privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?

வெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?

-

cariobamaஅமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.

2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.

மொத்த வாக்குகளில் எழுபது சதவீதம் வெள்ளையர்களுக்குரியது என்றால், அவர்களில் கணிசமானோர் ஒபாமாவுக்கு வாக்களித்தது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. இன்னமும் வாழ்வின் எல்லாத்  துறைகளிலும்  கோலோச்சிவரும் வெள்ளை நிறவெறிக்கு பழக்கப்பட்ட மக்கள் ஒபாமாவை ஏற்பதற்கு எப்படி தயார் செய்யப்பட்டனர் என்பதே பரிசீலனைக்குரியது. கருப்பின மக்களின் வாக்குகளை மட்டும் வைத்து ஒபாமா இந்த வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.

இதையெல்லாம் விட,  அமெரிக்காவின் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக முதலாளிகள் இவர்கள்தான்  அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இவை எவற்றிலும் கருப்பினத்தவர் தீர்மானிக்கும் நிலையில் இல்லை என்றால், ஒபாமா அமெரிக்க முதலாளிகளின் செல்லப்பிள்ளையாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் விசயம். முதலில் ஜனநாயகக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் மேல்மட்டத்தில் கருப்பினத்தவர்கள் எவரும் தீர்மானகரமாக இல்லை. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே வெள்ளையர்களின் கைகளில்தான் உள்ளது. இதில் குடியரசுக் கட்சி வெளிப்படையாக வெள்ளை நிறவெறியர்களை ஆதரித்தும், முதலாளிகள், உயர் வகுப்பினரை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியும் வரும் கட்சியாகும். ஜனநாயகக் கட்சியோ இவற்றை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியாகும். நேரத்துக்கேற்றபடி அமெரிக்க முதலாளிகள் இந்தக் கட்சிகளை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்வர்.

அடுத்து இரண்டு கட்சிகளால் அதிபர் பதவிக்கு தெரிந்தெடுக்கப்படும் நபர்களை ஊடக முதலாளிகள் முன்னிருத்துவார்கள். இவர்களைப் பிரபலங்களாக மாற்றும் வகையில் பல செய்திகள், கருத்துக் கணிப்புக்கள், நவீன தொழில் நுட்ப விளம்பரங்கள் முதலியவற்றைச் செய்வார்கள். இந்தச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் வசூல் செய்வார்கள். முதலாளிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பல மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.

ஜனநாயக நாடு என்று பீற்றப்படும் அமெரிக்காவின் அதிபர் தெரிவு இப்படித்தான் முதலாளிகளின் தயவால் செய்யப்படுகிறது. ஆக, ஒபாமாவைத் தேர்வு செய்த ஜனநாயகக் கட்சி, அவருக்கு ஆதரவளித்த ஊடக முதலாளிகள், நன்கொடையை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள் இவை எவற்றிலும் கருப்பினத்தவர் இல்லை என்பதிலிருந்து, ஒபாமாவை வெள்ளையர்கள் நிரம்பி வழியும் நிறுவனங்கள்தான் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமா தனது தேர்தல் செலவுகளுக்காக அறுநூறு மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இது ஒரு சாதனையாம். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன் கூட இதில் பாதியளவுதான் வசூல் செய்திருக்கிறார் என்றால், இந்தத் தேர்தலில் முதலாளிகள் ஒரு மனதாக ஒபாமாவைத் தேர்வு செய்துள்ளனர் என்று அறியலாம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பிரபலமான வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள், வால் ஸ்ட்ரீட்டின் பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோர்தான் ஒபாமாவின் புரவலர்கள்.

ஆக, ஒபாமாவை கட்சிக்குள் தேர்வு செய்து, காசும் கொடுத்து, பிரபலப்படுத்திய பின்னர் வெல்ல வைத்தது அத்தனையிலும் முதலாளிகள்தான் முடிவெடுத்துள்ளனர் என்றால், இந்த நாடகத்தின் சென்டிமெண்ட் உணர்ச்சி மட்டும் கருப்பின மக்களுக்குச் சொந்தமானது என்று சொல்லலாம். ஆனாலும், 228 ஆண்டுகளாகியிருக்கும் அமெரிக்க அதிபர் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கருப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது, இன்னமும் இனவெறியின் கொடுமைகளை அனுபவித்து வரும் மக்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்திருப்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும்.

