறு கடைகளில்தான் காய்கள் வாங்குவது பழக்கம் என்றாலும் தக்காளி, வெங்காயம், உருளை மட்டும் அந்தக் கடையில் வாங்குவது பழக்கமானது. இந்த மூன்று காய்கள்தான் பல இளைஞர்களைப் போல எங்களுக்கும் தேசிய உணவாக இருந்தது. பேச்சுலராக வாழ்வைக் கழிக்கும் நேரத்தில் சமையல் என்பது சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பமாக ஆவதும் உண்டு. எனினும் நாடாறு மாதம் காடாறு மாதம் போல உணவு விடுதி, பிறகு சலிக்கும் போது சமையல். நண்பர்கள் மத்தியில் என் கையே மணக்கும் என்று சபிக்கப்பட்டிருப்பதால் காய்கள் வாங்குவதும் எனக்கிடப்பட்ட பணியானது.

சுமார் ஆயிரம் சதுர அடியில் இருக்கும் அந்தக் கடையை தென் மாவட்டத்து அண்ணாச்சி ஒருவர் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் பத்து விடலைச்சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். மூன்று மணிக்கு கோயம்பேடு சென்று மூன்று சக்கர வாகனத்தில் மூட்டைகளை கொண்டு வந்து தரம்பிரித்து அடுக்கி, பழையதன் கழிவைக் கொட்டி, விலைப் பட்டியல் எழுதி அட்டையில் தொங்கவிட்டு, காலை ஆறு மணிக்கு கடையைத் திறந்து இரவு பதினொன்றுக்கு மூடி…. என்று நிற்காத தொடர் வண்டி போல ஒடும் அந்த வாழ்க்கையைப் பார்க்கும் போது மனது வலிக்கும். அண்ணாச்சியிடமும், அந்தச் சிறுவர்களிடமும் அவர்களின் காய்கனிச் சிறைவாழ்க்கையை கலகலப்பாக ஆக்கும் பொருட்டு பேசுவது உண்டு. தூங்கி வழியும் அந்தச் சிறுவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை விசாரிக்கும்போது மட்டும் ஒரு கணம் மின்னுவார்கள்.

2007 இல் அந்தப் பகுதிக்கு திடீரென்று வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் பிரஷ். அறிமுகச் சலுகை, உறுப்பினர் சேர்க்கை, தள்ளுபடி விலை என்று தினந்தோறும் அறிவிக்கப்பட்ட மோடிமஸ்தான் வேலையால் சுற்றுப்புற பலசரக்குக் கடைகள் தள்ளாடத் துவங்கின. நமது அண்ணாச்சி அதற்கு முன்பு வரை தினமும் ரூபாய் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை கல்லா கட்டியவர்; இப்போது ஐந்தாயிரமாய் சுருங்கிப் போனார்.

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் அப்படி ஒன்றும் நம்மை அசைத்து விடாது என அப்பாவியாய் நம்பினார். மெல்ல மெல்ல சிறுவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்து போனது. தினசரி விற்பனை இரண்டாயிரம் ரூபாயாக சரிந்தது. பிறகு, வேலையாளின் சம்பளத்தையாவது மிச்சப்படுத்துவோம் என்று தனது குடும்பம் முழுவதையும் கடையில் இறக்கினார் அண்ணாச்சி. இருப்பினும் நான்கு மாதத்திற்கு மேல் அந்தக் கடையின் மரணத்தை ஒத்திப் போடமுடியவில்லை.

ரிலையன்ஸின் சுற்றுவட்டாரத்தில் இப்படி சில ஜீவராசிகள் வாழ்வை இழப்பது பற்றி கட்சி மாறிய நடுத்தர வர்க்கத்திற்கு அக்கறைப் படவில்லை. கேட்டால் ‘அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு அதிகம்’ என்று அம்பானியின் பிரச்சார பீரங்கிகளாக பேசினார்கள்.

