privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ராகுல் காந்தி கொல்லப்படுவாரா ?

ராகுல் காந்தி கொல்லப்படுவாரா ?

-

”நாட்டுக்காக உயிர் நீத்த என் பாட்டி, தந்தையைப் போல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்” என்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடந்த காங்கிரசின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. நாட்டில் வகுப்புதத்தை தூண்டி முசாபர்நகர், குஜராத், காசுமீர் போன்ற இடங்களில் கலவரத்தை நடத்தி பலரது மரணத்துக்கு காரணமாக பாஜக இருந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

”மக்களிடையே கோபத்தை வளர்க்கும் வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள். அந்த கோபத்தை தங்களது அரசியல் லாபத்திற்காக பாஜக வளர்த்து விடுகிறது. கடைசியில் மக்களை அந்த அரசியல் பாதிப்பதால் நான் அதனை எதிர்க்கிறேன்” என்று பேசிய ராகுல், தனது பாட்டியை கொன்றவர்கள் மீது தனக்கு அப்போது கோபம் இருந்ததாகவும், அதே போல தங்கள் மீது பஞ்சாப் மக்களுக்கும் கோபம் இருந்ததாகவும், காலப்போக்கில் அந்த கோபங்கள் கரைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மக்கள் பாதிக்கப்படுவதால் தான் தான் மதவெறியை எதிர்ப்பதாக இப்போது ராகுல் கூறுகிறார்.

1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது இரு சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தலைநகர் தில்லியில் நடந்த சீக்கிய படுகொலையில் ஏறத்தாழ 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ‘ஒரு ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்’ என்று அதனை நியாயப்படுத்தினார் இந்திராவின் அருமாந்திர புத்திரனும் அடுத்து பிரதமராக பதவியேற்றவரும், ராகுல் காந்தியின் அப்பாவும், சோனியாவின் கணவருமான ராஜீவ் காந்தி.

அடுத்த மூன்று நாட்களிலும் தில்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், தீ வைப்புகள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற செயல்களுக்கு தலைமையேற்றவர்கள் அன்று செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த எச்.கே.எல் பகத், நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகதீஷ் டைட்லர், தில்லி மாநகராட்சி கவுன்சிலரான சஜ்ஜன் குமார் ஆகியோர். பின்னர் அமைக்கப்பட்ட நானாவதி கமிசன் இவர்களை குற்றவாளிகளாக அறிவித்த பிறகும் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சஜ்ஜன் குமாருக்கும், டைட்லருக்கும் போட்டியிட வாய்ப்பளித்தது காங்கிரசு கட்சி. சீக்கிய மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பிய பிறகு சஜ்ஜன் மட்டும் வாபஸ் வாங்கினார். டைட்லரோ தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

சீக்கிய கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட 740 வழக்குகளில் 324 ஐ விசாரணை ஏதுமின்றி ஊற்றி மூடினார்கள். 20 ஆண்டுகள் கழித்து 2005-ல் தான் மேற்படி மூவர் மீதும் வழக்கு தொடரவே முடிந்தது. சாட்சிகள் நம்பும்படியாக இல்லை எனக் கூறி 2007, 2009, 2013 ஆகிய காலகட்டங்களில் மூவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். டைட்லருக்கு எதிராக சாட்சி சொன்ன ஜஸ்பீர் சிங், சுரீந்தர் சிங் போன்றோர் தற்போது உயிருக்கு பயந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.

பஞ்சாபில் அகாலிகளை ஒடுக்க பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டு, பிறகு முரண்பாடு வந்த பிறகு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய இந்திராவுக்கு அவரே வளர்த்த சீக்கிய தீவிரவாதம் தந்த பரிசு தான் அவரது படுகொலை. பதிலுக்கு அப்பாவி சீக்கியர்களை கொன்ற காங்கிரசு காலிகள் அனைவரும் இன்று நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பாசிஸ்டு இந்திரா நாட்டுக்கு உழைத்த நல்லவராக விளம்பரம் செய்யப்படுகிறார்.

