privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

-

வேலுப்பிள்ளை பிரபகரன்

பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை ஒரு ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், செய்தித் தொடர்பாளர் புலித்தேவன்,  உட்பட சுமார் 250 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்த காட்சிகளை இலங்கை அரசு தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்புகிறது.

இன்று மாலை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் தெரிவிப்பார் என்று பி.பி.சி கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த விசயம் தொடர்பாக அவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தொலைபேசியில் பேசும் போது பிரபாகரன் கொல்லப்பட்டு போர் முடிவுற்றதாக பேசியிருக்கிறார். நேற்றே இராணுவத் தளபதி பொன்சேகா புலிகளின் கடைசி இடத்தையும் பிடித்துவிட்டதாகவும் தற்போது முழு இலங்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பேசியிருக்கிறார். சிங்களர மக்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் ஆரவாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தலைநகர் கொழும்பில் தாரை தப்பட்டைகளுடன், இனிப்பு வழங்கி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதிபரின் பேச்சிற்குப் பிறகு நாளை தேசிய விடுமுறை அறிவிக்கப்படலாம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களினால் இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள மக்கள் உண்மையில் நிம்மதியை இழப்பதன் துவக்கம்தான் என்பதை அவர்கள் இப்போது உணர வாய்ப்பில்லை.

பிரபாகரன் போர்க்களத்திலேயே இல்லை அவர் கிழக்கு மாகாணத்தின் காடுகளுக்கு பெயர்ந்திருக்கக்கூடுமெனவும், இறுதியில் அவர் சில மாதங்களுக்கு முன்னரே மலேசியா அல்லது இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டதாகவும் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. இவை உண்மையா, பொய்யா என்று பார்ப்பதைவிட கள நிலவரம் யதார்த்தமாக உண்மையைச் சொல்கிறது.

முல்லைத்தீவின் முல்லைவாய்க்கால் பகுதியில் கடைசியாக முடக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை வெறும் ஐநூறைத் தாண்டாது என ராணுவமும், சுமார் 2000 போராளிகள், அவர்களது குடும்பத்தினர் 15,000, பொதுமக்கள் சுமார் 25,000பேர் இருப்பதாகவும்,  மொத்தத்தில் சுமார் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதாகவும் புலிகள் கூறிவந்தனர். நேற்று ஞாயிறு மதியம் ஒலிபரப்பப்பட்ட தளபதி சூசையின் தொலைபேசித் தகவலின்படி சுமார் 25,000 மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக தவிக்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை கொடுக்காத பட்சத்தில் விரைவில் இறந்து போவார்கள் என பதறியவாறு சூசை பேசுகிறார். எப்படியாவது செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டு உடன் செயல்படவேண்டுமெனவும் கோருகிறார். ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கத்தை போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்ட இலங்கை அரசோடு மீண்டும் பேசி உடன்பாடு கொண்டாலும் களநிலவரப்படி நாங்கள் உடனடியாக செயல்பட இயலாது என அச்சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தகைய கையறு நிலையில் தங்கள் துப்பாக்கிகள் இனி சுடாது எனவும், போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாத சர்வதேச சமூகத்தினால் மிகவும் கசப்பான முறையில் இந்தப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதெனவும் புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன் நேற்று அறிக்கை விட்டார். உடனடி போர்நிறுத்தத்திற்கு தாங்கள் சம்மதிப்பதாக புலிகள் பலமுறை கூறயிருப்பினும் இலங்கை அரசு அசைந்து கொடுக்கவில்லை. பல ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பக்கூடாது என்பதில்தான் சிங்கள இனவெறி அரசு கருத்தாய் இருந்தது.

கடந்த சில நாட்களில் மட்டும் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுற்றிலும் பிணங்கள் வீசிக்கிடக்க, அடிபட்டோர் அலறியவாறு வீழ்ந்து கிடக்க, இதற்கு மேல் உயிரோடிருக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் பிணங்களோடு படுத்துக் கிடக்க குடிநீரோ, உணவோ, மருந்தோ ஏதுமின்றி ஷெல்லடிகளின் சப்தத்தில் உறைந்து கிடந்தார்கள்.

இதற்குமேல் களநிலவரத்தை புரிந்து கொள்வதற்கு ஆதாரங்களும், புள்ளிவிவர எண்களும் தேவையில்லை. எண்களின் ஆய்வில் தொலைந்து போன வாழ்க்கை திரும்ப கிடைத்துவிடாது.

ஜனவரியில் கிளிநொச்சியில் இருந்து மக்கள் புலிகளோடு முல்லைத்தீவு நோக்கி கடும் பயணத்தை தொடர்ந்தார்கள். மொத்தம் மூன்று இலட்சம் மக்கள் இருக்கலாம். இந்த நான்கு மாதப் போரில் தற்போது சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இலங்கை ராணுவ கண்காணிப்பில் திறந்த வெளி முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஊனமுற்ற உடலோடும், துடிப்பை இழந்த மனதோடும் நாட்களை தள்ளுகிறார்கள். தொலைக்காட்சியில் படம் பிடிக்கப்படும் போதுமட்டும் அவர்களுக்கு கொஞ்சம் உணவு கிடைக்கிறது. மற்றபடி கால்வயிற்றுக் கஞ்சியோடு அத்துவான வெளியில் நிலை குலைந்து நிற்கிறார்கள். இந்தப் போர்க்காலத்தில் சுமார் 5000 முதல் 10,000 வரை மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

00

தெரிந்தே மரணத்தை வரவேற்கின்ற அவலத்தில் புலிகள் எப்படி சிக்கினார்கள்? இதனை தாக்குதலுக்கான பின்வாங்குதல் என்று கருதியவர்கள் உண்டு. ஆனால் போரில் மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக இந்தியா, மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு போரை நிறுத்துமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கலாம் என புலிகள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மக்களை இப்படிப் பணயம் வைப்பது பயன்படுத்துவது ராணுவரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியானதா? இந்த மக்கள் யாரும் நிர்ப்பந்தமாக வரவில்லை, இலங்கை ராணுவத்தின் கைகளில் சிக்க விரும்பவில்லை என்பதாலும் அவர்களாகவே மனமுவந்தும்தான் வந்தார்கள் என்றே புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும் புலிப்படையில் இருக்கும் போராளிகளது குடும்பத்தினரது கணிசமான எண்ணிக்கையும் இந்த மக்களில் அடக்கம் என்பதும் கூட உண்மைதான். இவர்களில் யாரொருவரை ராணுவம் பிடித்தாலும் புலி என்றே நடத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் மக்களின் நடுவே இருந்தால் இராணுவம் தங்களின் மேல் பாரிய தாக்குதல்கள் நடத்தாது என்று புலிகள் கருதியிருக்க கூடும்.

