privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மோடி கடையில் துண்டு போடும் குமுதம் !

மோடி கடையில் துண்டு போடும் குமுதம் !

-

ரு நாட்டின் யோக்கியதை என்ன, அரசியலின் தரம் என்ன என்பதை கவித்துவமாக அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அந்த நாட்டின் புலவர்கள் உண்டிக்கு யாரைச் சார்ந்து இருக்கிறார்கள், அவர்கள் புனையும் பாட்டில் உள்ள ஜால்ரா இரைச்சலின் டெசிபல் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.

குமுதம்ந்த வகையில் குமுதம் வெளிவரும் காலத்தில் நமது தமிழகத்தின் யோக்கியதையை பரிசீலிப்பதே பெரிய மானக்கேடு.

ஜெயலலிதாவின் ஊடக ஏஜெண்டாக ஜெயா டிவியையே மிஞ்சி வேலை பார்க்கிறது குமுதம். எத்தகைய அரசியல் நடவடிக்கைகளையும் அதிமுக அடிமைகளே யோசித்திராத வகையில் ‘அம்மா’வுக்கு ஆதரவாக கதை புனைந்து எழுதுகிறது இந்த மாமா கும்பல். அந்த வகையில் இவர்கள் தினமணி வைத்தியையெல்லாம் விட பல படிகள் மேலே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் செட்டியார் + ஐயங்கார் காம்பினேஷனில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை தற்போது ஐயங்கார் கம்பெனியால் மட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் ஆள்வோருக்கு ஜால்ரா அடிப்பதில் குமுதத்தின் ராகத்தை எப்போதும் யாராலும் விஞ்ச முடியாது.

மாநில அரசியலில் காக்காய் பிடிப்பதில் செட்டிலாகிவிட்ட குமுதம் இப்போது மத்தியிலும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. அடுத்த வருடம் வேறு பாராளுமன்றத் தேர்தல் வந்து புதிய அரசு பதவியேற்க இருக்கிறதல்லவா. தேசிய ஊடகங்களும், கார்ப்பரேட் முதலாளிகளும் குஜராத்தின் மோடியை முழுவீச்சாக சந்தைப்படுத்தும் போது குமுதத்திற்கும் வேர்த்து வடிகிறது. மேலும் மோடியின் கிச்சன் கேபினட்டில் இருக்கும் சோ வேறு குமுதத்தில் தொடர் எழுதுகிறார். அவரது துக்ளக் பத்திரிகை விநியோகமும் இப்போது குமுதம் வசம். ஆக காவி மோடியிடம் கவி பாடி இப்போதே தனக்கான இடத்தை துண்டு போட்டு முன்பதிவு செய்ய குமுதம் துடிக்கிறது.

உடனே குஜராத்திற்கு குமுதம் படை பறக்கிறது. சரி, ஏதோ நிருபர்கள் ரெண்டு பேர் காந்தி நகர் சென்று எழுதியிருப்பார்கள் என்று சாமானியமாக நினைத்து விடாதீர்கள். வருங்கால பிரதமரை காமா சோமா நிருபர்கள் பார்த்தால் மதிப்பு என்ன? ரிடர்ன் என்ன? எனவே குமுதத்தின் உரிமையாளரான வரதராஜ ஐயங்காரும், குமுதம் குழும ஆசிரியருமான கோசல்ராமும் செல்கிறார்கள். 26.6.2013 தேதியிட்ட குமுதம் இதழில் எக்ஸ்குளூசிவ் என்று குறிப்பிட்டு மோடி பேட்டியை போட்டிருக்கிறார்கள். படத்தில் குமுதம் ஓனர் கோட்டு சூட்டு கெட்டப்பில் மோடியுடன் கை குலுக்குகிறார். கோசல்ராம் படத்தில் இல்லை. என்ன இருந்தாலும் பின்பாட்டு பாடுபவர்களுக்கு கேமரா வெளிச்சம் அவ்வளவாக இல்லை அல்லவா! முக்கியமாக வர்து பாய் ஏதோ நீலநிற பரிசுத்தாள் மூடிய ஒரு அன்பளிப்பை மோடியிடம் கொடுத்திருக்கிறார். அது என்னவென்று தெரியவில்லை.

