privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காலிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

-

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.

அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!

இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.

முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.

மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும்  ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின்  பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.

இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும்  சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.

பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை  போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.

எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும்  இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை  அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.

இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில்  கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
ஒபாமா - கடாஃபி

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா? அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா?

மக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்த ‘புரட்சியாளர்கள்’ என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும்.

லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.

அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.

லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.

ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது.

1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில் ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம் – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில்  ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.

மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.

கடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்

இதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார்.

அவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமைப்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் – கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள்.

ஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது? ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா?

அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.

தற்போது லிபியாவின் ஜனநாயகப் ‘போராளிகள்’ முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்ற ‘புரட்சியாளர்கள்’ வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை.

ஒரு உலக ரவுடியாக  உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு / சர்வாதிகார எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிக் கும்பல்கள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல – அது எண்ணையும் இயற்கை வளங்களும் தான்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!

ஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.

நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.

அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல – அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு ! அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !! | வினவு!…

    அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான்….

  2. //அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான்//
    நிதர்ஸனமான உண்மை

    • கோசோவாவில் எண்ணை எதுவும் இல்லை. மேலும் அமெரிக்கர்கள், கோசோவாபில் முஸ்லீம்கள் மீது, ’கிருஸ்துவ’ செர்பியர்களில் இனப்படுகொலையை தடுக்கவே குண்டு வீசினார்கள். இல்லை என்றால் மேலும் பல லச்சம் கோசோவோ முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். பார்க்கவும் எமது பழைய பதிவு :

      http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

  3. அவசியமான தகவல்கள், கண்ணோட்டங்களுடன், செறிவாக எழுதப்பட்டுள்ளது. நன்றி. மேற்குலகத்துடன் நெருக்கமாக கைகோர்த்து விட்ட பிறகும், கடாஃபி ஏன் குறி வைக்கப்படுகிறார் என்ற கேள்விக்கான பதில் இன்னும் சற்று ஆராயப்பட வேண்டியது எனக் கருதுகிறேன். சீனாவின் போட்டியை சமாளிப்பதற்காக மட்டும் அமெரிக்கா இத்தகைய முடிவில் இறங்கி விட்டதா என்பது சிந்திக்க வேண்டிய விசயமாக உள்ளது. அரபுலகத்தில் எழுந்த எழுச்சியை பயன்படுத்தி, பழையதும், புதியதுமான பல கணக்குகளை அமெரிக்க தீர்த்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

    தாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு, அமெரிக்காவின் ‘ஜனநாயக வேடத்தை’ மொத்த உலகமும் அறிந்துள்ள போதிலும், குறிப்பாக இராக்கில் பயன்படுத்திய, தற்பொழுது முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள ‘பேரழிவு ஆயுதங்கள்’ காரணம் கூட இன்றி லிபியாவில் அமெரிக்காவும், பிரான்சும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ள போதிலும், யாரும் இதனைத் தட்டிக் கேட்க முடியாத, தடுத்துப் போராட முடியாத அளவில், தற்போதைய ஒற்றைத் துருவ உலகப் போக்கு உள்ளது. இச்சூழல் எவ்வாறு மாறும், எங்கே அமெரிக்கப் பேரரசின் வாட்டர் லூ துவங்கும் என காத்திருக்க வேண்டியிருக்கிறது.

  4. நம்ம பக்கத்து நாடு இலங்கையில் கொத்து கொத்தா உள்ளூர் மக்களை கொல்லும்போது இந்த ஜனநாயக கழுகுகளுக்கு மூக்கு வேர்க்கவில்லை என்ன செய்ய துரதிஷ்டவசமாக லிபியாவில் கிடைக்கிற மாதிரி பஸ்ட் குவாலிட்டி பெட்ரோல் இலங்கையில் கிடைக்கவில்லை அதனால் ஜனநாயக காவலர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது

  5. ”நம்ம பக்கத்து நாடு இலங்கையில் கொத்து கொத்தா உள்ளூர் மக்களை கொல்லும்போது இந்த ஜனநாயக கழுகுகளுக்கு மூக்கு வேர்க்கவில்லை என்ன செய்ய துரதிஷ்டவசமாக லிபியாவில் கிடைக்கிற மாதிரி பஸ்ட் குவாலிட்டி பெட்ரோல் இலங்கையில் கிடைக்கவில்லை அதனால் ஜனநாயக காவலர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது”

    தமிழர்கள் எல்லோர் மனத்திலும் எழும் கேள்வி இது

  6. எல்லா மனிதர்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக!
    நல்ல அலசல், தெளிவான பதிவு. வாழ்த்துகள்!
    மேலை நாட்டின் அடாவடியும் பொய பிரச்சரமும் முடிவுக்கு கொண்டு வர உலக ஊடகங்கள் சில இப்பொழுதுதான் முயற்சி கொண்டுள்ளது, இம்முயற்சியினால் அமெரிக்க போன்ற அயோக்கியர்களின் அழிவு வெகு விரைவில் உள்ளது.

  7. //அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!//

    :))))). எப்படி இப்படி எல்லாம் ‘பார்க்க’ முடிகிறது. கடாஃபியின் தாக்குதல் கிழக்கு லிபியா மீது தொடரும் ஆனால், பெரும் மனித பேரவலம் (ஈழத்தில் கடைசி கட்ட போர் போல) உருவாகியிருக்கும். எதிர்ப்பாளர்களின் கடைசி நகரமும், முக்கிய கேந்திரமுமான் பென்சாய் நகரில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்கள் பூண்டோடு கொல்லப்படும் அபாயம் உண்டு. அவர்களை காப்பாற்ற வேறு வழி இல்லை. வான்வழி தாக்குதல் மட்டும் தான். ஈராக் போல் படை எடுத்து, ‘ஆக்கிரமிக்கும்’ திட்டமெல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

    அய்.நா சபை தீர்மானத்தின் படி தான் இந்த தாக்குதல். (ஈராக் அப்படி அல்ல என்று நினைவில் கொள்ளவும்). ஃபரான்ஸ் அமெரிக்க ‘போர்களை’ பொதுவாக எதிர்க்கும் நாடு. ஈராக், ஆஃப்கானிஸ்தான் படை எடுப்புகளில் அவர்கள் கலந்து கொள்ள மறுத்ததோடு, எதிர்த்தனர். ஆனால் இம்முறை, அய்.நா தீர்மானம் உருவாகும் முன்பே, முதல் தாக்குதலை அவசர அவசரமாக தொடுத்தது. காரணம் time was running out for the desparate rebels holed up in the east while Gaddafis army was closing in on them.

    கடாஃபி போரை தொடர்ந்து கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால், மானிட பேரவலம் உருவாகியிருப்பது மட்டுமல்ல, எண்ணை கிணறுகளும் தீ வைக்கப்பட்டு, பெரும் அழிவு உருவாகியிருக்கும். பிறகு எண்ணை விலை டாலர் 200அய் சுலபமாக தொட்டிருக்க்கும். அமெரிக்க தாக்குதல் நடத்தியதால் இந்த விலை உயர்வு ஏற்படவில்லை. உள்ள நாட்டு போரினால் தான். தாக்குதல் நடத்தாமல், உம்ம பேச்சை கேட்டிருந்தால், இன்னேரம் 200 டாலரை தொட்டிருக்கும்.

  8. கடாஃபியின் படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதை ‘எதிர்க்கும்’ நாடுகளின் போலித்தனம் மற்றும் உள்னோக்கங்கள் பற்றி. முக்கியமாக துருக்கி இதை கடுமையாக எதிர்க்கிறது. no fly zone லிபியா மீது அமைக்க துருக்கி இடம் கூட அளிக்க மறுத்துவிட்டது. உண்மையான காரணம் ஜனனாயக ‘கொள்கை’ அல்ல. துருக்கியில் உள்ள குர்த் இன மக்கள் தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடுகின்றனர். (பக்கத்து நாடுகளில் உள்ள குர்த் இன மக்களுடன் சேர்ந்து). அவர்களை நசுக்க பல வகைகளில் பல நாடுகள் முயல்கின்றன. லிபியா மீது தாக்குதலை ஆதரித்தால், எதிர்காலத்தில் எங்க தம் மீதும் இதே போல் தாக்குதல் (குர்த் மக்கள் எழுச்சியை நசுக்க முயலும் போது) வர வழி பிறக்கும் என்ற பயம் தான் உண்மையான காரணம்.

    மடியில கனம் இருப்பவன் தான் பயப்படுவான் என்ற பழமொழி இங்கு மிக பொருந்து. இந்தியா உள்பட, இந்த தாக்குதலை எதிர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும்.

    கொள்கை, மன்னாங்கட்டி எல்லாம் ஒன்றும் இல்லை. தத்தம் நாடுகளில் தாங்கள் செய்யும் மீறல்கள்களை (அய்.நா) பயமில்லாமல் தொடர இந்த வேடம். அவ்வளவுதான்.

    சீனாவுற்க்குதான் முதல் இடம். ராணுவ பலத்தால், தம் மக்களையே அடிமையாக வைத்திருப்பதால் பயம். எதிர்ப்பு. நல்ல நடிகர்கள் இவர்கள் எல்லோரும்.