ஆனால், இந்த மகிழ்ச்சி அலைவரிசையில் கருப்பினத்தவர் மட்டுமல்ல, உலக மக்களும் என்ன பெறப் போகிறார்கள் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது.  எந்த நெருக்கடியான காலத்தையும் சந்திப்பதற்கு முதலாளித்துவம் தனது முகமூடிகளை தேவைக்கேற்றபடி மாற்றி கொள்ளும் என்ற தந்திரம்தான் இந்த மகிழ்ச்சியில் மறைபடும் செய்தி.  இதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு தென்னாப்பிரிக்காவின் வரலாறு மிகவும் எடுப்பானது ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினச் சிறுபான்மையினர் கருப்பின பெரும்பான்மையினரை அடக்கி ஆண்டு வந்த போது பெயரளவுச் சலுகைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து உலக அளவில் பொதுக்கருத்து உருவானதும், வெள்ளையர்களின் மாமன் மச்சான் உறவு முறை நாடுகளான மேற்கத்திய நாடுகள்கூடத் தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதில் யாருக்கு பாதிப்பு இருந்ததோ இல்லையோ, தென்னாப்பிரிக்காவின் வளர்ந்து வந்த முதலாளிகளுக்கு பிரச்சினை வந்தது, 80களின் இறுதியில் நன்கு வளர்ந்து விட்ட அந்த முதலாளிகள், தமது வர்த்தகத்தை உலக அளவிலும், ஏன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்கூடச் செய்யமுடியாமல் சிரமப்பட்டனர்.

அப்போதுதான் அவர்கள் கருப்பினத்தவருக்கு வாக்களிக்கும் உரிமையை மட்டும் வழங்கினால், தமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று உணர்ந்து கொண்டார்கள். அதன்பின் 90களில் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். உடனே அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும் ஆட்சிக்கு வந்தது, உலக நாடுகளும் தமது தடைகளை நீக்கி விட்டன. இப்போது இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்து பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஆட்சி மாற்றத்தால் வெள்ளையர்கள் எதையும் இழக்கவில்லை, கருப்பர்களும் எதையும் பெறவில்லை.

நாட்டின் சொத்துக்களில் 96 சதவீதம் சிறுபான்மை வெள்ளையர்களிடமே இன்றும் இருக்கிறது. வெள்ளையர்களின் தனிநபர் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் கருப்பர்கள் பெறுகின்றனர். சந்தை மூலதனத்தில் 1.2 சதவீதம்தான் கருப்பர்களுடையது. கருப்பின மக்களில் 48 சதவீதம்பேர் வேலையற்றவர்களாக இருப்பதால், வன்முறை ஆண்டுதோறும் பெருகிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்போர் இந்த பதினான்கு ஆண்டுகளில் இருமடங்காகி விட்டனர்.

மற்றொருபுறம் வெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவோடும், உலக நாடுகளோடும் தமது வர்த்தகத்தைப் பல மடங்காக்கி சொத்துக்களைப் பெருக்கியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஒழிந்த கதையின் வர்த்தக ஆதாயம் இப்படித்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதுதான் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது.

கோமாளி அதிபர் புஷ்ஷின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமெரிக்கா பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிலும் நடைபெற்று வரும் போர் நோக்கமற்று பெரும் பணத்தை விழுங்கும் சுமையாக மாறிவிட்டது. இந்த ஆக்கிரமிப்பு போர்களினால் உலக மக்களிடமிருந்து அமெரிக்கா தனிமைப்பட்டிருக்கிறது எனலாம். அமெரிக்காவிலும் போரை எதிர்த்து ஒரு மக்கள் கருத்து உருவாகியிருக்கிறது. இந்த எட்டாண்டுகளிலும் புஷ் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெருந்திரளான மக்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். குறிப்பாக, இசுலாமிய மக்கள் அமெரிக்காவைக் கட்டோடு வெறுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

எண்ணெய் விலை ஏற்றம், ரியல் எஸ்டேட் விலைச் சரிவு, நிறுவனங்களில் ஆட்குறைப்பு, அதிகரித்துவரும் வேலையின்மை  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமீப மாதங்களில் பெரும் அமெரிக்க வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவாலானது அமெரிக்க மக்களிடம் பெரும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுவரை அமெரிக்கா கண்ட மோசமான அதிபர்களில் புஷ்ஷுக்குத்தான் முதலிடம் என்பதைப் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் நிரூபித்திருக்கின்றன. இதனால்தான் மெக்கைன் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக புஷ்ஷைக் கூப்பிடவில்லை.

இப்படி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயர் கெட்டிருக்கும் சூழ்நிலையில், அதைத் தூக்கி நிறுத்துவதற்காக அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு ஒபாமா தேவைப்பட்டிருக்கிறார். புஷ்ஷை வெறுத்த அளவுக்கு ஒபாமாவை உலக மக்கள் வெறுக்க முடியாது, ஏனெனில் அவர் ஒரு கருப்பர். பெயரிலும் ஹுசைன் என்ற வார்த்தை முசுலீம்களை நினைவு படுத்தும் வகையில் இருக்கிறது. அமெரிக்கா திவாலில் வாழ்க்கையை இழந்து நிற்கும் கருப்பினத்தவருக்கும், நடுத்தர வர்க்க வெள்ளையினத்தவருக்கும் புஷ்ஷுக்கு மாற்றாக, அவர்கள் அண்டை வீட்டுக்காரரை நினைவுபடுத்தும் ஒரு சாதரண எளிய நபராக ஒபாமா தென்படுகிறார்.

இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஒபாமாவுக்கு அதிபர் பதவி என்ற ஜாக்பாட் அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க முதலாளிகள் தனக்கு வழங்கியிருக்கும் இந்த அரிய கவுரவத்தை ஒபாமாவும் நன்றியுடன் விசுவாசத்துடன் தமது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துகிறார். ஈராக்கிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என்று சவடால் விட்டவர், இப்போது தந்திரமாக ஈராக்கில் பயங்கரவாதத்திற்கெதிராக படை முகாம்கள் நிறுத்தி வைக்கப்படும் என்கிறார். ஆப்கானில் முன்பை விட கடுமையாக பின்லேடனுக்கு எதிரான போர் நடைபெறுவதற்காகக் கூடுதல் துருப்புக்கள் அனுப்பிவைக்கப்படும், தேவைப்பட்டால் பாக்.கிற்குள் இருக்கும் அல்காய்தாவினருக்கு எதிரான படையெடுப்புகூட நடக்கும் என்கிறார். ஈரான் அணுஆயுதத்தைத் துறக்கவில்லையென்றால் கடும் நடவடிக்கை நிச்சயம் உண்டு என மிரட்டுகிறார்.

இவையெதுவும் அமெரிக்காவின்  மேலாதிக்கத்திற்கான வெளியுறவுக் கொள்கையைக் கடுகளவு கூட மாற்றவில்லை என்பதோடு, முன்பை விடத் தீவிரமாக நடைபெறப்போகிறது என்ற அபாயத்தையும் சுட்டிக் காட்டுகிறது. உள்நாட்டிலும் கடந்த ஆண்டுகளில் புஷ் எடுத்த எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் இல்லினாய் செனட்டராக இருந்த ஒபாமா ஆதரித்திருக்கிறார். சமீபத்திய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் அரசின் முயற்சிக்கும் அவர் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஒரு சொல்கூடப் பயன்படுத்தியதில்லை. தன்னை ஒரு கருப்பராகவும் முன்னிலைப்படுத்தவில்லை. வெற்றி பெற்றதும் நடந்த கூட்டத்தில் பேசியபோதும்கூட, அமெரிக்காவின் நெருக்கடிகளை ஒரு சில நாட்களில் தீர்க்க முடியாது என்றதோடு, அமெரிக்க மக்கள் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தினார். அவரது கிச்சென் கேபினட்டில் முதலாளித்துவ அடியாட்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒபாமா தேர்வு செய்திருக்கும் ரஹ்ம் இமானுவெல் இசுரேலின் தீவிர ஆதரவாளராக இருப்பதோடு,  அதன் உளவுத் துறையான மொசாத்தோடு தொடர்புள்ளவர். அமெரிக்காவில் யூத லாபி என்றழைக்கப்படும் யூத மத செல்வாக்குக் குழு, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் குழுவைச் சேர்ந்தவரை முன்னிலைப்படுத்துவதிலிருந்து இனிவரும் நாட்களில் பாலஸ்தீன மக்கள் படும் துன் பங்கள் பெருமளவு அதிகரிக்கப் போவதைப் பார்க்கலாம்.

அதேபோல துணை அதிபர் பதவிக்காக ஒபாமா தேர்வு செய்திருக்கும் நபரான ஜோ பிடேனும் யூத லாபியைச் சேர்ந்தவர் என்பதோடு, ஆயுத முதலாளிகளுக்கும், வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கும்  நெருக்கமான நபருமாவார். இவையெல்லாம் அமெரிக்கா எனும் ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் விதிகளுக்குட்பட்டுத்தான் ஒபாமா போன்ற முகமூடிகள் உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக, உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்பட்ட நேரத்தில், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் வெறுப்புற்ற நேரத்தில் அதைத் தணிக்கும் வண்ணம் ஒரு நபர் முதலாளிகளுக்குத் தேவைப்பட்டார். அப்படி முதலாளிகள் தேடிக்கொண்டிருக்கும் போது, ஒபாமா தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இரண்டு தேவைகளும் ஒன்றையொன்று பதிலீடு செய்து கொண்டன. 1960களில் மார்ட்டின் லூதர் கிங்கும், மால்கமும், கருஞ்சிறுத்தைகளும் போராடிப் பெற்ற சம உரிமைகளின் ஆதாயத்தை, எந்த விதப் போராட்டமுமின்றி, முதலாளிகளின் ஆதரவுடன் கைப்பற்றியதும்தான் ஒபாமாவின் சாமர்த்தியம்.

கருப்பர் அதிபரான வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் என்று ஊடகங்கள் போற்றும் இந்தக் காட்சி விரைவிலேயே மாறும். அப்போது கோமாளி புஷ்ஷுக்கும் திறமைசாலி ஒபாமாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உலக மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களே, அதிலும் குறிப்பாக ஏழைகளாக இருக்கும் கருப்பின மக்கள் புரிந்து கொள்வர்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 08 ( அனுமதியுடன்)