privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீதிபதி குமாரசாமி - நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?

நீதிபதி குமாரசாமி – நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?

-

குமாரசாமி நீதிபதியா, நிதி வாங்கிய சதியா?
குமாரசாமி நீதிபதியா, நிதி வாங்கிய சதியா?

நேற்று தீர்ப்பை ஒட்டி நடந்த விவாதங்களில் அருவெறுப்பான ஜால்ராச் சத்தம் தந்தி டி.வியின் பாண்டேயின் வாயிலிருந்து இடைவிடாமல் வந்து கொண்டே இருந்தது.

பத்திரிகையாளர் ஞாநியிடம் கேள்வி கேட்ட பாண்டே தான் 900 சொச்சம் பக்கங்களை படித்து விட்டதாக கூறி மடக்கிக் கொண்டே இருந்தார். ஞாநியும் வேறு வழியின்றி பொய்களையே அதிரடியாக கூறும் பாண்டேவிடம் புலியிடம் சிக்கிய ஆட்டுக் குட்டி போல மாட்டிக் கொண்டார். பாண்டே உரைத்த பொய்களில் முதன்மையானது ஜெயாவும் அவரது பினாமிகளும் வங்கிகளில் வாங்கிய கடன் தொகை. அதை வரவு என்று வைத்து சொத்து குவித்ததாக வழக்கு போட்டு தவறு செய்து விட்டார்கள் என்ற தொனியில் பாண்டே அலறலைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.

இப்படியாக ஜெயலலிதாவுக்கு நீதித்துறையும், பா.ஜ.கவும், ஊடகங்களும் பக்க பலமாக இருக்கலாம். ஆனாலும் ஒரு கூட்டல் கழித்தல் விவகாரம் கொள்ளைக் கூட்டத்தின் பேராசையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.

சரி, அப்படியானால் இது ஏதோ கணக்கு போடும்போது நடந்த மனித தவறா? இல்லை. தீர்ப்பை ஏற்கனவே எழுதிவிட்டு, அப்படி எழுதுவதற்கு வாங்கி விட்டு பின்னர் எண்களை பார்க்கும் போது அவை அப்படி கூட்டச் செய்திருக்கின்றன.

விலை போன நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆணையின் 852- ஆவது பக்கத்தில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி கும்பலுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இந்தியன் வங்கியிருந்து 10 கடன்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடன்களின் மதிப்பு முறையே ரூ.1.50 கோடி, ரூ.3.75 கோடி, ரூ. 90 லட்சம்,  ரூ.25 லட்சம், ரூ.12.46 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம்,  ரூ.1.57 கோடி, ரூ.1.65 கோடி, ரூ.17 லட்சத்து 85,274 ஆகும்.

இதைக் கூட்டினால் ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 மட்டுமே வருகிறது. ஆனால் இதன் மதிப்பு ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்றும் இதை ஜெயாவின் வருவாயாக கருத வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி ஒரே போடாக போட்டுத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த போடுதலில் ஜெயாவின் வருவாய் மதிப்பில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயா கும்பலின் வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தாலும் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயா தரப்பு வருவாயை விட 76.75% அதிகம். இந்த இலட்சணத்தில் குமாரசாமியால் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்லது ஆந்திர அரசின் சுற்றறிக்கைப்படி பார்த்தால் கூட ஜெயா கும்பலை விடுவிக்க முடியாது.

இது போக வளர்ப்பு மகன் திருமணச் செலவுகளில் குமாரசாமி சொல்லியிருக்கும் பொய்கள், கட்டுமானச் செலவுகளில் அவரே ஒரு பொறியாளர் போன்று ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய்தான் செலவு என்று அடித்து விட்டிருக்கும் பொய்கள், அதற்காக அவர் கூறியிருக்கும் அபத்தமான விளக்கங்கள், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்கு வந்த கொள்ளைத் தொகை பதினாலு கோடியை சந்தா என்று ஏற்றுக் கொண்ட மோசடி என்று ஏராளம் உள்ளன.

நீதிபதி குன்ஹா அளித்த நேர்மையான தீர்ப்பு இப்படித்தான் குமாரசாமியால் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே இதற்கு குமாரசாமி எவ்வளவு வாங்கினார் என்பதை உடனடியாக அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். அவர் மட்டுமல்ல அவரது குருநாதரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான தத்துவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தி இந்துவில் வந்த செய்தியின் படி,

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரும் நெருக்க மான நண்பர்கள் என்பதால் விடுமுறை காலங்களில் சிருங்கேரி கோயிலுக்கும், முல்பாகல் சிக்கு திருப்பதி கோயிலுக்கும் சென்று பூஜை செய்து வருவார்கள்.”

-இருவருக்கிடையிலான நட்பு உண்மை என்று தெரிகிறது.

அதே போல தத்துவும் ஜெயாவுக்கு அளித்த பிணை, குறுகிய காலத்தில் மேல் முறையீட்டு விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என ஏராளமான உதவிகளை சட்டவிரோதமாக செய்திருக்கிறார். அதற்கு சட்டபூர்வமாக விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

மேலும் தி இந்துவில் வந்திருக்கும் தகவல்களை பாருங்கள்:

“ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.

இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த‌ ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.”

இதிலிருந்து நீதிபதி குமாரசாமியின் யோக்கியதையை நாம் அறிய முடியும்.

pujaகர்நாடகா அரசால் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா, நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தில் “இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. எனவே, வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குப் போவது என்றால் எதிர்மனுதாரராக கர்நாடகா அரசை சேர்த்து அவர்களது பதிலை வாங்கியிருக்கவேண்டும். ஆனால், கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது” என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதத்தின்படி பார்த்தால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையை மட்டுமல்ல, ஜெயா‍‍ சசி கும்பலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் பிணையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். ஏனென்றால், உச்சநீதிமன்ற நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்டு ஜெயா கும்பலுக்குப் பிணை வழங்கவில்லை. உச்ச நீதி மன்றத்தின் இந்த இரண்டு முடிவுகளுமே பொது அறிவுக்கோ, சட்டபூர்வ வாதங்களுக்கோ இடமின்றி, கட்டப் பஞ்சாயத்து முறையிலேயே எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (“உச்சநீதி மன்றம் : மனுவின் மறு அவதாரம்” கட்டுரையிலிருந்து….புதிய ஜனநாயகம் ‍ மே இதழ்!)

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீதிபதி குமாரசாமி, நீதிபதி தத்து இருவரும் எவ்வளவு வாங்கியிருப்பார்கள்? தொலைபேசியில் முதலில் வாழ்த்துச் சொன்ன மோடி இதற்காக என்னவெல்லாம் ஏற்பாடு செய்தார்?

இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தார் என்று அம்மாவிடம் நாம் கேட்கப் போவதில்லை. ஆனால் இந்திய நீதித்துறையின் தராதரத்தையும், அயோக்கியத்தனத்தையும் நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மக்களை நம்ப வைப்பது கடினம்.

அந்த கடினமான வேலையை போகிற போக்கில் சாதித்திருக்கின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..நன்றி..நன்றி…!

jaya-acquittal-justice-in-toilet