“யூத் என் வழிகாட்டிகள் – குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஸ்பெஷல் பேட்டி” என்ற தலைப்பில் இந்த கருமம் மேற்படி தேதியிட்ட குமுதத்தில் வந்திருக்கிறது. குளிர்பானம் குடிக்க விரும்புவோர் இந்த கட்டுரையின் பக்கங்கள் இடம்பெற்றிருக்கும் தாள்களை கலந்து குடித்தால் அவ்வளவு ஜில் என்று இருக்கும். ஐஸ்ஸூனா ஐஸ், அப்பேற்ப்பட்ட ஐஸ்!

நரேந்திர மோடிமோடியின் அலுலகத்திற்குள் நுழைந்ததும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் அறைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாம் இந்தப் பரதேசிகளுக்கு. அதாவது மோடியின் குகை சங்கர மடம் மாதிரி காவி நிறத்தில் இல்லை, கார்ப்பரேட் பாணியில் பணத்தால் மின்னுகிறது என்று நடுத்தர வர்க்கத்தை உசுப்பி விடுகிறார்களாம். இவரைப் போய் மதத்தோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என்று தெளிவுபடுத்துகிறது குமுதம் மாமா படை.

ஆனால் மோடியின் அலுவலகத்தில் காவி வாசனையே இல்லை என்பதைக் கேட்டால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அவர்களைத் தேற்றும் விதமாக மோடியின் மேசை டிராயரில் ஹெட்கேவார் படம் இருக்கிறது, மோடி அதை ரகசியமாக பார்ப்பார் என்றாவது குமுதம் எழுதியிருக்கலாம்.

மோடி வணக்கம் என்று தமிழில் வரவேற்றாராம். ஏன் பெரியார் வாழ்க என்று சொன்னாதாகக் கூட சொல்லுங்களேன்! அவ்வளவு தீவிர தமிழ் வேண்டாம் என்றால் எங்களுடன் மசாலா தோசையை விரும்பிச் சாப்பிட்டார், நாங்கள் கொண்டு சென்ற வெள்ளைப் பணியாரத்தை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார் என்றெல்லாம் சொல்லி அவரை தமிழுக்கு நெருக்கமாக காட்டுங்களேன். அல்லது ராமாராஜ் மினிஸ்டர் காட்டன் வேட்டியை தட்டாமல் பெற்று கட்டிக் கொண்டார் என்று ஒரு ஃபோட்டோ போட்டால் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கிளர்ந்து எழுமல்லவா?

அவரோட குரலும், தோற்றமும் இவர்களை ஈர்த்தாம். அவருடன் பேசும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறதாம். இத்தகைய ரசனையை காலஞ்சென்ற எஸ்ஏபி செட்டியாரிடமும் பார்க்கலாம். அதாவது தினசரி குமுதம் அலுவலகம் வரும் செட்டியார் அனைவரையும் கூட்டி பகவத் கீதை படித்து விளக்கம் சொல்லி பிரார்த்தனை செய்வாராம். பிறகு டேபிளுக்கு போய் எந்த நடிகைகளின் உடல் எடுப்பாக இருக்கிறது என்று கவர்ச்சி படங்களை ஆய்வு செய்து அட்டைப் படத்திற்கு தெரிவு செய்வாராம். ஆக பகவத் கீதையும் பலான படங்களும் குமுதத்தின் இரு பக்கங்கள் எனும் போது இங்கு காவிப்படைத் தலைவரை குமுதம் உருகி உருகி ரசித்தது ஆச்சரியமல்ல.

மோடியும் இவர்களது பாட்டில் மயங்கி அவசர அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு சுமார் 1.5மணி நேரம் மனம் திறந்து பேசினாராம். சரி என்னவென்று மனம் திறந்திருப்பார்? ஆம், நான்தான் குஜராத் கலவரத்தை உத்தரவு போட்டு நடத்தினேன், இந்துக்களின் மானம் காக்க போலீசு, சங்க குண்டர்களை வைத்து முசுலீம்களைக் கொன்றேன் என்றா பேசியிருப்பார்? இதன்றி மனம் திறத்தல் என்பது என்ன?

அடுத்து மோடியின் நிர்வாகத்தை பலரும் வியந்து பேசுகிறார்களே, அது எப்படி சாத்தியமானது என்று கேட்கிறது குமுதம். மற்றவர்கள் வியந்து பேச வேண்டுமென்றால் பெய்ட் ஜர்னலிசம் இருக்கிறது. அம்பானிக்கும், டாடாவுக்கும் ஆயிரத்தெட்டு சலுகைகள் கொடுத்தால் அவர்களது ஊடக கம்பெனிகளில் கவரேஜ் இயல்பாகவே வருமே! இருந்தும் இந்த சேவை உணர்வு எங்கிருந்து வந்தது என்று மோடியிடம் கேட்கிறார்கள்.

சோ ராமசாமி
சோ ராமசாமி

முதலமைச்சர் பணியெல்லாம் சேவை என்றால் பத்திரிகை பணியெல்லாம் பக்தியா? மோடியும் சீனா போருக்கு சென்ற வீரர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்தேன், பாரத் மாதா கி ஜெய் கோஷம் போட்டேன், பிறகு ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்து சேவை உணர்வைக் கற்றேன் என்கிறார். நாட்டுக்காக ஆண்டைகளால் அனுப்பப்பட்டு சண்டை போட்டு சாகும் ஏழை வீரனெல்லாம் சேவை லிஸ்ட்டில் இல்லை. அந்த வீரனுக்கு தண்ணி அதிகம் கலந்து டீ கொடுத்தவனெல்லாம் சேவைக்காரன் என்றால், சந்தானத்தையும் நாம் மாபெரும் தத்துவஞானி என்று கொண்டாட வேண்டும்.

விவேகானந்தர்தான் மோடிக்கு ரோல் மாடலாம். ஆர்.எஸ்.எஸ் பயிற்சிதான் அடிப்படையாம். பின்னே 2002-ல் திட்டமிட்டு அறிவியல் பூர்வமாக முசுலீம்களை கொல்வதெல்லாம் சாதாரண விசயமா என்ன? இல்லை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் சொத்தைக் கொட்டிக் கொடுத்து ஆதரவை விலைக்கு வாங்குவதும் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியதா என்ன? இப்படி ஐஸ் ரம்பமாக போகிறது பேட்டி.

மோடியும் நமக்கு வாய்த்த தமிழக ஊடக அடிமைகள் ஜால்ரா அடிப்பதில் திறமையானவர்கள் என்று தொடையை தட்டியிருப்பார். மற்றபடி இவரை உண்மையாக நேர்காணல் செய்ய முயன்றால் கரண் தாப்பர் கேட்ட ஒரு கேளவிக்கே குட்பை சொல்லிவிட்டு கோபமாக எழுந்து சென்றது போலத்தான் நடக்கும். இதிலிருந்தே குமுதம் ஜந்துக்கள் எவ்வளவு திறமையாக பேசியிருப்பார்கள், அல்லது பாடியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதனால் குமுதத்தின் நோக்கம் என்ன? நாளைக்கே குமுதம் டிவி, குமுதம் சினிமா, குமுதம் தினசரி என்று வியாபாரத்தை விரிவுபடுத்தினால் ஒரு பிரதமரின் நேரடி ஆதரவு பல வகைகளில் அவசியமில்லையா? அதுவும் மோடியின் தென்னிந்திய குரு சோ, குமுதத்தோடு நெருக்கமான வணிக தொடர்பில் வந்த பிறகு இது ஒரு பெரிய வாய்ப்பில்லையா?

இதனால் என்ன நடக்கும்?

இனி மோடிக்கு ஆதரவாக அரசியல் நடவடிக்கைகளை விமரிசிப்பது என்ற பெயரில் மர்மக் கதைகளை எழுதி தள்ளுவார்கள். அவையெல்லாம் சோ வழியாக மோடிக்கும் போகலாம். குமுதத்திற்கும் பலனளிக்கலாம். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ யாருக்கும் தெரியாத விஜயபாரதம் பத்திரிகையை விட இளமைத்துடிப்புள்ள குமுதம் சங்கத்தின் கருத்துக்களை பேசுகிறது என்று வாய் பிளக்கலாம். ஷாகாக்களிலும் குமுதத்தின் கட்டுரைகள் விவாதிக்கப் படலாம்.

சீ…நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!