பொன்சேகாவும், ராஜபக்க்ஷேயும் இதெல்லாம் தூசு என்பது போல மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றதோடு, அதை சுட்டிக்காட்டிய சர்வதேச நாடுகளையும் உதாசீனம்  செய்தார்கள். இப்போது இந்த நெருக்கடி தலைகீழாக புலிகளின் மீது பாய்ந்தது. எந்த மக்கள் பாதுகாப்பு என்று நினைத்தார்களோ அந்த மக்கள் ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்த கையறு நிலையில் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளுக்கு இது உடன்பாடில்லை என்றாலும் அதை தடுக்க நினைத்தாலும் யதார்த்தத்தை தீர்மானிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இப்படி மக்கள் தடுத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்பதை புலிகள் மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டார்கள். இருப்பினும் காலம் அதற்குள் வெகுதொலைவு சென்றுவிட்டது.

மக்கள் என்ற சொல் அதன் பாரிய அரசியல் பொருளில் புலிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு போராட்டமும், அதன் எழுச்சியும், ஏற்ற இறக்கமும் மக்களின் உணர்வு நிலையைக் கொண்டே தீர்மானிக்கப்படவேண்டும். இந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் திரட்டப்பட்டிருந்தால் ஐந்து இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஈழத்திற்காக குரல் கொடுத்திருந்தால் எந்தப் பெரிய இராணுவமும் ஒன்றும் செய்திருக்க இயலாது. அதை நேபாளத்தில் கண்டோம்.

மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவிக்கமுடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவில்லை. அவர்களது கவனமெல்லாம் ஆயுதங்களின் நவீன இருப்பை கொள்முதல் செய்வதிலேயே இருந்தது. விமானப்படை வைத்த முதல் போராளிக் குழு என்ற பெயரெல்லாம் அவர்களைக் காப்பாற்றவில்லை என்பதை புலிகள் தாமதமாகவேனும் உணர்ந்திருக்கலாம்.

பயணம் நீண்டு போகப் போக புலிகள் பல ஆயுதங்களை விட்டுவிட்டு செல்லவேண்டிய நிலை. எந்த ஆயுதங்களை தமது விடுதலையின் அச்சாணியாக கருதினார்களோ அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. இதன் எதிர் நடவடிக்கையாக ராணுவம் நவீன ஆயுதங்களை வைத்து இழப்புக்களை வகை தொகையில்லாமல் கூட்டியது.

00

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் தேர்தலை ஒட்டி ஆட்சி மாற்றம் வரும், அதை வைத்து ஈழத்தில் போர்நிறுத்தத்தை கொண்டுவரலாம் என புலிகள் நம்பியதற்கு இங்கிருக்கும் புலி ஆதரவு அரசியல்வாதிகள் முக்கிய காரணமாக இருந்திருக்க கூடும். வைகோ, நெடுமாறன் முதலியோர் இப்படியொரு பிரமையை வளர்க்கும் விதமாக நடந்து கொண்டார்கள். தேர்தலில் ஈழ எதிரி ஜெயாவுடன் கூட்டணி வைத்தது, அவரையே தனிஈழம் தேவையென பிரகடனம் செய்ய வைத்தது, தமிழகத்தில் தொடரும் தீக்குளிப்புகளை வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக புலிகளை நம்பவைத்தது, அதுவே தேர்தலை தீர்மானிக்கும் சக்தியென நம்பியது, காங்கிரசுக்கு மாறாக பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அதன் மூலம் ஈழப்போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்பியது இப்படி பலவற்றை சொல்லலாம்.

சுருங்கக் கூறின் தற்போதைய ஈழப்போரை இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் சில அதிகாரிகள், காங்கிரசின் சோனியா முதலான தனிநபர்கள் நடத்துவதாக கற்பித்துக் கொண்டு ஒரு வகையான லாபி வேலை செய்தால் போர்நிறுத் தத்தை சாதித்து விடலாம் என குறுக்குப் பாதையில் சென்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளை வைத்து தப்பலாம் என நம்புமளவுக்கு புலிகள் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தார்கள். தமிழகத்திலோ விருப்பு வெறுப்பின்றி உண்மையைப் பேசும் நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

மறுபுறம் புலிகளை அழிப்பதற்கான விரிவான திட்டமும், கால அட்டவணையும், ஆயுதங்களும் இந்தியாவால் சிங்கள அரசுக்கு தரப்பட்டன. அதன்படி தேர்தலுக்கு முன்பு வரை புலிகளை பெருமளவு ஒடுக்குவது, முடிந்த பின் தலைமையை அழிப்பது என்ற திட்டம் இலங்கை ராணுவத்தால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த மேலாதிக்கத்தை அறிந்தததினாலேயே மேலை நாடுகள் ஒப்புக்கு ஈழப்பிரச்சினை குறித்து பேசின. அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெடிய போராட்டத்தினால்தான் அந்த ஒப்புக்கு சப்பாணி அறிக்கைகளும் வந்தன. மற்றபடி இந்த கண்டனங்களை ராஜபக்ஷே எதிர்கொண்ட முறையிலிருந்தே அதன் பின்னணியையும் நம்பகத் தன்மையைபயும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேலைநாடுகள் நிச்சயமாக தலையிடுமென புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் மலைபோல நம்பினார்கள். அந்த அளவுக்கு அவர்களது உலக அரசியல் கண்ணோட்டமும், ஏகாதிபத்திய கட்டமைப்பில் ஒரு தேசிய இனம் விடுதலை அடைவது எவ்வளவு சிக்கலானது என்பன போன்ற அரசியல் பார்வையெல்லாம் புலிகளிடமோ, அவர்களுக்கு நல்லெண்ணத் தூதர்களாக செயல்பட்ட தமிழக அரசியல் தலைவர்களிடமோ இல்லை.

மற்றபடி பல மேலைநாடுகள் தங்களை பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் காரணங்களை அவர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அந்த நாடுகளின் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்ப்பதன் ஊடாகவே தமது விடுதலைப் போராட்டம் வளரமுடியும் என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. மற்ற நாடுகளின் மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிப்பதன் ஊடாக ஒடுக்கப்பட்ட இனங்கள், மக்களின் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது என்ற பார்வையும் அவர்களிடம் இல்லை.

சிங்கள ஆளும் வரக்கத்தை நடுங்கச் செய்வதாக கருதிக்கொண்டு புலிகள் மேற்கொண்ட தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள், புலிகளை பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்துவதற்கு இலங்கை அரசுக்குத்தான் பயன்பட்டது.