    தாக்குதலை ‘எதிர்க்கும்’ உங்களை போன்ற அப்பாவிகளை கேடயமாக பயண்படுத்தி கொள்ளும் ‘ராஜ தந்திரம்’ இவர்கள் அனைவருக்கும் உண்டு. இடதுசாரிகளை கேடையமாக பயன்படுத்தி தம் அயோக்கியத்தனங்களை தொடர் பல காலமாக ‘ராஜ தந்திரம்’ பயன்படுத்துப்படுகிறது. இடதுசாரிகளும் அதை பற்றி அலட்டிகொள்ளாமல், இதற்க்கு ’துணை’ போகும் முட்டாள்தனம் தொடரும் தான்.

    • நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று அமெரிக்கா சொன்னால் நம்ப சொல்கிறீர்களா அதியமான் சார்?

      லிபியாவின் எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்க என்ன இன்னமும் என்னென்ன செய்ய போகிறார்களோ… லிபியாவின் மக்கள் எழுச்சி ஏற்பட்ட முதல் நாளிலேயே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததே எப்படி அதியமான் சார்?

      எழுச்சி ஏற்பட்ட ஆரம்பத்திலே நான்கு நெதர்லாந்து போர்வீரர்கள் லிபியாவுக்குள் இரகசியமாக நுழைய வேண்டிய காரணம் என்ன அதியமான் சார்?

      அமெரிக்காவுக்கு எல்லா நாட்டிலும் தனுக்கு மட்டுமே ஜால்ரா போடுபவர்களே அதிகாரத்துக்கு(தலைமைக்கு )வரவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் அதியமான் சார்?

      ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்!!! அதியமான் சார்? அதனால் இழந்தது கிடைக்குமா ? அதியமான் சார்…

      அமெரிக்காவும் இங்கிலாந்தும் குண்டுகளை எறிந்து அப்பாவி பொது மக்களைக் கொல்வது சரியென்றால்,கடாஃபி செய்வதும் சரியென்று ஆகிவிடாதா அதியமான் சார்?

      நடுநிலையோடு உங்கள் பதிலை எதிர்பார்த்து….

      • ரூபன்,

        போஸ்னியா பற்றி நான் எழுதியதை முழுசா படிக்கவம். அமெரிக்க செய்யும் அனைத்து விசியங்களையும், மீறல்களையும் ஆதரிக்கவில்லை / நியாயப்படுதவும் இல்லை. விளக்கியிருந்தேன். இதே போல் சோவியத ரஸ்ஸியா செய்ததை பற்றியும் பேச சொல்லுங்களேன் பார்க்கலாம். திரிபுவாதிகள் என்று ஒற்றை வரியில் தப்பித்துக்கொள்வார்கள். நானும் அதையே சொல்கிறேன் : முதலாளித்துவ திரிபுவாதிகள் செயல்கள்…

        லிபேர்டேரியனிசம் அனைத்து வகை ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கிறது என்று பல முறை விளக்கி எழுதியும், எதையும் உள் வாங்காமல், மீண்டும் மீண்டும் எம்மை பற்றி பழைய பல்லவியையே பாடுகிறீர்கள்.

        கூகுள் பஸ்ஸில் திரு.மாதவராஜ் அவர்களுடன் இதை பற்றி ஒரு விவாதம் :

        https://profiles.google.com/jothi.mraj/posts/KL3twbNYw51

        • //போஸ்னியா பற்றி நான் எழுதியதை முழுசா படிக்கவம்.//

          படித்தேன்…
          //அமெரிக்க செய்யும் அனைத்து விசியங்களையும், மீறல்களையும் ஆதரிக்கவில்லை / நியாயப்படுதவும் இல்லை. விளக்கியிருந்தேன்.//

          லிபியா விவகாரத்தில் உங்கள் அமெரிக்கா செய்வது சரியா?
          //இதே போல் சோவியத ரஸ்ஸியா செய்ததை பற்றியும் பேச சொல்லுங்களேன் பார்க்கலாம். திரிபுவாதிகள் என்று ஒற்றை வரியில் தப்பித்துக்கொள்வார்கள். நானும் அதையே சொல்கிறேன் : முதலாளித்துவ திரிபுவாதிகள் செயல்கள்…//

          இது ஒரு நடுநிலையாரின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.(கருணாநிதி பேசுவது போல் உள்ளது )முழங்கால்லுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சிப்போட முயற்சிக்கிர்கள்.

          //லிபேர்டேரியனிசம் அனைத்து வகை ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கிறது என்று பல முறை விளக்கி எழுதியும், எதையும் உள் வாங்காமல், மீண்டும் மீண்டும் எம்மை பற்றி பழைய பல்லவியையே பாடுகிறீர்கள்.//

          அப்படியா !!! இல்லை நீங்கள் விதண்டாவாதம் பண்ணுகிறோ என்ற ஒரு சின்ன சந்தேகம்!

          //மடியில கனம் இருப்பவன் தான் பயப்படுவான் என்ற பழமொழி இங்கு மிக பொருந்து. இந்தியா உள்பட, இந்த தாக்குதலை எதிர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும்.//

          இந்தியா உள்பட இந்த தாக்குதலை எதிர்க்கும் அனைத்து நாடுகளும் உண்மையாகவே எதிர்ப்பதாக இருந்தால் ஐனபாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானக்கு எதிராக வாக்களித்து இருப்பார்கள். இவர்கள் பயப்படுவது அமெரிக்காவுக்கு…

          //சீனாவுற்க்குதான் முதல் இடம். ராணுவ பலத்தால், தம் மக்களையே அடிமையாக வைத்திருப்பதால் பயம்//

          அமெரிக்காவும் தன் ராணுவபலம், டாலர் பலத்துடன் மற்ற நாடுகள் அடிமையாக (ஜால்ரா) இருக்க நினைப்பது என்ன நியாயம் அதியமான் சார். ஜனநாயகம் என்ற பெயரில் தனுக்கு ஒத்து வராத நாடுகளை அமெரிக்க அடிமை படுத்த நினைக்கிறது.

          //தாக்குதலை ‘எதிர்க்கும்’ உங்களை போன்ற அப்பாவிகளை கேடயமாக பயண்படுத்தி கொள்ளும் ‘ராஜ தந்திரம்’ இவர்கள் அனைவருக்கும் உண்டு.//

          அடக்குமுறை, அயோக்கியத்தனத்தை கண்டு சிங்கம் போல் கர்ஜிக்க விட்டாலும் பாரவயில்லை, கொஞ்சம் முனகவது செய்யலாமே அதியமான் சார்.

          உங்களை போன்ற திறமையானவர்களால் தப்பான கருத்துகளை மக்கள் சரியானது என்று பார்க்கும் அவலநிலை வரக்கூடாது.

  9. ஈழப்போரின் இறுதி மாதங்களை போல், லிபியாவில் கிழக்கு பகுதியில் எதிர்ப்பாளர்கள் சிக்கி, அழிவின் விளிம்பை நோக்கி இருக்கும் காலாங்கள் இது. ஈழப்போரில், 2009 சனவரிக்கு பிறகு, அமெரிக்க படைகள் இதே போல், தமிழர்களை காக்க, சிங்கள் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தால், பலரும் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க செய்யவில்லை என்பது வேறு விசியம். முக்கிய காரணம் அங்கு எண்ணை இல்லை என்பதல்ல. புலிகளில் ஃபாசிசம் பற்றி அவர்களின் பார்வை. புலிகள் அழிந்தால் தான், அங்கு நிரந்தர அமைதி திரும்பும் என்று ஒரு கோணம். பலரும் இதே பார்வையை தான் கொண்டிருந்தனர். அது சரிதான் என்று தெரிந்துவிட்டது.

    எண்ணை வளங்களை கொள்ளையடிக்கவெல்லாம் தேவையில்லை. உலக சந்தையில் யார் விலை அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கே எண்ணை விற்ப்பார்கள். வீராப்பு பேசும் வெனின்ஸுலாவின் சாவேஸ், அமெரிக்க சந்தைக்குதான் எண்ணையய் பெரும் அளவில் தம் நாட்டில் இருந்து இன்றும் ஏற்றுமதி செய்கிறார். economic realities and market forces will always dominate overs shrill political rhetoric.

    அமெரிக்காவின் பல செயல்கள் நியாயமில்லை. தேவையில்லை. சில நேரங்களில் ஒரு தனி மனிதன் எடுக்கும் முடிவு பெரும் அழிவிற்க்கும், போருக்கும் இட்டுச் செல்கிறது.
    2000 வருட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில். சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டெமாக்கரட்டிக் கட்சியை சேர்ந்த அல் கோர், புஸ்சிடம் தோற்றார். அல் கோர் வென்றிருந்தால், கண்டிப்பாக ஈராக் மீது இப்படி அமெரிக்கா படை எடுத்திருக்காது. டெமாக்ரட்களின் கொள்கைகள் வேறு. ரிப்பளிக்கன்கள் போல் hawks and neo-conservatives அல்ல இவர்கள்.

