privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅதிரடி ரிலீஸ் - ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

-

ஜெயலலிதாமிழக சட்டசபையில் கடந்த புதன்கிழமையன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணையத்திலும், தமிழ்தேசிய ஆர்வலர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதுவுமே நடக்காத நிலையில் இந்த அளவுக்காவது தீர்மானம் போட்டிருக்கும் ஜெயாவை பாராட்ட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.

தீர்மானத்தை ஆதரித்த திமுக கடைசியில் விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்படாத காரணத்தால் வெளிநடப்பு செய்தது. மறுநாள் சட்டசபையில் கச்சத்தீவை மீட்பதற்காக தாம் நடத்தும் சட்டப் போராட்டத்தில் வருவாய்த்துறையையும் ஒரு வாதியாக சேர்க்க உச்சநீதி மன்றத்திடமும் கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.

வருவாய்த்துறையிடம் ஆதாரமாக உள்ள 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது என்றும், அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்றால் கச்சத்தீவை அது குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார் ஜெயா.

1974- இல் தமிழக முதல்வராக கருணாநிதி இருக்கும் போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உரிமை உள்ள கச்சத்தீவு மத்தியில் இருந்த காங்கிரசு அரசால் தாரை வார்க்கப்பட்டது. அப்போதே இதுபற்றிய கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லித் தப்பியவர்தான் கருணாநிதி எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா, அஞ்சலக அரசியல் நடத்தியதாக கருணாநிதியின் பிரதமருக்கான கடிதங்களை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. முல்லைப் பெரியாறு துவங்கி காவிரிப் பிரச்சினை வரை அனைத்தையுமே தீர்க்க‌ முந்தைய‌ திமுக‌ அர‌சு எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை என‌க் குற்ற‌ம் சாட்டினார் விஜ‌ய‌காந்த். தமிழ் சமூகத்தை அழித்த பெருமையும் திமுக விற்கே உண்டு என்றும் குற்றம்சாட்டிய அவர் கலைஞரின் 4 மணிநேர உண்ணாவிரதம் என்ற நாடகத்தையும் கிண்டல் செய்தார். இத‌னைய‌டுத்துதான் முதல் நாளில் திமுக சட்டசபையில் இருந்து வெளியேறிய‌து.

தில்லியில் சென்று முகாமிட்டு ம‌ற்ற‌ மாநில‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளைக் கூட்டி பேசி ம‌த்திய‌ அர‌சுக்கு அழுத்த‌ம் த‌ர‌ வேண்டும் என்கிறார் நெடுமாற‌ன். இல‌ங்கை மீதான‌ பொருளாதார‌த் த‌டைவிதிக்க‌ கோரி இந்திய‌ அர‌சை ஐ.நா.விட‌ம் வ‌லியுறுத்த‌க் கோரும் தீர்மான‌த்தையும், முள்வேலி முகாமிலிருக்கும் ம‌க்க‌ளுக்கு நிவார‌ண‌ம் அளிக்க‌ வ‌லியுறுத்தும் தீர்மான‌மும் ந‌ம்பிக்கை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என்கிறார் வைகோ. ச‌க‌ல‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் இதுபோல‌ பாலைவ‌ன‌த்துச் சோலையாக‌ இத்தீர்மான‌த்தை பார்க்கின்ற‌ன‌ர்.

மத்திய அரசை வலியுறுத்தும் இத்தீர்மானத்தில் கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசையும் மாநில அரசையும் 2008 இல் பிரதிவாதியாக அன்று வாதியாக இருந்த ஜெயா சேர்த்திருக்கிறார். இன்று அவர்தான் பிரதிவாதி, வாதியும் அவர்தான். இந்த கேலிக்கூத்துக்கு மத்தியிலும் வருவாய்த்துறையையும் வாதியாக சேர்க்கச் சொல்லவும் அவர் தயங்கவில்லை. இதற்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை அல்லது ஒரு நாடு தனிநபருடன் போடும் பரஸ்பர ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் அறுபதுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் கூட வெற்றி கண்டிருக்காது. அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றிருந்தால் நாம் அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தைக் கூட ஒரு ரிட் போட்டு தூக்கி எறிந்திருக்கலேமே?

