privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎக்சிட் போல்! என்ன நடக்கும்?

எக்சிட் போல்! என்ன நடக்கும்?

-

 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு நாள் இருக்கையில் நேற்றும், இன்றும் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் வாக்குச்சாவடி கருத்துக் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? தமிழகத்தைப் பொறுத்தவரை இது குதிரைப்பேர வர்த்தகத்திற்கான முன்னறிவிப்பாக, தயாரிப்பாக இருக்குமோ?

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - மேற்கு வங்கம்
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்திற்கு இந்தப் பிரச்சினை இல்லை. எல்லா வாக்குச்சாவடி கணிப்புகளும் திரிணாமூல் காங்கிரஸ் நான்கில் மூன்று பங்கு வெற்றி பெறும் என்பதை தெரிவித்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 50 முதல் 60 தொகுதிகளும், மம்தாவின் கூட்டணிக்கு 220 முதல் 230 தொகுதிகளும் கிடைக்குமெனத் தெரிகிறது. 34 ஆண்டுகால சி.பி.எம் கூட்டணி ஆட்சி மிகுந்த சோகத்தோடு முடிவுக்கு வருகிறது.

இன்றும் கூட சி.பி.எம் அணிகளுக்கு சீனத்தையும், கியூபாவையும் கம்யூனிச நாடுகளாக காட்டி நம்பிக்கையை வளர்க்க முனையும் அந்த கட்சி உள்நாட்டில் மேற்கு வங்கத்தை காட்டி நம்பிக்கை ஊட்டி வந்தது. இனி அந்த ஒரே நம்பிக்கையும் இல்லை எனும் போது ‘தோழர்கள்’ என்ன செய்வார்கள்? பன்னாட்டு நிறுவனங்கள் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து இடது சாரிகள் நடத்த வேண்டிய போராட்டத்தை மம்தா நடத்தினார். இடதுசாரிகள் அதை ஒடுக்கினார்கள்.

அரசாங்கம், போலீசு என அனைத்தையும் கட்சி எந்திரமாக்கி, ஆயுதம் ஏந்திய வன்முறை தொண்டர்-குண்டர் கும்பல் மூலம் மாநிலத்தை ஆண்டு வந்த சி.பி.எம் மீது மேற்கு வங்க மக்களுக்கு அளவில்லாத கோபம் இருந்தது. சிங்கூர், நந்திகிராம் போராட்டங்கள் மற்றுமொரு முக்கிய காரணம். எனினும் சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய அளவில் உணர்ச்சி வசப்படும் மம்தா பானர்ஜி போன்ற ‘வீராங்கனையே’ இத்தகைய ‘சித்தாந்த’ அமைப்பு பலம் உள்ள மார்க்சிஸ்ட் கூட்டணியை வீழ்த்தப் போதுமானவர் என்பது சி.பி.எம்மின் தரத்தைக் காட்டுகிறது.

மம்தாவைத் தவிர சொல்லிக்கொள்ளும் அளவு தலைவர்கள் இல்லாத, இருக்கும் தலைவர்களும் காங்கிரசு பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் மம்தாவின் ஆட்சி எப்படி இருக்குமென்பதை யூகித்துக் கொள்ளலாம். இது குறித்து அடுத்த வாரம் விரிவாக எழுதுகிறோம். எனினும் தோழர்களுக்கு முன்கூட்டியே ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நக்கீரன் எக்சிட் போல்
நக்கீரன் எக்சிட் போல் - தமிழ்நாடு

தமிழகத்தைப் பொறுத்த வரை நக்கீரன் அளித்திருக்கும் எக்சிட் போல் கணிப்பின் படி தி.மு.க கூட்டணிக்கு 137 இடங்களும் ( தி.மு.க – 84, காங்கிரசு – 24, பா.ம.க – 19, வி.சி – 6, முஸ்லீம் லீக் – 3, மூ.மு.க – 1 ), அ.தி.மு.க கூட்டணிக்கு 89 இடங்களும் ( அ.தி.மு.க – 73, தே.மு.தி.க – 7, கொ.இ.பே – 1, சி.பி.எம் – 5, சி.பி.ஐ – 2, ம.ம.க – 1 ) கிடைக்குமாம். 8 தொகுதிகள் இழுபறியாம். அதில் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியும் அடக்கம் என்ற மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.

