பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு
ஒரு அசாதாரணமான சூழல் தமிழக நீதித்துறையில் நிலவுகிறது. இதை பேசிச் சரி செய்யும் பொறுப்பில் உள்ள பார் கவுன்சில், அவ்வாறு செய்யாமல் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவது போல வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை என்று நீதிபதிகளின் ஆணையை அமல்படுத்தும் ஊழியர் போல நடந்து கொள்வது சரியா?
மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான ஒரு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயங்கரவாதக் குற்றம் இழைத்த குற்றவாளியாக இருந்தாலும் சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியே அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் மேற்கூறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நீதிபதிகளின் கூட்டம் (Full Court Meeting) நடத்தப்பட்டிருக்கிறது. அங்கே இந்த வழக்கு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? இதை விடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பு வேறு உள்ளதா? இந்த முறைகேட்டை பார் கவுன்சில் ஆதரிக்கிறதா?
உயர் நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக வழங்கப்பட்டவை. அவற்றை விசாரிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ உயர்நீதிமன்றம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. போலீசும் அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதையும், அதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதையும் மிகவும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் நீதியரசர்கள், தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடனே அவ்வாறு கூறியவர்களை தண்டிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கை உடனே எடுத்து விசாரிக்கிறார்கள். இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?
மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரையிலிருந்து வேண்டுமென்றே சென்னைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு முதல்நாள் அது திரைமறைவு விசாரணை என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது. பிறகு திடீரென்று அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 16-ம் தேதியன்று சீருடை அணிந்த மற்றும் அணியாத போலீசார் நீதிமன்றத் தாழ்வாரத்தை மறித்துக் கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவருடைய வழக்குரைஞரான திரு.என்.ஜி.ஆர் பிரசாத் உள்ளிட்டோர் இதனைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். வழக்குரைஞரே அனுமதிக்கப்படாமல், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட அந்த விசாரணை முறையான விசாரணைதான் என்று பார் கவுன்சில் கருதுகிறதா?
தலைக்கவசத் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக அழைத்து, குற்றம் சாட்டப்பட்ட ஏ.கே.ராமசாமியிடம், 10-ம் தேதியன்று மதுரையில் நடந்த ஊழல் எதிர்ப்பு பேரணி பற்றி நீதிபதிகள் விசாரித்திருக்கிறார்கள். மற்றெல்லா வழக்குரைஞர்களும் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில வழக்குரைஞர்கள் மட்டும் நீதிபதிகளால் உள்ளே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த அவமதிப்பு வழக்கில் இம்பிளீட் செய்யவும், திரு.ஏ.கே.ராமசாமியை விசாரணை செய்யவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். 75 வயது முதியவரான திரு.ராமசாமியை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிற்க வைத்தே விசாரித்திருக்கிறார்கள். வழக்குரைஞர்களை கிரிமினல்களை விடவும் கீழாக நடத்துகின்ற நீதிபதிகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்?
நீதியரசர் கர்ணன், தலைமை நீதிபதிக்கு எதிராக தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையில் அதற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாமல் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தூற்றப்பட்டது ஏன்? உண்மையில் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டியது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தைதான். இது குறித்து பார் கவுன்சில் அக்கறை கொள்ளாதது ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இப்படி ஒரு சூழல் இருப்பதாக தலைமை நீதிபதி கவுல், இதுநாள்வரை பார் கவுன்சிலுக்கு ஏன் புகார் அனுப்பவில்லை? இந்த அபாண்டமான குற்றச்சாட்டு பற்றி பார் கவுன்சிலின் நிலை என்ன?
செப்டம்பர் 14-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தானே முன்வந்து எடுத்துக்கொண்ட ரிட் மனுவில், ஒரு காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ள சில கருத்துகளையே, வழக்குரைஞர்கள் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகச் சித்தரித்துள்ளது. அம்பேத்கர் சிலையின் கீழ் அமர்ந்து அசைவ உணவு சாப்பிடுவது கூட வழக்குரைஞர்களின் குற்றமாக அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு எதிரான சாதிய காழ்ப்புணர்ச்சியும், தீண்டாமை வெறியும் கொண்ட இக்கருத்தைக் கண்டித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மவுனம் காப்பது ஏன்?
