privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

-

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்

ஜனநாயகம் என்றால் என்ன? இதை பீகார் தேர்தல் முடிவுகளை வைத்தே பார்க்கலாம். மொத்த தொகுதிகள் 243. இதில் நிதீஷ் குமார் கட்சி 115 தொகுதிகளும், அவரது கூட்டணி கட்சியான பா.ஜ.க 91 தொகுதிகளிலும் மொத்தத்தில் இந்தக் கூட்டணி 206 தொகுதிகளில் 4/5 பங்கு வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்து லல்லுவின் கூட்டணி 25 தொகுதிகளிலும், காங்கிரசு நான்கிலும், மற்றவர்கள் எட்டு தொகுதிகளிலும் வென்றிருக்கின்றனர்.

அடுத்து இந்த முடிவுகளின் பின்னே உள்ள வாக்கு விகிதத்தை பார்க்கலாம். நிதீஷ் குமாரின் கூட்டணி சுமார் 40% வாக்குகளையும், லல்லு கூட்டணி 25%, காங்கிரசு 8%, மற்றவர்கள் 27% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். அதாவது வெற்றி பெற்ற நிதீஷ் குமாரை விட அவருக்கு எதிர்த்து விழுந்த வாக்குகளின் விகிதம் 60%. மேலும் இது பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விகிதம் மட்டும்தான். அதாவது பீகார் தேர்தலில் வாக்கு விகிதம் 52சதவீதம். அதில் நாற்பது விழுக்காட்டை மட்டுமே நிதீஷ் கூட்டணியோடு பெற்றிருக்கிறார். அதன்படி மொத்த வாக்காளர்களின் விகிதத்தை கணக்கிட்டால் நிதீஷ் பெற்றிருப்பது சுமார் 20 முதல் 25 சதம் வாக்குகளை மட்டும்தான். இதில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை கழித்தால் இந்த அமோக வெற்றி பெற்ற தலைவரின் மக்கள் ஆதரவு பத்து விழுக்காட்டைக் கூட தாண்டாது.

5,50,46,093 மக்களைக்களைக் கொண்ட பீகாரில் வாக்குரிமை உள்ளவர்கள் 2,90,17,537. இதில் நிதீஷ் குமார் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 65,61,903 மட்டுமே. லல்லு கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 54,66,693. இருவருக்கும் வித்தியாசம் வெறும் ஒன்பது இலட்சம் மட்டுமே. வேறு வழியில் சொன்னால் வாக்களிக்கு தகுதி கொண்ட ஆறு பீகாரிகளில் ஒருவர் மட்டுமே நிதீஷ் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்.

எனில் இதுதான் ஜனநாயகமா என்று அதிர்ச்சியடையாதீர்கள். இன்னும் நிறைய இருப்பதால் அதிர்ச்சியை தவணை முறையில் வைத்துக் கொள்ளுங்கள்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வென்றிருக்கிறது என்றால் யாருக்கும் தெரியாது. நிதீஷ் குமார் என்றால்தான் தெரியும். ஒரு தெரியாத கட்சியை வைத்துக் கொண்டு ஒரு தெரிந்த தலைவரின் வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா என்று அறிஞர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?

அவசர நிலை காலத்திற்கு பிறகு காங்கிரசுக்கு மாற்றாக வந்த கதம்பக் கூட்டணிகள் உருவாக்கிய ஜனதா கட்சி பின்னர் கந்தல் கந்தலாக உடைந்து போனது. அந்த துண்டுகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் மட்டும் உயிர் வாழ்கிறது. அதுவும் நிதீஷ் குமார் என்ற தலைவரது நிழலில் காலத்தை ஓட்டுகிறது. பீகாரில் அந்த கட்சிக்கென்று தொண்டர்கள், அணிகள், இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்கள் அதிகமில்லை. எல்லாம் ஒன்மேன் ஷோதான்.

ஒரு தலைவரின் பிரபலத்தை வைத்து மட்டும் ஒரு கட்சி இயங்குகிறது என்றால் அந்த கட்சி மக்கள் திரளோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஏற்கனவே நமது இந்திய ஜனநாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் இல்லை. அது அதிகார வர்க்கத்திற்கு மட்டும்தான் உண்டு. இந்நிலையில் கட்சி அமைப்பே இல்லாத நிதீஷ் குமார் கடந்த ஐந்தாண்டுகள் எப்படி ஆட்சி செய்தார்? இனி எப்படி ஆட்சி செய்வார்? எல்லாம் அதிகார வர்க்கத்தின் தயவில் நடப்பதுதான். அதாவது பெயருக்கு கூட மக்கள் தலைவர்கள் துணையின்றி முழுமையாக அதிகார வர்க்கம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கின்ற நிலை.