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பிறகு குறிப்பாக 90 களுக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் வெற்றி பெற முடியாது என்பது நம்மை விட ஜெயாவுக்கு நன்றாகத் தெரியும். கச்சத்தீவு மீதான நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது சரியல்ல என்பதுதானே வாதம். அப்படியானால் நமது நாட்டில் இன்று அமுலாகிக் கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கூட நமது நாட்டுச் சட்டம் செல்லுபடியாகாதே அதற்கு எதிராக ஜெயாவோ கருணாநிதியோ பேச முன் வருவார்களா ? மாட்டார்கள். மாறாக, நான்தான் நோக்கியாவை கொண்டு வந்தேன், எனது ஆட்சிக் காலத்தில்தான் ஹூண்டாய் கம்பெனிக்கு நிலம் ஒதுக்கினோம் என்றெல்லாம் கூறி தாங்கள் நாட்டு மக்களது இறையாண்மையை விற்றதையே தொழில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றெல்லாம் பீற்றித் திரிந்த்தை அனைவரும் அறிவார்கள்.

கச்சத்தீவை மீட்க மற்ற மாநில அரசியல்கட்சி தலைவர்களோடு பேசி மத்திய அரசுக்கு எதிராக போராடி அழுத்தம் தர ஜெயாவுக்கு ஐடியா கொடுக்கிறார் மாவீரன். யாருக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தேவையாக இருக்கிறது என்பதை குறைந்தபட்சமாக பரிசீலித்தாலே இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இத்தீவில் மீனவர்களுக்கான பயன்பாட்டைத் தாண்டி எதாவது பொருளாதார கனிம வளம் இருக்கிறதா ? இல்லை இந்த இடம் ஏதாவது ராணுவரீதியில் கேந்திரமான இடமா ? என்பதை பரிசீலித்தால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது. இதில் மீனவர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவதால்தானே அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஒருவேளை கச்சத்தீவில் மட்டும் எண்ணையும், இரும்புத் தாதும் அளப்பறிய அளவில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினை என்றோ ஃபைசல் செய்யப்பட்டிருக்கும். தமிழக மீனவர்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் போது இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக கட்சிகளும், அரசும் ஏன் கருதப்போகிறது? கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்றால் அது தமிழக மக்களை அணிதிரட்டி மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதன் மூலமே செய்ய முடியும். அதற்கு தயாரில்லாத கட்சிகள் இப்படி வெத்து சவடால் அடிப்பதையே ஈழ ஆதரவாளர்கள் கொண்டாடினால் அதை என்னவென்று சொல்ல?

பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரக் கப்பல்களில் பிடிக்கப்படும் மீனை நமது மீனவர்களுக்கு கிடைக்கச் செய்வதையா அரசு செய்கிறது? இல்லை. கடலின் மீதான மீனவர்களின் உரிமையாக இருக்கட்டும், நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் 90 களுக்குப் பிறகு அரசு வெளிப்படையாக வேறு மாதிரிதானே நடந்து கொள்கிறது. அதில் கருணாநிதி ஆட்சிக்கும் ஜெயா ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் வந்துவிட முடியும். இப்போது கூட காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடித அரசியலைத்தானே ஜெயாவும் பின்பற்றி இருக்கிறார்.

ஆனால் இதே ஜெயாதான் கச்சத்தீவு பிரச்சினையில் ஸ்வரண்சிங் இடம் கருணாநிதி வருத்தம் மட்டும்தான் தெரிவித்தார், எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்கள் மீது பன்னாட்டு முதலாளிகளுக்காக மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் போர் நடத்தி அவர்களை உள்நாட்டில் அகதிகளாக ஓட விட்டிருக்கும் மன்மோகன்சிங் அரசு இலங்கை முள்வேலி முகாமை பற்றி அக்கறை கொள்ள வாய்ப்பில்லை. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில் தான் ஒன்றும் சொல்ல முடியாது என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்ல முடியும். மேலும் அரசின் கொள்கை முடிவு, அது உள்நாடாக இருந்தாலே தலையிடாத நீதிமன்றமா இன்று அயல்நாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் முடிவு செய்துவிடும்?

