privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !

மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !

-

மோடி அலையா? அல்லது மோடி சுனாமியா? இல்லை, காங்கிரசு எதிர்ப்பு அலையா? நடந்து முடிந்த பதினாறாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் கொண்டு போய் அமர்த்தியது  எது என்ற பட்டிமன்றத்தை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவை எதுவுமே கிடையாது. வழமையான திருகு சுற்றுப்பாதையில் பயணப்படும் தரகு முதலாளிகளின் அரசியல், பொருளாதாரம் கிரமமான முறையில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருக்கடியில் சிக்கிக்கொள்வதும், வெறுப்பில் மக்கள் மூழ்குவதும்  எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப் போவதாக ஒரு இரட்சகர் தோன்றி வாக்காளர்களை ஏய்த்து ஆட்சியைப் பிடிப்பதும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவதும் நாம் காணாததில்லை. ஆனால், இப்போது ஏதோ புதிய பாதையில்  புதிய பயணம் தொடங்கி நாடு எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பல தேர்தல் கூத்துகளை அரங்கேற்றி, செயற்கையாக அலையும் சுனாமியும் எழுப்பப்பட்டது.

கங்கை பூஜை
தனது பிரதமர் கனவு நனவானவுடனேயே, பார்ப்பன சடங்கு – சம்பிரதாயங்களின்படி கங்கை நதிக்குப் பூஜை செய்யும் நரேந்திர மோடி.

அந்தப் பிரமை இப்போதும் பராமரிக்கப்படுகிறது. காங்கிரசு, பவார், முலயம், மாயாவதி, லாலு, நிதிஷ், கருணாநிதி, ”இடதுசாரிகள்” ஆகியோரின் படுவீழ்ச்சிகளோடு ஒப்பிட்டு, மோடியின் வெற்றி குறித்து ஊடகங்களால் ஊதிப்பெருக்கிக் காட்டப்படுகிறது. முன்பும், இந்திராவும், ஜனதாவும், ராஜீவும் கூட இந்த மாதிரியான தேர்தல் வெற்றிகளைப் பெற்றார்கள். அடுத்த சில ஆண்டுகளிலேயே தலைகுப்புற வீழ்ந்தார்கள். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் துணையில்லாமல் அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்குக் கூட நாடாளுமன்றத்தில் பலம் பெறாத போதும் மோடி இமாலய சாதனையை  எட்டிவிட்டதாக ஒரு பிம்பம் வரையப்படுகிறது.

இதையும் கூட, இந்த நாட்டுக்கேயுரிய அரசியல் நிலைமைகளுக்கேற்ப பார்ப்பன பாசிசப் பஞ்ச தந்திரங்களைப் பயன்படுத்தியே ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.கவினர் சாதித்துள்ளனர்.  சாதிரீதியாகவும் மதரீதியாகவும் நாட்டு மக்களைக் கூறுபோட்டு ஒருமுனைப்படுத்தினர். மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அரசியல் ஆதிக்கக் கும்பல் ஆகிய இரட்டைக் கவட்டிகளை ஊன்றிக்கொண்டு சாதித்தனர்.

கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள அச்சு, தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய ஊடக பீரங்கிகள், இட்லரின் கோயபல்சு-கோயரிங் புளுகுணிகளே அதிசயக்கக் கூடிய வகையில் மோடி துதிபாடும் பாசிச பிரச்சாரங்களைக் கொண்டு இந்திய மக்களின் காதுகளைத் தகர்த்தன. மோடியைச் சுற்றி அரசியலற்ற, சின்னத்தனமான கவர்ச்சி மோகத்தைக் கட்டமைத்தனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – முன்னேற்றம் மற்றும் திறமைமிகு நிர்வாகம் என்ற கவர்ச்சி முழக்கத்தை முன்தள்ளிய  ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல், அதற்குள் தனது பார்ப்பன – பாசிச அரசியல் ஆதிக்க இந்துத்துவா செயல் திட்டத்தையும் மோடி- அமித் ஷா  மதவெறிக் கிரிமினல் கொலைக் குற்றங்களையும் தந்திரமாகவும் சதித்தனமாகவும் ஒளித்து வைத்துக் கொண்டனர்.

