privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்கிருஷ்ணனின் அருகதை என்ன ? - டாக்டர் அம்பேத்கர்

கிருஷ்ணனின் அருகதை என்ன ? – டாக்டர் அம்பேத்கர்

-

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 4

இப்போது கிருஷ்ணனைப் பற்றிப் பார்ப்போமாக

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன். சரியாக சொல்ல வேண்டுமானால் கௌரவர்கள் – பாண்டவர்கள் சம்பந்தப்பட்டதே மகாபாரதக் கதையாகும். தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்த-கதையே மகாபாரதக் கதையாகும். அவர்கள் தான் இக்கதையில் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. கிருஷ்ணன்தான் இக்கதையின் கதாநாயகன். இது விநோதமாய் உள்ளது. மேலும் இந்தக் கிருஷ்ணன் கௌரவர்கள்-பாண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெரியவில்லை. கிருஷ்ணன் நாடாண்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான். வேறொரு நாட்டின் அரசனான கம்சனுக்கு கிருஷ்ணன் எதிரி. அருகருகே ஒரே இடத்தில், ஒரே காலத்தில் இரு அரசாட்சிகள் இருந்திருக்க கூடுமா? மேலும் இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்த்தாய்க் காட்டிட மகாபாரதத்தில் ஏதும் ஆதாரமில்லை. எனவே, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றிய இரு தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை மேலும் சற்று விரிவாக்கும் நோக்கத்துடனேயே இந்த இடைச்செருகல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கிருஷ்ணன் அனைத்திற்கும் மேம்பட்டவன், பெருமைக்குரியவன் எனச் சித்தரித்துக் காட்டிட வியாசன் மேற்கொண்ட துணிகரத் திட்டத்தின் விளைவே இவ்விரு கதைகளின் கலப்புத் தொகுப்பாகும்.

வியாசனின் கூற்றுப்படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம். அவ்வளவுதான் ! அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் கதாநாயகன் ஆக்கப்பட்டிருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் எனும் அளவுக்கு அருகதையுடையவனா? ஒருவேளை அவனுடைய வாழ்க்கைச் சுருக்கம் அவ்வித கேள்விக்குச் சரியான விடை அளிக்கலாம்: சற்று பார்ப்போம்.

கம்சன்
தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன்

பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான். அவனுடைய தந்தை யாதவ இனத்தைச் சேர்ந்த வாசுதேவன். மதுராபுரியை ஆண்ட அரசன் உக்கிர சேனனுடைய சகோதரன் தேவகனுடைய மகள் தேவகி அவனுடைய தாய். சௌபாவின் தானவ மன்னன் துருமிளாவுடன் உக்கிரசேனனுடைய மனைவி கள்ளத் தொடர்பு கொண்டிருந்தாள். இத்தகாத தொடர்பினால் பிறந்தவன் கம்சன். ஒரு வழியில் பார்த்தால் தேவகிக்கு கம்சன் ஒன்றுவிட்ட சகோதரன்.

உக்கிரசேனனை சிறைப்படுத்தி மதுராபுரியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவள் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய் பிறந்த அவர்களுடைய ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். ஏழாவது குழந்தையாகிய பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே, வாசுதேவனின் வேறொரு மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான். எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

விராஜ நாட்டவர்களான நந்தனும் யசோதையும் அப்போது யமுனை நதியின் மறுகரையில் வாழ்கிறார்கள். இரகசியமாக கிருஷ்ணனின் தந்தை, கிருஷ்ணன் பிறந்தவுடன் அவர்களிடம் சேர்த்து விடுகிறான். பெருக்கெடுத்து ஓடும் யமுனை நின்று இந்த தெய்வ குழந்தை ஆற்றைக் கடக்க வழிவிட்டதாம். நாகங்களின் தலைவனான அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்; அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்ததாம். ஏற்கெனவே செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி வாசுதேவன் தன் மகனை நந்தனுக்கு கொடுத்தான்.

நந்தன் தாம் பெற்ற மகள் யோகிந்தா அல்லது மகமாயா எனும் குழந்தையை வாசுதேவனுக்கு கொடுத்தான். இதுதான் தாம் பெற்ற எட்டாவது குழந்தையென்று வாசுதேவன் அப்பெண் குழந்தையைக் கம்சனிடம் கொடுத்தான். நந்தனும் யசோதையும் வளர்த்துவரும் குழந்தையே கம்சனைக் கொன்றுவிடும் என்று கூறிவிட்டு அப்பெண் குழந்தை எங்கோ ஓடி மறைந்தது.