ஒவ்வொரு முறையும் தற்கொலைப் போராளியின் உடல் சிதறி குண்டு வெடித்து எதிரி அழியும் போது தங்கள் போர் ஒரு படி முன்னேறுவதாக புலிகள் எண்ணியிருக்கலாம். இந்த நடவடிக்கைகளே தங்களை சர்வதேச சிவில் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தும் என்பதையோ, இக்கட்டான காலத்தில் தமது நியாயமான கோரிக்கையை உதாசீனப்படுத்துவதற்கு இந்த தனிநபர் பயங்கரவாத நடவடிக்கை ஒரு துருப்புச்சீட்டு போல பயன்படுத்தப்படும் என்பதையோ அவர்கள் அறியவில்லை. கடந்த காலத்தை பரிசீலிப்பது நமக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளிலிருந்து நிகழ்காலம் தப்பிவிட முடியுமா என்ன?

00

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அதன் நியாயத்தை அப்போதே நாங்கள் தமிழகமெங்கும் பேசியிருக்கிறோம். எனினும் தனிநபர்களை அழிப்பதென்பது, விடுதலைப் போராட்டத்தின் போராட்டமுறையாக ஆக முடியாது. ஒரு பண்ணையாரை அழித்தால் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிந்து விடுமென 70களில் நக்சல்பாரி கட்சியினர் இழைத்த தவறைப் போன்றதே இது.

ராஜீவுக்கும் பதில் மன்மோகன்சிங்கும், பிரமேதாசாவுக்கு பதில் ராஜபக்ஷேயும் வந்து அந்த இடத்தை நிரப்பிவிட்டு அடக்குமுறையை தொடரத்தான் செய்கிறார்கள். எனவேதான் தனிநபர்களினூடாக, ஆளும்வர்க்கத்தை புரிந்து கொள்வது தவறு என்கிறோம். இவர்களை இந்த அமைப்பின் பிரதிநிதிகளாக பார்த்திருந்தால் அத்வானியையும், ஜெயலலிதாவையும் நண்பர்களாகக் கருதும் பிழையும் நேர்ந்திருக்காது.

புலிகள் செய்யாத மக்கள் திரள் அரசியல் நடவடிக்கைகளை ராஜபக்ஷே கச்சிதமாக செய்து வருகிறார் அல்லது பயன்படுத்திக் கொள்கிறார். புலிகளை அழிப்பேன் என்று சொல்லி தேர்தலில் வெற்றி பெற் ராஜபக்சே, இப்போது போரின் ஒவ்வொரு வெற்றியையும் சிங்கள மக்களின் வெற்றியாக பிரச்சாரம் செய்கிறார்.

ஈழத்தின் துரோகிகளை அழித்த புலிகள் ஈழத்திற்காக உண்மையாக அர்ப்பண உணர்வோடு போராடும் நல்ல தோழமைகளைக் கூட கொன்றார்கள். புரட்சிக்கான தலைமை என்பது வேறுபட்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் ஆற்றல்களை பொது நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் கலை அல்லது அறிவியல் பற்றியது என்றால் பேராசான் ஸ்டாலின். புலிகளோ தம்மை நேர்மறையில் விமரிசனம் செய்வர்களைக்கூட எதிரிகளாக பார்த்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு அடக்குமுறைக்கு உள்ளான சமூகத்திடமிருந்து எண்ணிறந்த தலைவர்கள் அதாவது புரட்சிக்காக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்ட தலைவர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் ஆயுதங்களின் அபரிதமான நம்பிக்கையில் புதையுண்டு மீளமுடியாமலேயே போயின.

எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளுக்கு அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் அரசியல் ரீதீயாக முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்தது. அதை செயலுத்தியாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களின் பல்வேறு சக்திகளை ஒன்று சேர்த்து பலப்படுத்திக் கொள்வதை விடுத்து நவீன ஆயுதங்களை சேகரிப்பதற்கான காலமாக பார்த்தது அடுத்த தவறு. இந்த போர்நிறுத்தத்தை அரசியல் ரீதியில் ஒரு வரம்புக்குட்பட்டு என்றாலும்கூட பயன்படுத்தியிருக்க வேண்டும்.

00

இப்போது மீண்டும் இன்றைய யதார்த்திற்கு வருவோம். தமிழகத்தில் தேர்தல் முடிந்தது. புலிகளும் அவர்களது தமிழக ஆதரவாளர்களும் எதிர்பார்த்தபடி முடிவுகள் அமையவில்லை. தேர்தல் முடிவுகள் அவர்கள் விரும்பியபடி அமைந்தாலும் இதில் மாற்றமில்லை என்பது வேறு விசயம். இடையில் புலம்புயர்ந்த நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டத்தால் ஒரு தீர்வு கிடைக்கும் என புலிகள் நம்பினார்கள். அதற்கு தோதாகவே போராட்டங்கள் உண்மையில் வீச்சாக நடந்தன. ஏற்கனவே கூறியதைப் போல ஆசியாவின் முக்கியநாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்தப் போருக்கு குறிப்பாக இந்தியா இன்னும் அதிகமாக காரணமாக இருப்பதாலும், இந்த அங்கீகாரம் அமெரிக்காவின் அனுமதியுடன்தான் நடக்கிறது என்பதாலும் மேலை நாடுகளின் அரசுகள் வெறுமனே மனிதாபிமானக் கண்டனங்களை மட்டும் தெரிவித்தன.

இப்படி எல்லாவகையிலும் ஆதரவை இழந்து நின்ற புலிகள் உயிர் துறக்கும் வரை போராடினார்கள். தாங்கள் எப்படியும் மரிக்கத்தான் போகின்றோம் என்ற கணத்திலும் அவர்கள் சரணடையவில்லை. பல இளைஞர்கள், சிறார்கள் ஒரு நாட்டை கட்டியமைக்க வேண்டிய காலத்தில் போரிட்டு மாண்ட காட்சி நம் நெஞ்சை உலுக்குகிறது.

இந்தியா போருக்கு பின்புலமாக அமைந்தது என்றால் சர்வதேச அரசியல் பின்புலத்தை சீனாவும், இரசியாவும் தந்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தப் பிரச்சினை விவாதிக்க கூடாது என்பதற்கு இருநாடுகளும் தடை விதித்தன. இதன் பின்னணியில் ஏற்கனவே பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டிருந்த புலிகளுக்காக இப்போதும் பரிந்து பேச யாருமில்லை. இப்படி எல்லா அரசியல் புறவய சாதகங்களையும், அகநிலையாக சிங்கள மக்களை இனவெறி ஆதரவோடும், களத்தில் ஆயுதங்களின் வலிமையுடன் இறங்கிய அரசும், இராணுவமும் இந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

இந்த இனவெறியின் கருணையற்ற போரை, பல ஆயிரம்மக்களை கொன்று குவித்த அநீதியை, சிங்கள இனவெறி நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த கனவை நனவாக்கிய வெற்றியை அறிவித்துவிட்டார் ராஜபக்சே. இலங்கை முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது.