மக்களால் விரும்பப்படும் தலைவரான நிதீஷ் குமார் அதே மக்களை ஆட்சி செய்வதற்கு மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கத்தின் மூலம் தான் முடியும். நிதீஷ் குமார் கையில் வரம்பற்ற அதிகாரம் (இப்படி ஒன்று இல்லை) இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது மக்கள் பிரதிநிதிகள் மூலம் செயல்படப் போவது இல்லை.

சரி, இந்த வெற்றியை நிதீஷ் குமாரும், அவரது ஆதரவாளர்களும் ஊடகங்களும் எப்படிப் பார்க்கிறார்கள்? இது வளர்ச்சி திட்டங்களுக்கான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட அரசாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். அப்படி என்ன பீகார் வளர்ந்திருக்கிறது? இந்தியாவின் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலங்களில் ஒன்று என்ற தகுதியை பீகார் இன்னும் இழந்துவிடவில்லை. நிதிஷ் குமார் பீகாரில் 2000 கி.மீட்டருக்கு சாலை போட்டிருக்கிறாராம். இந்த சாலைகள் மக்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்?

இந்தச் சாலைகளை புறக்கணித்து விட்டு பீகார் இளைஞர்களெல்லாம் ரயில் ஏறி வேறு மாநிலங்களுக்கு சென்று பிழைக்கிறார்கள். பீகாரின் வாழ்வே இந்த ‘நாடோடி’களின் பொருளாதாரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. மறுகாலனியாக்கத்தின் விளைவாக தமிழகத்தின் விவசாயம் திட்டமிட்டு நசுக்கப்பட்டு அதன் விளைவாக மக்களெல்லாம் பிழைப்பிற்காக நகரங்களை நோக்கி நகருவது போன்ற மாற்றம் இப்போது பீகாரில் வேகமாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் கடுமுழைப்பு வேலைகளுக்கு பீகாரிகள் பொருத்த்தமானவர்கள் என்ற பெயரே இருக்கிறது என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஊடக அறிவாளிகள் இதை ஒத்துக் கொள்வதில்லை. மூன்று சதவீதத்திலிருந்த பீகாரின் வளர்ச்சி இன்று 11 சதவீதத்தை அடைந்து விட்டது என்றும் பீகாரிலிருந்து பிழைக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பீகார் உழைப்பாளிகளை இப்போது சகஜமாக பார்க்க முடியும்.

பீகாரில் இதற்கு முன் அரசு என்ற ஒன்றே ஆயுதக்குழு நிலப்பிரபுக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்து இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. மேலும் நிதீஷ் குமார் ஆட்சியில் கொஞ்சம் சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆயினும் அற்புதம் ஏற்பட்டு அந்த மாநிலமே செல்வத்தில் திளைப்பதான வருணிப்பில் உண்மை இல்லை. நிலவுடமை உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் பீகாரில், பெரும்பான்மையான மக்கள் நிலமற்ற விவசாயிகளாக இருக்கும் நேரத்தில் அங்கே வளர்ச்சி என்பது யாருக்கு பயன்படும்?

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
தோர்தல் தோல்வியில் லாலு பிரசாத்

எனில் இந்த வளர்ச்சிப் பாதை என்ற சொற்றொடர் எதை, யாருடைய நலனைக் குறிக்கிறது? அதற்கு லல்லுவின் மூலம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஏழைப் பங்காளன் என்ற மாயை மூலம் பீகாரில் பதினைந்து காலம் ஆண்ட லல்லுவும், இப்போது வெற்றி பெற்றிருக்கும் நிதிஷும் சோசலிச கொள்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரே கட்சியில் இருந்தவர்கள்தான். பொதுவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் நலன் என்ற வகையில்தான் அவர்களது ஆளுமை உருவானது. இதில் சாதாரண மக்களின் தலைவராக லாலுவும், நடுத்தர வர்க்கத்தின் அபிமானம் பெற்ற அறிவாளி தலைவராக நிதீஷூம் உருவெடுத்தார்கள்.