யமுனையை தாண்டும் வசுதேவர்
அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்

எட்டாவது குழந்தையான கிருஷ்ணனை கொன்றிட கம்சன் பல வழிகளில் முயன்றும் முடியாமற் போகிறது. எப்படியாவது கிருஷ்ணனைக் கொன்று விட வேண்டும் எனும் நோக்கத்தில் பல ரூபங்களில் பல அசுரர்களைக் கம்சன் விராஜ நாட்டிற்கு அனுப்பினான். குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றதாயும், அரிய பல சாகசங்களை நிகழ்த்தியதாயும் புராணத்தில் காணும் நிகழ்ச்சிகளுக்கொப்ப கிருஷ்ணனின் செயல்கள் வேறெந்த சாதாரணக் குழந்தையாலும் செய்ய முடியாத செயல்களாய் தெரிகின்றன. இப்படி சில நிகழ்ச்சிகளை மகாபாரதத்திலும் காணலாம். இவ்வெண்ணத்திற்கு இசைவாக இவ்வுண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிப் பொறுப்புள்ள சில பெரியவர்களும் கூட பெரும்பாலும் வித்தியாசமான கருத்தையே கொண்டுள்ளனர். பிற்காலத்திய சில ஆதாரங்களினடிப்படையில் சில உண்மைகளை மட்டும் நான் குறிப்பிடுகிறேன். முதலாவதாக, ஓர் நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

முதலாவதான நிகழ்ச்சி பூதனை என்ற பெண் கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. பூதனை கம்சனின் தாதியாய்ப் பணியாற்றியவள். கிருஷ்ணனைக் கொல்ல ஒரு பெண் இராஜாளிக் கழுகு ரூபத்தில் பூதனையை அனுப்பினான் கம்சன் என்கிறது ஹரிவம்ச புராணம். பாகவத புராணத்தின்படி ஓர் அழகிய பெண் ரூபத்தில் பூதனாவைக் கம்சன் அனுப்பினான் எனத் தெரிகிறது. அழகிய பெண் ரூபத்திலிருந்த பூதனா குழந்தை கிருஷ்ணனுக்கு பாலூட்டுவது போல பாவனை செய்தாளாம். விஷம் தடவிய தன் மார்பகத்தைக் கிருஷ்ணனின் வாயில் வைத்தாளாம். கிருஷ்ணனோ வெகு பலமாக உறிஞ்சினானாம். அவள் உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் வறண்டு போய் கடுங் கூச்சலுடன் அவள் கீழே விழுந்து மாண்டு போனாளாம். இது ஒரு நிகழ்ச்சி.

கிருஷ்ணன் மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது வேறொரு சாகசத்தைச் செய்தான். இது சகடை என்னும் வண்டியை உடைத்த கதை. இவ்வண்டி உணவுப் பண்டங்களை வைக்க உபயோகிக்கப்பட்டது. அதில் விலையுயர்ந்த ஜாடிகள், சட்டி, பானை, பாத்திரங்கள், பால், தயிர் போன்றவைகளெல்லாம் சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஹரிவம்ச புராணத்தின்படி கம்சன் கிருஷ்ணனைக் கொன்றிடும் நோக்கத்துடன் ஒரு அசுரனை அந்த வண்டி ரூபத்தில் அனுப்பியதாயத் தெரிகிறது. இருந்தபோதிலும் யசோதா குழந்தையான கிருஷ்ணனை அவ்வண்டிக்கு கீழே கிடத்தி விட்டுக் குளிப்பதற்காக யமுனைக்குப் போனாளாம். அவள் திரும்பி வந்த வேளையில் வண்டியின் கீழ் படுத்துக் கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணன் அவ்வண்டியை உதைத்ததால் அதன் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் உடைந்து சிதறி சின்னாபின்னமாய்ப் போனதாய்க் கேள்விப்படுகிறாள். இந்நிகழ்ச்சி யசோதைக்கே அதிர்ச்சியாயும், ஆச்சரியமாயும் உள்ளது. அதன் மூலம் கெடுதல் நேரிடாமல் தடுத்திட அவள் பல பூஜைகள் செய்தாளாம். இது வேறொரு நிகழ்ச்சி.

கிருஷ்ணனைக் கொல்ல சகடை, பூதனா ஆகியோரின் முயற்சிகள் தோற்ற பின் அதே காரியத்தைச் செய்ய கம்சன் மீண்டும் திரினவர்த்தன் எனும் வேறொரு அசுரனை அனுப்பினானாம். இந்த அசுரன் பறவை ரூபத்தில் வந்து தெய்வ வரம் பெற்ற அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்தானாம். அப்போது கிருஷ்ணனுக்கு ஒரு வயதுதானாம். வானத்தில் பறந்து கொண்டிருந்த அசுரன் விரைவில் கீழே விழுந்து செத்தானாம். அப்போது குழந்தை (கிருஷ்ணன்) பத்திரமாய் இருந்ததோடு, அந்த அசுரனின் குரல்வளையைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாம். இது மற்றோர் நிகழ்ச்சி.

கிருஷ்ணன் - கோபியர்
காளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது.

கிருஷ்ணனின் அடுத்த சாகசச் செயல் என்னவெனில் அடுத்தடுத்து வளர்ந்திருந்த இரண்டு அர்ஜூனா மரங்களை உடைத்தெறிந்ததாகும்.

ஏதோ சாபத்தால் இரு யக்ஷர்கள் மரமாய்ப் போனார்கள் எனச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் அம்மரங்களை வீழ்த்திச் சாய்த்த சாகசத்தால் அவர்கள் இருவரும் மீண்டும் பழைய வடிவம் பெற்று விடுவிக்கப்பட்டார்களாம்.