மேலும் ஜமீன்தாரி ஒழிப்புக்கு முன்னர் இருந்த வருவாய்த்துறையின் ஆவணங்களை முன்வைப்பது என்பதே இந்த வழக்கினை நீர்த்துப் போக வைப்பதற்கான வழிமுறைதான். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் பலவும் பின்னால் சட்டமாக வாய்ப்புள்ளதால் இதுபற்றி எதிரான தீர்ப்புதான் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை என்பது  ஒருபுறமிருக்க உள்நாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் மீட்டு வரைமுறைப்படுத்த வேண்டிய போராட்டம் உள்நாட்டில் கிளம்ப வாய்ப்புள்ளதையும் அவர்களை அறிவார்கள். கருணாநிதியின் கடித அரசியலை மிஞ்சி இந்த சட்டமன்றத் தீர்மான அரசியலுக்கு எந்த பலனுமில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுத்தான் கச்சத்தீவை கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதமெல்லாம் எடுபடாது. 1994 ல் சொந்த நாட்டில் பொதுத்துறை நவரத்னாக்களை தனியாருக்கு விற்க வழிவகை செய்ய காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நரசிம்மராவ் அரசு பிறகுதான் அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரிய போதும் அன்றைய நாடாளுமன்றம் வாக்கெடுப்பில்லாத விவாதங்களை மாத்திரம்தான் அனுமதித்தது. இதற்கு பிறகும் கச்சத்தீவை ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தில் பேசிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் எடுபடாது.

_________________________________________________

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?

தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.

கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.

இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.

கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

ஆனால் இவர்களுத தீர்மானங்கள், கருத்துக்களால் வரலாறு நிர்ணயிக்கப்படுவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலில் போர் என்றால் மரணங்கள் சகஜம்தான் எனத் தெரிவித்த அம்மையார் உடனடியாக ஈழத்தாயாக அவதாரம் எடுத்து 16 சீட் கிடைத்தவுடன் கொடை நாடு போய் ஓய்வெடுக்கத் துவங்கினார். முள்ளிவாய்க்காலுக்காக இன்றுவரை கூட ஒரு அறிக்கை கூட எதிர்த்து வெளியிடாதவர்தான் ஜெயா. எல்லா ஜனநாயக இயக்கங்களுக்கும் எதிரான அவர் அன்று தனி ஈழத்தைக் கூட ஆதரித்தார். அவருக்காக பல தமிழ் தேசிய அமைப்புகளும் பிரச்சாரம் செய்தனர்.

அதன்பிறகு பிரச்சாரம் செய்யப் போனவர்கள் மாத்திரம் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அம்மையார் அறிக்கைப் போர் மாத்திரம் நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாது போன காலத்தில் வந்த அவரது அறிக்கையை விட சட்டசபைத் தீர்மானம் கடினமானது அல்ல என நன்றாகப் புரிந்த பிறகும் இதாவது நடக்கிறதே என்பது போராட முடியாமல் துவண்டு போகின்றவர்கள் மற்றும் போராட முடியாதவர்களின் வாதம்.

உத்தரவாதமான எதிர்காலத்தை தங்களது வாழ்க்கை நடைமுறையில் வர்க்க நலனில் இருந்து பெறுபவர்கள் முள்வேலி முகாமை அதற்குள் இருக்கும் மனிதர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு சட்டசபைத் தீர்மானமே பெரிய சாதனைதான். இதனை இணையத்திலும், செய்தித்தாளிலும் படிப்பதற்காக நேரம் ஒதுக்கியதே அவர்கள் செய்த மாபெரும் தியாகமாகத்தான் அவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு  இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது. இது ஜெயா போன்ற பாசிஸ்டுகளுக்கு புரியுமென்பதால்தான் அவர்கள் இதுபோன்ற நடக்க முடியாத விசயங்களுக்காக போராடுவது போல போராடுகிறார்கள். சீமான், நெடுமாறன், வைகோ, ருத்ரகுமாரன் என நீளும் ஒரு தமிழ்தேசிய பட்டியலே தனக்குப் பின்னால் திரளும் எனத் தெரிந்துதான் ஈழத்தாய் இரண்டாம் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்களது சரணாகதி அரசியலுக்கு பொருத்தமாக அட்டைக்கத்தியை இடுப்பில் சொருகியபடி புரட்சித்தலைவி உலா வருகிறார். புறநானூற்று தாயை கண்ட திருப்தியில் புளங்காகிதம் அடைகிறது நடுத்தர வர்க்கம்.