லாலுவின் ஆட்சியில் தாதாயிசமும், ஊழலும் கொடிகட்டிப் பறந்தது. அவரே மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றார். மனைவி, மகன், மச்சான் என முழுக் குடும்பத்தையும் அரசியலில் இறக்கி பெரும் சொத்துக்களை சுருட்டினார். எம்.ஜி.ஆர் ஏழைக் கிழவிகளை கட்டிப்பிடிப்பது போன்ற மலிவான நடிப்புக்கு லாலுவும் பெயர் போனவர். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லாலுவின் ஆட்சி மீது பீகார் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதும் அந்த வெறுப்பை நிதீஷ் குமார் அறுவடை செய்து கொண்டார் என்பதும் உண்மையே.

சென்ற முறை லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது என்ன நடந்தது? ஏதோ லாலு பயங்கரமாக வேலை செய்து ரயில்வேயே இலாபம் கொழிக்கும் துறையாக மாற்றினார் என்று ஊடகங்களே வியந்தன. அமெரிக்காவிலிருந்து வந்த எம்.பி.ஏ மாணவர்களுக்கு லாலு வகுப்பு கூட நடத்தினார். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் பீகாரில் நிதீஷ்குமார் செய்த வளர்ச்சி திட்டங்களைப் போன்று லாலு இரயில்வேயில் செய்து காட்டினார் என்று ஏன் கூறக் கூடாது?

ஆனால் உண்மை என்ன? லாலுவுக்கு முந்தைய பத்தாண்டுகளில் இரயில்வேயின் அடிக்கட்டுமான திட்டங்கள், புதிய இரயில் பாதை, குறுகிய பாதையை அகல பாதையாக மாற்றுவது போன்ற திட்டங்கள் வேகமாக நடந்தன. இதனால் அப்போது இலாபம் இல்லாமல் இருந்தது. இது முடிந்த பின்னர் இரயில்வேயின் இலாபம் அதிகரித்தது. கூடவே இந்தியாவெங்கும் மக்கள் பிழைப்பிற்காக இரயில்கள் மூலம் இடம்பெயர்வதும் நடந்தது. இப்படி காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் லல்லுவின் இரயில்வே இலாபம் ஈட்டியதும். இந்தக் கதை கொஞ்சம் நிதிஷின் பீகாருக்கும் கூட பொருந்தும்.

ஆகவே வளர்ச்சித் திட்டங்கள், முன்னேற்றம் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் மொழியில் சொல்லப்படும் விசயங்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பொருட்படுத்தாமல் வாழும் ஏழைகளுக்கு நல்ல சாலை, நல்ல மருத்துவம், நல்ல கல்வி இருப்பதால் என்ன பயன்? அவர்களுக்கு அவை ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. அவை கையருகே இருந்தாலும் அந்த மக்கள் அவற்றை எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஆக பீகாரின் நடுத்தர வர்க்க அவாதான் அந்த வளர்ச்சித் திட்டங்கள். வளர்ச்சித் திட்டங்களின் கட்டுமான பணிகள் மூலம் முதலாளிகளுக்குத்தான் பலன் அதிகம்.

லாலு ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த சாதி அரசியலுக்கு நிதீஷ் குமார் வேட்டு வைத்து விட்டார் என்று கூறுகிறார்கள். லாலுவின் கூட்டணியில் யாதவ் சாதியும், முசுலீம்களும்தான் பிரதானமானவர்கள். யாதவ் சாதியில் உள்ள பண்ணையார்களே லாலு ஆட்சியில் கொழித்தார்கள் என்பதால் ஏழை யாதவ மக்கள் லாலுவை இப்போது புறக்கணித்திருப்பதும் இயல்பானதுதான். இசுலாமிய மக்களைப் பொறுத்தவரை இந்து மதவெறியரை யாரும் எதிர்க்க முடியாது என்ற அவலமான யதார்த்தத்தில் அவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. மத ஒடுக்குமுறையை விட பொருளாதார ஒடுக்குமுறை அதிகம் இருக்கும் காலத்தில் அவர்கள் அரசியல் பார்வையும் தேவையும் கூட மாறத்தான் செய்யும்.