கிருஷ்ணன் தவழத் தொடங்கிய காலத்தில் அவன் செய்யும் குறும்புகளிலிருந்து தடுத்திட மர உரலில் கயிறு போட்டுக் கிருஷ்ணனைக் கட்டிவிட்டு யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போனாளாம். யசோதை மறைந்தவுடன் கிருஷ்ணன் அந்த மர உரலோடு இழுத்துக் கொண்டு போய் மரங்களை வேரோடு சாய்த்தானாம். அடி மரமே வேரறுந்து விழுந்தபோது பெரும் ஓசை எழுந்ததாம். ஆனால், கிருஷ்ணனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

இவ்வித நிகழ்ச்சிகளெல்லாம் நந்தனின் மனத்தில் பெரும் பயத்தை உண்டாக்கியது. விராஜ நாட்டிலிருந்து வெளியேறி வேறொரு பகுதிக்கு குடிபெயர்ந்திட அவன் தீவிரமாய் யோசித்தான். அவன் இப்படி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பிரதேசத்தில் ஓநாய்கள் மலிந்து கால்நடைகளுக்கு பேராபத்தை உண்டுபண்ணியதால் அவ்விடமே பாதுகாப்பற்ற இடமாய்த் தெரிந்தது. எனவே, நாடோடிகளாய் இருந்த கிருஷ்ணனின் கூட்டத்தார் தங்களுடைய பொருள்-உடைமைகளுடன் பிருந்தாவனம் எனும் இரம்மியமான பிரதேசத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது கிருஷ்ணனுக்கு வயது ஏழுதான்.

புதிதாக இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபின் கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றான். அவர்களுள் அரிஸ்தா என்பவன் காளை மாட்டு ரூபத்தில் வந்தான். கேசின் என்பவன் குதிரை ரூபத்தில் வந்தான். மற்றும் விரத்ராசூரன், பக்காசூரன், அகாசூரன், போமாசூரன், மற்றும் ஷங்காசூரன் ஆகிய யக்ஷன் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.

இவையனைத்தையும் விட யமுனைப் பெருநீர்ச் சுழியில் வாழ்ந்து கொண்டிருந்த யமுனை நதி நீரில் விஷம் கலந்திட்ட காளியன் என்ற நாகங்களின் தலைவனைக் கிருஷ்ணன் கொன்றது மிகப் பெருஞ்செயலாம்.

ஒருநாள் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த காளியனின் தலை மீது குதித்து கிருஷ்ணன் நடனம் ஆடினான். பொறுக்க முடியாமல் இந்நாகம் இரத்த வாந்தி எடுத்தது. கிருஷ்ணன் அந்த நாகத்தை கொன்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த நாகத்தின் குடும்பத்தினருக்காக இரங்கிப் பிழைத்துப் போகட்டும் என்று வேறெங்காவது போய்ச் சேர அனுமதித்தான்.

காளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது. புராணத்தில் வரும் கிருஷ்ணனைத் தெய்வமாய்த் தொழும் பக்தர்கள் இந்நிகழ்ச்சியை ஜீரணிப்பது பெரும் சங்கடத்திற்குரியது. இந்நிகழ்ச்சியை முற்றிலும் விரிவாக குறிப்பிட்டால் மிக்க அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும்; சுருக்கமாய்ச் சொன்னாலும் கூட அசிங்கமாய்த் தெரியும்; அவமரியாதையாய் தோன்றும். ஆயினும் இயன்றவரை மிக நாகரிகத்துடனேயே கிருஷ்ணனின் இந்த நடவடிக்கையை நான் சுருக்கமாய் குறிப்பிடுகிறேன்.

கோபிகள் ஒரு நாள் யமுனையில் நீந்திக் குளிக்கப் போனார்கள். நதியில் இறங்கும் முன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள். நிர்வாணமாய்க் குளிக்கும் பழக்கம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் நிலவிடுவதாய் சொல்லப்படுகிறது. நதிக்கரையில் கோபியர்கள் அவிழ்த்து வைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக் கொண்டு ஓடிப் போய் நதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆடைகளைத் திருப்பித் தா என்று அப்பெண்கள் கேட்டபோது, ஒவ்வொருத்தியும் அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டுமென்று ‘கையேந்தி’க் கேட்டாலொழிய அத்துணிகளைக் கொடுக்க முடியாதென்று கிருஷ்ணன் சொன்னானாம். இது நடக்க வேண்டுமானால் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்கள் நிர்வாணமாக வெளியேறி மரத்தடிக்கு வந்து கிருஷ்ணன் முன் நிர்வாணமாய் நின்று கையேந்த வேண்டும். அப்பெண்கள் அப்படிச் செய்த பின்னர்தான் கிருஷ்ணன் ‘மனமிரங்கி’ அப்பெண்களுக்கு அவரவர் துணிகளைக் கொடுத்தானாம். இக்கதை பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4)

  1. புரியாத புதிர் படத்தில் வரும் ரகுவரன் கேரட்டர் போல கிருஷ்ணனும் சைகோவாக இருப்பானோ ?

Leave a Reply to தமிழ்-தாகம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க