தற்போது தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்காக தலைமை நீதிபதியின் அறைக்குள் போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதைப் போல, உதவி ஆணையர் பட்டியலிட்டுள்ள 14 குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குரைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்திருக்கலாமே! அவ்வாறின்றி, ஒரு காவல்துறை உதவி ஆணையரின் கருத்துகளை அவருடைய கீழ்நிலைக் காவலர் வழி மொழிவது போல, உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு வழிமொழிவதும், இதே கண்ணோட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் சென்னை வழக்குரைஞர்களுக்கு எதிராக கருத்துரைக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக பார் கவுன்சிலுக்குத் தெரியவில்லையா?
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகச் செயல்படுவதாகவும், வளாகத்துக்குள் சாதி ஊர்வலம் போவதாகவும் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் என்பது பார் கவுன்சிலுக்கு தெரியாதா? உண்மையில் நீதிமன்ற வளாகத்துக்குள் சாதி, மத சார்புகளைக் கொண்டு வருபவர்கள் நீதிபதிகள்தான். கடந்த 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் தூண்டுதலின் பேரில்தான் சில வழக்குரைஞர்கள் சாதி ரீதியாக வந்து கலகம் செய்து மோதலை உருவாக்க முயன்றனர். அவர்களில் சிலர் கத்தியும் வைத்திருந்தனர். சென்னை, மதுரை வழக்குரைஞர்கள் இந்த ஆத்திரமூட்டலுக்கு பலியாகாமல் அமைதி காத்தனர் என்பதே உண்மை.
நீதிபதிகளின் ஊழலை எதிர்த்துப் பேரணி நடத்தியதன் காரணமாக, மதுரை வழக்குரைஞர் சங்கத்தை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கிறது. தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவதுதான் இதற்கு காரணம் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதை எந்தவொரு வழக்குரைஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பார் கவுன்சில் இதனை ஏற்றுக் கொள்கிறதா?
நீதித்துறை ஊழல் என்ற பிரச்சினை பார் கவுன்சிலின் அக்கறைக்கு உரியது இல்லையா? கிரானைட், தாதுமணல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், எந்த நீதிபதி வழங்கிய எந்தத் தீர்ப்பு முறைகேடானது என்று வழக்குரைஞர்கள் குறிப்பாக குற்றம் சாட்டி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட முன்னாள் நீதியரசர் சந்துரு, ஒரு நாளேட்டில் கட்டுரையே எழுதியிருக்கிறார். இருந்தும் இது குறித்து ஒரு உள்ளக விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடவில்லை. இவை குறித்த பார் கவுன்சிலின் கருத்து என்ன?
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு அவர்கள், தற்போதைய தலைமை நீதிபதி தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நேர்மையோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாத அவர், தமிழக வழக்குரைஞர்களின் மாண்பு குறித்து பழித்துப் பேசுவதை பார் கவுன்சில் ஏற்றுக் கொள்கிறதா?
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும் அ.தி.மு.க வழக்குரைஞர்களும் நடத்திய அவமதிப்புகள் எழுதி மாளாதவை. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமரிசிப்பவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதையும், தலைவர் பதவியைத் தனது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதையும் கவுன்சில் ஆதரிக்கிறதா?
வழக்குரைஞர்களின் வாக்குகளைப் பெற்று பார் கவுன்சில் பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள். இதன் காரணமாக வழக்குரைஞர்களின் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறும் விசயங்களை அதிகபட்சம் போனால் தவறுகள் என்று மட்டுமே வரையறுக்க முடியும். ஆனால் நீதிபதிகள் செய்து கொண்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம். இன்று வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நீங்கள் கூடியிருக்கிறீர்கள். வழக்குரைஞர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க எப்போதாவது நீங்கள் வழக்குரைஞர்களைக் கூட்டியதுண்டா? பார் கவுன்சில் என்பது வழக்குரைஞர்களின் பிரதிநிதியா, நீதிபதிகளின் டவாலியா? சிந்திப்பீர்.
வழக்குரைஞர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம்.
கைபேசி எண் – 98428 12062
சென்னை,
காலை 9 மணி, 24-09-2015
நீதிமன்ற குறைகளை சுட்டிக்காட்டினால, நீதிபதிகளின் தவறுகளை தட்டிக் கேட்டால் என்ன நடக்கும் எ்னபதற்கு உதாரணம்தான் நீதிமன்றங்களின் சமீபத்திய நடவடிக்கை.
* ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அதனை விசாரிக்க வேண்டும், அவரது விளக்கம் கேட்க வே்ண்டும். ஆனால் ஒரு வாய்தா கூட இல்லாமல் வக்கீல்களுக்கு வாழ்நாள் தடை
* நீதிபதிகள் சட்டத்தின்படியோ, இயற்கை நீதியின்படியோ தீர்ப்பு வழங்க வேண்டும். அதவைிடுத்து தங்கள் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையி்ல் அளிக்கும் தீர்ப்புகளும், அவர்களின் தீர்ப்பை தாண்டிய விமர்சனங்களும் ஆரோக்கியமானதல்ல.
* வாரம் ஒரு முறை சிவாஜி சிலை அகற்றும் வழக்கை எடுத்துக் கொள்கிறது. வழக்கு நடந்த காலக்கட்டத்தில் ஒரு விபத்துக் கூட நடைபெறவில்லை. அதற்குமுன்பும் வழக்கமான விபத்துதான். அதற்கு சிலையை காரணமாக்கிவிட்டது காவல்துறை. சிவாஜியை பிடிக்காவிட்டால் அதை நீதிமன்றம் வெளிப்படையாக அறிவிக்கலாம். அப்படி செய்தால் வேறு வழக்குகள் விசாரிக்க நேரம் கிடைக்கும். சிவாஜிக்கு தமிழ்நாட்டின் தலைநகரில் சிலை வைக்காமல் எங்கு வைப்பது?
* தலைகவசம் அணியாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. அதனை செயல்படுத்த, தீவிரப்படுத்த உத்தரவிடலாம். ஆவணங்களை பறிமுதல் செய்ய சொல்கிறது. வாகனங்களையே பறிமுதல் செய்கிறது காவல்துறை. கண்டுக்கொள்ளவில்லை, கண்டிக்கொள்ளவி்ல்லை நீதிமன்றம். தட்டி கேட்டவர்கள் மீதுதான் நடவடிக்கை. சங்கம் நீதிமன்றத்திற்குள் செயல்படக் கூடாதாம். இதையே காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் தொழிற்சங்களை வெளியே அடித்து துரத்தப்போகின்றன. ஏற்கனவே தொழிற்சங்க உரிமை கேட்ட வழ்க்குகளின் நிலைமை.
இந்த வழக்கை நீதிபதி கவுரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டுவிட்டார். வாரம், வாரம் விசாரிக்கிறார். இப்போது நடிகர்களை வைத்து விளம்பர படங்கள் எடுங்கள் என்று அரசுக்கு ஆலோசனை சொல்கிறார். இதை யாரும் சுட்டிக் காட்டப் போவதில்லை. அப்படி செய்தால் நீதிபதி்க்கு கோபம் வந்துவிடும்.
* தலைக்கவசம் அணிய வேண்டும் எ்ன்பதில் ஆர்வம் காட்டும் நீதிபதி, (அதுவும் விபத்து வழக்கு ஒன்றில் பிறப்பித்த உத்தரவு அது) கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை ஏன் கண்டுக் கொள்ளவில்லை. இன்னும் சன்ஃபிிலிம் அகற்றாத கார்கள் மீது நடவடிக்கைக்ள் ஏதுமில்லை.
* மது விற்பனைையை கண்டுக் கொள்ளாத நீதிபதி கேட்டால் அரசின் கொள்கை முடிவு என்கிறார்கள். தலைக்கவசத்திற்கு கூட ஏற்கனவே சட்டம் இருக்கிறது. சட்டமும் கொள்கை முடிவுதானே
* தமிழ் வழக்காடு மொழியாக்க கோரி நீண்ட காலமாக போராடுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல், பரிந்துரை கூட செய்யாமல் இரு்க்கும் நீதிம்ன்றம். போராடினால் நடவடிக்கை. முறறுகை போராட்டம் காலகாலமாக இருக்கும் போராட்ட முறைதான். அதனால் நீதிபதிகளுக்கு உயிருக்கு பாதுகாப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் கவலைப்படுகிறது. நடவடிக்கை பாய்கிறது. தமிழை வழக்கம் போல் கண்டுக் கொள்ளவில்லை. உபி, மபி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் தவிர்த்து இந்தியில் வழக்காடுகின்றனர். இதை சமீபத்தில் முன்னாள் நீதிபதில் மார்கண்டேய க்ட்ஜு சுட்டிக்காட்டியுள்ளார்.