எனவே பீகாரில் உள்ள சாதி ஆதிக்கம் இன்னமும் மாறிவிடவில்லை. ரன்பீர் சேனா முதலான ஆதிக்க சாதி கிரிமினல் படைகள், மற்றும் சங்கங்களில் பா.ஜ.க, ஜனதா தளம், காங்கிரசு கட்சியினர்தான் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். ஆக வர்க்க ரீதியில் நடுத்தர வர்க்கத்தையும் சாதி ரீதியில் ஆதிக்க சாதிகளையுமே நிதீஷ் குமார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இயல்பாகவே ஆதிக்க சாதியை முன்னிறுத்தும் பா.ஜ.க இந்த தேர்தலில் பெருவெற்றி பெற்றிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே நிதிஷ் குமார் வெற்றி சாதியை ஒழித்திருக்கிறது என்று கூறுவது அறியாமை. உண்மையில் மீண்டும் ஆதிக்க சாதிகள் தழைத்தோங்குவதையே இந்த வெற்றி அமல்படுத்தப் போகிறது.

ஆனால் இந்த முறை அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதாவது ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறை சமூக அளவில் இருப்பதை விட அரசு எந்திரத்தின் மூலமாக நடந்தேறும். என்ன இருந்தாலும் நிதிஷ் குமாரின் ஆட்சி சட்டத்தின் ஆட்சியல்லவா?

பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு நரேந்திரமோடியை அனுமதிக்க கூடாது என்று நிதீஷ் குமார் தடை போட்டது சிறுபான்மை மக்களிடத்தில் கொஞ்சம் அபிமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அதனாலேயே பா.ஜ.க சைவப்புலி என்றாகி விடாது. அவர்கள் இந்துத்வ கொள்கைகளில், கலவர வழிமுறைகளில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். பீகாரைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதமாக மதவெறி முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள், அவ்வளவே.

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
கொண்டாட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள்

பீகார் அனுபவத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க தனது மதத் தீவிரவாதத்தை கைவிட வேண்டுமென ஊடக அறிவாளிகள் விரும்புகின்றனர். அப்படிப்பார்த்தால் குஜராத் அனுபவத்தை என்ன செய்வது?  குஜராத்திலும் பெருங்கலவரத்தின் மூலம் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து பின்னர் வளர்ச்சித் திட்டங்கள் என்று பேசி மோடி இருமுறை ஆட்சியை பிடிக்க வில்லையா? வளர்ச்சித் திட்டங்களும், வன்முறைக் கலவரங்களும் குஜராத்தில் பலித்திருப்பதை வைத்து அதையே முழு இந்தியாவுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தீவிர ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சொல்கிறார்கள்.

மேலும் குஜராத்தில் பேசப்படும் வளர்ச்சித் திட்டமும் கணிசமாக முதலாளிகள், மேட்டுக்குடியினர், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதுதான். ஏற்கனவே முன்னேறிய மாநிலமாக இருக்கும் குஜராத்தில் மதவெறியும், பொருளாதார முன்னேற்றமும் வியக்கத்தக்க அளவில் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே பா.ஜ.க இன்னமும் இந்த பாதையிலேயே பயணிப்பதற்கு குஜராத் முன்னுதாரணமாக இருக்கிறது.

ஆனால் குஜராத் மாதிரியை வைத்து வட இந்தியாவில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்பது பீகாரைப் பொறுத்த வரையில் உண்மைதான். குஜராத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத மோடியை பிரதமர் ஆக்கும் கனவும் சில இந்து மதவெறியர்களுக்கு உண்டு. அதை தாராளமய ஆதரவு பா.ஜ.க தலைவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் பீகார் வெற்றி இனித்திருக்கலாம். எனினும் முழுமையில் இந்துமதவெறியை அடிப்படையாக கொண்டுஇயங்கும் பா.ஜ.கவை அனைத்து பிரிவு இந்து மதவெறியர்களும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துகிறார்கள். காங்கிரசு, லாலுவை எதிர்ப்பதற்காக பா.ஜ.க உடன் ஒரு விரும்பாக் கூட்டணியை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிதீஷ் குமார் இருப்பதாகவும் சொல்ல முடியும்.

