மூடநம்பிக்கையை திரைகிழிப்போம்!
புத்தியை கெடுக்கும் மூடத்தனத்தை
மக்களை ஏய்க்கும் தந்திரத்தை
விதியை தீர்மானிக்கும் அரசின் கொள்கையை மறைத்து
வீதிதோறும் மக்களை ஏய்க்கும்
மதவாதிகளின் சித்து வேலையை திரைகிழிப்போம்!
மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
2.2.2014 ஞாயிறு மாலை 6 மணி, திருச்சி சண்முகா மண்டபம், புத்தூர் நால்ரோடு.
முதல் நிகழ்வாக, பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் இந்துமதி தலைமையேற்று உரையாற்றினார்.

“கடவுள், மதம் உருவாகாத காலத்தில் ஆதிமனிதன் இயற்கையை கட்டுப்படுத்த தனக்கு ஆற்றல் இருப்பதாக கருதி கொண்டு சில ஒலிகளை எழுப்பியதே மந்திரம் என்றிருந்தது, இன்று அந்த மந்திரம் என்பது பிறரை ஏமாற்றுவதற்காக தந்திரமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது, மக்களின் அறியாமையை முதலாளிகளும், அரசும் பயன்படுத்தி கொள்கிறது, சீனவாஸ்து பொருள்களை விற்பது, அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கினால் தங்கம் சேரும் என்பது, இது மட்டுமின்றி ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை திட்டமிட்டு பரப்புகிறது, இந்துமதம் மட்டுமின்றி கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களும் மூடநம்பிக்கையை ஊக்கப்படுத்துகிறது” என பேசினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஓவியா பேசும்போது, “பசி, பட்டினி, வறுமை தான் மக்களை சாமியார்களிடம் செல்ல வைக்கிறது, மந்திரமும், மூடநம்பிக்கைகளும் மக்களை அறியாமையில் ஆழ்த்துகிறது., இதை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்துகிறது, மகாராஷ்ராவில் ஒரு பகுத்தறிவுவாதியை ஆ்ர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்தது. பெரியார் பிறந்த மண்ணில் பகுத்தறிவுக்கு புதைகுழிதோண்ட இந்துமத வெறி பாசிஸ்டுகள் முயல்கின்றனர். அதை ஒழித்துக் கட்டி மக்களை விடுவிப்பது நமது கடமை” என்றார்.

மக்களின் மூடநம்பிக்கைகளை திரைக்கிழிக்கும் விதமாக இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர நாயக் அவர்கள் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார். சாய்பாபா போன்ற பித்தலாட்ட சாமியார்கள், லட்டு, செயின், லிங்கம் வரவழைப்பு, அதைப்பார்த்து பக்தர்கள் மயங்கி சரண்டைவது வெறுங்கையில் விபூதி தருவது இந்த சித்துவேலை மோசடியை அவரே செய்து காட்டி விளக்கமளித்தார்.
அதேமாதிரி பொம்பள ஆசாமி, அமிர்தானந்தமயி, வெறுந் தண்ணீரில் விளக்கெரிய வைத்த அதிசயத்தை கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர், ஆனால் கூட்டத்திலுள்ள 7 வயது சிறுமியை மேடைக்கு அழைத்து அதேபோல் தண்ணீரில் விளக்கெரிய வைத்தார். அதைக் கண்டு எல்லோரும் அதிசயத்த போது, திரியில் மெழுகு தடவிய சூட்சுமத்தை திரை கிழித்தார். இதுபோன்ற இன்னும்பல மூடநம்பிக்கைகளை உண்மை என்ன என்பதை நிகழ்த்திக் காட்டினார்.
பெண்கள் குழந்தைகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி – திருச்சி.