கருத்து கணிப்புக்கு கடினமான மாநிலம் தமிழ்நாடு என்பதை இந்திய அளவு ஊடகங்களே ஒப்புக்கொண்டிருக்கின்றன. அவர்களே அப்படி தவறாக கணித்து மூக்குடைபட்டவர்கள் என்பதோடு, டெல்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டை பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால் தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. அதனால் நக்கீரன் முடிவுகள் கேள்விக்கிடமற்றவையா?

இதுவரை வந்த தேர்தல்கள் எல்லாம் நக்கீரன் முடிவுகளோடு துல்லியமாக ஒத்துப்போயின என்றும் கூறுகிறார்கள். இப்படித்தான் சென்ற  பாராளுமன்றத் தேர்தல் போது பா.ம.க வும், “நாங்கள் இருக்கும் கூட்டணிதான் ஜெயிக்கும்” என்று சொல்லி மூக்குடைபட்டார்கள். மற்ற ஊடகங்களெல்லாம் எப்படி கருத்துக் கணிப்பு நடத்தின என்பதை முழுமையாக வெளியிடும். நக்கீரன் ரிசல்ட்டை மட்டுமே வெளியிடும். எத்தனை பேரை சந்தித்தார்கள், வாக்கு விகிதம் எத்தனை என்பதெல்லாம் தெரியாது.

மேலும் கொழும்பிலிருந்து எழில், டெல்லியிலிலுந்து சிந்துஜா என்று நக்கீரனில் வரும் கட்டுரைகளை படிக்கும் போதெல்லாம் அப்படி இரு நிருபர்கள் அந்தந்த இடங்களில் இருக்கிறார்களா என்று சந்தேகம் வரும். அது போல போயஸ் தோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி காலனி வீடுகளில் நக்கீரன் நிருபர்கள் கூட இருந்து பார்த்தது போலவும் எழுதுவார்கள். அந்த அளவுக்கு நக்கீரனின் பார்வைகள் உலகமெங்கும் பரிந்து விரிந்து கிடக்கின்றன.

தி.மு.க ஆதரவு உள்ள நக்கீரன் நிறையவே அனுபவவாதப் பார்வையோடுதான் தேர்தலை அணுகியிருக்கும். இரண்டையும் வைத்துப் பார்த்தால் நக்கீரன் கணிப்புகள் ஒரு சார்பானது, அறிவியல் பூர்வமற்றது என்று ஆகிறது. எனினும் சில நேரம் அனுபவப் பார்வை சரியாகவும் இருக்கலாம். இரண்டு கூட்டணிகளில் ஏதோ ஒன்று வெற்றி பெறவேண்டும் என்பதால் குருட்டுப் பூனை விட்டத்தில் குறி பார்த்து பாயலாமே?

நக்கீரன் கணிப்பு சரியென்று வைத்துக் கொண்டால் என்ன நடக்கும்?

தி.மு.கவிற்கு 84 இடங்களும், அ.தி.மு.கவிற்கு 73 இடங்களும் கிடைக்கும் என்றால் இது தி.மு.கவிற்கு இனிய செய்தி அல்ல. அ.தி.மு.க கூட்டணிக்கு 89 இடங்களோடு காங்கிரசு, பா.ம.கவை கூட்டினால் மெஜாரிட்டி கிடைக்கும். இது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழி கைது என்று தி.மு.க கூட்டணி முரண்படுவதற்கான நேரம் வந்தால் இதுவும் நடக்கலாம். ஆனாலும் பணபலத்தில் வல்லவர்களான தி.மு.க தலைமை தனது கூட்டணி கட்சிகளையே விலை கொடுத்து வாங்கியோ, மந்திரி பதவி கொடுத்தோ சரிக்கட்ட முயலும். காங்கிரசைப் பொறுத்த வரை வெற்றி பெறும் 24 நபர்களும் குறைந்த்து 24 கோஷ்டிகளாக இருப்பதால் விலைக்கு வாங்குவது சுலபம். பா.ம.கவைப் பொறுத்தவரை சுயமரியாதை துளியும் இல்லாத கட்சி என்பதால் எதிர்காலத்தில் அ.தி.மு.கவோடு போகாது என்பதற்கு உத்திரவாதமில்லை.

மேலும் பா.ம.கவிற்கு 19 தொகுதிகள் என்பது ஒரு ஜாக்பாட் பரிசுதான். அதன் ஆதாயத்தை அதிக பட்சம் கறப்பதற்கு ராம்தாஸ் முயல்வார். எனினும் இந்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதோ, கட்சியை உடைப்பதோ சிக்கலான விசயமல்ல. மொத்தத்தில் காங்கிரசு கட்சியின் தலைமை, அதன் கோஷ்டிகளின் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை பார்க்கும் போது தி.மு.க ஆட்சி என்பது தினசரி திகிலோடு நடக்கவே வாய்ப்பிருக்கிறது.