தானே பீற்றிக்கொள்ளும் கொள்கை-கோட்பாடு களுக்கு மாறான, எதிரான ஊழல்வாதிகள், பிழைப்புவாதிகள், கட்சிமாறிகள், சாதியவாதிகள், பிராந்தியவாதிகள், சமூகவிரோதிகள், தேசத்துரோகிகள் ஆகியோருடன் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டனர். நீண்டநாள் கட்சி விசுவாசிகளையும் ஓரங்கட்டி விட்டு சினிமாக்காரர்கள், கருப்புப்பண, கள்ளச்சந்தை, கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்தினார்கள்.

முசாஃபர் நகர் அகதிகள்
உ.பி முசாஃபர் நகரில் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறிக் கும்பல் ஜாட் சாதியினரைத் தூண்டி விட்டு நடத்திய கலவரத்தால் பாதிக்கப்பட்டு, ஜூலா என்ற கிராமத்திலுள்ள மசூதியில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள முசுலீம்கள் (கோப்புப்படம்)

பாசிச பஞ்ச தந்திரங்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல,  நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலுக்குச் சாதகமாக அமைந்து விட்டன. மறுகாலனியாதிக்க, தனியார்மய – தாராளமய – உலகமயமாக்கப் புதிய பொருளாதாரக் கொள்கையின் எதிர் விளைவுகளைப் புரட்சிகர, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் பொருத்தமான, அவசியமான மாற்றுக்களை முன்வைத்துப் பயன்படுத்தத் தவறி விட்டன. ஒருபுறம் போலி மதச்சார்பின்மை, போலி சீர்திருத்தம், போலி ஜனநாயகம்-முற்போக்கு, போலி இடதுசாரி அரசியல் பேசும் சக்திகள்; மறுபுறம், வலது கடைக்கோடி ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க பார்ப்பன பாசிசக் கும்பல் மற்றும் பிழைப்புவாதிகள், சாதியவாதிகள் அடங்கிய கூட்டணி; இரண்டில் பின்னதை நாட்டு மக்கள் தெரிவு செய்து கொண்டார்கள். இது ஏன்? எப்படி நிகழ்ந்தது?

கடந்த கால் நூற்றாண்டு காலமாக அமலாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கையாலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க போன்ற பிற்போக்கு சக்திகளாலும் வர்க்க ரீதியிலும், சாதிரீதியிலும், மதரீதியிலும்  இந்திய சமூகம் முனைவாக்கப்பட்டது (polarized) ஓட்டு வங்கிகளாகத் திரட்டப்பட்டது.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு நுகர்பொருள் சந்தையைப் பெருமளவு விரிவாக்குவதற்காக வரம்பு மீறிய ஊதியங்களும் எளிய வட்டிக் கடன்களும் பன்மடங்கு வாரி வழங்கப்பட்டு, அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப்பிள்ளைகளாக மேல்தட்டு ஊழியர்கள், அதிகாரிகள் அடங்கிய  ஒரு மேட்டுக்குடி உருவாக்கப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற உயர் தொழில் நுட்பம் சார்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில், சந்தைக் கூட்டாளிகள் இணைந்தனர். கார்ப்பரேட் ஊடகம் இவர்களிடம் அரசியலற்ற, சமூக மதிப்பீடற்ற,  சுயநலக் காரியவாதம், நுகர்வுக் கலாச்சாரம், பண்பாட்டுச் சீரழிவு-பிற்போக்கு, குட்டி முதலாளிய அற்பவாதம், சித்தாந்தம் ஆகியவற்றை விதைத்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் பலன்களால் கொழுத்த இந்த சுயநலப் பிரிவினர் மோடியின் வளர்ச்சி, முன்னேற்றக் கொள்கை தமக்கு மேலும் ஆதாயங்களைக் கொண்டுவந்து குவிக்கும் என்று நம்பினார்கள்.  பார்ப்பன எதிர்ப்பு திராவிட மற்றும் இடதுசாரி இயக்கங்கள் காலூன்றாத பகுதிகளில் பிற்பட்ட சாதியினர் தாமே ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலின் சாதிவெறி, மதவெறியை வரித்துக் கொண்டவர்களானர்கள். இவர்களோடு 2,3 தலைமுறையாக சமூகநீதி, இடஒதுக்கீடுக் கொள்கையின் பலன்களைப் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்ட்ட சாதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில், சந்தைக் கூட்டாளிகளான இசுலாமியர்களும் ஒருசேர ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலின் சாதிவெறி, மதவெறியுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி, மற்றும் அதானி.
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை தாம் மட்டும் அறுவடை செய்து கொள்ள வேண்டும் என்ற பேராசையில் மூழ்கிக் கிடந்த மகாராஷ்டிரா-குஜராத் தாழ்வாரப் பகுதியைச் சேர்ந்த தரகு முதலாளிகளுள் சிலர் (இடமிருந்து) ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி, மற்றும் அதானி.