* நீதிபதிகளுக்கு பாதுகா்ப்பு இல்லை சிஐஎஸ்எப் அல்லது வேறு படைகள் நீதிமன்ற பாதுகாப்பு புணியில் ஈடுபட வேண்டும் என்கிறார்கள். ஏற்கனவே கருணாநிதி உத்தரவுப்போட்டதால் தமிழ்நாடு காவல்துறை நீதிபதிகளையும் அடித்து நொறுக்கியது. நாளை மோடி உத்தரவுப்போட்டால் சிஐஎஸ்எப் இவர்களை உதைக்காது என்பது என்ன நிச்சயம்…
* இப்படி பாதுகாப்பு படைகளால்தான் இவர்களுக்கு பிரச்னை. ஆனால் வழக்காட வரும் மக்களை அலைகழி்க்கும் கேவலம் உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 40 பேர் வந்துச் செல்ல ஒரு வழி. இதில் ஈ, காக்கைகள் கூட போக முடியாது. சுமார் 3000 வக்கீல்கள் வந்துச் செல்ல 3 வழிகள். ஆனால் இவர்கள் எல்லாம் யாருக்காக வேலை செய்கிறார்களோ அவர்கள் ஆயிரக்கணக்கில் வந்துச் செல்ல ஒரே வழி. அதுவும் வரிசையில் நின்று சோதனைக்கு உள்ளாகி சான்று பெற்று வரவேண்டும். உயர்நீதிமன்றத்தின் ஜனநாயக முறை இது. வெட்கம். வக்கீல்களும் இதனை கண்டுக் கொள்வதில்லை. தமிழில் வழக்காட வேண்டும் என்று கேட்டால் தமிழ் தெரியாத சிஐஎஸ்எப் ஆட்களை வைத்து இந்த அப்பாவிகளை வாட்ட வைப்பதுதான் நீதிமனறத்தின் நோக்கம். மகா கேவலம். சென்னைக் கோட்டைக்குள் முதல்வர் வாகனம் செல்லும் வழியில்தான் ஊழியர்களின் வாகனங்களு்ம் வந்துச் செல்கின்றன.
* சென்னை நீதிமன்றம் என்றில்லை மற்ற நீதிமன்றங்களில் நிலைமையும் |இதேதான். ஜெயலலிதா வழக்கில் மைக்கல் டி குனகா விசாரித்து அளித்த தீர்ப்பும், குமாரசாமி கூட்டி கழித்து அளித்த தீர்ப்பும் நாம் அறிந்ததுதான்.
* மராட்டியத்தில் மாட்டுக்கறிக்கு அரசு தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, ‘மாநில அரசு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. விசாரித்த பிறகுதான் தீர்ப்பு. அது வரை தடை தொடரும்’ என்று நீதிபதிகள் சொல்லிவிட்டனர். அடுத்த சில மாதங்களில் கோழி, ஆட்டுக்கறிக்கு 4 நாட்கள் தடை. அதுதொடர்பான நீதிமன்றம், ‘4 நாட்கள் சரியானதல்ல. கறி சாப்பிடுபவர்களை சாப்பிடக்கூடாது என்றுச் சொல்ல அரசுக்கு உரிமை இல்லை. வேண்டுமானால பொது இடங்களில் வெட்டி கறியாக்குவதை தவிர்க்கலாம். நான்கு நாட்களை 2 நாட்களாக குறைக்கலாம்’ என்று உத்தரவிடுகிறது. இதைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட மாட்டுக்கறி வழக்கு தொடர்ந்தவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுக, ‘தடையை நீக்க முடியாது. செல்லாது, செல்லாது’ என்று நாட்டாமை பணியில் வழக்கு தொடர்ந்தவர்களை விரட்டி விட்டனர். நீதிபதிகளின் மனநிலை எப்படி பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது பாருங்கள்.
* ஆக இப்படி நீதிபதிகளை குறைச்சொன்னால் உடனே சொன்னவர்களின் ஆதி அந்தங்களை தேடுவார்கள். பேருந்தில் செல்லும் போது காலை மிதித்து விட்டார் முதல் பொது இடத்தில் குசு விட்டார் என்று ஏதாவது காரணம் சொல்லி நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி சொல்லாத வரை வக்கீல்கள் எது செய்தாலும் கண்டுக் கொள்ள மாட்டார்கள்.
