பெரியார் பிறந்தநாள் சுடர்கள்!
1-ஊர்

பொழுதுக்கும்
உழைக்கிற மாட்டுக்கு
சூடு.
புடுங்கித்தின்னும்
கோயில் மாட்டுக்கு
தொட்டுக் கும்பிடு!
2-அபிஷேகம்
தாளிக்க
எண்ணெய் இல்லை
சாமிக்கு
ஆயில் மசாஜ்!
3-காவல்
தோப்புக்கரணம் போட்டு
காப்பாற்ற வேண்டிக்கொண்டு
திரும்பிப்பார்த்தால்
பிள்ளையாரைக் காப்பாற்ற
இரண்டு போலீசு!
4-சாமி குத்தம்

பைரவருக்கு
படுகோபம்,
“இந்து மதத்தெய்வம்
நான் இருக்கையில்
எச்சு ராஜா
எப்படி குலைக்கலாம்
என் மதிப்பை!”
5-தீர்த்த – யாத்திரை
நரேந்தர தபோல்கர்
கோவிந்த் பன்சாரே
கல்பர்கி..
அடுத்தடுத்து இவர்களை
தீர்த்துக்கட்டினாலும்
கட்டாயம் நீங்கள் நம்பலாம்
இந்து மதம்
சகிப்புத்தன்மை மிக்கது
அடுத்த கொலை வரைக்கும்!
6-மாயை
பாலை
சந்தியில் கொட்டினால்
பரிகாசம்,
நந்தியில் கொட்டினால்
பிரதோசம்!

7-தொழில் பக்தி
ஆட்டோகாரர்
மீட்டருக்கு மேலே கேட்டால்
அநியாயம்…
அய்யர்
தட்டுக்கு மேல கேட்டால்
ஆன்மீகம்!
8-தீர்ப்பு
உழவாரப்பணி செய்த
அப்பரை
ஊருக்கு ஊர்
அலையவிட்ட ஈசன்
கொலைகார அமித்ஷாவுக்கு
தில்லையிலே திருக்காட்சி,
இப்பிறவி நீங்கி வர
தீக்குளியல் போடச்சொல்லி
நந்தனுக்கு வந்த அசரீரி
இப்போது காணோம்.
ஊழல் பணத்தில்
ஊருக்கு ஊர் அபிசேகம்
ஒவ்வாமை வரவில்லை
எந்த சாமிக்கும்
அம்மா விடுதலைக்கு
அளவில்லா அர்ச்சனைகள்..
எரிச்சலாகி எந்த சாமியிடமிருந்தும்
கோபம் வந்து சாபம் இல்லை..
குமாரசாமிக்கோ கொண்டாட்டம்
புரிகிறது!
கடவுள் இல்லை
`கன்பார்ம்’!
9-ஆமாஞ்சாமி
சொந்த சாதிக்கு
கட்டுப்பட்டால்
சாமிக்கு
சூடம் எரிகிறது
தாழ்த்தப்பட்டவர்க்கு
ஒத்துப்போனால்
சாமியோட
தேர் எரிகிறது!
தூணிலும் இருப்பான்..
துரும்பிலும் இருப்பான்..
சேரியில் மட்டும்
இருக்கமாட்டானா?
10-நஞ்சு
ராஜநாகம்
தலைதெறிக்க
தப்பித்து ஓட்டம்,
அருகில்
ஆர்.எஸ்.எஸ். தலைமையில்
கூட்டம்!
– துரை.சண்முகம்