சீக்கிய கலவரம் முடிந்து 29 ஆண்டுகளுக்கு பிறகும் நீதி கிடைக்காத பாதிக்கப்பட்ட சீக்கிய குடும்பங்கள், விதவைகள், குறிப்பாக சஜ்ஜன் குமாரின் கும்பலால் தனது குடும்ப உறுப்பினர்களில் கணவன் உட்பட ஐந்து பேரை பறிகொடுத்த ஜெகதீஷ் கவுர் போன்றவர்களிடம் இருப்பது கோபம் மட்டுமல்ல, இயலாமையும் தான். நீதித்துறையும், போலீசும் அவரது சாட்சியத்தை சஜ்ஜனுக்காக மட்டும் புறக்கணித்த போது அந்த விதவையின் கண்ணீரை எந்த ராகுல் வந்து துடைக்க முடியும். காலம் அவரது கோபத்தை கரைக்க முடியுமா என்ன?

ராஜீவ் காந்தியும் அவரது அம்மாவுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல. போபால் படுகொலையில் மக்களுக்கு எதிராக இருந்த ராஜீவ், ஈழத்தை இந்தியாவின் இன்னொரு மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் அங்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ், பீரங்கிப் பேர ஊழல் மட்டுமின்றி ஏர் பஸ் ஊழல், ஊதாரித் தனம் என ஊழலிலும், ஒடுக்குமுறையிலும் கொடிகட்டிப் பறந்த ராஜீவை ஒரு சைவப்புலி என்றால் வரலாறு மன்னிக்காது.

தன்னை சுற்றி உயர் ரக பாதுகாப்பு கவசங்கள், குண்டு துளைக்காத கார்கள், கருப்பு பூனை படைகள் என வலம் வந்த இந்த இளவரசர்தான் அம்பானியின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு உடந்தையாகவும் இருந்தார். ஆளும் வர்க்கத்தின் மேன்மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு ஏதுமின்றி மக்கள் அன்றும் இன்றும் போலீசின், ரவுடிகளின் தாக்குதலுக்குட்பட்டுத்தான் வாழ்கின்றனர். உலகமயமாக்கலின் பாதிப்போ அவர்களை வாழ வழியில்லாமல் துரத்துகையில் வாழ்க்கையில் பாதுகாப்பு என்பதற்கு மக்களின் மொழியில் எந்த அர்த்தமும் இன்று கிடையாது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

பஞ்சாப், அசாம் என தேசிய இனங்களை ஒடுக்குவதை முதன்மையான பணியாக கொண்டிருந்தார் ராஜீவ். சொந்த கட்சியினரே காறித் துப்புமளவுக்கு ஊழல் விவகாரங்களில் அம்பலமான பிறகு, தேர்தலில் தோற்ற ராஜீவ் அடுத்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என கங்கணம் கட்டிக் கொட்டு தனது பாதுகாப்பு வளையத்தை மீறி மக்களை சந்திக்கும் ஓட்டுக்கட்சிகளது ஏழைகளின் காவலன் ஸ்டண்ட் பாணி அரசியலுக்கு தாவினார்.  புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை அடகு வைத்து, புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விக் கொள்ளையர்களை அனுமதித்த ராஜீவ் நாட்டுக்காக உயிர் விட்டார் என்று இப்போது நம்மை நம்பச் சொல்கிறார் ராகுல்.

‘இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வார், நேரு குடும்பத்தில் இளைய பிரதமர், கம்ப்யூட்டர் யுகத்தின் கல்கி அவதாரம்’ என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட ராஜீவ் உண்மையில் ஒரு பாசிஸ்டு என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ”கோட்டா முறையை ராஜீவ் ஒழித்ததால் தான் இன்று எல்லோரும் செல்பேசி வைத்திருக்க முடிகிறது” என ராஜீவின் தனியார்மய நடவடிக்கைக்கு பொழிப்புரை வழங்கியிருக்கிறார் ராகுல். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிய ஆ.ராசா கூட தனது செயல் பற்றி இப்படித்தான் கூறினார். ஆனால் லைசன்ஸ் கோட்டா ராஜ் காலத்திலும் சரி, உலகமயமாக்கல் காலத்திலும் சரி காங்கிரசு பெருச்சாளிகள்தான் மற்றவரை விட ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

