privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

-

மகஇக வின் அறிக்கை மீது இரயாகரன் இரண்டு பதிவுகள் எழுதிவிட்டார். அறிக்கையை வரி வரியாகப் பிய்த்துப் போட்டு எதிர்வாதம் செய்வதாகவும், வாக்கியங்களுக்கு தவறான பொருள் கற்பித்து வியாக்கியானம் செய்வதாகவுமே அவரது பதில் அமைந்திருக்கிறது. தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக இல்லை. இணையத்தில் விவாதம் நடத்துவது அரட்டைக்கும், அவதூறுக்கும் பயன்படுமே தவிர குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை பயன்படாது என்பதனாலேயே ம.க.இ.க ஒரு பகிரங்க விசாரணையை முன்மொழிந்தது.  நேரடி விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார். அதனை மறைப்பதற்காக வளைத்து வளைத்து எழுதுகிறார்.

“ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா.நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான பகிரங்க விசாரணைக்குத் தயார் என்கின்றனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை.

குற்றம் சாட்டிய இரயாகரன் அதனை நிரூபிக்கத் தயாராக இல்லை. “சம்பவம் உண்மை. அவர்களே அதை ஏதோ ஒரு வகையில் ஓத்துக்கொள்கின்றனர்” என்று மிக அலட்சியமாகப் பேசுகிறார். பிரச்சினையை தீர்ப்பதற்கு ம.க.இ.க முன்வைத்திருக்கும் இந்த வழிமுறையை குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற வழி, என்றும் “எல்லா சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்கும் முயற்சி” என்றும் சாடுகிறார்.

இப்பிரச்சினையில் குற்றம் சாட்டியவரும், பிறகு குறுக்கு விசாரணை நடத்தியவரும், தீர்ப்பு வழங்கியவரும் ரயாகரன்தான். ம.க.இ.க  வழங்கியிருப்பது தீர்ப்பு அல்ல. பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் குற்றமிழைத்தவரைக் கண்டறிவதற்குமான ஒரு வழிமுறை – அவ்வளவே. “இருதரப்பும் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு நடுநிலையாளர் இந்த விசாரணையை நடத்தட்டும்” என்று ம.க.இ.க வின் அறிக்கை தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறது.

இது இந்தப் பிரச்சினையை ஒட்டி நாங்கள் கண்டுபிடித்திருக்கும் வழிமுறையும் அல்ல. எமது அமைப்புத் தோழர் ஒருவர் தவறிழைத்திருப்பதாக ஊர்மக்கள் யாரேனும் குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்டவர்களை நேரில் வைத்து பலர் முன்னிலையில்தான் விசாரிக்கிறோம். அதே வழிமுறையைத்தான் இப்பிரச்சினையிலும் முன்மொழிந்திருக்கிறோம். இது இரயாகரனுக்காகவோ, நாவலனுக்காகவோ பிரத்தியேகமாகத் உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல.

“அத்வானி தலைமையில் இந்து பாசிட்டுகள்  (மசூதியை) இடித்தனர் என்பதை, அதற்கு எதிராக போராடும் மக்கள் நிறுவ வேண்டும் என்று கோருவது போன்றது இந்த விடையம்” என்று கூறி ம.க.இ.க முன்வைக்கும் வழிமுறையை ரயாகரன் நக்கலடிக்கிறார். அவருடைய பாணியிலேயே பதில் சொல்கிறோம். அத்வானியின் குற்றத்தை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றனர். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல்,  அத்வானிதான் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பி ஓடி ஒளிகிறார். இது ரயாகரனுக்கு தெரியாது போலும்!

இரயாகரன் முன்வைக்கும் வழிமுறை என்ன? ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சாட்டி, அறிக்கை – மறுப்பறிக்கை விட்டு அரசியல் நடத்தும் ஓட்டுக்கட்சிகளைப் போல இணையத்தில் அறிக்கைப் போர், அக்கப்போர் நடத்த அவர் அழைக்கிறார். பிரச்சினையை நேரில் விசாரித்து முடிவுக்கு வருவோம் என்று சொன்னவுடனேயே, தன்னுடைய குற்றச்சாட்டை “அரசியல் ரீதியாகவும் எடுக்கலாம், ஊடகவியல் சார்ந்ததாகவும் எடுக்கலாம்” என்று விளக்கமளித்து குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கூச்சமே இல்லாமல் நழுவுகிறார்.

சென்ற மாதம் தில்லை தீட்சிதர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் குற்றவழக்கின் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள்ளே நடைபெற்ற ஒரு மர்மமான மரணம் குறித்து சிதம்பரத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் வாய்மொழியாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்களிடம் தெரிவித்தார். அதேபோல, சிதம்பரம் நகரத்தின் நக்கீரன் நிருபர் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நடைபெறும் காமக்களியாட்டங்கள் குறித்து பத்திரிகையில் அம்பலப்படுத்தியிருந்தார். ஆனால் இவை குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசு மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக ( sworn affidavit ) தாக்கல் செய்து, ஒரு சாட்சியமாக முன் நிற்குமாறு அவர்களைக் கோரினோம். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தனர். அதன் விளைவாக தற்போது தீட்சிதர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

“எதற்கு வம்பு” என்று அவர்கள் கருதியிருந்தாலோ, “வழக்கு வாய்தா என்று கோர்ட்டுக்கும் போலீசு நிலையத்துக்கும் அலைய வேண்டுமே” என்று நினைத்திருந்தாலோ இது நடந்திருக்காது. தான் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, ஒரு போலி கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரும், ஒரு முதலாளித்துவ பரபரப்பு பத்திரிகையின் நிருபரும் கொண்டிருக்கும் தார்மீகப் பொறுப்புணர்ச்சி இரயாகரனிடம் இருக்கிறதா?

சம்பவம் குறித்து அவர் அளிக்கின்ற வியாக்கியானத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம். அவர் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமாம். அவர் கேட்கும் ஆவணங்களையெல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்புறம் அவர் கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமாம். -இதுதான் ரயாகரன் முன்வைக்கும் வழிமுறை. தமிழரங்கத்தையும் ரயாகரனையும் அத்தகையதொரு சர்வதேச நீதிமன்றமாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்கி விடலாம். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷையே உலகம் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லையே!

குற்றம் சாட்டுபவராகவும், குறுக்கு விசாரணை செய்யும் வக்கீலாகவும், பிறகு நீதிபதியாகவும் ரயாகரனே இருக்க விரும்புகிறார். இப்பிரச்சினை குறித்து 2.9.2010 அன்று ரயாகரன் முதன்முதலாக எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பபையும், துவக்க வரிகளளையும் கீழே தருகிறோம் :

இந்தியப் போலீசுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார்.”

இதற்குப் பெயர் கிரிமினல் குற்றச்சாட்டா, அல்லது அரசியல் விமரிசனமா? இந்தக் கிரிமினல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும் நேரில் வருமாறு அழைத்தால்,  இதனை “அரசியல் ரீதியாக எப்படி பார்த்தல் என்பதில் வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக விளக்கலாம்” என்று கூறி தப்பிக்கிறார் ரயாகரன். இதைவிட நாணயமற்ற பேச்சை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு மனிதன், அவன் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு வெங்காயவாதியாக இருக்கட்டும், அவனைத் “திருடன்” என்று கூறுவதும், ஒரு பெண்ணை “வேசி” என்று தூற்றுவதும் அரசியல் விமரிசனங்களா? மார்க்சிய லெனினியத்தில் ரயாகரன் அளவுக்கு எமக்கு ஆழ்ந்த புலமை இல்லாததால் இதனைக் கிரிமினல் குற்றச்சாட்டு என்று புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் குற்றம் சாட்டுபவர் விசாரணைக்கு வந்து தனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

நாவலன், எழிலன் குறித்த எங்கள் மதிப்பீடு என்னவாக இருந்தாலும், இந்த விசாரணை, நடுநிலையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதனால்தான் “பகிரங்க விசாரணை” என்ற வழிமுறையை ம.க.இ.க முன்வைத்தது. ஆனால் இதையே ஒரு குற்றமாக்கி, ம.க.இ.கவுக்கும் உள்நோக்கம் கற்பிக்கிறார் ரயாகரன்.