அண்ணாச்சி கடையில் கார்பென்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து. எனக்கு ஆச்சரியம்! விசாரித்தேன். கடையை ரிலையன்சு போல அலங்காரமாய் புதுப்பிக்கப் போவதாகச் சொன்னார்கள். புதுப்பிப்பவர் பழைய அண்ணாச்சி இல்லை. கடையை விற்று விட்டு அண்ணாச்சி காற்றில் கரைந்து விட்டார். தூக்கம் கலந்த விழிகளுடன் வேலை செய்த அந்தப் பழைய சிறுவர்களை நினைத்துப் பார்த்தேன். சுனாமியில் தொலைந்து போனவர்களை நினைவில் தானே துழாவ முடியும்!

பிறகு சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கடை ரிலையன்சு போல குளிர்சாதன வசதியுடன், சீருடை அணிந்த பணியாளர்களுடன், கணக்குப் போடும் கணினியுடன், கடையின் பெயர் அச்சிடப்பட்ட நாகரீகப் பைகளுடன் மொத்தத்தில் அழகாகத்தான் திறக்கப்பட்டது. இப்போது யாரென்று விசாரிக்கையில் கடை உரிமையாளர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு பழமுதிர்ச்சோலையில் எட்டாயிரம் சம்பளத்தில் மேலாளராக பணியாற்றியவராம். அங்கே தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாய் ஒரு கடை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் சில இலட்சங்களை கடன் வாங்கி இந்தக் கடையை அணுஅணுவாய் அலங்கரித்து திறந்திருக்கிறார். அவருக்கு ஒரு 27 வயது இருக்கலாம். அப்பொதுதான் அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. காதல் திருமணம். காதலில் வெற்றி பெற்ற கையோடு சுய தொழிலிலும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரது கண்களில் மின்னியது. சில நேரம் அவரது மனைவியும் கடையில் பில் போடும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

ரிலையன்சு வந்ததும் அருகாமையில் உள்ள சிறு கடைகளிலேயே எல்லாவற்றையும் வாங்குவதாக முடிவெடுத்து விட்டதால் அந்த கடைக்கு செல்வதில்லை. சமயத்தில் ஒரு நண்பர் அந்த கடைக்கு அழைத்துச் சென்று சாத்துக்குடி பழச்சாறு வாங்கித்தருவார். சாதாரணமாக மற்ற கடைகளில் அதன் விலை 20 ரூபாய். இங்கு மட்டும் அதன் விலை ரூ.10.. வாடிக்கையாளரை ஈர்ப்பதற்க்காக இந்த விலைக் குறைப்பு. ‘நீர் சேர்க்காமல் பழச்சாறை மட்டும் கொடு’ என்று கடை சிப்பந்தியை அந்த இளைஞர் நிர்ப்பந்திப்பதை சிலநேரம் பார்த்திருக்கிறேன். சில சமயம் சுறுசுறுப்பாக வாயிலில் நின்று கொண்டு வரும் மக்களை அவர் கவனிப்பதையும் கண்டிருக்கிறேன்.

இருப்பினும் ரிலையன்சை எதிர்த்து இவர் மட்டும் எப்படி தாக்குப் பிடிக்க முடியும் என்று நானும் நண்பரும் விவாதிப்பதுண்டு. இதை அந்த நாமக்கல் இளைஞரிடம் பேச விருப்பமிருந்தாலும் தயக்கமிருந்தது. அபசகுனமாக பேசுகிறார்களே என்று அவர் நினைத்து விடக்கூடுமல்லவா! ஏதோ கொஞ்சநாளைக்கு மலிவு விலையில் பழச்சாறை குடிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பருடன் தமாசாகப் பேசிவிட்டு அகன்று விடுவோம். கடையில் காய்கறிகளும் மிக மலிவாகவே விற்கப்பட்டது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுண்டு. இது எப்படி சாத்தியம், ஏதாவது வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இப்படி முதலீடு செய்து செலவழிக்கிறாரா என்றெல்லாம் எங்களுக்குள் விவாதிப்பது உண்டு.