இதன் பலன்களை அதிகபட்சமாக அறுவடை செய்துகொள்ளும் விதமாக ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றக் கொள்கைகளைப் பசப்பிக் கொண்டே, வாக்காளர்களைச் சாதிரீதியிலும், மத ரீதியிலும்  முனைவாக்கப்படுத்தும் சதிகளிலும் தந்திரங்களிலும் வல்லவரும், மோடியின் வலதுகரமுமான அமித் ஷா களத்தில் இறக்கப்பட்டார். முசாஃபர்நகர் மதவெறிப் படுகொலைகளை நடத்தி ஜாட் சாதியினரை இசுலாமியருக்கு எதிராகத் திரட்டியதில் இருந்து தேர்தல் முடிவுகள் வந்ததும் மீண்டும் மீரட்டில் மதவெறிக் கலவரத்தை அரங்கேற்றியது வரை இசுலாமியர்கள் எவ்வாறு மதவெறிக் கூட்டத்தால்  சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்ற கதையை நாடே அறியும்.

சரண்சிங், திகாய்த் தலைமையில் ஒன்றுசேர்ந்து பல போர்க்குணமிக்க விவசாய போரட்டங்களைக் கண்ட ஜாட் சாதியினரும் இசுலாமியர்களும் இப்போது கொலைவெறி கொண்ட எதிரெதிர் சக்திகளாக நிற்கிறார்கள். இதுதான் மோடி-அமித் ஷா கும்பலின் வெற்றிச் சூத்திரம்.  தாக்குதலுக்கு அஞ்சி இசுலாமியர்கள் வாக்குச் சாவடிகளை அண்டாமலிருப்பதும் அதையே மோடி-அமித் ஷா கும்பல் சாதகமாக்கிக் கொள்வதுமான ”குஜராத் மாடல்” வேறு மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூத்திரத்தின் மறுபக்கம் ஒன்றுண்டு. அயோத்தி பாபரி மசூதி இடிப்புக்குப் பிறகு உ.பி., பீகாரில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன பாசிச கும்பலின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்டுக் கிடந்தது. மாயாவதியின் தலித்-பார்ப்பன- இசுலாமியர் கூட்டும், முலாயம்  சிங்கின் யாதவ்-இசுலாமியர் கூட்டும் மாறிமாறி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  கும்பலை முடக்கி வைத்திருந்தது. பீகாரில் லாலுவின் யாதவ் – இசுலாமியர் கூட்டும் பா.ஜ.க.- நிதிஷின் ஜனதா கூட்டணியும் முறிந்த பிறகு பூமிகார் – குர்மி- இசுலாமியரின் கூட்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  அல்லாத ஆட்சி அமையவும் காரணமாயிருந்தது. இந்தமுறை மேற்படி சாதிகளின் தலைவர்கள், பிரமுகர்களுக்கு விலைபேசியும் பதவி வாக்குறுதி கொடுத்தும் தனக்குச் சாதகமான சாதி, மத முனைவாக்கத்தைக் கட்டிக் கொண்டது, மோடி-அமித் ஷா கும்பல்.

மோடி-அமித் ஷாவின் உருவில் தமது இயல்பான கூட்டாளியைக் கண்ட மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் தமது ஏகபோக ஊடக ஆதிக்கத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. கும்பலின் எடியூரப்பா,  ரெட்டி சகோதரர்களின் இலஞ்சம்-ஊழல், அதிகார முறைகேடுகளைப் பின்னுக்குத் தள்ளினர்; காங்கிரசு கூட்டணி அரசின் இலஞ்சம்-ஊழல், அதிகார முறைகேடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினர். தாமே மிகப்பெரிய கருப்புப் பண முதலைகளாக இருந்தபோதும், அன்னா ஹசாரே, ராம்தேவ் முதலிய எடுபிடிகளை முன்னிறுத்தி கருப்புப்பண எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அதற்கு காங்கிரசு கூட்டணி அரசை இலக்காக்கினர். பல ஆயிரம் கோடி ரூபாய்களையும் ஏகபோக ஊடகங்களையும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  கும்பலின் ஆணையில் திரட்டிக்கொடுத்து அதன் வெற்றியை எளிதாக்கினர்.