” புலிகள் பற்றிய எம் பார்வையும், அதை விமர்சனம் செய்யும் முறையும் தவறானது என்ற அரசியல் கண்ணோட்டம் தான், தீர்மானகரமாக எமக்கு எதிரான ம.க.இ.க.வின் நிலையாக மாறுகின்றது என்று கருதி வருகின்றோம். அனைத்தும் அரசியல் என்ற வகையில், இந்த விசாரணையும் தற்செயலானதல்ல”

“புலிகள் பற்றிய பார்வையில் அவருக்கும் ம.க.இ.க வுக்கும் கருத்து வேறுபாடு” என்று இரயாகரன் கூறுவதற்கும், தற்போது நாவலன் உள்ளிட்டோர் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கும் என்ன தொடர்பு? அரசியல் ரீதியான கருத்து வேறுபாட்டை கணக்குத் தீர்த்துக் கொள்ளத்தான் விசாரணை என்ற ஆலோசனையை (அல்லது சூழ்ச்சியை) முன்வைத்திருப்பதாக இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறார் ரயாகரன். அல்லது அவருடைய கருத்தின்படி ம.க.இ.க புலி ஆதரவு என்பதால், புலி ஆதரவாளர்களைத் தப்பிக்க வைக்க ம.க.இ.க தந்திரம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இதுதான் அவரது கூற்றின் பொருள்.  பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேர்மையானதொரு வழிமுறையை முன்வைத்திருக்கும் ஒரு புரட்சிகர அமைப்பை இதைவிடக் கேவலமான முறையில் யாரேனும் இழிவு படுத்த முடியுமா?

இத்தனையும் சொல்லியதற்குப் பிறகு, இந்தியா வருவதில் தனக்கு உள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றி அவர் எதற்காக விளக்கவேண்டும்? பகிரங்க விசாரணை என்பதை, “குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ம.க.இ.க வின் சதித்திட்டம்” என்பதாகச் சித்தரித்து, “வரமுடியாது” என்று நிலை எடுத்தவர் “விசா இல்லாததால் வர இயலாத நிலை”, “கைது செய்யப்படும் அபாயம்” ஆகியவை பற்றியெல்லாம் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும்? அனுதாபம் தேடுவதற்கா? “மரண தண்டனைக்குத் தயார், சிறைத்தண்டனைக்குத் தயார்” என்று நாவலனுக்கு சவால் விட்டு அவர் எழுதியவற்றை ஒருமுறை அவரே மீள வாசித்துப் பார்த்தல் நலம்.

குகநாதனையும், ஜெயபாலனையும், ரயாகரனையும் விருந்துக்கா வருந்தி அழைக்கிறோம்? அல்லது ம.க.இ.க வுக்கு வேறு வேலை இல்லையா? இணையத்தில் இக்குற்றச்சாட்டை முதன்முதலில் எழுப்பியவர் குகநாதன் அல்ல, ரயாகரன். அவருடைய வார்த்தைகளையே மேற்கோள் காட்டுகிறோம்.

“(குகநாதனை) நான்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதுதான், உங்களை கடத்தியதாக கூறுகின்றனரே யார் என்று கேட்கின்றோம். அப்படி யாரும் கடத்தவில்லை என்றதுடன், இது தனிப்பட்ட விவகாரம் என்றும், இதை எழுதுவதை தான் விரும்பவில்லை என்றார். நாம் எழுத உள்ளதை தெளிவுபடுத்தியும், இதில் நடந்தவற்றை பற்றியும் உரையாடினோம்”

இவ்வாறு தன்னுடைய சொந்த “முயற்சி”யில் நாவலன், செழியன், எழிலன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை எழுப்பியவர் ரயாகரன். குகநாதனைத் தேடிப்பிடித்து தனது குற்றச்சாட்டுக்கு விவரம் திரட்டியவர் ரயாகரன். எனவேதான் குகநாதனை அழைத்து வருவதும் ரயாகரனின் பொறுப்பு என்று கூறுகிறோம்.

தான் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்போ, நேர்மையோ இரயாகரனுக்கு இல்லை. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட “புனிதத் திருஉரு” வாக அவர் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதையே அவரது வாதங்கள் காட்டுகின்றன. அவர் மீது மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்த பல தோழர்கள் மத்தியிலும்கூட அவர் மதிப்பிழந்து வருகிறார். ஒரு அமைப்பு என்பது பல்லாயிரம் தோழர்களைக் கொண்டது என்ற மதிப்போ, மக்களுக்குப் பொறுப்பாக இருப்பது என்ற கம்யூனிஸ்டுக்குரிய பணிவோ அவரிடம் இல்லை. சுயபரிசீலனை அற்ற தன்னகங்காரமும், ஆணவமுமே அவரது பதில் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

பணத்தைப் பறிகொடுத்ததாகக் கூறும் குகநாதன், ஊடக தருமம் குறித்து பெரும் கவலை வெளியிட்ட “தேசம் நெற்” ஜெயபாலன் ஆகியோரிடமிருந்து எமக்கு எவ்வித பதிலும் வரவில்லை.

அதே நேரத்தில் “வீடியோவைக் கொடு, ஆடியோவைக் கொடு” என்று பலர் பின்னூட்டமிடுகிறார்கள். “அவை தங்கள் தரப்பு நியாயத்தை நிறுவுவதற்கான ஆதாரங்கள்” என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்து. விசாரணையின் போது அதனை அவர்கள் வெளியிடலாம். குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !

“விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம்” என்று ம.க.இ.க வெளிப்படையாக பொறுப்பேற்றுக் கொண்டபின்னரும், குற்றம் சாட்டும் இரயாகரன் நழுவுவதும், மற்றவர்கள் மவுனம் சாதிப்பதும், அவர்கள் சார்பில் சிலர் அவதூறாகப் பின்னூட்டம் போடுவதும், இந்த மொத்த விவகாரம் குறித்தும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இரயாகரனிடம் பதில்களும் அவர் பதிலளிக்கும் முறையும் அவரிடம் நேர்மை இல்லை என்பதையே காட்டுகின்றன. ம.க.இ.க வின் பத்திரிகைகளையும், ஒலி, ஒளித்தகடுகளையும் புலத்திலும் இணையத்திலும் தான் எடுத்துச் சென்றதையும், நாவலன் “திடீர் மார்க்சியவாதி” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கமென்ன? அவர் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது முதலாளித்துவ ஜனநாயகவாதியாக இருக்கட்டும், அதுவா பிரச்சினை?

விசாரணை என்று முன்மொழிந்தவுடனே, “குற்றவாளிகளைத் தப்பவைக்க ம.க.இ.க முயற்சிக்கிறது” என்று முத்திரை குத்துகிறார் ரயாகரன். அவர் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதற்கே வேறு மறைவான நோக்கங்கள் இருக்கின்றனவோ என்ற வலுவான சந்தேகத்தைத்தான் அவரது அணுகுமுறை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து அவர் நடத்தியிருக்கும் விசாரணை, ம.க.இ.க வுக்கு அவர் அளித்திருக்கும் பதில் ஆகியவற்றிலிருந்து அவருடைய மனோபாவம் குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. நாவலனுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு பற்றிக் கேள்விப்பட்டவுடனே, “ஆகா கிடைத்தது வாய்ப்பு” என்று அவர் மகிழ்ந்திருக்கிறார். குகநாதனின் யோக்கியதை என்ன என்பது பற்றிக் கூடக் கவலைப் படாமல் அவரைத் தேடிப்பிடித்து விவரம் கேட்டு, “கடத்தல், தரகுவேலை, மாமாவேலை, கட்டப்பஞ்சாயத்து” என்று எழுதிவிட்டார். “குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரலாம் -வாருங்கள்” என்று அழைத்தால் ஓடி ஒளிகிறார்.

விவகாரம் இத்தனை தூரம் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்த குற்றத்துக்காக நாவலன், எழிலன், செழியன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கோரவேயில்லை. அது அவரது நோக்கமும் அல்ல.  அவர் கேட்பது தன்னுடைய சந்நிதியில் ஒரு சுயவிமரிசனம். ஒரு மழுப்பலான சுயவிமரிசனத்தை அவர்கள் வெளியிட்டிருந்தாலும், உடனே அதனைப் “பெருந்தன்மையுடன்” ரயாகரன் அங்கீகரித்திருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள் சுயவிமரிசனம் செய்து கொள்ள மறுத்திருந்தால் புலம்பெயர் உலகத்தின் புகழ்பெற்ற குழாயடிச்சண்டை வரலாற்றில், இன்னொரு அத்தியாயமாக இது சேர்ந்திருக்கும்.

ம.க.இ.க இப்பிரச்சினையில் நுழைந்து இதனை ஒரு முடிவை நோக்கித் தள்ளும் என்று ரயாகரன் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால்தான் தான் பின்வாங்குவதை மறைக்கும் பொருட்டு, “ம.க.இ.க குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறது” என்று அவதூறு செய்கிறார். “நாங்கள் சொல்வதில் நம்பிக்கையில்லையா? எங்களை பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறீர்களே” என்று நாவலனோ அருள் எழிலனோ, அருள் செழியனோ எங்களிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு கேட்கவில்லை.

ஆனால் அவர்களைக் காட்டிலும் நெடுநாளாக எம்முடன் தொடர்பில் இருப்பவரும், ம.க.இ.க வின் அரசியலில் உடன்பாடு இருப்பதாகக் கூறுபவருமான ரயாகரன், அவருக்கு உவப்பில்லாத ஒரு வழிமுறையை நாங்கள் முன்வைத்தவுடனே, குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் கூறி, ம.க.இ.க வின் மீது எதிர்க்குற்றம் சாட்டுகிறார். அரசியல் உள்நோக்கமும் கற்பிக்கிறார்.

கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. அந்த வகையில் ரயாகரன் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவே.

மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.  நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !! | வினவு!…

    கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது….

  2. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: @kavi_rt பொதுவில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைதான்… !) http://bit.ly/blpjzp 2) http://bit.ly/d4TIdK […]

  3. இராயகரன் குறித்த மதிப்பீடு மிகச் சரியானதே. ”அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்பதும் சரியானதே. களத்தில் நின்று போராடுபவர்களை சகட்டு மேனிக்கு இணையத்தில் எழுதித்தள்ளும் இராயாகரன் போன்றோறின் அரகியல் சரியா தவறா என்பதை அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே இவர்களின் யோக்கியதையை இணைய பதிவர்களுக்கு புரியவைக்க முடியும். மற்றபடி இவரைப்பற்றிய விவாதத்தை இணையத்தோடு நிறுத்திக்கொள்வது போதுமானது. ஏற்கனவே ம.க.இ.க இராயகரனோடு தொடர்பு வைத்திருந்ததினால் ”அவர் நல்லவர் போலும்” என்ற கருத்தை பலர் வைத்துள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஊரான்.

  4. என்னப்பா.. நீங்களே ஆடிகல் போட்டு கொமென்டையும் அடிக்கிரீர்கள். சும்ம கண்டதையெல்லாம் விமர்சிப்பதை விட்டுவிட்டு, விடயத்தை சற்று ஆழமாக ஆரயந்தபின் உங்களது ஆக்கங்களை வெப்தளத்தில் பப்லிஷ் பன்னுங்கோ. இல்லாட்டி இப்படித்தான் கொடுத்ததெல்லாம் பின்னால வாங்கவேண்டிவரும்.
    நன்றி

  5. இராயாகரனின் பதிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிவது ஒன்று தான்.. அவர் தன்னை தானே ஏதோ பெரிய ஹீரோ போல நினைத்துக் கொண்டு பதிவிடுகிறார். ஏதோ ம.க.இ.க வே இவரது ஆதரவுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதாக வெளியே காட்டிக் கொள்கிறார்.

    இரயாகரன் ஒரு வறட்டு மார்க்சியவாதி என்பது ஏற்கனவே தெரிந்ததே .. ஆனால் ஒரு நேர்மையற்ற பிழைப்புவாதி என்பதை அவரே தமது பதிவு மூலம் தற்போது வெளிக்காட்டியுள்ளார்.

    ம.க.இ.க வின் முடிவு மிகச் சரியானது. இரயாகரன் போன்ற ’சார்ஸ்’ கிருமியிடம் இருந்து விலகி இருப்பது நன்று.

  6. இந்த கட்டுரைக்கு ரயாவிடமிருந்து வார்த்தை சவடால்களில், அவதூறுகளில்…எத்தனை கட்டுரைகள் வரிசையாக எழுதி தள்ளப்போகிறாரோ!நினைத்தாலே நடுங்குகிறது.

  7. இன்னுமா இந்த ஊர் என்னை நம்புது

    புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கின்றது. ஆனால் அக்கடடுரைகளில் அவர்களின் பக்கத்து, நியாயமும் நேர்மையும் தர்க்க ரீதியாக இருந்திருக்கின்றது. ஆனால் குகநாதன் கடத்தல் விவகாரத்தில் அவர்கள் தீர்ப்பை மாற்றிச் சொல்லும் நாட்டாமைகளாக ஒரு அறிக்கை எழுதியிருப்பதனை வாசித்த போது இவ்வளவு காலமும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் மண்ணாகிப் போய் விட்டது. இந்த அறிக்கை எழுதுவதற்காக தேசம் நெற்றினை அடிக்கடி பார்த்திதிருப்பார்களோ?. ஏனெனில் ம க இ க இன் வினவில் வந்த அறிக்கை தேசம் நெற்றில் வெளிவரும் கட்டுரைகள் போல் வந்திருக்கின்றது.

    இந்த பிரச்சினையில் குகநாதன் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறும் ரயாகரன் என்று அறிக்கை சொல்கிறது. குகநாதன் தரப்பில் நியாயமிருப்பதாக ரயா எங்கே எழுதியிருந்தார் என ரயாவின் கட்டுரையை மறுபடியும் ஒருமுறை படித்து விட்டு சொல்லட்டும். குகநாதன் கடத்தப்பட்டார் என்றே ரயாவின் கட்டுரை சொல்கின்றது. ஏங்களது நாடுகளில் பொலீஸ் தான் ரவுடிகளை மிஞ்சிய ரவுடிகள் என்பதும் தமிழ்நாட்டுப் பொலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதும் ம க இ க விற்கு என்ன தெரியாத விடயமா?. சங்கராச்சாரியை கைது செய்த பிரேம்குமார் என்ற பொலீசு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நல்லகாமனுக்கு செய்த கொடுமைகளை பக்கம் பக்கமாக புதிய ஜனநாயகத்தில் படித்து இருக்கிறேன்.

    குகநாதன் சொல்வதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஜயம் கூட ரயாவிற்கு ஏற்பட்டதாக தெரியவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகின்றது. குகநாதன் உத்தமபுத்திரன் சத்தியவான் என்று எங்காவது ரயா எழுதியிருக்கின்றாரா?. ம க இ க திடீர் நம்பிக்கை வைத்திருக்கும் அருட்செழியன் கொடுத்த புகாரின் பேரில், தர்மபுரியில் தோழர்களைக் கொலை செய்த தேவாரம் போன்ற காவல் நாய்களை கொண்டுள்ள தமிழ் நாட்டுப் பொலிசாரால் குகநாதன் கைது செய்யப்பட்டார். அவர்களின் கட்டப்பஞ்சாயத்தினால் பணம் கொடுத்து வழக்கு ஏதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டார். இதில் அருள்எழிலன் நாவலன் பங்குகள் என்ன என்பதனைத் தான் ரயா கேட்டிருந்தார். அருள்செழியனுக்கும் குகநாதனிற்குமான பிரச்சினைக்கோ யார் உண்மை சொல்கின்றனர் என்ற ஆய்வுக்கோ ரயா போகவில்லை. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கட்டப்பஞ்சாயத்தில் ஏன் நாவலன் தலையிட வேண்டும். அது தான் இங்கு கேட்கப்படும் கேள்வி.

    அருள்எழிலன் காவல் நிலையத்தில் நிற்கிறார் சரியாக அதேநேரத்தில் நாவலன் தற்செயலாக தொலைபேசியில் அழைக்கிறார். அருள்எழிலன் பேசிவிட்டு “இந்தாங்க பக்கத்திலே நம்ம மச்சான் ஒருத்தர் நிற்கிறார். அவன் கிட்டேயும் பேசுங்க” என்பது மாதிரி தடுப்புக்காவலில் இருக்கும் குகநாதனிடம் பேசக் கொடுக்கின்றார். தடுப்புக் கைதியிடம் எதற்காக அருள்எழிலன் நாவலனை பேசச் சொல்ல வேண்டும்.?. இலங்கை அரசின் கைக் கூலி குகநாதன் என்று இன்று எழுதித்தள்ளும் நாவலன் எதற்காக அவரிடம் பேச வேண்டும்?. ஒரு அப்பாவி பொலிஸின் கட்டைப்பஞ்சாயத்தில் சிக்கியிருந்தால் அவரை காப்பாற்றுவதற்காக பேசியிருந்தால் நல்ல முயற்சி என்று சொல்லலாம். இலங்கை அரசின் கைக் கூலி பலரிடம் மோசடி செய்த பேர்வழியான குகநாதனிடம் எதற்காக பேச வேண்டும்?. இன்றைக்கு தனக்கும் நாவலனிற்கும் இச் சம்பவத்துடன் தொடர்பில்லை என்று விளக்கம் சொல்லும் அருள்எழிலன் எதற்காக காவல் நிலையம் செல்ல வேண்டும். ஒரு தடுப்புக் கைதியிடம் அந்த புகாரிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லாத ழூன்றாவது பேர்வழி பேசமுடியுமா?. போராட்டங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லப்பட்டதும் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கிடைக்காமல் மயங்கி விழுந்ததும் தோழர்களிற்கு இந் நேரத்தில் ஞாபகம் வரவில்லையா?.

    புலிகள் பற்றிய அபிப்பிராயத்திற்கும் அருள்எழிலன் நேர்மைக்கம் சின்னப்பிள்ளைத்தனமாக முடிச்சு போடக் கூடாது என்று அறிவுரை கூறப்படுகின்றது. அருள்எழிலன் ஒரு தொழில்முறை பத்திரிக்கையாளன். தமிழ் நாட்டில் உள்ள ஒரு கைப்பிள்ளை புலிகளை ஆதரித்தார் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஜனநாயக மறுப்பு பாசிசம் கடைசி நேரத்தில் கூட தங்களின் பாதுகாப்பிற்காக மக்களை பலி கொடுத்தமை போன்றவைகளை செய்த புலிகளை மனச் சாட்சியுள்ள எந்த மனிதனால் ஏற்றக் கொள்ள முடியும். ஈழமக்களை கொலை செய்த ராஜீவின் மரணத்தின் போது தமிழ் நாட்டில் வாழ்ந்த ஈழமக்களை காங்கிரஸ் அ.தி.மு.க குண்டர்களிடமிருந்து காப்பாற்றிய ம.க.இ.க மேல் கிட்டு பழி போட்டதனை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை.