________________________________

• வசந்தன்
________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. என்ன கொடுமை என்ன செய்தலும் குற்றமா ?இப்போது உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழக மக்களின் அதி பெருபான்மை பெற்ற சட்டமன்ற தீர்மானம் மட்டும் இல்லை தமிழக மக்களின் பிரதிபலிப்பும் இதன் .இந்த தீர்மானத்தை மத்திய அரசு சட்ட செய்யது என்பது யதார்த்தமே எனினும் இப்போதைய தேவை இலங்கை அரசுக்கு எதிரான போக்கில் தமிழகம் இருக்கிறது என்பதை சர்வதேசம் அறிந்த கொள்ள இந்த தீர்மானம் பயன்படும் என்ற அளவிலே எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் .இந்திய அரசியல் அமைப்பே போலி ஜனநாயகம் என்று சொல்லும் வினவு சிந்திக்க அந்த அரசியல் அமைப்பின் கிழ் இருக்கும் ஒரு முதல்வர் நீங்கள் சொல்வதை போல் தமிழக நிதி மறுப்பு ,நீதி மன்ற ஆணை புறகணிப்பு என்று சென்றல் என்ன பயன் ? எனவே புதிய ஜனநாயம் வந்தால் தானே இது சாத்தியம் ஆகும் >

  2. ஈழத்தின் அரசியலில் அக்கரை உள்ளது போல் காட்டிக்கொள்ளும் தமிழினவாதிகளின் முகதிரையை கிழிக்கும் ஒரு பதிவு.

  3. Though it’s expected DMK & Kalaiger should have done more and vigorous in Eelam issue, need to compare both during the 2009 war to know who really supports Tamils.

    ஈழப் போர் 2009 நடைபெற்ற போது :

    கருணாநிதி செய்தவை / கூறியவை:

    1 . போர் நிறுத்தம் வேண்டுகோள்
    2 . போர்நிறுத்தத்தை வலியுறுத்தி மனித சங்கிலி
    3 . போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சட்ட சபையில் தீர்மானம்
    4 . அனைத்து கட்சி கூட்டம்
    5 . போர்நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் (Even though it is 4 hours )

    ஆனால் ஜெயலலிதா செய்தவை / கூறியவை :

    1 . போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள்
    2 . LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள்
    3 . LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள்
    4 . இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை, LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது
    5 . அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது
    6 . போர்நிறுத்தத்தை வலியுறுத்தி எந்தவிதமான வேண்டுகோள்லோ அல்லது போராட்டமோ செய்யவில்லை

    • //ஆனால் ஜெயலலிதா செய்தவை / கூறியவை :

      1 . போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள்
      2 . LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள்
      3 . LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள்
      4 . இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை, LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது
      5 . அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது
      6 . போர்நிறுத்தத்தை வலியுறுத்தி எந்தவிதமான வேண்டுகோள்லோ அல்லது போராட்டமோ செய்யவில்லை//

      இப்படிச் சொன்ன பாசிச செயா பிறகு டப்பா மண்டையன் சிரிசிரி ரவி போய் சொன்னவுடன் மாறிட்டா. அதாவது மொத்தமா தமிழகத்தில் திராவிட அரசியலின் மிச்சமீதியாக அழுகி நாறிக்கொண்டிருக்கும் திமுகவிற்கு/வைகோ விற்கு சங்கு ஊதி விட்டு பார்ப்பனிய அரசியலை கொண்டு வரும் ஆர் எஸ் எஸ்ன் திட்டம் அங்கிருந்து தொடங்குகிறது. அது பின்பு விஜயகாந்த், ‘பாரதி போலே பேசும்’ தாபா, மாட்டிக்கிச்சு(மார்க்ஸிஸ்டு) இவர்களையெல்லாம் ஒன்னு சேத்து ஈழத்து டாகல்டி பிலிமின் தமிழகத்து கிளைமாக்ஸ் வரைக்கும் ஓடிவிட்டது. தமிழகத்தில் காலூன்ற தலைகீழாக நின்று தண்ணி குடிக்கும் ஆர் எஸ் எஸ் ஈழப் பிரச்சினையை எடுப்பதன் ஊடாக தேசியவாதம் பேசி மக்களை கவரலாம் என்ற திட்டமிட்டது. அதன் ஆசன வாய் வெளிப்பாடுதான் செயாவின் ஈழத் தாய் அவதாரம். இந்த இழவுக்கு பாடை சுமந்து அடியும் வாங்கினார்கள் சில முற்போக்கு பீதாம்பரங்க்ள். அதுதான் காலக் கொடுமையிலேயே மிகக் கொடுமையானதாக இருந்தது.