***

ர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலின் அரசியல் தலைமையாக மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் இருந்தபோதும், அதன் பொருளாதாரப் புரவலர்களாக எப்போதும் மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் இருந்திருக்கிறார்கள். இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்தின் வேரும் விழுதும் இவர்கள்தாம். பரம்பரை வட்டி லேவாதேவி மூலதனம், காலனிய காலத்தில் போதைப் பொருள் கடத்தல், தரகுத்தொழில் மூலதனம் இவற்றைக் கொண்டு தோற்றமெடுத்த இவர்கள்  காங்கிரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டினுடனான அரசியல் கள்ளக்கூட்டைக் கொண்டு  இப்போது இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மைச் சக்தியாக வளர்ந்து நிற்கிறார்கள்.

03-caption

1947 அதிகார மாற்றத்துக்குப் பிந்திய காலத்தில் அடிப்படைக் கட்டுமானத் துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகள் தேவையானபோது அரசுத் துறை மூலதனத்தைச் சார்ந்து நின்ற இவர்கள், அரசுத் துறையுடன் ஒப்பந்தத் தொழில்கள், உடனடிக் கொள்ளை இலாபம் தரும் நுகர்பொருள் உற்பத்தி, ஏகாதிபத்தியத்துடனான தரகுத் தொழில்கள், பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 1990-களில் தனியார்மயம்- தாராளமயம்- உலகமயமாக்கம் புகுத்தப்பட்ட பிறகு, அரசுத்துறைத் தொழில்களையும் மூலதனத்தையும் கைப்பற்றிக் கொள்வதற்கும் ஏகாதிபத்தியத்துடனான தரகுத் தொழில்களுக்குமான வாய்ப்புகள் பெருமளவு திறந்து விடப்பட்டன. முந்திக்கொண்ட மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் அவற்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வாஜ்பாய் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. ஆட்சியின்போது அரசுத்துறைத் தொழில்களைத் தனியாருக்கு விற்பதற்கென்றே அதன் அரசியல் கோயபல்சு அருண்சோரியை சிறப்பு அமைச்சராக்கிப் பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொள்ளை இலாபம் தரக்கூடிய அலைக்கற்றை உரிமங்கள் வாரிவழங்கப்பட்டன. ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்பொருளுக்கான சந்தை மேலும் விரிவாகத் திறந்து விடப்பட்டது.

இதைக்காட்டி ”இந்தியா ஒளிர்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்துத் தேர்தலை எதிர்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. தோல்வி கண்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரசுக் கூட்டணி இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தத்தை முன்தள்ளியது. மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகளில் பலர் இந்திய மற்றும் அன்னிய மூலதனத்துடன் கூட்டுச்சேர்ந்து தேசங்கடந்த தரகு முதலாளிகளாக வளர்ந்தார்கள். நாட்டில் நுகர்பொருள் சந்தை நிறைவு நிலையை எட்டிவிட்ட நிலையில் அவர்கள் அடிப்படைக் கட்டுமானத் தொழில்களிலும்  இயற்கைக் கனிம வளங்களைச் சூறையாடுவதிலும் இறங்கினர். விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அணு, அனல் மின் நிலையங்கள், சில்லறை வர்த்தக சங்கலித் தொடர்கள், காப்பீடு, வங்கி – என முதலீடுகளை விரிவுபடுத்தினர்.

ஆனால், தனியார்மய-தாராளமய-உலகமயமாக்கத்தின் பலன்களைத் தாம் மட்டுமே அறுவடை செய்துகொண்டு நாடு முழுவதும் தனது பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்வதற்கான பேராசையில் மூழ்கிக் கிடந்த மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளியக் கும்பல்,  புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவும் அதன் பலன்களைப் பங்கு போட்டுக்கொள்ளவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகியவற்றை  மையங்களாகக் கொண்ட புதிய கார்ப்பரேட் தரகு முதலாளிகளைக் களத்தில் கண்டனர்.

நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, கலாநிதி மாறன்
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக சென்னை – ஹைதராபாத் – பெங்களூரு ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு முளைத்துள்ள புதியவகைப்பட்ட தரகு முதலாளிகள் (இடமிருந்து) நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, கலாநிதி மாறன்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்படுவதற்கு முன்பிருந்து மும்பைதான் நாட்டின் பொருளாதாரத் தலைநகராகவும், மராட்டியம்-குஜராத் ஆகிய தாழ்வாரம்தான் பொருளாதார ரீதியில் முதன்மையானதாகவும் இருந்து வருகிறது. இப்போதோ ”குஜராத் மாடலின்” சாதனை என மோடி பீற்றிக்கொள்வதை ஜெயலலிதாவும் ரிசர்வ் வங்கி ஆய்வுகளும் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.  இது பிற பிராந்திய, புதிய கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வளர்ச்சியைக் குறிக்கிறது.