    நல்லவர் வல்லவர் என்று ம.க.இ.க வால் சொல்லப்படும் அருள்எழிலன் எழுதுகின்றார் தனது நண்பர் ஒருவர் சொல்கின்றாராம் ரயா மனநிலை சரியில்லாதவர் என்று. மனநிலை சரியில்லாத ஒருவர் தானா ம.க.இ.க வின் அரசியலை இன்று வரை ஏற்று வந்திருக்கின்றார்?. மனநிலை சரியில்லாத ஒருவர் எழுதியதற்கு ஏன் அருள்எழிலன் வேறு வேலை இல்லாமல் காலத்தை விரயம் செய்து மறுமொழி எழுத வேண்டும். அவரின் இன்னொரு நண்பர் சொன்னாராம் ரயா கட்டுரை எழுதி விட்டு தானே பத்து பின்னோட்டங்களையும் எழுதி விடுவார் என்று. ரயாவின் கட்டுரைக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள வருவதில்லை. அப்படி வந்தாலும் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. ம.க.இ.க வின் நாட்டாமை தீர்ப்பு பற்றிய கட்டுரைக்கு தான் ஒருவரிற்கு அருள் வந்து சாமியாடி மணி அடித்து பின்னூட்ட மழை பொழிகின்றார்.

    மருதையனின் சூரியோதயம் வானொலி நிகழ்ச்சியின் போது நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன என நாவலன் மருதையனை சந்தோசப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பொய்க் கணக்கு சொன்னார். புpன்பு வினவுதளத்தில் இதைப் பற்றி கேட்ட போது நேர்மையாக ஒத்துக் கொள்ளாமல் தோழர்கள் கூறியதைத் தான் நான் சொன்னேன் என்று மேலும் ஒரு பொய் கூறி தன் சக தோழர்களின் மேல் பழியினைப் போட்டார். இந்த சின்ன விடயத்திற்கே பொய் சொல்பவரின் வாக்குமூலத்தை நம்பித் தான் ம.க.இ.க தீர்ப்பு எழுதியிருக்கின்றது.

    தான் தனிப்பட்ட தாக்குதல்களில்; ஈடுபடுவதில்லை என்று அகிம்சை பேசும் நாவலன், ரயா வங்கிக் கொள்ளை காசை மடக்கி விட்டார் என்று அசோக் எழுதிய அவதூற்றினை எப்படி இனியொருவில் வெளியிட்டார். NLFT – PLFT பிரிந்த போது பணம் ஆயுதங்கள் என்பன அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டன. ஈழப் போராட்ட இயக்கங்களின் ஒரே ஒரு ஜனநாயக பூர்வமான பிரிவு இது என்றே கூறலாம். இச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரயா காசை களவாடி இருந்தால் ஏன் ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. NLFT இன் நிதிப் பொறுப்பாளராக இருந்தவர் இனியொருவுடன் தொடர்பில் தானே இருக்கின்றார். அவரிடம் இது பற்றி அறிய முடியும் என கருதுகின்றேன். சமர் பத்திரிக்கை பிரான்ஸிலிருந்து வந்தபோது நாவலனும் ஆசிரியர் குழுவில் ரயாவுடன் இருந்தவர் தானே. அப்போது இந்தக் கேள்வி ஏன் நாவலனிற்கு எழவில்லை?.

    குகநாதன் பிரச்சினையில் நாவலன் அசோக் இருவரும் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள். குகநாதன் இலங்கை அரசின் கைக்கூலி என்பதால் தன் மீது தேசம்நெற்றில் அவதுர்று செய்துள்ளார் என நாவலன் சொல்கின்றார். அசோக்கும் தமிழ் தேசியவாதி இலங்கை அரசினை எதிர்ப்பவர். ஏன் அவரை குகநாதன் அவதூறு செய்யவில்லை?. முன்னர் பின்னர் தெரியாத நாவலனின் மீது மட்டும் குகநாதன் பழி சொல்லும் காரணங்கள் தான் என்ன?.

    ரயாவும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர் என்று ஒரு வசனம் வருகின்றது. ரயா இடதுசாரி நிலையிலிருந்து கேட்ட கேள்விக்கும் ஜெயபாலன் தன்னுடைய இலங்கை அரசு சார்பு நிலையிலிருந்து கேட்கும் கேள்விகளிற்கும் ஏன் முடிச்சுப் போடுகின்றீர்கள். ரயாவும் ஜெயபாலனும் கூட்டாக இந்த கட்டுரைகளை எழுதினார்களா?. 2008 இல் நாவலனை அவதூறு செய்த தேசம்நெற்றினை மறுத்து நாவலனிற்கு நற்சான்றிதழ் கொடுத்தீர்கள். நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது. இப்ப என்ன வந்தது என்று கேட்கிறீர்கள். ரயா நாவலனிற்கு சான்றிதழ் கொடுத்தது நாவலனின் இலங்கை அரசிற்கு எதிரான கருத்துக்களிற்காகவே. அரசசார்பு தேசம்நெற் நாவலனை விமர்சிக்க எந்தவிதமான தகுதியும் அற்றது என்பதற்காகவே. ரயா நாவலனை அல்ல மாறாக நாவலன் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டின் சரியான கூறுகளை தூக்கிப் பிடித்திருந்தார்.

    புதிய திசைகள் – ம.க.இ.க இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தினை சீர்குலைப்பதற்காக ரயா முயற்சித்ததாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று ரயா எழுதி இருக்கின்றார். அத்தகைய கருத்து எதனையும் எம்மிடம் நாவலன் கூறியதில்லை என்று எழுதி இருக்கின்றீர்கள். ரயாவும் அதைத் தானே கூறியிருக்கின்றார். ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ரயாவோ அன்றி அவருடன் இணைந்துள்ள தோழர்களோ ம.க.இ.ம் விடம் பேசவில்லை. நாவலன் தான் தன்னிடம் ம.க.இ.க வினர் தங்களிற்கு ஜரோப்பாவிலிருந்து வந்த தொலைபேசியில் இது புலிகளின் பினாமி அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் என எச்சரித்திருந்ததாக கூறியதாக புதியதிசைகள் அமைப்பினரிடம் கூறியதுடன் இது நிச்சயமாக ரயாவாகத்தானிருக்க முடியும் எனவும் கூறியிருந்தார். உங்களிற்கு தெரிந்த புதிய திசைகள் அமைப்பினரிடம் இதைப் பற்றி விசாரிக்கலாம். புதிய ஜனநாயக மக்கள் முன்னணியையும் புதிய திசைகளையும் எதிர்நிலைகளில் வைத்திருப்பதற்கான நாவலனின் கட்டுக்கதைகள் தாம் இவை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உங்கள் மூலமே இது வெளி வந்து விட்டது.

    ரயாகரனிற்கு அரசியல் இல்லை. தனிமனித தாக்குதல்கள் தான் தெரியும் என்கின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை போன்றதொரு கட்டுரையை ஊஐயு இனாலும் எழுத முடியும். ஆனால் எழுதுபவர்களின் அரசியல் நேர்மையும் தனிப்பட்ட நேர்மையும் தான் நாங்கள் வேண்டுவது. ஈழப் போராட்ட வரலாற்றில் விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் என்பன இல்லாமல் போனதால் தான் எம் மக்கள் ஆயிரக்கணக்கில் இயக்கங்களினால்; படுகொலைகளுக்கு உள்ளாகினர்.

    ரயாவுடன் NLFT இல் இருந்தவர்கள் சமர் பத்திரிக்கையில் இருந்தவர்கள் இன்றைக்கும் அவருடன் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். பல புதியவர்களும் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆனால் நாவலனுடன் TELO இல் இருந்தவர்கள் சமரில் இருந்தவர்கள் எவரும் இன்று கூட இல்லை. இணையத்தள எழுத்துக்களில் இருந்து ஒருவரை மதிப்பிட முடியாது. நடைமுறை இல்லாத தத்துவம் படுகுழியில் தள்ளும் என்பது ம.க.இ.க வினரிற்கு தெரியாதா?. ம.க.இ.க வுடன் தொடர்பில் இருக்கும் ஈழத்தினை சேர்ந்த தோழர்களிடம் நாவலனின் தனிப்பட்ட நேர்மையையும் நடைமுறையையும் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7506:2010-10-06-10-18-19&catid=75:2008-05-01-11-45-16

  8. “நான் கிராமத்தை நீங்கினாலும் கிராமம் என்னை விட்டு நீங்க மறுக்கிறது” — VS Naipal மேற்கோள் தான். ஆனாலும் இரயாகரன் விடயத்தில் அழகாகப் பொருந்தி வருகிறது.
    இரயாகரனை விட்டு ம.க.இ.க. விலகினாலும் ம.க.இ.க.வை விட்டு இரயாகரன் “விலக” மாட்டார்.
    உலகப் புரட்சியின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரரிடம் சவால் விடுவதென்ன சாமானிய விடயமா?