    ஆஃபாகானிஸ்தானில் எண்ணை எதுவும் இல்லை. 2001 படை எடுப்பு, பின் லேடன் மற்றும் அல் கொய்தாவை நசுக்க தான். ஆஃப்ஹானிஸ்தான் 1979 வரை மிக அமைதியான, அருமையான நாடாக இருந்தது. சோவியத் ரஸ்ஸிய அங்கு ‘செம்புரட்சியை’ உருவாக்க படை எடுத்தது. அன்று பிடித்த சனி, இன்றும் தீரல அவர்களுக்கும். எனது பதிவில் மிக விரிவாக அந்த வரலாற்றை எழுதியுள்ளேன் :

    http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html
    ’சதாம் ஹுசேன், செர்பியா,ஆஃப்கானிஸ்தான், அமெரிகாவின் போர்கள், டாலர் அரசியல் மற்றும் இன்ன பிற…’

    • ராம்,
      அந்த வளங்களை இலக்கு வைத்துத் தான் ஆஃகானிஸ்தான் மீது போர் தொடுத்ததாகக் கூற இயலாது. அது அவர்கட்குக் கிடைக்கக் கூடிய ஒரு நலன் என்பதை நான் மறுக்கவில்லை. எனினும் உடனடி நோக்கம் ரஷ்யா, ஈரான், சீனா என்பனவற்றின் மீது அமெரிக்கச் சுற்றிவளைப்புடனும் தென்னாசியா மீதான ஆதிக்கமுமே.சேர்பியாவின் உடைப்புக்குக் காரணமும் பிராந்திய ஆதிக்கமே. கொசோவோவில் பயங்கரவாதிகளை உருவாக்குவதில் சி.ஐ.ஏ. ஆற்றிய பங்கு பற்றி ஒரு இரகசியமும் இல்லை.
      (அமெரிக்காவுக்கு, முன்னொரு காலத்தில் தலிபான்கள் போல, அவர்கள் நல்ல பயங்கரவாதிகள்.)

  10. மக்களை காக்கின்றோம், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகின்றோம், நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றோம் என்று ஏகாதியபத்தியங்கள் தங்கள் செயல்களுக்கு விளக்கம் கொடுத்தாலும் அவர்களின் நோக்கம் கொள்ளையடிப்பதுதான், என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தபோதிலும் இதனை ஆதரிப்பதற்கென்றும் ஒரு கூட்டம் இருக்கிறதே என்பதுதான் எப்படியென்று தெரியவில்லை.

  11. ///ஏகாதியபத்தியங்கள் தங்கள் செயல்களுக்கு விளக்கம் ///

    எல்லா வகையான ’ஏகதிபத்தியங்களையும்’ தானே சொல்றீக காம்ரேட். அதாவது ’கம்யூனிச பாணி’ எகாதிபத்தியம் ;கிழக்கு அய்ர்ப்பிய, மத்திய ஆசிய நாடுகளை, இது போல் எதோ டைலாக் சொல்லி அன்று சோவியத் ரஸ்ஸியா நசுக்கியதையும் ‘எதிர்க்கிறீர்கள்’ தானே ? அப்படீனா சரி. உங்க மனிதனேயத்தை பாராட்டுகிறேன். யார் செய்தாலும் தவறு தவறுதானே ?

    • நிச்சயமாக. ஆனால், திரிபுவாதிகளின் செயல்களுக்கெல்லாம் கம்யூனிசம் பொறுப்பல்ல.

  12. சில எட்டப்பன்களுக்கு இந்த போர் லிபியாவை கொள்ளையடிப்பதுதான் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குகிறார்கள். விக்கிலீக்ஸ் போன்றவை அமெரிக்காவைப்பற்றி அம்பலப்படுத்தியும் இவர்களுக்கு ஜனநாயகத்தின் போலித்தோற்றங்களைப்பற்றிய ஆசை போகவில்லைப்போல.

  13. Mr.Adhiyaman… …. What type of peace present in Tamilelam after the War.? Based on wikileakes cables the U.S. try to save Tiger leaders at the end of the war, then what is your answer on that?. … Why not intervene the U.S. In Myanmar problem?.

    • nammy,

      அமெரிக்கா தாக்கினால் தவறு, தாக்காவிட்டாலும் தவறு என்ற நிலைபாடு உங்களுடையது. ஈழத்தில் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நடக்கும் கொடுமையான உள்நாட்டு போரில் ஏன் அமெரிக்கா தலையிட்டு தாக்கவில்லை என்கிறீர்கள். சாத்தியமில்லை. உலக போலிஸ்காரன் வேலை செய்யக்கூடாது என்று அமெரிக்காவினிள் பெரிய சர்சை தொடர்கிறது. டெமாக்ரட் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், புஸ் செய்தது போல் மிக தவறாக, ஈராக் மீது 2003இல் படை எடுத்டிருக்கமாட்டார்கள். ஈராக் போர் மட்டும் தான் சமீப காலங்களில் அமெரிக்கா செய்த பெரும் தவறு / அயோக்கியத்தனம். மற்றவை அல்ல.

      புலிகள் பற்றி எமது தளத்தில் இப்ப வந்த பின்னூட்டம் :

      baleno said…

      நான் இங்கே பின்னோட்டம் இடுவது லிபியா பற்றி வினவுவில் வந்த கட்டுரைக்கு உங்கள் சிறந்த பின்னோட்டங்களை பாராட்டி.

      //ஈழப்போரில், 2009 சனவரிக்கு பிறகு, அமெரிக்க படைகள் இதே போல், தமிழர்களை காக்க, சிங்கள் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தால், பலரும் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க செய்யவில்லை என்பது வேறு விசியம். முக்கிய காரணம் அங்கு எண்ணை இல்லை என்பதல்ல. புலிகளில் ஃபாசிசம் பற்றி அவர்களின் பார்வை. புலிகள் அழிந்தால் தான், அங்கு நிரந்தர அமைதி திரும்பும் என்று ஒரு கோணம். பலரும் இதே பார்வையை தான் கொண்டிருந்தனர். அது சரிதான் என்று தெரிந்துவிட்டது.//

      மிக சரியான புரிதல்.புலிகளுடைய போராட்டம் எனறு நடத்திய யுத்தத்தால் முழு இலங்கை மக்களுக்கும் துன்பம் ஏற்பட்டாலும், தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நாசமாக்கி அழித்தே விட்டது. கடைசி காலங்களில் (2007-2009)புலிகளின் யுத்த்திற்க்கு வலுகட்டாயமாக பிள்ளைகள் பிடிப்பது,கொடுமைகள், கப்பம் தாங்க முடியாத அளவிற்க்கு சென்று விட்டது.
      March 26, 2011 4:08 PM

  14. “லிபர்ட்டேரியன்” அதியமானுக்கு லிபிய போராட்டக்காரர்கள் மேல் பொங்கும் பாசம் புல்லரிக்க வைக்கிறது. இதே பாசம் தான் அமெரிக்காவுக்கும் இருக்கிறது. இருக்கட்டும்.

    ஆனால், அதே நேரத்தில் உலகெங்கும் அரச பயங்கரவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் போராடும் மக்களின் மேல் அமெரிக்க / லிபர்ட்டேரியனிச பாசம் பொங்காமல் போனது ஏன் என்பது தான் ஆச்சர்யத்துக்குரியதாய் இருக்கிறது. இதே அதியமான் சவுதி, யேமன், பஹ்ரைன், இந்தியாவின் வடகிழக்கு, ஈழம் போன்ற பகுதிகளில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை அரசுகள் வெறிகொண்டு அடக்குவதைப் பற்றி லிபர்ட்டேரியனுக்கு கவலை இருப்பது போலத் தெரியவில்லையே… இது லிபர்ட்டேரியனிசமா இல்லை தமிழ் பேசும் புஷ்ஷிசமா?

    அதை வாசர்கள் முடிவு செய்து விட்டுப் போகட்டும்.

    லிபியாவின் மேல் போர் தொடராமல் போயிருந்தால் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கும் என்கிற ஒரு உலக தத்துவத்தையும் உதிர்த்திருக்கிறார். லிபியாவை விடுவோம் – உலக எண்ணை வர்த்தகத்தை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்படுத்தும் அங்கிலோ ஸாக்ஸன் நிறுவனங்களின் கார்ட்டெல் பற்றி லிபர்ட்டேரியனிசம் பேச மறுப்பது ஆச்சர்யம் தான். ஷெல் கம்பெனி ஆப்ரிக்காவில் நடத்திய கொலைகள் பற்றி பேசாத லிபர்ட்டேரிய வாய், கடாபியின் சர்வாதிகாரம் பற்றிக் கிழியக் கிழியப் பேசுவது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கட்டுரையில், கடாபியின் சர்வாதிகாரத்தையோ அவர் மக்களை அடக்கியதையோ அதற்கு மக்கள் எதிர்ப்பு இருந்ததையோ கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. கவனிக்கத் தக்க அம்சமாக இந்த எதிர்ப்பு எவரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் அது எவ்வாறு அமெரிக்க நலனை ஒத்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. லிபியாவின் சுதந்திரம். ஜனநாயகம் விடுதலை என்பதை லிபியர்கள் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? அமெரிக்கா என்ன உலக நாட்டாமையா? லிபிய விடுதலைக்கு உலகெங்கும் உள்ள போராடும் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், பிற பெட்ரோலிய நாடுகளில் சர்வாதிகாரிகளையும் அவர்களின் ஒடுக்குமுறைகளையும் கண்டும் காணாமலும் ஆதரித்து வரும் அமெரிக்காவுக்கு இருக்கும் அக்கறையை எவ்வாறு புரிந்து கொள்வது?

    ஆக, அமெரிக்காவுக்கோ லிபர்ட்டேரியன்களுக்கோ மக்கள் போராட்டங்களின் மேல் பாசமோ பரிவோ வர வேண்டுமென்றால் அந்த நிலத்தின் அடியில் குறைந்தது 20 பில்லியன் பேரல் எண்ணையாவது இருக்க வேண்டுமா?

