Thursday, May 1, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?

வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?

-

கழிப்பறையா பிரச்சனை, எப்போதும் ‘வேசி’கள்தான் !

ரு நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஐந்தாவது நிமிடத்திலேயே எனது காரில் திரும்ப ஏறிக் கொண்ட அனுபவம் எனது வாழ்வில் முதன்முதலாக இந்த வருடம் ஏப்ரல் 7-ம் தேதி நடந்தது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஷாம்லியின் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட  வந்திருந்தார். அவரது அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேச இருந்தார்.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறைக்கு எதிரான குரல் (படம் நன்றி : டெக்கான் குரோனிக்கிள்)

டிராக்டர்களில் வந்திருந்த பதின்ம வயது பையன்கள், பேருந்துகளின் மேற்கூரைகளில் ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள் என அந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சுமார் நாற்பதாயிரம் ஆண்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த ஒரே பெண் நான்தான்.

பாதங்கள், விரல்கள் மற்றும் முகத்தை தவிர எனது உடல் பாகங்கள் அனைத்தையும் நான் அணிந்திருந்த சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டா மறைத்திருந்தன. இருப்பினும், ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்து கூரையில் வைத்து புணர்ச்சி செய்கிறேன் !’ என்று கூச்சலிட்டார்கள், அவர்கள். துணிச்சலுடன் எதிர்த்து தட்டிக் கேட்பது அவர்களை வெட்கப்பட வைத்து இந்த கூச்சலை நிறுத்தி விடும் என்று நினைத்து நான் அவர்களிடம், ’இப்படி பேச எவ்வளவு தைரியம் உங்களுக்கு?’ என்று எதிர் குரல் கொடுத்தேன்.

ஆனால், என் பார்வையில் தெரிந்த தூரம் வரை  பேருந்து கூரைகளில் அமர்ந்திருந்த அனைவரும்  ’யேய்! யேய்!’ என்று சத்தம் போட்டார்கள். தங்கள் மொபைல் போனில் சாத்தியமான எல்லா கோணங்களிலும் என்னை படம் பிடித்தனர். அவமானமும், கோபமும் பொங்க நான் என் காரை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

கடைசியில் ஒரு வயதான மனிதர் என்னருகே வந்து, ‘ஏம்மா, உன் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொள். இந்த பசங்க இப்படித்தான்’’ என்று ஆலோசனை சொல்லி விட்டு போனார். நான் விரும்பிய முறையில் நடமாடுவதற்கு எனக்கு இருக்கும் உரிமைக்கான பெண்ணிய விவாதத்தை தவிர்த்து விட்டு,  உள்ளுக்குள் பல குழப்பங்கள் இருந்தாலும் அந்த பெரியவரின் வார்த்தைகளை மதித்து தலையையும், முகத்தையும் மூடிக் கொண்டேன். அதன் பிறகு நடக்கும் போது சற்று பாதுகாப்பை உணர்ந்தேன்.

அடுத்த அரை மணி நேரம் காரில் காத்துக் கொண்டிருந்த  போது உடன் பணிபுரியும் என்னுடைய ஆண் சகாக்கள் மீது கோபம் பொங்கியது. ஒரு ஆணாக அந்த கூட்டத்துக்கு செல்ல அவர்களுக்கு இருந்த சவுகரியம், ஒரு பெண்ணாக எனக்கு வாய்க்காத நிலையை நினைத்து ஆத்திரம் அடைந்தேன்.

எனது அம்மா இது போன்றதொரு கதையை எனக்கு முன்பு சொல்லியிருந்தார். 1970-களில் பதின்ம வயதில் இருந்த எனது அம்மாவும் அவரது சகோதரியும்  உத்திர பிரதேச கிராமம் ஒன்றில் நடந்த அவர்களது அத்தை மகன் திருமணத்துக்கு சென்றிருந்தனர். அந்த திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் அவர்கள் இருவர் மட்டுமே. வழக்கமாக அது போன்ற நிகழ்ச்சிகள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவை. பெரிய மனிதர்கள் யாரும் தங்கள் வீட்டு பெண்களை திருமண வரவேற்பு ஊர்வலங்களில் பங்கு கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.

‘இரண்டு பதுரியாக்கள் (வேசிகள்)’ திருமண ஊர்வலத்தில் பங்கெடுக்கும் செய்தி அந்த கிராமம் முழுக்க பரவியது. அவர்களை பார்ப்பதற்கு ஒட்டு மொத்த கிராமமும் திரண்டு வந்திருக்கிறது. இவர்கள் இருவரையும் நடனமாட சொல்லி குரல் கொடுத்திருக்கின்றனர். ‘பதுரியா’ என்பது பாலியல் தொழிலாளிகளுக்கான உத்திர பிரதேச சொல், அந்த காலத்தில் வட இந்திய திருமண வரவேற்பு ஊர்வலங்களில் ‘பதூரியாக்கள்’ கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; ஆடல், பாடல் மூலம் ஆண்களை மகிழ்விக்க வேண்டும்.