  9. இந்த வகையில் எமது போராட்டம் என்பது, உயிர்ப்புள்ள மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பதுதான். மார்க்ஸ் கூறுவது போல் “நமது தத்துவம் ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல, செயலுக்கு வழிகாட்டி அது” இந்த உண்மையை சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் மறுக்கின்றனர். இலங்கையில் மார்க்சியம் பேசும் கூட்டமும், புலத்தில் பிழைப்புவாத சந்தர்ப்பவாத கூட்டமும், மார்க்சியத்தை நடைமுறையற்ற வறட்டு தத்துவமாக்கிவிட்டு, தம்முடன் எம்மை கூடக்கோருகின்றனர். இப்படி கூடினால் பிள்ளையை நாங்கள் பெற முடியும் என்கின்றனர். இதை மறுப்பதையே அவர்கள் “வரட்டுவாதம்”, “தனிநபர் அவதூறு” என்கின்றனர். மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் இருந்து வறட்டு சூத்திரமாகியவர்கள், தங்கள் நடைமுறையை ஏற்காத எம்மை வறட்டுவாதிகள் என்கின்றனர். வர்க்க அரசியலைக் கைவிட்டு பிரமுகமானவர்கள், மக்களை ஏய்த்து பிழைக்கப் போனவர்களுக்கு வெளியில், வர்க்க அரசியலைக் கோரி தனிநபராக போராடியதையே தனிநபர் தாக்குதல் என்கின்றனர். இதையே தன்னை முன்னிலைப்படுத்திய சேறடிப்பு அரசியல் என்கின்றனர். இப்படி கடந்து போன வர்க்கமற்ற அரசியல் சீரழிவில் கொஞ்சி விளையாடிய போக்குகளுக்கு எதிராக போராடியே எமது நிலையை, இன்று முத்திரைகுத்தி புதைக்க முனைகின்றனர். உயிருள்ள மார்க்சியத்தை மீட்க நடத்தும் போராட்டத்தில் இன்று நாம் சந்திப்பது அவதூறு சார்ந்த முத்திரை குத்தல்.

    பி.இரயாகரன்
    06.10.2010

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7507:2010-10-06-165815&catid=322:2010

    • இந்த பின்னூட்டத்தை தோழர் இராயகரன் இடவில்லை என்று சொல்கிறார். இதை யார் இட்டார்கள் என்று தெரியவில்லை. இனியாவது இந்த அக்கப்போர் வேலைகளை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட ஆசாமியிடம் கேட்டுக் கொள்கிறோம்.

  10. வணக்கம் வினவு தோழர்களுக்கு

    பி.இரயாகரன் என்ற பெயரில் போடப்பட்ட பின்னோட்டம் எம்மால் இடப்படவில்லை. இதை உங்கள் கவணத்துக் கொண்டு வருகின்றேன். தவறான நோக்கத்தில் இதை எமக்கு எதிராக பயன்படுத்தும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் கவணத்தில் கொள்ளவும்;

    பி.இரயாகரன்
    06.10.2010

    • ரயாகரனுக்கு,

      கட்டுரை தலைப்பை பார்த்தவுடன் தங்களது தவறுகளுக்கு சுயவிமர்சனம் செய்து கொள்ளப் போகின்றீர்கள் போலும் என எதிர்பார்த்து வந்து உங்களது தளத்தில் படித்தேன். ஆனால் அங்கே என்னை விமர்சனம் செய்பவர்கள் யோக்யதை என்ன தெரியுமா என விளக்குவதற்கும் அதன் உடனே அமைப்பை உயிரற்ற மார்க்சியத்தை தூக்கி நிற்கும் பிலிஸ்டைன் மனோபாவத்துடனும் இணைத்திருந்த்தை அறிந்தேன். அமைப்பை பற்றிய விமரிசனங்களை கூட நேரடியாக சொல்வதுதான் சரியானதும் கூட ரயா. லெனின் உடைய மேற்கோளை காட்டினால் மாத்திரம் போதாது, அம்மேற்கோள்களை எப்படி எங்கு தவற விட்டார்கள் என சொல்வதில் கூடத்தான் ஒளிந்திருக்கிறது உயிர்ப்புள்ள மார்க்சியம்.

      சதாசர்வ காலமும் யதார்த்தம் என்ற மார்க்சியத்தை தலைமேல் தூக்கி திரியும் தங்களுக்கு சாத்தியம் என்ற சந்தர்ப்பவாதம் பற்றிய அக்கறை புரிகிறது. வர்க்க அரசியல் இலங்கையில் சாத்தியமில்லை என்ற தங்களது அவதானிப்பில் உள்ள சாத்தியமும், இந்தியாவுக்கு வரமுடியாது என்பதில் உள்ள சாத்தியமும் எதார்த்த்த்தை மீறியதா இல்லையா ரயா. வர்க்கப் போராட்டம் அல்லாத ஒன்றை மார்க்சியத்தின் ஒளியில் நின்று உயிரூட்ட வேண்டிய அளவுக்கு வர்க்கப் போராட்டம் இன்மையால் மார்க்சியம் தவித்துப் போய் இருப்பதாக முதலாளி கூட சொல்ல மாட்டான். பிணங்களுக்கு சுவாசம் ஊட்டும் வேலையை அறிவு நாணயம் உள்ளவன் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் மாட்டான் என நம்புகிறேன்.

      முதன்மையான பிரச்சினையாக சந்தர்ப்பவாதம் மற்றும் பிழைப்புவாதம்தான் என தாங்கள் முடிவு செய்த்து யதார்த்த தளத்திலும் சாத்திய தளத்திலும் அடங்காமல் போவது தெரிந்தும் காற்றில் வாள் சுழற்ற கிளம்பிய மர்மமும் புரியவில்லை. சாத்தியம் இதுதான் என முடிவுசெய்த கோழை என்று நான் சொல்ல மாட்டேன். நிரூபிக்கப்படாத வரை குற்றச்சாட்டுகள் வெறும் சாட்டுக்கள் மட்டுமே. நிரூபிக்க தவறினால் அவதூறுதான்.

      தன்னை நோக்கி வரும் விமர்சனத்திற்கு புறநிலையில் மாத்திரமே காரணம் தேடும் சந்தர்ப்பவாதம் உடனே தனிநபர் வாதமாகவும் முனைப்பெடுக்கிறது. தனிநபர்வாதம் முதலாளித்துவத்தின் அடிநாதமாக இருப்பதால் வர்க்க போராட்டத்தை உயிர்த்துடிப்புடன் நடத்த விரும்பும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதி முதலாளி ஒருவன் ஏமாற்றியதை பதிலுக்கு தொழிலாளி பறிக்க முயன்றால் பறிக்கின்ற முறை அடாவடியானது என முதலாளிக்கு ஆதரவாக பேச வருகிறது. இதில் தலையிடாமல் போயிருந்தால்தான் நாவலன் தவறான நபராகி இருப்பார் என்பதை பொதுவான விசாரணைக்கு பார்வையாளராக வரும் எதாவது ஒரு சமானியன் சொல்லி விட்டால் தனது ஆதீனத்திற்கு ஆட்டம் காணுமோ என்ற பயம்தான் இந்தியா வர விடாமல் தடுக்கிறது.

      மரியாதையுடன்
      மணி

    • மேற் கூறிய இடுகையில் எதுவும் இதுவரை தமிழரங்கமோ பி. இரயாகரனோ உதிர்க்காத அல்லது இனியும் தொடர்ந்து உதிர்க்கக் கூசாத சொற்களல்ல.
      எனவே அதில் எச் சொற்கள் அவரதும் அவரது இணையத்தளத்தினதும் நற்பேருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியன என்று பி.இரயாகரன் கூறுவாராயின் நன்று.
      அனுப்பல் முகவரி பெய்யானதாயின், வினவு அதைப் பகிரங்கப் படுத்திப், பிறரும் அறிந்து அதை மறிக்க உதவின் நன்று.

    • தோழர் இராயகரன், மேற்கண்ட உங்கள் பெயரில் வந்துள்ள பின்னூட்டம் உங்கள் கட்டுரையை மேற்கோள் காண்பித்திருப்பதாலும், உங்கள் அவதார் படம் வந்துள்ளதாலும் அது உங்களுடையது என்று நினைத்தோம். இனி கவனத்தில் கொள்கிறோம்.