இதோடு  முக்கியமாக ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, பாக்சைடு, செம்பு ஆகிய தாதுக்களைச் சூறையாடுவதில் ஈடுபட்டுள்ள ஸ்டெர்லைட்-வேதாந்தா, எஸ்ஸார், ஜிண்டால், மிட்டல், டாடா, அதானி, அம்பானி ஆகிய குழுமங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.   கார் தொழிற்சாலை அமைப்பதில் டாடாவும், அணு, அனல் மின் நிலையங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அம்பானியும் அதானியும் மிட்டலும் நிலங்களைக் கையகப்படுத்துவதில் தாமதங்களை எதிர்கொண்டபோது மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள்  ஆத்திரமடைந்தனர். காங்கிரசுக் கூட்டணி அரசு தடைபோடுவதாக அவர்கள் கருதினர்.

இந்தத் தொழில் முனைவுகளுக்கு கிழக்கே மேற்கு வங்கம் (சிங்கூர்), ஒடிசா, வடக்கே உத்திரப் பிரதேசம், அரியானா-தில்லி புறநகர், தென்கிழக்கே சத்தீஸ்கர், மேற்கே மராட்டியம், குஜராத்திலேயே மக்கள் எதிர்ப்பு கடுமையாகியது. அவற்றை ஒடுக்கி மக்கள் வாழ்வுரிமைகளைப் பறிப்பதிலும் இராணுவ ஆயுத உற்பத்தி, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அன்னிய முதலீடு-தொழில் கூட்டுக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடியின் உருவில் – குஜராத் மாடலில் – தமது இயல்பான கூட்டாளியை மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் கண்டனர்.

அதனாலேயே, ஜெர்மானிய ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகள் இட்லரை அதிபராக்கியதைப் போலவே மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் பணத்தைத் தண்ணீராகக் கொட்டி  மோடியைப் பிரதமராக்கியும் விட்டனர். அகில உலகையும் தனது ஏகாதிபத்தியக் காலடி ஆதிக்கத்தில் கொண்டுவர எத்தனித்த இட்லருக்கு என்ன நேர்ந்தது என்பதை வரலாறு அறியும். ஆனால், தெற்கு ஆசியாவையே  தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அகண்ட பாரதக் கனவு என்னவாகும்?

மீரட் கலவரம்
தேர்தல் முடிவுகள் வெளிவந்து மோடி-பா.ஜ.க. கும்பல் அதிகாரத்தில் அமர்வது உறுதியானவுடனேயே உ.பி.யில் மீரட் நகரில் நடந்த கலவரம்.

2007 உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம், இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க-வீக்கம், பணவீக்கம் காரணமாக விலையேற்றம், ஏற்றுமதி-இறக்குமதி சமன்பாட்டில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தித் துறையில் கடும் வீழ்ச்சி, ஆலைகள் மூடல் ஆகிய நெருக்கடிகள் தொடங்கியபோதே பெரும் ஊழல் விவகாரங்கள் அம்பலப்பட்டு நாடே நாறியது. இவற்றினிடையே  நாட்டு மக்கள் எதிர்த்தபோதும்  கூட்டணிக் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்ட போதும்  மறுகாலனியாக்கம் மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைளை அமலாக்குவதில் சோனியா – மன்மோகன் – மான்டேக்சிங்- சிதம்பரம் கும்பல் அழுந்தி நின்றது. விளைவாக, அதன் அரசியல் அழிவை நாடே கண்டது.

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க .மோடி கும்பலின் ஆட்சியில் அன்னிய, உள்நாட்டு முதலீடுகளைத் தாராளமாக அனுமதித்து, வரி-வட்டிக் குறைப்பு செய்து சந்தையைப் பரவலாக்கினால் தமது தொழில் வளர்ச்சியும் சீரானதாகவும், அதற்கான அரசியல், பொருளாதார நிலைமைகள் உறுதியானதாகவும் அமையும் என்று  மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் நம்புகின்றனர். கர்நாடகா எடியூரப்பா, ரெட்டி கும்பலை இணைத்துக் கொண்டிருந்தாலும் அப்பழுக்கில்லாத மோடியின் ஆட்சியில் இலஞ்சம்- ஊழல் ஒழிக்கப்படும், பொருளாதாரச் சீர்திருத்தம் தடையின்றி, தாமதமின்றி விரைவாக்கப்படும்; அதனால் தமது வாய்ப்பு, வசதிகள் மேலும் பெருகும் என்று நகர்ப்புற மேட்டுக்குடி சப்புக்கொட்டுகிறது.