ஆனால் இந்த கொண்டாட்டம் விரைவிலேயே முடிவுக்கு வரும். சிங்கள வெறியர்கள் எதிர்பார்த்திருந்த அமைதி நிச்சயம் குலையும். பேரினவாத இராணுவத்தால் குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்வைக் கழித்த அந்த மண்ணிலிருந்து, இது வரை ஈழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்தின் சரி தவறுகளை உள்வாங்கிக் கொண்டு, சிறு தளிர்கள் மெல்ல முளைக்கும். வளரும்.

தன்நாட்டில் தங்களைப் போலவே சம உரிமை கொண்ட அந்த தமிழ் மக்களை அடக்கி ஆண்டுவிட்டோம் என நினைத்திருக்கும் சிங்களப் பேரின வாதத்திற்கு பலியான மக்கள் தங்கள் தவறினை விரைவில் உணர்வார்கள். கிளிநொச்சியும், முல்லைத்தீவும் வீழ்ந்தாலும் இரத்த்தின் உழுவையில் பதம்பார்க்கப்பட்ட அந்த ஈழத்து மண் விரைவில் தன் தவப்புதல்வர்களை  பிரசவிக்கும்.

0000

எமது கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட ஒரு ஈழத்தமிழர் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். இப்போது இந்த துயரமான தருணத்தில் அவர் பேச ஆரம்பித்த உடனே அடக்கமுடியாமல் கண்ணீருடன் இந்த தமிழினத்திற்கு ஒரு நல்லகாலம் வராதா என்று குமுறுகிறார். புலம்பெயர்ந்த நாட்டில் தான் நல்ல வாழ்க்கை வாழும்போது தாய்நாட்டில் மக்களும் புலிகளும் இப்படி ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டதை அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. இவ்வளவிற்கும் அவரும் புலிகளால் கைது செய்யப்பட்டு வதை பட்டவர்தான்.

ஆனாலும் களத்தில் இருக்கும் அவர்களை வைத்தே ஈழத்தின் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவும், தமிழக அரசியல்வாதிகளும் செய்திருக்கும் துரோகத்தைப் பற்றி ஆவேசத்துடன் கேட்கிறார். அப்போது நான் இந்தியாவின் குடிமகன் என்ற சாபக்கேட்டினால், அந்த சீற்றத்தை ஏற்கிறேன். இந்திய அரசை முடிந்த மட்டும் எதிர்த்தோம். மக்களிடம் அம்பலப்படுத்தினோம். எனினும் இந்த அநீதியை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருடைய அறச்சீற்றத்தையும் என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் துடித்துக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களையும் அவர்களது உணர்ச்சிப் போராட்டத்தையும் புரிந்து கொள்கிறோம். முப்பதாண்டுகளாக பல ஏற்றங்களும் இறக்கங்களும் கண்ட சமரிது. இந்த நாளை, இந்தத் தருணத்தை, இந்தக் கண்ணீரை நாம் கடந்து செல்வோம்.

போர் இன்னும் முடியவில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

000000000000000000000000000000000000000000000000

இலண்டன் ஆர்ப்பாட்டம்

பிரபாகரனைக் கொன்றுவிட்டோம், புலிகளை போரில் வென்றுவிட்டோம் என்ற பெயரில் ராஜபக்சே ஈழத்தில் நடத்தும் இனப்படுகொலையை சர்வதேச நாடுகள் கண்டும் காணாமல் இருப்பதைக் கண்டித்து லண்டனில் இந்நேரம் மாபெரும் சாலை மறியல் இங்கிலாந்துப் பாரளுமன்றத்திற்கு எதிரே நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது போராட்டத்தை நடத்துகின்றனர். இருபுறமும் வாகனங்கள் நகரமுடியாமல் தேங்கி உள்ளன. இத்தகைய எழுச்சிமிக்க போராட்டத்தை எதிர்பாராத போலீசு எப்படி போராட்டத்தை முடக்குவது என திகைத்து நிற்கின்றனர். எமது இலண்டன் நண்பர் அனுப்பிய புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். தமிழகத்தில் ஈழம் குறித்த செய்தி இன்னும் பரவவில்லை என்றாலும் ஆங்காங்கே சாலை மறியல்கள் நடந்ததாக அறிகிறோம்.

  1. மிக அருமையான பதிவு.நொந்துபோயுள்ள நமக்கு ஒத்தடம் தரும் அரிய கட்டுரை.ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கட்டுரை.போராட்டத்தைத் தொடரவேண்டிய பணி நமக்கு உண்டு.அதை நிறைவேற்றுவோம்.

    நன்றி.

    ஸ்ரீரங்கன்.

    • It is really a painful situation .
      The article is one of the best i have ever read which precisely gives a birds eye view of the situation.but now no point in arguing who is right or what went wrong because things have went beyond the limit. winning is not always as important as putting up the bravest fight we can.

    • இந்திய தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் காணுங்கனவுகள் ஏதா மேற்குலகுதரத்திற்கு இருந்தாலும் நடுரோட்டில் சலம் கழிக்கும் யதார்தம் தான் உள்ளது அங்கு இன்றும்.

      இலங்கையில் பிறந்து யுத்ததில் பாதிப்படைந்து எங்கேயோ அகதியாய் இருக்கும் என்போன்றவனுக்கு விளங்கும் யதார்தமான ஈழம் என்பதில் உள்ள ஆழம் எந்த இந்திய தமிழருக்கும் வந்துவிடமுடியாது.

      உங்களுக்கு வரபோகிற்றது இன்னிலமை என்பதுதான் நிதர்சனம். அன்று எங்கள் ஆயுதபோராட்டமும் ஈழம்குறித்த பிரக்ஞ்யும் உங்களுக்குள் வரும் அது வரையில் நாங்கள் உங்களிடம் எங்கள் நிலைகளை விபரிப்பதென்பது பிறவிக்குருடனிடம் வெள்ளைநிறத்தை வர்ணித்ததைப்போல்தான் இருக்கும்.

