Sunday, May 4, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

-

த்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் இருக்கிறது உலகின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான விக்ரம் பல்கலைக்கழகம். அதன் தற்போதைய துணை வேந்தராக இருக்கும் ஜவஹர் லால் கவுல் கடந்த திங்களன்று (14/09/2014) விஷ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். துணை வேந்தரது அலுவலகத்தையும் துவம்சமாக்கியுள்ளனர், காவி பயங்கரவாதிகள். இதன் விளைவாக மாரடைப்புக்குள்ளான ஜவஹர் லால் கவுலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

இந்து மதவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அலுவலகம்.
இந்து மதவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அலுவலகம்.

விக்ரம் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரின் பேய் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுமாறு பேராசிரியர்களையும், ஊழியர்களையும், மாணவர்களையும் ஜவகர் லால் கவுல் கேட்டுக்கொண்டது தான் விஷ்வ இந்து பரிசத்தை துணை வேந்தருக்கு எதிராக வன்முறையில் இறங்க தூண்டியிருக்கிறது.  அங்கே தங்கிப் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த பல்கலையில் மட்டும் மொத்தம் 100 காஷ்மீர் மாணவர்கள் பயில்கின்றனர்.

துணை வேந்தருக்கு எதிராக ஆவேசம் காட்டிய இந்துத்துவ வானரங்கள், ‘உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு மற்றும் குஜராத் பூகம்பம் போன்றவற்றின் போது ஏன் ஜவகர்லால் கவுல் வாய் திறக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் பொருள் என்ன? இந்த இரண்டும் ‘இந்துக்களின்’ சோகமாம். காஷ்மீர் வெள்ளப் பெருக்கு மட்டும் முசுலீமின் சோகமாம். அட முட்டாள்களா, அப்படி எனில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று எதற்கு வாதிடுகிறீர்கள்? ஒரு இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென்று சொல்வது குற்றமா?

தங்களை இவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டிய பின்னரும் இந்த குற்றவாளிகளை முதலில் தப்பவிட்டு இப்போது இருவரை கைது செய்திருக்கிறது,  பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தின் போலீஸ்.

இதுபற்றி துணை வேந்தர் பேரா. ஜவகர்லால் குறிப்பிடுகையில் தன்னை பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேரில் சந்தித்து தங்கள் துயரை விளக்கி உதவ வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையிலேயே தான் இதர மாணவர்களை காஷ்மீர் மாணவர்களுக்கு நேசக்கரம் நீட்ட கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் கவுல் தாக்கப்பட்டது இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் ஆத்திரமடைந்த காவிகளின் வெறிச்செயல் என்று தனித்து கருதக்கூடிய ஒன்றல்ல. ம.பியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியான இன்னல்களை அளித்து வந்துள்ளது ஆர்.எஸ்.எஸின் ஏ.பி.வி.பி. சொந்த மாநிலத்தில் படிக்க இயலாத காஷ்மீர் இளைஞர்கள் உயர்கல்வி கற்க இந்தியாவின் பிற மாநிலங்களையே அதிகம் சார்ந்து இருக்கின்றனர்.

காவி வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

2011-ல் காஷ்மீரிகள் தொடர்பாக ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது ம.பி. அரசு. அதில், புலம்பெயர் காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு என்று வழங்கப்பட்டிருந்த கல்வி உரிமையை சற்றே மாற்றி புலம்பெயர் காஷ்மீரிகளுக்கு மட்டும் என்று கொண்டு வந்தது. அதன் படி காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமே சலுகை பெற முடியும் என்ற நிலையை மத்திய பிரதேச பா.ஜ.க அரசு உருவாக்கியது. இது மட்டுமல்லாமல், ம.பியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் எண்ணிக்கையை கையில் வைத்துக் கொண்டு வெறியை கிளப்பி வருகிறது, ஏ.பி.வி.பி.

பேராசிரியர் கவுல்
பேராசிரியர் கவுல்

மத்திய பிரதேசத்தில் பேராசிரியர்கள் தாக்கப்படுவதும் இது முதல்முறை அல்ல. 2006-ம் ஆண்டு ஹெச்.எஸ் சபர்வால் எனும் கல்லூரி ஆசிரியர் ஏ.பி.வி.பியால் அடித்தே கொல்லப்பட்டார். 2011-ம் வருடம் தாக்குர் என்ற பேராசியர் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் ஒரு வாரம் கழித்து உயிரிழந்தார். 2007-ல் ஒரு ஆசிரியர் தனது மூன்று மகள்களின் கண்ணெதிரே கடுமையாக தாக்கப்பட்டார்.

இவை போக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தார்கள் என்று வட இந்தியாவில் பயிலும் பல காஷ்மீர் மாணவர்கள் பல்கலை நிர்வாகங்கள் மூலமாகவே துரத்தப்பட்டிருக்கின்றனர். இது குறித்து வினவில் முன்னர் விரிவாக வெளியிட்டிருக்கிறோம்.

தற்போது இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆபத்திலிருக்கும் மனிதர்களுக்கு உதவுவது ஒரு அடிப்படையான மானிடப் பண்பு. சங்க வானரக் கூட்டத்திற்கு அதுவே வெறுப்பதற்கான அடிப்படை கூறு. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு பல்கலைக் கழகத்திலேயே இப்படி நடக்குமென்றால் காஷ்மீரில் இந்தியா ராணுவத்தால் என்னென்ன நடந்திருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்!