  11. ரயாகரனுக்கு,

    உயிருள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்களுக்கு பலியிடல் என்ற லெனின், உயிரற்ற மார்க்சியத்தை பொருளாதாரவாதமாக சுருக்கிய சட்டவாத கம்யூனிஸ்டுகளைப் பற்றியும் எழுதி இருக்கிறார். தனிப்புத்தகமாகவும் உள்ளதுதானே.. படித்துப் பாருங்கள் என சொல்ல மாட்டேன். போகுமிடம் தெரிந்திடும் என்பதற்காக இதனை நான் மறைக்கவும் இல்லை.

    அரசியல் பிரச்சினைகளைப் பற்றி தீர்க்கமாக சிந்திக்க திறன்பெறாத தோழர்கள் ஊசாலாட்ட கொள்கையை பிரச்சாரம் செய்ய தொடங்கி விடுவார்கள் என்பது உண்மைதான். நானெல்லாம் சாதி பாராட்டுவதில்லை என சொல்லியபடியே தனது தனித்தன்மையை பிறர் மனம் அவ்வளவாக புண்படாத படி பாதுகாக்கும் பார்ப்பான் பல சமயங்களில் பூணூலை கூட துறப்பது இல்லை. மாறாக தான் இப்போது நடைமுறையில் சாதி பார்க்கிறேனா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். பழைய வரலாற்றை மறக்க சொல்கிறார்கள். தீர்க்கமாக சிந்திக்க மறந்தவர்கள் அல்லது வேண்டுமென்றே மறுப்பவர்கள் அல்லது அவர்களது பழைய நிலைக்காக ஏங்குபவர்கள் பார்ப்பனர்களின் இந்த சூழ்நிலை கைதி என்ற கையாலாக தனத்திற்கு வக்கலாத்து வாங்கி இலவசமாக வாதாடுகிறார்கள்.

    ரயாவும் அதைத்தான் செய்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என எனக்கு தெரியாது. அதில் குகநாதன் ஏமாற்றினாரா என்பது எனக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. எங்க அப்பன் சாதி பாத்து உனக்கு கொடூரம் பண்ணிருந்தா கூட அதுக்கு நான் பொறுப்பு இல்லனு சொல்ற மாதிரி அவரும் பழைய விசயம் இது என மூடி மறைக்கிறார். ஒரு மார்க்சியவாதியோ அல்லது அதன் ஆதரவாளரோ குகநாதனை போலீசு பிடித்து விசாரிக்கிறது என்பதற்காக ஆதரிக்க முடியாது.

    மரியாதையுடன்
    மணி

  12. தோழர் இரயாகரன் விசயத்தில்
    எதுவும் பேசவேண்டாம் என
    நினைத்து இருந்தேன்

    இரயாகரன் புலியினரால் மற்றும்
    ஒட்டு குழுக்களால் தேடப்படும் நபர்
    அவர் எப்படி சென்னை வருவார்
    என கட்சி எதிர்பார்கிறது

    • ““விசா இல்லாததால் வர இயலாத நிலை”, “கைது செய்யப்படும் அபாயம்” ஆகியவை பற்றியெல்லாம் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும்? அனுதாபம் தேடுவதற்கா? “மரண தண்டனைக்குத் தயார், சிறைத்தண்டனைக்குத் தயார்” என்று நாவலனுக்கு சவால் விட்டு அவர் எழுதியவற்றை ஒருமுறை அவரே மீள வாசித்துப் பார்த்தல் நலம்.”

    • தியாகு
      இரயாகரன் தமிழகத்துக்குச் செல்லும் நோக்கத்தை வெளிப்படுத்தாத நிலையில் அவருடைய வீசா பற்றிய சாக்குப் போக்கு விளக்கங்கள் தேவையில்லையே.
      இப்போது புலிகளின் மிரட்டல் இல்லை. இலங்கை ஒட்டுப் படைகளும் தமிழகத்தில் இயங்குவதாகச் சொல்ல முடியாது. அவருக்குப் பதுகாப்பளிக்குமாறு ம.க.இ.க.விடம் கேட்டால் நியாயமாக இருக்கும்.

      • இரயாகரன் பிரபாகரனுடைய படத்தை
        எப்படி வெளியிட்டார் என்பதை அறியவும்
        அவருக்கு சிங்கள அரசில் இருக்கும்
        நபர் யார் என அறியவும் இலங்கை
        அரசுக்கு இரயாகரன் தேவை படுகிறார்

        மற்றும் ஒட்டுகுழுக்கள் புலிகளின்
        ஆதரவாளர்கள் தமிழ் நாட்டில் இல்லை
        என்பது சந்தேகத்துக்குரியது .

        போர் முடிந்தவுடனும் அதற்கு முன்பேவும்
        நிறைய பேர் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து
        இருக்கலாம்

        இதை எல்லாம் கணக்கில் கொண்டு பரிசீலிக்க வேண்டும்

        அதை விடுத்து “உயிரை கொடுக்கவும் தயார்ன்னு சொன்னாரே, கைதாகவும் தயார்
        என சொன்னாரேன்னு பேசுவது ”
        சரியல்ல/ இதைவிடவும் இரயா செய்வதற்கு
        நிறைய வேலைகள் இருக்கின்றன /

        கட்சி இரயா வந்துதான் நிரூபிக்க வேண்டும்
        என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்

        • தியாகு, நீங்களே ம.க.இ.கவை அவதூறு செய்யும் சீர்குலைவுவாதி, இங்கு ஏதோ அபிமானம் உள்ளவர் போல வந்து அபிப்ராயம் சொல்லி நடிப்பது வேடிக்கையாக உள்ளது.

        • தியாகு,

          கட்சி கட்சி ங்குறீங்களே… உங்களுக்கு இப்ப என்ன தான் வேணும்?

      • தியாகு
        குற்றச்சாட்டுக்கட்குத் தன் ஆதாரங்களையாவது அனுப்பத் தயார் என்று ரயாகரன் சொல்லட்டுமே.

        பாரிஸ் “பங்கருக்குள்” பதுங்கியிருக்கும் “உலகப் புரட்சித் தலைவருக்கு” புலி ஆதரவு / இலங்கை அரசுப் பகைவர்களிடமிருந்து பாரிஸ் நகரம் பாதுகாப்புடையதா?

        அவர் அஞ்சுவது தனது பொய்கள் அம்பலமாவதை மட்டுமே!

    • அதைப் பற்றி இரயாகரனே பல்வேறு கதை சொல்கிறார். கட்சிக்கு அறிவுருத்த கட்சியின் ஆதரவாளருக்கு கூட உரிமை உண்டு. ஆனால் மார்க்சிய விரோதியான உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது தியாகு ?..

  13. It is not the first time Raya is doing this kind of things. Whoever it is, If anyone is aktive, anyone is popular, anyone is talking truth, then Raya cannot tolerate them. Specially when they are popular or recognised by others in one or other way. It happened to everybody. Aktivists, journalists, acadamics, artists, poets etc. When will Raya see that none respects the way he behave in political arena? Some say that he is paid by the tigers to stop leftists uniting in one point. That is the only reason he was allowed to `escape`. I never trusted that version, until yesterday, until I read Inioru, Vinavu, tamilcircle. One by one his `comrades` are leaving him. When will he see the truth?

  14. அன்பார்ந்த தோழர்களே
    இங்கே நடக்கும் ரயாகரன் – நாவலன் பற்றிய பிரச்சனையில் ம.க.இ.க நடுநிலை வகிக்க வேண்டும் என விரும்புகிறோம்.ரயாகரன் மற்றவர்களை விமர்சித்து எழுதும் விதம் ஏற்ப்புடையதல்ல.அவரது எழுத்து நடையை அவர் மாற்றினால் நாகரீகமாக இருக்கும்.மற்ற படி அவர் நீண்ட நாள் உங்களுடன் தொடர்பில் இருப்பவர்.
    ஈழ இயக்கங்களில் இருந்த பலர் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல.நாவலன் இப்போ வெப் சைட் ஆரம்பித்துள்ளார் .அவரோடு சேர்ந்து அதை நடாத்துபவர்கள் போன்ற விபரங்களை விசாரித்தால் நலம்.இந்தியாவுக்கு
    கைக்க்கூளிகலாவதர்க்கு
    தயாராய் பலர் இன்றும்
    ரெடியாக இருக்கிறார்கள்.
    அதை விட முக்கியமாக குகநாதன் -செழியன் சகோதரர்கள் பண கொடுக்கல் வாங்கல் என்பது அரசியல் ரீதியானது அல்ல.குகநாதன் ஒரு கிரிமினல்.அவருடன் செழியன் சகோதரர்கள் பணத்தாசையினால் தான் தொடர்பு வைத்தார்கள் என நினைக்கிறேன்.நாவலன் கோஸ்டியையும் எப்படி பட்டவர்கள் என்பதையும் விசாரித்து முடிவுக்கு வர வேண்டுகிறேன் .நாவலன் எனக்கு ஒரு வெறுப்பும் கிடையாது.ராயகரனுக்கும் நல்ல பாடம் படிப்பிக்கவும் வேண்டும்.சும்மா அறுவை .