  2. உங்கள் அரசியல் புரிதல் எனக்கு இல்லை .. இது போன்ற உணர்ச்சிவயப்பட்ட தருணங்களில் அது வரவும் வராது. உங்கள் கட்டுரை எங்களுடைய உணர்ச்சிகளை பரிசீலனை செய்யத்தூண்டுகிறது, ஆனால் அது எவ்வளவு சாத்தியம் என தெரியவில்லை. உங்கள் உணர்ச்சியின் நேர்மையை என்னால் சந்தேகிக்க முடியாத காரணத்தினால் அமைதியான நேரத்தில் இதை படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  3. போர் இன்னும் முடியவில்லை. பல உண்மைகளை வெளிச்சம் போட்டது.நல்லபதிவு என்று சொல்வது அவரவர் மனப்பாங்கைப்பொறுத்தது என்பதால் இது ஒரு யதார்த்தமான பதிவு என்று சொல்கின்றேன்.. 60வருட காலப் போராட்ட வளர்ச்சியைச் சாகடித்துவிட்டார்களே என்கிற வருத்தம் ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு.எப்போ அவர்கள் விடுவார்கள் தாங்கள் போராட்டத்தைத் தொடரலாம் என்கிற
    அவசரம் பலருக்கு இருப்பது போலுள்ளது. ஏனென்றால் ஏமாந்த மக்கள் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டால் தானே மக்களை ஏமாற்றித் தாங்கள் பிழைத்துப்போகலாம்.
    தமிழ்சித்தன்

  4. ஈழத்தின் ரத்தச்சகதிக்குள் தனித்துவிடப்பட்டு வானத்தைப்பார்த்து வெடித்து அழுகின்ற இந்த நேரத்தில் உறுதியும் எழுச்சியும் தரும் தோழமையாய், மக்களுக்கு மக்கள் போராளிகளுக்குப் போராளிகள் எனும் ஒற்றுமையாய் உறுதுணையாய் ஆரோக்கியமான சர்வதேசியத்தின் ஒத்தடமாய் வினவும் மகஇக வும் நிற்கின்றன.

    இத்தனைநாள் மனதில் ஓடிய அத்தனை எண்ணங்களையும் எழுத்தில் வடித்ததுபோலிருக்கிறது இந்த ஆய்வு.

    //அப்போது நான் இந்தியாவின் குடிமகன் என்ற சாபக்கேட்டினால், அந்த சீற்றத்தை ஏற்கிறேன். இந்திய அரசை முடிந்த மட்டும் எதிர்த்தோம். மக்களிடம் அம்பலப்படுத்தினோம். எனினும் இந்த அநீதியை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருடைய அறச்சீற்றத்தையும் என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.//

    என்று சொல்லும் பொறுப்புணர்வுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்.

  5. உங்கள் ஆக்கத்தின் உள்நோக்கம் சற்று சந்தேகத்தை கொடுக்கின்றது, அளவுக்கு அதிகமாக விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுபோல் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. அதாவது விடுதலைப்புலிகள் அரசியல் அறிவோ, அல்லது தூரநோக்கம் இல்லாதவர்கள் என்ற கருத்துப்பட உங்கள் ஆக்கம் நீண்டு செல்கின்றது.

    • Whats the doubt in this? The Article is clear in accusing ‘Puligal’ of their political handicap. They failed to politicize or militarize the people of Eelam for whom the organisation was fighting for. The organisation took a upper hand by not-including people in the process of their fight against GoSL. Had it happened the 2 lakh people were more than enough to have warded off the 50,000 odd soldiers. The Bravery / valour of Tigers is never questioned here! Red Salute for all fallen heroes.

  6. This artical is good, Lets finish this war, and Have our Eelam soon, Our Leader started this and we need to finish it. We need to give our support very well to him. We are safe here, but our people and our Leaders are not, atleast we need to save the rest soon.PLZ people act soon, don’t make the world laugh at us

  7. சிங்களவனோடு இந்த மக்கள் புரட்சி எல்லாம் செல்லுபடியாகாது. அவனுக்கு நாம் மனிதர்களே இல்லை. ஆயத பலம் மட்டுமே நம் மானம் காத்தது. கடந்த கால சரித்திரத்தை மறந்து இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. எத்தனை கொலை, மானபங்கம், சித்திரவதை, கைது, ஏளனம், உடைமை அபகரிப்பு, நிராகரிப்பு…மறக்க முடியுமா?

  8. ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !…

    க பல ஏற்றங்களும் இறக்கங்களும் கண்ட சமரிது. இந்த நாளை, இந்தத் தருணத்தை, இந்தக் கண்ணீரை நாம் கடந…

  9. இந்தியாவில் இருந்துகொண்டு இலங்கை நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்பு செய்யும் ஆங்கில சேனல்களின் தமிழினத்துரோகத்தை நாம் எப்படி எதிர்கொள்வது ?

  10. //இப்படி எல்லாவகையிலும் ஆதரவை இழந்து நின்ற புலிகள் உயிர் துறக்கும் வரை போராடினார்கள். தாங்கள் எப்படியும் மரிக்கத்தான் போகின்றோம் என்ற கணத்திலும் அவர்கள் சரணடையவில்லை.// LTTE’S uncompromising war till the last end of their defeat is one major aspect still for us to believe the war will continue, if not by LTTE there comes another fresh blood to carry on the oxygen of our Tamil brethren. Prabhakaran might be dead but the hope is alive. The political misgivings of the LTTE could be a lesson to be learnt as negative but their never cow down attitude till their last breath is a lesson to be learnt positive.

  11. இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் வெற்றியாட்டம் போடுகின்றன. பிஞ்சு குழந்தைகளின் சிதைந்த உடல்களை சுவைக்கின்றன.
    தாய் மண்ணிலேயே தமிழினத்தை பிச்சைகாரர்களாக்கும் பாசிச திட்டம்அரங்கேறுகின்றன.

    எங்கள் தாயின், சகோதரியின் உடல்களை சிதைத்து கொன்றவன் ;
    வினையை விதைத்தவன்.

    தண்ணீர் கூட இல்லாமல் விலங்கினும் கேடாக எம் மக்களை கொன்றொழித்தவன் ; தனக்குத் தானே புதை குழி தோண்டியவன்.

    பேயாட்டம் ஆடும் ஒநாய் கூட்டங்களே ! நாளைய போராட்டம் உங்கள் கழுத்தை அறுக்கும்! பச்சைபடுகொலையின் பூமியான ஈழம் நாளை புரட்சி பூதமாக உங்கள் மூச்சை நிறுத்தும்!
    துரோக பன்றிகளே ! உங்கள் இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும்.