    • “லிபியாவின் மேல் போர் தொடராமல் போயிருந்தால் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கும்” என்பது உண்மைக்குப் பொருந்தாத ஒரு கூற்று.
      லிபிய நெருக்கடி வலுத்ததோடு எண்ணெய் விலை மேலும் ஏறிவிட்டது. போர் எப்படிப் போனாலும் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும். போரால் விலை இறங்க வாய்ப்பில்லை.
      போக, எண்ணைத் தட்டுப்பாடு ஏற்படுவதால் எண்ணெய்க் கம்பனிகள் மேலும் கொள்ளை லாபம் அடிக்கின்றன என்பதும் அறியப்பட்ட உண்மை.
      (மனிதர்கள் குண்டு வீச்சில் கொல்லப்படும் போது எண்ணெய் விலை நியாயம் பேசுகிறவன் நல்லவனாக இருக்க மாட்டான்).
      .
      கடாஃபியை அமெரிக்கா இலக்கு வைக்கவேண்டிய தேவை, ஈரானிய ஆட்சிக் கவிழ்பிலும், ஏன் சிரிய ஆட்சிக் கவிழ்பிலும், குறைவானது. ஆனாலும், கவிழ்ப்பு, கூடச் சாத்தியமானது.

      அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகட்கும் கடந்த சில எழுச்சிகளால் ஏற்பட்ட அரசியல் செல்வாக்கு இழப்பை ஈடு செய்ய லிபியா பயன்படுகிறது. கடாஃபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, 1990கள் தொட்டு வெறும் வாய்ப்பேச்சுத் தான்.
      அவர் எப்போதோ ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டாலும், அவர் உள்ளவற்றுள் நட்டமின்றி மேற்குலகு தூக்கி எறியக் கூடிய பண்டம்.
      அமைதியான முறையில் பேசித் தீர்க்க வெனெசுவேல முன்வைத்த யோசனையை அவர் ஏற்ற நிலையிலேயே உள்னாட்டு மோதல் தீவிரமாக்கப்பட்டு மேற்குலகின் மிரட்டல் துரிதமாகச் செயல் வடிவு பெற்றது. விரைவாகவே விமானத் தாக்குதல் தொடங்கியது. இதையெல்லாம் சிலர் கவனிக்க விரும்பார்கள்.

      இவ்வளவு துரித வேகத்தில் அமெரிக்கா நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் வெகு சிலவே.
      அதிக நாட்கள் போகு முன்பு மேலும் உண்மைகள் தெளிவாகும்.

      நாம் மறக்கக் கூடாத ஒரு விடயம்:
      அமெரிக்க சனாதிபதியின் முடிவுகள் (யாரோடு தகாத பாலுறவு வைக்களம் என்பது போன்ற முக்கியமான சில விடயங்கள் தவிர்ந்து) அவரது ராணுவ அரசியல் ஆலோசகர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
      அவர்களில் எவரும் மக்களால் தெரியப்பட்டோர் அல்ல.
      அவர்கள் நடுவே பெரிய கர்ப்பரேட் முதலாளிகட்குச் செல்வாக்கு மிகுதி.

  15. Libya has Oil but America has the technology to extract the oil. America has the technology to use the oil to run cars which were designed and developed by America. Most of the innovation and technology has been done in America. So America takes the lead in everything and so there is no choice for other countris but to follow America and stand behind whatever America does. Is there any kind of innovation happening in any other country?

  16. ”நம்ம பக்கத்து நாடு இலங்கையில் கொத்து கொத்தா உள்ளூர் மக்களை கொல்லும்போது இந்த ஜனநாயக கழுகுகளுக்கு மூக்கு வேர்க்கவில்லை என்ன செய்ய துரதிஷ்டவசமாக லிபியாவில் கிடைக்கிற மாதிரி பஸ்ட் குவாலிட்டி பெட்ரோல் இலங்கையில் கிடைக்கவில்லை அதனால் ஜனநாயக காவலர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது”

    தமிழர்கள் எல்லோர் மனத்திலும் எழும் கேள்வி இது

  17. அனைவருக்கும் வண‌க்கம். நாம் அடுத்து நடக்க இருப்பதை பார்கலாம். போராட்ட களத்தையும், மக்களையும் தயார் படுத்துவோம். ஊழல் மட்ரும் அரசு நிர்வாக சீர்கேட்டிர்கு எதிராக போராடுவோம். தாங்கள் ஏதாவது இயக்கதில் இருந்தால் தயவு செயது சொல்லுங்கள். இனணந்து போரடுவொம்.

  18. //அதே நேரத்தில் உலகெங்கும் அரச பயங்கரவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் போராடும் மக்களின் மேல் அமெரிக்க / லிபர்ட்டேரியனிச பாசம் பொங்காமல் போனது ஏன் என்பது தான் ஆச்சர்யத்துக்குரியதாய் இருக்கிறது. இதே அதியமான் சவுதி, யேமன், பஹ்ரைன், இந்தியாவின் வடகிழக்கு, ஈழம் போன்ற பகுதிகளில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை அரசுகள் வெறிகொண்டு அடக்குவதைப் பற்றி லிபர்ட்டேரியனுக்கு கவலை இருப்பது போலத் தெரியவில்லையே… இது லிபர்ட்டேரியனிசமா இல்லை தமிழ் பேசும் புஷ்ஷிசமா? //

    ஜியோனிசம்!

    இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முபாரக், பென் அலி! அவர்களுக்கெதிரான மக்கள் போராட்டம் உள் நாட்டு பிரச்சினையாக மேற்குலகாள் பார்க்கப்பட்டது. இஸ்ரேலிய எதிர் நிலைப்பாட்டை கொண்டிருக்கும் கடாபிக்கு எதிரான போராட்டம், இஸ்ரேலிய எதிரியை ஒடுக்கும் ஒரு நல்வாய்ப்பாக பயன்டுத்தப்பட்டுள்ளது.

  19. பெரியண்ணன் அமெரிக்கா நெம்ப நல்லவன்னு போலி லிபர்டேரியன்கள் கூறுவதை நினைத்தால் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் இருந்தால் தவறு செய்யமாட்டார்களாம். இப்படித்தான் இவனுக்கு அவன் நல்லவன், அவனுக்கு இவன் நல்லவன்னு சொல்லியே நம்மை இந்த அமைப்பிலிருந்து விடுபடவிடாமல் முதலாளித்துவத்தை பாதுகாத்து வருகிறார்கள் போலி லிபர்டேரியன்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு போட்ட நெம்ப நல்லவனான ட்ரூமன் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவன்தான். 2ம் உலகப்போரின் முடிவில் பனிப்போருக்கு வித்திட்ட இவரது பிரகடனம் (ட்ரூமன் பிரகடனம்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பிரகடனம் மூலமே, உலகப் போலீஸ்காரனாக அமெரிக்கா தனக்குத்தானே அறிவித்துக்கொண்டு மற்ற நாடுகளை முன்னேற்றுகிறேன் எனக் கூறி அந்நாடுகளின் இயற்கைவளங்களை சின்னாபின்னாமாக்கி, அந்நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கி தனது வால்ச்ட்ரீட் முதலாளிகளின் அகோரப்பசியை தீர்த்துவருகிறது. இப்பிரகடனமே அமெரிக்க ஆதிக்க சக்திகளின் உள்ளார்ந்த செயல்பாடாகும். கட்சிப் பெயரை மாற்றி நம்பவைக்கும் கழுத்தறுப்பு வேலையைக் கைவிடுங்கள்.

    போலி லிபர்டேரியன் என்றழைத்ததன் மூலம் லிபர்டேரியன்களாக தங்களை கருதிக்கொள்பவர்கள் உணர்ச்சிவசப்படலாம். லிபர்டேரியன்களின் கருத்துப்படி ஈராக்போர் ஒன்றுதான் அமெரிக்காவின் தவறான அணுகுமுறை என்றே வைத்துக்கொள்வோமே, உண்மையிலேயே லிபர்ட் என்ற சொல்லின்மீது உண்மையான விசுவாசம் இருந்தால் அவர்கள் எதை வலியுறுத்தியிருக்கவேண்டும், பலலட்சம் மக்களின் படுகொலைக்கு காரணமான புஷ்சை கைது செய்து தண்டிக்கவல்லவா கோரியிருக்கவேண்டும். சர்வ அலட்சியமாக ரிபெப்ளிக் கெட்டவன், டெமாக்ரடிக் நெம்ப நல்லவன் என்று கடந்து செல்வது ஏன்? உங்களது முகம் உண்மையா? அல்லது போலியா? எண்ணெயை மட்டுமல்ல குடிக்கும் நீரையும் விட்டுவைக்காத அயோக்கியர்களை எப்படித்தான் ஆதரிக்கிறீர்களோ தெரியவில்லை.

    உடனே ஸ்டாலின் என்று நீங்கள் அலறுவது கேட்கிறது. அரசு என்பதே வார்க்கம் சார்ந்து ஒடுக்கும் கருவிதான். மறுக்கவில்லை. ஆனால் அது 10% காப்பாற்றுகிறதா அல்லது 90% காப்பாற்றுகிறதா என்பதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. முதலாளித்துவம் முதலாளிகளை காத்து நிற்பதுபோல கம்யூனிசம் பாட்டாளிகளை காக்கின்றது. அனைவருமே முதலாளிகளாக மாறிவிடமுடியாது என்பது யதார்த்தம், ஆனால் அனைவரும் பாட்டாளிகளாக மாறமுடியும் என்பது நிதர்சனம். நீங்களும் பாட்டாளிகளாக மாறிவிடுங்களேன் ஸ்டாலின்களுக்கு அவசியமில்லை.