    • நாவலன் – ரயா பிரச்சினை அரசியல் ரீதியானதுதான். அதில் ஒரு சிறுதொழில் செய்தவனிடம் அவனிடம் வேலை தரும் பெரிய முதலாளி மோசடி செய்துள்ளான். அவனிடம் நியாயமாக அவன் தர வேண்டிய பணத்தை வாங்க வேண்டிய முறையில் வாங்கி உள்ளார்கள். இதைத்தான் ஒரு தொழிற்சங்கமும் தன் தொழிலாள தோழர்களுக்கு செய்யக் கூடியது. பணத்தாசை இல்லாத புத்தர்களுக்காக மாத்திரமே வாதாட ஒரு கம்யூனிச அமைப்பு வர வேண்டுமா என்ன? அவ்வளவு ஏன் இன்று சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது என்ற போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் சிறுகடை முதலாளிகளுடன் இணைந்துதான் போராடுகிறார்கள். அதற்காக அந்த அண்ணாச்சிகளிடம் பணத்தாசை இல்லையென பத்திரம் எழுதி வாங்கி விட்டுதான் போராட்டம் நடத்த வேண்டுமா? அருள் செழியன்-குகா விசயத்தில் நாவலன் தற்செயலாக வந்திருந்தாலும் திட்டமிட்டே வந்திருந்தாலும் அதுதான் சரியான நடைமுறை.

      நீண்டகாலம் தொடர்பில் இருப்பவர் என்பதற்காக விட்டுத்தராமல் இருப்பது என்பது ஒருவகை செண்டிமெண்ட்டுதான். (பிடிக்காத கணவர் அல்லது மனைவியுடன் தொடர்ந்து வாழச்சொல்லிதான் மதம் கூட பிரச்சினைக்குள் வராமலே அறிவுரை கூறுகிறது) அதற்கு உயிர்வாழும் காலமும் குறைவுதானே. மாறாக தோழமை என்பது அரசியல் சித்தாந்த மற்றும் நடைமுறை வேலைகளின் சமூக பங்களிப்பில்தான் அதிகம் நிலைகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்ய முன்வராதவர்கள் நீண்ட காலம் ஒரு மாலெ அமைப்பில் அதன்பின்னும் தொடர்ச்சியாக நீடிக்க முடியாது என்பது அறிவியல்.

      ரயா விசயத்தில் நடுநிலைமை வகிக்க எவராலும் முடியாது. பாட்டாளிவர்க்கத்தின் மிகச்சரியான இந்த நடைமுறைக்கு மக்களை ஒடுக்கும் போலீசு, மனித உரிமை, கட்டைப்பஞ்சாயத்து என திசைதிருப்பி தனது சொந்தப்பகையை அரசியல் மொழியில் பழிதீர்க்கும் இந்த சமூகவிரோத நடவடிக்கையை ஏதோ ஒரு அறுவை என்றெல்லாம் ஒதுக்கமுடியாது. அரசியல் சித்தாந்த நடைமுறையை தன் சொந்த தேவைக்காக பலியிட்டவன் மற்றவர்களையும் அவ்வாறே நோக்கி இயக்கத்தை இழிவுபடுத்துகிறான். குற்றம் சாட்ட முன்வருவதாக நினைத்த ரயா தனது தொடர் கட்டுரைகளால் தானே அம்பலமாகி தனது தன்னை முன்னிறுத்திய இச்செயல்பாட்டின் உக்கிரத்தால் தனிமனித வாத சேறில் வீழ்ந்து அதனை நியாயப்படுத்த பாட்டும் பாடத் துவங்கி விட்டார்.

      மற்றபடி அம்பேத்கர் பெயர் வைத்தவுடன் நடந்த சாதிவெறி மோதலை தவிர்க்க எல்லா பேருந்துக்கும் அரசு பெயரை வைத்த நடுநிலைமை போல, பொருளாதார அளவுகோலை மாத்திரம் நாகரீக சாதி பார்க்கா காலத்தில் பார்த்துதான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நடுநிலைமையும், உமர் அப்துல்லாவின் காசுமீரத்துக்கான திடீர் போராளி வேச நடுநிலையும் உங்களது நடுநிலையும் ஒத்து இருக்கிறது.

      • பின் குறிப்பு:
        நடுநிலை என்று உலகில் எதுவும் இல்லை. நேர்மை என்றும் நெறி என்றும் உள்ளன.

    • இருவரில் யாரை நம்புகிறோம் என்று ம.க.இ.க. எங்காவது சொல்லியுள்ளதா?
      ரயாகரன் பற்றிய விமர்சனம் அவர் ம.க.இ.க. உட்படப் பலர் பற்றியும் பரப்பும் அவதூறு தொடர்பானது.
      இரண்டு விடயங்களையும் போட்டுக் குழப்பாதீர்கள்.

      நாவலன் வில்லாதி வில்லன் என்று யாரும் நிறுவினாலும், அது ரயாகரனை யோக்கியனாக்கப் போதாது.
      ம.க.இ.க.வின் கருத்து ரயாகரனின் நடத்தையின் அடிப்படையிலானது.

  15. தோழர்களே !
    நாவலன் , ராஜஹரன் என்ற இருவரையும் தவிர பலநூறு தோழர்கள் புலதில் இயங்குகிறார்கள். அவர்களில் பலர் இந்த இருவருடனும் இணைந்து செயல்படுகிறார்கள். பல விடயங்களில் இரு பக்கமும் தவறுகள் நடந்துள்ளது. அது இந்த இருவருடனும் இணைந்து செயல்படும் தோழர்களுக்கும் தெரியும். குகநாதன் பிரச்னை கூட நாவலனின் தோழர்கள் மூலம் தான் ராஜாவுக்கு தெரியும். இதில் ராஜா அவசரப்பட்டுள்ளார்; அதேவேளை நாவலன் முழு உண்மையையும் தனது தோழர்களுக்கு தெரிவிக்க இல்லை. இதில் எவரும் இங்கு பரிசுத்தவான்கள் அல்ல. இவ்வளவு பிரச்சனைக்கு பின்னும் இரு பக்க தோழர்களுக்கும் இடையில் நல்ல ஊறவும் அரசியல் விவாதங்களும் நடந்தபடி தான் உள்ளதாக அறிய முடிகிறது. இந்த விடயத்தில் ம.க.இ.க தேவையில்லாமல் அவசரப்பட்டு விட்டது என நினைக்கிறேன். மகஇக தோழர்கள் எல்லோரும் மகஇக வின் முடிவில் ஊடன்பட்டிருப்பர்கள் என நான் நம்பவில்லை . மகஇகவின் ராஜாவை விலக்குவது என்ற முடிவு சில தந்தூரோபாய அரசியல் தேவையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் இதனால் சந்தோசப்படுவது எமது (வர்க்க ) பொது எதிரிகளே. இங்கு பலர் இந்த பிரச்சனையை பெரிதாக்கி குளிர்காய முயர்சிக்கிரார்கள் . மிக விரைவில் யார் சரி, யார் தவறு விட்டார்கள் என்ற உண்மை வெளிவரும் . அப்போது
    இந்த இரு மனிதர்களும் தமது தவறுகளின் அடிப்படையில் சுயவிமர்சனம் செய்வார்கள். இவர்கள் இருவரையும் நம்பித்தான் இலங்கையில் விடுதலை போராடம் தங்கி யுள்ளதென ஒருவரும் நினைக்க வேண்டாம். அதேபோல் பல நூறு முகமறியா தோழர்கள் இவர்களில் தங்கியுள்ளோம் எனவும் நினைக்க வேண்டாம். இவர்கள் எமக்கு தலைவர்கள் அல்ல. தவறை உணர்ந்து பகிரங்க சுயவிமர்சனம் செய்யாதவன் எவனாக இருந்தாலும், அவரை நாம் தோழனாக ஏற்கப்போவதில்லை. முக்கியமாக; இப்போதுள்ள பிளவை ஒருவரும் ஆப்படித்து இன்னும் ஆழமாக பிரிக்க முயல வேண்டாம். நன்றி

    • ஒன்னுமே நடக்காத ஒன்றை பெரிதாக்கியதும் அதில் குளிர்காய்ந்ததும் ரயாகரன் மட்டும் தானே? துணைக்கு மகிந்த ஆதரவு தேசம்நெட்டையும் இணைத்துக்கொண்டார்கள். இது இரண்டு நபர்களிடையேயான தனி நபர் பிரச்சனை அல்ல. அனைவராலும் ஒதுக்கப்பட்ட ரயாகரன் என்ற தனி மனிதன் நடத்திய அரசியல் என்கவுன்டர். அதும் மார்க்சித்தை பாவித்து நடத்திய சீரவு வாதம். சரி நடந்த்தது நடந்து என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு பிறகும் ம.க.இ.க உட்பட எல்லாருக்கும் சேர்த்து சந்தர்ப்பவாதிகள் பட்டம் கொடுக்கிறார்.
      இதே ரயா தான் பிரான்சில் தன்னை கொலைசெய்ய பிரான்ச் அரசாங்கம் தன் வீட்ட்டுக்கு தீ மூட்டியதாக எழுதியவர். இப்போ இந்தியா விசா கொடுக்க மாட்டார்கள் என்று சொல்கிறார். சரி விசா ஏற்பாடு செய்தால் தமிழ்நாட்டுக்கு வர ஓகேவா?

