privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!

உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!

-

வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம்  “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு“, “இளம் குருத்துக்களை படிக்கச் செய்வோம்என்பது போன்ற படாடோபமான விளம்பரங்கள்குழந்தை தொழிலாளர் முறை அறவே ஒழிக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றம்ஆனால் எதார்த்ததத்தில் அமைப்பு சார்ந்த தொழில்களில், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில், தனியார் பெருமுதலாளிகளிடம் நெருங்க மறுக்கும் தொழிலாளர் துறைஅதிகாரம் மிகக் குறைவாக உள்ள அத்தகைய தொழிலாளர் நலச்சட்டங்களைக் கூட திருத்த துடிக்கும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் உள்ள பெரு முதலாளிகள்மறுபுறம் உலக மயமாக்கலின் கோர விளைவுகளினால், இந்த சட்டங்கள் எதற்குள்ளும் எங்கள் தொழில் வராது என ஏமாற்றும் அமைப்பு சாரா தொழிலின் தரகு முதலாளிகள்இவற்றை அம்பலப்படுத்தும் விதத்தில் பணக்காரர்கள் உண்டு மகிழும்பாதாம் பருப்பிற்குபின்னால் திரைமறைவில் உள்ள உழைப்பு சுரண்டலை விவரிக்கும் கட்டுரை இதன் கீழே விரிகிறது

உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!
படம் thehindu.com

ஏழுவயதான கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பாதாம் கொட்டைகளின் மேல் குதித்தாள்.  முதல் பார்வையில் அவளது சிறு வயதோடு ஒப்பிடுகையில் அது அவளுக்கு ஒரு விளையாட்டு என உங்களுக்கு தோன்றலாம்.  ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால் கீதாவின் உடற்பயிற்சி போன்றதான நடவடிக்கை சிறுவயது விளையாட்டல்ல என்பது தெரியவரும்.  அவள் வாழ்வதற்காக சம்பாதிப்பதற்காக பார்க்கும் வேலை அது.

அங்கு பணிபுரியும் பல குழந்தைகளைப் போல, தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் பாதாம் கொட்டை உடைக்கும் பணியில் வேலைபார்க்கும் கீதாவும் ஒரு தொழிலாளி.  அவளின் மென்மையான பாதங்கள் ஏறக்குறைய ஒரு இயந்திரம் போல செயல்பட்டு கலிபோர்னியாவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம் கொட்டைகளை உடைக்க பயன்படுகிறது.

தூசிகள் நிரம்பிய அறைகளில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படும் இந்த சட்ட விரோத குழந்தை தொழிலாளர்கள் மூலம் மில்லியன்-டாலர் தொழிற்சாலை நடைபெறுகிறது.  குழந்தைகள் தரையில் அமர்ந்து அமைதியாக சாக்குகளில் உள்ள பாதாம் கொட்டைகளை தங்களது செயல்திறன் மிக்க விரல்களாலும், மலைபோல் உள்ள குவியல்களில் குதித்தும் உடைத்து குவிக்கின்றனர்.

வடகிழக்கு டெல்லி பகுதியான காரவால்நகர் காலனியில் பாதாம் கொட்டைகள் உடைப்பு என்பது பெரிய வணிகம் ஆகும்.  ஏறக்குறைய 45 முதல் 50 பாதாம் பருப்புகளை பிரித்து பொட்டலமிடும் பிரிவுகள் அந்த பகுதியில் வருடம் முழுவதும் நடைபெறுகிறது.  அவ்வாறு உடைக்கப்படும் பருப்புகள் மாநகரின் காரிபாவோலி பகுதியிலுள்ள மொத்த சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் முழுமையும் இயந்திரங்களால் நடைபெறும் இந்த தொழில் இங்கு மனித தொழிற்சாலையாக, கொட்டைகளை உடைத்து ஓடுபிரித்து, பருப்பை தரம் பிரித்து சந்தைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் இங்கு மனிதர்கள் செய்கிறார்கள்.

உயரிய ஏற்றுமதி:

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் விவசாய விளைபொருளில் பாதாம் முன்னணியில் உள்ளது.  தகவல்களின்படி பார்த்தால் 95% பாதாம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  1970 களில் மிகச்சிறியதாக துவங்கிய இந்த தொழிலில் தற்போது 100 மில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் கலிபோர்னியா பாதாம் இறக்குமதி செய்யப் படுகிறது. ஒருபுறம் பாதாம் பருப்பின் விலை சராசரியாக ஒரு கிலோ ரூ 360 முதல் 400 வரை என்றிருக்கையில், மறுபுறம் இதில் பணிபுரியும் குழந்தைகளுக்கு ஒரு கிலோ பருப்பு உடைத்து எடுத்தால் ரூ 2 கூலியாக வழங்கப்படுகிறது.