    • திரு JOHNY அவர்களே BY பாட்டாளிகள் யு மீன் உழைத்து சாப்பிடுபவர்கள்?சாரி அது எங்களுக்கு சேரவே சேராது.ஹிட்லர் இந்தியா வரை தாக்க ஆரம்பித்ததுமே நாங்கள் ஆர்யாள் நம்மவா என்று சொல்லி எங்காத்து மாமிகளை அவசர அவசரமாக GERMAN படிக்க வைத்தோமே?நாங்களாவது பாடுபட்டு உழைப்பதாவது.

      • நீங்கள் இங்கு போலியாக அறியப்பட்டாலும் உங்கள் பதில் மிகவும் கவர்ந்தது. சரியான பதிலடியாக இருந்தது.

      • போலி லிபேர்ட்ட்ர்ரியன்,

        நான் பிறப்பால் பிராமணன் அல்ல. பிற்படுத்தப்ப்ட்ட (கவுண்டர்) சாதியில் பிறந்தவன். சாதி சான்றிதல் காட்ட வேண்டுமா ? வினவு தளத்தில் தான் இது போல் சாதியை assume செய்து கொண்டு ’எதிரியை’ தாக்க வேண்டும் என்ற விதி முறை போல.

        • பொதுவாக பார்ப்பனர்களிடத்தில் அமெரிக்க ஆதரவை அதிகமாக பார்க்கலாம். அதனால் உங்களை அப்படி நினைத்திருப்பார். அதற்காக நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது. மேலே ஜானி நீங்கள் ‘democratic ‘ அலுமினியத்துக்கு நீங்க போட்ட தங்க முலாமைக் கொஞ்சம் சுரண்டியிருக்கிறார். அதை கொஞ்சம் பினிஷிங் செய்துட்டு போங்க.

          //வினவு தளத்தில் தான் இது போல் சாதியை assume செய்து கொண்டு ’எதிரியை’ தாக்க வேண்டும் என்ற விதி முறை போல.//

          gross generalisation and over simplification. ok.
          🙂

    • ஜானி,

      அமெரிக்கா நல்லவன் என்று நான் சொன்னதாக நீர் கற்பனை செய்துகொண்டு உளர வேண்டாம். முழுசா எம் சுட்டிகளை படித்துபாரும். சரி, அப்ப கடாஃபி அங்கு உள்ள எதிர்ப்பளர்களை அனைவரையும் பூண்டோடு கொன்றழிக்கட்டும். ராஜபக்‌ஷே புலிகளை அழித்தது போல. நமகென்ன. அமெரிகா எதிர்ப்பு மட்டும் தானே நம் தராக மந்திரம். அதையே தொடர்வோம். கடாஃபி வெல்லட்டும். அதுதான் நியாயம்.

      போலி லிபர்டேரியன் என்பவன் இங்கு உம்மை திரு.JOHNNY அவர்களே என்று விளித்திருக்கும் லுஸு. நான் அல்ல அவன். திரு என்றெல்லாம் உம்மை விளிப்பதற்கில்லை. வினவு மற்றும் வாசகர்களே : அந்த பின்னூட்டம் ஒரு போலி லிபெர்டெரிய கபோதி இட்டது. நான் அல்ல.

  20. even if the u.s attack india citing any silly reasons fools like libertarian will continue to support them.ignore these fellows.only the communists stood against direct foreign investments in the insurance sector in the previous govt.they too heeded them since they were a minority govt.the investors will simply issue a paper and go in case of bankcrupcy as they did in enron and unioncarbide. only because of the leftists we were untouched by the recession which was a result of tumbling insurance giants in the u.s.

  21. வினவில் ​வெளிவந்துள்ள கட்டு​ரை பல்​வேறு ​கோணங்களிலும் சரியான நி​லை ​கொண்டதாக​வே படுகிறது. கட்டு​ரை​யை படித்த ​பொழுது ஏற்பட்ட பல கருத்துக்க​ளை பகிர்ந்து ​கொள்ளலாம் என்ற ஆவலில் எழுதுகி​றேன். நிகழ் கால உல​கை ஒட்டு​மொத்தமாக புரிந்து​கொள்ள ​வேண்டியதன் ஒரு பகுதியாக​வே லிபியா​விற்கான யுத்தத்​தையும் பார்க்க ​வேண்டியுள்ளதாகக் கருதுகி​றேன்.

    அ​மெரிக்கா, ​சோவியத் யூனியன் என்ற இரு வல்லரசுகளால் வழிநடத்தப்பட்ட இந்த உலகத்தின் அரசியல் வ​ரைப​டைத்​தை முழு​மையாக மாற்றி எழுதிக் ​கொண்டிருக்கும் ஒரு வரலாற்றுச் சூழலில் நாம் வாழ்ந்து ​கொண்டிருக்கி​றோம். அதன் ​வெளிப்பா​டே உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் ​மேலாக நிலவிவந்த பல்​வேறு அரசுகளும், ​தேசிய இன மற்றும் புரட்சிகர இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்​றைக்கு மிகப்​பெரும் மாற்றங்களுக்கும் வீழ்ச்சிகளுக்கும் மிகப்​பெரிய அளவில் மிக அதிக ​வேகத்தில் உள்ளாகிக் ​கொண்டுள்ளன.

    இன்​னொருபுறத்தில் உலகம் முழுவதும் உ​ழைக்கும் மக்களும், நடுத்தர மக்களும் வரலாற்றில் முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்து ​கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ​பொறி விழுந்தவுடன் பற்றிக் ​கொள்ளும் வ​கையில் எரிவதற்கு சாதகமான காய்ந்த காடுகளாக உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்களின் தன்​னெழுச்சி இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

    தன்​னெழுச்சியான ​போராட்டங்களுக்கு உள்ள எல்லா பலஹீனங்களும் இப்​போராட்டங்களுக்கு உள்ளன. அ​வை தவிர்க்கமுடியாமல் சுலபமாக உலக வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்கு சாதகமாக ம​டைமாற்றப்படுகின்றன.

    கடந்த வருடங்களில் ஏற்பட்ட மிகப்​பெரிய ​பொருளாதார ​நெருக்கடிகளிலிருந்து ​வெளிவருவதற்கான சகல வழிக​ளையும் அ​மெரிக்காவும், ​மேற்கத்திய நாடுகளும் ஆய்வு ​செய்து​கொண்டிருந்தன, அதற்கான மாற்றுத் திட்டங்க​ளை ஏற்பாடு ​செய்து ​கொண்டிருந்தன என்கிற விசயங்க​ளையும் நாம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சி​னைக​ளோடு இ​ணைத்து பார்க்க ​வேண்டியுள்ளது.

    கடாபியின் லிபியா க​டைசி வ​ரை ரஷ்யா​வையும் சீனா​வையும் நம்பிக் ​கொண்டிருந்த​தையும் அதற்கு ​நேர்மாறாக அ​வை தற்​பொழு​தைய உலக வல்லாதிக்க சக்திகளிடம் கடாபியின் லிபியா​வை அநாதரவாக ​கைவிட்டுவிட்டதற்கான பின்னணியில் ஏன் நாம் இலங்​கையின் க​டைசி கட்ட இன விடுத​லைப் ​போராட்டத்தின் நாட்க​ளோடு ​தொடர்புபடுத்தி பார்க்க முடியாது என்கிற கண்​ணோட்டத்​தையும் முன்​வைக்க விரும்புகி​றேன். சீனா, இந்தியா ​போன்ற நாடுகளுக்கு இலங்​கை விசயத்தில் அ​மெரிக்கா த​லை​மையிலான ஐநா விட்டுக் ​கொடுப்ப​தைப் ​போல, மத்திய கிழக்கு நாடுகளின் விசயத்தில் மற்றவர்களுக்கு விட்டுக் ​கொடுக்க ​வேண்டிய நி​லை​மைகள் சீனா ​போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    கடந்த காலங்களில் பலமு​றை உலக அரசியல் வ​ரைபடம் சுரண்டல் வர்க்கங்களின் ​தே​வைகளுக்காக ஈவுஇரக்கமின்றி மனிதகுலத்தின் ​பெருங்குருதியால் மாற்றி வ​ரையப்பட்டிருக்கிறது. இ​ன்​றைக்கும் அதில் ஒரு பகுதியாக​வே இத​னை பார்க்க ​வேண்டியுள்ளது என நி​னைக்கி​றேன்.

  22. அமெரிக்கனே ஆச்சர்யபடுமளவுக்கு அவர்களை நன்கு தெரிந்து வைத்துள்ளார் நம்ம லிபர்ட்டி. இந்தியா அணுகுண்டு தயாரித்து அடுக்கி வைத்திருக்கான் அடிச்சுர வேண்டியத்தான் என்று அமெரிக்ககாரன் நினைக்கவே மாட்டான்.ஏன்னா அங்க ஒருத்தவன் நம்மை ரெம்மம்ப்ப நல்லவன்னு சொல்லிட்டான்னு கூட இருக்கலாம்.ரொம்ப நன்றி லிபர்ட்டி.இரான்லேந்து பைப்லைன் போட ட்ரை பண்ணுன மணிசங்கர ஐயரை மாத்தியதில் அமெரிக்க பங்கு உண்டுன்னு விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியதை பற்றி லிபர்ட்டி கிட்ட ஏதாவது கருத்தோ லின்க்கோ இருக்குமா?