நக்கீரன் கணிப்புபடி தே.மு.தி.கவிற்கு 7 தொகுதிகள்தான் என்பது நிச்சயம் மகிழ்ச்சியடைய வேண்டிய விசயம். இதன்படி இன்று வைகோவிற்கு நடந்தது நாளை விஜயகாந்திற்கும் நடக்கலாம். எப்படியோ தமிழகத்தை கவ்வியிருக்கும் சில அபயாங்களில் ஒன்றாவது இந்த தேர்தலோடு  முடிவுக்கு வந்தால் அது நல்ல விசயம்தான். விஜயகாந்த் கட்சியினரும் தி.மு.கவால் மலிவான விலைக்கு வாங்கப்படக் கூடியவர்கள்தான். அதே நேரம் அ.தி.மு.கவிற்கு குறைவான சீட்டுகள் இருப்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்தால் இந்த வீணாப் போனவர்களுக்கு பிழைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

நக்கீரன் கருத்துப்படி காங்கிரசுக்கு 24 தொகுதிகள் கிடைக்கும் என்பது சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. இதனால் நாம் தமிழர், சீமான் போன்ற தமிழின ஆர்வலர்களின் பரப்புரைக்கு கிடைத்த வெற்றி என நினைத்து விடாதீர்கள். எந்தப் பரப்புரையின்றியுமே காங்கிரசு இப்படித்தான் தோற்றிருக்கும். இருப்பினும் தி.மு.க, அ.தி.மு.கவிற்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தில் இருப்பதால் இந்த கருமாதிக்கு போன கட்சி துரதிர்ஷ்டவசமாக வரும் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும். மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற கத்தியை வைத்தே 63 இடங்களை வாங்கிய காங்கிரசுக் கட்சி, கூட்டணி ஆட்சியிலும் அதிக பட்ச ஆதாயங்களை அடைய முனையும். டெல்லிக்கு அடிமைகளாகிவிட்ட தி.மு.கவினர் இதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது.

ஒருவேளை டெல்லித் தலைமையின் முடிவுக்கு மாறாக காங்கிரசுக் கட்சி எம்.எல்.ஏக்களை கட்சி மாற வைப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால் அந்த தைரியம் தி.மு.கவிற்கு இருக்குமா என்பதுதான் சந்தேகம். நக்கீரன் கருத்துப்படி கொங்கு வேளாளர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது நிச்சயம் நல்ல விசயம்தான். இந்த ஆதிக்க சாதி கட்சியும் இந்த தேர்தலோடு மங்களம் பாடி புதைக்கப்படும்.

நக்கீரன் கணிப்புப் படி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களும், வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடமும் கிடைக்குமாம். தோழர்கள் மேற்கு வங்க தோல்வியையே ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கும் போது தமிழக முடிவு குறித்து அவர்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - தமிழ்நாடு
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - தமிழ்நாடு

அடுத்து சி.என்.என் – ஐ.பி.என் எக்சிட் போல் கணிப்பை பார்ப்போம். தமிழகத்தை சற்றும் அறியாத இந்த டெல்லி கம்பெனியின் கருத்துப்படி அ.தி.மு.க கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்குமாம். ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பின் படி மேற்கண்ட முடிவுகள் கிட்டத்தட்ட அதே தொகுதிகளில் நேர்மாறாக இருக்கிறது. அதாவது தி.மு.கவிற்கு மயிரிழை பெரும்பான்மையும், அ.தி.மு.கவிற்கு மயிரிழை தோல்வியும் எனச் சொல்கிறது.

சி.என்.என் மதிப்பிட்டீன்படி தி.மு.க கூட்டணிக்கு 44 சதமும், அ.தி.மு.க கூட்டணிக்கு 46 சத வாக்குகளும் கிடைக்குமாம். இதன்படி இரண்டு சதவீதம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

இந்தக் கணிப்பு உண்மையெனக் கொண்டால் தமிழகத்தில் நிச்சயம் குதிரைப் பேரம் தீவிரமாக நடக்கும். சிறு கட்சிகளின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த விலையில் வாங்கப்படுவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெறும். கவர்னர் வழியாக காங்கிரசுக் கட்சி என்ன நிலை எடுக்கும், பணபலத்தில் கோலேச்சும் தி.மு.கவோடு காங்கிரசு என்ன உறவைக் கொண்டிருக்கும் என்பது ஒரு கேள்வி. மேலும் அ.தி.மு.கவும் பணபலத்தில் ஒன்றும் ஏழையல்ல என்பதோடு, காங்கிரசோடு சேர்வதற்கு எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் கட்சிதான்.