உண்மையில் அவர் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதெல்லாம் அப்போது தெரியாது. மேலும் வாடிக்கையாளரைக் கவர மூன்று சதவீதம் மட்டும் இலாபம் வைத்து காய்கறிகளை விற்று வந்தததையும் நாங்கள் அறியவில்லை. இந்த இலாப விகிதத்தில் எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்பதோடு, இப்படி தொழில் நடத்தினால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இடையில் 2008இல் ரிலையன்சு கடை இரண்டாவது கிளையையும் இப்பகுதியில் திறந்து விட்டது. இரு வல்லூறுகளுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு எத்தனை நாள் தப்பிக்க முடியும்? என்னதான் நவநாகரீகமாக கடை நடத்தினாலும் நட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடை திறந்து நான்காவது மாதத்திலேயே காய்கள் வாடத்துவங்கின. கைமாற்றுப் பணமில்லாத காரணத்தால் புதிய காய்கறிகள் அடிக்கடி வரவில்லை. கூட்டமும் குறையத் தொடங்கியது.

இதற்குள் அவர் மாதத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் நட்டமடைந்திருந்தார். மொத்தம் ஐந்து இலட்சம் கடனாகிவிட்டது. வழக்கமாக கோயம்பேடில் சில்லறை வியாபாரிகள் கடனுக்கு காய் வாங்கி அடுத்த நாள் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கட்டுவார்கள். இந்த முறையையும் அந்த நாமக்கல் இளைஞர் பின்பற்ற முடியவில்லை. கைப்புழக்கத்திற்குக் கூட பணமில்லாத நிலையில் ஒரு இலட்ச ரூபாயை கடன்பெற முயற்சித்திருக்கிறார். கிடைக்க வில்லை. கோயம்பேட்டிலும் மொத்த வியாபாரிகள் கடனுக்கு காய் வழங்க மறுத்து விட்டனர். 25,000 கோடி முதலீட்டுடன் இந்திய சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஐந்து இலட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு நாமக்கல் இளைஞர் எதிர் கொள்ள முடியுமா என்ன? எல்லா இடத்திலும் கடன் கேட்டும் கிடைக்காமல் வீட்டுக்கு வந்த அந்த இளைஞர் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது மனைவிக்கு என்ன ஆகியிருக்கும்? வழக்கம் போலத ‘தெரியவில்லை’ என்பதுதான் விடை.

இப்போது அதே கடையை வேறொரு அண்ணாச்சி – ஏற்கனவே சில கிளைகளை வைத்திருப்பவர் – வாங்கி அதே பெயரில் நடத்துகிறார். அவர்தான் நேற்று இந்த விவரங்களைச் சொன்னார். இவரும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. யோசிப்பதை அவரிடம் பேசவும் முடியவில்லை.

அதே கடை. அதே பெயர். அண்ணாச்சிகள் மட்டும் மாறியபடி இருக்கிறார்கள். உயிர்களைக் குடித்துத் தாகம் அடங்காத பலிபீடம் போல என்னை அச்சுறுத்துகிறது அந்தக் கடை. அந்தக் கடைப் பக்கம் செல்லும்போதெல்லாம் தூக்கில் தொங்கிய அந்த இளைஞனின் நம்பிக்கை ஒளிரும் கண்களும், கணவனுக்குத் துணைநின்ற அந்தக் காதல் மனைவியின் முகமும் கொஞ்சம் தடுமாற வைக்கின்றன. விலை மலிவு என்பதற்காக பத்து ரூபாய் பழச்சாறைக் குடித்த குற்ற உணர்விலிருந்து என்னால் இன்னமும் விடுபட முடியவில்லை.
…………………………………………………………………………………………………………………….
குற்ற உணர்வு கொள்ளாத இலக்கிய மனத்தை அறிந்து கொள்ள…