  4. தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் இந்தத்தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.

    ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.

    குறிப்பாக ஈழத்தமிழர்கள் தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.

    அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை

  5. ஜெ., இப்போ என்ன செய்யணும்னு சொல்றீர்… உம் கூட சேர்ந்து கிட்டு துப்பாக்கித் தூக்கிட்டு வந்து வர்க்க எதிரிகள்னு எல்லாரையும் சுட்டத்தள்ளச் சொல்றீரா..

    • ஜெ.விற்கு ஈழத் தமிழர்களின் மேல் உண்மையான அக்கறை இருக்குமானால், அவர் முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை சீரமைக்கட்டும். பல ஆண்டுகளாக இங்கு தங்கியிருக்கும் அவ்வகதிகள் மேலை நாடுகளில் உள்ளது போன்று சுதந்திரமாக இருக்க வகை செய்யட்டும்.

      • //ஜெ.விற்கு ஈழத் தமிழர்களின் மேல் உண்மையான அக்கறை இருக்குமானால், அவர் முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை சீரமைக்கட்டும். பல ஆண்டுகளாக இங்கு தங்கியிருக்கும் அவ்வகதிகள் மேலை நாடுகளில் உள்ளது போன்று சுதந்திரமாக இருக்க வகை செய்யட்டும்.// நாகராஜ் அவர்கள் மேலே உள்ள பாயிண்டிற்கு கருத்துச் சொல்லி உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்

  6. //R.Nagaraj//
    நீங்கள் ஆயுதம் தூக்க தயாராக இருந்தால் உடனே மாவோயிஸ்ட்டுகளுடன் போங்க.அவர்கள் தான் நிர்வாணப்படுத்தப்பட்டுக்கற்பழித்துக்கொண்டு இருக்கிற பன்னாட்டு,தரகு,பார்ப்பன நாய்களிடம் இருந்து இந்திய தாயின் மானதை காத்துக்கொண்டு இருக்கிற தேசப்பற்றாளர்கள்.

  7. அடப் பாவி மக்கா!
    தினமலம் ரமேசும்,மண்டு ராமும் மத்தளம் வாசிக்கும்போது……
    சனநாயகத்தின் ஆத்தாவை இப்படியா எழேதுவது!

  8. ayyo magaan avargale,

    If j is the enemy for eelam tamil. kalaignar enna pudunginaarunu therinjukkalama? andhaalu politicsla 75 varusham ellarayum emathunaru adhukku periya vizha edukkalamula. Dont come with a reply that we have criticized kalaignar more than J. Being someone who speaks about the evils of male chauvinism, you sounf more like it by criticizing J for brahminic background.

  9. கட்டுரையில் ஈழ,கச்சத்தீவு பிரச்சனைகள் உண்மையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சரியாக அலசப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவின் திடீர் ஈழத்தாய் அவதாரத்தை சரியாக வெளிச்சமிட்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் கியூபா,சீனா,ரஷ்யா நாடுகள் உட்பட ஐநாவை வைத்து அதிகார விளையாட்டு விளையாடும் நிலையில் தான் தற்போது இருக்கிறார்கள்.
    ஐநா தீர்மானம் கொண்டுவந்த போது இலங்கையை ஆதரித்து வாக்களித்த கியூபா, ரஷ்யா, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகள் முதல், படுகொலைகள் நடந்த போது கண்டுகொள்ளவே செய்யாத நம்ம ஊர் மார்க்சிஸ்ட்டுகள் வரை, இந்தப் போலி ஜனநாயக அரசியல் களத்தில், ஈழப்படுகொலைகளை ஜனநாயக ரீதீயான அரங்கங்களில் கொண்டுவர யாரும் அக்கறை எடுக்கவில்லை. சீனா ராஜபக்சேவின் நெருங்கிய நண்பனாக இருக்கிறது. இத்தருணத்தில் ஜெயலலிதா செய்தது சும்மா பவர் காட்டுவதற்காக என்றாலும் இப்பிரச்சனை மக்களை சென்றடைந்திருக்கிறது என்று காட்டுவதற்கு நிச்சயம் உதவியிருக்கிறது என்பதை மறுக்கக்கூடாது. இது நாள் வரை மானாட மயிலாட பார்த்தவர்களும் இப்போது இப்பிரச்சனை பற்றி ஏதோ உணர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

    இதைத் தவிர நீங்கள் சொல்வது போல இது பெரும் மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தாது தான். ஒருவேளை நாடு கடந்த ஈழ அரசு நடத்துபவர்கள் இன்னும் ஜனநாயக தளத்தில் தொடர்ந்து இப்பிரச்சனையை கொண்டு போக இது உதவி செய்யலாம். இன்னொன்று; ஈழப்பிரச்சனை சமபாதியளவு தமிழகத் தமிழரின் பிரச்சனையும் ஆகும். சிங்களவர்கள் ஈழத் தமிழனை தமிழ்நாட்டிலிருந்து வந்தேறி என்று பார்ப்பதுவே ஈழப் பிரச்சனையின் முக்கிய காரணம். எனவேதான் தமிழர்கள் என்கிற இனமானது இந்தியா, இலங்கை என்கிற இரு நாட்டுத் தேசியங்களுக்கிடையில் பந்தாடப்படுகிறது. இந்தப் பந்தாட்டத்தில் இந்தியாவின் தேசியத்துக்கு தலையில் ஒரு சின்ன குட்டு வைத்தது தான் ஜெயலலிதாவின் இந்தத் தீர்மானங்கள்.

    ஜெயலலிதாவின் பின்புலம், கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால் வேறு ஏதாவது லாபம் கருதி அவர் இதைச் செய்திருக்கக் கூடும். அதை மத்திய அரசோ, ராஜபக்சேவோ நிறைவேற்றும் பட்சத்தில் ஜெயலலிதா பல்டி அடிக்கக் கூடும். அப்போது அவர் வேடம் உடனே வெளியாகும்.

    ஒரு வேளை ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜெயலலிதாவை நக்கல் செய்த ராஜபக்சேவை தனிப்பட்ட ரீதியில் ஜெயலலிதா ஒரு கை பார்க்கும் படலமாக இது இருந்தால் அவரின் கோபாவேசம் இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கலாம்.

    ஒருவேளை அதிகாரத்தை பயன்படுத்துவதில் பிடிவாதம் கொண்டவரான ஜெயலலிதா உண்மையிலேயே ஈழ ஆதரவு மனநிலை அடைந்திருந்தால்.. இதற்கான வாய்ப்பு 0.01% சதவீதம் தான். ஆனால் அது நிச்சயம் ஈழ மக்களுக்கு பயன் தரும் விஷயம் தான்.

    பார்க்கலாம். கூடிய சீக்கிரம் நாட்டின் நிகழ்வுகள் பதில் சொல்லத் தொடங்கிவிடும்.

  10. இலங்கை தமிழர் பகுதியில் எண்ணைவளம் இருக்கெண்று ஒரு வதந்திய கிளப்பிவிடுங்க, அல்லது வாழதகுதியற்ற அமெரிக்கன் ஒருவனை கொன்றுவிட்டு சிங்களந்தான் செய்தான் என நிருவித்துவிடுங்க அமெரிக்க தார்மீக பொறுப்பெடுத்து இலங்கை பிரச்சனையை சீர்செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

  11. மாவீரன் என்றால் பகத்சிங்.மீன் என்றால் நெடுமாறனை குறிக்கும்.மீனைப்போயி மாவீரன் என்று குறிப்பிடும் கட்டுரையாளர் தோழர்க்கு என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்

    கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை.-வித்தியாசம் இருக்குங்க
    ஒன்னு நரைச்சு போன வெள்ள மயிறு, இன்னொன்னு டை அடிச்ச கருப்பு மயிறு.