    வெல்லும்! வெல்லும்! ஈழ மக்களின் போராட்டம் வெல்லும்!
    கொல்லும்! கொல்லும்! அது ராஜபக்சேக்களை கொல்லும்!
    பழி தீர்ப்போம் ! பழி தீர்ப்போம் ! பாசிச நாய்களை பழி தீர்ப்போம்
    பாசிச ஒநாய்களின் இரத்தத்தால் ஈழம் சிவப்பாகும்!
    தன்னலமின்றி இறுதிவரை போரடி இறந்த போராளிகளின் புண்ணிய பூமியாகும்

    வரலாறு திரும்பும்…………………

      • தமிழ் எழுதி வலது பக்கப்பட்டையில் இணைக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக்கொள்ளவும்

        நட்புடன்
        வினவு

      • ஃபயர்பாக்ஸ் 3ல் தமிழ்விசையையும் (tamil key – add-on) நிறுவி பயன்படுத்தலாம்.

  12. மிகச் சரியான ஆய்வு. இது தமிழர்களின் தோல்வி இல்லை. தமிழ் இனவாதிகளின் தோல்வி. சிங்கள இனவாதிகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்கும் இடையில் நடந்த போரில் சிங்கள இனவாதிகள் வென்று விட்டார்கள். அவ்வளவு தான். தமிழ் மக்களுக்கு புலிகள் தேவையில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.

  13. இத்தனை நாளும் ஈழத்தில் நடந்த விடுதலைப் போரினை முன்னின்று நடத்திய எல்லா துறையின் தளபதிகளும் நேற்று வீழ்ந்து கிடந்த புகைப்படத்தைப் பார்த்ததும், நெஞ்சு கனத்தது. அவ்ர்களுக்கு நமது வீர வணக்கங்கள்.இழப்பின் வலியில் உணர்ச்சி தான் மோலோங்கும். கட்டுரை நடந்து வந்த பாதையினை பரிசீலிக்க கோருகிறது.
    ஆனால், விடுதலை போர் என்பது நீண்ட நெடியது. தவறுகளை களைந்து கொண்டால் தான் விடுதலையை சாதிக்க முடியும்.

  14. நேசத்திற்குரிய இளம்புலியேஇ
    தேசபக்ததேஇ
    மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள் aivukalulu nanri

  15. intha pathipai muttu muluthaka eatrukolla mudiyathu. oruvan venral avanai thalai meal vaithu aadavum avan vilunthal avanai manam ennum padiyellam kurai kollum vakayil amainthirukkirathu. pulikal palam porithiyavarkalakavum arasiyal arivu kondavarkalakavume iruntharkal. ithai maruppavan vithandavathiyakave irukka mudiyum. avarkalin kolkai manitha neyankatku mathippu kodupathanathakavum, thankal thavarilaikka kudathu enpathakavume amaithathu. athu mattum inru urimaiyai venredukka vendum enpathil mumuchakavum irunthathu. athatku thamil makkalakiya nam evalavu pankatrinom enpathu mukkiyamana vidayam. cash koduthol avankal ellam parpangal enru nampinal athu engal thavaru athayum anaivarum ottumaiyaka koduthoma athtkulum ethanaiyo vithandavatham. porattathil ottumaiyai kattinoma athuvum illai emakkulle ethanai pakupadu. velinattilirunthu em kadaimaiyai sariyaka seithom athuvu millai ipadiyellam irukka iyirai thotsamaka mathithu oru inathin odukku muraikalukku ethiraka iravu pakal parathu ethanaiyo kastankalukku mugam koduthu tham uyikalai vithaiyakkiyirukkirarakal ammavirarkal avarkal pusikka pada vendiyavarkal. avarkalukkul irunthu thovamsam seitha ethanaiyo thorokikali inan kankinra pariya porupaiyum avarkal seitharkal enru than solla vendum.

    ullakil yananayakam thottu vitathu neethi madinthu vitathu. amerikka afkanil kundu poliya. push irakil padai edukka india china Rajabaksavukku palam serkka september 11 US thakuthal payankaravatha mulam poosa. ipadi ellame onranathu than em viduthalai porattam thottka karanamakina. ithai ellam arrayamal thaniye pulikal sinthikkathavarkalakavum thavaru seitharkal enru makkalai aliya vitu vitarkal enpathu entha vithathil nayamakum. poratathukku pillayai kettal vida marukkirom. shell ill pillai sethalo army pidithalo neelikanner vidu kinrom. velinadukalil valarum pillaikalukku kattaya iranuva trainning kodukiran sandaikku thevai pattal kuttiporan. nanaritha thamilakkal sandaiku poi vathathu nanariven. engal mannil ithai makkal pulikal sonnapothu entha mattil eatrukondarkal. eatrukonda makkalin thiyankalum eatru kollathorin thimir peachal veenakiyathu.

    irithiyaka sollukiren thavaru pulikalidam mattum enro allathu avarkalin siru thavaru kalai peruthu padutha muyatsippathilo sattenum manachatsiyulla manitharkalaka irukka muyatsiyungal. sarvatheesam vitta thavarai thisai maattri avarkal meethu thinikkatheerkal. viluthal eerimithikka munaipavarkal elumm pothu thol koduthoma enru sinthiyungal.

  16. It was a complicated state of mind with mixed emotions till I could read this article. The political awareness gained over a period of time , at times, gets defeated by emotions ! The admiration for che guevara and prabhakaran and the like is still there deep in the mind , as a longing for such saviours ! Upon overcoming the trauma of the reality and practical situations , they themselves turn back to us and demand action ! Being able to know and understand what is to be done to rise again like phoenix , is the only option available before us to succeed ! Lets learn from the mistakes,loss and bloodshed and teach our foes , a lesson !

  17. (ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அதன் நியாயத்தை அப்போதே நாங்கள் தமிழகமெங்கும் பேசியிருக்கிறோம். எனினும் தனிநபர்களை அழிப்பதென்பது, விடுதலைப் போராட்டத்தின் போராட்டமுறையாக ஆக முடியாது)

    ராஜீவ் காந்தி கொலைவழக்கு இந்திய சட்டமுறைகளுக்கு அப்பாற்பட்டு புலிகளை ஓரம்கட்டும் ஒரு முயற்சியாகவே நடந்தது, நடைபெற்றுவருகிறது. சாட்சியங்கள் மறைக்கப்பட்டு கொலைகாரர்களே வழக்கையும் நடாத்திவருவதை ஜெயின்கமிசன் அறிக்கை தொடங்கி சுப்பிரமணிய சுவாமியின் அந்தரங்கச் செயலாளரின் திடமான சாட்சியம்வரை வெளிச்சம்போட்டுக் காட்டிவருகிறது. ஆனாலும் புலிகளுக்கு ஆதரவான தலைவர்களும் ’புலிகள் செய்த பெரும்தவறு ராஜீவ் காந்தியின் கொலை’ என்று வருத்தம் தெரிவித்து மக்களையும் நம்பும்படி மேடைகளில் பேசிவருகிறார்கள். தற்போது வினவின் ஆக்கமும் அதற்கு முண்டுகொடுக்கிறது.