வினய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புலம்பெயர்ந்து (இடம் மாறி) டெல்லிக்கு வந்த சிறுவன் தனது 11 வயதில் இந்த தொழிலில் பணிபுரிய துவங்கினான்.  10 வருடம் கழித்து தற்போது காரவால் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில் தற்போது அவர் சுமை ஏற்றுபவராக இருக்கிறார்.  அவர் சுமை ஏற்றும் பணிக்கு சம்பளமாக பணம் எதையும் பெறுவதில்லை.  பணத்திற்கு பதிலாக இரண்டு சாக்குகள் பாதாம் கொட்டை உடைக்க அவருக்கு கொடுக்கப்படும்.  அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமாக ஒரு சாக்கிற்கு ரூ 60 கூலி என்ற அடிப்படையில், ஓடு பிரித்து பருப்பு எடுப்பார்கள்.  அதாவது 6 பேர் கொண்ட அந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு நாளைய கூலி ரூ 20/-.

பாதாம் கொட்டை உடைத்து பருப்பு வியாபராம் என்பது வருடம் முழுவதும் நடைபெறும் என்றாலும், வழங்கல் மற்றும் தேவை என்பது தீபாவளி மற்றும் கிறித்துமஸ் பண்டிகைகளின் போது மிக அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை இருக்கும்.  ஆரம்பம் முதல் இறுதி வரையிலான பணிகள் என்பது பல தொழிலாளர்களிடம் பிரிந்து இருக்கும்.  குழந்தைகள் குறிப்பாக பாதாம் கொட்டைகளை உடைக்கும் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.  அரை குறையாக உடைந்த கொட்டைகள் குப்பையிலிருந்து கவனமாக பிரித்தெடுக்கப்படுகிறது.  இந்த நிலையில் குறிப்பாக பெண்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு ஓடு, முழுப்பருப்பு, அரை பருப்பு என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஓடு பிரிக்கப்படாத பாதாம் ஒரு சாக்கு என்பது சராசரி 22 கிலோ இருக்கும்.  அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பருப்பு 16 முதல் 17 கிலோ தேறும்.  பிரித்தெடுக்கப்படும் ஓட்டு துகள்கள் சமைப்பதற்கான எரிபொருளாக தொழிலாளிகளுக்கே சாக்கு ஒன்று ரூ 30 முதல் 35 வரை என்றி வீதத்தில் முதலாளிகளால் விற்கப்படும்.

பின்னர் சில பிரிவுகளில் மிகவும் தேவையான காலங்களில் கொட்டைகள் உடைத்து பிரித்தெடுக்க தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.  ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரம் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்தில் 20 சாக்குகள் ஓடுபிரிக்க முடிந்தது.  விழாக்காலங்களில் ஒரு நாளைக்கு 350 முதல் 400 சாக்குகளும், தேவை குறைவான காலங்களில் 80 முதல் 100 சாக்குகள் அளவிலும் உடைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 2009-ல், கடுமையான குளிர் காலத்தில் காரவால் நகரில் பாதாம் மஸ்தூர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.  சம்பள உயர்வு, பணி நிரந்தரப்படுத்துவது, மற்றும் பாதாம் தொழிலி்ல் தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றக் கோருவது ஆகியவை அவர்களது கோரிக்கைகளாக இருந்தது.  அந்த போராட்டத்தின் காரணமாக ஒரு நாளைய கூலி என்பது ரூ 45 லிருந்து 60 ஆக உயர்ந்தது.  இருந்த போதிலும் டெல்லி நகரின் செயல்திறனுடைய தொழிலாளி ஒருவரின் குறைந்தபட்ச கூலி ரூ 247/- என தொழிலாளர் துறையினால் நிர்ணயிக்கப்பட்டிருப்பதோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய கூலிதான் அது.

ஒழுங்கு முறை ஏதுமில்லை:

சொல்லப்போனால் தற்போது இந்த தொழிலில் ஒழுங்குமுறை எதுவுமில்லை.  பாதாம் கொட்டை உடைக்கும் தொழில் என்பது தெளிவான விளக்கமின்றி ‘வீட்டு உற்பத்தி’ தொழிலாக சொல்லப்படுகிறது.  அதன் காரணமாக இந்த தொழில் தொழிலாளர் நலச்சட்ட வரம்பிலிருந்து வெளியில் இருப்பதாக கருதப்படுகிறது. டெல்லி தொழிலாளர் துறையின் பதிவுகளின்படி இந்த தொழில் பிரிவுகள் ‘முறைப்படுத்தப்பட்ட பிரிவுகளில்’ சேர்க்கப்படாமல் சிறு பிரிவுகளாக ’10 நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள், இயந்திர சக்தியுடன்’, அல்லது ’20ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இயந்திர சக்தியின்றி’ என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களினால் (இந்த குறிப்பிட்ட விஷ‌யங்களை மாற்றியமைக்க எந்த ஒரு மாற்று யோசனையும் சொல்லப்படாத நிலையில்) இந்தியாவில், ஏறக்குறைய மொத்த உழைப்பாளிகளில் 94 சதவீத தொழிலாளர்களைக் கொண்டுள்ள, வளர்ந்து வரும் பல தொழில்கள் தொழிலாளர்நலச் சட்ட வரம்புகளுக்கு வெளியில் அதன் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்படாத நிலையில் உள்ளது.

உலகமயமாக்கல் மற்றும் உற்பத்தி பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் தொழிலாளர்களை முறை சாராப் பிரிவில் வகைப்படுத்துவது என்பது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக அதிகரித்து வருகிறது.  முறை சாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் (2008) சமர்ப்பித்த ஒரு அறிக்கையின்படி இந்திய உழைப்பாளிகளின் எண்ணிக்கையில் 77 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ரூ 20/-ற்கும் குறைவாக கூலி பெறுகின்றனர். பைனா மோஸ்லி என்பவர் தமது ‘தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் பன்னாட்டு உற்பத்தி’ என்ற (2011) தலைப்பிலான ஆய்வில் தொழிலாளர்கள் உரிமைகளுக்கும், உலகளாவிய உற்பத்தியில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகளுக்குமான தொடர்புகளை விவரித்துள்ளார்.  உற்பத்தி சார்ந்த பல பணிகளை வெளியில் கொடுப்பதன் மூலம் தொலைவிலுள்ள நாடுகளிலுள்ள சிறிய தொழில் மையங்களின் சாதக சூழல்களை பன்னாட்டு முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  அதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்துக் கொள்வதோடு நேரடி முதலாளித்துவத்தினால் விளையும் இடர்களை தவிர்த்தும் கொள்கின்றனர் என குறிப்பாக அவர் சுட்டிக் காண்பிக்கின்றார்.

சட்ட விரோதமாக குழந்தை தொழிலாளர்களிடம் பணிவாங்குதல், குறைந்த கூலிக்கான வயது வந்த தொழிலாளர்கள் பணி ஆகியவை டெல்லி காரவால் நகரில் நடைபெறுவது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  வளர்ந்து வரும் உலகமயமாக்கல்  சூழலில், பெரும்பாலான மாநகரங்களில் முறை சாரா மற்றும் கணக்கிடலங்காத இது போன்ற உற்பத்தி பிரிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  டெல்லியில் மட்டுமே தொழில் வாரியாக பிரிக்கப்பட்ட சிறப்பு மையங்களில் எண்ணிக்கைக்கேற்ற தொகை பெற்று (பீஸ் ரேட்) பணிமுடித்துக் கொடுக்கும் பிரிவுகள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது.  பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் மிகத்தெரிந்த பன்னாட்டு நிறுவனங்களும் இத்தகைய பணிகளை செய்கின்றன.

கடைசி புகலிடம்:

பெரும்பாலான மக்கள் முறைசாரா தொழில்களை விரும்பி ஏற்பதில்லை.  மாறாக அவர்கள் பசிக் கொடுமையிலிருந்து தப்பித்து வாழ்க்கைக்கான வழிமுறைக்கு கடைசி புகலிடமாக இவற்றை தேர்வு செய்கின்றனர்.  பெரும்பாலான முறைசாரா பிரிவு தொழிலாளர்கள் சொந்தமாக நிலமில்லாமல், புலம்பெயர்ந்து வந்தவர்களே. அவர்களின் சொந்த கிராமங்களில் வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளினால் வேலைக்கு வழியின்றி இவ்வாறு இடம் மாறி வருகின்றனர்.  பல முறைசாரா தொழில் நிறுவனங்களில் நிலவி வரும் புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஏழைகள் தங்கள் வருவாயை மேலும் குறைத்துக் கொண்டு வேலை கேட்கும் சூழலை உருவாக்குகிறது.  முறைசாரா தொழில் வணிக நடவடிக்கைகளை தொழிலாளர் நலச்சட்ட வரம்பிற்குள் கொண்டு வர விடா வண்ணம் எதிர்ப்புகள், தவறிழைக்கும் ஆலை முதலாளிகளின் மீதான புகார்களை வாங்க மறுக்கும் உள்ளூர் காவல்துறை, தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த அக்கறையின்மை இவையெல்லாம் சேர்ந்து வெட்கப்படும் விதத்திலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.  தலைநகரின் இதயப்பகுதியில் செயல்பட்டு வரும் பாதாம் பருப்பு எடுக்கும் தொழிலளர்களின் கதையிலிருந்து முறைசாராத் தொழிலின் மீது உள்ள நாட்டின் அக்கறையின்மை விளங்குவதோடு, இத்தகைய தொழிலாளர்களை காக்கும் விதத்தில் தொழிலாளர் சட்ட நடைமுறைகளை இந்த பிரிவிற்கு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

_______________________________________________________

நன்றி – தி இந்து, 15 அக் 2011 – திரு. மவுஷ்மிபாசு,

பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்.

தமிழில் – சித்ரகுப்தன்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்