    • Devaraj kumar(UK), “நாவலன் முழு உண்மையையும் தனது தோழர்களுக்கு தெரிவிக்க இல்லை” என்கிறீர்களே. எப்படி இவ்வளவு உறுதியாகக் கூற முடிகிறது?
      நீங்கள் அவரது ‘தோழரா’?
      குகநாதன் விடயம் இயக்க நடவடிக்கையா அல்லது தனிப்பட்ட பிரச்சனையா?
      நாவலன் எதை மறைத்துள்ளார் என்று சுட்டிக்காட்டுங்கள்.

      உண்மைகளை விசாரிப்போம் என்பது தானே ம.க.இ.கு. ஆலோசனை. அதற்காக ரயாகரன் ஏன் வெகுண்டு எல்லார் மீதும் சேறடிக்க வேண்டும்.
      அதற்கு நீங்கள் ஏன் சப்பைக் கட்டுக் கட்ட வேண்டும்?

  16. //நீங்களே ம.க.இ.கவை அவதூறு செய்யும் சீர்குலைவுவாதி, இங்கு ஏதோ அபிமானம் உள்ளவர் போல வந்து அபிப்ராயம் சொல்லி நடிப்பது வேடிக்கையாக உள்ளது./

    வினவு ,

    நீங்கள் தரும் அடுத்த பட்டம் சந்தோசமா இருக்கு , எத்தனை பட்டம் எனக்கு கொடுக்கிறீர்கள்

    ஒரு பேச்சுக்கு சரி நான் நடிப்பதாகவே இருக்கட்டும் நீங்கள் இரயாகரன் விசயத்தில் எடுக்கும் முடிவுகள் சரியல்ல அம்புட்டுதான் நான் சொல்வேன்

    மக இக எவ்வளவு பழக்கமோ அதே அளவு இணையத்தில் இரயகரன் பழக்கம் எனக்கு

    அந்த அடிப்படையில் நான் இந்த கேட்கலாமா கூடாதா?

    • வினவு
      எனது கருத்துக்களை வெளியிட விருப்பமில்லாத பட்சத்தில் நீங்கள் வெளியிடாமல் விட்டுவிடுங்கள்
      எனது நடிப்பு வாய்ப்பில்லாம போகட்டும்
      என்ன எழுதவேண்டுமோ அதை
      நான் என் தளத்தில் எழுதி கொள்கிறேன்

    • @தியாகு..

      ///மக இக எவ்வளவு பழக்கமோ அதே அளவு இணையத்தில் இரயகரன் பழக்கம் எனக்கு ////

      திரு தியாகு அவர்களுக்கு,
      ம.க.இ.க உங்களுக்கு எவ்வளவு பழக்கம் தியாகு ?.. அவதூறு பரப்பும் அளவுக்கா ?..

      ஒரு பொதுவான ஆதரவாளர் இந்த வாக்கியத்தைப் பிரயோகித்து இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது.
      ஆனால் மார்க்சியத்தின் எதிரியான் ஒரு லும்பனாகிய தாங்கள் சொல்வது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

      லீணா மணிமேகலை விசயத்திலேயே உமது மார்க்சியப் பகல்வேடம் உறியப் பட்டு விட்டது. ஆகையால் வேடத்தை உமது தளத்தில் மட்டும் இடவும். இங்கு இரயாகரனை நீர் ஆதரிப்பது கூட வினவை எதிர்க்கத் தான் என்பது உம்மைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்.

      இது குறித்து இங்கு இதற்கு மேல் பேச விரும்பவில்லை.

      கடைசியாக ..
      இங்கு வந்தால் பிரச்சனைகளை மட்டும் விவாதிக்கவும். அமைப்புக்கு கருத்து சொல்லும் வேலை எல்லாம் வேண்டாம். அந்த அளவுக்கு ஒரு மனிதனுக்கு தகுதி உண்டு. உம்மைப் போன்ற லும்பன் தகுதியானவன் அல்ல.

  17. ம•க•இ.க எடுத்த இந்த முடிவால் வர்க்க எதிரிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்கிறீர்களே, ரயா எடுத் குகநாதன் ஆதரவு தொழிலாளி வர்க்க விரோத போக்கால் யார் மகிழ்வார்கள். ஒருவேளை குகநாதன் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியோ. இந்தப்பிரச்சினையில் தான் ஒரு பாத்திரம் அல்ல என தெரிகையில் எந்த மனிதனாவது (நாவலன்) நானும் ரவுடிதான் என்பது போல இதில் பங்கு பற்றுவானா என்ன ? ரயா அப்படி பங்குபற்றுவதை குகா அண்ணாச்சி தான் அங்கீகரிக்க முடியும் ?

    அமைப்பின் அரசியலை அதன் நடைமுறையை முக்கியமாக நேர்மையை அவதூறு செய்த ரயாகரனுக்கு ஆதரவாக அமைப்பின் முடிவை எதிர்த்து யாரும் பேச வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. அகவயமாக இலங்கையின் இன்றைய சூழலை இந்திய சூழலின்முடிவையே காப்பி அடித்து கற்றுக்கொள்ளும் ரயா போன்றவர்களுக்கு இப்படி கோஷ்டி பிரித்து பேச வேண்டிய ஆவல் இருக்கிறுது. அமைப்பின் நேர்மையை ரயா வந்து சுட்டிக்காட்டிதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் அவரைப் போல நடைமுறையில் இல்லவாதவர்களால் ஆனது அல்ல அமைப்பு.

    இது ரயாவுக்கும் நாவலனுக்குமான பிரச்சினை அல்லது குகாவுக்கும் எழிலனுக்குமான பிரச்சினை அல்ல• தனிமனிதவாதம் என்ன என்ன முதலாளித்துவ வடிவத்தை கம்யூனிச திரைக்கு பின்னால் இருந்து எடுக்கும் என்பதை ரயாவும் அவரது கருத்துடைய அவரது (என்னுடைய அல்ல) தோழர்களும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். காட்டிக் கொடுத்தலும் தன்னகங்காரமும் ஒரு பகிரங்க விசாரணைக்கு வரமுடியாத தனது த்த்துவ கோழைத்தனத்தை மறைத்து விசாரணை கோரியவர்களை சந்தர்ப்பவாதிகளாக ஏமாளிகளாக பாசிச நோக்கில் பார்க்க வைக்கிறது.

    உயிர்ப்புள்ள மார்க்சியத்துக்கும், சந்தர்ப்பவாதமான மார்க்சியத்துக்குமான யுத்தம் இது. இதற்கு சமரசம் தேடுபவர்கள் யோக்யமானவர்களாக இருக்க முடியாது.

  18. Devarajkumar is trying to `moodymaraikka` the real situation. All of those working in any platform in europe knows the way Raya is working. He is a leftist Prabakaran, who can only write, never work. (Puratchi varum, aanal varaathu). We can respect Prabakaran atleast for the reason he fought till the end. Raya is trying to be a hero, but real villain for the tamil, sinhala working klass. He alienate leftists from each other by his behavior. He never tolerate criticism. The best thing MaKaIKa can do is keep the distance from Raya.

  19. ஐயா பெரியவர்களே, நீங்கள் ஆயிரம் விதண்டாவாதம் புரியுங்கள். ஆனால் எங்கட தேசிக்காய்த் தலைவர் போன நாள்ல இருந்து வெந்து நொந்து கிடந்த எனக்கு நம்பிக்கை நாட்ச்சதுரமாகத் தெரிவது தலைவர் கொமிசார் ரயா மட்டும் தான்.! காரணம் தேசிக்காய்த் தலைவர் போலவே ச(க)ர்வமும், (அகம்)பாவமும், எல்லோரையும் சமமாக ( அதேசமயம் எதிரியாக) பார்க்கும் பண்பும் நிரம்பியவர்.
    ஆகவே மகாஜனங்களே! என்னைப் போலவே எந்த கேள்வி முனறயும் இல்லாமல் தேசிக்காய்த் தலைவராக கொமிசார ரயாவை மட்டும் ஏற்றுகொள்ளுங்கள்!!

  20. ஐரோப்பாவில் இருக்கும் பம்மாத்து மாக்சியவாதிகள் Mac Donalsல்` உண்டு,
    Coco Colaல் கை கழுவி, உணவு செமிப்பதற்காக மாக்சியம் கதைப்பவர்கள். உடல் வளையாத மேட்டுக்குடிகள். மக்கள் இவர்களது புரடசி வரும் என்றூ வானத்தை பார்த்திருக்கும் முட்டாள்கள் இல்லை

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க