1949 முதல் மூடிக்கிடந்த அயோத்தி மசூதியை 1986-ல் திறந்து விட்டு இந்துக்களை வழிபட செய்ய அனுமதித்து அயோத்தி பிரச்சினையை கிளறி விட்டவரே ராஜீவ காந்திதான். இத்திறப்பு தான் பாஜக-ன் இந்துமத வெறியின் வளரச்சிக்கு வித்திட்டது. இன்று இந்துத்துவா சக்திகளின் ‘வெறுப்பு அரசியல்’ பிடிக்கவில்லை என்று ராகுல் கூறினாலும் இந்த வெறுப்பு அரசியலை வளர்த்து விட்டவர்களில் முதன்மையானவர் அவரது பாட்டி என்பதை மறந்து விடக் கூடாது. மக்களை பிரித்து அவர்களுக்குள் சாதி, மத, வகுப்புவாத மோதல்களை உருவாக்குவதில் பாசிஸ்டுகள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அம்மோதல்களின் பலனை அறுவடை செய்து கொள்ள அவர்கள் முந்திக் கொள்கிறார்கள், தேவைப்பட்டால் மோதியும் கொள்கிறார்கள். அம்மோதல்களில் தங்களுக்கு உதவிய மக்கள் விரோத ரவுடிகளை பின்னர் சட்டம், போலீசு, நீதிமன்றம் மூலம் பாதுகாக்கின்றனர்.

தனது ஓட்டுச்சீட்டு அரசியலுக்காக மக்களை மத, சாதிய அடிப்படையில் பிரித்து ஆண்ட காங்கிரசு கட்சியின் அரசியலாலும், அவர்களது மிதவாத இந்துத்துவாவின் போதாமையினாலும் இந்துமத வெறி இந்திய அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. அது வாஜ்பாய் பிரதமர், மோடி முதலமைச்சர் எனுமளவுக்கு வளர்ந்தது. எனவே இந்த கோபத்தை வளர்க்கும் அரசியலை குறிப்பாக இந்துமதவெறியை வளர்த்து விட்டதில் காங்கிரசுக்கும் முக்கியமான பங்குண்டு. இன்று குஜராத்தில் தொழில் அமைதியைப் பேச தொழிற்சங்கமே இல்லாத நிலைமையை உருவாக்கியுள்ள பாஜக-வின் முன்னோடிகளாக எழுபதுகளில் பம்பாயில் தொழிற்சங்க இயக்கத்தை முடக்க சிவசேனா குண்டர் படையை வளர்த்து விட்டதே காங்கிரசுக் கட்சிதான்.

பாசிஸ்டுகள் எப்போதும் ஆயுதங்களுடன் மட்டும் மக்களிடம் வருவதில்லை. அந்த வகையில் தான் தனது சென்டிமெண்ட் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ராகுல் இப்போது வந்திருக்கிறார். பெண்ணென்றும் பாராமல் சிறையில் அடைத்து விட்டார்கள் என பாசிஸ்டுகளான இந்திராவும், ஜெயாவும் முன்னர் வடித்த கண்ணீரை நாடே பார்த்திருக்கிறது. அந்தக் கண்ணீர் அடுத்து வந்த தேர்தல்களில் வாக்குகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்திராவின் பிணம் ராஜீவுக்கு மிகப்பெரிய அளவில் நாடாளுமன்ற சீட்டுகளை அள்ளித் தந்தது. அவரது சாவு பிழைக்கவே வழியில்லாமல் இருந்த காங்கிரசுக்கு உயிர்த் தண்ணீர் வார்த்தது போல மீண்டும் ஆட்சியில் அமர வைத்தது.

இப்போது ராகுலின் முறை. பசுமை வேட்டை என்ற பெயரில் மத்திய இந்தியாவில் பழங்குடியினரையும், மாவோயிஸ்டுகளையும் ஒடுக்க ராணுவ சிறப்புப் படைகளை அனுப்பிய காங்கிரசு, காசுமீரிலும், வட கிழக்கிலும் போராடும் மக்கள் மீது சிறப்பு ஆயுதச்சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வரும் காங்கிரசு, அணுஉலை எதிர்ப்பு, விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டங்களை கடுமையாக ஒடுக்கி வரும் காங்கிரசின் பட்டத்து இளவரசர் தனது உயிர் பறிபோகும் தியாகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த தியாகத்தின் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான சுயநலத்தை மறைப்பதற்கு கூட இப்போது காங்கிரசுக்கும், ராகுலுக்கும் வழியில்லை. ஏனெனில் இவர்களது ஆட்சியில் உயிரையும், உடமையையும், வாழ்க்கையும் பறிகொடுத்து தியாகம் செய்வது மக்கள்தானே?

– வசந்தன்.