    • //அங்க ஒருத்தவன் நம்மை ரெம்மம்ப்ப நல்லவன்னு//

      அய்யா உபேர்ட்டேரியன், யாரும் முழுசா நல்லவன் அல்லது கெட்டவன் என்று பிளாக்க அண்ட் வைட்டாக பார்க்க முடியாது. அது சரியான பார்வையை தராது. அமெரிக்க பல தவறுகளை செய்கிறது. பல சமயம மிக நல்ல செயல்களையும் செய்கிறது. இரண்டும் கலந்து தான் உள்ளது. நான் இதுவரை எழுதியதை, அமெரிகாவின் அயோக்கியதனம் என்றும் எழுதியதையும் படிக்காமல் இப்படி இங்கு…….

  23. இல்லை தமிழ். மிக தவறான புரிதல். பெட்டோரல் விலை பற்றி விவாதம் எழுந்ததால் தான் பதில் சொன்னேன். உயிர் பலி தடுக்கப்பட வேண்டும் என்று உமது ஆதங்கத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். கடாஃபியை தடுக்காவிட்டால், எதிர்பாளர்கள் அனைவரையும் கூண்டோடு அழித்துவிடுவான். அவனை தடுக்க வேறு என்ன வழி இருக்கு ? சொலுங்க.
    அமெரிக்க எதிர்ப்பு என்ற கண்ணாடி மாட்டிக்க் கொண்டு மட்டும் பார்த்தால், கடாஃபியை தடுக்க முடியாது. நல்ல வேளையா அவனின் படைகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டது. பேரழிவு தடுக்கப்பட்டது. எனது சுட்டிகளை முழுசா படித்து உள் வாங்கவும்.

    • ’போர் களத்தில், தொலைவில் இருந்து பார்க்கும் போது, நீ என் நண்பனை போல் இருக்கிறாய்…’
      From a distance you like my friend, even though we are at war..

      மிக அற்புதமான பாடல். one of my all time favourities :

      http://www.youtube.com/watch?v=ouUXmLkMS-s

      http://www.lyricsg.com/89495/lyrics/bettemidler/fromadistance.html

      From a distance the world looks blue and green,
      and the snow-capped mountains white.
      From a distance the ocean meets the stream,
      and the eagle takes to flight.

      From a distance, there is harmony,
      and it echoes through the land.
      It’s the voice of hope, it’s the voice of peace,
      it’s the voice of every man.

      From a distance we all have enough,
      and no one is in need.
      And there are no guns, no bombs, and no disease,
      no hungry mouths to feed.

      From a distance we are instruments
      marching in a common band.
      Playing songs of hope, playing songs of peace.
      They’re the songs of every man.
      God is watching us. God is watching us.
      God is watching us from a distance.

      From a distance you look like my friend,
      even though we are at war.
      From a distance I just cannot comprehend
      what all this fighting is for.

      From a distance there is harmony,
      and it echoes through the land.
      And it’s the hope of hopes, it’s the love of loves,
      it’s the heart of every man.

      It’s the hope of hopes, it’s the love of loves.
      This is the song of every man.
      And God is watching us, God is watching us,
      God is watching us from a distance.
      Oh, God is watching us, God is watching.
      God is watching us from a distance.

      தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

  24. @ அதியமான்

    //டெமாக்ரட்களின் கொள்கைகள் வேறு. ரிப்பளிக்கன்கள் போல் hawks and neo-conservatives அல்ல இவர்கள். //

    பில் கிளிண்டன் டெமாக்ராட் தானே. மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் தனது தவற்றை பொதுவில் ஒத்துக்கொண்ட பிறகு மூன்றே நாட்களில் சூடான் மீதும், ஆப்கன் மீதும் தாக்குதல் நடத்தியது எதற்காக?

    இன்னொரு சமயத்தில் செனட்டில் கிளிண்டனுக்கு எதிராக நடந்த இம்பீச்மென்ட் வாக்கெடுப்பின் பொது சரியாக இராக் மீது டாமஹாக் போட்டானே. டெமாக்ராட் தானே அவன்.

    சரி புஷ் நடத்திய இராக் போருக்கு முன்பான வாக்கெடுப்பில் ‘house of representatives ‘ இல் 40 % டேமாக்ராட்களும் செனட்டில் 65 % டேமாக்ராட்களும் அதற்க்கு ஆதரவாகத்தானே வாக்களித்தார்கள்?

    ஒரு இலட்சம் பேரைக் காவுகொண்ட போர் அது. கைகால் இழந்தவர்கள், ஆதரவற்றுப் போன குழந்தைகள் இலட்சக்கணக்கில்.

    சமீபத்தில் போபால் படுகொலைக்கு எதிரான இந்திய போராட்டங்களின் போது, அலுவாலியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறைக்காரன் ‘அடக்கி வை’ ன்னு மிரட்டல் விடுத்தானே. அது என்ன விதமான பொறுக்கித்தனம்?

    நேபாளில் மக்கள் எழுச்சி நடந்த போது, அதை போலீசைக் கொண்டு ஒடுக்குமாறு திரும்ப திரும்ப நேபாள பிரதமரிடம் அமெரிக்க தூதர் வலியுறுத்தி இருக்கிறார். humanitarian crisis பத்தில்லாம் அப்ப யோசிக்க முடியலியோ?

    Call the rapist to catch the molester. லிபியாவில் இதுதான் உங்கள் கொள்கை போல.

    • இலங்கையில் ஆளுங் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் உள்ள வேறுபாடு அவித்த மீனுக்கும் பொரித்த மீனுக்கும் உள்ளது போலத் தான் என்று காலஞ்சென்ற தோழர் சண்முகதாசன் சொல்லுவார்.

      மூன்றம் உலகைப் பொறுத்த்வரை, அமெரிக்காவில் ஆளுங் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் உள்ள வேறுபாடு அழுகல் மீனுக்கும் அழுகல் மீனுக்கும் உள்ளது போலத் தான்.

    • போத்தாம்கின்,

      அல் கோர் 2000 தேர்தலில் ஜெயித்திருந்தால் கண்டிப்பாக 2003இல் ஈராக் மீது அமெரிக்க படை எடுத்திறுக்காது என்பதை ஏற்கெனவே விளக்கியிருந்தேன். வெறும் 2000 வாக்குகளில் தோற்றார். அதை பற்றி யோசித்து பாருங்கள்.

      கிளிண்டன் முழுவதும் யோக்கியர் என்று சொன்னதில்லை. ஆனால் பின் லேடன் சூடான் மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் அமெரிக்க தூதரங்களை தாக்க ஆரம்பித்த பின் எதிர்வினையாத்தான் பல நேரங்களில் அமெரிகாவும் குறிபார்த்து அல்கோய்தா முகாம்களை தாக்க முனைந்தது. அதில் அப்பாவி சிவிலியன்கள் பலரும் இறந்தனர். ஆனால் 1999இல் சேர்பியா மீது நேட்டொ (இன்று லிபியா போல்) தாக்கி அவர்களின் இன அழிப்பை தடுக்கவில்லை என்றால் கோசோவா என்ற நாடே இன்று இருந்திருக்காது. அதை பற்றி விரிவாக எனது பதிவில் எழுதியுள்ளேன். மீண்டும் மீண்டும் அதை இங்கு விளக்க சொல்கிறீர்கள்.

      பின் லேடன் அமெரிகாவை எதிர்க்க காரணம் இஸ்ரேலின் மீறல்களை அமெரிக்கா கண்மூடித்தனமாக ஆதரிப்பதுதான். இஸ்ரேலின் வரலாறு மிக சிக்கலான ஒன்று. 1948இல் இஸ்ரேலுக்கு அய்.நா மூலம் ஒதுக்கப்பட்ட பகுதிகளை, இதர அரேபிய நாடுகள் போர் தொடுக்காமல் இருந்திருந்தால், அவர்கள் அமைதியாக வாழ்ந்திருப்ப்பர். சோவிய ரஸ்ஸியாவின் ஸ்டாலினும் அன்று இஸ்ரேல் உருவாவதற்க்கு உறுதுணையாக இருந்தார் என்பதை படித்து பார்க்கவும். அரேபிய – இஸ்ரேல் தொடர் போர்கள், பனிப் போரின் ஒரு அங்கமாக மாறி, அதன் தொடர் வரலாறு இன்றும் தொடர்கிறது. கடந்த 20 வருடங்களில் இஸ்ரேல் காட்டுதனமாக, நியாயமில்லாமல் பல தடவை நடந்து கொள்கிறது. ஆனால் அவர்களின் கடந்த கால வரலாறு அவர்களை பயத்தில் அப்படி வைத்திருக்கிறது. அரேபியர்களை நம்மவிடாமல் தடுக்கிறது. இதை பற்றியும் எமது பதிவில் விளக்கியிருக்கிறேன்.

      1979இல் ரஸ்ஸியா ஆஃப்கானிஸ்தான் மீது படை எடுத்ததன் தொடர் விளைவுகள் தான் பின் லேடன், அல் கொய்தா, பிறகு இரட்டை கோபுர தகர்ப்பு என்று சங்கிலி தொடர் போல் இன்றும் தொடர்கிறது. மிக சிக்கலான வரலாறு.

