privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

-

1. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் விழா!

rsyf-tricy-periyar-banner rsyf-tricy-periyar-sticker-1 rsyf-tricy-periyar-sticker-2 rsyf-tricy-periyar-sticker-3

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 136-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 17-09-2014 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயல்படும் பகுதிகளிலும், கல்லூரிகளிலும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதிப்பிரிவு, மதத்துவேசத்துக்கு எதிராகவும், சமஸ்கிருத இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் போராடியுள்ளார். கடவுள் நம்பிக்கைதான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது என்றும், பார்ப்பனியம் தான் சாதி, மத வேறுபாட்டிற்கு அடித்தளம் என்றும் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி பார்ப்பனியத்தை களையெடுக்க பாடுபட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்ய அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அளப்பரியது. பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி, பெண்ணுரிமை போராளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று பார்ப்பனிய கும்பலின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

அகண்ட பாரத கனவோடு மோடி ஆட்சியமைந்தபின் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறி கும்பலுக்கு புது தெம்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், இந்தி மொழியை அலுவல் மொழியாக்கும் திட்டம், மத்திய பல்கலைகழகங்களில் இந்தி மொழியை விருப்ப மொழியாக்கும் திட்டம் என்ற பெயரில் தாய் மொழி தமிழை அழிக்கவும், தமிழ் மக்களை அழிக்கவும் அடுத்தடுத்து தன் பார்ப்பனிய இந்துத்துவா கொள்கைகளை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறது மோடி அரசு.

இந்தச் சூழலில், பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக போராடிய பெரியாரின் பிறந்த நாளில், பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மீட்டு, பெரியார் போலவே மாணவர்களும் போராட வேண்டும் என்ற வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் “பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவு, மதத்துவேசம் முதலியவை தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள்!” என்ற முழக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் பெரியார் கல்லூரியில் உள்ள இரண்டு பெரியார் சிலைகளுக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச்செயலர் தோழர்.வசந்த் மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து “பெரியார் புகழ் ஓங்குக!” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தந்தை பெரியாரின் சிறப்பு பற்றியும், அவரின் போராட்டங்கள் பற்றியும் பேசி, சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு போன்ற பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட வேண்டும். இதை தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாளில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அடுத்த நிகழ்வாக அரியமங்கலம் உக்கடை மற்றும் கல்லாங்காடு பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர். செழியன் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திறப்பு விழா நடைபெற்று, மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று பெரியாரின் கொள்கை பற்றி தோழர் செழியன் விளக்கி பேசினார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சிக்கு எதிராக நாம் போராடியது, அதைத் தொடர்ந்து பெரியாரின் பிறந்த நாளில் படத்திறப்பு விழா நடைபெற்றது பொதுமக்களிடமும், பகுதி இளைஞர்களிடமும் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

2. மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.

3. மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி

ந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 17.09.2014 காலை 9.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். பெரியார் சிலை அருகே நின்று பறை ஓசை எழுப்பியவுடன் அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் சற்று நின்று பெரியாரின் சிலையை நோக்கி பார்த்தனர். பெண் தோழர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு அங்கிருந்தே, “பார்ப்பன மத வெறிக்கும்பலான RSS, BJP கும்பல்களை விரட்டியடிப்போம்” என்ற விண்ணதிரும் முழக்கத்தை தோழர்கள் முழங்க அச்சத்தோடு அருகில் வந்த பெண் காவல்துறை அதிகாரி, “அனைத்து கட்சிகளுக்கும் மாலை போட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளோம் நீங்க ஏன் கோசம் போடரீங்க” என்று தடுக்க வர, உடனே ஒரு தோழர் “பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்சியை செய்திருக்க வேண்டும்” என்று கூறியவுடன் அந்த பெண் காவல்துறை அதிகாரி மவுனமாக திரும்பிச்சென்றார்.

காலை நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை 7 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இத்தெருமுனைக்கூட்டத்தை ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்.சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். அடுத்து பேசிய தோழர்.சத்தியா பெரியாரை பற்றி தெரியாத இளைய தலைமுறைகளை பற்றியும் பெரியாரை நாம் ஏன் பின் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய தோழர்.கோவன் அவர்கள் பெரியார் நடத்திய போரட்டங்கள் பற்றியும் BJP, RSS-ன் பார்ப்பன பயங்கரவாத செயல்களைப் பற்றியும் அதை தமிழகத்தில் வளரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் விளக்கிப்பேசினார்.

இடையிடையே கலைக்குழு தோழர்கள் மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் புரட்சிகர பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினர். இறுதியாக ம.க.இ.க தோழர்.ஜீவா நன்றி தெரிவித்து கூட்டத்தினை முடித்து வைத்தார்.

இக்கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.

4. வேதாரண்யம்

குத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் அண்ணா அரங்கம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 17.09.2014 அன்று மாலை 6 மணி அளவில் மாலை அணிவித்து மோடி அரசின் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராகவும், கல்வியில் பயிற்று மொழியாகவும், அலுவலகத்தின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், தமிழ்மொழியை அறிவித்து ஆணையிடக் கோரியும், விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் பகுதி வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் வழக்குரைஞர் சரவணத் தமிழன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
நாகை மாவட்டம்