ஊர்வலத்திற்கு சென்றிருந்த இரு சகோதரிகளின் நிலை தர்மசங்கடமானது. ஊர்வலத்திலிருந்து பாதுகாப்பாக கடத்தி செல்லப்பட்டு அவர்களது பொறுப்பற்ற நடத்தைக்காக மணப்பெண்ணின் வீட்டில் கடுமையாக கண்டிக்கப்பட்டார்கள்.

பதூன் இரட்டை பாலியல் கொலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இரு சிறுமிகள் கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதும், பகனா கும்பல் வன்புணர்ச்சியில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்கள் நீதி வேண்டி இரண்டு மாதங்களாக தேசத்தின் தலைநகரில் போராடி வருவதும் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது. கழிப்பிட வசதி இல்லாததால் இந்தியாவின் கிராமத்து பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறார்கள் என்று பலர் தர்மாவேசம் கொள்கிறார்கள்.

கழிப்பிடங்கள் மிகவும் அவசியம் தான். திறந்தவெளியில் மலம் கழித்தல் பல்வேறு சிரமங்களையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகிறதுதான். ஆனால், இந்தியப் பெண்கள் மலம் கழிக்க வெளிவரும் போது மட்டும் தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று கருதுவது முட்டாள்தனமானதும், நகைப்புக்கிடமானதும் ஆகும். எனக்கு தெரிந்த வரையில் மலம் கழிக்க சேர்ந்து போகும் போதுதான் கிராமத்து பெண்கள் தங்களுக்கிடையே பேசிக் கொள்ளும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

யூனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ’இணைந்த கண்காணிப்பு திட்ட அறிக்கை 2010’-ன் கூற்றுப்படி 72 கோடி இந்திய ஆண்களும் பெண்களும் திறந்தவெளியில் காலைக்கடன்களை கழிக்கிறார்கள்.

இந்திய அரசின் சுகாதாரத்துக்கான இயகத்தின் நல்லெண்ண தூதர் வித்யாபாலன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வீட்டில் கழிப்பிடம் இல்லை என்று சொன்ன மாமியாரிடம், “பொது இடத்தில் உங்கள் மருமகளின் முக்காடை விலக்கக் கூட  நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ஆனால், அவளை திறந்தவெளியில் மலம் கழிக்க மட்டும் அனுப்புகிறீர்களே?’’ என்று கேட்டார்.

அந்த கருத்து நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்டிருந்தாலும் ஆணாதிக்க ஒழுங்குகளின் அடிப்படையில் சுகாதார பிரச்சனைகளை அணுகுவது பிற்போக்கானது.

பாலியல் வன்புணர்ச்சியை கழிப்பிட வசதியின்மையுடன் இணைத்து கொச்சைப் படுத்துவது மிக மோசமான அணுகுமுறையாகும். இது இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது. மத்தியதர வர்க்கம் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக போலிசை ஏன் சபிக்கிறது? பாலியல் வன்புணர்ச்சிக்கு குற்றவாளிகளை தூக்கில் தொங்கவிடும் நீதியை ஏன் கோருகிறது?

கழிப்பிடம் கட்டுவது போன்ற எளிமையான, உடனடியான மற்றும் நல்ல உணர்வு தரும் தீர்வுகள் தான் நமக்கு வேண்டும். இந்தியா கேட்டில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்தல் போராட்டத்தில், முசாஃபர்நகரில் நடந்தது போன்ற வகுப்புக் கலவரங்கள், அல்லது பகனா பாலியல் வன்முறையில் பெண்களின் உடல்கள் ஒரு சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் போர்க்களங்களாக பயன்படுத்தப்படுவது குறித்த அசகவுரியமான, நுட்பமான கேள்விகள் பேசப்படுவதில்லை. ஏனெனில் அவை இந்தியாவின் வல்லரசு பிம்பத்தோடு பொருந்தாத பிரச்சினைகள்.

எத்தனை பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினாலும், குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் பாலியல் வன்புணர்ச்சிகள் 2009-ல் இருந்ததை விட  30 சதவீதம் உயர்ந்திருக்கும் உண்மையும் ஒரு புறம் இருந்தாலும், தொடர்பான சமூகவியல் கேள்விகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் கார்ப்பரேட் வளர்ச்சி மாதிரியிலிருந்து பிரிக்க முடியாமல் பிணைந்துள்ள மகிழ்ச்சியான ஆணாதிக்க (தந்தைவழி) குடும்ப அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படக் கூடாது.

பாலியல் வன்முறையோடு தொடர்புடைய உரையாடல்கள் உண்மையான அக்கறையுடன் நிகழ்த்தப்படும் வரை பொது வெளிகளுக்கு செல்ல நேரும் போதோ, தமது சொந்த அறையில் இருக்க நேரும் போது கூட – எனது அம்மா, நான், பதூன் பெண்கள் என இந்தியப் பெண்கள் அனைவரும் ஆபத்தால் சூழப்பட்டிருக்கிறோம்.

நன்றி : டெக்கான் குரோனிக்கிள் Toilets or not, paturiyas always- Neha Dixit
தமிழில், சம்புகன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க