*இன்னும் நிறைய இருக்கிறது. பெயர் சொல்லிக் கூட பட்டியல் போடலாம். நானோ தினக்கூலி. குடும்பம் இருக்கிறது. வழக்கு நடத்த சொத்து இல்லை. இதை யாராவது நீதிபதிகளிடம் படித்துக்காட்டி இதை ஒரு வழக்காக கூட எடுத்துக் கொள்வார்கள். அதனால் பயமாக இருக்கிறது. இந்த பயம் இருக்கும் வரை நீதிபதிகளின் அட்டகாசம தொடரத்தான் செய்யும். ஆனாலும் எ்னன செய்ய நான் சமானியன்…..
இந்த நாட்டில் மக்கள் ஆட்சியாளர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இன்னும் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது நீதிமன்றங்கள் மீது தான் என ஊடகங்கள் தொடர்ந்து பொயையைப் பரப்பி வருகின்றன. ஆனால் அது எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகி உள்ளது. நீதித் துறையில் நிலவி வரும் ஊழல்கள் இது வரை பெரும் அளவில் சந்திக்கு வாராமல் இருந்தன. இன்று அவை பகிரங்கமாக வெளி வரத் தொடங்கியதும் “நீதியரசர்கள்” அலறத் தொடக்கி விட்டனர். உண்மையில் தாங்கள் இந்த நாட்டில் வானளாவிய அதிகாரம் கொண்ட முடி சூடா மன்னர்கள்தான் என்பதை மெய்ப்பிக்கத் தொடங்கி விட்டனர். கடுமையான மிரட்டல்கள் மூலம் உண்மை பேசுபவர்களுக்கு வாய்ப் பூட்டு போடத் தொடங்கி விட்டனர்.
இங்கு நிலவுவது மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய ஆட்சியல்ல. மாறாக,நாட்டைக் கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தான் இங்கு ஜனநாயகம், அதை எதிர்க்கும் மக்களுக்கு எந்த விதமான ஜனநாயக உரிமையும் இல்லை. அவர்கள் மீது செலுத்தப்படுவது முதலாளிய வர்க்கத்தின் அடக்குமுறையும் சர்வாதிகாரமும்தான் என்பதை இந்த “நீதியரசர்களின்” செயல்பாடுகள் அப்பட்டமாக இன்று அம்பலப்படுத்தி வருகின்றன.
Mr.VINAVU
What happened,yet no story from you about “VISHNU PRIYA”
சொ்ல்ல மறந்தவைகளில் நிறைய உள்ளன. சட்டக் கல்லூரி இடமாற்ற உத்தரவு விவகாரம். உள்நோக்கத்துடன் நூற்றாண்டு பழமையான சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கு ஆதரவாக பேசிய உயர்நீதிமன்றம், ‘உலகிலேயே உயர்நீதிமன்றம் அருகில் இருக்கும் ஒரே சட்டக் கல்லூரி இதுதான். அதனால் அதனை இடமாற்றம் செய்யலாம் என்று உள்நோக்கத்துடன் சொல்லியது. ஏனே இதற்கு வக்கீல்களிடம் சிறிய அளவில் கூட எதிர்ப்பு இல்லை. கல்லூரியின் பெயர் அல்லது அடிவாங்கிய விவகாரம் என்று ஏதோ ஒன்று தான் அ்ந்த உள்நோ்க்கம். நீதிபதிகள், அரசு செயலாளர்கள் வந்தால் நேருக்கு நேர் உட்கார்ந்து உள்நோக்கத்தை விலாவரியாக சொல்லுவேன்
வாரம் தோறும் விசாரிக்கப்படும் நாட்டின் அதிமுக்கிய வாழ்வாதார பிரச்னை வழக்கான தலைக்கவச வழக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முத்துகிருஷ்ணன் என்ற வக்கீல் தலைக்கவசம் வழக்கில் நிறைய நியாயங்களை எடுத்து சொல்லியிருக்கின்றனர். அதாவது வாதாடி இரு்க்கிறார். அதனால் அவர் மீது நீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய பார் கவுன்சி்ல், தமிழ்நாடு/புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் கோபமாகியிருக்கலாம். விரைவில் அவர் மீது நடவடிக்கை ஏதாவது வரலாம். இல்லை அடுத்தமுறை அபராதம் விதிக்கப்படலாம. நடவடிக்கை எடுக்க காரணம் தேடிக் கொண்டிருப்பார்கள்
நீதிபதி கிருபாகரன் பரிந்துரைகள் எப்படி ? சும்மா அசத்துறார்???????