இதன்படி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் பணியும், பறிக்கும் பணியும் மிகத்தீவிரமாக நடைபெறும். எல்லாக் கட்சி தலைவர்களும் ஊடகங்களில் மிகுந்த கவனிப்பை பெறுவார்கள். திரைமறைவு பேரங்கள், கிசுகிசுக்கள், சவடால்கள், பரபரப்பு செய்திகள் என்று  தேர்தலில் இல்லாத காட்சிகள் திகிலோடு நடந்தேறும். ஆள்பிடிப்பதில் வல்லவர் அழகிரியா, செங்கோட்டையனா என்று போட்டி நடக்கும். மன்னார்குடி குடும்பமும், கோபாலபுரம் குடும்பமும் கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற போட்டியில் இறங்கும்.

ராமதாஸ், விஜயகாந்த், திருமா, ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்றோரெல்லாம் மிகுந்த முக்கியத்துவம் உடைய தலைவர்களாக ஊடகங்களில் வலம் வருவார்கள். ஜூனியர் விகடன் அ.தி.மு.க அணிக்கும், நக்கீரன் தி.மு.க அணிக்கும் இல்லாத செய்திகளை பயங்கரமாக அள்ளி விடுவார்கள். இடையில் கனிமொழி கைது விவகாரமும் வரப்போவதால் ஜூனியர் விகடனுக்கு கொண்டாட்டம்தான்.

இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் வாக்களித்த மக்களின் ஜனநாயக கடமை உணர்வு குறுகிய நேரத்திலேயே மரித்து விடும். மக்களும் விறுவிறுப்பான அரசியல் செய்திகளை டி.வி சீரியல் போக பார்த்து விட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

மற்றபடி இப்படித்தான் நடக்குமா என்பதை வரும் 13-ம் தேதி உறுதி செய்து கொள்ளலாம். அதுவரை காத்திருப்போம்.

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - கேரளா - அஸ்ஸாம்
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - கேரளா - அஸ்ஸாம்

கேரளாவிலும் இரு கூட்டணிகளுக்கும் மயிரிழை வெற்றிதான் கிடைக்குமென்று மாறுபட்ட கணிப்புகள் கூறுகின்றன. அப்படி வரும் பட்சத்தில் கேரளாவிலும் பிரச்சினைதான். அஸ்ஸாமில் மட்டும் காங்கிரசு சிறு அளவு பெரும்பான்மையோடு வெற்றி பெரும் என்று கூறுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மேற்கு வங்கத்தில் மம்தாவின் வெற்றியைத் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி என்பது திரிசங்கு நிலைதான். குறிப்பாக தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை வரும்போது நடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்த்தால் இப்போதே உற்சாகமாக இருக்கிறது. தேர்தலில் அதிக அளவு வாக்களித்த மக்களின் ஜனநாயகத்திற்காக பெருமைப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் இந்த குழப்பமான முடிவு காரணமாக “என்னய்யா ஜனநாயகம்” என்று நொந்து கொள்வார்கள், ஆக இதுதான் போலி ஜனநாயகம் என்று மக்களிடம் நாம் மீண்டும் உறுதி செய்வதற்கு இந்த தொங்குநிலை சட்டமன்றமும் உதவி செய்யும்.

ஒரு வேளை தி.மு.கவோ, இல்லை அ.தி.மு.கவோ தனிப்பெரும்பான்மை பிடித்து ஆட்சியைப் பிடித்தால் முன்னெப்பொதும் இல்லாத அளவு ஊழல்களும், திரை மறைவு வருமானங்களும் கொடிகட்டிப்பறக்கும் என்பது உறுதி. இதை விட்டாலத் அடுத்த தேர்தலில் எல்லாம் இப்படி தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் கிடைத்ததை எல்லாம் அதிவேகமாகச் சுருட்டுவார்கள். ஆக தொங்கு நிலை என்றாலும் சரி, தனிப்பெரும்பான்மை என்றாலும் சரி, தமிழக மக்களுக்கு விமோச்சனம் இல்லை.
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011