      ஈரான் இன்னும் சிக்கலான விசியம். ஈரானை இன்றும் அமெரிக்கா ‘நம்ப’ மறுக்கிறது. பழைய நீண்ட வரலாறு. ஷியா இஸ்லாமியவாதம், சன்னி அடிப்படைவாதத்தை விட பயங்கரமானது என்று ஒரு கோணம். பாலஸ்தீன இயக்கமான ஹ்மாஸ்க்கு ஈரான் அளிக்கும் ஆதரவு ஒரு சிக்கல்.

      அமெரிக்காவை கண்மூடித்தனமாக ‘ஆதரிக்கவில்லை’ என்பதை எமது எழுத்துகாளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். லிபியாவில் ரத்த ஆறு ஓடுவதை தடுக்க கடாஃபி படைகளை தாக்கி தடுப்பதை தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் நிஜம்.

      பார்க்கவும் :

      http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

      சரி, அமெரிக்க ஏகாதிபத்திய தாக்குதல்களை பற்றி இத்தனை ஆவேசம் கொள்பவர்கள், கம்யூனிச பாணி ஏகதிபத்திய காலங்களில், முக்கியமாக, ’புனித பசுவான’ ஸ்டாலின் அன்று ஆசிய குடியரசுகளையும், கிழக்கு அய்ரோப்பிய நாடுகளையும், போலந்தையும் நசுக்கி, ஏகாதிபத்திய காலனியாதிக்கம் புரிந்த வரலாற்றை கண்டு இதே போல் ‘ஆவேசம்’ கொள்ள மறுப்பது ஏன் ? போலந் நாட்டு வரலாற்றை படிக்கவும். போலந் மக்கள் அதை மறக்க, மன்னிக்க இன்றும் தயாரில்லை.

      எம்மை கண்டபடி பேசுபவர்கள் யாரும் இதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. எல்லாம் பொய் பிரச்சாரம் அல்லது திரிபுவாதிகளின் செயல்கள் என்று ஒற்றை வரியில் நிராகிரிப்பர். அது இங்கு மட்டும் தான் முடியும். வெளியே முடியாது. வரலாற்று சுவடுகள் சொல்லும், எவை உண்மைகள் என்று..

      • அதியமான்,

        ஸ்டெடியா நின்னு பேசலாமே சார். எதுக்கு குணா கமல் மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ராமி… அபிராமி… மாதிரி, ‘ரிக்கா… அமெரிக்கா…’ அப்படின்னு சொல்லாதது தான் பாக்கி. அமெரிக்க படைகள் பொழுதுபோக்குக்காக ஆப்கன் சிவிலியன் மக்களைக் கொன்று களித்து வரும் புகைப்படங்கள் சூடாக வெளிவந்துள்ளன. பென்டகன் மன்னிப்பு கேட்டு விட்டு லிபியாவில் ஜோலியைப் பார்க்க கிளம்பி விட்டார்கள்.
        http://www.rollingstone.com/politics/news/the-kill-team-20110327

        இந்த யோக்கியர்கள் லிபியாவுக்குள் நுழைந்து சமாதானம் ஏற்படுத்துவார்கள் என்ற உங்கள் கருத்தை விற்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இராக் போரை நியாயப்படுத்த ஐ.நாவில் காலின் பாவெல் அந்த்ராக்ஸ் குப்பியைக் காட்டியது தான் நியாபகம் வருகிறது.
        http://en.wikipedia.org/wiki/File:Powell-anthrax-vial.jpg

        செத்துப் போன ‘அமெரிக்கா காப்பான்’ -ங்கிற கற்பனையைத் தூக்கிக் கொண்டு மலைமுகட்டில் இருந்து குடித்து விளையாடுவதென நீங்கள் முடிவு செய்வீர்கள் என்றால்…. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலே அல்ல…. அதையும் தாண்டி……

        • போத்தாம்கின்,

          நான் சுற்றி சுற்றி வருவதாக உங்களுக்கும் ‘மட்டும்’ தான் தெரிகிறது. may be நாலு லார்ஜ் போட்டிருப்பீங்க போல. (ஒரு நாள், நாம் ஒரு நல்ல பார்ல் உக்காந்து விவாதம் செய்யலாம். நான் ரெடி !!).

          லிபியாவிற்க்குள் எந்த படையும் நுழையப்போவதில்லை. கடாஃபி எதிர்ப்பாளர்கள் நேற்று பின் வாங்கியிருக்கிறார்கள். காரணம் அமெரிக்க மற்றும் இதர நாடுகளின் வான் தாக்குதல், அவர்களின் offensive attackகளுக்கு துணை போகவில்லை :

          http://www.thehindu.com/todays-paper/tp-international/article1583361.ece

          The crucial difference between the opposition’s advance and its retreat is the role of Western air power. While U.N.-authorised air strikes had destroyed the regime’s heavy weaponry around Ajdabiyah and the oil towns, it was absent on Tuesday, when civilian lives were not on line.

          Observers say that on Monday, NATO Secretary-General Anders Fogh Rasmussen was announced air support would be provided only when civilian lives were under threat.

          ஈராக் போர் தேவையில்லாத, அயோக்கியத்தனம் என்றும் தெளிவாக எழுதியுள்ளேன். காலின் பவலில் பேச்சை கேட்க்கவில்லை புஸ். அல் கோர் பற்றியும் எழுதியிருந்தேன்.

          அமெரிக்காவின் செயல்பாடுகளை அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அதே போல் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் அறிவுடைமை அல்ல. செர்பிய போர் பற்றி பேச மாட்டீங்கறீங்க. ரஸ்ஸியாவின் செயல்பாடுகளை பற்றியும் தான்.

        • ஆழ்ந்த அனுதாபங்கள் Mr. Libert. வினவில் பொருளாதாரப் புலியாக வலம்வருபவர், பொருளாதார கட்டுரைகளாக எழுதித் தள்ளும் பொருளாதார மாமேதை, சுதந்திர உணர்வாளன் என்று வெளிக்காட்டிக்கொள்வதற்காகவே libertarian என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட சுதந்திரப் போராளி ஆகிய சிறப்புத் தகுதிகளுடைய கனவானாகிய தங்களுக்கு அரசியல் தெரியவில்லையே என்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

  25. அதியமான் மீது இது நாள் வரை நடுநிலையாளர் என்ற கருத்து இருந்தது. இன்று அவராகவே அம்பலமாகியுள்ளார்.இப்படியும் ஒருவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்க்கு சாமரம் வீச முடியும் என இப்பொழுது தான் நம்புகிறேன். முதளாலித்துவ அறிவுஜீவிகள் எனற கோட்பாடு இப்பொழுது தான் புரிகிறது. இந்த கட்டுரை அதியமானை(இவர் போன்ற) பற்றி நல்ல புரிதலை தந்திருக்கிறது.

    • viyay,

      நடுனிலைவாதி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஒவ்வொற்று issueவைம் அதன் merit / demerit அடிப்படையில் தான் தீர்மானிக்கிறேன். அமெரிக்கா செய்த அயோக்கியத்தனங்களை (முக்கியமாக ஈராக்கில்) நான் அது மிக தவறு என்று தான் எழுதியிருக்கிறேன். ஆனால் 1999இல் போஸ்னியாவை காப்பறியது, இன்று லிபிய எதிர்ப்பாளைகளை காப்பது : இவை உள்னோக்கங்கள் கொண்டவை என்று நீங்க தான் ‘அமெரிக்க எதிர்ப்பு’ என்ற மஞ்சள் கண்ணாடியை அணிந்து கொண்டு பேசரீக. அமெரிக்கா என்ன செய்தாலும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்பது அறிவுடைமை அல்ல.

      While much of Libya has tipped out of Gaddafi’s control as of early March 2011, coming under the aegis of a coalition of opposition forces, including soldiers who decided to mobilize in support of the rebels, Gaddafi forces have been able to forcefully respond to recent rebel pushes in Western Libya and counterattack strategic areas such as Ras Lunuf.[62] The town of Zawiyah, 30 miles from Tripoli, was bombarded by planes and tanks and seized by pro-Gaddafi troops, “exercising a level of brutality not yet seen in the conflict.” [63] Eastern Libya, centered on the second city and vital port of Benghazi, is said to be firmly in the hands of the opposition, while Tripoli and its environs remain in dispute.

      ஈழப்போரின் கடைசி மாதங்களில் நடந்த சுற்றிவளைப்பை ஒத்த நிலை லிபியாவில். (எதிர்ப்பாளர்கள் புலிகளை போல் ஃபாசிஸ்டுகள் அல்ல என்பது வேறு விசியம்). அவர்களை காக்க ஒரே வழி, கடாஃபியின் படைகள் மீது வான் வழி தாக்குதல் மட்டும் தான். இல்லாவிட்டால் பல லச்சம் எதிர்ப்பாளர்கள், மக்கள் கொல்லப்ட்டிருப்பர். அதை நீங்க வேடிக்க பார்த்துக்கொண்டு, இங்கு கதை பேசிக்கொண்டிருக்கலாம்.

