Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளை : பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு - முற்றுகை அறிவிப்பு

மணல் கொள்ளை : பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – முற்றுகை அறிவிப்பு

-

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்
94432 60164

மற்றும்

திரு எம் ஜி பி பஞ்சமூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்,
மருங்கூர்.

பத்திரிகைச் செய்தி

அன்புடையீர் வணக்கம்,

15-12-14 திங்கள் அன்று விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்து உள்ளோம். கூட்டம் நடக்கும் தேதியை பின்னர் அறிவிக்கிறோம்.

கடந்த 2-12-14 அன்று மணல் குவாரியால் பாதிக்கப்பட்ட வெள்ளாற்றுப்பகுதி மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மாவட்ட நிர்வாகம் மணல் குவாரியை தற்காலிகமாக மூடி உத்திரவிட்டது. மேலும் மணல் கொள்ளை குறித்தும் விதி முறை மீறல் குறித்தும் விசாரணைக்கும் உத்தரவிட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி எந்தவிதமான அதிகாரிகள் விசாரணையும் இன்றி மணல் குவாரியை துவக்கி லாரிகள் வழக்கம் போல் கொள்ளையை தொடர்கின்றன. கிராம முக்கியஸ்தர்களும் நமது வழக்கறிஞர்களும் என 20-க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டனர்.

“எந்த விதிமுறையும் மீறப்படவில்லை என அறிக்கை கொடுத்துள்ளனர். மணல் எடுக்கவில்லை என்றால் வளர்ச்சி தடைப்படுமே” என பதிலுரைத்தார்.

கிராமத்தினர், “எந்த மக்களின் வளர்ச்சிக்கு ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு விவசாயத்தை அழிக்கிறார்கள்” எனக் கேட்டனர். “உங்கள் விசாரணைக் குழுவில் உள்ள தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரதி மாதம் மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கி வருகிறார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பகமான அதிகாரியுடன் வாருங்கள், நாங்களும் வருகிறோம். ஆய்வு செய்யுங்கள்” எனக் கேட்டா்கள்.

ஆர்.டி.ஓ., “டாக்டர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக நான் வைத்தியம் பார்க்க முடியுமா? அரசின் கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது” என தனது இயலாமையை தெரிவித்தார்.

“நீங்கள் இளம் வயதினராக புதியதாக வந்துள்ளீர்கள், சகாயம் போல் செயல்படுங்கள்” எனச் சொன்னதோடு, “சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் நீங்கள்தான் பொறுப்பு, நாங்கள் மீண்டும் போராடுவோம்,  தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம்” என எச்சரித்து மக்கள் திரும்பி சென்றனர்.

12-12-14 அன்று மாலை சி.கீரனூரில் கிராம முன்னணியாளர் கூட்டம் நடந்தது.

அதில், பொதுக்கூட்டத்தை பிறகு நடத்தலாம். முதலில் மணல் குவாரியை தடுத்து நிறுத்த அதிக மக்களை திரட்டி மீண்டும் முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் எனத் தொடங்கப்பட்டு மருங்கூரை சேர்ந்த எம்.ஜி.பி. பஞ்சமூர்த்தி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த 11 உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.

மனித உரிமை பாது காப்பு மையமும், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும் இணைந்து தொடர்ந்து போராட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

manal-kuvari-mutrukai-noticeகோரிக்கைகள்

  • கார்மாங்குடி மணல் குவாரியில் அரசாங்க கணக்கில் வராமல் ரூ 100 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
  • கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலையில் மக்கள் நடமாட முடியாது என்ற நிலையில், அதிகாரிகள் கள்ள மவுனம் சாதிப்பது வன்மையாக கண்டிக்கிறோம். அதனை, உடனே சரிசெய்ய வேண்டும்.
  • ஆற்று மணலை வியாபாரப் பண்டமாக்கி தனியார் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது. சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் வெள்ளாறு மட்டுமே, லட்சக்கணக்கான ஏகக்ர் நிலங்களின் பாசனம் வெள்ளாற்றை நம்பியே நடக்கிறது. எனவே கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.

manal-kuvari-mutrukai15-12-14 அன்று காலை 10.00 மணியளவில் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெறும் எங்கள் போராட்டத்திற்கு அனைத்து பிரிவு மக்களும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு