privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள் !

உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள் !

-

சென்ற மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மோசமாகும் வானிலையும், தொடரும் மழையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

உத்தரகாண்ட் வெள்ளம்எத்தனை ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள் என்று இன்னமும் மதிப்பிடப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்திய விமானப்படையும் இராணுவமும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புப்பணியின் போது ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

மேக வெடிப்பு காரணமாக கடல் மட்டத்திலிருந்து 14,200 அடி உயரத்தில் உள்ள வசுகிடால் பனிப்பாறை ஏரியில் நிரம்பிய நீர் 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத்தை அடைந்து மொத்த ஊரையும், கோவிலையும் துவம்சம் செய்தது. கோயில் சுடுகாடு போல காட்சியளித்தது. ருத்ர ப்ராயக், உத்திரகாசி, சமேலி, பிதோராகர் மாவட்டங்கள் என 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பேரழிவு ஏற்பட்டிருந்தது. கேதார்நாத் கோவிலின் பிரதான மேற்குச் சுவரே காணாமல் போய் விட்டது. வெள்ளத்தின் கோர தாண்டவத்தை பார்த்த பக்தர்கள், அதனை ருத்ர தாண்டவம் போல இருந்ததாகத்தான் சொல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலம் முழுவதிலும் கிட்டத்தட்ட 233 கிராமங்கள் அழிந்துள்ளன. 1307 சாலைகளும் 147 பாலங்களும் காணாமல் போயிருக்கின்றன.

பெருமளவு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது பத்ரிநாத்திலும், கேதார்நாத்திலும்தான். ரிஷிகேஷிலிருந்து 223 கிலோமீட்டர் தூரத்தில் மந்தாகினி ஆற்றின் முகத்துவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 11,700 அடி உயரத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது. 2001 கணக்கெடுப்பின்படி இங்கு 479 பேர் வசிக்கின்றனர். சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத்தில் 841 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஆனால், இந்த இடத்துக்கு வரும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கை 2006 சீசனில் மட்டுமே 6 லட்சமாக இருந்தது.

பக்தி சுற்றுலா என்ற பெயரில் சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் பட்டி தொட்டிகள் எல்லாம் பரவியுள்ள ஏஜெண்டுகள் தலா ஒருவருக்கு 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ரயில் போக்குவரத்து, வீட்டு உணவு, தங்குமிடம் போன்றவற்றை கூட்டாக ஏற்பாடு செய்து தருவதாக அழைத்துச் செல்கின்றனர். கூடுதல் விருப்பமும், வசதியும் உடையவர்கள் இன்னும் அதிகம் செலவழித்து சொகுசான ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு சிறப்பு உணவுகளை வாங்கிக் கொள்ளலாம்.

புனித யாத்திரை போவதற்கான பொருளாதார வலு இருக்கும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை இந்த ஆன்மீக சுற்றுலாத் துறை குறி வைக்கிறது. கி.பி. 9-ம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் போன இடம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் போய் வரும் இடம் என்று அதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியையும் கட்டமைக்கிறார்கள். உண்மையில், நவீன போக்குவரத்து வசதிகள் வந்த 19-ம் நூற்றாண்டுக்கு முன்பாக, பெரும்பான்மை மக்கள் இத்தகைய யாத்திரைகள் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஆதி சங்கரர் போன்ற ஒரு சில பார்ப்பன சாமியார்கள், கனவில் கூட இங்கெல்லாம் சென்றிருக்க வாய்ப்பில்லை.

uttarakhand_floods_rains20-ம் நூற்றாண்டின் அறிவியலும், தொழில் வளர்ச்சியும் உருவாக்கிய கட்டமைப்பு வசதிகளும், நடுத்தர வர்க்கத்திடம் சேர்ந்திருக்கும் செல்வச் செழிப்பும் புனித சுற்றுலா போகும் கணிசமான எண்ணிக்கையினரை சாத்தியப்படுத்தியுள்ளன. அவர்களை முன் வைத்து சந்தைப்படுத்தப்படும் ஆன்மீக சுற்றுலாக்கள் இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததோடு, சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலி வாங்குவதில் முடிந்திருக்கின்றன.

இப்போது உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை சோட்டா சார் தாம் (நான்கு புனிதத் தலங்கள் – சிறியவை) என்று அழைக்கப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் உள்ள பத்ரிநாத்தின் முக்கியத்துவத்துக்கு தேவ பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ண பிரயாகை, நந்த பிரயாகை, விஷ்ணு பிரயாகை என்று பெயர் சூட்டப்பட்ட நதித் துறைகளும், மகாபாரதத்தில் பாண்டுவும் மாத்ரியும் தவம் புரிந்த பாண்டு கேஷ்வர், பாண்டவர்கள் சொர்க்கத்துக்குப் போகும் வழியில் தங்கிய இடம், பீமனும் ஹனுமானும் சந்தித்த இடம் என்று பல புராண, இதிகாச புரட்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் விஷ்ணு தவம் புரிந்த போது மகாலட்சுமி பாதாரி மரமாக மாறி அவருக்கு காவல் புரிந்ததாகவும் அதனால் விஷ்ணு பதாரி நாத் என்று அழைக்கப்படுகிறார் என்று நாக்கூசாமல் அளந்து விடுகிறார்கள். விஷ்ணு நர, நாராயண வடிவங்களை நாரதருக்கு காட்டியதும் இங்குதானாம். சாலிகிராமத்தால் செய்யப்பட்ட பத்ரி நாராயணன் பதாரி மரத்தின் கீழ் குபேரனும், கருடனும் சூழ வீற்றிருக்க, மகாலட்சுமி சந்நிதி வெளியில் உள்ளது. இத்தனை கடவுள்கள் இருந்தும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்த பக்தர்களை காப்பாற்ற வக்கில்லை.

வனப் பிரஸ்தம் என்று பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் செய்யும் சில அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த புனிதத் தலங்களுக்கு போய் வருவதை நடுத்தர வர்க்க மக்கள் கருதுகிறார்கள். அதன் மூலம் தமது பாவங்களை சுத்தப்படுத்தி, பரலோக வாழ்க்கைக்கு தயார் செய்வதாக நம்புகிறார்கள்.

ஆனால், யாத்திரை போகும் போது நிஜ உலகம் அவர்களை எதிர் கொள்கிறது. தாம் நினைத்தது போல ஆன்மீக பரவசமோ, இறை அனுபவமோ வேறு எந்த புண்ணாக்குமோ கிடைக்கவில்லை என்பதை உணர்கிறார்கள். ஆனால், உண்மையை வெளியில் சொல்வதை அவர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளும் சரி, அவர்களது சமூகச் சூழலும் சரி அனுமதிப்பதில்லை. இறுதியில் தாங்கள் பார்த்து பரவசப்பட்டதாக கருதிய தருணங்களை, புனிதத் தலங்களைப் பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இட்டுக் கட்டி பேசுவதற்கு உதவும் ஒரு நிகழ்வாக இத்தகைய பயணங்கள் சுருங்கி விடுகின்றன. அப்படி பேசுவதை கேட்கும் உறவினர்களும் நண்பர்களும் அடுத்த சுற்றுப் பயணத்துக்கு புறப்படத் தயாரிக்கப்படுகிறார்கள்.

Uttarakhandமிகவும் பலவீனமான மலைப்பகுதியான இப்பகுதியில் உள்ள பாறைகள் நடந்து செல்லும் போதே பல இடங்களில் உடைந்து உதிரும் தன்மையை உடையவை. மேற்குத் தொடர்ச்சி மலையை போல இவை கடின வகைப் பாறைகள் அல்ல. இங்கு சுமார் 18 பெரிய மற்றும் சிறிய நதிகள் உற்பத்தியாகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 9 முறை வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய மலைப்பகுதியில் வாகனங்களை செல்வதற்கு அனுமதிப்பது என்பதே தற்கொலைக்கு சமமானதுதான். இங்குதான் சிவன் இருந்தான் என்று சொல்லி கோவிலை நிர்மாணித்ததற்கும் சாலைகளை அமைத்து பெரும் வாகன எண்ணிக்கைகளை அனுமதித்தற்கும் பக்தி என்ற பெயரில் நடக்கும் வியாபாரம்தான் முழுமுதல் காரணம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகையே ஒரு கோடியாக இருக்கும் போது, வரும் யாத்ரிகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 கோடி. ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையில் ஏறக்குறைய 140% வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பத்து மடங்கு உயர்ந்துள்ளது.

வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து தங்கும் விடுதிகள், சிறு கடைகள், உணவகங்கள் சக்கை போடு போட ஆரம்பித்தன. 32 புண்ணிய தலங்கள் உள்ள உத்தர்காண்டின் சுற்றுலாத் துறை வருமானம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.12,000 கோடியாகும்.

இப்போது நடந்துள்ள இயற்கை பேரழிவில் பெரிய உணவகங்கள் மட்டும் 100 வரை காணாமல் போயிருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது. கங்கை, பகீரதி, அலக் நந்தா, மந்தாகினி போன்ற நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் இதற்கு காரணம். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 26-ம் தேதி உச்சநீதி மன்றம் கங்கை நதியின் கரையிலிருந்து 200 மீ தூரத்துக்குள் இருக்கும் கட்டிடங்களை இடிக்க உத்திரவிட்டுள்ளது.

நொறுங்கும் பாறைகளைக் கொண்ட இமயமலையில் சாலை அமைத்து, ஆற்றங்கரையில் விடுதிகள் கட்ட அனுமதி தந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் அலட்சியம் செய்தது அரசு. இவை அனைத்தையும் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதித்த அரசு இப்போது மீட்புப் பணிகளில் விமானப் படையை ஈடுபடுத்துவதன் மூலம் மீட்பு பணியின் பெயரால் தேச ஒற்றுமையை கட்டுவதாக பிரச்சாரம் செய்கிறது.

ஒரு மேக வெடிப்புக்கே தன் மேல வாசலை இழந்து விட்ட சிவனோ கேதார்நாத்தில் மலைப்பிரதேசத்தில் குளிருக்கு நடுங்கியபடி அம்மணமாக நிற்கிறான். கம்பளி கொடுக்கத்தான் ஆளில்லை. பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தரகாண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் வருடா வருடம் வெள்ளத்தில் கொல்லப்படும் மக்களை சிவனால் மட்டுமல்ல இந்திய அரசாலும் காப்பற்ற முடியாது.

மேலும் படிக்க