    ஊடகங்கள் முன்பு தலைவர் பிரபாகரனை சந்தித்தோது இதனை மறுத்திருக்கலாம் ஆனாலும் அவர் இது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறி விலகமுற்பட்டதற்கு ஏதோதொரு காரணம் இருக்கலாம். இருந்தும் எங்கள் தமிழ் வல்லுனர்களுக்கு பட்டிமன்றம் நடாத்தும் ஒரு வாய்ப்பாகிவிட்டது. தலைவரின் கூற்று இன்று தவறாகவும் தெரியலாம், ஒரு காலத்தில் யாசீர் அரபாத், நெல்சன் மன்டேலா போன்றோர் பயங்கரவாதிகளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்கள். உண்மை எப்படியும் வெளிவந்துதான் தீரும்.

    இங்கு ஈழத்தமிழர் ஆயுதங்களை கையிலெடுப்பதற்கு முன்பாக உரிமைவேண்டி 35 வருடங்கள் நடாத்தப்பட்ட போராட்ட காலத்தின்போது தமிழர்களுக்கு ஏற்பட்ட வார்த்தைகளால் கூறமுடியாத அழிவுகளை வினவின் ஆக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எதற்காக? இவைதான் உண்மைத்தமிழன் குறப்பிட்டவை உண்மைதான் என வினவு நிரூபித்து நிற்கின்றது.

    (உண்மைத்தமிழன் குறப்பிட்டவை: உங்கள் ஆக்கத்தின் உள்நோக்கம் சற்று சந்தேகத்தை கொடுக்கின்றது, அளவுக்கு அதிகமாக விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுபோல் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. அதாவது விடுதலைப்புலிகள் அரசியல் அறிவோ, அல்லது தூரநோக்கம் இல்லாதவர்கள் என்ற கருத்துப்பட உங்கள் ஆக்கம் நீண்டு செல்கின்றது).

    • எந்த உண்மைத்தமிழன் ”முடிவுக்கு வந்தது தமிழீழ கனவு..! ” என பதிவு போடும் அந்த உணமைத்தமிழனா?

      புலிகளுக்கு ராஜீவ் கொலையில் தொடர்பில்லை என்று நீங்கள் நிரூபிக்க பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. ராஜீவ் கொலை சதியின் துவக்கம் புலிகள் அல்ல ஆனால் காரியத்தை முடித்த கடைசி கன்னி புலிகளே! இதை பெருமையோடு ஒப்புக் கொள்ளுங்கள்.

      தவிர இந்த கட்டுரையில் இந்த ஒரு பாயின்டுதான் கிடைத்ததா உங்களுக்கு, புலிகளின் அரசியல் தவறை நீங்கள் பரிசீலிக்கவே மாட்டீர்களா? போகட்டும். புலிகள் தோற்றது எதனால் என்பதையாவது நீங்களோ அல்லது உண்மை தமிழனோ எழுதுங்களேன்!

  18. //ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அதன் நியாயத்தை அப்போதே நாங்கள் தமிழகமெங்கும் பேசியிருக்கிறோம். //

    “”மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணி”” என்பது ராஜீவ் காந்தி கொலையை நியாய படுத்த முயல்வதா ? அப்போது பிரபாகரனின் முடிவும் சரியா ?
    இது ஒரு தொடர் கதையா? எல்லாமே “துன்பியலான சமபவங்கள்” தானே?

    • சுரேஷ் ராம், ராஜீவ் கொலையை ஒட்டி புதிய கலாச்சாரத்தில் வந்தி கட்டுரை/கவிதை
      இங்கே இருக்கிறது https://www.vinavu.com/2008/10/28/eelam4/ படியுங்கள் !

  19. ஆனாலும் களத்தில் இருக்கும் அவர்களை வைத்தே ஈழத்தின் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கிறது…,முப்பதாண்டுகளாக பல ஏற்றங்களும் இறக்கங்களும் கண்ட சமரிது. இந்த நாளை, இந்தத் தருணத்தை, இந்தக் கண்ணீரை நாம் கடந்து செல்வோம்.
    இரத்த்தின் உழுவையில் பதம்பார்க்கப்பட்ட அந்த ஈழத்து மண் விரைவில் தன் தவப்புதல்வர்களை பிரசவிக்கும்.

  20. Reason for no international support for LTTE and no condemn against Sri Lanka military is the socalled ‘war against terrorism’. The remaining tamils should follow ‘democratic war’ by taking Mahatma Ghandhi as their spiritual leader. But, // இங்கு ஈழத்தமிழர் ஆயுதங்களை கையிலெடுப்பதற்கு முன்பாக உரிமைவேண்டி 35 வருடங்கள் நடாத்தப்பட்ட போராட்ட காலத்தின்போது தமிழர்களுக்கு ஏற்பட்ட வார்த்தைகளால் கூறமுடியாத அழிவுகளை வினவின் ஆக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எதற்காக? // – may be happened in undeveloped communication era. Now, we are walking hand in hand by internet and dish live relay. So, dear remaing tamils, restart your democratic war without weopons and read again vinavu’s //மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவிக்கமுடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவில்லை. அவர்களது கவனமெல்லாம் ஆயுதங்களின் நவீன இருப்பை கொள்முதல் செய்வதிலேயே இருந்தது. விமானப்படை வைத்த முதல் போராளிக் குழு என்ற பெயரெல்லாம் அவர்களைக் காப்பாற்றவில்லை என்பதை புலிகள் தாமதமாகவேனும் உணர்ந்திருக்கலாம்.//. You can understand. DON”T FIGHT FOR ‘NOMAN’S’ LAND WITHOUT PEOPLE, BUT, FIGHT FOR THE PEOPLE WITH ALL PEOPLE.

  21. As like some one said in the beginning, i dont have good political knowledge to comment about this article whether LTTE indead commit several mistakes or not; ….all i want to say is that if the country has power can do anything and no one has dare to ask (USA in iraq and Afganistan) + (USA, India,China togther for LTTE) what can we do or what can LTTE do ? its all international politics….

    people should remeber that “Darwin says ” SURVIVAL OF THE FITTEST=the strong set standards of justice to the detriment of the weak, thats all happening all over the world from small organism to large dangerous animal so called HUMAN BEING….

  22. ஒரு நல்ல கருத்து ஆழம் மிக்க பதிவு.விடுதலை புலிகலின் எதிர்காலதின் அரசியல் புரிதல் இன்றி எடுத்த முடிவுகலால் ஏற்பட்ட இழப்புகளை தெளிவு படிதியமைக்கு நன்றி.