ஆக கூட்டிக் கழித்து பார்த்தால் சந்தர்ப்பவாதம் என்ற ஒன்றைத் தவிர இந்தக் கூட்டணியில் வேறு எதுவுமில்லை. நடுத்தர வர்க்க நலனுக்கு பொருத்தமாகவும் பா.ஜ.க கூட்டணி அமைந்திருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக பா.ஜ.க என்ற மதவெறி கட்சிக்கு கூட்டணி அந்தஸ்தும், பெருவெற்றியும் அளித்திருக்கும் நிதீஷ் குமாரின் சந்தர்ப்ப வாதம் அவரது நேர்மையின் இலட்சணத்தை வெளிக்காட்டுகிறது.

நிதீஷ் குமாரின் எளிமை, ஊழலின்மை,  போன்ற இமேஜை வைத்து பா.ஜ.க இது ஊழலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று கூவுகிறது. பீகார் வெற்றிக்காக இனிப்பு சாப்பிட்டு கொண்டாடும் தலைவர்கள் அந்த இனிப்பு தொண்டைக்குள் இறங்குதற்குள் ஊழல் மன்னன் எடியூரப்பா பதவியில் தொடரலாம் என்று கூறுகிறார்கள். ஏனிந்த இரட்டை நிலை? இங்கும் கொள்கையல்ல, சந்தர்ப்பவாதமும், சாதியவாதமும்தான் காரணங்கள். எடியூரப்பாவை விலக்கினால் லிங்காயத்து சாதி மக்களது அதிருப்தியை பெறவேண்டியிருக்கும் என்பதாலும், அடுத்து ஊராட்சி தேர்தல்கள் வர இருப்பதாலும் பா.ஜ.க இந்த ஊழல் மன்னனை தெரிந்தே ஆதரிக்கிறது. இது தெரிந்தே எடியூரப்பாவும் தெனாவெட்டாக பேசுகிறார்.

சந்தடி சாக்கில் நிதீஷ் குமார் அடுத்த பிரதமர் போட்டிக்கு வருவாரா என்று ஊடகங்கள் அவரை உசுப்பி விடுகின்றன. ஆனால் பீகாரில் ஒன்மேன் ஷோ நடத்தும் அவர் இந்தியாவிலும் அப்படி நடத்துமளவு செல்வாக்கு கொண்டவர் அல்ல. சாதிகளாலும், மதங்களாலும், மொழிகளாலும் பிளவுண்டிருக்கும் மக்களை இணைக்க வல்ல அரசியலை கொண்டிராத ஓட்டுக் கட்சிகள் குறிப்பிட்ட அளவில் அத்தகைய இனபேதங்களை தூண்டி விட்டே கட்சி நடத்துகின்றனர். அதனால் இவர்கள் வட்டார அளவில்தான் வண்டி ஓட்ட முடியுமே அன்றி தேசிய அளவில் எழ முடியாது.

அதற்கு காங்கிரசு கட்சி வாங்கியிருக்கும் மரண அடியைக் கூறலாம். ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் எல்லோரும் ஹெலிகாப்டரில் பறந்து படையெடுத்து பிரச்சாரம் செய்தார்கள். கடைசியில் நான்கு தொகுதிகளைத்தான் தேற்ற முடிந்தது. ராகுலை அடுத்த பிரதமர் என்று பேசுபவர்கள் எல்லாம் பீகாரில் அவரை எவரும் சீண்டக்கூட வில்லை என்ற உண்மையை அறிந்தவர்கள்தான். நாளைக்கு ராகுலே அப்படி ஒரு பிரதமராக வந்தால் கூட அது அவரது சொந்த செல்வாக்கில் நடக்கப் போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டணிதான் அதை தீர்மானிக்கப் போகிறது.

அதன்படி நிதீஷ் குமார் பா.ஜ.கவை கழட்டிவிட்டு காங்கிரசு கூட சேர்வதற்கும் புரோக்கர்கள் முயல்வார்கள். அப்படி ஒரு புரளி உலாவந்தால் பா.ஜ.கவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று நிதீஷும் அதை உசுப்பி விடலாம்.

ஆக பீகாரின் தேர்தல் முடிவுகள் எந்த நல்ல செய்தியையும் கொண்டிருக்கவில்லை. ஜனநாயகத்தின் அதே அழுகுணி ஆட்டங்கள்தான் தொடருகின்றன. உண்மையான மாற்று அரசியல் சக்தி இல்லாதவரை மக்களும் இந்த ஆட்டத்தையே ஆடியாக வேண்டும். வேறு வழி?