  12. இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக அரசு ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை இந்த அளவுக்காவது ஜெயலலிதாவிற்கு மத்திய அரசை எதிர்கும் தைரியம் இருக்கிறதே அதற்காக ஆதரவை தெரிவிப்போம் வினவு எதை தான் எதிர்கவில்லை இப்படி ஒரு கட்டுரையை நான் வினவிடம் எதிர்பார்த்தேன்

    //இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.//

    ஏன் பார்பனர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்க கூடாதா வினவு அவர்களும் தமிழர்கள்தானே இதில் இருந்தே உமது நடு நிலைமை நன்றாக தெரிகிறது உங்களை தவிர ஈழ பிரச்சனையில் வேறு யாரும் உண்மையாக இல்லை அப்படிதானே தமிழக மக்களால் பெருவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் எண்ணங்களை பிரிதிபலிக்கிறது இது உமக்கு பொருக்கவில்லையா தமது வெற்றிக்கு காரணம் ஈழ பிரச்சனை என்பதை அவர் உணர்ந்து கொண்டுள்ளார் அதனாலேயே அவர் இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

    //ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது.//

    ஈழ விடுதலைக்கான ஆயுதபோராட்டத்தை ஈழத்தில் மட்டுமே நடத்த முடியும் இந்தியாவில் அதற்கான ஆதரவை சட்டப்பூர்வமான போராட்டத்தை மட்டுமே நடத்தமுடியும் இதை யாரும் மறுக்கமுடியாது

    //புறநானூற்று தாயை கண்ட திருப்தியில் புளங்காகிதம் அடைகிறது நடுத்தர வர்க்கம்.//

    புறநானூற்று தந்தை ஒன்றையும் கிழிக்கவில்லை (கருணாநிதி)
    புறநானூற்று தாய்க்காவது இந்த அளவுக்காவது தைரியம் உள்ளதே

    • ஈழம் ஈழம் என்று நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழக சட்டசபையில் ஈழம் ஏற்று உச்சரிப்பதே தண்டனைக்குரிய குற்றம்!!!
      அம்மா முன்மொழிந்துள்ள அறிக்கையை முழுவதும் படிக்கவில்லையோ??

      கருணாநிதியின் ஈழ தமிழர் ஆதரவுக்கும், ஜெயலலிதாவின் இலங்கை தமிழர் ஆதரவுக்கும் ரொம்ம்ம்ப வித்தியாசம் இருக்கு!

  13. செயலலிதாவின் கடந்த கால வரலாறுகளை நாம் அறிவோம். தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்தான் முதலமைச்சர். ஈழத்தில் நல்லது நடக்கவேண்டும் எனில் நாம் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும். நம்முடைய எதிரி பலமாக உள்ளான். சிங்களவனிடம் காசு வாங்கிக்கொண்டு செல்படுவோர் எண்ணற்றோர். இலங்காரத்தினா விருது பெற்ற இந்துராம், விருதுபெற முயற்சிக்கும் மார்க்சிஸ்ட், மகன் மகள் பேரன் பேத்தி போன்றோருக்கு பதவி கிடைக்கும் என்றால் எதையும் கண்டுகொள்ள மாட்டேன் என்ற உறுதிமொழியை இன்றளவும் முறையாகக் கடைபிடிக்கும் திராவிடன் மு.க. போன்ற பலரையும் வைத்துக்கொண்டுதான் போராட வேண்டியுள்ளது. இன்றளவும் பொதுமக்களின் தலைவர்களாக செயலலிதா,மு.க. போன்றோரே உள்ளனர். நாம் மக்களைத் திரட்டுவதற்கும், அவர்கள் மக்களைத் திரட்டுவதற்கும் வேறுபாடு உள்ளது. நாம் பலநாட்கள் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் செய்தும் செய்யமுடியாத பல செயல்களை அவர்களால் எளிதில் செய்துவிட முடிகிறது. அதற்காக எப்பொழுது இறையின் அருள்கிடைக்கும் என்று நாம் காத்திருக்க வேண்டியதில்லை. மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும், நாம் இப்பிரச்சனையில் செய்யவேண்டிய ஆக்கப்பூர்வமானப் பணிகளை செய்யவேண்டும் என விரும்புகின்றேன். எதிரியிடம் சண்டையிடாமல், நமக்குள் சண்டையிடுவது சரியல்ல. திருவரங்கம் கோயில் நுழைவுப் போராட்டம், திருவையாற்றில் தமிழிசைக்கானப் போராட்டம், தில்லையில் தமிழ் வழிபாட்டிற்கானப் போராட்டம் போன்ற பல நிகழ்வுகளில், தமிழக மக்களும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் பின்னால் அணிதிரண்டதை தாங்கள் அறிவீர்கள். எனவே மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்து, நாம் செய்யவேண்டிய பணிகளை மட்டும் செய்தால் நன்றாக இருக்கும். தோழமையுடன் பாரிகபிலர்.

Leave a Reply to ஊரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க