      இதையும் பாருங்க :

      http://www.libyanfsl.com/%D8%A7%D9%84%D8%A8%D9%8A%D8%A7%D9%86%D8%A7%D8%AA%D9%88%D8%A7%D9%84%D8%AA%D8%B5%D8%B1%D9%8A%D8%AD%D8%A7%D8%AA/tabid/70/newsid452/4515/mid/452/language/en-US/Default.aspx

      Gaddafi’s use of mass rape, torture, abductions as war tools.

  26. இந்தியா அளவுக்கு பாகிஸ்தானுக்கும் ஆயுதம் விற்கும் அமெரிக்கன் நல்லவனாமே?.இந்தியாவுக்கு வரும் எல்லா அமெரிக்க பெருந்தலைகளும் பாகிஸ்தானுக்கு வந்துட்டுதான் இங்கே வருவாய்ங்களாம் அப்படியா?வாஜ்பாய் அணுகுண்டு சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா சொன்னதற்காக இருபத்தாறு நாடுகள் நம் மீது வியாபார தடை விதித்ததாய் சொல்ராய்ங்களே நெசமாவா?அப்புறம் இரான்லேந்து ஏன் பைப்லைன் போட்றன்னு சொல்லி நம்ம மணிசங்கர அய்யிரையே மாத்த சொன்னாயங்களாமே?இந்தியாவுல நமக்கு எதிராய் எதாவது கலவரம் வந்தால் காப்பாத்த அமெரிக்கா தான் வருவான்னு பாப்பான்கள் எப்பவுமே அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணுவாய்ங்களாமே?

  27. அமெரிக்கா செய்த அயோக்கியத்தனங்களை மிக தவறு என்று எழுதியிருக்கிறேன்………….எனது சுட்டிகளை முழுசா படித்து உள் வாங்கவும்…………அமெரிக்காவை கண்மூடித்தனமாக ‘ஆதரிக்கவில்லை’ என்பதை எமது எழுத்துகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும்…………… நான் இதுவரை எழுதியதை, படிக்காமல் இங்கு…….பார்க்கவும் எமது பழைய பதிவு…….. libertarian மாபெரும் எழுத்தாளர் போல் அலட்டிகொள்கிறார்?இங்கே வந்து ஏன் கடையை போடுகிறார்?பக்கம் பக்கமாய் எழுதி அந்த சுட்டியை படி இந்த சுட்டியை படின்னு போஸ்டர் ஓட்டிகிட்டு…..பொதுக்கருத்துக்கு மாற்றாய் ஏதாவது சொல்லி பெயர் வாங்க துடிக்கிறார்.எல்லோருக்கும் தெரிந்ததை தான் சொல்கிறார் அனால் எதோ புதிய பார்வையாய் பில்டப் கொடுத்துகிட்டு கடுமையான எரிச்சல் கொடுக்கிறார்.

  28. இதனால் பதிவுலகத்திற்கு தெரியபடுத்துவது என்னவென்றால், “Libertarian” என்று நாம் எல்லோருக்கும் அறியப்பட்ட அதியமான் அவர்கள் அமெரிக்க ஆதரவாளரோ, முதலாளி வர்க்க சர்வாதிகார ஆதரவாளரோ அல்ல. அவர் “கம்யூனிச பூதத்திற்கு” மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார், அதுவும் கம்யூநிசம் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுசெல்லும் என்கிற ஒரே காரணத்தினாலும் மக்கள் அனைவரும் இன்புற்றிருக்கவேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்தினாலும் மட்டுமே இங்கு வந்து பின்னூட்டம் இடுகிறார். சரி தானே Libertarian ?

  29. I am not sure where you get your news..In the dream world?

    If US is after OIL..why on earth the GAS price in US has always been on the rise for years…The truth is US did not take a single drop of oil from any country,where it applied force…On the flip side..it only made the US economy worse…because US has to foot the bill for the reconstruction of these countries…

  30. reconstruction of these countries…this is what we mean american corporate giants are involved in the so called reconstruction in kuwait and iraq.you can check in the net how many billions and trillions of dollars are invested there and by whom.

  31. இங்கே அரட்டைகளினதும் ஊகங்களினதும் அடிப்படையில் அமெரிக்க நன்னோக்கங்கள் பற்றி விளக்கங்களும் வியாக்கியானங்களும் வந்துகொண்டிருக்கையில். அமெரிக்காவும் கூட்டாளிகளும் தங்களுக்கு எந்த விதமான வக்காலத்துக்கும் தேவையே இல்லை என்ற விதமாகத் தங்கள் ஆக்கிரமிப்பைப் பகிரங்கமாகவே மேற்கொள்ளுகிறர்கள்.

    அமெரிக்க ஆக்கிரமிப்பு நடைமுறை வியட்னாம் முதல் ஈராக் வரையும் அப்பாலும் ஒரேமாதிரியானது தான்.
    எந்த வழவழா விளக்கமும் உண்மைகளை மூடி மறைக்கப் போதாததாகும்.

    • இல்லை. லிபியாவிற்க்குள் எந்த படையும் நுழையப்போவதில்லை. கடாஃபி எதிர்ப்பாளர்கள் நேற்று பின் வாங்கியிருக்கிறார்கள். காரணம் அமெரிக்க மற்றும் இதர நாடுகளின் வான் தாக்குதல், அவர்களின் offensive attackகளுக்கு துணை போகவில்லை :

      http://www.thehindu.com/todays-paper/tp-international/article1583361.ece

      The crucial difference between the opposition’s advance and its retreat is the role of Western air power. While U.N.-authorised air strikes had destroyed the regime’s heavy weaponry around Ajdabiyah and the oil towns, it was absent on Tuesday, when civilian lives were not on line.
      Observers say that on Monday, NATO Secretary-General Anders Fogh Rasmussen was announced air support would be provided only when civilian lives were under threat.

  32. அமெரிக்கா எல்லா நாடுகளிலும் எடுத்த எடுப்பில் நுழையவில்லை.
    குறி வைத்த எந்த நாட்டையும் தன் வேட்டைக்களமக்கத் தயங்கவுமில்லை.

    அங்குள்ள அமெரிக்காவின் பதம்தாங்கிகட்கு கடாஃபியை உடனடியாக விழுத்த வலிமை போதாது.
    தொடர்ந்தும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.
    பிரித்தானியப் படையினர் ஊடுருவியுள்ளனர்.
    இங்குள்ள அமெரிக்காவின் பதம்தாங்கிகட்கு நேரம் ஒரு கதை சொல்லவே தடுமாற்றமாக உள்ளது.

    கடாஃபியின் எதிரணியில் வலுவான பகுதியாக அல் க்ஹைடாவினரின் நட்புச் சக்திகள் உள்ளன. அதுவும் திட்டங்களை மாற்றியமைக்க ஒரு தேவையை ஆக்கியுள்ளது.

    ஆட்டம் இன்னும் முடியவில்லை.
    அவசர முடிவுகள் செல்லாமற் போகும்.

    • //கடாஃபியின் எதிரணியில் வலுவான பகுதியாக அல் க்ஹைடாவினரின் நட்புச் சக்திகள் உள்ளன. //

      சரி, இப்ப என்ன செய்யனும்கிறீக ? அமெரிக்க தாக்குதலே நடக்காம்ல், கடாஃபி எல்லோரையும் போட்டு தள்ளியிருந்தால், மகிழ்வீர்களா ? என்னென்னவோ, எகிப்து, துனிசிய புரட்சிகளை பற்றி திருவாய் மலர்ந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக, அதே போல் லிபியாவில் உருவான ‘எதிர்ப்பை’ கடாஃபி நசுக்கியிருந்தால் உமக்கு பரம திருப்த்தியா இருந்திருக்க்கும் போல. பென்சாய் நகரில் சிக்கியிருப்பவர்கள் செத்தால் உமக்கென்ன. நீர் அங்கே இல்லையே. தமிழ்நாட்டில் தானே இருக்கிறீர். இப்படி தான் பேசுவீர்.

      • யார் எங்கே இருந்தால் என்ன! புருஷிமாவில் வெளியான கதிர்வீச்சு உங்களது மூக்கையும் வந்தடையலாம்.

    • இங்குள்ள அமெரிக்காவின் பதம்தாங்கிகட்கு நேரம் ஒரு கதை சொல்லவே தடுமாற்றமாக உள்ளது.

      ஆட்டம் இன்னும் முடியவில்லை.
      அவசர முடிவுகள் செல்லாமற் போகும்.

  33. ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?

    ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .

    ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.

    தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

    ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.

    ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.

    இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.

    ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.

  34. கடாஃபி போரை தொடர்ந்து கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால், மானிட பேரவலம் உருவாகியிருப்பது மட்டுமல்ல, எண்ணை கிணறுகளும் தீ வைக்கப்பட்டு, பெரும் அழிவு உருவாகியிருக்கும். பிறகு எண்ணை விலை டாலர் 200அய் சுலபமாக தொட்டிருக்க்கும். அமெரிக்க தாக்குதல் நடத்தியதால் இந்த விலை உயர்வு ஏற்படவில்லை. உள்ள நாட்டு போரினால் தான். தாக்குதல் நடத்தாமல், உம்ம பேச்சை கேட்டிருந்தால், இன்னேரம் 200 டாலரை தொட்டிருக்கும்.

    எவன் செத்தாலும் பரவாயில்லை. பெட்ரோல் விலை மட்டும் உயரக்கூடாது என் கிறார் நம் லிபரேரியன்.
    போரை நியாயப்படுத்தும் மூடனே.

Leave a Reply to போதெம்கின் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க