ஆனால், கார்ப்பரேட் தரகு முதலாளிகளை இழுவை எந்திரமாகக் கொண்டு இயங்கும் பொருளாதாரத்தில் இலாபவெறியும் இலஞ்சம் – ஊழலுமே அதன் எரிசக்தியாக இருக்கும். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, மோடி போன்ற பொறுக்கி அரசியல் பாசிச ஆட்சியாளர்கள்  முதலும் கடைசியுமாக நம்பும் காரியம் அதிகாரக் குவிப்புதான். அதிகார வர்க்கம், போலீசு, இராணுவத்தின்  கைகள் அவிழ்த்து விடப்பட்டு அவற்றில் வரம்பில்லா அதிகாரம் குவிக்கப்பட்டால் நிர்வாகத் திறமையும், துணிச்சலும் தானாக வந்துவிடும் என்று நம்புகிறவர்கள். எல்லா அமைச்சகங்களுக்கும் இணையான அதிகாரமிகு வல்லுநர்களை பிரதமர் அலுவலகத்தில் நியமித்து விட்டார் மோடி.

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.  அரசியல் தலைமையான மோடி-அமித் ஷா கும்பல்  ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே ”மன்மோகனாமிக்சின்” மறு அவதாரம்தான் ”மோடினாமிக்ஸ்” என நிரூபிக்கும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ ஆயுத உற்பத்தி, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அன்னிய முதலீடு, தொழில் கூட்டுக்கு  இருந்த தாமதங்களை – தடைகளை நீக்கி மக்கள் வாழ்வுரிமைகளைப் பறிப்பதற்கான இலக்குகளைக் குறித்து விட்டது. இத்தகைய நாசகர நடவடிக்கைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் காஷ்மீருக்கு 370 சுயாட்சி சட்டம், பொது சிவில் சட்டம், அயோத்தி ஆகிய பிரச்சினைகள் மீது விவாதத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இவற்றோடு மேலும் பல நாசகர பாசிச பயங்கரவாத மதவெறி, சாதிவெறி அரசியலையும் இணைத்துக் கொண்டுள்ள அக்கும்பல் தன்னுடைய அரசியல் அழிவோடு நாட்டையும் மக்களையும் சாதி, மதரீயில் பிளவுபடுத்தி,  இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துப் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது.  அதேசமயம், புதிய பொருளாதாரக் கொள்கையின் பலன்கள் மறுக்கப்பட்டு, வெளியே  நெட்டித்தள்ளப் படுகிறார்கள், அடித்தட்டு மக்கள். இவர்கள்தாம் புதிய பொருளாதாரக் கொள்கையின் எதிர்மறைத் தாக்குதல்களையும், விளைவுகளையும் தூக்கிச் சுமப்பவர்கள். மலிவான உழைப்புச் சந்தையை உருவாக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவும் தேசிய எல்லைகளைக் கடந்து குடிபெயரும் தொழிலாளர்கள் தொழில் மையங்களில் குவிகின்றனர். கீழே நடக்கும் இவ்வாறான வர்க்க முனைவாக்கம், மேலே நடக்கும் இன, சாதிய, மத முனைவாக்கத்துக்கு மாற்றானதாக, எதிரானதாக புரட்சிகர அரசியலுக்குச் சாதகமானதாக அமைகிறது.

இவ்வாறானதொரு வர்க்க முனைவாக்கத்தின் மீதும் புரட்சிகர அரசியலின் மீதும் நம்பிக்கை வைப்பதற்கு மாறாக, இடஒதுக்கீடு என்ற சமூகநீதிச் சீர்திருத்தம் காங்கிரசு, முலாயம் – மாயா – லாலு – நிதிஷ் – மம்தா பாணிப் போலி மதச்சார்பின்மை மீது ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைத்தனர். விளைவு,  பிற்போக்கு சாதி, மத முனைவாக்கத்திலும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. எதிர்ப்புரட்சி சக்திகளிடம் அதிகாரத்தை சரணடையச் செய்வதாகவும் முடிந்துள்ளது.

ஆர்.கே.
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2014
______________________________