  23. To Sam Doha- The last URL is from Sri Lankan/Sinhalese sources. IT is the same sources that has been killing Tamil for the lat 60 years; How can we trust it?

  24. நான் புலிகளை எதிர்ப்பவன். குறிப்பாக பிரபாகரன் ஒரு ஃபா சிஸ்ட் என்று கருதுபவன். ஆனால் பிரபாகரன் இறந்திருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு இழப்புதான். யாரைக் கண்டு இனி மேல் ராஜபக்ஷேவும் இலங்கை ராணுவமும் அஞ்சப் போகிறார்கள்? இனி மேல் அவர்களாக இஷ்டப்பட்டு எதாவாது செய்தால் உண்டு – இல்லை என்றால் தமிழர்களுக்கு கதி இல்லை. என்ன இந்தியாவா அவர்களுக்கு ப்ரெஷர் கொடுத்து தமிழர்களுக்கு தங்கள் உரிமைகளை வாங்கித் தரப் போகிறது? இன்று இலங்கை அரசுக்கு upper hand என்பதுதான் நிஜம். அவர்கள் கொடுக்கும் நிலையிலும், ஈழத் தமிழர்கள் வாங்கும் நிலையிலும் இருக்கிறார்கள்.

    இதை பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே – http://koottanchoru.wordpress.com/2009/05/20/பிரபாகரன்-மறைவு/

  25. ஈழப்பிணங்கள்
    சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

    ………………..

    இலங்கைஅரசின் இந்தப்பிரச்சாரம் எதற்காக? கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும் அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.

    பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
    அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.

    http://kalagam.wordpress.com/2009/05/20/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

  26. இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

    • மொத்தத்தில் எஸ்.எஸ்.எஸ் மூலம் படம் காட்டியுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்றால் இதை அந்த தொலைக்காட்சி நிறுவனங்களே அறிவித்திருக்குமே?? பூ வைப்பதென்று முடிவெடுத்தால், எப்படியும் வைக்கலாம். உங்கள் காதுகள் பத்திரம்….

  27. Pls translate the article in to english and immedietly release to the entire world .it has a historical significance as same as your critically acclaimed article written by marudayian’s twin tower essay.
    (Evil empire-article by PALA published on 2001 ) PLS DO IT AS SOON AS POSSIBLE.

  28. //மக்கள் என்ற சொல் அதன் பாரிய அரசியல் பொருளில் புலிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு போராட்டமும், அதன் எழுச்சியும், ஏற்ற இறக்கமும் மக்களின் உணர்வு நிலையைக் கொண்டே தீர்மானிக்கப்படவேண்டும். இந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் திரட்டப்பட்டிருந்தால் ஐந்து இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஈழத்திற்காக குரல் கொடுத்திருந்தால் எந்தப் பெரிய இராணுவமும் ஒன்றும் செய்திருக்க இயலாது. அதை நேபாளத்தில் கண்டோம்.//தோழ இந்த இடத்தில் நான் ஒரு கருத்தும் எல்லா போராட்டமும் மக்களை கொண்டேநடாத்த பட முடியாது அதிலும் ஈழத்தில் நிறைய துரோகிகள் இருக்கிறார்கள்

  29. இந்தக் கட்டுரை மறுபிரசுரம் செய்த யாழ் இணையத்தளத்தில் வந்த விமர்சனங்கள் இவை.

    // தேசியத்தின் தேவையையும், சுயநிர்ணயத்தின் கருப்பொருளையும், தாயகதின் மதிப்பையும் எம்மக்களுக்கு உணர்திவிட்ட புலிகள்மீது எதிரி பூசமுற்பட்ட சேற்றினை – இந்தக் கட்டுரை பூச முற்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.//

    //உங்கள் ஆக்கத்தின் உள்நோக்கம் சற்று சந்தேகத்தை கொடுக்கின்றது, அளவுக்கு அதிகமாக விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுபோல் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. அதாவது விடுதலைப்புலிகள் அரசியல் அறிவோ, அல்லது தூரநோக்கம் இல்லாதவர்கள் என்ற கருத்துப்பட உங்கள் ஆக்கம் நீண்டு செல்கின்றது.//

    //மக்கள் புரட்சி எல்லாம் எழுத நல்லாத்தான் இருக்கும் நடைமுறையில் சரிவராது….. //

  30. கடந்த ஒரு மாதத்தில் இந்திய அரசின் துணையுடன் நிகழ்ந்த தமிழின அழிப்பின் கொடூரத்தை மறைப்பதற்கும், புலம்பெயர் தமிழர்கள் எமது இரத்த உறவுகளுக்கு மேற்குலகத்தை வற்புறுத்தி,
    ஏதாவது நல்லதைச் செய்து விடவேண்டுமெனத் துடிக்கும் இவ்வேளையில் அனைவரது மனநிலமையையும் பாழ்படுத்தவுமே இந்த நேரத்தில் இக்கட்டுரை உதவும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் சதியைப்பற்றி எழுதவதென்றால் இதைவிட அருமையான கருத்துக்களுடன் கட்டுரை எழுதலாம்.

  31. Ezham vidiyum. Vizhunda adiyaiyellam thamizhan unarvugalil vangivaithirukiram. Adi peeritezhum. Viduthalai vidaigal mulaikamal povathilai. Chidambarathin mugathirku nere vanda seruppu congress sarithirathil thavaramal vizhum. Thamizhargal parkathan pogirom.

  32. we never ever give up our fight for home land we will back soon that day sri lanka and indian raw will know about us. MR.rajiv forces killed morethan 4000tamils and raped more than 1000 tamil womens so he deserve death. but india(north) is a back stubing cowrds they never ever fight face to face because they learned a good lesson from tigers in Jaffna university we tell all those who wrk for cowards u have will ashame your self very soon.

  33. Yes offcourse we can accept that prabakaran is a pacist, But it is all over when the other fighters was accept the un meaningful agreement between rajeev and jeyawardana. So,I will not accept it now. And coming to the mater that tigers does not have the long way of political planning and the basics. When the developed indian tamils does not have it, Then how we can expect that it from the tiger who fights with out international support. I meaning that Why the indian tamil leaders like kalaingar, vaiko, nedumaran,did not try to get support from the countrys like russia,cuba, vietnam, northkorea. We cannot go for china because it is war for subcontinent that the bullshit china will speak communism which they are not at all following now. But,when One affected people is fighting with enemies, there getting support from other peoples And the responsibilities is his brothers, But here our leaders were just shouting with out taking a glass of வாட்டர் அண்ட் some one was taking who knows my silent அண்ட் inner pain.

Leave a Reply to pligg.com பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க